ஞாயிறு, 27 ஜூன், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 316

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பத்தாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் ஆத்மாவுக்குத் தேஹ ஸம்பந்தாதி ரூபமான ஸம்ஸாரம் இயற்கையில் ஏற்பட்டதன்று என்று உத்தவனுக்கு உபதேசித்தல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- புருஷன் ஸர்வஜ்ஞனும் (எல்லாவற்றையும் அறிந்தவனும்), காருணிகனுமாகிய (கருணை உடையவனுமான) நான், பாஞ்சராத்ரம், பகவத்கீதை முதலியவை மூலமாய் உபதேசித்த அர்ச்சனம், வந்தனம் முதலிய ஸ்வரூப அனுரூபமான (ஜீவர்களின் இயற்கைத் தன்மைக்கு ஏற்ற) தர்மங்களை மன ஊக்கத்துடன் அனுஷ்டித்துக் கொண்டு, தன்னுடைய ஸத்தை (இருப்பு), ஸ்திதி (நீடிப்பு), ப்ரவ்ருத்தி (செயல்) இவையெல்லாம் ஸர்வாந்தராத்மாவான என்னுடைய அதீனங்களாகவே (உட்பட்டவையாகவே) நடக்கின்றன என்னும் நிச்சய ஜ்ஞானம் உடையவனாகி, தான் அனுஷ்டிக்கும் தர்மங்களில் பல அபிஸந்தியின்றி (பலனில் விருப்பம் இன்றி), தேஹம் இருக்கும் வரையில் வர்ணாச்ரம தர்மங்களையும், குலக்ரம ஆகதமான (குல வழக்கப்படி வந்த) ஆசாரங்களையும் அனுஷ்டித்து வர வேண்டும். “பலன்களில் அபிஸந்தியை (விருப்பத்தை) எப்படி மாற்றிக்கொள்ள முடியும்?” என்றால், சொல்லுகிறேன். 

கீழ்ச்சொன்ன தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு வருவானாயின், மனம் தெளியும். அத்தகைய மனத்தினால் ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை ஆராய்வதுடன், விஷய ப்ரவணமான (ஈடுபாடுடைய) மனமுடைய ப்ராணிகள், விரும்புகிறவைகளும், ஸத்வாதி குண பரிணாமங்களுமான சப்தாதி விஷயங்களுக்காகச் செய்யும் முயற்சிகளெல்லாம் பலத்தில் விபரீதமாய் முடிவதையும் ஆராய்வானாயின், பலன்களில் அபிஸந்தி (விருப்பம்) தானே நீங்கிப்போகும். (ஸுகத்திற்காகச் செய்யும் முயற்சியெல்லாம், கடைசியில் துக்கத்தையே பலனாக விளைப்பதை ஆராய்ந்தால், தர்மங்களில் பல அபிஸந்தியை (பலனில் விருப்பத்தை) அனாயாஸமாக (எளிதாக) மாற்றிக் கொள்ளலாம்). ஸ்வப்னம் (கனவு) காண்கிறவன், ப்ரியமாயும் (விருப்பமாயும்), அப்ரியமாயுமுள்ள (விருப்பம் அற்றவையாயுள்ள) விஷயங்களை அனுபவிப்பதும், நெஞ்சில் அந்தந்த வஸ்துக்களை அனுபவிக்கிறாப் போல், நினைக்கிற மனோரதமும் (மனதின் எண்ணமும்) நிஷ்ப்பலமே (பலன் அற்றதே) அல்லவா? ஸ்வப்னத்தில், அர்த்தம், காமம் முதலிய புருஷார்த்தங்களை (மனிதனால் விரும்பி அடையப்படுவது) அனுபவிப்பானாயின், அவன் விழித்துக் கொண்ட பின்பு, அதனால் தன் ப்ரயோஜனம் கைகூடினதாக நினைப்பானோ? பெரிய தோட்டத்தில், பெரிய உப்பரிகையின் மேல், மெத்தென்ன பஞ்ச சயனத்தில் மனத்திற்கினிய காதலிகளுடன் படுத்திருப்பதாகவும், தான் மஹாராஜனாயிருந்து ஏகச் சத்ராதிபத்யம் (ஒரு குடைக்கீழ் அரசாட்சி) செய்வதாகவும் மனத்தில் நினைப்பானாயின், அவ்வளவில் அவன் ப்ரயோஜனம் கைகூடப் பெற்றவனாவானா? அந்த அனுபவங்களெல்லாம் நிஷ்ப்பலங்களே (பலன் அற்றவையே) அல்லவா?) மற்றும், ப்ரியங்களும் (விருப்பமானவையும்), அப்ரியங்களும் (விருப்பம் அற்றவைகளும்) கலந்து நானா ரூபமாய் (பலவகையாய்) இருக்கையால், அவை நிஷ்ப்பலங்களே (பலன் அற்றவையே). 

அவ்வாறே, ஸத்வாதி குணங்களால், ஆத்மாக்களிடத்தில் தேவ, மனுஷ்யாதியாகவே தங்களை நினைக்கையும், நிஷ்ப்பலமே (பலன் அற்றதே). ஆத்மா தேவ, மனுஷ்யாதி தேஹங்களில் அமைந்திருக்கிறானன்றி, அத்தேஹங்களே ஆத்மாவன்று. அவன், அவற்றைக் காட்டிலும் வேறுபட்டவன். ஆகையால், அவ்வாத்மாக்களிடத்தில் தேவ, மனுஷ்யாதி பேதங்களை ஏறிடுகை ப்ரமமே (மனக்கலக்கமே) அன்றி, உண்மையன்று. அவ்வாறே, துக்க ரூபங்களான சப்தாதி விஷயங்களை, ஸுக ரூபங்களாக நினைக்கையும், அநித்யங்களான (நிலையற்றவையான) அவற்றை நித்யங்களாக (நிலை நின்றவைகளாக) நினைக்கையும் நிஷ்ப்பலமே (பலன் அற்றதே). 

சனி, 26 ஜூன், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 315

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – ஒன்பதாவது அத்தியாயம்

(ப்ராஹ்மணன் அழுகுரல் பக்ஷி முதலிய மற்றவைகளிடத்தினின்று தெரிந்து கொண்ட விஷயங்களை யதுவுக்குச் சொல்லுதல்)

ப்ராஹ்மணன் சொல்லுகிறான்:- மனுஷ்யர்களுக்கு எந்தெந்த வஸ்து மிகவும் ப்ரியமாயிருக்குமோ, அந்த வஸ்துக்களைப் பரிக்ரஹிப்பது (அடைதல்) மிகவும் துக்கத்திற்கு இடமாகும். எவன் அவை துக்கத்திற்கிடமாகும் என்பதை அறிந்து, எதையும் பரிக்ரஹிக்காது (அடையாமல்) இருக்கிறானோ, அவன் அளவற்ற ஸுகம் பெறுவான்.

வாயில் மாம்ஸ கண்டத்தைக் கவ்விக் கொண்டிருந்த அழுகுரல் பக்ஷியை (பறவையை) அதைக்காட்டிலும் பலிஷ்டங்களும் (பலசாலிகளும்), மாம்ஸம் அற்றவைகளுமாகிய பருந்து, கழுகு முதலிய பக்ஷிகள் (பறவைகள்) அடிக்க வந்தன. அவ்வழுகுரல் பக்ஷி (பறவை) அந்த மாம்ஸ கண்டத்தைத் துறந்து, ஸுகத்தை அடைந்தது. (அவ்வழுகுரல் பக்ஷி (பறவை), அந்த மாம்ஸ கண்டத்தில் ஆசையுற்று, அதை விடாதிருக்குமாயின், பலிஷ்டங்களாகிய (பலசாலிகளான) பருந்து முதலிய பக்ஷிகளால் (பறவைகளால்) அடியுண்டு மாண்டு போகும். அதைத் துறந்தபடியால், அப்பக்ஷிகளால் அடியுண்டு மாளுகையாகிற ஆபத்தினின்று மீண்டது. ஆகையால், பரிக்ரஹங்களை (நமது சொத்து என்று சேர்த்து வைத்திருப்பவற்றை) விடுவானாயின், ஸம்ஸாரமாகிற ஆபத்தினின்று விடுபடலாம்). 

எனக்கு மான அவமானங்கள் கிடையாது. வீடு, வாசல், பிள்ளை, பெண்டிர் முதலிய பரிக்ரஹங்களை (சொத்துக்களை) உடையவர்களுக்குள்ள சிந்தையும் எனக்குக் கிடையாது. பின்னையோவென்றால், பரமாத்மாவோடு கூடவே விளையாடலுற்று, அவனிடத்திலேயே ப்ரீதியுடையவனாகி, ஒன்றுமறியாத பாலன் (சிறுவன்) போல் இவ்வுலகில் திரிகின்றேன். (பாலனுக்கு (சிறுவனுக்கு) மானமாவது, அவமானமாவது, சிந்தையாவது கிடையாதல்லவா? பாலனிடத்தினின்றே இந்நிலைமையை அப்யஸித்தேன் (கற்றேன்)) 

மான அவமானங்களை அறியாதவனும், தேஹாதி (உடல் முதலியவற்றை) போஷண (வளர்க்கும்) சிந்தையும் அதற்கு வேண்டிய முயற்சியுமின்றி ஜடனுமாய் (அறிவற்றவனாய்) இருக்கின்ற பாலனும் (சிறுவனும்), ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களைக் கடந்த பரமபுருஷனை ஸாக்ஷாத்கரித்த யோகியும், ஆகிய இவ்விருவருமே சிந்தையினால் விடுபட்டு, மஹாநந்தத்தில் ஆழ்ந்திருப்பவர்கள். ஒருகால், ஓரிடத்தில் ஒரு பெண்பிள்ளை தாய், தந்தை முதலிய பந்துக்கள் அனைவரும் வெளியில் போயிருக்கையில், தன்னை வரிக்கும் பொருட்டுத் தன் வீட்டிற்குச் சிலர் வந்திருக்கக் கண்டு, தானே அவர்களைப் பூஜித்தாள். 

மன்னவனே! அப்பெண்மணி அவ்வாறு வந்தவர்களின் போஜனத்திற்காகச் சாலி என்னும் தான்யத்தை ஏகாந்தத்தில் (தனிமையில்) குத்திக் கொண்டிருக்கையில், அவள் கையிலிருந்த சங்கு வளைகள் பேரொலி செய்தன. அப்பொழுது, ஆழ்ந்த மதியுடைய (சிறந்த புத்தி உடைய) அப்பெண்மணி, அவ்வாறு நெல்லு குத்துவது கீழ்மையென்றும், “இது வந்தவர்களுக்குத் தெரியுமாயின், ஓ! இவளென்ன தானே நெல்லு குத்துகிறாளே! இவளுக்குப் பந்துக்கள் இல்லையோ? இவள் ஏழை” என்று நினைப்பார்களென்றும், ஆகையால் அச்செயல் தனக்குத் தகாதென்றும் நினைத்து, வெட்கமுற்று, கைகளிலுள்ள வளைகளை ஒவ்வொன்றாக உடைத்துக் கொண்டு வந்து, இரண்டிரண்டு வளைகளை வைத்துக் கொண்டாள்.

 அப்பால், மறுபடியும் அவள் நெல்லு குத்துகையில் அவ்விரண்டு வளைகளிலும் கோஷம் உண்டாயிற்று. பிறகு அவ்விரண்டிரண்டு வளைகளிலும் ஒவ்வொன்றை உடைத்துப் போட்டாள். பிறகு, ஒரு வளையே மிகுந்தது. அதினின்று சப்தம் உண்டாகவில்லை. 

சத்ருக்களை அழிப்பவனே! லோக தத்வங்களை (உலகியல் வழக்கை) அறிய வேண்டும் என்னும் அபிப்ராயத்துடன் உலகங்களிலுள்ள அவ்வவ்விடங்களில் சுற்றிக்கொண்டிருக்கையில், நான் அக்கன்னிகையிடத்தினின்று இந்த உபதேசத்தைக் கற்றுக் கொண்டேன். இதில் என்ன உபதேசமென்றால், சொல்லுகிறேன்; கேள். 

ஞாயிறு, 20 ஜூன், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 314

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – எட்டாவது அத்தியாயம்

(ப்ராஹ்மணன் அஜகரம் (மலைப்பாம்பு) முதலிய ஒன்பது வஸ்துக்களினிடத்தினின்று தெரிந்து கொண்ட விஷயங்களை யதுவுக்குக் கூறுதல்)

ப்ராஹ்மணன் சொல்லுகிறான்:- ராஜனே! இந்த்ரிய ஸுகங்கள் ப்ராணிகளுக்கு ஸ்வர்க்கத்திலும், நரகத்திலும் ப்ராரப்த கர்மத்தின்படி (பலன் கொடுக்க ஆரம்பித்த முன் வினையின் படி) தானே உண்டாகின்றன. (நரகத்தில் ஸுகம் உண்டோவென்றால், அங்கும் அன்ன பானாதிகளால் விளையும் ஸுகம் சிறிது உள்ளதே. ஸ்வர்க்கத்தில் விளையும் ஸுகமும், அதைப் போன்றதேயன்றி வேறன்று. பூர்வ கர்மத்தின் பலனாக எப்படி துக்கம் உண்டாகின்றதோ, அப்படியே ஸுகமும் தானே உண்டாகின்றது). ஆகையால், ஸுக, துக்கங்களிரண்டும் ப்ராரப்த கர்ம மூலம் (பலன் கொடுக்க ஆரம்பித்த முன் வினையின் படி) என்பதை அறிந்தவன், ஸுகத்திற்காக ப்ரயத்னம் (முயற்சி) செய்யலாகாது. (நாம் விரும்பாதிருப்பினும், துக்கங்கள் தானே உண்டாகின்றன அல்லவா? அவ்வாறே ஸுகமும் தானே உண்டாகக் கூடும். ஆகையால், துக்கத்தைப் போல ஸுகத்தையும் விரும்பலாகாது). 

அஜகரத்தின் (மலைப்பாம்பின்) செயல் போன்ற செயலுடையவனாகி, ஆஹாரம் நல்ல ரஸமுடையதாயினும், விரஸமாயினும் (சுவை அற்றதாயினும்), நிறைவாயினும், குறைவாயினும், தெய்வாதீனமாய்க் கிடைத்ததைப் புசிக்க வேண்டுமன்றி, அதற்காக ப்ரயத்னம் செய்யலாகாது. 

ஆஹாரம் தெய்வாதீனமாய்க் கிடைக்காது போமாயின், அப்பொழுது அஜகரம் போல் ஆஹாரம் கிடைப்பதற்குத் தடையான பாபத்தை அனுபவித்துக் கொண்டு ஆஹாரமில்லாமலே அதற்காக ஒரு முயற்சியும் செய்யாமலே பல நாட்களாயினும், பேசாமல் படுத்திருக்க வேண்டும். 

இந்த்ரிய (புலன்களின்) பலம், மனோ (மனதின்) பலம், தேஹ (உடலின்) பலம் இவை அமைந்த தேஹம் (உடல்) உடையவனாயினும், இஹலோக (இந்த உலக) போகங்களைப் பற்றின முயற்சி எதுவும் செய்யாமல், பேசாமலே படுத்திருக்க வேண்டும். வேலை செய்வதற்குரிய இந்த்ரியங்கள் (புலன்கள்) அமைந்தவனாயினும், நித்ரையின்றி (உறக்கம் இன்றி) தத்வங்களின் (ஜீவாத்மா, பரமாத்மா பற்றிய) ஆராய்ச்சியில் மனவூக்கமுற்று, தேஹ ஸுகத்தை மனத்திலும் விரும்பலாகாது. இனி, அதற்காக யத்தனித்தல் (முயற்சி செய்தல்) ஆகாது என்பதைப்பற்றிச் சொல்ல வேண்டுமோ?

முனியாயிருப்பவன், அசையாமல் நிலை நின்ற ஜலமுடைய ஸமுத்ரம் போல், வெளியில் தெளிந்தும், உள்ளே கம்பீரனும் இத்தகையனென்று நிச்சயித்துச் சொல்லவும், இவனென்ன ஒரு மனுஷ்யனாவென்று அலக்ஷயம் செய்யவும் (ஒதுக்கவும்), கலக்கவும் முடியாமல், கரையற்றிருக்க வேண்டும். ஸமுத்ரம் வர்ஷா (மழைக்) காலத்தில் நதிகள் வந்து விழுகையால் வெள்ளம் நிறைந்திருப்பினும், கரையைக் கடந்து போகிறதில்லை; வெயில் காலத்தில் அந்த வெள்ளம் இல்லாமற் போயினும், உலர்ந்து போவதுமில்லை. அவ்வாறே ஸ்ரீமந்நாராயணனையே எல்லாவிதத்திலும் முக்யமாகப்பற்றின முனிவன், காமங்கள் (ஆசைகள்) நிறைந்திருப்பின், ஸந்தோஷம் அடைவதும், அவை இல்லாதிருப்பின் வருத்தமுறுவதும் செய்யலாகாது. 

விட்டில் பூச்சி விளக்கொளியின் வர்ணத்தைப் பார்த்துத் தின்பண்டமென்று மயங்கி, அதில் விழுந்து மாண்டு போவது போல், இந்த்ரியங்களை அடக்கியாளமாட்டாத புருஷன், பகவானுடைய மாயையைப் போல் மதிமயங்கச் செய்யும் தன்மையுள்ள மடந்தையைக் கண்டு, அவளுடைய விலாஸங்களால் (கண்ணோக்கங்களால்) மனம்பறியுண்டு, நரகத்தில் விழுகிறான். 

சனி, 19 ஜூன், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 313

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – ஏழாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன், உத்தவனுக்கு ஆத்மஜ்ஞானம் ஸித்திப்பதற்காக, அவதூத வ்ருத்தாந்தத்தில் சொன்ன குருக்களில் தான் முதலிய எட்டுப்பேர்களைக் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- மஹாபாகனே! (மிகுந்த பாக்யமுடையவனே!) “நீ இந்தக் குலத்தை முடித்துவிட்டு, இவ்வுலகத்தைத் துறக்கப் போகின்றாய்” என்று யாது மொழிந்தனையோ, அது நான் செய்ய நினைத்திருப்பதுவே. 

ப்ரஹ்ம தேவனும், ருத்ரனும் மற்றுமுள்ள லோகபாலர்களும் (உலகைப் பாதுகாக்கும் ப்ரபுக்களும்), நான் இவ்வுலகத்தைத் துறந்து, என் வாஸஸ்தானமான (இருப்பிடமான) வைகுண்ட லோகம் போய்ச் சேர்ந்து, அங்கு நித்ய வாஸம் செய்வதை விரும்புகிறார்கள். நான் ப்ரஹ்மதேவனால் வேண்டப்பட்டு, என்னுடைய அம்சமாகிய பலராமனுடன் இங்கு எதற்காக அவதரித்தேனோ, அத்தகைய தேவ கார்யத்தை முழுவதும் செய்து முடித்து விட்டேன். இந்த யாதவ குலம் ப்ராஹ்மண சாபத்தினாலேயே நன்கு தஹிக்கப்பட்டாற் (எரிக்கப்பட்டது) போலவே ஆய்விட்டது; மற்றும், இனி விரைவிலேயே ஒன்றோடொன்று கலஹம் உண்டாகப் பெற்று, முழுவதும் அழியப்போகின்றது. இது நிச்சயம். 

இன்றைக்கு ஏழாவது நாளில், ஸமுத்ரம் இந்தப் பட்டணத்தை மூழ்கடிக்கப் போகின்றது. நான் எப்பொழுது இவ்வுலகத்தை விட்டுப் போவேனோ, அப்பொழுதே இவ்வுலகம் சீக்ரத்தில் மங்களங்கள் எவையுமின்றியதாய் விடும்; கலியுகம் வந்து மூடிக்கொள்ளும். 

மங்கள ஸ்வபாவனே (நற்குணத்தோனே)! ஆகையால், நானில்லாத இவ்வுலகத்தில் நீ வஸிக்க வேண்டாம். இவ்வுலகத்தில் ஜனங்கள் எல்லாரும் நான் போனவுடனே, கலியுகம் வருகையில் அதர்மத்தில் (அறம் அற்றதில்) ருசியுடையவராய் விடுவார்கள். ஆகையால் நீ இங்கு வஸிக்க வேண்டாம். “ஆனால் என்ன செய்யலாம்? எங்குப் போகலாம்?” என்றால், சொல்லுகிறேன், கேள். 

ஸமஸ்தமான சப்தாதி விஷயங்களில் விருப்பத்தையும், பந்துக்களிடத்திலுள்ள ஸ்னேஹத்தையும் துறந்து, ஸர்வேச்வரனாகிய என்னிடத்தில் நிலை நிறுத்தி, எல்லாம் ப்ரஹ்மாத்மகம் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள் அனைத்தும் பகவானான ஸ்ரீமந்நாராயணனை ஆத்மாவாக உடையவை; இவை அனைத்தும் அவனுக்கு சரீரம் – அதாவது பகவானான ஸ்ரீமந்நாராயணனால் தாங்கப்பட்டு, நியமிக்கப்பட்டு, அவனுக்கே சேஷமாய் (அடிமையாய், உடைமையாய்) இருப்பன) என்று அனுஸந்திக்கையாகிற (எண்ணுகிற) ஸம த்ருஷ்டி (சம நோக்கு) உடையவனாகி பூமியைச் சுற்றிக்கொண்டிருப்பாயாக. மனம், வாக்கு, கண், காது இவை முதலிய இந்திரியங்களால் எதை எதை அறிகிறோமோ, அதெல்லாம் நச்வரம் (அழியக்கூடியவை); மாயையின் குணங்களுக்கு உட்பட்ட மனத்தினின்று உண்டானதே. ப்ரக்ருதியின் குணமான ஸத்வாதிகளுக்கு உட்பட்ட மனமுடையவர்களுக்கே அந்தச் சப்தாதி விஷய ஸுகம் ரஸிக்குமன்றி, பரிசுத்தமான மனமுடையவர்களுக்கு அது ரஸிக்காது. 

ஸர்வாந்தராத்மாவும் (எல்லாவற்றையும் உள் நின்று நியமிப்பவனும்), ஸர்வ சரீரகனுமாகிய (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள் அனைத்தையும் தனக்கு சரீரமாக உடைய - அதாவது பகவானான ஸ்ரீமந்நாராயணனால் தாங்கப்பட்டு, நியமிக்கப்பட்டு, அவனுக்கே சேஷமாய் (அடிமையாய், உடைமையாய்) இருப்பன) என்னிடத்தில் மனத்தைச் செலுத்தாதவனுக்குப் பற்பலவாறான வஸ்துக்களைப் பற்றின அறிவு உண்டாகும். அது ப்ரமமேயன்றி (மனக்கலக்கமே அன்றி), உண்மையான அறிவன்று. (பரமபுருஷன் எல்லாவற்றிலும் உட்புகுந்து எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டிருக்கிறானாகையால், எல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமே (பகவானே) என்னும் அறிவே உண்மையான அறிவாமன்றி, அந்தந்த வஸ்துவை வெவ்வேறாக நினைப்பது உண்மையான அறிவாகாது. அது ப்ராந்தியேயாம் (மனக்குழப்பமே). 

ஸர்வாந்தராத்மாவான (எல்லாவற்றிற்கும் ஆத்மாவான) என்னிடத்தில் மனத்தைச் செலுத்துகிறவனுக்கு எல்லாம் ப்ரஹ்மாத்மகம் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள் அனைத்தும் பகவானான ஸ்ரீமந்நாராயணனை ஆத்மாவாக உடையவை; இவை அனைத்தும் அவனுக்கு சரீரம் – அதாவது பகவானான ஸ்ரீமந்நாராயணனால் தாங்கப்பட்டு, நியமிக்கப்பட்டு, அவனுக்கே சேஷமாய் (அடிமையாய், உடைமையாய்) இருப்பன) என்று ஒருவாறாகவே தோற்றுமன்றி, வெவ்வேறாகத் தோற்றாது. அதுவே உண்மையான அறிவு). 

எவனுக்கு அந்த ப்ரமம் (மனக்கலக்கம்) தொடர்ந்து கொண்டிருக்கின்றதோ, அவன் புண்ய பாபங்களின் பலனான ஸுக துக்கங்களுக்கிடமாவான். எவனுக்குக் கர்மம் என்றும், அகர்மம் என்றும், விகர்மம் என்றும் பேத (வேறான) புத்தி உண்டாகின்றதோ, அவனுடைய புத்திக்கு ஸுகதுக்கங்கள் விஷயமாகின்றன. (கர்மமாவது, அவச்யம் அனுஷ்டிக்க வேண்டிய நித்ய, நைமித்திகரூப கர்மம். அகர்மமாவது இதைச் செய்யலாகாதென்று சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப்பட்ட (விலக்கப்பட்ட) கர்மம். விகர்மமாவது பற்பல பலன்களைக் குறித்து விதிக்கப்பட்ட காம்ய (பலனைக் குறித்துச் செய்யும்) கர்மம்.) 

வஸ்துக்கள் ப்ரஹ்மாத்மகங்கள் ஆகாமல் ஸ்வதந்த்ரங்கள் (பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள்) என்றும், தேஹமே ஆத்மா (இந்த உடலே ஆத்மா) என்றும் ப்ரமித்த (தவறான எண்ணம் – மனக்கலக்கம் உடைய) மூடன், விதி (செய்) நிஷேதாதி (செய்யாதே) ரூபமான சாஸ்த்ரத்திற்கு உட்பட்டவனாவான். அவன் அந்த சாஸ்த்ர விதிகளைத் தொடர்ந்து நடப்பானாயின் ஸுகத்தையும், அவற்றைக் கடந்து நடப்பானாயின் துக்கத்தையும், அடைவான். 

வியாழன், 17 ஜூன், 2021

குரு பரம்பரை வைபவம் - 11 - கோமடம் மாதவாச்சார்யார்

மணம் புரிய மானிடரை மனதாலும் நினையேன்..!


பெரியாழ்வார், திருப்பல்லாண்டின் சாரமான விஷயத்தை வல்லபதேவ பாண்டியனுக்கு உபதேசித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு புறப்பட்டார். பொற்கிழியிலுள்ள பெரும் பணத்தைக் கொண்டு வடபெருங்கோயிலுடையானுக்கு திருப்பணிகளை செய்வித்தார். தான் ஏற்கனவே செய்து வந்த திருநந்தவன கைங்கர்யத்தை தொடர்ந்து செய்பவராக, தினமும் எம்பெருமானுக்கு மாலை கட்டி சமர்ப்பித்து வந்தார். இச்சமயத்தில் கிருஷ்ணாவதார விஷயங்கள் முழுவதையும் ‘பெரியாழ்வார் திருமொழி’களாகப் பாடி பரவசப்பட்டார். அதிலும் கிருஷ்ணனின் வினோத விளையாட்டுகளை யசோதையின் பாவனையில் ஒன்றுவிடாமல் தனக்குள் அனுபவித்தார். இவ்வாறு, பிரபந்தங்களை வெளியிட்டு, தானே பாடி மகிழ்ந்த பெரியாழ்வார், மதுரைக்கு அருகேயுள்ள திருமாலிருஞ்சோலை என்கிற திவ்ய தேசத்தை அடைந்து அங்கிருந்தே பெருமாளின் திருநாட்டுக்கு எழுந்தருளினார். 


இச்சமயத்தில் ஒரு விளக்கம் தர வேண்டியிருக்கிறது. பெரியாழ்வாரும் ஆண்டாளும் வாழ்ந்த ஊராகிய ஸ்ரீவில்லிபுத்தூரை தற்சமயம் திருவில்லிபுத்தூர் என வழங்கி வருகின்றனர். 

ஸ்ரீ என்ற தாயாரின் பெயராய், அவள் உறையுமிடமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது. ஒருவர் பெயருக்கு முன்னால் மரியாதைக் குறியீடாக ‘திரு’ சேர்த்துக் கொள்வதுபோல அல்ல இது. 

ஸ்ரீ என்கிற மகாலட்சுமி உறையுமிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். தமிழில் திருமகள் என்றால் மகாலட்சுமிதான்; அப்படியானால் திருமகள்வில்லிப்புத்தூர் என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்! அதனால் ஸ்ரீவில்லிபுத்தூரை திருவில்லிபுத்தூர் என்று சொல்வது சரியல்ல என்பது என் தாழ்மையான அபிப்ராயம். 


தபஸ்விகளும் அந்தணர்களும் நிறைந்த ஊராகிய ஸ்ரீவில்லிபுத்தூர் சோலைகளால் சூழ்ந்திருந்தது. வண்டுகள் பூக்களை மொய்த்து, தேனை உறிஞ்சிய களிப்பின் மிகுதியால் ‘ஹரீ....’ என்றே திருமால் நாமத்தை ரீங்காரம் செய்துகொண்டு உல்லாசமாகப் பறந்தன. கழனிகள் தோறும் மீன்கள், ‘கயல் உகள’ என்று சொல்லும்படி செருக்குற்று துள்ளித் துள்ளி விளையாடின. வேத விற்பன்னர்கள் செய்யும் யாகத்திலிருந்து கமழும் புகை விண்ணை நிறைத்தது. அங்கு எழுந்தருளியுள்ள பகவானின் கருணைப் பார்வை எல்லோர் மேலும் விழ, நீண்ட ஆயுளுடன் பக்தர்கள் வாழ்ந்தனர். எங்கு நோக்கிலும் மந்த மாருதம் வீசியது. காலத்தில் நல்ல மழை பொழிந்து ஊரையே செழிப்புள்ளதாக மாற்றியது. சிறுவர், சிறுமியரும் மணலில் கோபுரம் கட்டியும் தெப்பம் கட்டியும் பக்தி விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு சத்சங்கமாக இருந்து பக்தியை ஊட்டி வளர்த்தனர்.


இப்படி வளமையான ஸ்ரீவில்லிபுத்தூரில், பெரியாழ்வார் வாழ்ந்த காலத்தில், அவருடைய நாற்பவதாவது வயதில், துளசி நந்தவனத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த காலத்தில், ‘நள’ என்கிற வருஷத்தில் (கலி பிறந்து தொண்ணூற்றேழு வருடங்கள் கழிந்தபின்) ஆடி மாதம், 6ம் தேதியன்று வளர்பிறை பூரம் நட்சத்திரம், சதுர்த்தியில், செவ்வாய்க்கிழமையன்று, அர்ய மாலை தேவதையாகக் கொண்ட அழகிய நன்னாளில், பகவானின் மூன்று தேவியரில் ஒருவரான நீளா தேவி அம்சமாக பூமிப் பிராட்டியிடம் ஸ்ரீகோதாதேவி என்கிற ஸ்ரீஆண்டாள் அவதரித்தாள். கண்ணபிரான் அவதரித்த காலத்தில் நீளாதேவியின் அம்சமாகத் தோன்றியவள் ஸ்ரீராதை; தெற்கு தேசத்தில், பாண்டிய நாட்டில், ஸ்ரீ கோதை.

வெள்ளி, 11 ஜூன், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 312

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – ஆறாவது அத்தியாயம்

(ப்ரஹ்மாதி தேவதைகள் வந்து பரமபதத்திற்கு எழுந்தருளலாம் என்று விண்ணப்பம் செய்ய, உத்தவன் ஸ்ரீகிருஷ்ணனைப் பிரியமுடியாமல் வருந்தி, விண்ணப்பம் செய்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, ப்ரஹ்மதேவன் தவப்பெருக்கினால் திகழ்கின்ற மரீசி முதலிய ப்ரஜாபதிகளாலும் (ப்ரஹ்மவால் உண்டாக்கப்பட்ட ப்ரபுக்கள்), ஸனகர், ஸனந்தனர் முதலிய புதல்வர்களாலும் சூழப்பட்டு, த்வாரகைக்கு வந்தான். பகவானுடைய அனுக்ரஹத்தினால், பூத பவ்யங்களுக்கு (நடந்தவைகளுக்கும், நடக்கப் போகிறவைகளுக்கும்) ப்ரபுவாயிருக்கையாகிற அதிகாரம் பெற்ற ருத்ரனும், பூத கணங்களால் சூழப்பட்டு, த்வாரகைக்கு வந்தான். மற்றும், தேவதைகளோடு கூட மஹானுபாவனான தேவேந்த்ரனும், த்வாதச (12) ஆதித்யர்களும், அஷ்ட (8) வசுக்களும், அச்வினி தேவதைகளும் (தேவ வைத்யர்கள்), அங்கிரஸ ரிஷிகளும், ஏகாதச (11) ருத்ரர்களும், விச்வேதேவர்களும், ஸத்யர்களும், கந்தர்வர்களும், அப்ஸர ஸ்த்ரீகளும், நாகர்களும், ஸித்தர்களும், சாரணர்களும், குஹ்யகர்களும், ரிஷிகளும், பித்ருக்களும், வித்யாதரர்களும், கின்னரர்களும் ஆகிய அனைவரும் ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்க்க விரும்பி த்வாரகைக்கு வந்தார்கள். 

மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், எந்த உருவத்துடன் கூடி ஜகத்திற்கெல்லாம் மனோஹரனாகி (மனதைக் கவர்ந்து இழுப்பவனாய்) ஸமஸ்த லோகங்களிலுமுள்ள பாபங்களை எல்லாம் போக்கவல்ல தன் புகழை எங்கும் பரவச் செய்தானோ, அத்தகைய உருவத்துடன் கூடி, எல்லா ஸம்ருத்திகளும் (வளமும்) நிறைந்து விளங்குகின்ற அந்த த்வாரகையில், அற்புதமான காட்சியுடன் வீற்றிருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனை ப்ரஹ்மாதி தேவதைகள் அனைவரும் எவ்வளவு காணிலும் போதுமென்னும் த்ருப்தி உண்டாகப் பெறாத கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

அவர்கள் ஸ்வர்க்கத்தின் உத்யானத்தில் (தோட்டத்தில்) உண்டான புஷ்பங்களை அந்த ஸ்ரீக்ருஷ்ணன் மேல் பெய்து, அவனை மறைத்து, ஆச்சர்யமான பதங்களும் (சொற்களும்), பொருள்களும் அமைந்த உரைகளால் இவ்வாறு துதித்தார்கள்.

தேவதைகள் சொல்லுகிறார்கள்:- நாதனே! நாங்கள் புத்தி, இந்திரியங்கள், ப்ராணன்கள், மனம், வாக்கு ஆகிய இவற்றுடன் உன் பாதார விந்தத்தை வணங்குகிறோம். கர்மமாகிற (புண்ய, பாபம் என்கிற) உறுதியான பாசத்தினின்று (கட்டிலிருந்து) விடுபட விரும்புகிறவர்கள், பக்தியுடன் தங்கள் ஹ்ருதய கமலத்தினிடையில் உன் பாதார விந்தத்தை த்யானிக்கிறார்களல்லவா? (அத்தகைய உன் பாதார விந்தத்தை நாங்கள் இப்பொழுது மாம்ஸ (ஊனக்) கண்களால் ஸாக்ஷாத்கரித்து (நேராகப் பார்த்து), மூன்று கரணங்களாலும் (மனது, சொல், உடலால்) வணங்கினோம். சேரக் கூடாத இது எங்களுக்குச் சேர்ந்தது; எங்கள் பாக்யமே). 

பிறரால் இத்தகையதென்று சிந்திக்கவும் முடியாத ஸ்தூல (பெயர், உருவங்களுடன் கூடிய, கண்ணுக்குப் புலப்படக்கூடிய) சேதனா சேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இந்த ஜகத்தை (உலகை) எல்லாம் நீ ஸத்வாதி (ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற) குண மாயையினால் (ஆச்சர்ய சக்தியால்) உன்னிடத்தில் படைப்பதும், காப்பதும், அழிப்பதும் செய்கின்றாய். அவ்வாறு செய்யும் பொழுது, ஸத்வாதி குணங்களை அதிஷ்டானம் செய்து கொண்டு (நியமித்துக் கொண்டு) நடத்துகின்றாயன்றி ப்ராக்ருதர்களைப் (ஸாதாரண மனிதர்களைப்) போல் அக்குணங்களுக்கு உட்பட்டு நடத்துகிறதில்லை. ஒருவராலும் பரிபவிக்க (அவமதிக்க) முடியாத ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவங்களை (குனங்களை) உடையவனாகையால், அஜிதனென்னும் பெயர் பெற்றவனே! நீ இந்த ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹார (அழித்தல்) ரூபமான கார்யங்களைச் செய்யினும், அவற்றால் நீ தீண்டப்படுகிறதில்லை. (அச்செயல்கள் உனக்கு லீலா (விளையாட்டு) ரூபங்களேயன்றிப் புண்ய, பாப, ரூப கர்மங்கள் அன்றாகையால், கர்மவச்யத்வமாவது (புண்ய, பாப வினைகட்கு உட்படுதல்), அதனால் வருகிற துக்கங்களுக்கு இடமாயிருக்கையாவது உனக்குக் கிடையாது). 

ஏனென்றால், நீ உனக்கு அஸாதாரணமாயிருப்பதும், அளவற்றதுமாகிய ஆநந்தத்தில் ஆழ்ந்திருப்பவன்; ஜீவர்களைப் போல விஷய ஸுகங்களில் தாழ்ந்தவனல்லை. சப்தாதி விஷய ஸுகங்களில் கால் தாழ்ந்தவர்கள், அந்த ஸுகத்திற்காகச் செய்யும் கர்மங்கள், புண்ய, பாப ரூபங்களாயிருக்குமாகையால், அவர்கள் அவற்றைப் பற்றின ஸுக, துக்காதிகளுக்கு இடமாகிறார்கள். நீ அத்தகையனல்லையாகையால், உனக்குக் கர்ம வச்யத்வமாவது (புண்ய, பாப வினைகட்கு உட்படுதலாவது), அதைப் பற்றின ஸுக, துக்கங்களாவது கிடையாது.

வியாழன், 10 ஜூன், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 311

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – ஐந்தாவது அத்தியாயம்

(பகவானிடத்தில் பக்தியில்லாதவர்களின் கதி எத்தகையதென்றும், யுகங்கள் தோறும் பகவானை எவ்வண்ணம் ஆராதிக்க வேண்டுமென்றும் அரசன் வினவினதற்கு, சமஸன் மறுமொழி கூறுதல்.)

மன்னவன் சொல்லுகிறான்:- ஆத்ம வித்தமர்களே! (ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவர்களில் சிறந்தவர்களே!) இவ்வுலகத்தில் ப்ராணிகள் தன்னைப்பற்றினவர்களின் ஸம்ஸார பந்தத்தைப் (பிறப்பு, உலகியல் விஷயங்களில் ஈடுபாடு, இறப்பு என்கிற மீண்டும் மீண்டும் வருகிற தாபங்களைப்) போக்கவல்ல மஹானுபாவனாகிய பகவானைப் பெரும்பாலும் பணிகிறதில்லை. இந்திரியங்களை வெல்ல முடியாமையால், விருப்பங்கள் ஓயப்பெறாமல், அவற்றைப் பெறுதற்காகவே அலைகின்றார்கள். அவர்களுடைய நிஷ்டை (திடமான நிலை, ச்ரத்தை) எத்தகையது? (அவர்களுக்கு எதில் ஆஸக்தி (ஈடுபாடு)? எது ப்ராப்யம் (அடையப்படக்கூடியது)? அதற்குக் காரணம் என்ன? இதை விவரித்து மொழிவீர்களாக.)

சமஸன் சொல்லுகிறார்:- நான்முகனைச் சரீரமாகவுடைய பகவானுடைய முகம், புஜம், துடை, பாதம் இவற்றினின்று ப்ராஹ்மணர், க்ஷத்ரியர், வைச்யர், நான்காமவர் என்கிற நான்கு வர்ணத்தவர்களும், ஸத்வாதி குணங்களோடு கூடி ப்ரஹ்மசர்யாதி ஆச்ரமங்களுடன் (ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ) தனித்தனியே உண்டானார்கள். நான்கு வர்ணங்களாகவும், நான்கு ஆச்ரமங்களாகவும் பிரிந்திருக்கிற இந்த ப்ராணிகளுக்குள் தங்களுக்கு ஸாக்ஷாத் (நேரிடையான) காரணனும், ஸர்வ நியாமகனுமாகிய (எல்லோரையும் நியமிப்பவனுமான) பரம புருஷனை எவர்கள் பணிகிறதில்லையோ, மற்றும் அவமதிக்கிறார்களோ, (மற்ற தேவதைகளோடு ஸமமாக நினைக்கிறார்களோ), அவர்கள் வர்ணாச்ரமங்களினின்று நழுவி நரகத்தில் விழுகிறார்கள். (ஈச்வரன் தன்னைப் பணிந்து உஜ்ஜீவிக்கும்படி ஆத்மாக்களுக்குக் கரண (இந்த்ரியங்கள்), களேபரங்களை (சரீரம், உடல்) அளிக்க, அவற்றைக் கொண்டு அவனைப் பணியாமல், அவனை அவமதிக்கிறவர்கள் க்ருதக்னர்களே (செய்நன்றி மறந்தவர்களே) அல்லவா? 

பரம புருஷன், தங்களுக்குக் காரணனென்றும், அவன் ஸர்வ நியாமகன் (எல்லோரையும் நியமிப்பவன்) என்றும், ஸர்வ ஸ்மாத்பரன் (எல்லோரையும் விட மேலானவன்) என்றும், அறிவு நேரப் பெற்றும் அவனைப் பணியாதவர்கள் க்ருதக்னர்களே (செய்நன்றி மறந்தவர்களே) ஆகையால், அவர்கள் நரகத்தில் விழுகிறார்களென்பது ஸத்யமே (உண்மையே). அத்தகைய அறிவில்லாத கேவல மூடர்களின் கதி என்னென்றால், சொல்லுகிறேன்). 

பகவானுடைய கதைகளைக் கேட்பதும், அவனுடைய குணங்களைக் கீர்த்தனம் செய்வதுமாகிய இவற்றிற்கு வெகு தூரத்திலிருக்கிற ஸ்த்ரீகளும், சூத்ராதிகளும், உங்களைப்போன்ற பாகவதர்களால் தயை (கருணை) செய்யத் தகுந்தவர்களே. (இவர்களும் பாகவதர்களின் க்ருபைக்கு விஷயமாகி, ஸம்ஸார பந்தத்தினின்று (பிறப்பு, உலகியல் விஷயங்களில் ஈடுபாடு, இறப்பு என்கிற மீண்டும் மீண்டும் வருகிற கட்டிலிருந்து) விடுபடுகிறார்கள்.) 

ப்ராஹ்மணர், க்ஷத்ரியர், வைச்யர் என்கிற மூன்று வர்ணத்தவர்களும் வேதாதிகாரம் (வேதம் ஓதுவதற்குத் தகுதி) உடையவர்களாகையால், தத்வ ஜ்ஞானம் (ஜீவாத்ம, பரமாத்மாவைப் பற்றிய அறிவைப்) பெற்று, பகவானுடைய பாதார விந்தங்களை அடைவதற்கு உரியவர்களாயிருந்தும், வேதங்களில் சொல்லுகிற அர்த்த வாதங்களில் (புகழ்ந்து கூறப்பட்டவற்றில்) மனம் சென்று, ஸ்வர்க்கம் முதலிய பலன்களை விரும்பி, அவற்றிற்காக முயற்சி செய்கிறார்களன்றி, பகவானுடைய பாதார விந்தங்களைப் பணிகிறதில்லை. 

ஸம்ஸார பந்தத்திற்கு (பிறப்பு, உலகியல் விஷயங்களில் ஈடுபாடு, இறப்பு என்கிற மீண்டும் மீண்டும் வருகிற கட்டிற்கு) இடமாகாத கர்மமே கர்மம் என்கிற கர்மத்தின் உண்மையை அறியாதவர்களும், அதையறிந்த பெரியோர்களைப் பணிந்து கேட்டுத் தெரிந்துகொள்வதற்குரிய வணக்கமற்றவர்களும், மூர்க்கர்களுமாயிருந்தும் தங்களைப் பெரிய பண்டிதர்களாக நினைத்துக்கொண்டு செவிக்கு இனியவைகளான அர்த்த வாத வாக்யங்களால் (புகழ்ந்து கூறப்பட்ட சொற்களால்) மதி மயங்கி “அப்ஸர மடந்தையர்களோடு கலந்து விளையாடப் போகிறோம்” என்னும் இவை முதலிய சாடு வாக்யங்களைப் (சாடுவாக்யம் - இனிய வசனங்கள், பொருளில்லாமற் போயினும் செவிக்கினிமையாயிருக்கை) பிதற்றுகிறார்கள்; ரஜோ குணத்தினால் கோரமான அபிசாராதி (பிறர்க்குத் தீங்கு இழைக்கும்) ஸங்கல்பமுடையவர்களும், ஸ்வர்க்காதி போகங்களில் விருப்பமுற்றவர்களும், ஸர்ப்பம் போல் கோபமுறும் தன்மையர்களும், துரஹங்காரிகளுமாகி (வீணான கர்வம் உடையவர்களுமாகி) அச்சுதனுக்கு அன்பர்களான பெரியோர்களைப் பரிஹஸிக்கின்றார்கள் (கேலி செய்கின்றார்கள்). 

அத்தகைய மூடர்கள், ஸ்த்ரீகளைப் (பெண்களைப்) பணியும் தன்மையர்களாய் இருப்பார்களன்றி பெரியோர்களை அடுத்துப் பணியமாட்டார்கள்; ஆணும் பெண்ணுமாய்க் கலந்தனுபவிக்கும் ஸுகத்தையே முக்யமாகவுடைய இல்லற வாழ்க்கையில் இருந்து, ஒருவர்க்கொருவர் ஆசீர்வாதங்களைச் செய்கிறார்கள்; லோபத்தினால் (கஞ்சத்தனத்தால்) அன்னதானம், வஸ்த்ரதானம் இவை செய்யாமலும், தக்ஷிணைகள் கொடாமலும், கேவலம் ஜம்பத்திற்காக (தற்பெருமைக்காக) யாகம் செய்கிறார்கள்; ஜீவனத்திற்காகப் (வயிற்றுப் பிழைப்புக்காக) பசுக்களை ஹிம்ஸிக்கிறார்கள்; அது ஹிம்ஸையென்று சிறிதும் ஆராய்ந்தறியமாட்டார்கள். 

புதன், 9 ஜூன், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 310

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – நான்காவது அத்தியாயம்

(விதேஹ மன்னவன் பகவானுடைய அவதார வ்ருத்தாந்தங்களைப் பற்றி வினவுதலும், த்ரமிலன் அதற்கு மறுமொழி கூறுதலும்)

மன்னவன் சொல்லுகிறான்:- பகவான் தன் ஸங்கல்பத்தினால் எந்தெந்த அவதாரங்களால் எந்தெந்த கார்யங்களைச் செய்தானோ, செய்கிறானோ, செய்யப்போகிறானோ, அந்தந்த அவதாரங்களையும், அந்தந்த அவதார சேஷ்டிதங்களையும் (செயல்களையும்) எமக்குச் சொல்வீர்களாக.

த்ரமிலன் சொல்லுகிறார்:- அளவிட முடியாத ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவங்களை (குணங்களை) உடைய பகவானுடைய குணங்களை எவன் கணக்கெண்ண விரும்புகிறானோ, அவன் பால (குழந்தை) புத்தி உடையவனேயாவான். ஏனென்றால், நெடுங்காலமாக மிகவும் ப்ரயத்னப்பட்டுப் (முயற்சி செய்து) பூமியிலுள்ள தூள்களை எண்ணினாலும், எண்ணக்கூடும். பலவகைப்பட்ட விசித்ர சக்திகள் அமைந்த பகவானுடைய குணங்களையோ என்றால், ஒருகாலும் எண்ண முடியாது. 

ஆதிதேவனாகிய நாராயணன், தான் படைத்த ப்ருதிவி முதலிய பஞ்சபூதங்களால் ப்ரஹ்மாண்டமாகிற பட்டணத்தைப் படைத்து, அதில் தன்னுடைய அம்சத்தினால் ப்ரவேசித்து அப்பொழுது புருஷனென்னும் பெயர் பெற்றான். இதை வைராஜ புருஷ அவதாரம் என்பர்கள். இதுவே அவதாரங்களுக்குள் முதலவதாரம்.

இந்த வைராஜ புருஷன், மூன்று லோகங்களும் பாதம் முதலிய அவயவங்களாகப் பெற்ற தேஹம் (திருமேனி) உடையவன். இவனுடைய இந்த்ரியங்களால் வ்யஷ்டி (தனித்தனி) ஜீவர்களென்றும், ஸமஷ்டி (மொத்தமான) ஜீவர்களென்றும் வழங்கி வருகிற இருவகைப்பட்ட ஜீவர்களுடைய இருவகை இந்த்ரியங்களும் உண்டாயின. இவனுடைய ஜ்ஞானம், இந்த்ரியங்களின் மூலமாய் அறிய வேண்டிய நிர்ப்பந்தமின்றி, எல்லாவற்றையும் ஸ்வயமாகவே ஸாக்ஷாத்கரிக்கும் (அறியும்) திறமையுடையது. இவனுடைய ச்வாஸ வாயுவினிடத்தினின்றே ப்ராணிகளின் பலமென்கிற தாரண (தாங்கும்) ஸாமர்த்யமும் (திறனும்), ஓஜஸ் என்கிற ப்ரவ்ருத்தி (செயலில் ஈடுபடும்) ஸாமர்த்யமும் (திறமையும்), ஈஹை (விருப்பம், முயற்சி) என்கிற சேஷ்டையும் (செயலும்) உண்டாகின்றன. அத்தகையனான இவ்வைராஜ புருஷனே, ஸத்வம், ரஜஸ்ஸு, தமஸ்ஸென்கிற ப்ரக்ருதியின் குணங்களால் ஜகத்தின் (உலகின்) ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) ஆதிகர்த்தாவாய் இருக்கின்றான் (உபாதான காரணமும் (மண் குடத்திற்கு மண்போல் material cause) நிமித்த காரணமுமாய் (மண் குடத்திற்கு குயவன் போல் efficient cause) இருக்கின்றான்). 

பகவான், ஜகத்தைப் (உலகத்தைப்) படைக்கும் பொருட்டு முதலில் ரஜோகுணத்துடன் கூடி ப்ரஹ்ம தேவனாயிருந்தான் (ரஜோகுணம் தலையெடுத்த ப்ரஹ்ம தேவனென்னும் ஜீவனிடத்தில் அனுப்ரவேசித்து (உள் நுழைந்து) அவனைச் சரீரமாகக் கொண்டு, அவனே என்னும்படி அமைந்திருந்தான்.) ஜகத்தின் (உலகத்தின்) ஸம்ஹாரத்திற்காகத் (அழிவிற்காகத்) தமோ குணத்துடன் கூடி ருத்ரனாயிருந்தான். (ஸம்ஹார காலத்தில் தமோ குணம் தலையெடுத்த ருத்ரனென்னும் ஜீவனிடத்தில் அனுப்ரவேசித்து (உள் நுழைந்து), அவனைச் சரீரமாகக் கொண்டு, அவனே என்னும்படி அமைந்திருந்தான்.) ஜகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, ஸத்வகுணத்துடன் கூடி, தானே விஷ்ணுவாய் அவதரித்தான். அப்பரமபுருஷன், யஜ்ஞங்களுக்கு நிர்வாஹகன் (நியமிப்பவன்). அவ்விஷ்ணு, ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களென்கிற மூன்று வர்ணத்தவர்களின் தர்மங்களுக்கு அணை போன்றிருந்தான். இவ்வாறு அவன் ஜகத்திற்கு உபாதான காரணமாய் (மண் குடத்திற்கு மண்போல் material cause) இருக்கிறான்; அத்தகைய பரமபுருஷனிடத்தினின்று ப்ரஜைகளின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்கள் (அழித்தல்) உண்டாகின்றன. மற்றும், அப்பரமபுருஷன் தர்மனுடைய பார்யையும், தக்ஷருடைய புதல்வியுமாகிய மூர்த்தியென்பவளிடத்தில் நரனென்றும், நாராயணனென்றும் இரண்டு உருவங்களுடன் அவதரித்து, ஸம்ஸார பந்தத்திற்கு ஹேதுவான ஸமஸ்த கர்மங்களின் நிவ்ருத்தியை விளைவிப்பதாகிய ஜ்ஞான யோகத்தை நாரதாதிகளுக்கு உபதேசித்தான். 

திங்கள், 7 ஜூன், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 309

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – மூன்றாவது அத்தியாயம்

(பகவானுடைய மாயையின் ஸ்வரூபத்தையும், அதைக் கடக்கும் வழியையும், ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும், பாகவதர் அனுஷ்டிக்க வேண்டிய கர்ம ஸ்வரூபத்தையும் நிமி மன்னவனுக்கு பரதனின் தம்பிகளான கவி, ஹரி, அந்தரிக்ஷன், ப்ரபுத்தன், பிப்பலாயனன், ஆவிர்ஹோத்ரன், த்ரமிலன், சமஸன், கரபாஜனன் ஆகியோர் கூறுதல்)

நிமி மன்னவன் சொல்லுகிறான்:- ஸர்வஸ்மாத்பரனும் (ஸர்வஸ்மாத் - எல்லாவற்றிலும், பரனும் – மேலானவனும்) ஸர்வ நியாமகனுமாகிய (எல்லாவற்றையும் நியமிப்பவனுமாகிய) ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மாயை மாயாவிகளையும் மதி மயங்கச் செய்யும் திறமையுடையது. அத்தகைய மாயையின் ஸ்வரூபத்தையும், அதன் கார்யத்தையும் அறிய விரும்புகிறேன். மஹானுபாவர்களாகிய நீங்கள் அதை எனக்குச் சொல்வீர்களாக. (நீங்கள் மாயையின் ஸ்வரூபத்தை முன்னமே சுருக்கமாகச் சொன்னீர்கள். ஆயினும் அதை விசதமாகத் (விரிவாகத்) தெரிந்து கொள்ள விரும்புகிறேன்). ஸம்ஸார தாபங்களால் (உலகியல் வாழ்வின் துன்பங்களால்) மிகவும் தபிக்கப்பட்டவனும் (கஷ்டப்பட்டவனும்), மரணம் அடையும் தன்மையனுமாகிய நான், பகவானுடைய கதைகளாகிற அம்ருதத்தை உட்கொண்டிருப்பதும், அந்த ஸம்ஸார தாபங்களைப் (உலகியல் வாழ்வின் துன்பங்களைப்) போக்கும் மருந்துமாகிய உங்கள் வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருப்பினும், அதில் த்ருப்தி உண்டாகப் பெறாதிருக்கின்றேன்.

அந்தரிக்ஷன் சொல்லுகிறான்:- ஸ்தூல சேதனா சேதன ரூபமான (பெயர் உருவங்களுடன் கூடிய அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்தாய் (உலகமாய்) விரிய வேண்டுமென்று விரும்பின பகவான், எதைக் கொண்டு இந்த ஜகத்தை எல்லாம் படைத்தானோ, அத்தகையதான இந்தப் பகவானுடைய மாயை ஸத்வாதி குணங்களின் ஸம்பந்தமற்றதும், சரீர ஸம்பந்தமின்றிப் பரிசுத்தமாயிருப்பதும், ஸ்வயம்ப்ரகாசமுமாகிய ஜீவனுடைய ஸ்வரூபத்தில் சரீர ஸம்பந்தம், ஸத்வாதி குணங்களுக்கு உட்பட்டிருக்கை, தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்/மனக்கலக்கம்) முதலிய விபரீதங்களை விளைக்கும் தன்மையது. (பகவானுடைய மாயை, ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களின் ஸமுதாய (கூட்டு) ரூபமும், தேஹம், இந்திரியம் முதலியவைகளாய்ப் பரிணமிக்கும் தன்மையதும், ஜடமுமாயிருக்கும். சுத்த ஸ்வரூபனான ஜீவாத்மாவினிடத்தில், சரீர ஸம்பந்தம், தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்/மனக்கலக்கம்) முதலிய விபரீதங்களை விளைக்கை அந்த மாயையின் கார்யமே. மற்றும், மஹத்து முதல் ப்ருதிவி வரையிலுள்ள ஜகத்தும் அதன் கார்யமே). ஜாக்ரத் அவஸ்தையில் (விழித்துக் கொண்டிருக்கும் பொழுது) மனத்தின் ஸம்பந்தமுடைய இந்திரியங்களால் ஆத்மாவல்லாததும், நிலையற்றதுமாகிய தேஹம் முதலிய வஸ்துக்களில் ஆத்மாவென்றும் நிலைநின்றது என்றும் இது முதலிய ப்ரமம் (மனக்கலக்கம்) உண்டாகின்றது. 

ஸ்வப்னாவஸ்தையில் (கனவு காணும் பொழுது) வெளி இந்திரியங்களோடு ஸம்பந்தப்படாத அந்தக் கரணத்தினால் ப்ரமம் (மனக்கலக்கம்) உண்டாகின்றது. அதுவும் ஸ்வப்னத்தில் (கனவில்) காண்கிற நிலையற்றதான தேஹாதி வஸ்துக்களில் நிலை நின்றதென்னும் இது முதலிய ப்ரமமே (மனக்கலக்கமே). பாஹ்யமான (வெளியில் தெரியும்) ப்ராஹ்மணத்வம் (ப்ரஹ்மணன், க்ஷத்ரியன், வைச்யன், நான்காம் வர்ணத்தவன்) முதலிய தர்மங்களைப் பற்றின அறிவும், ஆந்தரமான (உள் மனதில் ஏற்படும்) ஸுகம், துக்கம் முதலியவற்றைப் பற்றின அறிவுமின்றி அவற்றிற்கு மூலமான கர்ம வாஸனை ஒன்று மாத்ரமே மிகுந்திருக்கும் தசை (நிலை) ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் அவஸ்தை (நிலை) என்று கூறப்படும். அதுவும் ப்ரக்ருதியின் கார்யமே. (ஜீவனுக்கு பாஹ்ய (வெளி) இந்திரியங்கள், அந்தர் (உள்) இந்த்ரியமான மனம், அவற்றிற்கு ஆதாரமான தேஹம், அதனால் ஏற்பட்ட ஜாக்ரத் (விழிப்பு) முதலிய அவஸ்தைகள் (நிலைகள்) ஆகிய இவையெல்லாம் மாயை எனப்படுகிற ப்ரக்ருதியின் கார்யமாய் உண்டாயிருப்பவை.) 

ஜீவனுக்கு ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் இம்மூன்று அவஸ்தைகளில் (நிலைகளில்) ஏதேனுமொன்று மாறாதிருக்கும். ஆனால் இம்மூன்று அவஸ்தைகளும் (நிலைகளும்) ஜீவனுக்கு எப்பொழுது நிவர்த்திக்கும் (விலகும்) என்றால் ப்ரக்ருதியின் பரிணாமமான சரீரம் விட்டு முக்த (மோட்ச) அவஸ்தை (நிலை) எப்பொழுது நேரிடுமோ, அப்பொழுதுதான் இம்மூன்று அவஸ்தைகளும் (நிலைகளும்) நிவர்த்திக்கும் (விலகும்). தேஹ ஸம்பந்தத்தினால் விளையும் அவஸ்தைகள் (நிலைகள்) மூன்றும் தீண்டப்பெறாத முக்தியே (மோட்சமே) நான்காம் அவஸ்தை (நிலை). (ஜாக்ரத் (விழிப்பு) முதலிய அவஸ்தைகள் (நிலைகள்) மூன்றும் ப்ராக்ருத (முக்குணக்களின் சேர்க்கையான) சரீர (உடல்) ஸம்பந்தத்தினால் விளைபவையாகி, ஒளபாதிகங்கள் (ஒரு காரணத்தை முன்னிட்டு ஏற்படுபவை) ஆகையால் நிலையற்றவை. அவற்றை நிலை நின்றவையென்று நினைப்பது ப்ரமமே (மனக்கலக்கமே)). 

ஜீவ ஸ்வரூபம் (ஜீவாத்மாவின் இயற்கையான தன்மை), ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலியவை தீண்டப்பெறாமல் பரிசுத்தமாயிருப்பது; ஜாக்ரத் (விழிப்பு) முதலிய அவஸ்தா (நிலைகளின்) பேதங்களின்றி (வேறுபாடின்றி) என்றும் ஒருவாறாயிருப்பது; ஜ்ஞானத்தையே வடிவாக உடையது. ஆயினும், அந்த ஜீவஸ்வரூபம் (ஜீவாத்மாவின் இயற்கையான தன்மை) ப்ரக்ருதியின் பரிணாமமான தேஹ (உடல்) ஸம்பந்தத்தைப் பெற்று, ஸ்வப்னத்தில் (கனவில்) காண்கிற யானை, குதிரை முதலியவை நிலையற்றவையாயினும், நிலை நின்றவையாகத் தோன்றுவது போல், இந்த்ரியம் முதலியவைகளால் ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்னும் மூன்று அவஸ்தைகளை (நிலைகளை) உடையது போல் தோன்றுகிறதும், தேஹம் (உடல்), இந்த்ரியம் (புலன்கள்), மனம் இவற்றின் ஸம்பந்தம் உண்டாகப் பெறுவதும் ஆகிய இதெல்லாம் ஜ்ஞான ஸ்வரூபனான ஜீவனுடைய அனாதியான புண்ய பாபரூபமான கர்மத்தின் பலனாய் விளைகின்றது. மாயையின் கார்யமான ஜாக்ரத் (விழிப்பு) முதலிய இம்மூன்று அவஸ்தைகளும் (நிலைகளும்), முக்தி (மோட்ச) அவஸ்தையில் (நிலையில்) தொடராமையாலும், அதற்கு முன்பும் ஓர் அவஸ்தையில் (நிலையில்) மற்றோரு அவஸ்தை (நிலை) தொடராமையாலும், ஜீவனுடைய அனாதியான புண்ய, பாப ரூப கர்மத்தின் பலனாக ஏற்பட்டவையேயன்றி அவனுக்கு இயற்கையில் ஏற்பட்டவையன்று.

ஸ்வப்னத்தில் (கனவில்) அனுபவிக்கிற ஸுகம், நிலையற்றதாகி கர்மத்தின் பலனாக எவ்வாறு விளைகின்றதோ, அவ்வாறே அநித்யங்களான (நிலையற்றதான) இவ்வவஸ்தைகளும் (இந்நிலைகளும்) கர்ம பலன்களே. இவ்வாறு இவ்வுண்மையை ஆராய்ந்தறிவானாயின், அற்ப (மிகவும் குறைந்த) ஸுகங்களுக்காகச் (இன்பங்களுக்காகச்) செய்யும் வ்யாபாரத்தினின்று மீளுவான். ஸர்வ காரணன் (எல்லாவற்றிற்கும் மூல காரணம்) ஆகையால் தான் முன்னமே ஸித்தமாயிருக்கின்ற பரமபுருஷன், ஸமஸ்த பூதங்களுக்கும் (எல்லா ஜீவர்களுக்கும்) அந்தராத்மாவாகி, ப்ரத்யக்ஷாதி ப்ரமாண ஸித்தங்களான (நேராகப் பார்த்து அறியப்படக்கூடியவையான) இந்த ப்ருதிவி முதலிய மஹாபூதங்களைக்கொண்டு தனக்குச் சரீர பூதர்களான ஜீவாத்மாக்களின் புருஷார்த்த ஸித்திக்காக (அவர்கள் அடைய விரும்பும் பொருட்களை அடைவதற்காக) மேன்மையும், தாழ்மையுமான பல பூதங்களைப் படைத்தான். (ஜீவாத்மாக்கள் தன்னை ஆராதிப்பதற்கு உபயோகப்படக் கூடியவைகளான கரண (புலன்கள்) களேபரங்களைப் (சரீரம், உடல்) பெற்று, தன்னை ஆராதித்து, மோக்ஷ ரூபமான சிறந்த புருஷார்த்தத்தைப் பெறவேண்டும் என்று பரமபுருஷன் ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணினான் (உலகைப் படைத்தான்). (ஆனால் கரண களேபரங்களைப் (புலன்களையும், உடலையும்) பெற்ற ஜீவாத்மாக்கள் அனைவரும் பகவானை ஆராதித்து மோக்ஷத்தை ஏன் பெறவில்லை என்றால், சொல்லுகிறேன்.) 

செவ்வாய், 1 ஜூன், 2021

குரு பரம்பரை வைபவம் - 10 - கோமடம் மாதவாச்சார்யார்

பகவானுக்கே பல்லாண்டு பாடியவர்


ஸ்ரீவில்லிபுத்தூர், இரண்டு ஆழ்வாரைப் பெற்றுத் தந்த, வடபெருங்கோயிலுடையான் வாசம் செய்யும் ஊர். வடமதுரைக்குச் சமானமான ஊர் என ஆண்டாள் பிராட்டியால் கொண்டாடப்பட்ட ஊர். இந்த ஊரின் பெயரைக் கேட்கும் அத்தருணமே மனம் நெகிழ்ந்து விடுகிறது.


‘‘அறவாழி அந்தணர்க் கல்லால் பிற வாழி நீத்தல் அரிது’’ என திருக்குறளார் போற்றியபடி, பல அந்தணர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து பற்பல யாகங்கள் செய்து மணம் கமழ் ஸ்ரீவில்லிபுத்தூராக மணக்கச் செய்தனர்.


ஸ்ரீமத் பாகவதத்தில் இவ்வூர் பற்றிய சிறிய செய்தி உண்டு. அதாவது பற்பல நதிக்கரைகளில் பலபல மகான்கள் தோன்றுவார்கள் என்று விவரிக்கும் 11ம் ஸ்கந்தம், ‘க்ருதமாலா’ என்ற ஒரு நதியைப்பற்றி கூறி, ‘இந்த நதிக்கரையில் மகான்கள் அவதரிப்பர்’ என்று தகவல் கூறப்பட்டுள்ளது. ‘க்ருதமாலா’ என்பது வைகை ஆறு; இந்த ஆற்றங்கரையில்தான் சுவாமி பெரியாழ்வாரும் ஆண்டாளும் அவதரித்து பூவுலகை மேன்மையுறச் செய்தவர்கள்.


பகவானை பொதுவாக ‘த்ரியுகன்’ எனப் பகர்வர், பெரியோர். த்ரியுகன் என்றால் மூன்று யுகங்களில் மட்டும் மனிதனாக அவதரிப்பான் என்று பொருள். அப்படியெனில், கலியுகத்தில் தெய்வ அவதாரங்களே இல்லையா என்ற கேள்வி எழலாம். சுகாச்சாரியார், கலியுகத்தில் ‘பகவத் யஷஸா ஸமம் பாகவத’ என்கிறார். அதாவது பகவானுக்குச் சமமான புகழையுடைய மகான்கள் அவதரிப்பார்கள் என்று சுவைப்படக் கூறினார். 


அந்தக் கூற்றுப்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவர்கள்தான் பெரியாழ்வாரும் ஆண்டாளும்.

இந்த ஊருக்கு மற்றுமொரு பெருமையும் உண்டு. இந்த ஊரின் கோபுரம் மிக பிரமாண்டமானது, நேர்த்தியானது. அதனாலேயே தமிழக அரசின் இலச்சினையாக விளங்குகிறது. மேலும் இவ்வூரில் செய்யக்கூடிய அமுதுப் பிரசாதம் (பால்கோவா) உலகப் பிரசித்தி வாய்ந்தது. சில சமயம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்யும்போது மறக்காமல் இந்த பிரசாதத்தை வாங்கிச் செல்வர். அதனால் வெளிநாடுகளுக்கும், சிறிய அளவில் ஏற்றுமதி ஆவதை கேள்விப்படுகிறோம்.


இவ்வளவு பெருமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த மகான் சுவாமி பெரியாழ்வாரின் அவதாரம் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டு. அது:


‘‘மிதுனே ஸ்வாதிஜம் விஷ்ணோ ரதாம்சம் தந்விந: புரே

ப்ரபத்யே ச்வசுரம் விஷ்ணோ: விஷ்ணுசித்தம் புரச்சிகம்’’.


அதாவது கலியுகத்தில் 46 வருடங்கள் கடந்தபின் ‘க்ரோதன’ என்ற வருடத்தில், ஆனிமாதம் 9ம் தேதியன்று சுக்லபட்ச ஏகாதசியும் ஞாயிற்றுக்கிழமையும் கூடிய சுபதினத்தில் ‘ஸ்வாதி நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுவின் வாகனமான கருடனின் அம்சமாய், பூர்வசிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராம்மண குலத்தில் அவதரித்தவரான, ரங்கநாதனுக்கு மாமனாரான, விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வாரை சரணடைகிறேன்’ என்பது மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருள்.


இவரைப் பற்றி திவ்யஸுரி சரிதம் என்கிற வடமொழி நூல், வாயுவை தேவதையாகக் கொண்ட ஸ்வாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் என்று வர்ணிக்கிறது. அப்படியானால், மயர்வற மதிநலம் அருளப் பெற்ற இவ்வாழ்வார், வாயுவேகத்தில் பற்பல பகவத் கல்யாண குணங்களை அருளவல்லவர் என்பது விளங்குகிறது.