சனி, 14 டிசம்பர், 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 13

விதுரர் திருதராஷ்டிரரிடம் கேட்கிறார். ""உன்னை 13 வருஷம் காட்டுக்கு அனுப்பினால் சம்மதிப்பாயா? ஆனால், பாண்டவரை அனுப்புகிறாயே! அவர்களுக்கு நாட்டில் பாதியைக் கொடுப்பது தானே தர்மம்,'' என்று.

ஆம்..நம்முடைய சுகம் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தானே தர்மம்! அதுதானே புண்ணியம்! 

திருதராஷ்டிரன் செய்தது பாவமல்லவா! 

பிராணிகளை இம்சை செய்வது, நகம் கிள்ளுவது, ஜமுக்காளத்தை பிய்ப்பது, பாயைக் குச்சியாக்குவது, புழு, பூச்சிகளைக் கிள்ளுவது இதெல்லாம் பாவம் என்கிறது சாஸ்திரம். புழு, பூச்சிகளைக் குத்தும்போது அவற்றுக்கு வலிக்குமே...இதே போல நம்மைக் குத்தினால் எப்படியிருக்கும் என்று எண்ணுவது பாவம்.

"எல்லாமே பகவான் செயல் என்றால், பகவானே இப்படி மனிதனை பாவச்செயல்களை எல்லாம் செய்ய வைக்கிறாரா?' என்று ஒரு சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. நிச்சயமாக இல்லை. இது பகவத் சங்கல்பம் அல்ல. மனித சங்கல்பம் தான். பகவானே நேரடியாக வந்து "இப்படி இப்படி செய்யாதே' என்று சொல்லமாட்டார். அதற்காகத்தான் சாஸ்திர புத்தகங்கள் நம்மிடம் உள்ளன. அவை என்னென்ன செய்ய வேண்டும் என்று போதிக்கின்றன. 

""நீ கல்லா கட்டையா ஆடா மாடா..நீ தப்பு செய்யக்கூடாது,'' என்று தானே புத்தகம் போட்டிருக்கிறேன். நீ தான் திருந்த வேண்டும்,'' என்று தான் பகவான் சொல்வார். அது மட்டுமல்ல! ஆச்சார்யர்களை அனுப்பி, அவர்கள் மூலம் நமக்கு நல்லதைப் போதிக்கிறார். சில சமயங்களில் அவரே பிறக்கிறார். அவர்களைத் திருத்தவே அவர் பிறக்கிறாரே தவிர, மேய்ப்பதற்காக அல்ல.
"நம் தவறுகளுக்கு காரணம் என்னைப் படைத்த அந்தக் கடவுள்' என்று சொல்லி, தப்ப முடியாது. "உடலை அவர் கொடுத்துள்ளார். அதைப் பயன்படுத்தும் அறிவையும் கொடுத் துள்ளார். இந்த இரண்டையும் நல்வழியில் பயன்படுத்தினால், செயல்கள் நன்றாக அமையும்.

நம்மிடம் நல்ல நிலம் இருக்கிறது. அதில் விதை போட்டால் மரம் வளரும். நிலம் என்பது பழைய கர்மம், விதை என்பது சரீரம், மரம் என்பது காரியம். நல்ல விதை போட்டால் நல்ல மரம், இல்லாவிட்டால் முள் மரம். உடலைப் பயன்படுத்தி நல்வினை புரிந்தால் நற்கதி, இல்லாவிட்டால் பாவமூட்டை. இந்த நாடகத்தில் பகவானும் ஒரு பாத்திரமாக உள்ளான். ஒருவன் செய்த பாவ புண்ணியங்களை, நடுவஸ்தனாக இருந்து ஆனந்தமாக வேடிக்கை பார்க்கிறான். பாவம் செய்தால், இழுத்து பிடித்து வந்து தண்டனை கொடுப்பான்.

ஒரு ஆற்றில், "இந்த இடத்தில் குளிக்காதே' என்று பலகையில் எழுதி எச்சரிக்கை செய்துள்ளனர். நாம் அந்த இடத்தில் போய் இறங்கி விட்டு, "பலகையே என்னைக் காப்பாற்று' என்று கத்தினால் காப்பாற்றுமா! பலகை என்பது நமக்கு ஏற்கனவே நல்ல வழியைக் காட்டி விட்டது. அங்கே நாம் இறங்கியிருக்கக் கூடாது. என்ன வந்து விடும் என எச்சரிக்கையை மீறி இறங்கும் போது, உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது. அதுபோல், கடவுள் சாஸ்திர புத்தகங்கள் மூலம் நம்மை எச்சரிக்கிறான். அதை மீறி நடந்து, "வேதமே என்னைக் காப்பாற்று' என்றால் அது வருமா? "எச்சரிக்கை பலகை ஒரு பக்கம் இருக்கட்டும், நீயே வந்து என்னைக் காப்பாற்ற வேண்டியது தானே!' என்று பகவானைக் கேட்க முடியுமா? செய்யக்கூடாதது என தெரிந்தும், அதைச் செய்து பாவமூட்டையைச் சம்பாதித்து, "எல்லாம் இவனால் வந்தது' என்று பகவானை எப்படி குற்றம் சொல்ல முடியும்!

சரி...வேதம், புத்தகம், எச்சரிக்கை பலகை இதையெல்லாம் எனக்கு படிக்கத்தெரியாது. நான் இறங்கி விட்டேன் என்று சொல்பவன், பாவத்தில் விழாமல் தப்பிக்க வேண்டுமானால் ஒரு வழி இருக்கிறது. நீயே கதி என்று அவனைச் சரணடைந்து விட்டால், அவன் காப்பாற்றுவான்.

நமது கர்மங்களே நமக்கு ஜென்மத்தைத் தருகின்றன. ஜென்மம் எடுத்தால் துன்பம் வருகிறது. அந்தத் துன்பம் எந்தப் பிறவியில் செய்த கர்மத்தால் வந்தது என்று ஆராய முடியுமா என்றால், அந்த ஆராய்ச்சியே தேவையில்லை. துன்பத்தால் ஏற்படும் துக்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி தான் சிந்திக்க வேண்டும். அதற்கு என்ன வழி? "நாராயணா' என்று சொல்லு. நீ காட்டில் சிக்கிக் கொண்டது போலவும், நெருப்பின் நடுவில் நிற்பது போலவும், நோய்வாய்பட்டும் கஷ்டங்களை அனுபவிக்கலாம். அப்போது, "நாராயணா' என்றால், உன் பாவத்தின் தாக்கம் குறையும். அதற்காக செய்த பாவம் போய் விடாது. அதன் விளைவை கடைசி வரை அனுபவித்தே தீர வேண்டும். "உடம்பு' என்ற ஒன்று கிடைத்த பிறகு நடக்கும் நிகழ்வுகளுக்கு அவரவரே பொறுப்பு. உடல் நல்லநிலையில் இருப்பதற்கும், நோய்வாய்ப்படுவதற்கும் காரணம் நாம் செய்த செயல்கள் தான்.

இன்னொரு சந்தேகம் நமக்குள் இருக்கிறது.

அது என்ன! ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி 150 பேர் இறந்து விடுகிறார்கள். பூகம்பம் ஏற்பட்டு ஒன்றரை லட்சம் பேர் மடிகிறார்கள், சுனாமியில் சிக்கி 2 லட்சம் பேர் மாள்கிறார்கள். அப்படியானால், இவர்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியான கர்மம் செய்தவர்களா என்று ஒரு கேள்வி.

இதற்கு ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தில், ""கண்ணுக்குத் தெரியாத காரணங்களைத் தேடி ஓடாதே,'' என்று பதிலளிக்கிறார். விமானத்தில் பழுது ஏற்பட்டு விட்டது, அதனால் விபத்து நிகழ்ந்தது என்பது நமக்குத் தெரிந்த காரணம். அந்த அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தெரியாத காரணங்களைத் தேடி ஓடக்கூடாது. 

இப்படி ஒரு பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்று கேட்கலாம். முடிவுகள் என்பவை நம்மால் எடுக்கப்படுபவை. அதன்படியே செயல்பட்டோம். இந்த செயலுக்குரிய விடை ஆயிரம் ஆண்டுகள் கழித்துக் கூட கிடைக்கலாம், உடனேயும் கிடைக்கலாம். கஜேந்திரன் யானை, மடுவில் இறங்கியது அதுவாக எடுத்த முடிவு. 

அதை முதலை பற்றிக்கொண்டது. ஆயிரம் ஆண்டுகள் போர் நடந்தது. வேறு வழியில்லை என்ற போது "ஆதிமூலமே' என்று கதறிய நிலையில், பகவான் லட்சுமியோடு கருடன் மீது வந்து விட்டார். அதுவரை பட்ட துன்பத்துக்கு விடிவு கிடைக்க ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டது. அதே போல், இதுபோன்ற கேள்விளுக்குரிய விடைக்காகவும் நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

சில சமயங்களில் உடனே முடிவு கிடைக்கிறது. 

பிரகலாதன் அழைத்தவுடனேயே யாரும் இல்லாமல் தனியாகவே வர முடிவெடுத்தான் பகவான். இப்படி முடிவெடுப்பவன் அவனே! 

அதில் யாரும் தலையிட முடியாது.

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக