வியாழன், 30 ஆகஸ்ட், 2012

தீராத விளையாட்டுப் பிள்ளை!


லீலாசுகர் சிறந்த கிருஷ்ண பக்தர். அவர் தன்னுடைய நூலில் கிருஷ்ணனின் லீலைகளை அழகாக விவரிக்கிறார்.

வெண்ணெய் திருடுவதற்காக ஒரு வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன். பரணில் ஒளித்து வைத்திருந்த வெண்ணெய்ப் பாத்திரத்தைக் கண்டுபிடித்து வெண்ணெயை எடுப்பதற்காக பாத்திரத்தில் கை நுழைத்தான். 

அப்போது வீட்டுக்கு சொந்தக்காரி வந்துவிட்டாள். அதிர்ச்சியடைந்தவள், ""யாரடா நீ?'' என்று கண்ணனைப் பார்த்துக் கேட்க, அதற்கு கண்ணன் சொன்ன பதில் சிரிப்பை வரவழைக்கும். ""என் கன்றுக்குட்டியைத் தேடி வந்தேன். பாத்திரத்தில் கைவிட்டுப் பார்த்தேன். அதில் கன்றுக்குட்டி இல்லை. நான் போய் வருகிறேன்''.

யசோதையின் மடியில் கண்ணன், பால் குடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்தான். ""கண்ணா நீ பால்குடித்தால்தான் தலை மயிர் நன்றாக வளரும்'' என்றாள் யசோதை. அதன்பின் கொஞ்சம் பாலைக் குடித்த கண்ணன்,உடனே தன் தலையைத் தடவிப்பார்த்துவிட்டு, "அப்படியொன்றும் முளைக்கவில்லையே' என்றதும் யசோதை சிரித்துவிட்டாள்.

யசோதையின் வீட்டில், தரையில் ரத்தினங்களும் மணிகளும் பதிக்கப்பட்டிருந்தன. அதனால் தரை பளபளவென்று மின்னியது. தரையில் தவழ்ந்து செல்கிறான் குழந்தை கண்னன். அவனுடைய தாமரை போன்ற பிஞ்சு முகம் கண்ணாடி போன்ற அந்தத் தரையில் பிரதிபலித்தது. அங்கே இன்னொரு குழந்தை இருக்கிறது என்று நினைத்தான் கண்ணன். அந்த இன்னொரு குழந்தையை கைகளால் பிடிக்க முயற்சி செய்தான். பிம்பத்தை எப்படிப் பிடிக்க முடியும்? அந்தக் குழந்தை (பிம்பம்) கைக்கு வராததால், உரக்க அழுதான் கண்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக