சனி, 11 ஏப்ரல், 2020

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 17 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

துரும்பால் கிளறியவன்!


ஆகவே... உயிர் இருக்கும் ஒன்றும் கொல்லக்கூடாது; உயிர் இல்லாத ஒன்றும் கொல்லக் கூடாது என்று ஹிரண்யன் வரம் கேட்டதற்குப் பொருத்தமான ஆயுதம் நகம்தானே? வெட்டினால் வளர்கிறது. உயிர் உள்ளது என்று வைத்துக் கொள். வெட்டினால் வலிக்காது. உயிர் இல்லை என்று வைத்துக்கொள். நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பகவான் எதை ஆயுதமாகப் பயன்படுத்தினாலும் அது சக்கரத்தின் அம்சமாகும். இதுதான் பூர்வர்களுடைய நிர்வாகம்.


இதேபோல் வாமனமூர்த்தி சுக்கிராச்சாரியாரின் கண்களைக் கிளறினான் அல்லவா?


‘சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக்கையனே அச்சோ அச்சோ’ என்பது பெரியாழ்வாருடைய பாசுரம். மகாபலி சக்கரவர்த்தி கமண்டல தீர்த்தத்தை வாமனமூர்த்தியின் கையில் தெளித்து மூன்றடி மண்ணை தானம் கொடுக்கப் போகிற சமயம்.


‘இவன் பைத்தியக்காரன். மூன்றடி மண் கொடுக்கிறேன் பேர்வழி என்று மொத்தத்தையும் இழக்கப்போகிறான்’ என்று கமண்டலத்தின் துவாரத்தை அடைத்தார் அவனுடைய ஆசார்யன் சுக்கிராச்சாரியார். ஒரு பூச்சி வடிவெடுத்து அதைச் செய்தார் அவர். உடனே வாமன மூர்த்தி என்ன செய்தார்? மடியில் இருந்த தர்பத்தை எடுத்தார். அந்த துவாரத்தில் கிளறினார். ஒரு கண் போய் வெளியில் வந்து விழுந்தார் சுக்கிராச்சாரியார். அதனால்தான் ‘துரும்பால் கிளறிய’ என்றார் ஆழ்வார். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். துரும்பால்தானே கிளறினார். ’சக்கரக்கையனே அச்சோ அச்சோ’ என்றாரே ஆழ்வார். துரும்புக் கையனே என்றுதானே பெரியாழ்வார் பாடியிருக்க வேண்டும்.


இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், பகவான் துரும்பை ஆயுதமாகப் பயன்படுத்தினாலும் சக்கரக்கையன்தான். அது சக்கரம்தான். அவர் எதை வாகனமாகப் பயன்படுத்தினாலும் அது கருடனின் அம்சம். அவர் எதைப் படுக்கையாகப் பயன்படுத்தினாலும், அது ஆதிசேஷனின் அம்சம் என்று நாம் கொள்ள வேண்டும்.


ஆகவே, சங்க சக்கரங்களை பகவான் கையில் பிடித்திருக்கிறார் என்றால், முதல் காரணம் அவர் பகவான் என்று அடையாளம் தெரிவதற்காக. இரண்டாவதாக, அழகாய் இருக்கிறது. அலங்காரத்துக்காக. மூன்றாவது காரணம், அன்றைக்காவது பரவாயில்லை; ஒரு ஹிரண்யனைத்தான் முடிக்க வேண்டியிருந்தது. இப்பேர்ப்பட்ட ஸ்ரீநிதியாகிய பெரிய பிராட்டியைப் பக்கத்தில் வைத்திருக்கிறாரே, அவரை ரக்ஷிக்க வேண்டாமா! அதற்காக சங்க சக்கரம் பிடித்திருக்கிறாராம்.


மடியில் ஒரு சொத்து இருக்கிறதல்லவா? நம்மிடம் ஒரு சொத்து இருந்தால் பூட்டு சாவி என்று எவ்வளவு ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும்? அதற்காகத்தான் சங்க சக்கரம் என்ற ஆயுதங்களை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறார்.


ஆழ்வார் சாதித்தார்,


புரியொரு கை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி
அரியுருவம் ஆளுருவம் ஆகி
எரியுருவ வண்ணத்தான்
மார்பிளந்த மாலடியை அல்லால்
மற்றெண்ணத்தானாலாகுமோ
இமை?


என்றார். அப்பேர்ப்பட்ட திருமாலின் திருவடித் தாமரையைவிட்டு விட்டு, வேறு எதைத்தான் இமைப் பொழுதும் எண்ணுவோம்? இமைப் பொழுதும் பெருமானை மறந்திருப்பது கூடாது. இதை ஆழ்வார்கள் எல்லோருமே வலியுறுத்துகிறார்கள். நாம் தியானம் தியானம் என்கிறோம். ஓஹோவென்று உட்கார்ந்து தியானமெல்லாம் எப்படிப் பண்ண முடியும் என்றெல்லாம் நமக்குத் தெரியாது.


மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்தெய்வ்வுயிர்க்கும்.
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்


நான் எல்லோருக்கும் ஒரு வழி சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். அது சுலபமான வழி. சிற்ற வேண்டாம். அதாவது பதற வேண்டாம். இதைப் பண்ணலாமா அதைப் பண்ணலாமா? எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று... என்ன பிராயச்சியத்தம் என்று ஓடவே ஓடாதீர்கள். திணற வேண்டாம். ‘மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம்’ என்றால், எல்லாவற்றுக்கும் ஒரே வழி சொல்கிறேன் என்கிறார். பகவானை சிந்தனையில் கொண்டாலே போதும். நாம் சிந்திக்க சிந்திக்க அவர் நம் மனசில் இருக்கிறார். அதுகூட வேண்டாம். நம் மனசுக்கு வந்தவரையாவது சிந்திக்க வேண்டாமா?


வந்துனதடியேன் மனம் புகுந்தா
புகுந்ததற்பின்
வணங்கும் என் சிந்தனைக்கு
இனியா


என்று திருமங்கையாழ்வார் ஆச்சர்யமாகப் பாடுகிறார். முதலில் பெருமாள் நம் மனசுக்குள் வந்து இருந்துவிடுவாராம். வந்த பிறகாவது கைகூப்ப வேண்டாமா! நாமே கைகூப்பி அவரை வரவழைத்திருக்க வேண்டும். நாம் செய்யமாட்டேன் என்கிறோம். அவரே வந்துவிடுகிறார். வந்தவரையாவது நாம் கைகூப்பி வணங்கி நினைக்க வேண்டாமோ? அப்படி நரசிம்மப் பெருமானை நினைத்தால் சிற்ற வேண்டாம். சிந்திப்பே அமையும்.


அவனை நினைப்பது கஷ்டமா என்ன? பாகற்காயையே நினைத்துக் கொண்டு தூங்கு என்று சொன்னால் கஷ்டம். அது கசக்கிறது என்று நான் சின்ன வயசில் எவ்வளவு பாடுபட்டிருக்கிறேன் என்று எனக்கல்லவா தெரியும் என்று சொல்லலாம். இப்போது அதையே நினைத்துக்கொண்டு தூங்கு என்றால் தூங்குவேனா என்ன? ஒரு மரத்தின் மீது பயங்கரமான ஒரு பேய் நின்று கொண்டிருக்கிறது. அதையே நினைத்துக் கொண்டு தூங்கு என்றால் தூங்குவேனா? இதையெல்லாம் மாட்டவே மாட்டேன். அழகாய் இருப்பவரை நினைத்துக் கொண்டு தூங்கு என்றால் தூங்குவேனல்லவா? அந்தப் பெருமான் அவ்வளவு ஆச்சர்யமாய் இருக்கிறார். லாவண்யமே வடிவெடுத்தவர். சௌந்தர்யமே உடையவர். அவரை நினைக்க வேண்டுமே. அவரை ஒரு நிமிஷப் பொழுது நினைக்காமல் போனால் அன்றெனக்கவை பட்டினி நாளே!


நாம் ஏகாதசி அன்றைக்குப் பட்டினி கிடக்க வேண்டும். ஆனால் ஆழ்வார்களுக்கு அந்த நாள் பட்டினி கிடப்பதாகத் தோன்றமாட்டேன் என்கிறது. என்றைக்கு பகவானை நினைக்காத நாளோ அன்று தான் பட்டினி நாளாம். அவன் நாமத்தைச் சொல்லாத நாள், அவன் திருமேனி நினைக்காத நாள், அன்றுதான் பட்டினி. மற்றபடி ஏகாதசி அன்றைக்கு நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டே இருந்து விட்டால் அன்றைக்குப் பட்டினியே அல்ல. நன்றாக சாப்பிட்டுவிட்டோம் என்று அர்த்தம். இது சாத்திரப்படி நியாயமா என்று கேட்டால், வாயால் சோறு உண்ணக் கூடாது என்றுதானே தர்ம சாத்திரம் சொல்கிறது? மனத்தால் பகவான் என்ற அமுதத்தைப் பருக வேண்டாம் என்று அது என்றைக்காவது சொல்லிற்றா? அப்படியானால் ஒரு இமைப்பொழுதுகூட, ஒரு விநாடிப் பொழுது கூட அவனை மறக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லும் அதே ஆழ்வார், மற்றொரு பாசுரத்தில் சொல்கிறார்.


வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்காநாம் என்னே
உரத்தினால் ஈரரியா நேர்வலியோனாய
இரணியனை ஓரரியா நீஇடந்ததூண்


ஓரறியா என்றால் ‘நரத்வம் சிம்மத்வம் (மனிதன் மற்றும் சிங்க உரு) இரண்டும் ஒன்றானவரா’ என்று பொருள். இரண்டையும் பெருமாள் கலந்துவிட்டார். உலகத்தில் இதுபோல் நரமும் சிங்கமும் கலந்தது வேறு இருக்கிறதா சுவாமி? கேள்வியேபட்டதில்லை! இதற்கு சமானமாய் இன்னொரு நரசிங்கம் கிடையாதே!


(வைபவம் தொடரும்)


நன்றி - தீபம் செப்டம்பர் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக