சனி, 18 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 20 - திருப்பூர் கிருஷ்ணன்

நல்ல மனம் வாழ்க!

புதிய புடவை... இதுவரை அதை ஒரே ஒருமுறை தான் கமலாபாய் கட்டிக் கொண்டிருக்கிறாள். இன்று மாலை கிருஷ்ணர் கோயிலுக்குச் செல்லும்போது இந்தப் புடவையைத்தான் கட்டிக் கொண்டு செல்லவேண்டும். சற்று விலை மதிப்புடையது. 

துக்காராமின் மனைவி நல்ல சேலைகளையும் கட்டுவதுண்டு என்பதைக் கோயிலுக்கு வருபவர்கள் உணரட்டுமே!

அதிக அழுக்கில்லை என்றாலும், புடவையைத் தண்ணீரில் நனைத்துத் துவைத்தாள். 

புடவைக்கு நோகுமோ என்பதுபோல, துவைக்கும் கல்லில் லேசாக அடித்துத் துவைக்கும் தன் செயலை எண்ணி, அவளுக்கே சிரிப்பு வந்தது. புதுப்புடவை என்பதால் கைகளுக்கே புடவை மேல் பாசம் வந்துவிட்டதோ! 

யாரோ ஒருவர் - துக்காராமின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகளின் ரசிகர் - அன்பளிப்பாகக் கொடுத்த புடவை! இல்லாவிட்டால் துக்காராம் சம்பாத்தியத்தில் விலை மதிப்புள்ள புடவையை வாங்க முடியுமா என்ன! 

சம்பாத்தியம்! அந்த வார்த்தையை எண்ணியதும் கமலாபாயின் உதட்டில் கசந்த புன்முறுவல் பிறந்தது. உத்யோகம் புருஷ லட்சணமாமே? துக்காராம் எந்த வேலைக்கும் போய் எதுவும் சம்பாதிக்கவில்லை. 

கீர்த்தனைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் அடுப்பில் சோறு வேகுமா! வயிறு என்று ஒன்று இருக்கிறதே!

தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லி, சோளக்கொல்லை ஒன்றைக் காவல் காக்கும் பணியைச் சிறிதுகாலம் முன் துக்காராமுக்கு அவள்தான் வாங்கிக் கொடுத்தாள். கிடைத்த வேலையைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவேண்டாமா! பரண்மேல் ஏறி பஜனைப் பாடல்களைப் பாடினால் பறவைகள் ஆனந்தமாகத் தாளம் போட்டா கேட்கும்! அத்தனை சோளத்தையும் அவை கொத்திச் சென்றுவிட்டன. சோளக் கொல்லையின் உரிமையாளர் அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டார்.

எப்போதும் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைதான்! அவளுக்கும் கிருஷ்ண பக்தி உண்டுதான். என்றாலும், இப்படியா! தெய்வம் என்றைக்குக் கண் திறக்கும்? இவள் வீட்டின் வறுமை என்று மறையும்? 

துக்காராமிடம் இன்னொரு சிக்கல். உயர்ஜாதி அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ளாமல் கீழ் ஜாதியினரையும் சமமாக வைத்து அவர்கள் முன்பாகவும் கீர்த்தனை பாடுவார். இதை எந்த உயர் ஜாதிக்காரர் ஒப்புக்கொள்வார்? 

ஒரு பெருமூச்சுடன் புடவையைப் பிழிந்து கொல்லைப்புறக் கொடியில் உலர்த்தினாள் கமலாபாய். காற்றில் அரைமணியில் புடவை உலர்ந்துவிடும். துக்காராமைத் தேடியவாறு வாசலுக்கு வந்தாள். 

வழக்கம்போல் திண்ணையில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார் அவர். பலர் அந்த தேவகானத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் குரலின் இனிமையும், பக்தியின் ஆழமும் கமலாபாயையும் ஒரு உருக்கு உருக்கத்தான் செய்தது. 

சம்பாதிக்காவிட்டால் போகிறது... ஆனால், ஜாதி ஆசாரம் இல்லாமல் இருக்கிறாரே? கூடியிருந்த ரசிகர்களில் பலர் கீழ்ஜாதிக்காரர்கள் தான். என்ன இப்படிச் செய்கிறீர்களே என்றால், எல்லோரும் ஒரே மனித ஜாதிதான்! என்று நகைப்பார் அவர். 

பார்க்க லட்சணமான ஒரு பெண் சிறிது தள்ளி நின்று பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கிழிசல் புடவை சிரமப்பட்டு அவள் மானத்தை மறைத்துக் கொண்டிருந்தது. 

"ஏன் அம்மா தள்ளி நிற்கிறாய்? இங்கே வந்து உட்காரேன்!'' என்று அன்போடு அவளை உபசரித்தார் துக்காராம். கமலாபாய் அந்தக் கிழிந்த புடவை கட்டியிருக்கும் கீழ்ஜாதிப் பெண்ணை நன்றாக சிம்மாசனம் போட்டு உட்கார வையுங்கள்! என்று எரிச்சலோடு நினைத்துக் கொண்டு கழுத்தை நொடித்தவாறு, "இதிலெல்லாம் எனக்கொன்றும் பங்கில்லை" என்பதுபோல விறுவிறுவென்று வீட்டுக்குள் சென்றாள். 

திண்ணைக் கச்சேரி தொடர்ந்தது. "ஆகா! என்ன கானம்! எல்லோரும் உருகினார்கள். கீழ்ஜாதிப் பெண்ணும் உருகினாள். ஜாதி வேறுபாடெல்லாம் கண்ணனிடம் கிடையாது. எல்லோரும் கண்ணனைப் பக்தி செய்து வைகுண்டம் செல்ல வழிகாணுங்கள்!'' என்று அறிவுறுத்திவிட்டு அன்றைய பக்தியிசையை முடித்துக் கொண்டார் துக்காராம். ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். கீழ்ஜாதிப் பெண் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தாள். 

"ஏன் அம்மா? நீ புறப்படவில்லையா?'' 

"எல்லோரும் போகட்டும் சாமி. நான் கடைசியில் போகிறேன். முதலிலேயே போனால் என் பின்னால் வருபவர்கள் என் கிழிந்த புடவையை விமர்சித்துக் கொண்டே வருவார்கள்''.

"உன்னிடம் வேறு புடவை இல்லையா அம்மா?''

"நிறையப் புடவை இருந்தது சாமி. ஆனால், யாரோ ஒரு பெண், மானத்தைக் காப்பாற்றப் புடவை தா என்று இக்கட்டான ஒரு சந்தர்ப்பத்தில் என் கணவரிடம் கேட்டாள். என் கணவரோ தர்மப்பிரபு. என் புடவைகள் எல்லாவற்றையும் வாரி வழங்கிவிட்டார். எனக்கு மிஞ்சியது இந்தக் கிழிசல் புடவை தான்! என் கணவர் சின்ன வயதில் விளையாட்டாகப் புடவை திருடுவாராம். பெண்கள் குளிக்கும் இடங்களில் புடவையைத் திருடி வைத்துக் கொண்டு, அவர்கள் கெஞ்சினால் தான் தருவாராம். அப்படிப் பெண்கள் மனத்தை நோகவைத்தார் இல்லையா? அதனால் அவர் பெண்டாட்டிக்குக் கிழிசல் சேலைதான் என்று விதித்திருக்கிறது போலிருக்கிறது!''

துக்காராம் அவளது வீட்டுக் கதைகளையெல்லாம் கேட்டுக்கொண்டார். "ஒரு நிமிஷம் இரு!" என்றவர் கொல்லைப்புறம் சென்றார். கமலாபாய் உலர்த்தியிருந்த சேலையைக் கொடியிலிருந்து உருவினார். வாசலுக்கு வந்தார்.

"அம்மா! இனி இந்தச் சேலையைக் கட்டிக்கொள். இதில் கிழிசல் இருக்காது. பெண்கள் கிழிசல் சேலையை உடுத்தக் கூடாது''.

சேலையை அவள் கையில் கொடுத்தார். அவரையே கனிவுடன் பார்த்த அவள், "நீங்கள் எனக்குப் புடவை கொடுத்தது பற்றி உங்கள் மனைவி கோபித்துக்கொள்ள மாட்டாரா?'' என்று கேட்டாள். 

"அவள் கோபம் எத்தனை நேரம்? பிறகு சமாதானமாகி விடுவாள். அவளிடம் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறது. உனக்குத்தான் இது இன்னும் அவசியம்''.

துக்காராமின் பதிலைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே அவள் புடவையோடு விடை பெற்றாள். 

மாலைநேரம். கணவரோடு கோயிலுக்குப் புறப்பட்ட கமலாபாய் உலர்த்தியிருந்த புடவையை உடுத்திக் கொள்ளலாம் என்று கொல்லைப்புறம் போய்க் கொடியைப் பார்த்தாள். புடவையைக் காணோம்! கோபத்தோடு துக்காராமிடம் வந்தாள். 

"புடவை எங்கே?''

"கிழிந்த புடவையோடு ஒருபெண் என் பாட்டைக் கேட்க வந்தாள். அவளிடம் அந்தப் புடவையைக் கொடுத்தேன் கமலா! உனக்குத்தான் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறதே?''

குழந்தைபோல் பேசும் துக்காராமைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. "சோற்றுக்கே திண்டாட்டம். ஆனால், இவரோ வள்ளல்! ஒரு சோளக்கொல்லை காவல்கார வேலையைக் கூடச் செய்யத் தெரியாத மனிதர்!" கண்ணில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அவள் வீட்டைப் பூட்டிக்கொண்டு கணவரோடு புறப்பட்டாள்.

"அழாதே கமலா! நமக்குத் தேவையானவற்றைக் கண்ணன் கொடுப்பான்!''

கணவரிடம் ஏதொன்றும் பேசாமல் பெருமூச்சோடு கோயிலை நோக்கி நடந்தாள். கர்ப்பகிரகம் நோக்கிச் சென்றார்கள் இருவரும். "என் கணவரை ஏன் இப்படிப் படைத்தாய்?" என்ற கேள்வியுடன் கண்மூடிக் கண்ணீர் வழிய நின்றாள் கமலா. 

இடுப்பில் கைவைத்து நின்றிருந்த பாண்டுரங்கனும் ருக்மிணியும் நகைத்துக் கொண்டார்கள். கமலாபாய் கண்திறந்து ருக்மிணி சிலையைப் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது. ருக்மிணியின் சிலை கட்டிக் கொண்டிருந்தது அவள் கொடியில் உலர்த்தியிருந்த அதே புடவை தான். கண்ணைக் கசக்கிக் கொண்டு திரும்பத் திரும்பப் பார்த்தாள். சந்தேகமே இல்லை. அவள் புடவையே தான் அது! 

"அப்படியானால் கீழ்ஜாதிப் பெண்ணாக வந்தது என் தாயார் ருக்மிணியா? தேவி. என்னை மன்னித்துவிடு. என் கணவரது மகிமை தெரியாமல் ஏதேதோ பேசிவிட்டேன். வறுமை என்னை அப்படியெல்லாம் பேசச் செய்துவிட்டது அம்மா! கீழ்ஜாதிப் பெண்கள் உள்பட எல்லாப் பெண்களுமே உன் வடிவம் என்று என் கணவர் சொல்லும் உண்மையை இன்று உணர்ந்துகொண்டேன்". 

கிருஷ்ணரையும் ருக்மிணியையும் விழுந்து வணங்கிய அவள், "வாருங்கள் வீட்டுக்குப் போகலாம்!'' என்று கணவரோடு பக்திக் கண்ணீர் வழிய வீடுநோக்கி நடந்தாள்.

வீட்டு வாசலில் ஒரு மாட்டுவண்டி நின்றிருந்தது. அதிலிருந்த இறங்கிய ஒருவர் அவர்களை நமஸ்கரித்தார். பிறகு கமலாபாயிடம் சொன்னார்:

"மறந்துவிட்டீர்களா அம்மா? நான்தான் என் சோளக்கொல்லையைக் காவல் காக்கிற வேலையை இவருக்குக் கொடுத்தேன். வேலையை இவர் சரியாகச் செய்யவில்லை என்று இவரை வேலையை விட்டு நீக்கினேன். ஆனால் என்ன ஆச்சரியம்! என் சோளக்கொல்லை முன் எப்போதும் இல்லாத அளவு பத்துமடங்கு விளைச்சல் கண்டிருக்கிறது. இவர் சாதாரண ஆள் இல்லை அம்மா! அதற்காக அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தனை தானியங்களையும் கொஞ்சம் தங்க நாணயங்களையும் காணிக்கையாக அளிக்க வந்தேன்!''

கமலாபாய் திகைத்துப் போனாள்.

"கமலா! நாம் கொடுத்த புடவையைக் கட்டிக்கொண்டாளே ருக்மிணி. அவளைக் கட்டிக்கொண்டவன் புடவைக்கு விலையாக என்னவெல்லாம் அனுப்பியிருக்கிறான் பார்த்தாயா?'' என்று துக்காராம் சிரித்தபோது கமலாபாயின் ஆனந்தமான சிரிப்பும் சேர்ந்துகொண்டது. 

நன்றி - தினமலர் செப்டம்பர் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக