சனி, 30 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 20 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

நந்தி பணி செய்த நந்திபுர விண்ணகரம்!

எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை 
என்று முனியாளர் திரு ஆர்
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு
கூட எழில் ஆர்மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள்
தாம் மலர்கள் தூய் நண்ணி உறைகின்ற நகர் 
நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே 

 - திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வாரின் ஆன்மா குடிகொண்டிருக்கிற ஊரே கும்பகோணத்திற்கு வெகு அருகாமையில் இருக்கும் புண்ணிய ஸ்தலம் திருநந்திபுர விண்ணகரம், நாதன்கோவில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். பொன்னியின் செல்வன் கதை நடந்த முக்கிய இடமான பழையாறைக்கு கூப்பிடும் தூரத்தில் உள்ளது இந்த திவ்யதேசம். அது சரி மற்ற திவ்யதேசத்திற்கு இல்லாத அப்படி என்ன பெரிய பெருமை இந்த புண்ணிய தலத்திற்கு இருக்கிறது என்கிறீர்களா? ஊர் பேர் என்ன? நந்திபுரவிண்ணகரம். வைணவத் தலமான இந்த ஊருக்கு நந்திபுரவிண்ணகரம் என்று எப்படி ஏற்பட்டது? மகா விஷ்ணுவை தரிசனம் செய்ய விரும்பினார் அதிகார நந்தி எனப்படும் நந்திகேஸ்வரர். சிவபெருமானின் வாகனம் இல்லையா? நந்திகேஸ்வரரின் அனுமதி இல்லாமல் பரமேஸ்வரனை யாரால் தரிசிக்க முடியும்?

மயக்கும் தமிழ் - 19 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

நாட்டை உயர்த்திய நல்லோர்கள்!

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதத்திற்கு அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா? துலா மாதம் என்று சொல்லப்படுகிற ஐப்பசி மாதத்தில்தான் அடுத்தடுத்து மூன்று ஆழ்வார்கள் அவதாரம் நிகழ்ந்தது. ஆமாம், முதல் ஆழ்வார்கள் என்றழைக்கப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் அவதரித்தனர். ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் பொய்கையாழ்வாரும், அவிட்டம் நட்சத்திரத்தில் பூதத்தாழ்வாரும், சதய நட்சத்திரத்தில் பேயாழ்வாரும், இந்த மண்ணும் மக்களும் உயர்வு பெற அவதாரம் செய்தார்கள். இவர்களை பன்னிரு ஆழ்வார்களில் ஏன் முதலாழ்வார்கள் என்று அழைக்கிறார்கள்? ஏனைய ஆழ்வார்களுக்கு முந்தித் தோன்றிய கால முதன்மையாலும், திவ்யப்பிரபந்தங்களை முதலில் பாடி அடுத்த ஆழ்வார்களுக்கு வழிகாட்டியதாலும், இவர்கள் முதலாழ்வார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

மயக்கும் தமிழ் - 18 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

நெஞ்செல்லாம் இனிக்கும் அக்காரக்கனி

நாளை என்பதே நரசிம்மரிடம் கிடையாது என்பார்கள். நரசிம்ம அவதாரம் பிரகலாதன் என்கிற மாபெரும் பக்தனின் நம்பிக்கைக்கு உயிர் கொடுத்தது. பக்தனின் பரிபூரண நம்பிக்கைக்கு அவனுடைய சரணாகதி தத்துவத்திற்கு இலக்கணமாய் அமைந்தவர் நரசிம்மர்.‘‘எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப...’’அங்கு அப்பொழுதே தோன்றியவர் நரசிம்ம ஸ்வாமி. அசுர குலம் தழைக்க வேண்டும் என்று  இரணியகசிபு போர்க்குரல் கொடுத்து, மாபெரும் துன்பங்களை துயரங்களை பிரகலாதனுக்கு கொடுக்க நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிற திடபக்தியில் பிரகலாதன் நிற்க நெஞ்சு பொறுக்குதில்லையே என்று துடிதுடித்துப் போனான் இரணியகசிபு.‘‘எங்கே உன் இறைவன். அந்த மாயக் கண்ணன். இந்த தூணில் இருக்கிறானா’’ என்று மமதையில் ஆணவத் திமிரில் தூணை பிளந்தபோது இதோ பார் என்று இரணியகசிபு மூலமாக உலகிற்கே நிரூபித்துக் காட்டியவர்  நரசிம்மஸ்வாமி. 

இப்படி அகிலம் போற்றும் அற்புத சக்தியாக விளங்கும் நரசிம்மர் ஆந்திர மாநிலத்தில் அகோபிலம் என்ற புண்ணிய இடத்தில் நவநரசிம்மர்களாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். நம் தமிழகத்தில் அநேக இடங்களில் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் மழையை பொழிந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் மிகவும் புனிதமாகவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான சோள சிம்மபுரம் என்னும் திருக்கடிகை, அதாவது, வழக்குத் தமிழில் சோளிங்கர் என்று அழைப்பர். அரக்கோணத்திற்கு சமீபமாக இருக்கும் புண்ணிய பூமி. சப்த ரிஷிகளும் தவம் செய்த ஊர். இந்த ஊரின் மேன்மையைப் பற்றி இங்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிற யோக நரசிம்மரின் அருட்கடாட்சத்தைப் பற்றி விஷ்ணு புராணமும், பத்ம புராணமும் நிறைய தகவல்களை எடுத்துச் சொல்லியிருக்கிறது.

மலைமீது உள்ள சோளிங்கரில் யோக நரசிம்மராக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுவாமியின் திருநாமம் என்ன தெரியுமா? அக்காரக்கனி இதைவிட தூய தமிழ்ப் பெயரை நாம் வேறு எங்காவது பார்க்க முடியுமா? இந்த அக்காரக்கனி என்ற பெயர் வரும் வரையில், தித்திக்கும் தேன் தமிழில் திருமங்கையாழ்வார் அற்புதப் பாசுரத்தை படைத்திருக்கிறார். 

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் 
புக்கானை புகழ்சேர் பொல்கின்ற பொன்மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே!

அது சரி அக்காரக்கனி என்றால் என்ன?

மயக்கும் தமிழ் - 17 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

உன்னை விட்டால் வேறு கதி ஏது?

பன்னிரு ஆழ்வார்களும் வைணவத்தின் உயிர்நாடியான சரணாகதி தத்துவத்தை வலியுறுத்தி வந்துள்ளனர். இவர்களில் இந்த பிரபத்தி என்கிற பரிபூரண சரணாகதியை தன் உயிர்மூச்சாக பாவித்தவர் சேரநாட்டுத் தலைமகனான குலசேகர ஆழ்வார். திருவரங்கம் திருமலை என்று புகழ் பெற்ற தலங்களை தன்னுடைய ஈரத்தமிழால் பாசுரங்களைப் பாடி பரவசப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் கேரள தேசத்திலுள்ள திருவித்துவக்கோடு திருத்தலத்தையும் நாம் மறக்க முடியாது! திருவித்துவக்கோடு என்கிற இந்தப் புனிதமான இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிற பெருமாளின் பெயர் உய்யவந்த பெருமாள்! நம்முடைய உள்ளத்து உணர்வுகளை எல்லாம் செயல்படுத்தி நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிற பெருமான். அதனால்தான் அவருக்கு உய்ய வந்த பெருமாள், அபயப்ரதன் என்கிற திருநாமம். தாயார் பெயர் வித்துவக்கோட்டுவல்லி, பத்மாஸனி நாச்சியார். 

இங்கே இந்தத் தலத்தில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால்,

மயக்கும் தமிழ் - 16 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

நின்ற வினையும் துயரும் கெடும்!

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்கிற தித்திக்கும் தேன் தமிழ் பாசுரங்களை உள்ளடக்கிய திவ்ய பிரபந்தத்திற்கு ஆழ்வார்களின் தலைமகனாகிய நம்மாழ்வாருக்குப் பிறகு அதிக பாசுரங்களை படைத்தவர். அது மட்டுமல்லாமல் நூற்றி எட்டு திவ்யதேசங்களில் அதிக திவ்ய தேசங்களுக்கு நேரடியாகச் சென்று அங்கங்கே அருள்பாளிக்கும் பெருமாளைப் பற்றியும் அந்தந்த ஊரின் அழகைப் பற்றியும் அழகுத் தமிழில் அவர் கொடுத்திருக்கும் விதமே பேரற்புதமாகும். அந்தப் பாசுரங்களை பக்தி மணம் கமழச் சொன்னால் நா மணக்கும் அப்புறம் என்ன? நாவெல்லாம் நாலாயிரம், நெஞ்செல்லாம் நாராயணம்தான். சாதாரணமாகத் தமிழ் படிக்கத் தெரிந்த ஒருவர் கூட மிகச் சுலபமாக அவருடைய பாசுரங்களை சொல்வதன் மூலம் அந்த ஈரத் தமிழ் கலந்த, பக்தி மணம் கமழும் தெய்வீக பேரின்பத்தை அனுபவிக்கலாம். இது சத்தியம்.

உலகம் சுற்றும் வாலிபனாக அவர் ஊர்ஊராகச் சென்று பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று எம்பெருமானின் மேன்மைகளை, சிறப்புகளை, அவனுடைய அரிதினும் அரிதான மகத்துவத்தை பாட்டால், பாசுரத்தால் வடித்தெடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட திருமங்கையாழ்வார் தன்னுடைய கடைசிக் காலம் குறித்து ஆழ்வாருக்கு மிகவும் உகந்த பெரிய பெருமாளான ரங்கநாதரிடம் கேட்டபோது, நமது தெற்கு வீடாம் திருக்குறுங்குடிக்குப் போய் கேள் என்று சொன்னதாக ஐதீகம்.
தான் நீண்ட மதில் கட்டி அழகு பார்த்த திருவரங்கத்து ரங்கநாதரே சொல்லிவிட்ட பிறகு வேறு யார் சொல்ல வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு அதுவும் இறுதி தீர்ப்புக்குப் பிறகு வேறு யார் தான் என்ன சொல்ல வேண்டும். சுப்ரீம் பவர் பெற்ற பெயர் ஆயிரம் உடைய பேராளனான ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதனே சொல்லி விட்டார்.

மயக்கும் தமிழ் - 15 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

உள்ளம் கவர் கள்வன் கள்ளழகன்

‘‘மாலிருஞ் சோலையென்னும் மலையை யுடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால்வேதக் கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளில்
மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனவே.’’

பெரியாழ்வாரின் அதி அற்புதமான பாசுரம் இது. மதுரைக்குப் பக்கத்தில் பேரெழிலோடு விளங்கும் அழகர்மலையை அதுதான் திருமாலிருஞ்சோலை மலையை  குறிப்பிடுகின்றார், ஆழ்வார். நம் கள்ளழகர் இருக்கும் மலையை அழகர் கோயில், திருமாலிருஞ்சோலை என்று பக்தி பூர்வமாக அழைத்து மகிழ்கிறார்கள். திருமாலிருஞ்சோலை என்னும் மலையை தனது இருப்பிடமாகக் கொண்டவன். எட்டெழுத்துக்களை தனது திருப்பெயராகக் கொண்டவன் அதைத்தான்  நாலிருமூர்த்தி என்று வர்ணிக்கிறார். நான்கு வேதங்களை கடல் அமுதுக்கு ஒப்பிடுகிறார். அங்கே இருக்கிற திருமால்தான் வேதாந்த விழுப் பொருளானவனாம். 

நமக்கெல்லாம் திருமாலைப் பிடிக்கும். ஆனால் திருமாலுக்குப் பிடித்த இடம் திருமாலிருஞ்சோலையாம். 

வியாழன், 28 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 14 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

நெஞ்சம் தஞ்சம் புகும் திருமலை

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய் 
கற்பு என்று சூடும் கருங் குழல்மேல் மல் பொன்ற 
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் 

தமிழினத் தலைவராக கருதப்படுகிற பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில் ஓர் அற்புதமான பாசுரம் இது. தன்னையே நாயகி பாவத்தில் பார்த்துப் பரம்பொருள்மீது மாளாக் காதலால் உள்ளம் உருகி ஈடுபட்டதன் விளைவுதான் தேன் தமிழால் திவ்யப் பிரபந்தமாக நமக்கு தங்கப்புதையல் போல் கிடைத்திருக்கிறது. இதுதான் மனதை மயக்கும் தமிழ். சரி... பாசுரத்திற்குள் வருவோம். திருமலை. அடடா! இந்தப் பெயரைச் சொன்னாலே மனதிற்குள் மழைத்துளி விழுந்ததைப் போல இருக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் படையெடுப்பால் தினமும் திருவிழாதான் திருமலை திருப்பதியில். ஜாதி மதம் பாராமல் ஏற்ற இறக்கங்களைக் கருதாமல் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் அவன் சந்நதி முன் அனைவரும் சமமாகும் பேரதிசயம் வேறெங்காவது உண்டா? 

மயக்கும் தமிழ் - 13 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

உளன் எனில் உளன்

கடவுள் உண்டா இல்லையா? என்ற கேள்வி இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து கேட்கப்படுகின்ற மிக முக்கியமான கேள்வி. உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் கடவுள் இருக்கிறார். அவர்தான் அதாவது, அந்த மாபெரும் சக்திதான் இந்த உலகையும் மக்களையும் படைத்து காத்து ரட்சித்து வருகின்றது என்பதை மிகவும் திடமாக நம்புகிறார்கள். இதுதான் யதார்த்தமான நிதர்சனமான உண்மை. அவரவர்கள் தத்தமக்கான கடவுளை வழிபட்டு வருகிறார்கள். ஒவ்வொருவருடைய சித்தாந்தமும் செயல்பாடுகளும் வேறு வேறாக இருந்தாலும்கூட ஒரு (Super power) எல்லாவற்றுக்கும் மேலான சக்தி நம்மையெல்லாம் வழி நடத்துகிறது என்று பலமாக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். இம்மாதிரியான சிக்கலான அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் மிக அழகான அறிவுப்பூர்வமான பதிலை தன்னுடைய நாலாயிர திவ்ய பிரபந்தப் பாசுரத்தின் மூலம் நமக்கு தருகிறார், ஆழ்வார்களின் தலை மகனாக கருதப்படுகிற நம்மாழ்வார்.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்  உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே

இந்த திருவாய்மொழிப் பாசுரத்தின் திரண்ட கருத்துதான் என்ன தெரியுமா?

ஶ்ரீமத் பாகவதம் - 75

மூன்றாவது ஸ்கந்தம் – முப்பதாவது அத்தியாயம்

(வைராக்யத்தை விளைவிக்கும் பொருட்டு ஸம்ஸாரத்தின் கொடுமையை நிரூபித்தல்)

கபிலர் சொல்லுகிறார்:- வாராய் மாதாவே! இங்ஙனம் காலம் பகவத் ஸ்வரூபமாயிருக்குமென்றும், மிகுந்த வலிவுடையதென்றும் உனக்கு மொழிந்தேன். மேல் ஸம்ஸாரிகளின் கதிகளைச் சொல்லுகின்றேன் கேட்பாயாக. உலகத்திலுள்ள ஜனங்கள் இங்ஙனம் சொல்லப்பட்ட காலத்தினால் தூண்டப்பெற்று கடப்பவராயினும், மேகங்களின் வரிசை காற்றினால் தள்ளுண்டு சிதறிப் போகின்றதாயினும் அந்த வாயுவின் வலிமையை அறியாதிருப்பது போல், அத்தகைய காலத்தின் பராக்ரமத்தை அறிகிறதில்லை. இந்த ஜீவாத்மாவானவன் ஸுகத்தின் பொருட்டு மிகவும் ப்ரயாஸப்பட்டு எந்தெந்தப் பொருளை ஸம்பாதிக்கிறானோ, அவற்றையெல்லாம் காலஸ்வரூபியான பகவான் பாழ் செய்கின்றான். தான் ப்ரயத்னப்பட்டு ஸம்பாதித்த பொருளெல்லாம் பாழானமை கண்டு ஜீவன் சோகிக்கின்றான். அங்ஙனம் சோகிப்பதற்குக் காரணம் என்னென்னில், சொல்லுகிறேன் கேட்பாயாக. 

புதன், 27 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 12 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

நல்லவர்கள் வெள்ளறை நின்றாய்! ஞானச்சுடரே!

பொங்கு நீள்முடி அமரர்கள் தொழுது எழ
அமுதினைக் கொடுத்தளிப்பான்
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி! நின் 
அடிமையை அருள் எனக்கு,
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்
தையலார் குழல் அணைவான், 
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை
திருவெள்ளறை நின்றானே!

இந்தப் பாசுரம் திருமங்கையாழ்வார் படைத்த தேன்தமிழ்ப் பாசுரம். மயக்கும் சொற்கள் மட்டுமல்ல மதிமயங்குகிற அளவிற்கு வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறார் ஆழ்வார். திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுள்ள இந்தக் கோயில் அமைந்த ஊர் திருவெள்ளறை ஆகும். திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது. திருவரங்கத்திற்கு முற்பட்ட இடம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். திரு என்பது உயர்வைக் குறிக்கும். வெள்ளறை என்பது வெண்மையான பாறைகளாலான  மலையை உடையதாக கருதப்படுகிறது. மார்க்கண்டேயரின் வேண்டுகோளின்படி சிபிச் சக்கரவர்த்தி கட்டிய கோயில் என்கிறார்கள். பின்னாளில் பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் இக்கோயிலின் கட்டிடப் பணியில் தன் கலையம்சத்தை காட்டி திருக்கோயிலை அழகுபடுத்தியிருக்கிறான். வைணவ உலகம் மறக்க முடியாதவராக திகழ்பவர் நாதமுனிகள். 

மயக்கும் தமிழ் - 11 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

குடந்தையில் கிடந்த மாயக்கூத்தன்

பக்தியில் பல வகை உண்டு. ஆண்டாள் நாச்சியாரைப்போல நாராயணனே நமக்கு பறை தருவான் என்று முதலிலேயே மூலமூர்த்தியான ஸ்ரீமன் நாராயணனின்  பாதங்களை பற்றிக் கொள்வது என்பது இயற்கையிலேயே அமைந்த ஒன்று. மற்றொரு பக்தி என்பது இடம் மாறி தடம் மாறி தனக்கேற்ற பரம்பொருளை  கண்டுபிடித்து அதனோடு ஐக்கியமாவது. இடம் மாறினாலும் தடம் மாறினாலும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் தனி முத்திரை பதித்தவர் திருமழிசை ஆழ்வார். பூந்தமல்லிக்குப் பக்கத்தில் உள்ள திருமழிசையில் அவதரித்தவர் அவர். நான்முகன் திருவந்தாதி தூய வெண்பாக்களால் ஆனது. திருச்சந்தவிருத்தம் கலிவிருத்தப்  பாடல்களைக் கொண்டது. காலத்தால் அழிக்க முடியாத காவியப் பாசுரங்களை எளிய இனிய தமிழில் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் படைத்திருக்கிறார்.

இவர் வைணவத்தில் ஈடுபட்டு திருமால் மேல் காதல் கொள்வதற்கு முன்பு ஜைனம், பெளத்தம், சைவம் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்.  திருவல்லிக்கேணியில் பல காலம் வசித்தார். மதங்கள் மாறினாலும் இவர் மனம் மாறினாலும் மனம் அமைதியடையாமல் குழம்பிய குட்டையாகவே  இருந்திருக்கிறது. இப்படி இருந்தவரை மனமாற்றம் செய்து மடைமாற்றம் செய்தவர். தமிழினத் தலைவர் என்று பெயர் பெற்ற பேயாழ்வார் ஆவார். பேயாழ்வார்தான்  திருமழிசை ஆழ்வாரின் பரமகுரு. திருமழிசை ஆழ்வார் முதலாழ்வார்கள் காலத்தைச் சேர்ந்தவர். பல்வேறு மதங்களில் பல்வேறு விதமான அனுபவத்தைப்  பெற்றவர். ஆதலால் அதனுடைய வெளிப்பாடாக தன்னுடைய எண்ண ஓட்டங்களை மன உணர்வுகளை மிகவும் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்வதுபோல்  ஒரு பாசுரம் படைத்திருக்கிறார்.

திங்கள், 25 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 10 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய்

‘‘கல்லால் கடலையணைகட்டி யுகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மண்ணிய நாங்கூர்
செல்வா, திருவெள்ளக் குளத்துறைவானே
எல்லா இடரும் கெடுமா றருளாயே!’’

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வாரால் படைக்கப்பட்ட மிக அற்புதமான பாசுரம் இது. கலியன், பரகாலன், மங்கை மன்னன் ஆலிநாட்டு அரசன் என்று பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வாரின் ஆன்மா குடிகொண்டிருக்கும் இடம்தான் திருவெள்ளக்குளம் என்று அழைக்கப்படுகிற அண்ணன் பெருமாள் கோயில். திருப்பதியில் லட்சக்கணத்தில் வருகிற பக்தர்களுக்கு எல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்கிற ஸ்ரீநிவாசனை அந்தக் கோவிந்தனை அண்ணா என அன்போடு அழைத்து மகிழ்ந்தவர் திருமங்கை ஆழ்வார். அதன்பிறகு இந்த ஊர்ப் பெருமாளைத்தான் ‘அண்ணா அடியேன் இடரைக் களையாயே’ என்று உள்ளம் உருகி அழைக்கிறார். மொத்தம் பத்து பாசுரங்கள். பத்தும் முத்துக்கள். நூற்றியெட்டு திவ்ய தேசங்களிலேயே திருமலையில் நித்ய வாசம் செய்யும் எம்பெருமான் கோவிந்தனையும் அண்ணன் கோயில் பெருமாளையும்தான் அண்ணா என்று அழைப்பதால் இருவருக்கும் உள்ள ஒருவித நெருக்கத்தையும் உருக்கத்தையும் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார்.

ஶ்ரீமத் பாகவதம் - 74

மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்தொன்பதாவது அத்தியாயம்

(கீழ்ச் சொன்ன பக்தியோகத்தின் பிரிவுகளையும் காலஸ்வரூபத்தையும் கூறுதல்) 

தேவஹூதி சொல்லுகிறாள்:- வாராய் பகவானே! மூலப்ரக்ருதி அதன் கார்யமான மஹத்து முதலிய தத்வங்கள் ஜீவாத்மா பரமாத்மா இவர்களின் உண்மையான ஸ்வரூபத்தை அறிவிக்கும்படியான லக்ஷணத்தை நீ எனக்கு மொழிந்தனை. ஸித்தாந்தங்களில் இந்த ப்ரக்ருதி முதலியவற்றின் உண்மையை அறிவது எந்த பக்தியோகத்திற்கு மூலமென்று சொல்லுகிறார்களோ, அந்த பக்தியோகத்தின் பிரிவுகளை எனக்கு விவரித்து மொழிவாயாக. நீ இதையெல்லாம் மொழியவல்லனல்லவா? மோக்ஷத்தை விரும்பும் புருஷன் இஹபரலோகங்கள் இரண்டிலும் எதைக் கேட்டமாத்ரத்தில் வைராக்யம் உண்டாகப் பெறுவானோ, அத்தகைய ஜீவலோகத்தின் ஸம்ஸாரகதிகளை எனக்கு மொழிவாயாக. அவை பற்பல வகைப்பட்டிருக்கும் அல்லவா? பகவானுக்குச் சரீரமாயிருப்பதும் மேன்மையுள்ள ப்ரஹ்மாதிகளையும் தன்வசப்படுத்தி ஆள்வதுமாகிய காலத்தின் ஸ்வரூபத்தை எனக்கு மொழிவாயாக. இந்தக் காலத்தினால் விளையும் ஜன்ம ஜரா மரணாதிரூபமான ஸாம்ஸாரிக தர்மங்களைக் கடக்கும் பொருட்டல்லவா எவ்விதத்திலும் கெடுதியில்லாத நிவ்ருத்தி தர்மத்தைப் பெரியோர்கள் ஆசரிக்கின்றார்கள். அத்தகைய காலத்தின் ஸ்வரூபத்தை எனக்குச் சொல்லவேண்டும். தேஹமே ஆத்மாவென்றும் தானே ஸ்வந்த்ரன் என்றும் ப்ரமித்து ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறியாமல் ஸ்வர்க்க நரகாதிகளை ஸாதித்துக் கொடுப்பவைகளான புண்ய பாப ரூப கர்மங்களில் தொடர்ந்த புத்தியால் இழுக்கப்பட்டு வருந்தி எல்லையற்றதாகிய ஸம்ஸாரமாகிற காடாந்தகாரத்தில் உறங்குகின்ற உலகத்தை எழுப்பும் பொருட்டு ஜ்ஞானயோகாதிகளை உபதேசிக்கின்ற நீ பாஸ்கரன் (ஸூர்யன்) போல் அவதரித்தாயல்லவா?

புதன், 20 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 9 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

ராமானுஜர் ஒரு கலங்கரை விளக்கம்!

ஆழ்வார்களின் தித்திக்கும் தேன் தமிழ் பாசுரங்களை நினைத்தாலே மனதிற்குள் ஒரு மழைத்துளி விழுந்ததைப்போல் உணர்வு மேலிடுகிறது. தூய தமிழில் தூய்மையான சிந்தனைகளை முன்வைத்து மனிதகுலம் மாபெரும் நன்மைகள் அடைய எடுத்த பெருஞ்செயல் அல்லவா இந்தச் செயல்! அதனால்தான் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை ஆழ்வார்களின் அருளிச் செயல், ஈரத்தமிழ், திராவிட வேதம், ஐந்தாம் வேதம் என்றெல்லாம் வைணவ பக்தி உலகம் கொண்டாடி மகிழ்கிறது! சாதாரணமாக ஈரம் கொஞ்சநேரத்திற்கெல்லாம் காய்ந்துவிடும். இதுதான் நிதர்சனமான யதார்த்தமான உண்மை. ஆனால், திவ்யப் பிரபந்தம் என்கிற ஈரத்தமிழோ நம் காய்ந்துபோன மனங்களை எப்போதும் பதப்படுத்தி செப்பனிட்டு ஈரப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் சாகா வரம் பெற்றவையாக குற்றால அருவியாய், கொல்லி மலைத் தேனாய், வற்றாத கங்கையாய், வாசமுள்ள ரோஜாவாய், நம் மனம் சிறக்க பக்தி மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது!

காலம் தமிழர்களுக்கு கொடுத்த கொடையாக வந்து உதித்த எம்பெருமானார், உடையவர் யதிராஜா, பாஷ்யகாரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிற பகவத் ராமானுஜர் மேடு பள்ளங்களை நிரவி நமது உள்ளங்களை செப்பனிட்டு களர் நிலத்தை வளர் நிலமாக மாற்றம் செய்திருக்கிறார். ஒரு வைணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமக்கு தெள்ளத் தெளிவாக தந்திருக்கிறார். 

ஶ்ரீமத் பாகவதம் - 73

மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்து எட்டாவது அத்தியாயம்

(பக்தியோகத்தையும் அதற்கு அங்கமான மற்றவைகளையும் விரிவாகக் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வாராய் மனுசக்ரவர்த்தியின் புதல்வியே! பக்தியோகத்தின் ப்ரகாரத்தையும் அதன் அங்கங்களுடைய ஸ்வரூபத்தையும் மேல்விரிவாகச் சொல்லுகிறேன்  கேட்பாயாக. இந்த பக்தியோகத்தை அனுஷ்டித்துக்கொண்டு வருவானாயின், அவனுடைய மனது ராகம் த்வேஷம் முதலிய கல்மஷங்களெல்லாம் தீர்ந்து தெளிந்து நல்வழியில் சென்று சுபாச்ரயமான பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தில் நிலைபெறும். அந்த பக்தியோகத்திற்கு அஷ்டாங்கயோகம் அங்கமாயிருக்கும். யமம் நியமம் ஆஸனம் ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் தாரணம் த்யானம் நிதித்யாஸனம் என்னும் இவையே அஷ்டாங்க யோகமாகும். தன் சக்திக்குத் தகுந்தபடி தனது வர்ணாச்ரமங்களுக்குரிய தர்மங்களை அனுஷ்டிக்கையும், தன் வர்ணாச்ரமங்களுக்கு இணங்காத விபரீத தர்மங்களினின்று மீளுகையும் (அவற்றைச் செய்யாமையும்), தெய்வாதீனமாய்க் கிடைத்த அன்னாதிகளால் ஸந்தோஷம் அடைகையும் பாகவத ஸமாராதனமும் அவரவர்கள் ஆதரிக்கும்படியான தர்ம அர்த்த காமங்களென்கிற புருஷார்த்தங்களில் கண்வையாமையும், மோக்ஷ தர்மங்களில் மனவிருப்பமும், ஜாதிதுஷ்டம் ஆஸ்ரயதுஷ்டம் சிமித்ததுஷ்டம் என்று மூன்று வகைப்பட்ட துஷ்ட ஆஹாரங்களைத் தவிர்த்து ஸாத்விகமான அன்னாதிகளைப் புசிக்கையும், அந்த சுத்தமான ஸாத்விகாஹாரங்களையும் மிதமாகப் புசிக்கையும் எப்பொழுதும் ஜன ஸங்கமின்றி ஏகாந்தமாய் க்ஷேமத்திற்கிடமான தேசத்தில் இருக்கையும், அஹிம்ஸையும் (ஒருவர்க்கும் ஹிம்ஸை செய்யாமையும்), ஸத்யம் பேசுகையும் திருட்டுத்தனமில்லாமையும், எவ்வளவால் தேஹயாத்ரை நிறைவேறுமோ அவ்வளவு பொருள் கொண்டு திருப்தி உண்டாகப் பெறுகையும், இந்திரியங்களை வென்று ப்ரஹ்மசர்யம் தவறாதிருக்கையும், சாந்த்ராயனம் முதலிய வ்ரதங்களை அனுஷ்டிக்கையாகிற தவமும், சுத்தியுடனிருக்கையாகிற ஆசாரமும், வேதாத்யயனம் முதலியவைகளும், பகவானை ஆராதித்தலும், மிதமாகப் பேசுகையாகிற மௌனமும், எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பினும் வருத்தம் உண்டாகாதபடி உட்கார்ந்திருக்கும் நிலைமையும், மெல்லமெல்ல ப்ராணவாயுவை ஸ்வாதீனப்படுத்திக் கொள்கையும், இந்த்ரியங்களை மனத்தினால் சப்தாதி விஷயங்களினின்று திருப்பி ஹ்ருதயத்தில் அடக்குகையும், ப்ராணன் அபானம் முதலிய பஞ்ச ப்ராணன்களையும் மனத்தையும் அவற்றிற்கு ஸ்தானங்களாகிய ஹ்ருதயம் குதம் முதலிய இடங்களுக்குள் ஏதேனுமொன்றில் நிலைநிறுத்துகையும், பரமபுருஷனுடைய லீலைகளான ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை த்யானிக்கையும், மனத்தை ஒன்றிலேயே நெடுநேரம் நிலைநிற்கச் செய்கையும் ஆகிய இவ்வுபாயங்களாலும் மற்றுமுள்ள வ்ரதங்களாலும் தானாதிகளாலும் சப்தாதி விஷயங்களில் ஆழ்ந்திருப்பதும் ஆனது பற்றியே “கல்மஷமுடையதுமாகிய மனத்தை, புத்தியைக்கொண்டு மெல்லமெல்ல சுபாச்ரயத்தில் (சுபாஸ்ரயமான பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தில்) படியச்செய்ய வேண்டும். பக்தியோகத்தை விரும்புமவன் கீழ்ச்சொன்ன வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிக்கை முதலிய உபாயங்களாலும் மற்றும் பலவகை வ்ரதானுஷ்டானங்களாலும், தானாதி தர்மங்களாலும், சப்தாதி விஷயங்களில் ஓடுகின்ற துஷ்டமான மனஸ்ஸை மெல்ல மெல்ல புத்தியினால் சுபாச்ரயமெனப்படுவதான பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தில் பற்றச் செய்யவேண்டும். சோம்பலின்றி முதலில் ப்ராணவாயுவை ஸ்வாதீனப்படும்படி ஜயிப்பானாயின், அவன் மனத்தை அனாயாஸமாகவே ஸ்வாதீனப்படுத்திக் கொள்வான், “ப்ராண வாயுவை எங்ஙனம் ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள முடியும்?” என்னில், சொல்லுகிறேன், கேட்பாயாக. 

செவ்வாய், 19 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 8 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

பக்தியும் முக்தியுமே பிரதானம்!

எம்பெருமான் திருமாலின் கல்யாணக் கோலங்களில் ஆழ்ந்திருப்பவர்கள் ஆழ்வார்கள் ஆவர். விஷ்ணுவை சதா சர்வகாலமும் நினைத்து வழிபடுபவர்கள் வைணவர்கள். இதையே நம்மாழ்வார் ஒருபடி மேலே சென்று எல்லாவற்றையுமே கண்ணனாகவே பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். அவரது அதிஅற்புதமான பாசுரம் ஒன்றில்...

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணின் உளவன் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் என் இள மான் புகுமூர் திருகோளூரே

தலைவனது நகர் நோக்கித் தனிவழியே சென்ற மகளைக் குறித்து தாய் இரங்கிக் கூறும் பாசுரம் இது. இதைத் திருத்தாயார் பாசுரம் என்பார்கள். பன்னிரு ஆழ்வார்களின் தலைமகன், ஞானத்தந்தையாகிய நம்மாழ்வார் தன்னை பராங்குச நாயகியாகவும், திருமங்கைஆழ்வார் தன்னையே பரகால நாயகியாகவும் நாயகா  நாயகி பாவத்தில் படைத்திட்ட பாசுரங்கள் ஏராளம். அதில் ஒன்றுதான் நம்மாழ்வார் படைத்து நமக்கு இட்ட பெரு விருந்துப் பாசுரமான, ‘இந்த உண்ணும் சோறு’ பாசுரம். ‘‘உயிர் வாழ்வதற்கு உண்ணத்தக்க சோறும், உயிரைப் பாதுகாப்பதற்குப் பருகத்தக்க நீரும் இன்பத்துக்காக மகிழ்ந்து தின்னத்தக்க வெற்றிலையுமாகிய இப்பொருட்கள் எல்லாம் எனக்கு கண்ணபிரான் ஆகிய எம்பெருமானே’’ என்கிறார். எல்லாமே அவன்தான். சகலமும் அவன் படைப்பே என்கிற உள்ளம் வரவேண்டுமானால் இறைவனோடு எத்தகைய நெருக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.

உயிர் வாழ இன்றியமையாதது உண்ண உணவு. தாகம் தீர்ப்பதற்கு தண்ணீர், மகிழ்ச்சிக்கு வெற்றிலைப் பாக்கு. இதை முன்னிறுத்தி இதையெல்லாம் கண்ணபிரானாகவே நம்மாழ்வார் பார்த்தார் என்றால் அவருக்குத்தான் இறைவன் மீது எத்தகைய மாளாக் காதல் இருந்திருக்க வேண்டும். வைணவ உலகம் இந்தப் பாசுரத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடுவதற்கு காரணம் இருக்கத்தானே செய்கிறது. எல்லாம் அவனே! எல்லாவற்றிலும் அவனே! இந்தப் பாசுரத்தில் வருகிற திருக்கோளூர், பக்தி உலகத்தில் தனி இடத்தைப் பெற்றிருக்கிறது. வைணவ உலகம் தழைக்க வந்த மாமுனிவர் பெருங்கருணையாலே அனைவரையும் தன்பால் ஈர்த்த ஜீவநதியாகத் திகழும் உடையவர் எம்பெருமானார் ராமானுஜரை முன்வைத்து திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் என்ற நூலை படைப்பதற்கும் நம்மாழ்வாரின் இந்தப் பாசுரம்தான் மூலமுதல்.

இன்றும் நம்மாழ்வார் நமக்கெல்லாம் அருள்பாலிக்கும் ஆழ்வார் திருகரிக்குப் பக்கத்தில் இருக்கிறது திருக்கோளூர். நம்மாழ்வாரே சரண் என்று வாழ்ந்த மதுரகவியாழ்வார் அவதரித்த ஊர். தேவுமற்று அறியேன், குருகூர் பாவின் இன்னிசை பாடித்திரிவேனே என்று உடலாலும் உள்ளத்தாலும் வாழ்ந்தவர் மதுரகவியாழ்வார். மிகவும் மேன்மையான குணங்களைப் பெற்றவர்  நம்மாழ்வார். அந்த மேன்மையான குணங்களைப் புரிந்துகொண்டு அவரைத் தலைவனாக ஏற்றுக்கொண்ட தொண்டர் இப்படியொரு குரு  சிஷ்யர் அமைவதெல்லாம் சாதாரண விஷயமா என்ன? பொதுநலம் ஒன்றையே சிந்தித்த தலைவன். சுயநலம் துளிகூட கிடையாது என்பதை உறுதி செய்துகொண்ட தொண்டன். அதனால் தலைவன் பால் ஈர்க்கப்பட்டு அவரையே அதாவது. 

நம்மாழ்வாரையே அவரது திருவடியையே சரண் புகுந்த மதுரகவி ஆழ்வார். அடடா! என்ன அற்புதம் இது. நம்மாழ்வாருக்கு முன்பும் இப்படி இருந்தது இல்லை பின்பும் இல்லை. நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும் நமக்குள் ஏற்பட்டிருக்கிற பிணியைப் போக்குகிற அருமருந்தாக அமைந்திருக்கிறார்கள். இங்கே லாப நஷ்டக் கணக்குகள் கிடையாது. பக்தியும் அதனால் ஏற்படும் முக்தியும்தான் பிரதானம். கண்ணனை நினைத்துப் பார்த்தாலும் அவன் வரவில்லை. சரி என்ன செய்யலாம் என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் திருக்கோளூருக்கு வந்துவிட்டாளாம். கண்களில் நீர் கோர்த்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீரால் உடல்  நினைகிறது. உள்ளமோ கண்ணனை நினைத்து கண்ணீரால் அழுகிறது.தன் பெண் எப்படி இருக்கிறாளாம்? இளமையான மானைப் போன்று இருக்கிறாளாம். அதைத்தான் ஆழ்வார் இளமான் புகும் ஊர் என்கிறார். 

நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரும் வாழ்ந்த காலம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. ஆனால், அவர் நமக்குக் காட்டிய திருக்கோளூர் தாமிரபரணியின் கரையில் இருக்கிற திருக்கோயிலுக்குச் சென்று பாருங்கள். அங்கே புஜங்க சயனத்தில் அற்புதமாக வைத்தமாநிதிப் பெருமாள் பள்ளிகொண்டிருக்கிறார். குபேரனுக்கும், நவநிதிகளுக்கும், மதுரகவி ஆழ்வாருக்கும் காட்சி கொடுத்தவர். திருத்தாயார் பெயர் குமுதவள்ளி. திருக்கோளூர் வள்ளி என்று அழைக்கப்படுகிறாள். குபேரன்தான் இழந்த செல்வத்தைப் பெறுவதற்கு இந்தப் பெருமாளை வழிபட்டான். அவனுக்கு செல்வத்தை வாரி வழங்கியவர் இந்தப் பெருமான்தான். இந்தப் பெருமாள் தன்னுடைய தலைக்கு மரக்காலை வைத்து பள்ளிகொண்டிருக்கிறார். 

செல்வத்திற்கு அதிபதியாகிய வைத்தமாநிதிப் பெருமாளே தன் கையில் அஞ்சனம் என்ற மை தடவி செல்வம் எங்கே இருக்கிறது என்று பார்ப்பதாக ஒரு ஐதீகம். ரிசர்வ் பேங்கில் இருக்கிற பணத்திற்குகூட தட்டுப்பாடு வரும் ஆனால், என்றைக்குமே அள்ள அள்ளக் குறையாத (Fixed Deposit) வைப்பு நிதி வைத்திருக்கிற வைத்தமாநிதி இருக்கும்போது நமக்கு என்ன கவலை இருக்க முடியும்? வைணவ குரு பரம்பரையில் மிக ஆளுமையுடன் விளங்கிய சுவாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய பிரபந்தஸாரத்தில் இத்தலத்தினையும் மதுரகவியாழ்வாரின் அவதாரத்தையும் சிறப்பித்துள்ளார்.

“தேறிய மாஞானமுடன் திருக்கோளுரில்
சித்திரையில் சித்திரை நாள் வந்து தோன்றி
ஆறிய நல்லன்புடனே குருகூர் நம்பிக்கு
அனவரத மந்தரங்க வடிமை செய்து
மாறனையல்லால் என்றும் மறந்தும் தேவு
மற்றறியே னெனும் மதுரகவியே நீ முன்  கூறிய
கண்ணி நுண் சிறுத்தாம்பதினிற் பட்டுக்
குலவு பதினொன்று மெனக்குதவு நீயே”

வேதாந்த தேசிகரைப் போலவே வைணவ உலகத்தில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த மாபெரும் ஆச்சாரியனாகத் திகழும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் தன்னுடைய உபதேசரத்தின மாலையில் 
  
‘‘சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோயில்
ஏரார் பெரும்புதூர் என்னுமிவை பாரில்
மதியாகும் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார்
எதிராசர் தோன்றிய ஊர்.’’


என்று குறிப்பிட்டதிலிருந்து திருக்கோளூரின் சிறப்பும் மதுரகவி ஆழ்வாரின் பெருமையும் நம்மாழ்வாரின் வைத்தமாநிதிப் பெருமானைப் பற்றிய மங்களாசாசனப் பாசுரங்களும் நமக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கையில் ஒருமுறையேனும் திருநெல்வேலி  திருச்செந்தூர் வழியில் இருக்கின்ற நவதிருப்பதிற்குச் சென்று வாருங்கள். நம்மாழ்வாரின் ஆன்மா குடிகொண்டுள்ள ஆழ்வார்த்திருநகரியையும் திருக்கோளூரையும் அங்கே சேவை சாதிக்கிற பெருமாளையும் கண்டு மகிழுங்கள். வைத்தமாநிதியை பார்த்தாலே நமது வறுமை தீரும். இது கண்கூடான உண்மை அருளோடு பொருளையும் தருகிற பெருங்கருணை கொண்ட பெருமாளை பணிந்து வணங்குவோம். நம்மாழ்வாரையும் அந்த அற்புத தலைவனை நமக்கு காட்டிய சிறப்புமிக்க மதுரகவியாழ்வாரை நெஞ்சில் நினைப்போம்.

நன்றி - தினகரன்

ஶ்ரீமத் பாகவதம் - 72

மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்து ஏழாவது அத்தியாயம்
(பலவகை உபாயங்களால் ப்ரக்ருதி புருஷர்களின் ஸ்வரூபத்தை நிர்ணயித்து மோக்ஷரீதியை நிரூபித்தல்)
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வாராய் மாதாவே! ஜலத்தில் ப்ரதிபலிக்கின்ற ஸூர்யன் அந்த ஜலத்தினுடைய தர்மங்களால் எங்ஙனம் தீண்டப்பெறுகிறதில்லையோ, அங்ஙனமே ஜீவன் ப்ரக்ருதியின் பரிணாமமாகிய தேஹத்தில் இருப்பினும் ப்ரக்ருதியின் தர்மங்களான தேவத்வம் மனுஷ்யத்வம் முதலியவைகளாலும் ஸத்வாதி குணங்களால் விளையும் ஸுகதுக்காதிகளாலும் தீண்டப் பெறுகிறதில்லை. ஏனெனில், அவன் இயற்கையில் விகாரமற்றவன்; தேவ மனுஷ்யாதி உருவமாய்ப் பரிணமிக்கும் தன்மையனல்லன். அவனுக்கு இயற்கையில் ஸத்வாதிகுணங்களின் ஸம்பந்தமே கிடையாது. அவன் போதல் வருதல் முதலிய ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளுக்கு இயற்கையில் இருப்பிடமல்லன். ஸூர்யன் ஜலத்தில் ப்ரதிபலிப்பினும், அசைதல் குறைதல் வளர்தல் முதலிய அந்த ஜலத்தின் குணங்கள் எங்ஙனம் ஸூர்யனுக்கு உண்டாகிறதில்லையோ, அங்ஙனமே ஜீவனுக்கும் ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வாதிகளும் தேவத்வ மனுஷ்யத்வாதிகளும் ஸம்பந்திக்கிறதில்லை. சால் குடம் கலசம் முதலிய மண் பாத்ரங்களிலிருக்கும் ஆகாசத்திற்கு எங்ஙனம் அவற்றின் சிறுமை பெருமை முதலியவை ஸம்பந்திக்கிறதில்லையோ, அங்ஙனமே ஜீவனுக்கு ப்ரக்ருதியின் குணங்கள் ஸம்பந்திக்கிறதில்லை. “ஜீவன் தேவ மனுஷ்யாதி சரீரங்களில் இருப்பினும் அவற்றின் தோஷங்கள் அவனைத் தீண்டுகிறதில்லை என்பது எங்ஙனம் பொருந்தும்?” என்னில், அதற்குக் காரணம் ஜீவாத்மாவின் ஸ்வபாவமே. ஜீவன் இயற்கையில் எவ்வகையான தோஷங்களும் தீண்டப்பெறாதவன், ஆனால், “நான் தேவன், நான் மனுஷ்யன் நான் ஸுகிக்கிறேன், நான் துக்கிக்கிறேன்” என்று ஜீவன் தேஹத்தையே ஆத்மாவாக நினைப்பதும் ஸூகிப்பதும் துக்கிப்பதும் எங்ஙனம் பொருந்தும்?” என்னில், அது ப்ராந்தியே. ஆனால் இத்தகையனான ஜீவாத்மாவுக்கு தேவ மனுஷ்யாதி தேஹஸம்பந்தமும் ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளில் “நான் செய்கின்றேன், நான் போகின்றேன், நான் வருகின்றேன்” என்கிற எண்ணமும் எப்படி பொருந்தும்?” என்னில், சொல்லுகிறேன் கேள். கீழ்ச்சொல்லப்பட்ட குணமுடைய இந்த ஜீவன் இயற்கையில் ப்ரக்ருதியைக்காட்டிலும் ஸ்வரூபத்தினாலும் ஸ்வபாவத்தினாலும் வேறுபட்டவனாயினும் ஆத்மாவல்லாத தேஹத்தை ஆத்மாவாக நினைக்கையாகிற அஹங்காரத்தினால் தன் ஸ்வரூபம் மறையப்பெற்று ப்ரக்ருதியின் குணங்களாகிய சப்தாதி விஷயங்களில் கால் தாழப் பெறுகின்றான்; “நான் செய்கிறேன்” என்று தன்னை ஸ்வதந்த்ரனாகவும் நினைத்துக் கொள்கின்றான். தன்னைத்தான் ஸ்வதந்தரனென்று நினைத்துக் கொள்கையாகிற ஸ்வதந்தராத்மாபிமானமும் ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாம். தேஹஸம்பந்தமே ஸம்ஸாரமென்று கூறப்படும். இருவகைப்பட்ட அந்த அபிமானத்தினால் (தேஹாத்மாபிமானத்தினாலும் ஸ்வதந்த்ராத்மாபிமானத்தினாலும்) ஸ்வாதீனமற்றுக் கர்மத்திற்கு உட்பட்டு அந்தக் கர்மா தீனமாய் விளையும் ஸுகதுக்கங்களை அனுபவித்துக்கொண்டு கேவலம் ஸுகத்தையே அனுபவிக்க நேரப்பொறாதவனாகி ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் விளையும் புண்ய பாபரூபமான தோஷங்களால் சிறப்புற்றதும் இகழத்தக்கதும் இருவகைப்பட்டதும் (உத்தமம் மத்யமம் அதமம் என்று மூன்று வகைப்பட்டது) ஆகிய தேவர் திர்யக்கு மனுஷ்யர் முதலிய ஜன்மங்களில் பிறந்து ஸம்ஸாரபந்தத்தை அடைகின்றான். “தேவ மனுஷ்யாதி உருவங்களெல்லாம் ஆத்மாவுக்கு இயற்கையில் ஏற்பட்ட ஆகாரங்களன்றென்று பலவாறு கூறப்பட்டது. அப்படிப்பட்ட அந்த தேவ மனுஷ்யாதி உருவங்களால் ஜீவனுக்கு என்ன கெடுதி உண்டாகக் கூடும்?” என்னில் சொல்லுகிறேன், கேள். 
தேவத்வம் மனுஷ்யத்வம் முதலிய ஆகாரங்கள் ஆத்மாவுக்கு இயற்கையில் ஏற்பட்டவைகளன்றாயினும், சப்தாதி விஷயங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கிற இவ்வாத்மாவுக்கு ஸம்ஸாரபந்தம் நிவர்த்திக்கிறதில்லை. ஸம்ஸாரமே பெரிய அனர்த்தமாகையால் அதை அவை விளைக்கின்றன. ஸ்வப்னத்தில் அனுபவிக்கிற சரீரங்கள் ஆத்மாவுக்கு இயற்கையில் ஏற்பட்ட ஆகாரங்களன்றாயினும் விஷயங்களைச் சிந்திப்பதின் மூலமாய் ஸுக துக்க ரூபமான அனர்த்தத்திற்கு எப்படி காரணமாகின்றனவோ; அப்படியே ஜாக்ரத்தசையிலும் (விழித்துக் கொண்டிருக்கும் பொழுதும்) தேவ மனுஷ்யாதி தேஹங்கள் ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான ஆகாரங்களல்லவாயினும் சப்தாதி விஷயங்களில் மனப்பற்றை விளைப்பதன் மூலமாய் அனர்த்தரூபமான ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாகின்றன. ஆகையால், ப்ரக்ருதியின் பரிணமங்களாகிய இந்திரியங்களின் மார்க்கமான சப்தாதி விஷயங்களில் மிகுதியும் பற்றுடையதான மனத்தை, எவ்வகை இடையூறுகளாலும் தடை நேரப் பெறாத பக்தியோகத்தினாலும் வைராக்யத்தினாலும் மெல்ல மெல்ல ஸ்வாதீனப் படுத்திக்கொள்ள வேண்டும். வைராக்யமாவது ஆசைப்படத் தகுந்த வஸ்துக்களில் விருப்பின்மை. அந்த வைராக்யத்தினால் பகவானிடத்தில் பக்தியை வளர்த்திக்கொண்டு பிறகு மனத்தை பகவானுடைய த்யானத்தில் ஊக்கமுற்றதாகச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வானாயின், இந்த ஸம்ஸாரபந்தம் தானே நீங்கிப்போம். மனத்தை வேறு விஷயங்களில் போகவொட்டாமல் தடுக்கையில் உண்டாகும் த்வரையாகிற ச்ரத்தையோடு கூடி பக்தியோகத்திற்கு அங்கங்களாகிய சம தமாதிகளாலும் ஸர்வேச்வரனான என்னிடத்தில் “இவனே நமக்குத் தாய் தந்தை முதலிய ஸமஸ்த பந்துக்களும் மற்றுமுள்ளவை எல்லாமும்” என்கிற மனோபாவத்தினாலும், உண்மையே பேசுந்தன்மையாலும், ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் ஸமத்வ புத்தியாலும் (ஸமஸ்த வஸ்துக்களிலும் “இவையெல்லாம் சேதனாசேதனங்களைச் சரீரமாகவுடைய ஸர்வேச்வரனே” என்னும் நினைவு உண்டாகப் பெறுகையாலும்) ஸமஸ்த பூதங்களிடத்திலும் வேஷமில்லாதிருக்கையாலும், சப்தாதி விஷயங்களில் மனப்பற்றில்லாமையாலும், ஸ்த்ரீஸம்போகம் முதலியவற்றைத் துறந்திருக்கையாகிற ப்ரஹ்மசர்யத்தினாலும், அளவிட்டு மிதமாகப் பேசுகையாகிற மௌனத்தினாலும், பக்தியோகத்தை வளர்க்கும் உபாயங்கள் எல்லாவற்றிலும் சிறப்புற்றதான வர்ணாச்ரம தர்மானுஷ்டானத்தினாலும் பக்தியோகத்தை அப்யஸிக்கவேண்டும். தெய்வாதீனமாய்க் கிடைத்த அன்னாதிகளால் ஸந்தோஷமுற்று, அங்ஙனம் கிடைத்த அன்னாதிகளையும் மிதமாய் புசிப்பவனாகி போஜனாதி காலங்களிலும் சுபாஸ்ரயமான பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை மனனஞ்செய்கை தவறாமல் ஏகாந்தமான இடத்தில் வாஸஞ்செய்துகொண்டு பயாதிகளின்றி பயத்திற்கிடமான பூதங்களிடத்திலும் ஸ்னேஹத்தையே விரும்புகின்றவனும் அவற்றிலும் தயை செய்பவனும் எவ்வகையிலும் கலக்கமுறாத ஆழ்ந்த மனமுடையவனுமாய் இருக்கவேண்டும். பிள்ளை பெண்டிர் முதலிய அனுபந்தங்களோடு கூடின இந்த தேஹத்தில் நானென்னும் அபிமானத்தையும் என்னுடையதென்னும் அபிமானத்தையும் செய்யாமல் துறக்கவேண்டும். அத்தன்மையனாகி ப்ரக்ருதி புருஷர்களின் உண்மையைத் தெளிவாக அறிவிக்கின்ற தத்வஜ்ஞானத்தினால் ப்ரக்ருதி ஸம்பத்தம் துறக்கத்தக்கதென்றும் ஆத்ம ஸ்வரூபம் பற்றத்தக்கதென்றும் அறிந்து ஸங்கல்பம் விகல்பம் முதலிய மனஸ்ஸின் நிலைமைகளெல்லாம் தொலையப்பெற்று, பகவானையொழிந்த மற்ற வஸ்துக்களெவையும் கண்ணிலும் தோற்றப் பெறாதவனாகி ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவின் உண்மையைத் தெரிந்துகொண்டு, ஸூர்யனால் அதிஷ்டானஞ் செய்யப்பெற்ற சக்ஷுரிந்த்ரியத்தினால் ஸூர்யனை ஸாக்ஷாத்கரிப்பதுபோல், ஒருவாறாயிருக்கும் தன்மையதல்லாத தேஹத்தில் பரமாத்மாவினால் அதிஷ்டானஞ் செய்யப்பெற்ற ஜீவாத்மாவினால் அந்தப் பரமாத்மாவை ஸாக்ஷாத்கரிக்க வேண்டும். பிறகு ப்ராரப்தகர்மத்தின் முடிவில் தேவமனுஷ்யாதி சரீரத்தைத் துறந்து, கர்மத்தினால் தேவ மனுஷ்யாதி சரீரங்களில்லாதவனும் தன் ஸங்கல்பத்தினால் தேவமனுஷ்யாதி தேஹங்களைப் பரிக்ரஹிப்பவனும் என்றும் ஸங்கோசமடையாத ஜ்ஞானத்தையே ஸ்வபாவமாகவுடையவனும் ஜீவாத்மாவுக்கு ஸகலவிதபந்துவாய் இருப்பவனும் மாறும் தன்மையதாகி நிலையற்றிருக்கையால் அஸத்தென்று கூறப்படுவதான தேஹாதிகளுக்கும் (எப்படி நாம் கண்ணால் வஸ்துக்களைக் கண்டறிகிறோமோ, அங்ஙனமே நாம் ஈச்வரனுடைய உதவியாலேயே கண்ணைக் கொண்டு அந்தந்த வஸ்துக்களைக் காண்கிறோம். அவனில்லாமல் கண்ணுக்கும் தனியே சக்தியில்லை. எப்படி கண்னால் வஸ்துக்களைக் காண்பதற்கு ஸூர்ய கிரணங்களும் விளக்கு முதலிய வெளிச்சங்களும் உதவி செய்கின்றனவோ, அங்ஙனமே ஈச்வரனுடைய உதவியால்தான் நாம் அந்தந்த வஸ்துக்களைக் காண்கிறோம். அந்த ஸூர்யாதிகளுக்கும் ப்ரகாசம் கொடுப்பவன் ஈச்வரனே என்று “தஸ்ய ஹாஸா ஸர்வமீஷ விஜாதி” என்று ச்ருதி சொல்லுகிறது. ஆகையால் தேவாதிகளை ப்ரகாசிப்பிக்கிறவன் ஈச்வரனே. ஆத்மாவுக்கு மிகவும் ஸமீபித்ததாகையால் முதலில் தேஹத்தைச் சொல்லிற்று. தேஹம் முதலிய வஸ்துக்களையெல்லாம் கருதுகிறது.) கண்போல் ப்ரகாசகனும் அனைத்திற்கும் அந்தர்யாமியும் ஈடுமெடுப்புமில்லாதவனுமாகிய பரமபுருஷனைப் பெறுவான். “ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மஸ்வரூபத்தை அறிந்து அவ்வாத்மாவுக்கு அந்தராத்மாவான பரமாத்மாவை அடைகிறானென்றாய். ஆத்மஸ்வரூபம் இந்த்ரியங்களுக்கு விஷயமாகாததல்லவா. ஏனென்னில், அது மிகவும் ஸூக்ஷ்மமாயிருப்பது. ஆகையால் அதை எங்ஙனம் கண்டறிய முடியும்?” என்னில், சொல்லுகிறேன், கேள். 
நாம் பூமியிலுள்ள வஸ்துக்களை ப்ரகாசிப்பிக்கிற ஸூர்ய கிரணங்களைக் கொண்டே ஜலத்தில் ப்ரதிபலிக்கிற ஸுர்யனுடைய ப்ரதிபிம்பத்தைக் காண்கின்றோம். அங்ஙனம் ஜலத்தில் ப்ரதிபிம்பத்தை அறிவிக்கிற அந்த ஸூர்யகிரணத்தினாலேயே ஆகாயத்திலிருக்கிற வாஸ்தவமான ஸூர்யனையும் காண்கிறோம். வாஸ்தவத்தில் ஸூர்யனல்லாத ப்ரதிபிம்பத்தைக் காண்பதற்கும் அந்த ஸுர்யனுடைய கிரணங்களே நமக்கு ஸஹாயமாயிருக்கின்றன. இங்ஙனமே பஞ்சபூதங்கள் இந்திரியங்கள் மனது என்று மூன்று வகைப்பட்ட அஹங்கார தத்வத்தின் பரிணாமமாகிய தேஹம் இயற்கையில் ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதாயினும் அந்த தேஹத்தையே ஆத்மாவென்று எந்த ஜ்ஞானத்தினால் அறிகின்றோமோ, அந்த ஜ்ஞானத்தினாலேயே நிர்விகாரஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மாவையும் அறிகின்றோம். ஸூர்யகிரணமே வாஸ்தவத்தில் ஸூர்யனல்லாத ஸூர்யப்ரதிபிம்பத்தைக் காண்பதற்கும் வாஸ்தவமான ஸூர்யனைக் காண்பதற்கும் காரணமாகிறாப் போல், ஆத்மாவல்லாத தேஹத்தையே ஆத்மாவென்று ப்ரமிப்பதற்கும் உண்மையான ஆத்மாவை அறிவதற்கும் அவ்வாத்மாவின் தர்மபூத ஜ்ஞானமே காரணமாகின்றது. பூத ஸூக்ஷ்மங்கள் இந்திரியங்கள் மனது புத்தி அஹங்காரம் ஆகிய இவையெல்லாம் நித்ரையால் தோற்றாதிருக்கும்பொழுது தூக்கமின்றி தேஹாத்மாபிமானமுமின்றி தேஹத்தில் எவன் தோற்றுகிறானோ அவனே ஜீவாத்மாவென்று கூறப்படுவான். தூக்கமில்லாத ஸமயத்தில் என்னுடையதென்று தேஹாதிகளைக் காண்பவனாகி ஸ்பஷ்டமாகத் தோற்றுகிற ஜீவாத்மாவானவன் தூங்கும்பொழுது தேஹாதிகள் தோற்றாமையால் அந்த தேஹா விஷயமான அஹம்பாவம் நஷ்டமாகப் பெற்றுத்தான் நாசம் அடையாதிருப்பினும், கைப்பொருள் தொலையப்பெற்றவன்போல், தன்னை நாசம் அடைந்ததாக நினைத்துக்கொள்கின்றான். (தூங்கும் பொழுது ஒன்றும் தெரிகிறதில்லையேயென்னில், சொல்லுகிறேன். ஒன்றும் தெரிகிறதில்லையென்பதில்லை. தேஹாதிகள் தோற்றுகிறதில்லையேயன்றி ஜீவன் மாத்ரம் தோற்றிக் கொண்டேயிருக்கிறான். அதற்கு அடையாளம் என்னென்னில், சொல்லுகிறேன். 
தூங்கியெழுந்தவன் “நான் ஸுகமாகத் தூங்கினேன்” என்றும், “எனக்கு ஒன்றுமே தெரியவில்லை” என்றும், “நான் என்னையும் அறியாதிருந்தேன்” என்றும் சொல்லுகிறான். தூக்கத்திலும் நானென்றும் எனக்கென்றும் தோற்றுகிறவனே ஜீவனாவான். “நான் என்னையும் அறியாதிருந்தேன், என்கிறானேயென்னில், நானென்று தோற்றுகையாலே ஜீவன் உண்டென்பதில் ஸந்தேஹம் இல்லை. “என்னையும் அறியாதிருந்தேன்” என்பதற்கு இங்ஙனம் கருத்துக் கொள்ளவேண்டும். எப்படியென்னில், “நான் இன்னவன்” என்றும் “இந்த இடத்தில் இருக்கின்றேன்” என்றும் “இந்தக்காலம் இது” என்றும் எனக்குத் தெரியவில்லையென்பதே அதன் கருத்தாம். ஆகையால் தூக்கத்திலும் கேவலம் நானென்று ஜீவன் தோற்றுகிறானென்பதில் ஸந்தேஹமில்லை. ப்ரக்ருதியைக் காட்டிலும் ஜீவன் வேறுபட்டவனென்று அறிய விரும்புமவன் இங்ஙனம் ஜீவாத்மாவின் தோற்றத்தை நன்றாகப் பராமர்சித்து அந்த ஆத்மாவை ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டவனாக அறியவேண்டும். பஞ்சபூதங்களின் ஸமுதாய ரூபமான தேஹத்தை ஜீவனே தரித்துக்கொண்டிருக்கிறான். ஜீவனுடைய ஸம்பந்தம் அற்றதாயின், சரீரம் உடனே சிதறிப்போய்விடும். அந்தச் சரீரத்திற்கு நடையாட்டமும் ஜீவனால் தான் உண்டாகின்றது. ஜீவனுடைய ஸம்பந்தமற்ற தேஹம் அசையாதல்லவா? இங்ஙனம் தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து அவ்வாத்மாவுக்கு அந்தராத்மாவான பரமாத்மாவை உபாஸிக்கவேண்டும்.
தேஹூதி சொல்லுகிறாள்:- வாராய் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டனே! ப்ரக்ருதி ஜீவனை ஒருக்காலும் விடாது போல் தோற்றுகிறது. ஏனென்னில், ப்ரபூ! இந்த ப்ரக்ருதிக்கும் ஜீவனுக்கும் ஒருவருக்கொருவர் உள்ள ஸம்பந்தம் மாறாமல் திடமாயிருக்கின்றது. அன்றியும் அவ்விரண்டும் அழியாத வஸ்துக்களாய் இருக்கின்றன. ஆகையால் இவ்விரண்டு வஸ்துக்களும் ஒன்றை விட்டொன்று பிரிந்திருக்கமாட்டாததுபோல் தோற்றுகிறது. எப்படி பூமிக்கும் அதன் குணமான கந்தத்திற்கும் பிரிந்திருத்தல் உண்டாகாதோ, எப்படி ஜலத்திற்கும் அதன் குணமான ரஸத்திற்கும் பிரிந்திருத்தல் உண்டாகாதோ, அங்ஙனமே ப்ரக்ருதிக்கும் அதைக்காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவுக்கும் தனித்தனியே பிரிந்திருத்தல் உண்டாகாது. மற்றும், ஜீவன் ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளான போதல் வருதல் முதலிய செயல்களுக்கு இருப்பிடமல்லனே; அத்தகையனான ஜீவனுக்கு இந்தக் கர்மபந்தம் எதனால் உண்டாகிறதோ, அந்த ப்ரக்ருதியின் குணங்களாகிய ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் நீங்காதிருக்கையில் ப்ரக்ருதி எங்ஙனம் நீங்கும்? ஆகையால் பூமியைவிட்டு கந்தமும் கந்தத்தைவிட்டு பூமியும், ஜலத்தைவிட்டு பலமும் ரஸத்தைவிட்டு ஜலமும் தனியே பிரிந்திருக்க முடியாததைப் போல், ஜீவனும் ப்ரக்ருதியை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. ப்ரக்ருதியும் ஜீவனை விட்டுப் பிரிந்திருக்க நேராது. “தத்வஜ்ஞானம் உண்டாகையில் ப்ரக்ருகி ஆத்மாவை விட்டுப்போம்” என்னில், அதுவும் ஸரியன்று, ப்ரக்ருதியைக் காட்டிலும் ஜீவன் வேறுபட்டவனென்று நன்கு பராமர்சித்துத் தெரிந்து கொள்ளிலும், அந்த தத்வ ஜ்ஞானத்தினால் பிரபலமான ஸம்ஸாரபயம் நீங்கக் கூடுமாயினும், அவ்வளவில் ப்ரக்ருதி நீங்குவதற்கு இடமில்லை. ப்ரக்ருதி நீங்காமல் தொடர்ந்து கொண்டேயிருக்கையில், ஒருக்கால் நீங்கின ஸம்ஸாரபயமும் அதன் காரணம் நீங்காமையால் மீண்டுவரும். ஆகையால் ப்ரக்ருதி ஸம்பந்தம் நீங்காதிருப்பின் மோக்ஷத்திற்கு இடமில்லை. ஆகவே ஆத்ம ஸ்வரூபத்தையும் அவ்வாத்மாவுக்கு அந்தராத்மாவான பரமாத்மாவையும் உபாஸிப்பதால் என்ன ப்ரயோஜனம்? அறிஞரே! இங்ஙனம் என் மனது ஸந்தேஹத்தில் ஆழ்ந்து வருந்துகின்றது. இதைப் போக்குவாயாக.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தமக்கு ஏற்பட்ட வர்ணாச்ரம தர்மங்களை ஒரு பலனையும் விரும்பாமல் அனுஷ்டித்துக்கொண்டு தூயமனத்தராகி, நெடுநாள் என் கதைகளைக் கேட்டுக்கொண்டு வருவார்களாயின், அவர்க்கு எவ்வகை விக்னங்களாலும் தடைபடாத பக்தி என்னிடத்தில் உண்டாகும். அங்ஙனம் என்னிடத்தில் திடமான பக்தி உண்டாகப்பெற்றவர்க்கு ப்ரக்ருதி ஸம்பந்தம் தானே தொலைந்துபோம். ப்ரக்ருதியும் புருஷனும் தனித்தனியே வேறுபட்ட வஸ்துக்களென்றும், ப்ரக்ருதி ஸம்பந்தம் துறக்கத் தக்கதென்றும் ஆத்மஸ்வரூபம் பற்றத் தகுந்ததென்றும் நன்றாகத் தெரிந்துகொண்டு சிறந்த வைராக்யத்துடன் உபவாஸம் முதலிய தவங்களையும் தவறாமல் அனுஷ்டிப்பவராகி ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவின் உண்மையைச் சிந்தித்துக் கொண்டே மிகுந்த மன ஆக்கத்துடன் இருப்பார்களாயின், அவர்க்கு என்னிடத்தில் சிறந்த பக்தி உண்டாகும். ஆத்மாவுக்கு ஸம்ஸார பந்தத்தை விளைக்கின்ற ப்ரக்ருதியானது இங்ஙனம் என்னிடத்தில் பக்தி உண்டாகப் பெற்றவருடைய தவம் முதலியவற்றால் தஹிக்கப்பெற்றதாகி அவர்க்கு மீளவும் ஸம்ஸாரபந்தத்தை விளைக்க வல்லமையற்று மறைந்துபோம். அக்னிக்கு உத்பத்தி ஸ்தானமாகிய அரணிக்கட்டை அக்னியாகி தஹிக்கப்படுவதுபோல், தத்வஜ்ஞானத்திற்கு ஹேதுவான ப்ரக்ருதியானது அந்தத் தத்வஜ்ஞானத்தினாலேயே தஹிக்கப்பட்டு மறைகின்றது. ப்ரக்ருதி ஜ்ஞானத்தை அழிக்குமேயன்றி அதை விளைக்குமோவென்னில்; சொல்லுகிறேன், கேள். ஸாத்விகாஹாரங்களால் ஜ்ஞானாபிவ்ருத்தி உண்டாகுமென்பது யாவர்க்கும் தெரிந்த விஷயமே. அவையெல்லாம் ப்ரக்ருதியின் பரிணாமங்களே. பகவானுடைய கதைகளைக் கேட்பதாலும் பகவானுடைய ஸந்நிதானங்களுக்குப் போய்ப் பணிவதனாலும் ஜ்ஞானாபிவ்ருத்தி உண்டாகின்றது. அன்றியும் சாஸ்த்ராப்யாஸாதிகளால் ஜ்ஞானம் உண்டாவது வெளிச்சமே. இவை எல்லாவற்றிற்கும் தேஹமே காரணம். தேஹம் ப்ரக்ருதியின் கார்யமேயன்றி வேறன்று. ஆகையால் ப்ரக்ருதி ஜ்ஞானத்தை மறைப்பதுபோல் அதை விளையவும் செய்கின்றது. அஸத் கர்மங்களால் ஜ்ஞானம் நசிப்பதுபோல், ஸத்கர்மங்களால் ஜ்ஞானம் வளர்ந்து வருமென்பதில் ஸந்தேஹமில்லை. கர்மங்கள் ப்ரக்ருதியின் பரிணாமங்களேயன்றி வேறன்று. ஆகையால் ப்ரக்ருதியே ஜ்ஞானத்தை விளைக்கின்றது, அங்ஙனம் ஜ்ஞானோத்பத்திக்கு ஹேதுவான ப்ரக்ருதி அந்த ஜ்ஞானத்தினாலேயே அழிக்கப்படுகின்றது; பக்தியாவது பகவானிடத்தில் உண்டான ஓர் ஜ்ஞானமே. அத்தகைய பக்தி உண்டாகப் பெற்றவனுக்கு இந்த ப்ரக்ருதி ஸம்பந்தம் தானே பறந்துபோம். ஜீவன் ப்ரக்ருதியால் விளையும் போகங்களை அனுபவித்து இவை அஸாரங்களென்றும் அற்பங்களென்றும் நல்வரங்களென்றும் கண்டு என்றும் புலப்படுகின்ற அதன் தோஷங்களை அறிந்து துறந்துவிடுகின்றான். அங்ஙனம் துறக்கப்பெற்ற ப்ரக்ருதியானது இயற்கையில் கர்மத்திற்கு உட்படாதவனும் இடையில் வந்த கர்ம ஸம்பந்தமும் பகவத் பக்தியின் மஹிமையால் கழியப்பெற்றுத் தனக்கு இயற்கையில் ஏற்பட்ட அபஹதபாப்மத்வம் (பாபங்களற்றிருக்கை) முதலிய எட்டு குணங்களாகிற தன் மஹிமையில் நிலை நின்றவனுமாகிய ஆத்மாவுக்கும் அமங்களமான ஸம்ஸார பந்தத்தை மீளவும் விளைவிக்க வல்லதன்று. அஜ்ஞானம் உள்ளவரையிலுமே ப்ரக்ருதி ஸம்பந்தம் நடையாடுமன்றி ஜ்ஞானம் பிறந்தபின்பு ப்ரக்ருதி ஸம்பந்தம் நடையாடாது. தூங்குகிறவனுக்கு ஸ்வப்னம் பலவகை அனர்த்தங்களை விளைக்கின்றது. ஸ்வப்னத்தில் தலையறுப்புண்பதாகவும் பிள்ளை பெண்டிர் முதலியவர் மரணம் அடைவதாகவும் மற்றும் பலவகை அனர்த்தங்கள் விளைவதாகவும் அனுபவிக்கின்றானல்லவா? அங்கனம் பலவகை அனர்த்தங்களுக்கு இடமான ஸ்வப்னம் உறங்குகிறவனுக்கு அன்றோ உண்டாகின்றது. விழித்துக் கொண்டிருப்பவனுக்கு அத்தகைய ஸ்வப்னமே உண்டாகிறதில்லை. ஆனதுபற்றியே அந்த ஸ்வப்னத்தினால் விளையும் அனர்த்தங்களை அவன் அனுபவிக்கிறதில்லை. ஆகையால் அங்ஙனம் விழித்துக் கொண்டிருப்பவனுக்கு ஸ்வப்னம் மதிமயக்கத்தின் பொருட்டு வல்லதாகிறதில்லை. இங்ஙனமே ப்ரக்ருதி புருஷன் ஈஸ்வரன் என்கிற மூன்று தத்வங்களின் உண்மையை அறிந்து என்னிடத்தில் மனத்தை நிலைநிறுத்தி ஆத்மானுபவத்தினால் மனக்களிப்புற்று இருக்கின்ற புருஷனுக்கு ப்ரக்ருதி ஸம்ஸார பந்தத்தை விளைவிக்க வல்லதாகிறதில்லை. ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்ம பரமாத்மாக்களின் அனுபவத்தில் நிலைகின்றவனுக்கு ஒருக்காலும் ப்ரக்ருதி ஸம்ஸார பந்தத்தை விளைவிக்காது. இங்ஙனம் ஆத்ம ஸ்வரூபத்தை அறிய முயன்று அதில் மனவூக்கமுடையவன் பல ஜன்மங்களை அனுபவித்து வெகுகாலம் கழிந்தபின்பு தத்வங்களை அறிந்து தனக்கு ஹிதமான புருஷார்த்தம் இன்னதென்று தெரிந்து ஸத்யலோகம் வரையிலுமுள்ள ஸமஸ்த லோகங்களிலும் “இவை நச்வரங்கள், அற்பங்கள்” என்று விருப்பமற்றவனும் என்னிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையவனுமாகி என்னால் மிகவும் அருள்புரியப்பெற்று, ஸமஸ்த புருஷர்களாலும் ப்ரார்த்திக்கக்கூடிய சிறந்த புருஷார்த்தமாயிருப்பதும் என்னால் தரிக்கப்பெற்றதுமாகிய ஆத்மஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிப்பான். அங்ஙனம் பகவானுக்கு உட்பட்டு அவனேயென்னும்படி அவனிட்ட வழக்காயிருப்பதாகிய ஆத்மாவினுடைய ஸாக்ஷாத்காரத்தினால் ஸம்சயங்களெல்லாம் தீரப்பெற்று தேஹாத்மாபிமானத்தையும் துறந்து என்னிடத்தில் நிலைகின்ற பக்தியோகம் உடையவனாகி ப்ராரப்த கர்மத்தின் முடிவில், எங்குப் போனவர்கள் திரும்பமாட்டார்களோ, அப்படிப்பட்ட எனது ஸ்தானமாகிய பரமபதம் போய்ச்சேருவான். வாராய் மாதாவே! பக்தியோகம் கைபுகுந்தவனுக்கு யோகத்தினால் வருந்தி ஸாதிக்கக்கூடியவைகளும் மற்ற எந்தக் காரணங்களாலும் கிடைக்க முடியாதவைகளுமாகிய அணிமாதி ஐஸ்வர்யங்கள் தானே கைகூடும். அவை மிகவும் ஆச்சர்யங்களாயிருப்பவை. ஆகையால் அவை மனத்தை இழுக்கும். ஆயினும் அவை ஸம்ஸாரபந்தத்திற்கு இடமாயிருப்பவைகளேயன்றி ஸம்ஸாரத்தை முடிப்பவையன்று, அவற்றில் கால் தாழ்ந்தவனுக்கு ஸம்ஸார பந்தம் எக்காளும் தீராது. பக்தியோகம் கைபுகுந்தவன் தனக்குத்தானே சேர்ந்த அந்த அணிமாதி ஸித்திகளில் மனம் செல்லப் பெறாதிருப்பானாயின், அவன் ஸ்ம்ஸாரத்தைப் பற்றறத் துறந்து சரீர ஸம்பந்தமற்று மஹாநந்த ஸ்வரூபனாகிய என்னைப் பெறுவான். 
இருபத்தேழாவது அத்தியாயம் முற்றிற்று.

சனி, 16 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 7 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

தேன்தமிழ் பூமாலை சூடிய பூதத்தாழ்வார்

முதலாழ்வார்களில் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார் நூறு பாசுரங்களை அமுதத் தமிழில் வெண்பாக்களாக நமக்கு யாத்துத் தந்திருக்கிறார். அவருக்கு அமுதகவி என்ற சிறப்புப் பட்டப் பெயரும் உண்டு. சரி அது என்ன அமுதத் தமிழ்? ஆழ்வாரின் அற்புதப் பாசுரமே இதற்கு பதில் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது.

‘அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான்என்றும்
அமுது அன்ன சொல் மாலை ஏத்தித் தொழுதேன் 
சொலப்பட்ட நல் மாலை ஏத்தி நவின்று’

அமுதம் போன்றவன் என்றும், தேன் போன்றவன் என்றும், ஆழிப்படையை உடையவன் என்றும், முற்காலத்தில் தேவர்களுக்காகக் கடலை கடைந்து அமுதம் எடுத்து அளித்து மகிழ்ந்தவன் என்றும் சாஸ்திரங்கள் அவனைத் துதித்து மகிழ்கின்றன. இவ்வாறு சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற எம்பெருமானை அமுதம் போன்ற பாசுரங்களால் அடியேனும் பலமுறை புகழ்ந்து சொல்லி வணங்கினேன்.’ என்று பூரிப்படைகிறார், பூதத்தாழ்வார். ஆழியான் என்பதும் கடலை கடைந்து அமுதம் கொண்டான் என்பதும் இறைவனுக்கு எப்படித் திருநாமங்களோ அப்படியே ‘அமுது’ என்பதும் ‘தேன்’ என்பதும் அவன் திருநாமங்களே ஆகும்.

தேனை அமுதை நன்பாலை கனியை கரும்பு தன்னை என்கிற பாசுர வரிகளில் தேனே, அமுதே, பாலே, கனியே, கரும்பேயாகி நின்றொழிந்தான் என்றும் பலவாறாக ஆழ்வார் பெருமக்கள் இறைவனை ஆடிப்பாடி அக மகிழ்ந்திருக்கிறார்கள். எது உயர்ந்ததோ அதை அமுதம் என்று கொண்டாடி மகிழ்கிறோம். அப்படிப் பார்த்தால் நம்மையெல்லாம் காத்து ரட்சிக்கின்ற ஜகத்ரட்சகன் எல்லோருக்கும் மேலே உயர்ந்தவன் இல்லையா? அப்படிப்பட்டவனை அமுதம் போன்ற இனிய தமிழால் அமுதம் கலந்து பாடுகிறேன் என்று பரவசப்படுகிறார் பூதத்தாழ்வார். அதனால்தான் தான் இறைவனுக்கு படைத்த பாசுரங்களை அதென்ன சொல் மாலை என்று இறைவன் மேல் பொங்கும் பரிவால் படைத்தேன். உனக்கு விருந்து வைத்தேன் என்று உள்ளம் பூரிக்கிறார் ஆழ்வார்.

ஒவ்வொரு ஆழ்வாருக்கும் தாம் படைத்த படைப்புகளின் மீது மாளாக் காதல் இருப்பதை மிகப் பெரிய ஒன்றாக நினைத்துப் பார்க்க முடிகிறது. பக்தி என்பதே இறைவன்பால் தமக்குள் இருக்கும் ஈர்ப்பை தெரியப்படுத்துவதுதான். இறைவனின் திருவடியை மனம் பற்ற முயற்சி மேற்கொள்கிறதே அந்த விதமான முயற்சிகளைத்தான் பக்தி என்று அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர். மனிதர்களுக்கு மனிதர்கள் செய்யும் உதவி மனிதநேயத்தின்பார்பட்டது. சக உயிரினங்கள் எல்லாவற்றையும் நேசிப்பது என்பது ஆன்மநேயம். இதைத்தான் வள்ளல் பெருமானும் மற்ற ரிஷிகளும் முனிவர்களும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் செய்திருக்கின்றனர். பூதத்தாழ்வார் இறைவனுக்குப் படைக்கும் தான் படைத்த பாசுரங்களை அமுதன்ன சொல் மாலை என்று ஆச்சரியப்பட்டு பேசுகிறார்.

காலம் தமிழுக்கு கொடுத்த கொடையாக கருதப்படும் ஆண்டாள் நாச்சியார் தன்னுடைய திருப்பாவை பாடல்களை சங்கத்தமிழ் மாலை என்று புகழ்ந்து பேசுகிறார்.

ஆழ்வார்களில் கலியன், பரகாலன் என்று போற்றப்படும் திருமங்கை மன்னனோ தன்னுடைய படைப்புகளை செஞ்சொலால் எடுத்த தெய்வ நல்மாலை என்று ஏற்றிப் போற்றுகிறார். இப்படிச் சொன்ன திருமங்கை மன்னன் கிருஷ்ணமங்கள க்ஷேத்ரம் என்று போற்றப்படுகிற திருக்கண்ணமங்கையில் அருள்பாலிக்கும் பக்தவத்சல பெருமாளைக் குறித்து தேனினும் இனிய பத்து பாசுரங்களை நமக்கு கற்கண்டு பாகாக தந்திருக்கிறார். அதில் கடைசி பாசுரத்தில் கடைசி இரண்டு வரிகள் இப்படி அமைந்திருக்கிறது.

‘கண்ண நின் தனக்கும் குறிப்பு ஆகில்
கற்கலாம் கவியின் பொருள் தானேஎல்லாம் தெரிந்த பரம்பொருளே’

நீயேகூட இப்பாசுரங்களின் அரும்பெரும் பொருட்களை கற்கலாம். ரசித்துச் சுவைக்கலாம். இன்பமாக ஆனந்தமாக கேட்டு களிபேறு உவகை அடையலாம் என்று தனக்கும் இறைவனுக்கும் உள்ள நெருக்கத்தை அன்பின் மிகுதியை தன் சிந்தை முழுவதும் நாராயண நாமம்தான் குடிகொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார். அந்த அடிப்படையில்தான் பூதத்தாழ்வார் அமுதன்ன சொல் மாலை என்று தன்னுடைய சொற்களுக்கு, பாசுர வரிகளுக்கு ஒரு தனி
அடையாளத்தை ஏற்படுத்துகிறார். பூதத்தாழ்வாரின் சிந்தனையை உள்வாங்கும்போது அற்புதமான ஒரு வார்த்தையை பிரயோகப்படுத்துகிறார். அது என்ன வார்த்தை தெரியுமா? பெருந்தமிழன் என்பதுதான் அந்த வார்த்தை. இந்த வார்த்தை இடம் பெற்ற அந்த அதி அற்புதமான பாசுரத்தை பார்ப்போம்.

யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவமுடையேன் எம்பெருமான், 
யானே இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே 
சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் பெரிது.

‘‘எம்பெருமானே! எல்லாப் பிறப்புகளிலும் எல்லா நிலைகளிலும் தவம் புரிந்தவன் நானே. அந்த தவத்திற்குப் பயனாக பலனாக இன்று கைங்கர்யத்தை பெற்றிருப்பவனும் நானே. இலக்கண இலக்கியங்களில் குறைவற்று நிறைவாக இருக்கும் பெருமையுடைய தமிழ்மொழியினால் ஆகிய நல்ல சொல் மாலைகளை உன்னுடைய இரண்டு திருவடிகளுக்கு சூட்டி மகிழ்ந்தேன். எல்லோரும் எதைஎதையோ தேடி ஓடும் இந்தக் காலத்தில் பூதத்தாழ்வார் உன்னைப்பாடி பரவசம் காணும் பாக்கியத்தை யானே பெற்றேன் என்று குதுகளிக்கிறார். இது ஒருவிதமான எக்களிப்பு கூட ஆகும். பூதத்தாழ்வாரின் நானே பெருந்தமிழன் என்பது அடங்காப் பெருமகிழ்ச்சியாக பார்க்கப்பட வேண்டும் என்று பக்தி உலகத்தின் ஆற்றல் மிக்க அறிஞர்கள் சொல்லி மகிழ்கிறார்கள்.

அளவற்ற ஈடுபாடும் ஆழ்ந்த அன்பும் எல்லையற்ற சரணாகதி தத்துவமும் ஆட்கொண்ட ஒருவருக்குத்தான் இதெல்லாம் சாத்தியமாகும். இன்று நாம் யார்யாருக்கோ எந்தெந்த பட்டமோ சூட்டி மகிழ்கிறோம். அதில் முக்கால் பங்கு சுயநலம்தான் குடிகொண்டிருக்கிறது. தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பிழைப்புக்காக உழைப்பையும் தந்து மிகுதியான புகழ்ச்சியினால் ஒருவரை ஏற்றிவிடும் கலாச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வரும் காலகட்டத்தில் இந்த ஜீவாத்மா அந்த பரமாத்வுடன் ஐக்கியமாகி விட வேண்டும் என்பதற்காகவும் இறைவனை அவனின் கல்யாண குணங்களை நன்கு அனுபித்து நம்மையும் அதில் ஆழ்த்தும் ஆழ்வார்களின் செயல்கள் சாதாரணமான ஒன்றா என்ன?

அதுவும் இந்த கலிகாலத்தில் தகுதி, திறமை அதெல்லாம் சீர் தூக்கிப் பார்த்தா எடை போடுகிறார்கள்? பணம் பத்தும் செய்யும் என்கிறார்கள். புகழ் என்பது இருக்க வேண்டுமென்றும், எப்படி இருக்கக் கூடாது என்பதையும் ஆழ்வார்களின் தலைமகனான நம்மாழ்வார் சொல்கிறார். சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ! 

என்நாவில் இன்கவி யான்ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனாஎன்று வண்டு முரல்திருவேங்கடத்து
என்ஆனை என்அப்பன், எம்பெருமான் உளனாகவே.

இந்த அதி அற்புதமான திருவாய்மொழி பாசுரம் சொல்லும் விளக்கம் இதுதான்.‘பயனையே எதிர்பார்த்து வாழும் உங்களுக்கு நான் இந்த நலத்தைச் சொன்னால் விரோதமாகவே இருக்கும். ஆயினும் நான் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. என் மனதிற்கு பட்டதை சொல்லியே தீருவேன். பின்பு, நான் யாரைப் பாடி பரவசப்படுவேன் தெரியுமா? கேளுங்கள் சொல்கிறேன் என்கிறார். தேனைக் குடித்த மகிழ்ச்சியினால் வண்டுகள் ‘தென்னா தெனா’ என்று ஒலிக்கின்ற திருமலையிலே இருப்பவர். தந்தையைப்போல இதம் செய்பவன். இத்தகைய எம்பெருமான் என் பாட்டிற்குப் பொருளாக இருக்கையில் என் நாவிலிருந்து வருகின்ற இனிய கவிகளை நான் ஒருவருக்கும் பாடிக் கொடுக்க மாட்டேன். அப்படி கொடுக்கும் எண்ணம் என்னிடம் இல்லை.

திருமலையில் நித்யவாசம் செய்பவனை விட்டுவிட்டு அஞ்சிற்கும் பத்திற்கும் ஆளாய் பறக்கும் இழிசெயலை நான் எப்படிச் செய்வேன் என்ற தொனியில் இருக்கிறது ஆழ்வார் வாக்கு. இந்த விஷயத்தை எளிமையாக நமக்குத் தந்தார் அர்த்தமுள்ள இந்துமதத்தை படைத்து அகிலத்தையே திரும்பிப் பார்க்க வைத்த கவியரசர் கண்ணதாசன்தான்!

‘‘கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடா!
கை தட்ட ஆள் இருந்தால் காக்கைகூட அழகனடா!
பொய்யிலே நீந்தி வந்த புலுகன் எல்லாம் தலைவனடா!’’

இதை விட எளிமையாக யதார்த்த நிலைமையை யாரால் படம் பிடித்துக் காட்ட முடியும். நாம் ஆழ்வாரின் வாக்கைப் பின்பற்றி ஆண்டவனின் அருளுக்குப் பாத்திரம் ஆவோம். ஆழ்வார்களின் அமுதத்தமிழ் பாசுரங்கள் என்னும் தேவாமிர்தம் கையில் இருக்கையில், ஈ மொய்க்கும் இனிப்புப் பண்டம் தேவையா என்ன?

நன்றி - தினகரன்

ஶ்ரீமத் பாகவதம் - 71

மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்து ஆறாவது அத்தியாயம்


(ப்ரக்ருதி புருஷ தத்வ ஸ்வரூபத்தை விவரித்துக் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தாயே! மேல் ப்ரக்ருதி புருஷ காலாதி தத்வங்களின் ஸ்வரூபத்தை உனக்குத் தனித்தனியே விவரித்துச் சொல்லுகிறேன். இந்தத் தத்வங்களின் ஸ்வரூபத்தை அறிவானாயின், முமுக்ஷுவான புருஷன் ப்ராக்ருத குணங்களான ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களினின்று விடுபடுவான். பரமபுருஷனுடைய ஸாக்ஷாத்காரத்திற்கு ஸாதனமான எந்த ஜ்ஞானம் மோக்ஷத்தை விளைவிக்குமென்று வேதாந்தங்களும், வேதாந்தங்களை அறிந்த பெரியோர்களும் சொல்லுகிறார்களோ, எந்த ஜ்ஞானம் அஜ்ஞானத்தைப் போக்குமோ, அப்படிப்பட்ட ஜ்ஞானத்தை உனக்கு நான் விவரித்துச் சொல்லுகிறேன். முதலில் ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறேன். கேட்பாயாக. 

ஜீவன் ஸ்வயம்ப்ரகாசன் (தனக்குத் தானே தோற்றும்படியான ஸ்வரூபமுடையவன், ஜ்ஞான ஸ்வரூபனும் ஜ்ஞானத்தையே குணமாக உடையவனுமாய் இருப்பவன்) ப்ரக்ருதியின் பரிணாமமாகிய சரீரம் இந்திரியங்கள் மனது ப்ராணன் இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருப்பவன். இயற்கையில் ப்ராக்ருதமான ஸத்வாதி குணங்களற்றவன்; சரீரத்திற்குள் புருந்து அதைத் தரித்துக் கொண்டிருப்பவன். இந்த ஆத்ம ஸ்வரூபத்தினால் ப்ரஹ்மா முதல் பூச்சிப் புழுவரையிலும் ஸ்தூலமாயும் ஸூக்ஷ்மமாயுமுள்ள ஐகத்தெல்லாம் வ்யாப்தமாயிருக்கின்றது. (இத்தகைய ஆத்மாக்களால் ஜகத்தெல்லாம் நிறைந்திருக்கின்றது. தேஹாதிகளுடைய தர்மங்களான உத்பத்தி விகாசங்களால் ஜீவன் பிறத்தல் சாதல் இவைகளுடையவனல்லன். ஆனால் நான் தேவன், நான் மனுஷ்யனென்றும், அவன் தேவன், அவன் மனுஷ்யனென்றும், நான் பருத்திருக்கிறேன், அவன் பருத்திருக்கிறானென்றும் தனக்கும் பிறர்க்கும் தேஹமும் ஆத்மாவும் ஒன்றாகத் தோற்றுகையால், தேஹாதிகளோடு ஆத்மாவுக்கு ஜன்ம மரணாதிகளில்லை என்பது எப்படி பொருந்தும்? என்னில், புண்ய பாப ரூப காரணங்களால் “நான் தேவன், நான் பருத்திருக்கிறேன்” என்று தேஹ தர்மமான தேவத்வம் முதலியவைகளையும் பருமன் இளைப்பு முதலியவைகளையும் ஜீவன் தன்னிடத்தில் ஏறிட்டுக் கொள்ளுகிறான். ஆகையால் ஜீவனுக்கு தேஹாதிகளோடு ஜனன மரணாதிகள் இயற்கையில் ஏற்பட்டவையன்று, ஸ்வப்னம் காண்கிறவன் ஸ்வப்னத்தில் கண்ட வஸ்துக்கள் நசிக்கிலும் எப்படி நாசம் அடைகிறதில்லையோ, அங்ஙனமே ஜீவன் தேஹாதிகள் நாசம் அடையிலும் தான் நாசம் அடைகிறதில்லை. இத்தகையனான அந்த ஜீவன் மிகவும் ஸூக்ஷ்மனாகையால் ஸமஸ்த வஸ்துக்களிலும் உள் புகுந்து வ்யாபித்திருக்கும் ஸாமர்த்யமுடையவன். இவன் ஜகத் ஸ்ருஷ்டிக்கு முன்பு பேரும் உருவமுமாகிற பிரிவுகளின்றி மிகவும் ஸூக்ஷ்ம தசையை அடைத்திருப்பதும் பரமபுருஷனுடைய விளையாட்டிற்குக் கருவியாயிருப்பதும் பகவானுக்கு லீலாரஸம் நிறைவேறுவதின் பொருட்டு ஆகஸ்மிகமாக நேரிட்டிருப்பதும் ஸத்வாதி குணங்கள் நிறைந்ததுமாகிய மாயையின் ஸம்பந்தத்தைப் பெறுகின்றான். அந்த ப்ரக்ருதி பகவானால் தூண்டப்பெற்று தேவ மனுஷ்யாதி ரூபத்தினால் பலவகைப்பட்டவைகளும் எல்லாம் ப்ரக்ருதியின் பரிணாமமாகையால் ஒரு படிப்பட்டவைகளுமாகிய ப்ரஜைகளைக் கார்ய தசையில் ஸத்வாதி குணங்களால் படைக்கும் தன்மையது. மற்றும், அந்த ப்ரக்ருதி ஜ்ஞானத்தை மறைக்கும் தன்மையுள்ளது ஜீவன் ப்ரக்ருதியைக் கண்டு அதன் ஸம்பந்தத்தினால் அந்த க்ஷணத்தில் மதிமயங்கி அந்த ப்ரக்ருதியைத் தானாகவே நினைத்துக் கொள்கின்றான். இங்ஙனம் பரமபுருஷ ஸங்கல்பத்தினால் ப்ரக்ருதி ஸம்பந்தம் உண்டாகப்பெற்று அதனால் மறைக்கப்பட்ட தன் ஸ்வரூபத்தை மறந்து ஜீவன் ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வாதிகளால் கர்மங்களைச் செய்பவனாக அவற்றைத் தானே செய்வதாகத் தன்னிடத்தில் ஏறிட்டுக் கொள்கின்றான். ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகளில் ஜீவனுக்குள்ள முயற்சி ஸத்வ ரஜஸ் தமோகுணம் ஸர்க்கத்தினால் வந்ததன்றி இயற்கையில் ஏற்பட்டதன்று. அங்ஙனம் ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஜீவன்தானே கர்மங்களைச் செய்வதாகத் தன்னிடத்தில் கர்த்ருத்வத்தை ஏறிட்டுக் கொள்வதனால் இவனுக்கு ஸம்ஸார பந்தம் உண்டாகின்றது; அதனாலேயே கர்மவஸ்யத்வமும் (கர்மத்திற்கு உட்பட்டிருக்கையும்) உண்டாகின்றது. ஜீவனுக்குப் போதல் வருதல் முதலிய ஸாம்ஸாரிக ப்ரவ்ருத்திகள் இயற்கைகள் கிடையாது. ஏனென்னில், அந்த ப்ரவ்ருத்திகளெல்லாம் புண்ய பாப ரூப கர்மத்தினால் விளைபவை. ஜீவன் இயற்கையில் கர்மத்திற்கு உட்பட்டவனல்லன். மற்றும், அவன் ஜ்ஞானத்தையே குணமாக உடையவனும் ஜ்ஞானமே ஸ்வரூபமாகப் பெற்றவனுமாய் இருப்பான். ஜீவாத்மாக்கள் இயற்கையில் அளவின்றி நிர்மலமான ஜ்ஞானமுடையவர். அவர்கள் கர்மமென்கிற அவித்யையால் தீண்டப்பெற்றவராகி அந்தந்தக் கர்மங்களுக்குத் தகுந்தபடி ஜ்ஞான ஸங்கோசம் உண்டாகப்பெற்று ப்ரஹ்மா முதல் பூச்சிப் புழு வரையிலுமுள்ள பலவகைப்பட்ட விசித்ரமான தேஹங்களில் ப்ரவேசித்து அந்தந்த தேஹங்களுக்குரிய ஜ்ஞான விகாஸமுடையவராகி அந்தந்த தேஹங்களையே ஆத்மாவாக ப்ரமித்து அதற்குத் தகுந்த கர்மங்களைச் செய்து அவற்றிற்குரிய ஸுக துக்கங்களை அனுபவிக்கையாகிற ஸம்ஸாரத்தை அடைகின்றார்கள். பெரியோர்கள் சரீர சேஷ்டைகளிலும் இந்த்ரிய வ்யாபாரங்களிலும் சரீரமாகப் பரிணமித்திருக்கிற ப்ரக்ருதியைக் காரணமாகச் சொல்கிறார்கள். போக ஸாதனமான செயல்களெல்லாம் சரீராகாரமாகப் பரிணமித்திருப்பதும் ஜீவனால் அதிஷ்டானஞ் செய்யப்பெற்றதுமாகிய ப்ரக்ருதியைப் பற்றினவை. அந்த ப்ரக்ருதியின் பரிணாமமாகிய சரீசேஷ்டைகளாலும் இந்த்ரிய வ்யாபாரங்களாலும் விளைகிற ஸுகதுக்கங்களை அனுபவிப்பதில் ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டவனும் அதற்கு அதிஷ்டாதாவுமாகிய ஜீவாத்மாவைக் காரணமாகச் சொல்லுகிறார்கள். ஜீவன் சரீரத்தைத் தரிக்கும் ப்ரயத்னம் செய்கின்றான் ஆகையால் அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் விளைகிற ஸுகதுக்கங்களை அனுபவிப்பதற்குக் காரணமாகின்றான்.

தேவஹூதி சொல்லுகிறாள்:- வாராய் புருஷோத்தமனே! கார்யதசைக்கு முன்பு நாமரூப விபாகமின்றி ஸூக்ஷ்ம தசையை அடைந்து பகவானுக்குச் சரீரமாயிருப்பவைகளும் ஜகத்திற்கெல்லாம் காரணங்களுமாகிய ப்ரக்ருதி புருஷர்களின் ஸ்வரூபத்தை எனக்குச் சொல்வாயாக. உலகத்தில் தந்தை முதலிய காரண வஸ்துக்களும் புத்ரன் முதலிய கார்ய வஸ்துக்களும் இந்த ப்ரக்ருதி புருஷ ஸ்வரூபங்களேயல்லவா? தந்தையென்றும் புதல்வனென்றும் இவை முதலாக உலகத்தில் வழங்கும் வ்யவஹாரங்களெல்லாம் கேவலம் ப்ரக்ருதியைப் பற்றினவைகளுமல்ல; கேவலம் புருஷனைப் பற்றினவைகளுமல்லவே. ஜகத்தெல்லாம் இந்த ப்ரக்ருதி புருஷ ஸ்வரூபமே அல்லவா. அப்படிப்பட்ட ப்ரக்ருதி புருஷர்களின் ஸ்வரூபத்தை விசதமாகச் சொல்வாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தாயே! ப்ரதானத்தையே ப்ரக்ருதியென்று சொல்லுகிறார்கள். அந்த ப்ரதானமாவது யாதென்னில், அது காரணதசையில் பூமி முதலிய விசேஷாகாரங்கள் அற்றிருக்கும். ஆனதுபற்றியே நாமரூபங்களுக்கு இடமல்லாமல் அவ்யக்தமென்று கூறப்படும்; ஸத்வம் ரஜஸ்ஸு தமஸ்ஸு என்கிற மூன்று குணங்களை உடையது. மஹத்து முதலிய தத்வங்களைப்போல் அழியாமல் நித்யமாயிருக்கும். கார்ய தசையில் பூமி முதலிய விசேஷாகாரங்களை உடையது; மஹத்து முதல் ப்ருதிவி வரையிலுமுள்ள காரண ரூபத்தினாலும் ப்ரஹ்மா முதல் பூச்சிப் புழு வரையிலுமுள்ள கார்ய ரூபத்தினாலும் காரணமாயும் கார்யமாயுமிருக்கும். தாயே! ஐந்து பூதங்களும் ஐந்து தன்மாத்ரைகளும் மனதும் அஹங்காரம் மஹத்து அவ்யக்தம் இவை நான்கும் ஜ்ஞானேந்திரியங்கள் கர்மேந்த்ரியங்கள் இவை பத்தும் ஆக இருபத்துநான்கு தத்வங்கள் அடங்கின இக்கூட்டத்தை ப்ரக்ருதியின் கார்யமென்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

மஹாபூதங்கள் பூமி ஜலம் அக்னி காற்று ஆகாயம் என்னும் இவை ஐந்தே. தன்மாத்ரங்கள் கந்தம் ரஸம் ரூபம் ஸ்பர்சம் சப்தம் என்னும் இவை ஐந்தே. இவையே எனக்குத் தெரிந்தவை. இந்த க்ரமமே எனக்கு ஸம்மதமானது. காது த்வக்கு (தோல்) கண் நாக்கு மூக்கு இவை ஐந்தும் ஜ்ஞானேந்திரியங்கள். வாக்கு கை கால் ஜலத்வாரம் மலத்வாரம் இவை ஐந்தும் கர்மேந்திரியங்கள். ஆக இந்திரியங்கள் பத்து. அந்தக் கரணமொன்றே தனக்கு அடையாளமாகிய ஸங்கல்பம் அத்யவஸாயம் அபிமானம் சிந்தை என்கிற நான்கு வ்யாபாரங்களால் மனது புத்தி அஹங்காரம் சித்தம் என்று நான்குவிதமாகத் தோன்றும். ஸத்வ ரஜஸ் தமோ குணங்களையுடைய ப்ரக்ருதியின் அவஸ்தா விசேஷம் இத்தனையே. தத்வங்களை உணர்ந்த பெரியோர்கள் இங்கனம் இருபத்து நான்கு தத்வங்கள் என்றே கணக்கிடுகிறார்கள். காலம் இருபத்தைந்தாவது தத்வம். காலத்துடன் சேர்ந்து தத்வங்கள் இருபத்தைந்து. சிலர் பரமபுருஷனுடைய ஸாமர்த்யத்தையே காலமென்கிறார்கள். இந்தக் காலமென்கிற பரமபுருஷனுடைய ஸாமர்த்யத்தினால் ஜகத்திற்கு ஸ்ருஷ்டி ஸம்ஹாராதி ரூபமான ஸம்ஸாரபயம் உண்டாகின்றதென்றும் சொல்லுகிறார்கள். ஆத்மாவல்லாத தேஹத்தில் ஆத்மாபிமானத்திற்கு இடமான அஹங்காரத்தினால் மதி மயங்கித் தன் ஸ்வரூபம் மறையப்பெற்றவனும் தமஸ்ஸென்று சொல்லப்படுகிற ஸூக்ஷ்ம தசையை அடைந்த ப்ரக்ருதியில் ஸம்பந்திருப்பவனுமாகிய ஜீவனுக்கும் ஸத்வ ரஜஸ் தமோ குணங்கள் ஸமமாய் இருக்கப்பெற்றதும் நாம ரூபாதி விசேஷங்கள் அற்றதுமாகிய ப்ரக்ருதிக்கும் சேதனா சேதன ஸ்வரூபமான ஜகத்தாகப் பரிணமிக்கும் வ்யாபாரம் எதனால் உண்டாகின்றதோ, அதுவே காலமென்று கூறப்படும். அது பகவானுக்குச் சரீரமாயிருக்கும். வாராய் மனு சக்ரவர்த்தியின் புதல்வியே! காலத்தின் ஸ்வரூபம் இதுவே உண்மையானதென்று என் அபிப்ராயம். இங்ஙனம் ப்ரக்ருதி புருஷன் காலம் ஆகிய இம்மூன்றையும் உனக்கு விவரித்துச் சொன்னேன். அம்மூன்றும் பகவத் ஸ்வரூபங்களே. அவற்றில் ப்ரக்ருதி ப்ருதிவி முதலிய ஸ்தூல ரூபங்களாகப் பரிணமித்திருக்கையால் அதன் ஸ்வரூபம் ஸ்பஷ்டமாகத் தெரியக்கூடியதே. புருஷன் காலம் இவர்களுக்கு அங்ஙனம் ஸ்தூல ரூபமில்லாமையால் அவர்களை யுக்தியால் கண்டறிய வேண்டும். அவற்றின் ஸ்வரூபம் சாஸ்த்ரத்தினால் ஏற்படக்கூடியதேயன்றி மற்றவிதத்தினால் ஏற்படக்கூடியதன்று. பூமி முதலிய ஐந்து பூதங்களால் ஏற்பட்ட தேஹங்களுக்குள்ளே இருந்து ஒன்றை ஆசைப்படுவதும் ஒன்றை த்வேஷிப்பதும் ஸுகிப்பதும் துக்கிப்பதுமாக எவன் தோற்றுகிறனோ அவனே புருஷனென்றும் ஜீவனென்றும் க்ஷேத்ரஜ்ஞனென்றும் ஆத்மாவென்றும் ஜீவாத்மாவென்றும் ப்ரத்யகாத்மாவென்றும் கூறப்படுகின்றான். இச்சை த்வேஷம் ஸுகம் துக்கம் இவை ஜ்ஞான ஸ்வரூபங்களாகையால் இவை அசேதனமான ப்ரக்ருதியின் தர்மங்களாக மாட்டா. இவற்றால் ஜீவன் சரீரத்திற்குள்ளே இருக்கின்றானென்று அறியவேண்டும். தேஹங்களைப்பற்றி இருக்கிறதென்றும் இருந்ததென்றும் வரப்போகிறதென்றும் வழங்கிவரும் வ்யவஹாரங்கள் காலத்தைச் சேர்ந்தவைகளே. இந்த வ்யவஹாரங்களால் காலமென்பது உண்டென்று தெரியவருகின்றது. இந்த ஜீவனும் காலமும் பகவத் ஸ்வரூபர்களே. ப்ருத்வி முதலிய தத்வங்களின் ஸமுதாயத்தினால் ஏற்பட்டவைகளான சரீரங்களுக்குள் இச்சை த்வேஷம் ஸுகம் துக்கம் ஆகிய இவை முதலியவற்றிற்கிடமான ஜீவாத்ம ஸ்வரூபத்தினாலும், அந்த சரீரங்களுக்கு வெளியில் கால ஸ்வரூபத்தினாலும் எவன் தன் ஸங்கல்பத்தினால் தோற்றுகிறானோ, அவனே பரமபுருஷன். ஆனால் ஜீவாத்மாக்களும் காலமும் பகவானைக் காட்டிலும் வேறுபட்டவர்களன்றொவென்னில், வேறுபட்டவர்களே. ஆயினும் அவனுக்கு உட்பட்டவர்களானது பற்றி அவனே இவரென்னும்படி தோற்றுகின்றனர். பரமபுருஷன் தன் ஸங்கல்பத்தினால் சரீரங்களுக்குள்ளே இருக்கின்ற ஜீவாத்மாக்களுக்கும் வெளியில் காலத்திற்கும் நியாமகனாய் இருக்கின்றான். ஆகையால் ப்ரக்ருதி புருஷன் காலம் இம்மூவரும் பரமபுருஷனுக்குச் சரீரமாயிருப்பவர். பரமபுருஷன் தனக்குச் சரீரமாயிருப்பதும் தன் ஸங்கல்பத்தினால் ஸத்வாதிகுணங்கள் ஸமமாயிருக்கை தவிர்த்து ஏற்றக்குறைவாகக் கலங்கப் பெற்றிருப்பதுமாகிய ப்ரக்ருதியில் மஹத்து முதலிய ப்ரபஞ்சத்தைப் படைக்கும் ஸாமர்த்யத்தை ஏறிட்டான். ப்ரபஞ்சமாகிற முளையை விளைவிக்குந் திறமையுடையவனும் (ஜகத்காரணனும்) நீர்விகாரனுமாகிய பகவான் தன் சரீரமாகிய ப்ரக்ருதியில் மறைந்திருக்கிற ஜகத்தை வெளியிட விரும்பித் தன் ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்தினால் ஜீவாத்மாக்களுக்கு ஜ்ஞான ஸங்கோசத்தை விளைவிப்பதாகிய தமோ குணத்தைப் பானஞ்செய்தான், (ப்ரளயத்தில் ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள் என்கிற ப்ரக்ருதியின் குணங்கள் மூன்றும் ஸமமாயிருக்கும். பரமபுருஷன் அந்த ப்ரக்ருதியைக் கொண்டு ஜகத்தைப் படைக்கவிரும்பி அதன் குணங்கள் மூன்றில் தமோகுணத்தைத் தன் ஸங்கல்பத்தினால் தலைசாய்த்து ஸத்வகுணம் தலையெடுக்கச் செய்தான்).

ஸத்வகுணம் தலையெடுக்கப் பெற்றதும் தமோகுணம் தலை சாய்ந்திருப்பதும் நிர்மலமாகி ப்ரகாசத்தை விளைவிப்பதும் ஆனதுபற்றியே பகவானுடைய ஸாக்ஷாத்காரத்திற்கு இடமாயிருப்பதும் வாஸுதேவன் என்கிற பகவானுடைய வ்யூஹாவதாரத்தினால் அதிஷ்டானம் செய்யப்பெற்றதும் அந்தக்கரணத்தின் பிரிவாகிய சித்தத்திற்கு அனுக்ராஹகமும் (உதவி செய்வதும்) மூலப்ரக்ருதி எனப்படுவதுமாகிய அவ்யக்தமானது மஹத்தத்வமாகப் பரிணமித்தது. அந்த மஹத்தத்வத்திற்கும் வாஸுதேவனே அதிஷ்டாதாவானான். அவ்யக்தமென்கிற ப்ரக்ருதியினால் உதவி செய்யப்பெற்ற அந்தக்கரணம் சித்தமென்று பேர் பெறுகின்றது. அந்தக்கரணத்திற்கு அவ்யக்தம் செய்யும் உதவி எங்ஙனம் தெரியுமென்னில், சொல்லுகிறேன் கேள். 

பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தைக் கண்டபடியே தரிக்கும் திறமையாகிற (தெளிவும்) ஸ்வச்சத்வமும் கவலையற்றிருக்கையும் ரஜஸ் தமோ குணங்களால் தீண்டப் பெறாமையும் ஆகிய இவ் அடையாளங்களால் அந்தக்கரணத்திற்கு அவ்யக்தம் செய்யும் உதவியைக் கண்டறியலாம். அலை நுரை முதலிய விகாரங்கள் எவையுமின்றி ஜலம் இயற்கையில் நிர்மலமாயிருப்பது போல், அந்தக்கரணம் எப்பொழுது வேறு விகாரங்களின்றிக் கீழ்ச்சொன்ன ஸ்வச்சத்வம் முதலிய குணங்கள் உண்டாகப் பெற்றிருக்குமோ, அப்பொழுது அவ்யக்தத்தினால் உதவிசெய்யப் பெற்றதென்று அறியலாம். இங்ஙனம் அவ்யக்தத்தினால் உதவி செய்யப்பெற்ற அந்தக்கரணமே சித்தமென்று கூறப்படும். அத்தகைய அவ்யக்தத்தினின்று மிகுந்த ஒளியுடைய மஹத்தத்வம் உண்டாயிற்று. அந்த மஹத்தத்வம் பகவானுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பெற்று ஸ்ருஷ்டிக்க முயன்றது. அத்தகையதான அந்த மஹத்தத்வத்தினின்று அஹங்கார தத்வம் உண்டாயிற்று. இவ்வஹங்காரம் வைகாரிகமென்றும் தைஜஸமென்றும் தாமஸமென்றும் மூன்றுவகைப்பட்டிருக்கும்; செயல்களில் முயற்சியை விளைவிப்பதாகிய ரஜோகுணம் தலையெடுக்கப் பெற்ற இந்த அஹங்கார தத்வத்தினின்றே மனது ஜ்ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் ஆகாயம் முதலிய பஞ்ச மஹா பூதங்கள் சப்தாதி விஷயங்கள் தன்மாத்ரங்கள் ஆகிய இவையெல்லாம் உண்டாயின. ஆயிரம் தலைகளை உடையவனும் அனந்தனென்று கூறப்படுமவனும் ஸாக்ஷாத் பாமபுருஷனுடைய வ்யூஹாவதாரமுமாகிய ஸங்கர்ஷண பகவான் இந்த அஹங்கார தத்வத்திற்கு அதிஷ்டாதாவென்று சொல்லுகிறார்கள். ஆத்மாவினிடத்தில் கர்த்ருத்வாபிமானம் (போதல் வருதல் முதலிய செயல்களுக்கு இடமென்கிற அபிமானம்) இந்த்ரியாபிமானம் தேஹாபிமானம் ஆகிய இவை எப்பொழுது உண்டாகின்றனவோ, அப்பொழுது அந்தக்கரணம் அஹங்கார தத்வத்தினால் உதவிசெய்யப் பெற்றதென்றறியலாம். இந்த அஹங்கார தத்வத்தினால் உதவி செய்யப்பெற்ற அந்தக்கரணம் அஹங்காரமென்னும் பேர் பெறும். ப்ரகாசம் உண்டாயிருக்கை கவலையுற்றிருக்கை மயங்கியிருக்கை இவையும் அஹங்காரத்திற்கு அடையாளங்களாம். ப்ரகாசம் உண்டாயிருக்கை ஸாத்விகாஹங்காரத்திற்குலக்ஷணம். கவலையுற்றிருக்கை ராஜஸாஹங்காரத்திற்கு லக்ஷணம். மயங்கியிருக்கை தாமஸாஹங்காரத்திற்கு லக்ஷணம். ப்ரகாசமுண்டாயிருக்கை முதலிய குணங்கள் எப்பொழுது மனத்திற்கு உண்டாகின்றனவோ, அப்பொழுது மனம் அஹங்கார தத்வத்தினால் உதவி செய்யப்பெற்றதென்று அந்தக்காரணத்திற்கு அஹங்காரம் செய்யும் உதவியை இக்குணங்களாலும் அறியக்கூடும். மூன்று வகைப்பட்ட அவ்வஹங்காரத்தில் வைகாரிகமென்கிற அஹங்காரம் பகவானுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பெற்று ஸ்ருஷ்டியில் முயற்சிகொண்டது. அத்தகைய அவ்வைகாரிக அஹங்காரத்தினின்று மனஸ்தத்வம் உண்டாயிற்று. அந்தக் கரணம் தைஜஸ அஹங்காரத்தினால் உதவிசெய்யப்பெற்று ஸங்கல்ப விகல்பங்களைப் பெறுகின்றது, அத்தகைய அந்தக்கரணமே மனதென்று அறியவேண்டும். ஸங்கல்பமாவது தேஹாதிகளையும் ஆத்மாவையும் ஒன்றென்று நினைக்கை. விகல்பமாவது பல விஷயங்களைச் சிந்திக்கை. இவை தைஜஸ அஹங்காரத்தினால் உதவி செய்யப்பெற்ற அந்தக்கரணத்திற்கு அடையாளங்களாம். இந்த மனஸ் தத்வத்திற்குக் காரணமான வைகாரிக அஹங்காரத்திற்கு ப்ரத்யும்ன பகவான் அதிஷ்டாதா. தைஜஸ அஹங்காரத்திற்கு அநிருத்த பகவான் அதிஷ்டாதா. தைஜஸ அஹங்காரத்தின் கார்யமான இந்திரியங்களுக்கும் அவனே அதிபதி. அவன் சரத்காலத்தில் மலர்ந்த கருநெய்தல் போல் கறுத்த நிறமுடையவன்; ரிஷிகளால் மெல்லமெல்ல யோகமார்க்கத்தில் புகுந்து நன்கு ஆராதிக்கத் தகுந்தவன். இத்தகையனான அநிருத்தனென்கிற வ்யூஹதவமதரத்தினால் தைஜஸாஹங்காரம் அதிஷ்டானஞ் செய்யபெற்றதென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள். 

வாராய் பதிவ்ரதையே! அந்தத் தைஜஸாஹங்காரம் பகவானுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பெற்று ஸ்ருஷ்டிக்க முயன்றது. அதினின்று புத்திதத்வம் உண்டாயிற்று, இந்த புத்தி தத்வம் இந்திரியங்களுக்கு உதவிசெய்யும் தன்மையது. ஸாமான்யமாய் வஸ்துக்களின் விசேஷம் தோற்றாமல் வஸ்துமாத்ரம் தோற்றுகையும் ஸம்சயமும் அந்யதா ஜ்ஞான விபரீத ஜ்ஞானங்களும் நிச்சயமும் ஸ்மரணமும் (முன்பு ஒருக்கால் அனுபவித்த வஸ்துவைப் பற்றின அறிவும்) நித்ரையும் ஆகிய இவை தனித்தனியே புத்தியின் வ்யாபாரங்கள். இந்த இந்திரியங்கள் புத்தி தத்வத்தினால் உதவிசெய்யப்பெற்று இந்த அறிவுகளை விளைக்கின்றன. இவையே புத்தி தத்வத்தின் உதவிக்கு அடையாளங்கள். கர்மேந்திரியங்கள் என்றும் ஜ்ஞானேந்த்ரியங்கள் என்றும் இருவகைப்பட்ட இந்திரியங்களும் தைஜஸ அஹங்காரத்கினால் உதவி செய்யப்பெற்ற வைகாரிக அஹங்காரத்கினின்று உண்டானவை. இவ்விருவகை இந்த்ரியங்களும் கேவலமானவை காரிகத்தினின்று உண்டாயிருக்குமாயின், கர்மேந்திரியங்களுக்குள்ள க்ரியாசக்தியும் ஜ்ஞானேந்திரியங்களுக்குள்ள ஜ்ஞானசக்தியும் பொருந்தாது. ஆகையால் தைஜஸ அஹங்காரத்தினால் உதவி செய்யப்பெற்ற வைகாரிக அஹங்காரத்தினின்றே இருவகை இந்த்ரியங்களும் உண்டாகின்றன. ஆனால் இரண்டுக்கும் இரண்டு சக்திகளும் உண்டாக வேண்டாவோவென்னில், சொல்லுகிறேன் கேட்பாயாக. 

வைகாரிகத்தினின்று ஜ்ஞானேந்திரியங்கள் உண்டாகும்பொழுது, அவ்வைகாரிகத்தில் ஸத்வகுணம் தலையெடுத்து ரஜோகுணம் மறைந்திருக்கின்றது. கர்மேந்திரியங்கள் உண்டாகும் ஸமயத்தில் ரஜோகுணம் தலையெடுத்து ஸத்வகுணம் மறைந்திருக்கின்றது. ஆகையால் ரஜோகுணம் தலையெடுக்கப்பெற்ற வைகாரிகத்தினின்று உண்டான கர்மேந்த்ரியங்களில் க்ரியாசக்தியும், ஸத்வகுணம் தலையெடுத்த வைகாரிகத்தினின்று உண்டான ஜ்ஞானேந்திரியங்களில் ஜ்ஞானசக்தியும் நியதமாயிருக்கின்றன. தாமஸாஹங்காரம் பகவானுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பெற்று ஸ்ருஷ்டிக்கமுயன்றது. அதினின்று சப்த தன்மாத்ரம் உண்டாயிற்று. அதினின்று ஆகாசமென்கிற மஹாபூதம் உண்டாயிற்று. அந்த சப்தத்தை அறிவிப்பது ச்ரோத்ரேந்த்ரியம். அந்த சப்தம் அர்த்தத்தை மொழியும் தன்மையது; ஸர்வஜ்ஞனான பகவானை அறிவதற்கு ப்ரமாணமாயிருக்கும். பகவான் சாஸ்த்ரங்களால் அல்லது மற்ற எந்த ப்ரமாணங்களாலும் அறியக்கூடியவனல்லன். சாஸ்த்ரங்களெல்லாம் சப்தமயங்களே. அன்றியும் வஸ்துக்களைப் பார்க்கும் புருஷனுக்கு அவற்றின் நாமங்களான சப்தங்கள் தோற்றும். சப்தத்தைக் கேட்டபொழுதே அதன் பொருள் தோற்றும். அந்த சப்தம் ஆகாயத்தின் ஸூக்ஷ்ம ஸ்வரூபமாயிருக்கும். அன்றியும், அது ஆகாயத்திற்கு அஸாதாரணமான குணம். இவையே சப்த தன்மாத்ரத்தின் ஸ்வரூபமென்று பெரியோர்கள் நினைக்கின்றார்கள். ப்ரஹ்மதேவன் முதல் பூச்சிப் புழுவரையிலுமுள்ள ஸமஸ்த பூதங்களுக்கும் உள்ளும் புறமும் அவகாசம் கொடுக்கையும் இந்திரியங்களுக்கும் ஆத்மாவுக்கும் ஸ்தானமாயிருக்கையும் ஆகாயத்தின் ஸ்வரூபம். சப்த தன்மாத்ரத்தை அஸாதாரண தர்மமாகவுடையதும் காலத்தைச் சரீரமாகவுடைய பகவானுடைய ஸங்கல்பத்தினால் ஸ்ருஷ்டிக்க முயன்றிருப்பதுமாகிய ஆகாயத்தினின்று ஸ்பர்ச தன்மாத்ரம் உண்டாயிற்று. அதினின்று வாயுவென்னும் மஹாபூதம் உண்டாயிற்று, இந்த ஸ்பர்ச தன்மாமரத்தை அறிவிப்பது த்வகிந்த்ரியம், மெதுவாயிருத்தல் கடினமாயிருத்தல் குளிர்ச்சி வெப்பம் ஆகிய இவையும், வாயுவுக்கு அஸாரண குணமாயிருத்தலும் ஸ்பர்சத்திற்கு லக்ஷணம். வ்ருக்ஷத்தின் கிளை முதலியவற்றை அசக்குதலும் சேர்ந்திருப்பவைகளைப் பிரித்தலும் அசையுமவைகளை ஒன்றோடொன்று சேர்த்தலும் கந்தமுள்ள வஸ்துவை க்ராணேந்தரியத்தில் சேர்ப்பிக்கையும் தூரத்திலுள்ள சப்தத்தை ஸ்ரோத்ரேந்தரியத்தில் சேர்ப்பிக்கையும் ஸமஸ்த இந்திரியங்களுக்கும் தாரகமாயிருக்கையும் வாயுவின் கார்யங்கள். இவை வாயுவுக்கு லக்ஷணம். ஸ்பர்ச தன்மாத்ரத்தை அஸாதாரண தர்மமாகவுடையதும் பகவானுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பட்டதுமாகிய வாயுவினின்று ரூப தன்மாத்ரம் உண்டாயிற்று. அதினின்று தேஜஸ்ஸென்னும் மஹாபூதம் உண்டாயிற்று. 

வாராய் கல்லியற்கையுடையவளே! அந்த ரூபத்தை அறிவிப்பது சக்ஷுரிந்த்ரியம். தன்னைக் குணமாகவுடைய தேஜஸ்ஸு முதலிய பூதங்களை ஆகாசாதி பூதங்களைக் காட்டிலும் வேறுபட்டதாக்கித் தெரிவிக்கையும் என்றும் த்ரவ்யங்களை விட்டுப் பிரியாதிருக்கையும் ஒரு வஸ்துவை மற்றொரு வஸ்துவைக் காட்டிலும் வேறுபட்டதாக்கித் தோற்றுவிக்கையும் தேஜஸ்ஸுக்கு அஸாதாரண குணமாயிருக்கையும் ரூப தன்மாத்ரத்தின் லக்ஷணங்களாம். வெளிச்சம் கொடுக்கையும் அரிசி முதலியவற்றைப் பக்வஞ் செய்கையும் பசி தாஹங்களை விளக்கையும் தண்ணீர் குடிக்கச் செய்கையும் புசிக்கச் செய்கையும் குளிரைப் போக்குகையும் ஈரமானவற்றை உலர்த்துகையும் ஆகிய இவை தேஜஸ்ஸின் கார்யங்கள். பரமபுருஷனால் தூண்டப்பெற்றதும் ஸ்ருஷ்டிக்க முயன்றதுமாகிய அந்தத் தேஜஸ்ஸினின்று ரஸதன்மாத்ரம் உண்டாயிற்று. அதினின்று அப்பென்னும் மஹாபூதம் உண்டாயிற்று. அந்த ரஸத்தை அறிவிப்பது ரஸனேந்த்ரியம் (ரஸனேந்திரியமாவது நாக்கின் நுனியிலிருக்கும் ஓர் சக்தி விசேஷம்). ரஸம் ஒருவகைப்பட்டதாயினும் உடன் சேரும் வஸ்துக்களின் விகாரத்தினால் துவர்ப்பு தித்திப்பு கசப்பு புளிப்பு உவர்ப்பு என்று பலவாறு பிரிந்திருக்கும். நனைத்தலும் உருண்டையாகச் செய்தலும் திருப்தியை விளைவித்தலும் ஜீவிக்கச் செய்தலும் பசி தாஹங்களால் விளையும் சோர்வைப் போக்குதலும் தாபத்தைப் போக்குதலும் மேன்மையை உண்டாக்குதலும் கிணறு முதலிய இடங்களில் எவ்வளவு இறைப்பினும் மேல் மேல் சுரந்து வளர்தலும் மற்ற பூதங்களைக் காட்டிலும் மிகுந்திருத்தலும் ஆகிய இவை ஜலத்தின் கார்யங்கள். பரமபுருஷனால் தூண்டப்பட்டதும் ஸ்ருஷ்டிக்க முயன்றதுமாகிய அந்த ஜலதத்வத்தினின்று கந்ததன்மாத்ரம் உண்டாயிற்று. 
அதினின்று ப்ருதிவி (பூமி) யென்னும் மஹாபூதம் உண்டாயிற்று. கந்தத்தை அறிவிப்பது க்ராணேந்தரியம், (க்ராணேந்த்ரியமாவது மூக்கின் நுனியிலுள்ள ஓர் சக்தி விசேஷம்.) கந்தம் ஒரு வகைப்பட்டதாயினும் உடன் சேரும் வஸ்துக்களின் வைஷம்யத்தினால் கரம்பகந்தமென்றும் துர்க்கந்தமென்றும் நற்கந்தமென்றும் சாந்த கந்தமென்றும் உக்ரகந்தமென்றும் அம்லகந்தமென்றும் பலவகைப்படும். கரம்பகந்தமாவது -- வ்யஞ்ஜனம் முதலியவற்றிற்குப் பெருங்காயம் முதலியவற்றை விட்டுச்செய்யும் ஸம்ஸ்காரத்தினால் விளையும் கந்தம். இதை மிஸ்ரகந்தமென்றும் சொல்லுவார்கள். மிஸ்ரகந்தமாவது பல வஸ்துக்களின் கலப்பினால் உண்டாகும் மணம். துர்க்கந்தம் அமேத்யாதிகளில் உள்ளது. கற்பூராதிகளின் கந்தம் கற்கந்தமாம். இதையே ஸுகந்தமென்றும் ஸுரபிகந்தமென்றும் நன்மணமென்றும் நல்லவாஸனையென்றும் சொல்லுவார்கள். தாமரை மலர் முதலியவற்றின் கந்தம் சாந்த கந்தமாம். (நெடியில்லாத மணம்.) பூண்டு வெங்காயம் முதலியவற்றின் கந்தம் உக்ரகந்தமாம். (நெடியுள்ள மணம்). அம்லகந்தமாவது-புளிச்ச நாற்றம். இது பழைய அன்னம் முதலியவற்றிலுள்ளது. குடம் முதலிய வஸ்துக்களை உண்டாக்குகையும் ப்ரதிமாதி ரூபத்தினால் பரப்ரஹ்மத்தின் ஆகாரத்தைக் காட்டுகையும் மற்ற பூதங்களை எதிர்பாராமல் தானே நிலை நின்றிருக்கையும் ஜங்கமஸ்தாவரங்களுக்கு ஆதாரமாயிருக்கையும் செடி மரம் நெல் முதலிய வஸ்துக்களுக்கு தேசபேதத்தினால் விசேஷத்தை விளைவிக்கையும் ஸமஸ்த ப்ராணிகளுடைய ஆகார பேதத்தை வெளியிடுகையும் மற்ற பூதங்களிலுள்ள சப்தாதி குணங்களெல்லாம் அமைந்திருக்கையும் ஆகிய இவை ப்ருதிவியின் கார்யங்கள், ஆகாசத்தின் குண விசேஷமாகிய சப்தம் எதனால் அறியப்படுகின்றதோ, அதை ச்ரோத்ரேந்த்ரியமென்று சொல்லுவார்கள். (ஆகாசத்தின் அஸாதாரண குணமான சப்தத்தை க்ரஹிக்கையே ஸ்ரோத்ரேந்தரியத்திற்கு லக்ஷணம்). வாயுவின் அஸாதாரண குணமான ஸ்பர்சத்தை எது க்ரஹிக்கிறதோ, அது வாகிந்த்ரியமென்று கூறப்படும். தேஜஸ்ஸின் அஸாதாரண குணமான ரூபத்தை எது க்ரஹிக்கின்றதோ, அது சக்ஷுரிந்தரியமென்று சொல்லப்படும். ஜலத்தின் அஸாரணகுணமான ரஸத்தை எது க்ரஹிக்கிறதோ, அதை ரஸனேந்த்ரியமென்று சொல்லுவார்கள். பூமியின் அஸாதாரண குணமான கந்தத்தை எது க்ரஹிக்கின்றதோ (அறிகிறதோ) அதை க்ராணேந்த்ரியமென்று சொல்லுவார்கள். காரணமான ஆகாசாதி பூதத்தின் குணமான சப்தாதிகள் அதன் கார்யமான வாயு முதலியவற்றில் தொடர்ந்து வருகின்றனவென்று தெரிகின்றது. ஆகையால் ஆகாசம் முதலிய நான்கு பூதங்களின் குணங்களும் பூமியில்தான் புலப்படுகின்றன. மஹத்தத்வம் முதலிய (மஹத்து அஹங்காரம் ஆகாசம் வாயு தேஜஸ்ஸு ஜலம் பூமி ஆகிய) (தன்மாத்ரங்கள் பூதங்களிலும் இந்திரியங்கள் அஹங்காரத்திலும் அடங்கினதாகக் கருதி ஏழென்று கூறப்பட்டது.) இவ்வேழு தத்வங்களும் ஒன்றோடொன்று சேராதிருக்கையில், (ஒன்றோடொன்று சேராமல் அண்டத்தை ஸ்ருஷ்டிக்க முடியாதிருக்கையில்) அதுகண்டு ஜகதீஸ்வரன் காலம் கர்மம் ஸத்வாதி குணங்கள் ஆகிய இவற்றோடு கூடி அந்த மஹதாதி தத்வங்களில் ப்ரவேசித்தான். பின்பு அந்த பகவானுடைய அனுப்ரவேசத்தினால் அம்மஹதாதி தத்வங்களேழும் ஒன்றோடொன்று கலந்து பேதம் தெரியாதபடியும் பிரிக்க முடியாதபடியும் சேர்ந்தன. அவற்றினின்று அசேதனமான அண்டம் உண்டாயிற்று. எந்த அண்டத்தினின்று ப்ரஹ்மதேவன் உண்டானான். அத்தகையதும் உள்ளே சேதன ப்ரவேசமில்லாமையால் அசேதனமுமாகிய அண்டத்தை அம்மஹதாதி தத்வங்கள் உண்டாக்கின. இவ்வண்டம் விசேஷமென்னும் பேருடையது. இது வெளியில் ப்ரக்ருதியால் சூழப்பட்டனைகளும் ஒன்றுக்கொன்று பத்துமடங்கு அதிகமாயிருப்பவைகளுமாகிய ஜலம் முதலிய தத்வங்களால் சுற்றிலும் மூடப்பெற்றிருக்கும். இவ்வண்டத்தில் பகவானுக்குச் சரீரமாகிய தேவ மனுஷ்யாதி லோகங்களின் விஸ்தாரமெல்லாம் அடங்கியது. அத்தகையதான இவ்வண்டமும் அந்த பகவானுக்குச் சரீரமாயிருப்பதே. இங்ஙனம் மஹத்தத்வம் முதல் நான்முகன் வரையிலுமுள்ள வஸ்துக்களின் ஸ்ருஷ்டியைச் சொன்னேன். இனி தேவாதி ஸ்ருஷ்டியைச் சொல்லுகின்றேன். கேட்பாயாக. 

ஜலத்தில் மிதந்து கொண்டிருப்பதும் ஸ்வர்ணம்போல் பளபளவென்று மிகவும் ப்ரகாசிப்பதுமாகிய அந்த அண்டத்திற்குள் சயனித்துக் கொண்டிருந்த அநிருத்த ரூபியான பகவான் அவ்வண்டத்தினின்று எழுந்து (ஸ்ருஷ்டி வ்யாபாரத்தில் முயன்று) ப்ரஹ்மாவினிடத்தில் ஆவேசித்து தேவர்களில் சிறந்த அம்மஹானுபாவன் ஸமஷ்டி புருஷனாகிய ப்ரஹ்மாவின் சரீரத்திலுள்ள இந்த்ரிய ஸமூஹத்தைப் பலவாறாகப் பிரித்தான். இந்த ப்ரஹ்மதேவனிடத்தினின்று முதலில் முகம் உண்டாயிற்று. (ஸமஷ்டி புருஷனாகிய ப்ரஹ்மாவின் சரீரத்தினுடைய முகத்தினின்று தேவாதிகளின் வாகிந்த்ரியத்திற்கு அதிஷ்டானமான முகம் உண்டாயிற்று.) அப்பால் வாகிந்த்ரியத்தினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான அக்னி உண்டானான். பிறகு இந்த ப்ரஹ்மாவிடத்தினின்று மாணேந்த்ரியத்திற்கு அதிஷ்டானமாகிய நாஸிகைகள் (மூக்குரந்த்ரங்கள் ) உண்டாயின. நாஸிகைகளினின்று க்ராணேந்த்ரியம் உண்டாயிற்று. இந்த க்ராணேந்த்ரியம் ப்ராணனுக்கு அதீனமாயிருப்பது. க்ராணேந்திரியமொன்று மாத்ரமேயல்லாமல் இந்திரியங்கள் அனைத்துமே ப்ராணனுக்கு அதீனமாயிருப்பவை. பிறகு அந்த க்ராணேக்த்ரியத்தினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான வாயு உண்டானான். பிறகு சக்ஷுரிந்தரியத்திற்கு அதிஷ்டானங்களாகிய கண்கள் உண்டாயின. அதினின்று சக்ஷுரிந்த்ரியம் உண்டாயிற்று. அந்தச் சக்ஷுரிந்தரியத்தினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான ஸுர்யன் உண்டானான். பிறகு ஸ்ரோத்ரேந்தரியத்திற்கு அதிஷ்டானங்களாகிய காதுகள் உண்டாயின. அந்தக் காதுகளினின்று ச்ரோத்ரேந்த்ரியமும், அந்த ச்ரோத்ரேந்தரியத்தினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான திக்குகளும் உண்டாயின. ப்ரஹ்மாவினிடத்தினின்று த்வகிந்த்ரியத்திற்கு அதிஷ்டானமாகிய ரோமங்களும் மீசை முதலியவைகளும் உண்டாயின. பிறகு த்வகிந்த்ரியமும், அதற்கு அதிஷ்டான தேவதையாகிய ஓளஷதிகளும் உண்டாயின. பிறகு உபஸ்தேந்த்ரியத்திற்கு அதிஷ்டானமான ஆண்குறி பெண்குறிகளும், அவற்றினின்று உபஸ்தேந்த்ரியமும், அதினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான அப்புக்களும் (ஜலமும்) உண்டாயின. பிறகு பாயு என்கிற இந்த்ரியத்திற்கு அதிஷ்டானமும் குதமென்று கூறப்படுவதுமாகிய மலத்வாரம் உண்டாயிற்று. அதினின்று அபானமென்று சொல்லப்படுவதாகி பாயு வென்கிற இந்த்ரியமும் அந்தப் பாயுவினின்று அதற்கு அதிஷ்டான தேவதையும் லோக ஸம்ஹாரகனாகையால் உலகங்களுக்கெல்லாம் பயங்கரனுமாகிய ம்ருத்யுவும் உண்டானார்கள். பிறகு பாணியென்கிற இந்திரியத்திற்கு அதிஷ்டானமாகிய ஹஸ்தங்களும், அந்த ஹஸ்தங்களினின்று பலமென்று கூறப்படுவதாகிய பாணியென்கிற இந்த்ரியமும், அந்தப் பாணியினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான இந்த்ரனும் உண்டானார்கள். இந்த ப்ரஹ்மாவினிடத்தினின்று ரக்தத்திற்கு அதிஷ்டானமாகிய சாடிகளும் (நரம்புகளும்) அவற்றினின்று பரிபூர்ணமான ரக்தமும், அதினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான நதிகளும் உண்டாயின. பசி தாஹங்களுக்கு அதிஷ்டானமாகிய உதரமும் (வயிறும்) அதினின்று பசி தாஹங்களும், அவற்றினின்று அவற்றிற்கு அதிஷ்டான தேவதையான ஸமுத்ரமும் உண்டாயின. பிறகு புண்டரீகம் (செந்தாமரை மலர்) போன்ற உருவமுடையதும் அந்தக் கரணமென்கிற இந்த்ரியத்திற்கு அதிஷ்டானமுமாகிய ஹ்ருதயம் உண்டாயிற்று. அந்த ஹ்ருதயத்தினின்று மனதென்று சொல்லப்படுகிற அந்தக்கரணம் உண்டாயிற்று. அந்த மனத்தினின்று அதற்கு அதிஷ்டான தேவதையான சந்த்ரன் உண்டானான். மீளவும் கமலாகாரமான அந்த ஹ்ருதயத்தினின்றே புத்தியென்கிற இந்த்ரியம் உண்டாயிற்று. இது வ்யவஸாயமென்னும் வ்யாபாரத்தையுடையது. அதற்கு ப்ரஹ்மதேவனே அதிஷ்டான தேவதையானான். மீளவும் அந்த ஹ்ருதயத்தினின்று அஹங்காரமென்கிற இந்த்ரியம் உண்டாயிற்று. இது அபிமானமென்னும் வ்யாபாரத்தையுடையது. அதற்கு அதிஷ்டானதேவதை ருத்ரன். மீளவும் ஹ்ருதயத்தினின்று சித்தமென்கிற இந்த்ரியம் உண்டாயிற்று, அது சித்தமென்னும் வ்யாபாரத்தையுடையது. அதற்கு அதிஷ்டானதேவதையான சைத்யனென்னும் க்ஷேத்ரஜ்ஞன் உண்டானான். இந்த இந்த்ரியங்களும் அவற்றிற்கு அபிமானி தேவதைகளான அக்னி முதலிய தேவதைகளும் ஸமஷ்டி புருஷனாகிய நான்முகனுடைய சரீரத்தினின்று உண்டானார்கள். இவர்கள் உண்டானபின்பும், தேவ மனுஷ்யாதி சரீரங்களை எழுப்பி ஸஞ்சரிக்கை முதலிய கார்யங்களில் உபயோகப்படும்படி செய்ய வல்லராகவில்லை. அந்தந்த தேவதைகளால் அதிஷ்டானம் செய்யப்பெற்ற இந்த்ரியங்கள் மீளவும் அந்த தேவ மனுஷ்யாதி சரீரங்களை எழுப்பிச் செயல்களில் மூட்டுவதற்கு முயன்று அவற்றில் ப்ரவேசித்தன. 

வாகிந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையான அக்னி வாகிந்த்ரியத்துடன் தேவ மனுஷ்யாதி சரீரங்களின் முகத்தில் ப்ரவேசித்தான். அப்பொழுது இந்த தேவ மனுஷ்யாதி சரீரங்கள் எழுந்து போதல் வருதல் முதலிய செயல்களில் முயற்சி கொள்ளவில்லை. க்ராணேந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையாகிய வாயு க்ராணேந்த்ரியத்துடன் மூக்கில் ப்ரவேசித்தான். அதனாலும் அந்த தேவ மனுஷ்யாதி சரீரங்கள் எழுந்து செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப்பெறவில்லை, சக்ஷுரிந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையான ஆதித்யன் (ஸுர்யன்) சக்ஷுரிந்த்ரியத்துடன் கண்களில் ப்ரவேசித்தான். அப்பொழுதும் அந்த தேவ மனுஷ்யாதி சரீரங்கள் எழுந்து செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப் பெறவில்லை. 

ச்ரோத்ரேந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையாகிய திக்குகள் ஸ்ரோத்ரேந்த்ரியத்துடன் காதுகளில் ப்ரவேசித்தன. அப்பொமுதும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப்பெறவில்லை. சோமங்களுக்கு அதிஷ்டானதேவதையான ஔஷதிகள் அந்த ரோமங்களுடன் த்வக்கில் (தோலில் ப்ரவேசித்தன. அப்பொழுதும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப்பெறவில்லை. உபஸ்தேந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையாகிய அப்புக்கள் (ஜலம் - உபஸ்தேந்த்ரியத்துடன் ஆண்குறி பெண்குறி இவைகளில் ப்ரவேசித்தன. அதனாலும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப்பெறவில்லை. பாயுவென்கிற இந்த்ரியத்திற்கு ஆதிஷ்டான தேவதையாகிய ம்ருத்யு அந்தப் பாயுவென்கிற இந்த்ரியத்துடன் குதத்தில் (மலத்வாறத்தில்) ப்ரவேசித்தான். அதனாலும் அந்தச்சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப் பெறவில்லை. பாதமென்கிற இந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையான ஸ்ரீவிஷ்ணுதேவன் அந்தப் பாதமென்கிற இந்த்ரியத்துடன் பாதங்களில் ப்ரவேசித்தான். அதனாலும் அந்தச்சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப்பெறவில்லை. பலமென்று சொல்லப்படுகிற பாணீந்த்ரியத்திற்கு அதிஷ்டான தேவதையான இந்த்ரன் அந்தப் பாணீந்த்ரியத்துடன் ஹஸ்தங்களில் ப்ரவேசித்தான். அதனாலும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப்பெறவில்லை. பசி தாஹங்களுக்கு அதிஷ்டான தேவதையான ஸமுத்ரன் அந்தப் பசி தாஹங்களோடு உதரத்தில் ப்ரவேசித்தான். அதனாலும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப் பெறவில்லை. மனஸ்ஸென்கிற அந்தக்கரணத்திற்கு அதிஷ்டான தேவதையாகிய சந்த்ரன் அந்த மனஸ்ஸுடன் ஹ்ருதயத்தில் ப்ரவேசித்தான். 

அதனாலும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப் பெறவில்லை. புத்தியென்கிற அந்தக்கரணத்திற்கு அதிஷ்டான தேவதையாகிய ப்ரஹ்மதேவன் அந்த புத்தியுடன் ஹ்ருதயத்தில் ப்ரவேசித்தான். அதனாலும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப் பெறவில்லை. அஹங்காரத்திற்கு அபிமானிதேவதையாகிய ருத்ரன் அந்த அஹங்காரத்துடன் ஹ்ருதயத்தில் ப்ரவேசித்தான். அதனாலும் அந்தச் சரீரங்கள் செயல்களில் முயற்சிகொள்ளும் வல்லமை உண்டாகப் பெறவில்லை. சித்தமென்கிற இந்த்ரியத்திற்கு அபிமானியாகிய சைத்யனென்கிற க்ஷேத்ரஜ்ஞன் ஹ்ருதயத்தில் எப்பொழுது ப்ரவேசித்தானோ, அப்பொழுதுதான் தேவமனுஷ்யாதி சரீரங்கள் ஜலத்தில் (ஜலத்தில் ஸ்ருஷ்டிக்கப்பட்டதாகிய அண்டத்திற்குள்) புகுந்து செயல்களில் முயற்சி கொள்ளும் வல்லமை உண்டாகப் பெற்றன. தூங்கிக் கொண்டிருக்கும் புருஷனுடைய சரீரத்தை அந்தச் சரீரத்திற்கு அபிமானியாகிய புருஷனுடைய இச்சையில்லாமல் ப்ராணன்கள் இந்திரியங்கள் மனது புத்தி ஆகிய இவைகளெல்லாம் எப்படி தமது பலத்தினால் செயல்களில் முயற்சிகொள்ளும்படி செய்யவல்லவையல்லவோ, அங்ஙனமே அக்னி முதலிய அதிஷ்டான தேவதைகள் தமக்கு அதிஷ்டேயங்களான இந்திரியங்களுடன் தேவமனுஷ்யாதி சரீரங்களில் புகுந்தும் க்ஷேத்ரஜ்ஞனுடைய அனுப்ரவேசமில்லாமல் அந்தச் சரீரங்களைச் செயல்களில் தூண்டவல்லராகவில்லை. ஆகையால் க்ஷேத்ரஜ்ஞனென்றும் சைத்யனென்றும் சொல்லப்படுகின்ற ஜீவனே தேவ மனுஷ்யாதி சரீரங்களில் முக்யன்; மற்ற இந்திரியம் முதலியவைகளும் அவற்றின் அதிஷ்டான தேவதைகளும் அவனுக்கு உதவி செய்பவரேயன்றி முக்யரல்லர். அந்த தேவமனுஷ்யாதி சரீரங்கள் மூலமாய், ஸுகதுக்கங்களை அனுபவிப்பவனாகையால் போக்தாவென்று சொல்லப்படுகிற ஜீவனே முக்யன். பரிசுத்த ஸ்வரூபனாகிய அந்த ப்ரத்யகாத்மாவை (ஜீவனை), யோகத்தில் புத்தியைச் செலுத்தி அந்த புத்தியால் சரீரம் இந்திரியங்கள் புத்தி ப்ராணன் இவை முதலியவற்றைக் காட்டிலும் வேறுபட்டவனென்று விவேகித்தறிந்து பகவத்பக்தியாலும் வைராக்யத்தினாலும் இவன் “ப்ரஹ்மஸ்வரூபன்” என்கிற தத்வஜ்ஞானத்தினாலும் மனத்தில் சிந்திக்கவேண்டும். ஜீவாத்மாவை தேஹாதிகளைக் காட்டிலும் வேறுபட்டவனென்று யோக பரிசுத்தமான புத்தியால் கண்டறிந்து அந்த ஜீவனுக்கும் அந்தராத்மாவான பரமாத்மாவைக் கர்மயோகத்தினாலும் ஜ்ஞான யோகத்தினாலும் பக்தி யோகத்தினாலும் உபாஸிக்கவேண்டும். 

இருபத்தாறாவது அத்யாயம் முற்றிற்று.