ஐந்தாவது ஸ்கந்தம் – இருபதாவது அத்தியாயம்
(ப்லக்ஷம் முதலிய ஆறு த்வீபங்கள் அவற்றைச் சூழ்ந்த ஸமுத்ரங்கள் லோகாலோக பர்வதம் ஆகிய இவற்றின் நிலைமையைக் கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இனிமேல் ப்லக்ஷம் முதலிய த்வீபங்களிலுள்ள வர்ஷங்களின் பிரிவுகளையும் அவற்றின் பரிமாணத்தையும் லக்ஷணத்தையும் ஆகாரத்தையும் க்ரமப்படி விவரித்துச் சொல்லுகிறேன். ஜம்பூத்வீபம் தான் எவ்வளவு விஸ்தாரமுடையதோ அவ்வளவு விஸ்தாரமுடைய லவண ஸமுத்ரத்தினால் சூழப்பட்டிருப்பது போலவும், அந்த த்வீபத்தினிடையிலுள்ள மேருபர்வதம் ஜம்பூத்வீபத்தினால் சூழப்பட்டிருப்பது போலவும் லவண ஸமுத்ரமானது, பட்டணத்தைச் சுற்றியிருக்கும் அகழி தனக்கு வெளியிலுள்ள உத்யான வனத்தினால் சூழப்பட்டிருப்பது போல், தன்னைக் காட்டிலும் இருமடங்கு அதிக விஸ்தாரமுடைய ப்லக்ஷ த்வீபத்தினால் சூழப்பட்டிருக்கின்றது. அந்த த்வீபத்தினிடையிலுள்ள ப்லக்ஷ வ்ருக்ஷம் ஜம்பூ வ்ருக்ஷத்தின் அளவுடையது. அதைப் பற்றியே அந்த த்வீபத்திற்கு ப்லக்ஷ த்வீபமென்னும் பேர் விளைந்தது. அந்த வ்ருஷம் ஸ்வர்ணம் போல் பளபளவென்று விளக்கமுற்றிருக்கும். அந்த வ்ருக்ஷத்தின் அடியில் ஏழு ஜ்வாலைகளையுடைய அக்னி இருக்கின்றது அந்த த்வீபத்திற்கு ப்ரியவ்ரதனுடைய பிள்ளையாகிய இத்மஜிஹ்வன் அதிபதி. அவன் அந்த த்வீபத்தை ஏழு வர்ஷங்களாகப் பிரித்து அவ்வர்ஷங்களின் பெயர்களையே பேராகவுடைய தன் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தான் ஆத்மயோகத்தினால் ஸம்ஸாரத்தினின்று மோக்ஷத்தை அடைந்தான். அவ்வர்ஷங்கள் சிவம், யசஸ்யம், ஸுபத்ரம், சாந்தம், க்ஷேமம், அபயம், அம்ருதமென்னும் பேருடையவை. அவ்வர்ஷங்களில் ஏழு பர்வதங்களும், ஏழு நதிகளும் பேர்பெற்றவை. எல்லையைத் தெரிவிக்கிற அப்பர்வதங்கள் ஏழும் மணிகூடம், வஜ்ரகூடம், இந்த்ரஸேனம், ஜ்யோதிஷ்மான், தூம்ரவர்ணம், ஹிரண்யக்ரீவம், மேகமாலமென்னும் பேருடையவை. அங்குள்ள மஹாநதிகள் அருணை, ஸ்ருமனை, ஆங்கிரஸி, ஸாவித்ரி, ஸுப்ரபாதை, ருதம்பரை, ஸத்யம்பரை என்னும் பேருடையவை. அந்நதிகளின் ஜலத்தில் ஸ்நான (நீராடுதல்) பான (பருகுதல்) முதலியவற்றைச் செய்கையால் ரஜஸ் தமஸ்ஸுக்கள் கழியப் பெற்றவர்களும் ஆயிரமாண்டு வாழ்நாள் உடையவர்களும் தேவதைகளோடொத்த காட்சியமைந்த ஸந்தானமுடையவர்களும் ஹம்ஸர், பதகர், ஊர்த்வாயனர், ஸத்யாங்கர் என்னும் பேர்களுடையவர்களுமான நான்கு வர்ணத்தவர்கள் வேதோக்தமான கர்மயோகாதிகளாலும் அவ்வேதத்தை ஒட்டின ஸ்ம்ருதி முதலியவற்றில் சொன்ன வழிகளாலும் ஷாட்குண்ய பூர்ணனும் வேத ப்ரதிபாத்யனும் (வேதத்தினால் அறியப்படுபவனும்) ஸூர்யனைச் சரீரமாகவுடையவனுமாகிய பரமாத்மாவை ஆராதிக்கிறார்கள். “அனாதியும் நிர்விகாரனும் புண்ய கர்மங்களின் பலன்களைக் கொடுப்பவனும் தன்னைப் பற்றினார்க்கு மோக்ஷத்தைக் கொடுப்பவனும் பற்றாதவர்க்கு ஸம்ஸாரத்தை விளைப்பவனும் பரப்ரஹ்மமென்று கூறப்படுகின்றவனுமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்குச் சரீரபூதனான ஸூர்யனென்னும் ஜீவனைச் சரணம் அடைகிறோம்” என்னும் இம்மந்திரத்தை அவர்கள் ஜபிக்கின்றார்கள்.