வியாழன், 26 ஜூன், 2014

கண்ணனை நினைக்காத நாளில்லையே!

அவசரயுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு ஆண்டாள் காட்டிய உயர்ந்த வழி சரணாகதி. அதாவது, இறைவனைச் சரணடைவது. இதை விட சிறந்த மார்க்கம் உலகில் வேறில்லை என்று திருப்பாவையின் முப்பது பாசுரங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

* சுவாமிதேசிகன், கோதாஸ்துதியில் ஆண்டாளை ""விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந:'' விசேஷமாகப் போற்றுகிறார். ""விஷ்ணு சித்தரின் மகளான ஆண்டாள் என்னுடைய மனதில் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும்'' என்பது இதன் பொருள். 

* ஆண்டாள் மார்கழி நோன்பை நோற்று கண்ணனை அடைந்தாள். மார்கழியை "மார்கசீர்ஷம்' என்று குறிப்பிடுவர். "தலைசிறந்த வழி' என்பது இதன் பொருள். கடவுளை அடைவதற்குரிய வழிகளில் ஆண்டாள் காட்டிய பாவை நோன்பு மிகவும் சிறந்தது.

* திருமாலின் திருவடியில் பூக்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும். ஆத்மாவை அவன் திருவடியில் சமர்ப்பிக்க வேண்டும். வாய், அவனுடைய திருநாமத்தை உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த மூன்றுவழிகளையும் பின்பற்றி உயிர்கள் மோட்சகதி பெற வேண்டும் என்பதே கோதை காட்டிய நெறிமுறை. 

* கோதை என்பதற்கு "நல்ல வாக்கு அருள்பவள்' என்பது பொருள். அவளுடைய திவ்யமான திருவடிகளை எப்போதும் மனதில் சிந்திப்பவர்க்கு நல்வாக்கை கொடுத்து அருள்வாள். மங்கலமான சுபசொற்களை நாவால் பேச அனுக்ரஹம் செய்வாள். 

* கோதை திருமாலை மணக்கும் பேறு பெற்றவள். இரு மாலைகளைக் கட்டி தினமும் திருமாலுக்குச் சூட்டினாள். ஒன்று பூமாலை; மற்றொன்று பாமாலை. பூமாலையைச் சூடியும், பாமாலையைப் பாடியும் அவன் திருவடிகளில் சமர்ப்பித்தாள். அதனால் "சூடிக் கொடுத்த நாச்சியார்' என்னும் பெயர் பெற்றாள். 

* கண்ணனிடம் தன் காதலை வெளிப்படுத்த ஆண்டாள் பூக்களை தூதாக அனுப்பினாள். ""என்னுடைய ஆசையை எம்பெருமானிடம் தெரிவித்து அவன் அருளை எனக்கு பெற்றுத் தாருங்கள்'' என்று சொல்லி அனுப்பினாள். இதன்மூலம் ஆண்டாள் கண்ணனையும் ஆண்டாள், நம்மையும் ஆள்கிறாள்.


* "அஞ்சுக்குடிக்கொரு சந்ததியாய்' என்று மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் ஆண்டாளை சிறப்பிக்கிறார். பன்னிரு ஆழ்வார்களின் கோஷ்டிக்கு, ஆண்டாளே பூங்கொடியாக விளங்குவதால், அவளின் அவதாரம் உயர்ந்ததாக போற்றப்படுகிறது.

ஆண்டாள் பற்றி மூக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்

நன்றி - தினமலர்

1 கருத்து: