வியாழன், 30 ஆகஸ்ட், 2012

எல்லாம் கண்ணனே! - முருகசரணன்


ஸ்ரீராமானுஜர் காலையில் கீதை வகுப்பும், மாலையில் அருளிச் செயல் (திவ்யப் பிரபந்தம்) வகுப்பும் நடத்துவது வழக்கம். காலையும் மாலையும் குரு  சீடர்களிடையே வினாக்கள்-விடைகள்- கலந்து வருவதுண்டு.
காலைக் கதிரவன் போல் வெப்பமுடையது சமஸ்கிருதம். அதனால் காலையில் கீதை. மாலை மதியம்போல் குளிர்ந்தது தமிழ். அதனால் மாலையில் அருளிச் செயல் வகுப்பு எனச் சான்றோர் கூறுவர்.

ஒருநாள் காலை... கீதை வகுப்பு நடந்தது. ""பஹூனாம் ஜன்மனாம் அந்தே' என்று தொடங்கும் சுலோகத்தில் "வாசுதேவ: ஸர்வம்' என்ற இடம் வந்தது. ""பல பிறவிகளின் முடிவில் பற்றற்ற ஞானி "எல்லாம் வாசுதேவனே' என்று உணர்ந்து பரமபதம் அடைகிறான்; அவனுக்கு மீண்டும் பிறப்பில்லை'' என விளக்கம் சொல்லப்பட்டது.

சீடர் குழாமில் ஒருவர், ஸ்ரீராமானுஜரைப் பார்த்து "ஸ்வாமி... எல்லாம் வாசுதேவனே என்கிறீர்கள்... எல்லாம் என்றால் என்ன? எந்த எல்லாம்?' என்று சந்தேகம் கேட்டார். உடனே ஸ்ரீராமானுஜர்,

""உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம்.
கண்ணன் எம்பெருமான்......'' என்று தொடங்கும் திருவாய்மொழியை எடுத்துக்காட்டி, ""உண்ணும் சோறு (உடம்பைக் காக்கும் தாரகம்), பருகுநீர் (உயிரைக் காக்கும் தண்ணீர்), தின்னும் வெற்றிலை (உவகைக்காகப் போடப்படும் வெற்றிலைப் பாக்கு) ஆக தாரக போஷக போக்யமெல்லாம் கண்ணனே வாசுதேவனே'' என்று தெளிவாக விளக்கம் கூறினார்.

கீதையில் வந்த ஐயம் திருவாய்மொழி மூலம் நீங்கியது. அனைவரும் தெளிவும் அமைதியும் பெற்றனர். தம் வாழ்வின் நிறைவில் சீடர்களிடம் ராமானுஜர், "தினமும் அருளிச் செயலே ஓதி உய்வீர்' என்றும் கூறியுள்ளார்.
ஸ்ரீராமானுஜர் அரங்கத்தில் ஸமஸ்கிருதம் பிரசங்கம், மந்திர உபதேசம் செய்திருக்கலாம். ஆனால் அவர் அந்தரங்கத்தில் தமிழே ஆட்சி செலுத்தியது என்பதை கற்றோரே அறிவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக