வெள்ளி, 16 ஏப்ரல், 2021

குரு பரம்பரை வைபவம் - 5 - கோமடம் மாதவாச்சார்யார்

இடைகழியில் சந்தித்த இனியவர்கள்


பக்தியே மனமாகவும் உடலாகவும் உடையவர்கள்தான் ஆழ்வார்கள். இவர்கள் பெருமையை சொல்லில் அடக்க முடியாது. ஆழ்வார்களின் பக்தியை ஆண்டாள்தான் எப்படியெல்லாம் அனுபவிக்கிறாள்! பேயாழ்வாரின் அருமை பெருமைகளை ஆண்டாள் இவ்வாறு விவரிக்கிறாள்:


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் 

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் 

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்


ஒருவரோடு ஒருவர் சேராமல், தனித்தனியே சஞ்சரித்துக் கொண்டிருந்த பொய்கையார், பூதத்தார், பேயார் மூவரையும் ஒன்று சேர்த்து வைத்து அவர்கள் வாயிலாக தான் பாடப்படும் அனுபவத்துக்காக ஒரு பெரும் மழையை திருக்கோவிலூரில் உருவாக்கிக் காத்திருந்தான் பகவான். பேயாழ்வாருக்கு தமிழ்த் தலைவன் என்கிற பெயரும் உண்டு. இப்போது ஆண்டாள் பாசுரத்திற்கு வருவோம். 

‘நோற்று’ என்பதில், மற்ற இரண்டு ஆழ்வார்கள் விளக்கு ஏற்றுகிற உபாயத்தைச் செய்யவே அவர் நோற்றார் என்று பொருள்படுகிறது. அதாவது அவ்விருவரும் விளக்கேற்றுவதற்காக இவர் நோற்றார் எனலாம். இன்னமும் விளக்கமாக கூறினால், இவர் நோற்ற நோன்பு எதற்கெனில், அவ்விரு ஆழ்வார்களும் விளக்கேற்ற, அந்த வெளிச்சத்தில் ‘திருக்கண்டேன்’ என பகவானின் ரூபத்தைக் கண்டு களித்துப் பாடலாமே என்பதால்தான். இப்படி இவர் இருந்த நிலையைத்தான் நோன்பு நோற்றாயோ என்று விளிக்கிறாள் ஆண்டாள். ‘சுவர்க்கம்’ என்கிற அனுபவத்தை இவர் ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று கூறி ஆனந்த கூத்தாடுகிறார். மேலும், சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய் என்கிறாள், ஆண்டாள். ‘வாசல் திறவாதார்’ என்றது பேயாழ்வாருக்கு நன்கு பொருந்தும். கனமான மழை பெய்த ஓர் இரவில், திருக்கோவிலூரில் ஒரு வீட்டு இடைகழிக்குள் புகுந்த பொய்கையார், மழையிலிருந்து தப்ப தாழிட்டுக் கொண்டார். பிறகு பூதத்தார் வந்து கதவைத் தட்ட, பொய்கையார் உள்ளிருந்து ‘ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம்’ என்று சொல்லி கதவைத் திறந்து அவருக்கு வழிவிட்டார்.


அந்த மழையின் காரணமாகவே ஒதுங்குவதற்கு வந்த பேயாழ்வாரும் இடைகழிக் கதவைத் தட்ட, உள்ளிருந்து பூதத்தார் ‘ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்’ எனக்கூறி தாள் திறந்து வழிவிட்டார். இதன் பிறகு யாரும் வந்து கதவைத் தட்டாததை, ‘வாசல் திறவாதார்’ என ஆண்டாள் தெரிவிக்கிறாள். அடுத்ததாக ‘நாற்றத்துழாய்முடி நாராயணன்’ என்கிறாள். துழாய் என்றால் துளசி. அதாவது இந்த ஆழ்வார் துழாய் விஷயமாகவே பாடியதைத் தெரிவிக்கிறாள். ‘பொன் நோய்வரை மார்பில் பூந்துழாய்’ என்றும், ‘தன்துழாய் மார்வன்’ என்றும் பாடி மகிழ்ந்ததை இங்கு நினைவுபடுத்துகிறாள். இவ்வாறு பெருமைகள் கொண்ட இந்த மூவரின் பிறவி நிலை என்ன? மூவரும் மனிதப் பிறவி போல் அல்லாமல் புஷ்பத்திலே தோன்றி, கடவுளின் கருணையாலே, சாத்வீகர்களாய் இருந்தனர். வேறு சிந்தை இல்லாமல் பகவானிடம் பக்தி செலுத்தினார்கள். ராஜஸ, தாமஸ குணங்களை அகற்றி சாத்வீகர்களாய் வாழ்ந்தனர். சுத்த ஸத்வ குணத்தில் ஒன்றி நின்றனர்.

இவர்கள் எப்பொழுதும் பகவானுக்கு அடிமைப்பட்டு, மானிடர்களைப் ‘பாட வல்லேன்’ என்றிருந்தனர். அதனால் சமய ஞானம் என்ற, பகவானின் ஞானத்தைக் கொண்டவர்களாக ஆனார்கள். ‘புலன்களைந்து பொறிகளால் ஏதமொன்று மிலாத’ என்றபடி, அன்ன, பானங்களையும் ஒதுக்கி கடவுளின் ஞானப் பாலுக்கு ஆசைப்பட்டவர்களாய் இருந்தார்கள். உலக மக்கள் போலல்லாமல் வைராக்கியம் கொண்டு, பகவானுடைய கடாட்சத்தையே எதிர்பார்த்து வாழ்க்கையை நடத்தினர். ‘நாட்டு மானிடத்தோடு எனக்கரிது’ என்கிறபடியே சம்சாரிகளை ஒதுக்கி அவர்களோடு ஒட்டாமல் வாழ்ந்தனர். காரணம் மக்களோடு பழகினால் துஷ்ட ஸங்கம், கெட்ட சகவாசம் ஏற்பட்டு விடுமே என்கிற பயம்தான். காற்று, நீர் இரண்டிலுமே தோஷம் இல்லை என்பதால், அவற்றையே ஆகாரமாக உண்டு வாழ்ந்தனர். எப்பொழுதும் தியானத்திலேயே ஈடுபட்டனர். தியானம் கலைந்த காலத்தில், எங்கும் தங்காமல் கிராமம் கிராமமாகச் சென்றார்கள். அவர்களிடம் எந்த நாட்டமும் வீடும் பணமும் இல்லாததால் சுதந்திரமாக திரிந்து வாழ்ந்தனர்.


ஆச்சரியம் என்னவெனில் மூவருமே ஒருவரையொருவர் அறியாமல் தனித்தனியே சுற்றி வந்தனர். என் ஆத்மாவே என் பக்தன்தான் என எப்பொழுதும் நினைக்கக்கூடிய ஒரு கருணையாலே இம்மூவரையும் சேர்த்து பார்க்க பகவான் ஆசைப்பட்டான். திருக்கோவிலூர் என்னும் திவ்ய தேசத்திலே இவர்களை ஒன்று சேர்த்தான். படித்தாரைப் படித்தாரே அறிவர். பக்தனை பக்தனே அறிவான் என்றபடி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, ஒரு சாதுவைக் கண்டால் மற்றொரு சாது தண்டனிட்டு கீழே விழுந்து சேவிக்கும் வழக்கப்படி ஒருவரையொருவர் சேவித்துக் கொண்டனர்.


ஒருவரையொருவர், ‘நீரார் நீரார்?’ என வினவிக் கொண்டு, சீரேறுமறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவிலூரிலே ஒரு இடைகழியிலே சந்தித்து அளவளாவினர். மூவருமே பகவத் தாசர்களாக இருக்கக் கண்டு சந்தோஷித்தனர்.


அந்த சமயத்தில் எங்கும் இருள் மண்டிக் கிடக்க, முற்றிலும் இருள் சூழ்ந்த மழைக் காலமாதலால், தனித்திருக்க, பகவான் சோதி வடிவு கொண்டு கூராராழி வெண்சங்கேந்தி, இவர்கள் நடுவே வந்து மேலும் நெருக்க, அந்த நெருக்கம் தாங்காமல் புழுக்கம் காரணமாக பாசுரம் பாடத் தொடங்கினர். ‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக...’ என்றும் ‘அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக’ என்றும் முறையே பொய்கையாரும், பூதத்தாரும் பாட, பகவான் தன் திருமேனி காட்ட, இந்த வெளிச்சத்தில் ‘திருகண்டேன், பொன்மேனி கண்டேன்’ என பேயாரும் பாட பக்தி பரவசத்தில் பகவானும் ஆனந்தக் கூத்தாட, அங்கு ஒரு ஞானமழை பொழிந்தது. 


இந்த சமயத்தில்தான் முதன் முதலாக அவர்கள் திருவாக்கில் இனிய, அமுதத் தமிழ் சுரந்தது. தாங்கள் அனுபவித்ததை சாதாரண மக்களும் அனுபவிக்க வேண்டும் என்கிற அவா மேலிட, அதன்பொருட்டு உண்டானதே முதல், இரண்டு, மூன்றாம் திருவந்தாதிகள். இதன் மூலம், பகவான் யார், எப்படிப்பட்டவர் என்பதனை தீஞ்சுவைத் தமிழில் பாடி தாங்கள் எதையெதையெல்லாம் கண்டனரோ அதை அப்படியே கொடுத்தனர். பாசுரங்களில் வேறு வேறு திவ்யதேசத்து எம்பெருமான்களும் திருமுகம் காட்ட, ஞானக் கண்ணால் உணர்ந்து அந்தந்த திவ்யதேச பகவானைப் பற்றியும் தேசத்தைப் பற்றியும் பாடி உண்மை நிலையை உலகுக்கோர்க்கு விளக்கினர். இவர்கள் சகலமும் கண்ணன், எல்லாமும் கண்ணன் என்றிருந்ததால், உணவுத் தேவையின்றியே வாழ்ந்தனர். மூவரும் மீண்டும் உலகு உய்ய ஆங்காங்கு சுற்றித் திரிந்து, அந்தராத்மாவாக இருக்கும் பகவானை அனுபவித்து உலகினில் பக்தி வளத்தைப் பரப்பி வந்தனர். 


இவர்கள் வாழ்ந்த துவாபர யுகத்தில் தோன்றிய மற்றுமொரு ஆழ்வார், திருமழிசை ஆழ்வார். இவர் அவதரித்த திவ்யதேசம் சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகில் உள்ளது. அது மிகப் பெருமை வாய்ந்தது. அங்கு அவதரித்த திருமழிசை ஆழ்வாருக்கு, பேயாழ்வார் ஆசானாகத் திகழ்ந்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த திருமழிசையார், கண்ணபிரானைப் போல ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலே ஒருத்தி மகனாய் வளர்ந்தவர். 


நன்றி - தினகரன் ஆன்மிகம் ஜூன் 2012


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக