சனி, 14 டிசம்பர், 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 12

யதுகுலத்தை தேடி வந்த பகவான், நம்மைத் தேடி வருவானா! நிச்சயமாக! தனக்கு விருப்பமிருப்பவர்களை நோக்கி அவன் வருவான். விதுரனின் குடிசைக்கு வந்தான். பிரகலாதன் தூணை நோக்கி கை காட்டியபோது, அங்கே வந்தான். இப்படி, அவன் நம்மையும் நோக்கி வரவேண்டுமானால், நமக்கு என்ன தகுதி வேண்டும்?

மற்றதில் வெறுப்பு, பகவானிடத்தில் விருப்பம் வேண்டும். இதைத்தான் "விருப்பு வெறுப்பு' என்கிறார்கள். திருப்பாணாழ்வாரின் கண்களுக்குள் அவனது திருவடிகள் வந்து புகுந்தன. காரணம், அவன் மீதான விருப்பம். அந்த விருப்பம் நமக்கும் வேண்டும்.

பகவானுக்கு விருப்பமானது என்ன?

மரம் நடு, பசுக்களுக்கு பாதுகாப்பு கொடு, தானம் செய், உபவாசம் இரு...இப்படி சில. இந்த தர்மங்களை அவன் சார்பில் நாமே செய்ய வேண்டும். அதன் பலனையும் அவனிடமே சமர்ப்பிக்க வேண்டும். இதை விட்டு, தர்மத்தை கடைபிடிக்கிறோம் என்ற பெயரில், பெயருக்கு ஜபம் முதலானவற்றைச் செய்யக்கூடாது.

சனாதன தர்மம் (இந்துமதம்) என்பது அனாதியானது (தோன்றிய காலம் தெரியாதது). ராமனையும், கிருஷ்ணனையுமே சனாதன தர்மம் என்று சொல்லலாம். சிலருக்கு சனாதன தர்மத்தின் மீது சில சந்தேகங்கள்...

"கிருஷ்ணன் பொய் சொன்னாரே! ராசக்கிரீடை (பெண்களுடன் நடனம்) பண்ணினாரே! 16001 பேரை திருமணம் செய்தாரே!' என்று.

வேதவியாசர் இதற்கு பதிலளிக்கிறார். அவன் திருடினால் நம் பாவங்கள் திருடப்படும். கர்மங்கள் என்ற பாவம் அவரைத் தீண்டாது. அவரது உலகில் வசிக்கும் நித்யசூரிகளுக்கும் (பகவானுடன் கலந்தவர்கள்) பாவம் அண்டாது.

சுகப்பிரம்மரிடம் பரிட்சித்து மன்னன் இந்த சந்தேகங்களைக் கேட்டான். அதற்கு சுகர், "ஆத்மா பரமாத்மா' சம்பந்தம் பற்றி எடுத்துச் சொன்னார். 16001 பேரை திருமணம் செய்கிறார் என்றால், அவர்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு கிடையாது. ஜீவனுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பே அது. ஜீவனுக்கு உருவம் உண்டா...உயிர் போய்விட்டது என்கிறோம். ஆனால், அந்த ஜீவனை உடலுக்குள் இருக்கும்போதோ, அது போய்விடும் போதோ பார்க்க முடியுமா! அது மட்டுமல்ல!

அன்றைக்கு கண்ணனுக்கு வயது எட்டு. கோபியருக்கு வயது 6. பத்து வயதிலேயே அவர் ஆயர்பாடியிலிருந்து மதுராபுரி வந்து விட்டார். அவர்களுக்குள் என்ன உறவு இருக்க முடியும்! இதுபோன்ற சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள, புத்தகங்களை சரியாகப் படிக்க வேண்டும். குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்றே இதுபோன்ற புகார்களை சனாதன தர்மத்தின் மீது சுமத்துகிறார்கள். ஆக, முட்டாள்கள் நாம் தான்! பெருமாள் மீது குற்றம் சொல்லக்கூடாது. ஒருசமயம் துஷ்யந்தன் மக்களைப் பார்த்து சொன்னான்..என்ன தெரியுமா?

""பிரஜைகளே! யார் வீட்டிலாவது தாய், தந்தை, பெண், குழந்தை என யார் இறந்தாலும், நானே அதுவாகிறேன், சாஸ்திரம் சம்மதித்த உறவாக இருக்கிறேன். கணவன் மனைவி உறவைத் தவிர..'' என்று. அப்படி அவன் சொன்னான் என்பதற்காக, அவன் நிஜத்தந்தை, நிஜத்தாய், நிஜத்தங்கை ஆகிவிடுவானா! மக்கள் மீது கொண்ட, அன்பின் காரணமாக, அந்த உறவை நிரப்ப நான் வருகிறேன் என்கிறான். ஆனால், கண்ணன் கோபியரிடம் பழகியதன் மூலம் கணவன், மனைவி உறவாகவும் இருக்கிறான். திருக்குறுங்குடிக்கு போய், பெருமாள் சிலையைப் பார்க்கும் ஒரு பெண், ""பெருமாள் எவ்வளவு அழகாக இருக்கிறார்?'' என்றால், அவளது கணவன் அவளைப் பார்த்து சந்தேகப்பட முடியுமா! ஏனெனில், எம்பெருமான் தானே எல்லாருக்குள்ளும் நீக்கமற நிறைந்துள்ளான்.

நமக்கு தான் பாவ, புண்ணியம் பிடிக்கும். பகவானின் கோபம் என்பது பாவம், விருப்பம் என்பது புண்ணியம். பகவானுக்கு பாவம், தோஷம் என்பதெல்லாம் கிடையாது. அதனால் தான் "குறையொன்றுமில்லாத கோவிந்தா' என்கிறோம். கண்ணனின் அருள் நமக்கு நிறைய கிடைத்து விட்டால் குறையொன்றுமில்லை. மேடு பள்ளம் என்பது என்ன தெரியுமா? கண்ணன் மேடு, நாம் பள்ளம். நம் பள்ளத்தை சரி செய்துவிட்டால், பகவானுடன் இணைந்து வைகுண்டத்தில் இன்பமாக வாழலாம். சரி...எப்படியோ பாவங்களைச் செய்து விட்டோம். அதற்கு பிராயச்சித்தம் இருக்கிறதா?

பிராயச்சித்தம் என்பதன் பொருள் நமக்கு தெரிய வேண்டும். பிராயம் என்றால் "பாவம்'. "சித்தம்' என்றால் "மாற்று'. பாவத்துக்கு மாற்று. இப்படி பாவத்துக்குரிய மாற்றைச் செய்யும் போதும் அதில் பாவம் தொற்றி விடக்கூடாது. தர்மம் செய்யும்போது, அதர்மம் வந்துவிடக்கூடாது. உதாரணத்துக்கு, தர்மம் செய்யும்போது, பேசிக்கொண்டே கொடுக்கக்கூடாது. இதுபோல் சில விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். தவளை இரண்டடி ஏறும், மூன்றடி விழும் என்பது போல, பிராயச்சித்தம் பண்ணப்போக மீண்டும் பாவத்தில் விழக்கூடாது.

பிராயச்சித்தத்தில் சிறந்தது பசு, காளைகளை பாதுகாப்பது. குறிப்பாக, அதுவரை பால் தந்து, கறவை நின்று போன மாடுகளைப் பாதுகாப்பது. இதையெல்லாம் விட சிறந்த பிராயச்சித்தம் என்ன தெரியுமா!

"பகவானே! உன் திருவடிகளைப் பற்றி விட்டேன்,'' என்று சொல்லிவிட்டால் போதும். பாவம் முழுமையாகத் தீர்ந்து விடும். இதைத்தான் "குறையொன்றுமில்லை'' என்கிறாள் ஆண்டாள்.

""நாங்களோ அறிவிலிகள், எங்களிடம் சீறியருளாதே,'' என்று உருகுகிறாள். எத்தனை பாவம் செய்தாலும், ஆண்டாளைப் போல் அவனைச் சரணடைந்து விட்டால் பாவங்களைத் தொலைத்து விட முடியும்.

"நான் நித்தமும் கீதை படிப்பேன், ஆனால், விடாமல் கவலைப்படுவேன்,'' என்று சொல்லக்கூடாது. கீதையைப் படித்த பிறகு கவலையையும் வரவழைத்துக் கொண்டால், அவனிடம் நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம். பகவானை நாம் விசுவாசிக்க வேண்டும், அவன் சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

புண்ணியம், பாவம் என்றெல்லாம் சொல்கிறோமே! நாம் செய்யும் செயல்களை பாவம், புண்ணியம் என்று எப்படி அடையாளம் தெரிந்து கொள்வது! வேதம் படிக்கணும், கவுதமரின் போதாயான சூத்ரம் படிக்கணும், மனு ஸ்மிருதியைப் படிக்கணும்... இப்படியெல்லாம் செய்தால் புண்ணியம் சேரும் என்கிறார்களே!

இதுபற்றியெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாதே! அப்படியானால் பாவ, புண்ணியம் என்பதை நிர்ணயித்துக் கொள்வது எப்படி!

இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சுலபம்... பகவானுக்கு பிடித்தால் அது புண்ணியம், பிடிக்காவிட்டால் அது பாவம்.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக