வியாழன், 30 ஆகஸ்ட், 2012

பகடை விளையாடிய பாலாஜி


ஹாதிராம் பாவாஜி என்ற வடநாட்டுத்துறவி திருப்பதி மலையில் தங்கியிருந்தார். திருப்பதி சீனிவாசப் பெருமாள் மீது பக்தி கொண்டு, கோவிந்தநாமஜெபத்தில் ஈடுபட்டார். அவருடைய பக்தியை மெச்சிய பெருமாள், நேரில் சந்திக்க எண்ணம் கொண்டார்.

ஒருமுறை அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடை சாத்தப்பட்டது. கோயிலில் இருந்து கிளம்பிய பெருமாள், காட்டுப்பகுதியில் உள்ள பாவாஜியின் குடிலை அடைந்தார்.

பெருமாளை நேரில் பார்த்ததும் பாவாஜி சந்தோஷத்தில் "வாங்க பாலாஜி' என்று வரவேற்றார். அவரை ஆசனத்தில் அமரச் செய்து பழவகை கொடுத்து உபசரித்தார்.

பெருமாள் அவரிடம், ""எப்போதும் கூட்டம், பூஜை, புனஸ்காரம் என்றே என் அன்றாடப்பொழுது போகிறது. விளையாட்டாகப் பொழுதைப் போக்க எண்ணியே உன்னை நாடி வந்திருக்கிறேன். பகடை விளையாடுவோமா?'' என்று அழைத்தார்.

பாவாஜிக்கு பேச்சே எழவில்லை. ஒரு கணம் திக்குமுக்காடிப் போனார். இறைவனே என்னுடன் விளையாடப் போகிறார் என்றால், அதை விட வேறென்ன கொடுப்பினை வேண்டும்! பகடைகளை எடுத்து வந்தார். சிரித்துப் பேசியபடியே அவர்கள் விளையாடினர். பொழுது போனதே தெரியவில்லை.

பொழுது புலரும் வேளை வந்தது. சுப்ரபாத நேரமானதால் சீனிவாசப் பெருமாளைப் பள்ளியெழுப்ப அர்ச்சகர்கள் கோயிலில் ஆயத்தமாயினர். ""ஆகா! நேரமாகிவிட்டது. இப்போது கிளம்புகிறேன், இரவில் வருவேன், மீண்டும் விளையாடலாம்,'' என்று சொல்லிவிட்டு பாலாஜி மறைந்து விட்டார்.

பகலில் கோயிலில் இருப்பதும், இரவானால் பாவாஜியைத் தேடிச் செல்வதும் பாலாஜியின் அன்றாடக் கடமையானது.

பாவாஜியின் பக்தியை உலகறியச் செய்ய பெருமாள் திருவுள்ளம் கொண்டார். அவருக்கு தெரியாமல் தன்னுடைய ரத்தின ஹாரத்தை(மாலை) குடிலில் வைத்துவிட்டுச் சென்றார்.

சுப்ரபாதபூஜைக்கு வந்த அர்ச்சகர்கள் பெருமாளின் கழுத்தில் ஆபரணம் இல்லாதது கண்டு அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு செய்தி சென்றது. திருடனைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். ரத்தினஹாரத்தைக் குடிலில் கண்ட பாவாஜி, அதனைக் கோயிலில் ஒப்படைப்பதற்காக புறப்பட்டார்.
ஆபரணத்துடன் வந்த பாவாஜியைக் கண்ட காவலர்கள் மன்னரிடம் அழைத்துச் சென்றனர். பாவாஜி, தினமும் இரவு பெருமாள் தன்னைத் தேடிவரும் விஷயத்தைக் கூறினார். மன்னருக்கு பாவாஜி மீது நம்பிக்கை வரவில்லை. அவரிடம், "" இப்போது சோதனை ஒன்றை வைக்கிறேன். ஒரு கட்டு கரும்பு உம்மிடம் தருவேன். இன்றிரவுக்குள் பெருமாள் அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, நாங்கள் அனைவரும் உமது பேச்சை நம்புவோம்,'' என்றார்.

அதன்படி ஒரு அறையில் ஒரு கட்டு கரும்பு வைக்கப்பட்டு பாவாஜியும் சிறை வைக்கப்பட்டார்.
பெருமாளை தியானித்தபடியே ஒரு மூலையில் பாவாஜி அமர்ந்து விட்டார். சீனிவாசப்பெருமாளின் அருளால் யானை ஒன்று அங்கு வந்து கரும்புகளைத் தின்று முடித்தது. காவலர்கள் அதிசயித்து மன்னரிடம் தெரிவித்தனர். பாவாஜியின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்த மன்னர் விடுதலை செய்தார். இதன்பின் நீண்ட காலம் புகழுடன் வாழ்ந்த பாவாஜி, சீனிவாசப் பெருமாளின் திருவடியில் கலந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக