செவ்வாய், 30 ஜூன், 2020

கண்ணன் கதைகள் - 3 - திருப்பூர் கிருஷ்ணன்

அந்த மூன்று கத்திகள்

அர்ச்சுனனின் மனம் பாரதப் போரில் வெற்றி பெற்ற மமதையில் திளைத்துக் கொண்டிருந்தது.

"கண்ணன் எனக்குத் தேரோட்டினான். தெய்வம் என் அருகே இதோ இப்போது கூட அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னை விடக் கண்ணன் மேல் அதிக பக்தி செலுத்துபவர் யார் இருக்கமுடியும்?...."

"அப்படி நீயாக முடிவுசெய்து விட முடியுமா? உன்னை விட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்ன?'' கண்ணன் கேட்டான்.

அர்ச்சுனன் திடுக்கிட்டான். 

"என் மனத்தில் ஓடுகிற எந்தச் சிறு நினைவையும் உடனே படித்து விடுகிறானே கண்ணன்!"

"நீ என்னை மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் அர்ச்சுனா! உன் மனத்திலேயே இருக்கும் எனக்கு உன் நினைவுகளைக் கண்டுகொள்வது சிரமமா?'' கண்ணன் கலகலவென்று நகைத்தான். கண்ணன் மேல் தன்னளவு பக்தி செலுத்துபவர் யாருமில்லை என்ற ஆணவம், தொடர்ந்து அர்ச்சுனன் மனத்தில் பால் ஏடு போல் மிதந்து கொண்டிருந்தது.

உள்ளத்தில் எழும் ஆணவ அழுக்கைப் போக்க பகவானை பக்தி செய்ய வேண்டும். பகவானை பக்தி செய்வது குறித்தே, ஆணவம் எழுமானால் அந்த அழுக்கை எப்படி அகற்றுவது? அர்ச்சுனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க வேண்டியது தான். கண்ணன் ஒரு முடிவு செய்தான். 

"அர்ச்சுனா! என் பக்தர்களில் சிலரை நேசிக்கிறேன். சிலரை மதிக்கிறேன். நான் மதிக்கும் பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகிலேயே வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா!''

"அதற்கென்ன போகலாம். சில பக்தர்களை நேசிப்பதாகவும் சில பக்தர்களை மதிப்பதாகவும் சொன்னாயே? அந்த இரு பக்தர்களிடையே என்ன வேறுபாடு?''

"சுயநலம் சார்ந்து பிரார்த்திப்பவர்களும் என் பக்தர்கள் தான். அவர்கள் வேண்டியதை அருள்கிறேன். அவர்களை நேசிக்கிறேன். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் பக்தி செலுத்துபவர்களும் அபூர்வமாகச் சிலர் இருக்கிறார்கள். அவர்களை நேசிப்பது மட்டுமல்ல, மதிக்கவும் செய்கிறேன். சுயநலமற்ற பக்தர்களால் தான் பகவானுக்கே ஆற்றல் கூடுகிறது. நான் மதிக்கும் மூதாட்டியான பிங்கலையை நாம் சந்திப்பதில் வேறொரு நோக்கமும் இருக்கிறது''.

"என்ன நோக்கம்?'' 

"கர்ணன் நாகாஸ்திரத்தை உன்மேல் பிரயோகம் செய்தபோது உன் உயிரைக் கர்ணனிடமிருந்து காப்பாற்றி விட்டேன். அதுபோலவே பிங்கலையிடமிருந்தும் உன் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது''.

"பிங்கலை ஒரு மூதாட்டி. வீராதி வீரனான எனக்கு அவளிடமிருந்து எப்படி இறப்பு வர முடியும்?" அர்ச்சுனன் திகைத்தான்.

கண்ணன் நகைத்தவாறே சொல்லலானான்:

"ராமாவதாரத்தில் சபரி போல், கிருஷ்ணாவதாரத்தில் எனக்கு இந்தப் பிங்கலை. போய் அவளைச் சந்திப்போம். ஆனால், இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீ தோழியாக மாறு. ஊர்வசியின் சாபத்தால் பிருஹன்னளையாக ஓராண்டு இருந்த உனக்கு பெண்ணாகச் சற்றுநேரம் வேடம் புனைவது சிரமமாக இராது!'' 

சற்று நேரத்தில் அந்த அரண்மனையிலிருந்து கண்ணனும் அர்ச்சுனனும் ஆகிய இரண்டு தோழிகள் வெளியே புறப்பட்டுச் சென்றார்கள். 

பிங்கலையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள். அவள் தான் பிங்கலை என்பதைப் பார்த்தவுடனேயே புரிந்துகொண்டான் அர்ச்சுனன். கண்ணன் பணிவாகச் சொல்லலானான்:

"தாயே! நாங்கள் அடுத்த ஊர் செல்லும் பொருட்டு நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா?'' 

"அதற்கென்ன? உள்ளே வாருங்களேன். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்தபிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாமே?''

பிங்கலை உள்ளே நடந்தாள்.

"நாங்களும் உங்கள் பூஜையில் கலந்துகொள்ள விரும்புகிறோம்,'' என்றவாறு கண்ணன் அர்ச்சுனனை இழுத்துக்கொண்டு, பிங்கலையின் பின்னே நடந்தான். 

பூஜையறையில் ஒரு பீடத்தின் முன் நின்று பிங்கலை கிருஷ்ண கிருஷ்ண என்று ஜபிக்கலானாள். பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும் சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும் பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. விழிகளில் கண்ணீர் வழிய கிருஷ்ண நாமத்தைச் சொன்ன அவள், "என் பூஜை இவ்வளவுதான், வாருங்கள், உண்பதற்கு ஏதாவது தருகிறேன்,'' என்றவாறே திரும்பினாள். கண்ணன் ஆவலோடு கேட்டான்:

"தாயே! கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே? கத்திகள் யாருடையவை?''

"என்னுடையவை தான். நாள்தோறும் கிருஷ்ண நாமத்தை ஜபித்து கத்திகளின் வலிமையை அதிகப்படுத்தி வருகிறேன். வாய்ப்புக் கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமைசெய்த என் விரோதிகளான மூவரைக் கொல்ல வேண்டுமே நான். அதன் பொருட்டுத்தான் இந்த பூஜை!''

"யார் அந்த விரோதிகள் தாயே?''

"என் பிரியமுள்ள கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்தவர்கள் வேறு யார்? குசேலன், பாஞ்சாலி, அர்ச்சுனன் மூவரும் தான். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. பாஞ்சாலிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றித் திரியும் அர்ச்சுனனைக் கொல்லத்தான் இந்தப் பெரிய கத்தி!''

அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அர்ச்சுனனைக் கடைக்கண்ணால் பார்த்த கிருஷ்ணன் மேலும் பிங்கலையிடம் கேட்கலானான்.

"அப்படி இந்த மூவரும் கண்ணனுக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே?''

"பின்னே.. குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கண்ணனுக்குக் கொடுக்கலாமா? என் கண்ணன் வெண்ணெயை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கண்ணனின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா? இந்த புத்தி கூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுப்பதாவது?''

"பாஞ்சாலி பாவம் பெண். அவள் எப்படி உங்கள் விரோதியானாள்?''

"கிருஷ்ணனிடம் புடவைகளைப் பெற்றாளே? துவாரகையில் இருக்கும் கண்ணன் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அவளுக்கு வாரி வாரிப் புடவைகளை அருளினானே? புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான் இல்லையா? புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால், புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கண்ணனுக்கு கை எவ்வளவு வலித்திருக்கும்? கண்ணனின் கைகளை வலிக்கச் செய்த பாஞ்சாலியைச் சும்மா விடுவேனா நான்?''

"அர்ச்சுனன் கண்ணனின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே? அவன் மேல் ஏன் விரோதம்?''

"அர்ச்சுனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கைவலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா? குதிரைகளின் லகானை இழுத்து இழுத்து கண்ணன் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும்? தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாமான்யமா? ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம்? என் கண்ணன் தானா அகப்பட்டான் அந்தக் கடினமான வேலையைச் செய்ய! என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ச்சுனன். அன்று பார்த்துக் கொள்கிறேன் அவனை!''

அர்ச்சுனன் முந்தானையால் பதட்டத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தான் கண்ணன். 

"தாயே! குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கண்ணனாகத்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன்''.

பிங்கலை யோசித்தாள்.

"உன் குரல் கண்ணனின் புல்லாங்குழலைப் போல் இனிமையாக இருக்கிறது,'' என்றவள் பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கிக் வீசினாள்.

பின்னர், "ஆனால் பாஞ்சாலி சுயநலம் உள்ளவள் அல்லவா? தன் மானம் காக்கத்தானே கண்ணனை வேண்டினாள்?'' என்று கேட்டாள். 

"ஆம் தாயே! பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்ததில் கண்ணன் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா? அதைக் காத்துக் கொள்ள அவள் கொலை கூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றனவே? எனவே சுயநலமே என்றாலும், மானம் காக்க வேண்டியதால் பாஞ்சாலியையும் மன்னித்து விடுங்களேன்!''

பிங்கலை சிந்தித்துவிட்டு, "நீ சொல்வது சரிதான்,'' என்றவாறே பீடத்திலிருந்த இரண்டாவது கத்தியையும் கீழே வீசினாள். 

"ஆனால், போரில் தனக்கு வெற்றி கிட்டவேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கண்ணனைத் தேரோட்டச் செய்த அர்ச்சுனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். இந்தப் பெரிய கத்தி பீடத்திலேயே இருக்கட்டும்!'' என்றாள். 

"சுயநலம் பிடித்த அர்ச்சுனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்,'' என்றான் கண்ணன்.

அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"எப்படியாவது காப்பாற்று! என்று அவன் பார்வை கண்ணனை இறைஞ்சியது. கண்ணன் நகைத்தவாறே பிங்கலையிடம் சொல்லலானான்: "அர்ச்சுனனைக் கொல்வதில் வேறு ஒரு சிக்கல் இருக்கிறது தாயே? நீங்களோ கண்ணனுக்குச் சின்னத் துன்பம் வந்தால் கூடப் பதறுகிறீர்கள். எப்படியோ அர்ச்சுனன் கண்ணன் மனதைக் கவர்ந்து விட்டான். அதனால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான்? அர்ச்சுனனை நீங்கள் கொன்றுவிட்டால், உற்ற நண்பனை இழந்து கண்ணன் வருந்துவானே? கண்ணன் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா? அதனால் போனால் போகட்டும். அர்ச்சுனனின் சுயநலத்தைப் பொருட்படுத்தாது அவனையும் மன்னித்து விடுங்கள்.

பிங்கலை யோசித்துவிட்டுச் சொன்னாள்.

"நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்தி கூட வேண்டாம். என் கண்ணன், உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால், அதுபோதும் எனக்கு. கண்ணனுக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன்."

பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள். பெண் வேடத்திலிருந்த அர்ச்சுனன், பெண்வேடத்திலிருந்த கண்ணனையும் மூதாட்டி பிங்கலையையும் கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது.

நன்றி - தினமலர் மே 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக