சனி, 6 அக்டோபர், 2012

ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 8


தலையில் ரத்தம் தொடர்ந்து வழிந்தது. காயம் அதிகமாக வலித்தது. அதை சகித்துக் கொண்டு, சீனிவாசன் நீண்டதூரம் அந்தக் காட்டுக்குள் நடந்தார். அப்போது, தேவகுருவான பிரகஸ்பதி அங்கே வந்தார். சீனிவாசனை வணங்கினார். ""நாராயணா! கலியுகத்தில் மக்களைப் பாதுகாக்க தாங்கள் பூலோகம் வந்தீர்கள்! ஆனால், அந்தக் கலி, கடவுளாகிய உங்களையே விட்டு வைக்கவில்லையே! தங்கள் தலையில் ரத்தம் வழிவதைக் காண சகிக்காமல், தேவலோகத்தில் இருந்து ஓடோடி வந்தேன். எருக்கு இலையில் ஆலமரத்து பாலைக் கட்டி புண்ணிருக்கும் இடத்தில் வைத்துக் கட்டுங்கள். விரைவில் காயம் குணமாகி விடும்,'' என்று சொல்லி விடை பெற்றார். 

பாருங்களேன்! கலியுகத்தில் பரமாத்மாவே அடிவாங்கி கஷ்டப்பட்டிருக்கிறார் என்றால், சாதாரண ஜனங்களான நமக்கு ஏற்படும் கஷ்டத்தைப் பற்றி ஆச்சரியப்பட என்ன இருக்கிறது! சீனிவாசன் நடையைத் தொடர்ந்தார்.

காட்டில் ஓரிடத்தில் "ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா' என்று பாடும் குரல் கேட்டது. அது ஒரு பெண்ணின் குரல். சீனிவாசன், தன்னை யாரோ நினைத்துப் பாடுகிறார்களே என்று மகிழ்ச்சியுடன் குரல் வந்த திசை நோக்கி நடந்தார். ஒரு குடிசையில் விளக்கொன்று எரிந்து கொண்டிருக்க, ஒரு நடுத்தர வயது பெண், கிருஷ்ணகானம் இசைத்துக் கொண்டிருந்தாள். தன்னை நினைத்துப் பாடும் அந்த பக்தை யாரென்று அந்த பரமாத்மாவுக்கு தெரியாமலா இருக்கும்! ஆனால், மானிட அவதாரம் எடுத்து வந்து விட்டாரே! அதற்கேற்ற வகையில் தன் இயல்பை மாற்றிக்கொண்ட அவர், தன்னிலை மறந்து ஏதும் அறியாதவராய், ""அம்மா, அம்மா'' என்று அழைத்தார். இந்தக் குரலைக் கேட்டதும், உள்ளிருந்த அந்தப் பெண்மணிக்கு இதயத்தைப் பிசைவது போல் இருந்தது. ""ஆ... இது என் குழந்தையின் குரல் அல்லவா! துவாபராயுகத்தில் இவன் என் வயிற்றில் பிறக்காத பிள்ளையாக என் வீட்டில் வளர்ந்தானே! இவனைப் பெற்றவளை விட, என்னைத்தானே அந்த யுகத்திலும், இந்தக் கலியிலும் உலகம் கொண்டாடுகிறது! ஆ... அப்படியானால் அவன் தான் இவனா?'' அவள் வெளியே ஓடிவந்து பார்த்தாள்.

""ஆம்!அதே முகம்! அதே நீல வண்ணம், இவன் தான்! நான் வளர்த்த கண்ணன் என்னும் செல்லப்பிள்ளை இவன் தான். இவனைப் பார்த்ததும், அந்தப் பிறவியில் நடந்த அனைத்தும் முழுமையாக என் நினைவுக்கு வந்து விட்டது. கடந்த துவாபரயுகத்தில் இவன் மதுராபுரியில் பிறந்தான். இவனது தந்தை இவனைக் கூடையில் சுமந்து கொண்டு, யமுனை நதியைக் கடந்து மறுகரையில் இருந்த ஆயர்பாடியில் வசித்த என்னிடம் ஒப்படைத்தார். இவன் நாராயணனின் அவதாரமென்று சொன்னார். இவன் நீலவண்ணத்தில் இருந்ததால், இவனுக்கு "கிருஷ்ணா' என்று பெயர் சூட்டினேன். "கிருஷ்' என்றால் "நீலமேகம்'. அந்த கிருஷ்ணனின் குழந்தைப் பருவ லீலைகளை நான் அனுபவித்தேன்,'' என்று நினைத்தவள் அவரை உள்ளே அழைத்தாள். ""மகனே வா! உன்னைத் தாலாட்டி எத்தனை நாளாகிறது? பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்து இப்போது உன்னைப் பார்க்கிறேன். நான் யார் என உனக்குத் தெரிகிறதா? ஐயோ! இது என்ன ரத்தம்?'' என அலறினாள்.

சீனிவாசனாகிய நாராயணன் சகலமும் அறிந்தவர் என்றாலும், மானிடப்பிறப்பாக வந்து விட்டதாலும், பக்தர்களுக்கு சோதனை தருவதில் இன்பம் கொண்டவன் என்பதாலும் ஏதுமே தெரியாதவர் போல் நடித்தார். ""அம்மா! தாங்கள் யார்? நான் ஒரு வழிப்போக்கன். இந்தக் காட்டிலுள்ள புளியமரப் பொந்தில் தங்கி தவமிருந்தேன். இந்நாட்டு மன்னனின் பணியாள் என்னை அடித்து விட்டான். நான் இருப்பதை அவன் அறியவில்லை. அதனால் அவன் மீது தவறில்லை,'' என்றவர் நடந்த விபரங்களையும், பிரகஸ்பதி சொன்ன மருத்துவம் பற்றியும் சொன்னார். சற்று நேரத்தில் அந்தப் பெண் எருக்கிலை பறித்து வந்து, ஆலம்பால் எடுத்து இலைக்குள் வைத்து, அதை சீனிவாசனின் நெற்றியில் கட்டினாள். ரத்தம் வழிவது குறைந்தது. அவரைத் தன் மடியில் படுக்க வைத்து, ""மகனே! நீ ஸ்ரீமன் நாராயணனாகவே என் கண்ணுக்குத் தெரிகிறாய். மேலும், கிருஷ்ணாவதாரம் எடுத்த போது, நான் யசோதை என்ற பெயரில் உன் தாயாக இருந்ததை அறிவாய் அல்லவா?'' என்றார்.

சீனிவாசனை நெற்றியிலுள்ள காயம் வேதனைப்படுத்தினாலும், அவள் சொன்ன கதையை சுவாரஸ்யமாகக் கேட்பது போல நடித்து, வலி குறைந்து விட்டது போல் பாவனை காட்டினார். ""மகனே! நான் அன்று கேட்ட வரத்தைக் கொடுக்கத்தானே இன்று வந்திருக்கிறாய்!'' என்றாள் அந்தப் பெண். ""அம்மா! என் பெயர் சீனிவாசன். நான் யாரென்று எனக்கே புரியவில்லை. தாங்களோ துவாபரயுகத்தில் நடந்த ஏதோ ஒன்றைப் பற்றி பேசுகிறீர்கள்! தாங்கள் சொல்வது ஏதும் எனக்கு புரியவில்லையே! ஒருவேளை தலையில் அடிபட்டதில் நான் தங்களை யார் என்று மறந்திருப்பேனோ,'' என்று இன்னும் நடிப்புக்காட்டினார். அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு அவள் இன்னும் என்ன சொல்லப்போகிறாள் எனக் கேட்கத் தயாரானார். ""ஸ்ரீனிவாசன் என்று சொன்னால் என்ன! கிருஷ்ணன் என்றால் என்ன! எல்லாம் ஒன்று தான். லட்சுமி உன் மார்பில் இருக்க இடம் கொடுத்தவன் நீ. அதனால் தானே ஸ்ரீனிவாசன் என்ற பெயர் உனக்கு ஏற்பட்டிக்கிறது!. ஸ்ரீ என்பது லட்சுமியைத் தானே குறிக்கும்,'' என்றதும், ஸ்ரீனிவாசனின் முகம் வாடியது. ""அம்மா! இப்போது எல்லாம் என் நினைவுக்கு வந்து விட்டது. ஆனால், நீங்கள் நினைப்பது போல், நான் ஸ்ரீனிவாசன் என்ற பெயருக்கு அருகதை இல்லாதவன் ஆகிவிட்டேன். என் மனைவி லட்சுமி என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள்,'' என்றார். ""என்ன! லட்சுமி உன்னைப் பிரிந்தாளா? அப்படியானால், நீ எனக்கு கொடுத்த வரம் என்னாவது?'' அவள் பதறினாள். 

—தொடரும்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக