தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – அறுபத்தொன்றாவது அத்தியாயம்
(ஸ்ரீக்ருஷ்ணனுடைய புத்ர, பௌத்ர (பேரன்) பரம்பரையும், அநிருத்த விவாஹமும், ருக்மியின் வதமும்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பார்யைகளில் (மனைவிகளில்) ஒவ்வொருத்தியும் பத்து பத்து பிள்ளைகளைப் பெற்றாள். அப்புதல்வர்கள், தங்களுடைய உருவம், குணம் முதலியவற்றின் ஸம்ருத்தியால் (நிறைவால்), தங்கள் தந்தையாகிய ஸ்ரீக்ருஷ்ணனைக் காட்டிலும் சிறிதும் குறையாதிருந்தார்கள். அந்த ராஜபுத்ரிகள், ஸ்ரீக்ருஷ்ணன் தங்கள் க்ருஹத்தை எப்பொழுதும் விடாமல் அவ்விடத்திலேயே நிலையாயிருப்பதைக் கண்டு, அந்தப் பகவானுடைய உண்மையை அறியாமல், ஒவ்வொருத்தியும் தன்னை அவனுக்கு மிகவும் அன்பிற்கிடமாக நினைத்துக் கொண்டாள்.
அம்மாதரசிகள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய அழகிய தாமரை மலர் போன்ற முகமும், நீண்ட புஜ தண்டங்களும் (கைகளும்), நீண்டு மலர்ந்த கண்களும், ப்ரீதியோடும், சிரிப்போடும் கூடிய கண்ணோக்கங்களும், அழகிய உரைகளும் ஆகிய இவைகளால் மதி (புத்தி) மயங்கினார்களேயன்றி, தங்கள் விலாஸங்களால் (உடல் நெளிவுகளால்), நிறைவாளனாகிய அவனுடைய மனத்தைப் பறித்து, வசப்படுத்திக் கொள்ள வல்லராகவில்லை. அந்தப் பதினாயிரம் பத்னிகளும், புன்னகையோடு கூடின கடைக்கண்ணோக்கத்தினால் கருத்தை வெளியிடுவதும், மனத்தைப் பறிக்கும் தன்மையதுமாகிய வளைந்த புருவ நெரிப்பினால் அனுப்பப்பட்ட, ஆண்களைக் கவர்ச்சியால் கவரும் மன்மத பாணங்களாலும் (காமக் கணைகளாலும்), காம சாஸ்த்ரங்களில் (காமக்கலவி பற்றி விவரித்துக் கூறும் நூல்களில்) ப்ரஸித்தங்களான மற்றும் பலவகைக் கருவிகளாலும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய மனத்தைக் கலக்க வல்லராகவில்லை.
ப்ரஹ்மாதிகளும்கூட எவனுடைய உண்மையை அறிய வல்லரல்லரோ, அத்தகையனும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனை, அம்மடந்தையர்கள் கணவனாகப் பெற்று, ஸர்வகாலமும் வளர்ந்து வருகின்ற ஸந்தோஷமுடையவர்களாகி, அனுராகமும் (அன்பும்), புன்னகையும் அமைந்த கண்ணோக்கங்களாலும், புதுப்புதிய ஸம்போக (புணர்ச்சி) ஸுகங்களாலும், மேன்மேலும் பேராவலுற்று, அவனைப் பணிந்து வந்தார்களன்றி, அவனுடைய மனத்தை வசப்படுத்தச் சிறிதும் வல்லராகவில்லை.
அம்மாதரசிகள், தாங்கள் நினைத்தபடி செய்யவல்ல அளவற்ற தாஸிகளுடையவர்களாயினும், எதிர்கொள்வது, சிறந்த ஆஸனம் அளிப்பது, பாதங்களை அலம்புவது, தாம்பூலங் கொடுப்பது, பாதங்களைப் பிடித்து இளைப்பாறச் செய்வது, சாமரம் வீசுவது, கந்தம் பூசுவது, பூமாலை சூட்டுவது, தலைவாரி முடிப்பது, படுக்கை அமைப்பது, ஸ்னானம் செய்விப்பது, உபஹாரம் கொடுப்பது முதலியவைகளால் தாங்களே நேரில் அவனுக்குப் பணிவிடை செய்தார்கள்.
பத்து பத்து பிள்ளைகளையுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பார்யைகளில் (மனைவிகளில்), ருக்மிணி முதலியவர் எண்மர் ப்ரதான மஹிஷிகளென்று (பட்டத்து அரசிகள் என்று) முன்பு மொழிந்தேனல்லவா; அவர்களுடைய பிள்ளைகளான ப்ரத்யும்னன், முதலியவர்களைச் சொல்லுகிறேன்; கேட்பாயாக.
ஸ்ரீக்ருஷ்ணனுக்கு, ருக்மிணியிடத்தில் சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன், சாருதேஹன், ஸுசாரு, சாருகுப்தன், பத்ரசாரு, சாருசந்த்ரன், அதிசாரு, சாருமான் ஆகிய இவ்வொன்பதின்மரும், ப்ரத்யும்னனை முன்னிட்டுக்கொண்டு பிறந்தார்கள். இப்பதின்மரும், ஸ்ரீக்ருஷ்ணனோடொத்து விளங்கினார்கள்.
பானு, ஸுபானு, ஸ்வர்ப்பானு, ப்ரபானு, பானுமான், சந்த்ரபானு, ப்ருஹத்பானு, அதிபானு, ஸ்ரீபானு, ப்ரதிபானு ஆகிய இப்பதின்மரும், ஸத்யபாமையின் பிள்ளைகள்.
ஸாம்பன், ஸுமித்ரன், புருஜித்து, சதஜித்து; ஸஹஸ்ரஜித்து, விஜயன், சித்ரகேது, வஸுமான், த்ரவிணன், க்ரது ஆகிய இப்பதின்மரும், ஜாம்பவதியின் பிள்ளைகள். இந்த ஸாம்பன் முதலியவர்கள் பதின்மரும், தந்தையோடொத்தவர்கள்.
வீரன், சந்த்ரன், அச்வஸேனன், சித்ரகு, வேகவான், வ்ருஷன், ஆமன், சங்கு, வஸு, குந்தி ஆகிய இப்பதின்மரும் நாக்னஜிதியின் பிள்ளைகள்.
ச்ருதன், கவி, வ்ருஷன், வீரன், ஸுபாஹு, பத்ரன், சாந்தி, தர்சன், பூர்ணமாஸன், ஸோமகன் ஆகிய இப்பதின்மரும் காளிந்தியின் பிள்ளைகள். இவர்களில் பத்ரனென்பவனை ஏகலனென்றும் வழங்குவதுண்டு.
ப்ரகோஷன், காத்ரவான், ஸிம்ஹன், பலன், ப்ரபலன், ஊர்த்வகன், மஹாசக்தி, ஸஹன், ஓஜஸ், அபராஜிதன் ஆகிய இப்பதின்மரும் லக்ஷ்மணையின் பிள்ளைகள்.
வ்ருகன், ஹர்ஷன், அனிலன், க்ருத்ரன், வர்தனன், அன்னாதன், மஹாசன், பாவனன், வஹ்னி, க்ஷுதி ஆகிய இப்பதின்மரும், மித்ரவிந்தையின் பிள்ளைகள்.
ஸங்க்ராமஜித்து, ப்ருஹத்ஸேனன், சூரன் , ப்ரஹரணன், அரிஜித்து, ஜயன், ஸுபத்ரன், வாமன், ஆயு, ஸத்யகன் ஆகிய இப்பதின்மரும், பத்ரையின் பிள்ளைகள்.