ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 12 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஹிரண்யன் செய்த தவறு!

பகவானைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க முடியாது. காதாலே கேட்டு அனுபவிக்க முடியாது. கைகளாலே தொட்டு உணர முடியாது. பக்தி என்னும் உணர்வினாலேதான் அவனை உணர முடியுமே தவிர, வேறு எதாலும் முடியாது.

கண்ணாலே பார்க்க வேண்டுமானால் எதைப் பார்ப்பது? அத்தனை இடங்களிலும் பரந்து விரிந்திருக்கிறான். எதைப் பார்ப்பது? இந்தக் கோடியை அடுத்து இருப்பது என்னவென்பதே நமக்குத் தெரியாது. ஜகத் முழுவதும் வியாபித்திருக்கும் ஒருவரை நம்மால் பார்க்கத்தான் முடியுமா? அறியத்தான் முடியுமா? பத்தடி தள்ளிப் பேசினாலே காது கேட்க மாட்டேன் என்கிறது? பரமபதத்தில் இருப்பவனைப் பற்றியா காது கேட்கப் போகிறது? காதால் கேட்கவும் முடியாது. கண்ணால் பார்க்கவும் முடியாது. ஆனால் உணரலாம். அவனை உணர்ந்துதான் அறிய முடியுமே தவிர பார்த்தோ, கேட்டோ அறிவது என்பது ஒரு நாளும் நடவாது.

ஆக, பிதாவே… நீங்கள் பாட்டுக்கு விஷ்ணு யாரென்று கேட்டுவிட்டீர்கள். என்னாலே. பதில் சொல்வதற்கு இயலாது. எதற்காக அந்தப் பெரியவரிடத்தில் கோபம் கொள்கிறீர்கள்?” என்கிறான் பிரகலாதன்.

நாம் யாரைப் பார்த்துக் கோபம் கொள்ளலாம் தெரியுமா? நம் பெருமைக்கு அருகில் உள்ள பெருமை கொண்டவர்களிடம் கோபமோ பொறாமையோ கொள்ளலாம். அதுவே தவறு. கூடாது. போனால் போகிறது என்று விட்டுவிடட்டும்.

இப்போது அடியேனையே எடுத்துக் கொள்ளுங்கள். அடியேனுக்கு ஏதோ ஞானம் இருக்கிறது. வசிஷ்டாச்சார்யார் மகாஞானி. அவரைப் பார்த்து, “ஏதோ இந்த வசிஷ்டர் பெரிய ஞானியாமே?” என்று அடியேனால் கோபம் தான் பட முடியுமா? அல்லது பொறாமை தான் பட முடியுமா? எனக்கும் வசிஷ்டருக்கும் எத்தனை ஏணி வைத்தாலும் எட்டுமோ? அவரைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் என்ன பிரயோஜனம்? கிடையவே கிடையாது.

ஹிரண்யனே, அவன் இருப்பது எங்கேயோ. நீர் இருப்பது இங்கே. நீர் எதற்காக அவரைப் பார்த்துக் கோபப்படுகிறீர்கள்? அதனால் எந்த லாபமும் கிடையாது. அவன்தான் எல்லாவற்றையும் தாங்குகிறான். எல்லாவற்றையும் படைக்கிறான். (தாதா…விதாதா). ஆகையினாலே அவரைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், உங்கள் மனத்திலே பக்தி வேண்டும்” என்று குழந்தை சொன்னவுடன் ஹிரண்ய கசிபு கேட்டான்.



“யார் உன்னுடைய ஹ்ருதயத்துக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டுவிட்டேன். இந்த விஷ்ணு கிஷ்ணு என்று நாலு முறை ஏதோ பேர் சொன்னாயே… அவன்தான் உன்னுடைய ஹ்ருதயத்துக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறான்” என்றான்.

அதற்கு பிரஹ்லாதன் சொன்னான் “என் இதயத்துக்குள்ளே மட்டும் இல்லை. யார் இதயத்துக்குக்குள்ளே பார்த்தாலும் அவன்தான் இருப்பான். பிதாவே நீர் இந்தக் கேள்வி கேட்கிறீர்களே. இந்தக் கேள்வி உங்களைக் கேட்க வைப்பவரே அவர்தான். அவர் இல்லை என்றால் இந்தக் கேள்வி உங்கள் வாயில் இருந்து வந்தே இருக்காது” என்றான்.

ஆழ்வார் சொன்னார், ‘நின்றனர், கிடந்தனர், திரிந்தனர். நின்றிலர் கிடந்திலர், திரிந்திலர்.’
பகவத் கீதையில் பகவான், ‘ஞாபகம் வருவதற்கு நான்தான் காரணம்’ என்று சொல்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன்னால் ஒருவரைப் பார்த்திருப்போம். அவரை இன்றைக்கு வீதியில் பார்க்கும்போது பத்து வருடங்களுக்கு முன் பார்த்தேனே… அவர் தானே நீர்” என்று சரியாகக் கேட்கிறோம் அல்லவா? அப்படி ஞாபகம் வருவதற்கு தானே காரணம் என்கிறார் பகவான். நான் உள்ளே இருந்து கொண்டுதான் அந்த ஞாபகத்தை உனக்கு ஊட்டுகிறேன். ஸ்ம்ருதிஹி.

அடுத்ததாக ஞானம். முதல் முறையாக ஒரு வஸ்துவைப் பார்க்கிறோம். அதைப் பற்றி நமக்கு ஒரு அறிவு ஏற்படுகிறது அல்லவா. அதற்குப் பெயர்தான் ஞானம் என்பது.

அதாவது, ஏற்கனவே இருப்பதை மறுபடியும் பார்க்கும்போது புரிந்து கொண்டால் அது ஸ்ம்ருதி. புதிதாக ஒன்றைத் தெரிந்துகொண்டால் அது ஞானம்.

அடுத்ததாக அபோஹனம். மறதி. நேற்றைக்கு ஒருவரைப் பார்த்திருப்போம். அவரை இன்றைக்கு நினைவுபடுத்திக் கொள்ள இயலவில்லை. அதற்கும் நான்தான் காரணம் என்கிறார் பகவான்.
“உனக்கு ஞாபகம் வந்தாலும், ஞானம் ஏற்பட்டாலும், மறதி ஏற்பட்டாலும் மூன்றுக்கும் தானே காரணம்” என்கிறார்

“உனக்குள்ளும் எனக்குள்ளும் அவன் ஒருவன்தான் இருக்கிறானே தவிர, மற்ற யாரும் கிடையாது.” என்று சொன்ன பிரஹ்லாதன் சொல்கிறான்.

“ஜகத்துக்கெல்லாம் காரணம் அந்த நாராயணன். புரிந்து கொள்ளுங்கள். அவனிடத்தில் கோபம் கொள்ள வேண்டாம். அவனிடத்தில் பொறாமை கொள்ள வேண்டாம்” என்றெல்லாம் எவ்வளவோ நல்ல வார்த்தைகள் சொன்னான் பிரஹ்லாதன். எல்லோர் காதிலும் நல்ல வார்த்தைகள் ஏறிவிடுமா?



விபீஷணன் எவ்வளவோ நல்லவன். அவன் ராவணனுக்கு எவ்வளவோ நல்ல வார்த்தை சொன்னான். அது ஒன்றும் அவன் காதில் ஏறவில்லை. ராவணனுக்கு சீதை எத்தனையோ நல்ல வார்த்தை சொன்னாள். காதில் ஏறவில்லை. பிரஹ்லாதன் ஹிரண்யனுக்கு எத்தனையோ நல்ல வார்த்தைகள் சொல்கிறான். அதுவும் ஏறவில்லை.

கடைசியில் என்ன முடிவு பண்ணினான் ஹிரண்யன். ‘நம் குலத்துக்கே கோடரிக் காம்பாய் அமைந்திருக்கிறான். இவனை அழித்து விட வேண்டியதுதான்’ என்ற முடிவுக்கு வந்தான்.

உண்மையில் அந்தப் பிள்ளை சொன்னது அழகான வார்த்தை. ஆனால், அதைப் பார்த்து ஹிரண்யனுக்குக் கோபம் வந்துவிட்டதாம். உண்மையில் பார்த்தால் நம் பிள்ளை சொல்வது உளறலா இருந்தாலும், அதைக் கேட்க வேண்டும் என்று நமக்கு ஆசையாக இருக்கும். நம் குழந்தை காகா என்று ஏதோ சொன்னவுடன் ‘ஆஹா நம் குழந்தை என்ன அழகான வேதம் கற்றுக் கொண்டு சொல்கிறது’ என்போம்.

இதுவே மற்றொரு வீட்டுக் குழந்தை கஷ்டப்பட்டு வேதத்தைக் கற்றுக் கொண்டு சொனாலும்கூட, “அது என்னமோ உளறுகிறது” என்போம். காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பர். குழந்தை சொல்லிவிட்டால், அது தப்பாகவே இருந்தாலும் அதை சரி என்று எடுத்துக் கொள்வது வழக்கம். மற்றொரு குழந்தை சொன்னாலும், வேறு யார் சொன்னாலும் விஷயம் உயர்ந்ததாக இருந்தால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு வகையில் எந்த வகையில் பார்த்திருந்தாலும் இதை எடுத்துக் கொண்டிருப்பான். தன் பிள்ளை என்பதற்காகவாவது எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது விஷயம் உயர்ந்தது என்பதனாலாவது எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

யார் சொன்னாலும் அதில் விஷயம் இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கே என்ன ஆச்சர்யம் என்றால், சொன்னது உயர்ந்த விஷயம். சொன்னவன் தன் வயிற்றுப் பிள்ளை. இரண்டையுமே துறந்தான் ஹிரண்யகசிபு. ஆக, இரண்டு விதங்களிலும் தப்பு செய்துவிட்டான்.

(வைபவம் வளரும்)

நன்றி - தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக