ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – மூன்றாவது அத்தியாயம்
(பகவானுடைய மாயையின் ஸ்வரூபத்தையும், அதைக் கடக்கும் வழியையும், ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும், பாகவதர் அனுஷ்டிக்க வேண்டிய கர்ம ஸ்வரூபத்தையும் நிமி மன்னவனுக்கு பரதனின் தம்பிகளான கவி, ஹரி, அந்தரிக்ஷன், ப்ரபுத்தன், பிப்பலாயனன், ஆவிர்ஹோத்ரன், த்ரமிலன், சமஸன், கரபாஜனன் ஆகியோர் கூறுதல்)
நிமி மன்னவன் சொல்லுகிறான்:- ஸர்வஸ்மாத்பரனும் (ஸர்வஸ்மாத் - எல்லாவற்றிலும், பரனும் – மேலானவனும்) ஸர்வ நியாமகனுமாகிய (எல்லாவற்றையும் நியமிப்பவனுமாகிய) ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மாயை மாயாவிகளையும் மதி மயங்கச் செய்யும் திறமையுடையது. அத்தகைய மாயையின் ஸ்வரூபத்தையும், அதன் கார்யத்தையும் அறிய விரும்புகிறேன். மஹானுபாவர்களாகிய நீங்கள் அதை எனக்குச் சொல்வீர்களாக. (நீங்கள் மாயையின் ஸ்வரூபத்தை முன்னமே சுருக்கமாகச் சொன்னீர்கள். ஆயினும் அதை விசதமாகத் (விரிவாகத்) தெரிந்து கொள்ள விரும்புகிறேன்). ஸம்ஸார தாபங்களால் (உலகியல் வாழ்வின் துன்பங்களால்) மிகவும் தபிக்கப்பட்டவனும் (கஷ்டப்பட்டவனும்), மரணம் அடையும் தன்மையனுமாகிய நான், பகவானுடைய கதைகளாகிற அம்ருதத்தை உட்கொண்டிருப்பதும், அந்த ஸம்ஸார தாபங்களைப் (உலகியல் வாழ்வின் துன்பங்களைப்) போக்கும் மருந்துமாகிய உங்கள் வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருப்பினும், அதில் த்ருப்தி உண்டாகப் பெறாதிருக்கின்றேன்.
அந்தரிக்ஷன் சொல்லுகிறான்:- ஸ்தூல சேதனா சேதன ரூபமான (பெயர் உருவங்களுடன் கூடிய அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்தாய் (உலகமாய்) விரிய வேண்டுமென்று விரும்பின பகவான், எதைக் கொண்டு இந்த ஜகத்தை எல்லாம் படைத்தானோ, அத்தகையதான இந்தப் பகவானுடைய மாயை ஸத்வாதி குணங்களின் ஸம்பந்தமற்றதும், சரீர ஸம்பந்தமின்றிப் பரிசுத்தமாயிருப்பதும், ஸ்வயம்ப்ரகாசமுமாகிய ஜீவனுடைய ஸ்வரூபத்தில் சரீர ஸம்பந்தம், ஸத்வாதி குணங்களுக்கு உட்பட்டிருக்கை, தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்/மனக்கலக்கம்) முதலிய விபரீதங்களை விளைக்கும் தன்மையது. (பகவானுடைய மாயை, ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களின் ஸமுதாய (கூட்டு) ரூபமும், தேஹம், இந்திரியம் முதலியவைகளாய்ப் பரிணமிக்கும் தன்மையதும், ஜடமுமாயிருக்கும். சுத்த ஸ்வரூபனான ஜீவாத்மாவினிடத்தில், சரீர ஸம்பந்தம், தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்/மனக்கலக்கம்) முதலிய விபரீதங்களை விளைக்கை அந்த மாயையின் கார்யமே. மற்றும், மஹத்து முதல் ப்ருதிவி வரையிலுள்ள ஜகத்தும் அதன் கார்யமே). ஜாக்ரத் அவஸ்தையில் (விழித்துக் கொண்டிருக்கும் பொழுது) மனத்தின் ஸம்பந்தமுடைய இந்திரியங்களால் ஆத்மாவல்லாததும், நிலையற்றதுமாகிய தேஹம் முதலிய வஸ்துக்களில் ஆத்மாவென்றும் நிலைநின்றது என்றும் இது முதலிய ப்ரமம் (மனக்கலக்கம்) உண்டாகின்றது.
ஸ்வப்னாவஸ்தையில் (கனவு காணும் பொழுது) வெளி இந்திரியங்களோடு ஸம்பந்தப்படாத அந்தக் கரணத்தினால் ப்ரமம் (மனக்கலக்கம்) உண்டாகின்றது. அதுவும் ஸ்வப்னத்தில் (கனவில்) காண்கிற நிலையற்றதான தேஹாதி வஸ்துக்களில் நிலை நின்றதென்னும் இது முதலிய ப்ரமமே (மனக்கலக்கமே). பாஹ்யமான (வெளியில் தெரியும்) ப்ராஹ்மணத்வம் (ப்ரஹ்மணன், க்ஷத்ரியன், வைச்யன், நான்காம் வர்ணத்தவன்) முதலிய தர்மங்களைப் பற்றின அறிவும், ஆந்தரமான (உள் மனதில் ஏற்படும்) ஸுகம், துக்கம் முதலியவற்றைப் பற்றின அறிவுமின்றி அவற்றிற்கு மூலமான கர்ம வாஸனை ஒன்று மாத்ரமே மிகுந்திருக்கும் தசை (நிலை) ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் அவஸ்தை (நிலை) என்று கூறப்படும். அதுவும் ப்ரக்ருதியின் கார்யமே. (ஜீவனுக்கு பாஹ்ய (வெளி) இந்திரியங்கள், அந்தர் (உள்) இந்த்ரியமான மனம், அவற்றிற்கு ஆதாரமான தேஹம், அதனால் ஏற்பட்ட ஜாக்ரத் (விழிப்பு) முதலிய அவஸ்தைகள் (நிலைகள்) ஆகிய இவையெல்லாம் மாயை எனப்படுகிற ப்ரக்ருதியின் கார்யமாய் உண்டாயிருப்பவை.)
ஜீவனுக்கு ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் இம்மூன்று அவஸ்தைகளில் (நிலைகளில்) ஏதேனுமொன்று மாறாதிருக்கும். ஆனால் இம்மூன்று அவஸ்தைகளும் (நிலைகளும்) ஜீவனுக்கு எப்பொழுது நிவர்த்திக்கும் (விலகும்) என்றால் ப்ரக்ருதியின் பரிணாமமான சரீரம் விட்டு முக்த (மோட்ச) அவஸ்தை (நிலை) எப்பொழுது நேரிடுமோ, அப்பொழுதுதான் இம்மூன்று அவஸ்தைகளும் (நிலைகளும்) நிவர்த்திக்கும் (விலகும்). தேஹ ஸம்பந்தத்தினால் விளையும் அவஸ்தைகள் (நிலைகள்) மூன்றும் தீண்டப்பெறாத முக்தியே (மோட்சமே) நான்காம் அவஸ்தை (நிலை). (ஜாக்ரத் (விழிப்பு) முதலிய அவஸ்தைகள் (நிலைகள்) மூன்றும் ப்ராக்ருத (முக்குணக்களின் சேர்க்கையான) சரீர (உடல்) ஸம்பந்தத்தினால் விளைபவையாகி, ஒளபாதிகங்கள் (ஒரு காரணத்தை முன்னிட்டு ஏற்படுபவை) ஆகையால் நிலையற்றவை. அவற்றை நிலை நின்றவையென்று நினைப்பது ப்ரமமே (மனக்கலக்கமே)).
ஜீவ ஸ்வரூபம் (ஜீவாத்மாவின் இயற்கையான தன்மை), ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலியவை தீண்டப்பெறாமல் பரிசுத்தமாயிருப்பது; ஜாக்ரத் (விழிப்பு) முதலிய அவஸ்தா (நிலைகளின்) பேதங்களின்றி (வேறுபாடின்றி) என்றும் ஒருவாறாயிருப்பது; ஜ்ஞானத்தையே வடிவாக உடையது. ஆயினும், அந்த ஜீவஸ்வரூபம் (ஜீவாத்மாவின் இயற்கையான தன்மை) ப்ரக்ருதியின் பரிணாமமான தேஹ (உடல்) ஸம்பந்தத்தைப் பெற்று, ஸ்வப்னத்தில் (கனவில்) காண்கிற யானை, குதிரை முதலியவை நிலையற்றவையாயினும், நிலை நின்றவையாகத் தோன்றுவது போல், இந்த்ரியம் முதலியவைகளால் ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் மூன்று அவஸ்தைகளை (நிலைகளை) உடையது போல் தோன்றுகிறதும், தேஹம் (உடல்), இந்த்ரியம் (புலன்கள்), மனம் இவற்றின் ஸம்பந்தம் உண்டாகப் பெறுவதும் ஆகிய இதெல்லாம் ஜ்ஞான ஸ்வரூபனான ஜீவனுடைய அனாதியான புண்ய பாபரூபமான கர்மத்தின் பலனாய் விளைகின்றது. மாயையின் கார்யமான ஜாக்ரத் (விழிப்பு) முதலிய இம்மூன்று அவஸ்தைகளும் (நிலைகளும்), முக்தி (மோட்ச) அவஸ்தையில் (நிலையில்) தொடராமையாலும், அதற்கு முன்பும் ஓர் அவஸ்தையில் (நிலையில்) மற்றோரு அவஸ்தை (நிலை) தொடராமையாலும், ஜீவனுடைய அனாதியான புண்ய, பாப ரூப கர்மத்தின் பலனாக ஏற்பட்டவையேயன்றி அவனுக்கு இயற்கையில் ஏற்பட்டவையன்று.
ஸ்வப்னத்தில் (கனவில்) அனுபவிக்கிற ஸுகம், நிலையற்றதாகி கர்மத்தின் பலனாக எவ்வாறு விளைகின்றதோ, அவ்வாறே அநித்யங்களான (நிலையற்றதான) இவ்வவஸ்தைகளும் (இந்நிலைகளும்) கர்ம பலன்களே. இவ்வாறு இவ்வுண்மையை ஆராய்ந்தறிவானாயின், அற்ப (மிகவும் குறைந்த) ஸுகங்களுக்காகச் (இன்பங்களுக்காகச்) செய்யும் வ்யாபாரத்தினின்று மீளுவான். ஸர்வ காரணன் (எல்லாவற்றிற்கும் மூல காரணம்) ஆகையால் தான் முன்னமே ஸித்தமாயிருக்கின்ற பரமபுருஷன், ஸமஸ்த பூதங்களுக்கும் (எல்லா ஜீவர்களுக்கும்) அந்தராத்மாவாகி, ப்ரத்யக்ஷாதி ப்ரமாண ஸித்தங்களான (நேராகப் பார்த்து அறியப்படக்கூடியவையான) இந்த ப்ருதிவி முதலிய மஹாபூதங்களைக்கொண்டு தனக்குச் சரீர பூதர்களான ஜீவாத்மாக்களின் புருஷார்த்த ஸித்திக்காக (அவர்கள் அடைய விரும்பும் பொருட்களை அடைவதற்காக) மேன்மையும், தாழ்மையுமான பல பூதங்களைப் படைத்தான். (ஜீவாத்மாக்கள் தன்னை ஆராதிப்பதற்கு உபயோகப்படக் கூடியவைகளான கரண (புலன்கள்) களேபரங்களைப் (சரீரம், உடல்) பெற்று, தன்னை ஆராதித்து, மோக்ஷ ரூபமான சிறந்த புருஷார்த்தத்தைப் பெறவேண்டும் என்று பரமபுருஷன் ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணினான் (உலகைப் படைத்தான்). (ஆனால் கரண களேபரங்களைப் (புலன்களையும், உடலையும்) பெற்ற ஜீவாத்மாக்கள் அனைவரும் பகவானை ஆராதித்து மோக்ஷத்தை ஏன் பெறவில்லை என்றால், சொல்லுகிறேன்.)