சனி, 31 ஆகஸ்ட், 2019

கண்ணன் என்னும் மன்னன் - 18 - இந்திரா சவுந்தரராஜன்

கண்ணனை எப்படி அடையப் போகிறோமோ தெரியவில்லையே என்னும் கவலை பாமாவை வந்து ஆட்கொண்டு விட்டது. அவனை அவள் மணப்பதே தனக்கு நல்லது என்கிற எண்ணம் சத்ராஜித்துக்கும் வந்து விட்டது. ஒருபுறம் பாமாவை அடைய எண்ணும் கூட்டம் ஒருபுறம், மறுபுறம் கண்ணனை கள்வனாகக் கருதி விட்ட தனது அவசர புத்தி, அதற்கு எந்த வகையிலாவது பரிகாரம் கண்டு விட வேண்டும் என்ற துடிப்பு என்று சத்ராஜித் பரிதவிப்போடு இருந்தான்.
இதற்கு நடுவில் பிரசேனஜித் இறந்து அதன் கர்மகாரியங்கள் நடைபெற வேண்டிய நிலையில், ஜாம்பவதியை துவாரகை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல கண்ணனும் விரும்பவில்லை. எனவே, ஜாம்பவான் அளித்த மணியோடு திரும்ப வருவதாகக் கூறிவிட்டு பலராமனோடு துவாரகை திரும்பினான். பின் பிரசேனஜித்தின் கர்மகாரியங்கள் முடிந்தநிலையில், தான் மட்டும் தனியாக சத்ராஜித் மாளிகைக்குப் புறப்பட்டான் கையில் சமந்தக மணியோடு..
மணியை சத்ராஜித் ஏற்க விரும்பவில்லை. ""கிருஷ்ண பிரபு.... இதை ஏற்கும் தகுதியை இழந்து விட்டேன். இதனை தங்களிடம் ஒப்படைத்திருந்தால் என் சகோதரனை இழந்திருக்க மாட்டேன். தாங்கள் விரும்பியபடியே பலராமரிடம் சேர்த்து விடுங்கள். அவர் இதை தான் வைத்துக் கொண்டாலும் சரி
உக்ரசேன மகாராஜாவிடம் ஒப்படைத்தாலும் சரி'' என்று நெஞ்சம் விம்மக் கூறினான்
கிருஷ்ணனோ லகுவாய்ச் சிரித்தபடி, ""சத்ராஜித்தரே! நான் இந்த மணியை மீட்டு வந்து கொடுத்தது அது என் வசமே வந்து விடுவதற்காக அல்ல. எனக்கு ஏற்பட்ட பழியை துடைத்துக் கொள்வதற்காகவே. இதை பார்ப்பவர்கள் என்ன பேசுவார்கள்! இந்த பொல்லாத கிருஷ்ணன் மணியைத் தருவது போலத் தந்து, மீண்டும் தன் வசப்படுத்திக் கொண்டு விட்டான் என்பார்கள். ஒருமுறை பட்டது போதாதா?'' என்றான்
சத்ராஜித்தும் இதைக் கேட்டு மடங்கித் தான் போனான். ஆனால், பாமா கண் ஜாடையால், "கிருஷ்ணர் அப்படித் தான் சொல்வார். என்னை விட்டு விடாதீர்கள்...'' என்று ரகசிய குரலில் பேசினாள்.
சத்ராஜித் வற்புறுத்தியபடி, ""கிருஷ்ண பிரபு.. பழி வரும் என்று தானே ஏற்க மறுக்கிறீர்கள். எவரும் பழிக்க இயலாத படி நான் ஒன்றைத் தந்தால் ஏற்றுக் கொள்வீர்கள் தானே?'' 
""முதலில் என்னை அந்நியமாக கருதி மரியாதை தருவதை கைவிடுங்கள். நான் எப்போதும் போல கண்ணன். நீங்களோ துவாரகையின் சீமான். உங்கள் முன் நான் சாதாரணமானவன். எனக்கு எதற்கு வாங்கள், போங்கள் என்ற மரியாதை....'' 
""கண்ணா! வார்த்தைகளால் என்னைக் கொல்ல வேண்டாம். நான் மூடன். தங்களை முழுமையாக உணர்ந்து விட்டேன். இனி ஆணவமாக நடந்து கொள்ள மாட்டேன்...''
""மகிழ்ச்சி... ஆனால் எவ்வளவு வற்புறுத்தினாலும், மணியை மட்டும் ஏற்க மாட்டேன். வேறு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள சித்தமாய் இருக்கிறேன்'' 
- கண்ணன் இப்படிக் கூறவும் பாமா முகத்தில் பிரகாசம் உண்டானது. சத்ராஜித்தை இதுதான் தருணம் என்பது போல பார்த்தாள். சத்ராஜித்தும், ""கிருஷ்ண பிரபு.... வார்த்தை மாற மாட்டீர்களே...'' 
""நிச்சயமாக வார்த்தை மாற மாட்டேன். வேண்டுமானால் சத்தியம் செய்யக் கூட தயார்.... செய்யவா''
""இது போதும்... இப்படிச் சொன்னதே சத்ய பிரமாணத்துக்கு சமமான ஒன்று தான். எனவே, நான் உங்கள் வாக்கை நம்பி, என் உயிரினும் மேலாக கருதும் ஒன்றை உங்களுக்குத் தர விரும்புகிறேன்..''
""அப்படி ஒன்றைப் பெற நான் பெரிதாய் எதையும் செய்து விடவில்லை. எனவே, நீங்கள் இம்மட்டில் உணர்ச்சி வயப்பட வேண்டாம்.''
""இல்லையில்லை. இது தான் தான் தருணம். விரும்பியதைத் தந்து விடுகிறேன். மகளே! சத்யபாமா இங்கே வா.'' - என அழைத்த சத்ராஜித்
""பிரபு... தங்கள் வலக்கரத்தை நீட்டுங்கள்'' என்றான்.
""சத்ராஜித்தரே! என்ன இது?''
""வாக்கு மாற மாட்டேன் என்று சொன்னீர்கள். நீட்டுங்கள் கரத்தை...''
"" நான் பெறப் போவது உங்கள் மகளையா?''
""ஆம்... பாமாவும் அடைந்தால் கோபாலன்.. இல்லையேல் காலன் என்னும் முடிவில் இருக்கிறாள். எனவே, நான் அவள் விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்''
""அது சரி... போகுமிடம் எல்லாம் நான் மணவாளனானால் என் கதியை நினைத்துப் பார்க்க எனக்கே அச்சமாய் உள்ளது. நான் உங்கள் விருப்பத்தை ஈடேற்ற சம்மதித்தது உண்மை தான். பொன்னோ, பொருளோ தருவீர்கள் எனக் கருதினேன். இப்படி பெண்ணையே தருவீர்கள் என எதிர்பார்க்கவில்லை....''
""பிரபு..... இப்படி பேசி வாக்கு பிசகி விடாதீர்கள்'' 
""உங்களுக்குத் தெரியுமா? ஜாம்பவானும், இப்போது தான் தன் மகள் ஜாம்பவதியை என் வசம் ஒப்படைத்தார். இந்த நிலையில் பாமாவையும் அழைத்துக் கொண்டு போனால் ருக்மிணி என்ன நினைப்பாள்?'' - கண்ணன் இப்படி கேட்டதும், பாமா வேகமாக கரத்தை பற்றியவளாக, ""பிரபோ! ருக்மிணி தேவியை நான் பார்த்துக் கொள்கிறேன். நாங்கள் ஒற்றுமையாக இருப்போம். எங்களால் எந்த வித சஞ்சலமும் ஏற்படாது.''
""அது சரி! நீ சொல்வது போல் அவளும் சொல்ல வேண்டுமே...'' 
""நிச்சயம் சொல்வார்கள். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது..'' 
பாமாவின் பேச்சைக் கேட்டு சிரித்த கண்ணன், ""பாமா.... பயப்படாதே! இந்த கரத்தை நான் விடப் போவதில்லை. பிறகு நான் வாக்கு தவறிய பழிக்கு ஆளாவேன். ஒரு பழி போனால் இன்னொரு பழி என்னை அடைய காத்திருக்கிறது. எல்லாம் கிரக சாரம் தான்....''
கிருஷ்ணன் உதட்டைப் பிதுக்கியபடி வானத்தை அண்ணாந்து பார்த்தான்.
பாமாவோ கரத்தை விட்டவளாக, அவன் கால்களைப் பற்றிக் கொண்டாள். கிருஷ்ணன் அவளைத் தூக்கியபடி, ""எப்படியோ என்னை அடைந்து விட்டாய்'' என்றான் காதோரம்.
""நதி கடலை அடையாமல் போகுமா?'' என்றாள் அவளும் வெட்கமுடன்.
இதற்கிடையில், மிக இறுக்கமாக இருந்தாள் ருக்மிணி. கண்ணன் வரவும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
எதிர்பார்த்தது தானே!
""அடேயப்பா! எவ்வளவு கோபம்! கோபத்தில் தான் உன் முகம் என்னமாய் ஜொலிக்கிறது?'' 
""ஜொலிக்கிறதா.. என் மனம் துடிக்கிறது''
""ருக்மிணி! சந்தர்ப்ப சூழ்நிலை என்னை சிக்க வைத்து விட்டது. என்னைப் புரிந்து கொள்''
""பாமரன் போல பேசுகிறீர்களே! இப்படியும் கூட பேசுவீர்களா?''
""சரி.. நீ சொல்வதை நான் கேட்கிறேன். ருக்மிணியின் ஒப்புதல் இல்லை என்று சொல்லி பாமா, ஜாம்பவதி இருவரையும் துரத்தி விடட்டுமா?'' -கண்ணன் சொன்னதைக் கேட்ட ருக்மிணி, ""வேண்டாம்! அது பாவம்! உங்களுக்கு ஏற்பட்ட பழியையே என்னால் தாள முடியவில்லை. இனி பாவியாவதை நான் தாங்குவேனா?''
""இது தெரிந்து தானே நானும் அவர்களை ஏற்றுக் கொண்டேன்...''

-கண்ணனின் தந்திரமான பதிலைக் கேட்ட ருக்மிணி, அவனை அணைத்துக் கொண்டாள்.
இன்னும் வருவான்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக