சனி, 6 நவம்பர், 2004

திருப்பல்லாண்டு 5,6,7

பெரியாழ்வார் அருளிச்செய்த

திருப்பல்லாண்டு

முதற்பத்து



5

அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை

இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு

தொண்டக்குலத்திலுள்ளார். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி

பண்டைக்குலத்தைத்தவிர்த்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே




அண்டக்குலத்துக்கதி பதியாகி அசுரரிகாத்தரை - அண்டத்திற்கே அதிபதியாகவும், அசுரர்கள், இராட்சதர்கள் ஆகியோரை....இண்டை குலத்தை எடுத்துக் களைந்து இருடீகேசன்றனுக்கு - மிகவும் நெருக்கமாக வாழ்கின்ற அரக்கர்கள் அசுரர்கள் அவர்களின் குலத்தை வேரொடு அழித்த இருடீகேசனை போற்றுபவராகிய நீங்கள், தொண்டைக் குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிரநாமஞ்சொல்லி - தொண்டைகுலம் தொண்மையான குலம் தொண்டர் குலம் என்றும் சொல்லலாம், அப்படி தொண்மையான குலத்தில் உள்ள நீங்கள் அரக்கர்களை அழித்த இருடீகேசனை ஆயிரம் நாமம் சொல்லி , பண்டைக் குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே - பண்டைக்குலம் பழமையான குலம், பழையவற்றில் விருப்பம் உள்ள, இங்கே ஆழ்வார் மற்ற சமயத்தை சார்ந்துள்ளவர்களை அதை விட்டுவிட்டு இங்கே நம் பெருமான் இருடீகேசனுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு இரும் என்று போற்றிப் பாடுவோம் வாருங்கள்.....



6

எந்தை தந்தை தந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி

வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்

அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை

பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே.



எந்தை தந்தை தந்தைதந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி - நான் என்னுடைய தந்தை, அவருடைய தந்தை, அவருடைய தாத்தா இப்படி ஏழு தலைமுறைகளாய், வந்துவழி வழியாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில் - இவ்வாறு நாங்கள் ஏழேழ் பிறவிக்கும் உன்னையே வழிபடுகின்றோம் அன்று அந்த திருவோண நட்சத்திரத்திலே, அந்தியம் போதிலரியுருவாகி யரியை யழத்தவனை - அந்த திருவோண நட்சத்திரத்துதித்த பெருமான், காலையும் இல்லாமல் மாலையும் இல்லாமல், அரியுருவாகி - அரி என்றால் இங்கே சிங்கம் என்று கொள்ளவேண்டும், சிங்க உருவெடுத்து, அரியை அழித்தவனை - அந்த அரியை பழித்த இரணியனை ( பிரகலாதனின் தந்தை ) அழித்த நரசிம்மனை, பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றே பாடுதமே. - பந்தனை தீர -அந்த இரணியனை அழித்த களைப்புத் தீர, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடுவோம் வாருங்கள்......





7

தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்

கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்

மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி

பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.




இந்தப் பாடலை நாம், மாயப்பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாய சுழற்றியவாழி வல்லாணுக்கும் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு குடிகுடியாட் செய்கின்றோம், பல்லாண்டு கூறுதமே. என்று மாற்றிப் பார்த்தால் பொருள் தானாக விளங்கும். மாயப்பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாய - மாயப்போர்புரிந்த பாணாசுரனுடைய ஆயிரம் தோளையும் குருதிபாய, சுழற்றியவாழி வல்லாணுக்கும் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி - அவனின் ஆயிரம்தோளையும் குருதிபாய அழித்த தீயை விட மிகுந்த ஒளிவீசுகின்ற செஞ்சுடராழி வல்லானுக்கு கோயிற்பொறியாலே என்றால் அந்த திருவாழி ஆழ்வானை தன் கையிலே ஏந்தியிருக்கும் நம் பெருமான், இங்கே பொறி என்பது முத்திரை என்ற அர்த்தத்தில் வரும். ஒற்றுண்டு குடிகுடியாட் செய்கின்றோம் - ஒற்றுண்டு என்றால் ஒற்றுமையாக எம்பெருமானின் திருவடிகளில் ஏழேழ் பிறவிக்கும் நாங்கள் ஆட்செய்வோம். பல்லாண்டு கூறுவோமே...........











2 கருத்துகள்:

  1. ஆஹா, கோனார் தமிழ் உரை போல (எனக்குத் தெரிந்த ஒரே உதாரணம்:()ஒவ்வொரு சொல்லுக்கும், வரிக்கும் விளக்கமாக தவ்ருவது நன்றாக இருக்கிறது.
    மற்ற பதிவுக்கெல்லாம் லீவு விட்டாலும் இதுக்கு விடாதீர்கள்.
    நன்றி,
    -காசி

    பதிலளிநீக்கு