புதன், 30 ஜூலை, 2014

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 13 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

கண்ணன் காட்டிய வழி!

இரண்டு வகைகளிலும் தவறிழைத்துவிட்டான் ஹிரண்ய கசிபு என்று பார்த்தோம்.
இந்தப் பிரஹ்லாதனும் ஒரு தப்பு செய்தான். அந்தத் தப்பு என்ன தெரியுமா? ‘எங்கும் உளன் கண்ணன்’ என்று கீதாசார்யன் கீதையில் சொன்னதைத் திருப்பிச் சொன்னதுதான் அவன் செய்த ஒரே தப்பு. கண்ணன் கீதையில் என்ன சொன்னான்? ‘என்னால் எல்லா ஜகங்களும் வியாபிக்கப்பட்டிருக்கின்றன. ஜகங்களை நான்தான் தாங்குகிறேன்’ என்றான் அல்லவா? அதைத்தானே குழந்தை அப்படியே திருப்பிச் சொன்னான்! அதுதான் அவன் செய்த தப்பு. கண்ணன் சொன்னதைத் திருப்பிச் சொல்வது தப்பு என்று இப்போதுதான் முதல் முறையாகத் தெரிந்து கொள்கிறோம்.

கீதையில் கண்ணன் சொன்னதுதான் தவறாகுமா அல்லது அதை மறுபடியும் பிரஹ்லாதன் சொன்னதுதான் தப்பாகுமா? ‘எங்கும் உளன் கண்ணன்’ என்ற மகனைக் காய்ந்து… என்கிறார் ஆழ்வார். மகன் மீது ரொம்பவும் கோபப்பட்டானாம். வியாக்யானம் செய்கின்ற பெரியவாச்சான் பிள்ளை என்கின்ற பெரியவர், ‘மகன் என்றும் சொல்கிறார் பிள்ளை என்றும் சொல்கிறாரே ஆழ்வார். யாருக்கு மகன் யாருக்குப் பிள்ளை என்று கேள்வி எழுப்புகிறார்?’

ஏற்கனவே ஹிரண்யகசிபுவுக்குப் பிள்ளையாக இருந்தானாம். கண்ணன் எங்கும் உளன் என்று பிரஹ்லாதன் சொன்னவுடன், அவன் என் பிள்ளை இல்லை என்று தள்ளிவிட்டானாம் ஹிரண்யகசிபு. உடனே பார்த்தார் நம்மாழ்வார். ‘ஹிரண்யன், தன் மகன் இல்லை என்று சொன்னால் உடனே, பிரஹ்லாதனை என் பிள்ளையாக ஸ்வீகாரம் செய்துகொண்டு விடுகிறேன்’ என்று தீர்மானம் பண்ணிக் கொண்டுவிட்டாராம்.



ஹிரண்யகசிபு தன் பிள்ளை இல்லை என்று சொல்லிவிட்டானானால், கதையைக் கேட்கும் நாம் ஒவ்வொருவரும், நம் பிள்ளையாக பிரஹ்லாதனை நினைக்க வேண்டும். பகவானை பந்து என்று, எவன் ஒத்துக் கொண்டாலும் அவன் நமக்கும் உறவு. அவனை பந்து இல்லை என்று எவன் சொன்னாலும், அவன் நமக்கும் பந்து இல்லை. இப்படி இருப்பவன்தான் ஸ்ரீவைஷ்ணவன்… பாகவதோத்தமன்.

பிரஹ்லாதன் மீது ஆயுதங்களையெல்லாம் ஏவிவிட்டார்கள். ‘இந்த ஆயுதங்களுக்குள்ளும் விஷ்ணு இருப்பது உண்மையானால் எனக்குள்ளும் விஷ்ணு இருப்பது உண்மையானால், இவை என்னை எதுவும் செய்யாமல் போகட்டும்’ என்று பிரார்த்தித்தான் பிரஹ்லாதன். அவனை அந்த ஆயுதங்கள் ஒன்றுமே பண்ணவில்லை. உடைந்து போயின. எந்த சிரமமும் குழந்தைக்கு ஏற்படவே இல்லையாம்.



பொதுவாக நாகாஸ்திரத்துக்கு (ஸர்ப்பத்துக்கு) எது பிரதி அஸ்திரம் என்று பார்த்தால், கருடாஸ்த்திரம். வருணாஸ்திரத்துக்கு பிரதி அஸ்திரம் ஆக்னேயாஸ்திரம் (அக்னி). இப்படி ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் ஒரு பிரத்யஸ்திரம் உண்டு. மகாபாரத யுத்தத்தில், அர்ஜுனன் பேரில் நாராயணாஸ்திரத்தைப் பிரயோகம் பண்ணிவிட்டான் பகதத்தன். நாராயணாஸ்திரத்துக்குப் பிரத்யஸ்திரம் என்னவென்று அர்ஜுனன் தெரிந்துகொண்டது கிடையாது. எதைப் பிரத்யஸ்திரமாகப் பண்ணலாம் என்று கண்ணனைப் பார்த்து அர்ஜுனன் கேட்டான். கண்ணன் சொன்னான்: தவறான ஆராய்ச்சி பண்ணுவதற்கு இறங்கியிருக்கிறாய் அர்ஜுனா. நாராயணனுக்குப் பிரதி இருந்தாலல்லவா அவன் அஸ்திரத்திற்குப் பிரதி இருப்பதற்கு? “அப்படியானால் அவ்வளவுதானா? நான் வில்லைக் கீழே போட வேண்டியது தானா?” என்று பதறினான் அர்ஜுனன்.

இதற்குத்தானா நான் இத்தனை பாடுபட்டேன்?” என்று கேட்டான் கிருஷ்ணன். உன்னை விட்டுவிட்டுப் போவதற்காக நான் இவ்வளவெல்லாம் செய்யவில்லை என்றாராம். நாராயணன் அஸ்திரத்துக்கு பதிலாக, பிரதியாக நம்மிடம் பெரிய அஸ்திரம் ஒன்று உள்ளது. அதை ஒன்றும் வசிஷ்டரிடத்திலோ அல்லது விஸ்வாமித்திரரிடத்திலோ போய்க் கற்றுக்கொண்டு வரவேண்டும் என்பதில்லை. நமக்கே தெரியும் அந்த அஸ்திரம் என்னவென்பது. இதைப் பற்றி அர்ஜுனனுக்கு உபதேசித்தான் கண்ணன். கிரீடத்தைக் கழற்று. கீழே வை. காண்டீபத்தைக் கீழே போடு. கவசத்தைக் கழற்றிக் கீழே வை. பாதுகையைக் கழற்று. மண்டியிட்டுக்கொண்டு கையைக் கூப்பிக்கொள்! அஞ்சலி பண்ணு. அது ஒன்றுதான் அதற்கு பிரதி அஸ்திரம். நீ கை கூப்பும் செய்கையைச் செய்துவிட்டாயானால், நாராயணாஸ்திரம் உன்னை எதுவும் பண்ணாது. அஞ்சலி ஒன்றுதான் அதற்குப் பிரத்யஸ்திரமாகும்.”

ஸ்வாமி வேதாந்த தேசிகன் இப்படி வணங்குவது பற்றி, ‘அஞ்சலி வைபவம்’ என்ற ஒன்றையே செய்திருக்கிறார். விசேஷமான நூல் அது.

பகவானே நீயே என் பேரில் அஸ்திரத்தைத் தொடுத்துவிட்டாயானால், இனிமேல் நான் கவலைப்படப் போவதில்லை. இப்போது புரிந்துகொண்டுவிட்டேன், சூட்சுமம் என்ன, ரகசியம் என்ன என்று! கையைக் கூப்பிவிட்டால் உன் அஸ்திரம் என்னை ஒன்றும் பண்ணாது. ஆக உன்னுடைய நிக்ரஹாஸ்திரம் என்னும் அஸ்திரத்தைப் பிரயோகப்படுத்தினால், அதற்கு நான் பிரத்யஸ்திரம் வைத்திருக்கிறேன். அதுதான் கைகூப்பு செய்கை” என்றான் அர்ஜுனன்.

நம் பிரஹ்லாதன்தான் எப்போதும் கைகூப்பிக் கொண்டே இருக்கிறானே. அவனை எந்த அஸ்திரமும் எதுவும் செய்யவில்லை. அவை வீழ்ந்தும் மாய்ந்தும் போயின.

பிரஹ்லாதனைப் பார்த்து ‘இவனுக்கு பயமே ஏற்படவில்லையே’ என்று ஹிரண்யகசிபு நினைத்தான்.
ஏதோ சஸ்திரத்திலே ஜெயித்துவிட்டாய். என் காலில் விழுந்து கேள். நான் உனக்கு அபயப் பிரதானம் பண்ணுகிறேன். பயமில்லாமல் இருப்பதற்கு உன்னை மன்னித்து விட்டுவிடுகிறேன். பிரஹ்லாதா என் காலில் விழு” என்று கேட்டான் ஹிரண்யகசிபு.

பாலப்பிரஹ்லாதன் சிரித்துக்கொண்டே சொன்னான். “நான் என்னமோ ஏற்கனவே பயப்பட்டாற்போலேயும், உன் காலில் விழப்போகிறேன் என்று சொன்னாற்போலேயும் சொல்கிறீர்களே? நீங்கள் தகப்பனார் என்பதற்காக, நான் காலில் விழத் தயாராக இருக்கிறேன். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக பயந்துபோய்க் காலில் விழமாட்டேன். நான் ஒருநாளும் பயந்தது கிடையாது. ஏன்? பயங்களையெல்லாம் போக்குபவனான கண்ணன் என் மனத்திலே இருக்குங்கால் பயப் பிராப்தி எனக்குக் கிடையவே கிடையாது.”

தைத்ரிய உபநிஷதம் சொல்கிறது, ‘பகவானுக்கு அருகிலே போகப்போக, பயம் நம்மிடத்திலிருந்து விலகிவிலகிப் போய்விடும். அவனை விட்டுப் பிரியப்பிரிய, பயம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.’
முன்பெல்லாம் பெரியதாய் ஒரு வீடு இருக்கும். எல்லோரும் தரையில் உள்ள தளத்திலேயே இருப்பார்கள். இப்போது அப்படி இல்லை. மாடிமாடியாக வீடுகள் கட்டிக் கொண்டே போகிறார்கள். ஏன் அப்படியாம்? ஒருவர் சொன்னார்; ‘பயம் ஏற ஏற மாடி ஏறுமாம்.’ பகவானுக்கு அருகில் போகப்போக நமக்கு பயம் வராது. முன்பெல்லாம் வாசலில் கட்டில் போட்டுக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்த காலம். அப்போது பெருமானுக்கு அருகில் இருந்தோம். இப்போது அவனிடமிருந்து விலகி விலகிப் போகிறோம். பயம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வாசலில் வருவதற்கு பயமாக இருக்கிறது. எதைக் கண்டாலும் பயமாக இருக்கிறது. பகவானுக்கு அருகில் போனால்தான் பயம் வராமல் இருக்கும்.

‘மாடமீமிசைக் கஞ்சன்’ என்று பாட்டு. அந்தக் கம்சனைத்தான், கண்ணன் கீழே இழுத்து வந்து தள்ளினான். கம்சன் ஏன் மேலே ஏறி உட்கார்ந்தான்? கிருஷ்ணரிடத்தில் அன்பிருந்திருந்தால் கீழே இருந்திருப்பான். அன்பில்லை. பயம் ஏற்பட்டு விட்டது. அதனால், மாடியின் மீது ஏறி உட்கார்ந்துவிட்டானாம் கம்சன்.

(வைபவம் வளரும்)

நன்றி - தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக