திங்கள், 8 அக்டோபர், 2012

ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 11


மாசுலுங்கி அவனது பிடியில் இருந்து தப்பி ஓடினாள். நமக்கு ஆபத்து வரும் காலத்தில் "ஹரி ஹரி ஹரி ஹரி' என்று விடாமல் சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். அதையே மாசுலுங்கியும் செய்தாள். ஹரிநாமத்தை சொல்லியபடியே ஓடிச்சென்று, முனிவர்கள் வேதம் ஓதிக் கொண்டிருந்த ஒரு இடத்தை அடைந்தாள். அவர்கள் முன்னால் மயங்கி விழுந்தாள்.

அவள் யார் என்றும், பெயர், ஊரும் தெரியாதததால் முனிவர்களுக்கு அவளை என்ன சொல்லி அழைப்பதென தெரியவில்லை. வேதம் ஓதும்போது, அவர்கள் முன் வந்ததால்"வேதவதி' என பெயர் சூட்டினர். பின்னர் அவளுக்கு மயக்கம் தெளிவித்தனர். அவள் அவர்கள் இருந்த இடத்திலேயே தங்கி தவம் செய்ய ஆரம்பித்தாள். சிலநாட்கள் அவள் இருந்த இடம் தெரியாமல் இருந்த ராவணன், வானமார்க்கத்தில் மிதந்து அவள் தவம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்டான்.

அவள் ஹரிநாமத்தை உச்சரித்தபடியே தியானம் செய்துகொண்டிருந்தாள். அவள் முன்னால் வந்த ராவணன் ஆசையுடன் அவளது கன்னத்தைத் தொட்டான். கண்களை மூடியிருந்தததால் அவன் வந்ததை அறியாத வேதவதி, தன் கன்னத்தில் ஏற்பட்ட ஸ்பரிசத்தை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தாள்.

""அடியே! அங்கிருந்து ஓடிவந்து இந்த முனிவர்களின் பாதுகாப்பில் தங்கியிருக்கிறாயே! பலவீனர்களான இவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என நம்பி வந்தாயா? அது மட்டுமல்ல! இந்த ராவணனை எதிர்க்க எவரும் பூமியில் இல்லை என்பதை அறிந்துமா இப்படி செய்தாய்?'' என்று ஆணவத்தோடு அவனது பத்து வாய்களும் பேசின.

""நான் ஹரி பக்தை. அந்த ஹரி என்னைப் பாதுகாப்பார்,'' என்று ஆணித்தரமாக பேசினாள் வேதவதி.

ராவணன் அதைப் பொருட்படுத்தாமல் அவளை அடைய முயன்ற போது,
""துஷ்டனே நில்! எவன் ஒருவன் பெண்களைத் துன்புறுத்துகிறானோ அவன் நன்றாக வாழ முடியாது. நீசனே! உன் நிலையும் அப்படித்தான் ஆகப்போகிறது. உன்னிடம் சிக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. இதோ, முனிவர்கள் வளர்த்த ஹோமகுண்டத்தில் தீ எரிந்து கொண்டிருக்கிறது. அதில் விழுந்து உயிர்விடுவேனே தவிர, உன் இச்சைக்கு அடி பணியமாட்டேன். ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள், பெண்ணாசை பிடித்த உன்னுடைய அரசாங்கம் ஒரு பெண்ணால் வீழும் என்று சாபம் விடுக்கிறேன். இது சத்தியம்,'' என்றபடியே அக்னி குண்டத்தில் குதித்தாள்.
அக்னிதேவன் அவளை ஏற்றுக் கொண்டு, ""பெண்ணே! என்னுள் விழுந்த நீ உலகத்தார் கண்களுக்கு மட்டுமே சாம்பலாகத் தெரிவாய். நீ உன் உடலுடன் தான் இருப்பாய். விஷ்ணு பக்தையான நீ, அவருக்கு சேவை செய்யும் காலம் வரை இப்படி சாம்பலாகவே இரு. அவர் விரைவில் ராமாவதாரம் எடுக்கப்போகிறார். லட்சுமிதேவி சீதையாக பிறக்கிறாள். உன் சாபப்படி, ராவணனின் அழிவு நிகழும்,'' என்றார்.

""அது எப்படி அக்னிதேவா?'' என்றாள் வேதவதி.

""பெண்ணே! சீதையைக் கடத்த ராவணன் வருவான். அப்போது, நிஜமான சீதையை நான் என் பத்தினி ஸ்வாஹாதேவியிடம் ஒப்படைத்துவிடுவேன். நீ சீதையைப் போல் உருமாறி, ஒரு குடிசையில் தங்கியிருப்பாய். உன்னை நிஜ சீதையென நினைத்து ராவணன் கடத்திச் செல்வான். மகாவிஷ்ணு ராமனாய் தோன்றி, உன்னை மீட்டுச் செல்வார்,'' என்றதும், அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அக்னிபகவான் சொன்னபடியே ராமாவதார காலத்தில் அனைத்தும் நடந்தேறின. சீதை வேடத்தில் இருந்த வேதவதியை ராமபிரான் மீட்டு, ராவணனை அழித்தார்.

அவரிடம் வேதவதி, ""ஸ்ரீராமா! உலகம் என்னை இப்போது தங்கள் மனைவியாகத் தான் அங்கீகரித்துள்ளது. தாங்கள் தயவுசெய்து என்னை மணம் செய்துகொள்ள வேண்டும். க்ஷத்தியர்கள் (அரசர்கள்) பல திருமணங்கள் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறதே!'' என்றாள்.

அவளிடம் ஸ்ரீராமர், ""பெண்ணே! நான் இந்த அவதாரத்தில் ஏகபத்தினி விரதம் மேற்கொண்டுள்ளேன். இன்னொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். கலியுகத்தில் நான் சீனிவாசனாக அவதாரம் செய்வேன். அப்போது நீ வேங்கடமலையை ஆளும் ஆகாசராஜ மன்னனின் புதல்வியாகப் பிறப்பாய். அப்போது, உன்னை மணந்து கொள்கிறேன்,'' என்றார்.

திருப்பதியில் இருந்து முப்பது கி.மீ., தொலைவில் நாராயண வனம் என்ற ஊர் இருந்தது. இப்போது அவ்வூர் "நாராயணபுரம்' என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் அது மிகப்பெரிய நகரமாக இருந்தது. அவ்வூரை தலைநகராகக் கொண்டு, சுதர்மன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான்.

மகாவிஷ்ணு பூமிக்கு வந்து புளியமரப் புற்றில் இருந்தபோது, பசு பால் கறந்ததன் காரணமாக சபிக்கப்பட்ட சோளராஜ மன்னன், விஷ்ணுவின் சாபத்தால் பேயாக அலைந்தான் அல்லவா? அவன் தனது சாபகாலம் நீங்கி, சுதர்மன் என்பவனுக்கு பிறந்தான். அவனுக்கு "ஆகாசராஜன்' என்று பெயர் சூட்டினர்.

ஒருநாள் சுதர்மன் திருவேங்கடமலையிலுள்ள கபில தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது, நாகலோகத்தில் இருந்து ஒரு கன்னிகை அங்கு வந்தாள்.
பேரழகு பெட்டகமான அவளைப் பார்த்தவுடனேயே சுதர்மனுக்கு அவள் மீது காதல் ஏற்பட்டது. தீர்த்தக்கரையிலேயே தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தி விட்டான்.
சுதர்மன் நல்ல அழகன் என்பதால், அந்தப் பெண்ணும் அவனது காதலை ஏற்றாள். அவர்கள் கந்தர்வமணம் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு தொண்டைமான் என்ற மகன் பிறந்தான்.

—தொடரும்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக