சனி, 14 டிசம்பர், 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 14

சிலர் உயர்ந்த குலத்தில் பிறக்கிறார்கள். சிலர் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். சிலர் பணக்காரராக இருக்கிறார்கள். இவை இல்லாதவர்கள், அவர்களைப் பார்த்து அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று ஆச்சரியப்படுகிறார்கள், நமக்கு இல்லையே என்று வருத்தமும் படுகிறார்கள். "ரமணீயம்' எனப்படும் உயர்ந்த பிறவிக்கு காரணம் மிக எளிமையானது.

""நான் எப்படி நடக்கிறேனோ அதன்படியே இவ்வாறான உயர்பிறவியை அடைகிறேன்,'' என்பதே இதற்குரிய பதில்.

ஆம்...கர்மங்களே நம் பிறப்பையும், வாழ்வு முறையை யும் தீர்மானிக்கிறது. அவை நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் தான் கர்மங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். ஆனால், பகவான் நினைத்தால் இந்த கர்மங்களின் விளைவை மாற்றவோ, திருத்தவோ செய்து விடுவான்.

இந்த கர்மங்களை நாம் கழித்தாக வேண்டுமே என்றால் அது கழிந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு இன்பகரமான நிகழ்வு நடந்தால், ஒரு கர்மம் தீர்கிறது. அதேபோல, ஒரு துன்பகரமான நிகழ்வு நடந்தாலும் ஒரு கர்மம் தீர்கிறது. அதனால் தான் பண்டிதர்கள் ரொம்பவுமே சிரமப்பட்டார்கள். ஆனாலும், அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர். ராமானுஜர், சங்கரசாச்சாரியார் போன்றவர்களெல்லாம், துன்பப்பட்டாலும் சிரித்தனர். 

கர்மங்களும் அநாதி, பகவானும் அநாதியானவர். அதாவது, அவற்றுக்கு காலநிர்ணயம் இல்லை. எத்தனையோ பிறவிகளாக கர்மத்தின் பிடியில் சிக்கியிருக்கிறோம். பகவானுக்கும் பிறப்பு என்பது இல்லை. 

ஏன் இந்த பகவான், நம்மை இப்படியெல்லாம் பிறவியெடுக்கச் செய்து, கர்மத்தின் பிடியில் சிக்க வைக்க வேண்டும்? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும் வகையில் அவர் நம் வசப்படமாட்டார்.

நேர்நோடுகள் போய்க்கொண்டே இருக்கும். அது சந்திக்காது. அதுபோல் தான் பகவானும். அவரை நாம் அறிந்து கொள்ள முடியாது. எத்தனை மைல் போனாலும் இதே நிலை தான். மனிதன், தேவன், மரம், செடி, கொடி, விலங்கினம், பறப்பன, ஊர்வன என்று உயிர்கள் எத்தனையோ விதமாய் பிறக்கின்றன. இவற்றில் மனிதனாய் பிறந்தவன் தான், கடந்த பிறவிகளில், நிறைய புண்ணிய கர்மங்கள் பண்ணியிருக்க வேண்டும். 

ஒரு சிலர் சொல்கிறார்கள்... கடவுளாவது கர்மமாவது! கடவுள் என்ற ஒருவனே இல்லை என்கிறார்கள். அப்படியே இருந்தாலும், என்னை இவ்வாறு படைத்த அவன் குற்றவாளி என்கிறார்கள். கடவுளே இல்லை என்று சொன்னபிறகு, இல்லாத ஒருவனை குற்றவாளி என்று எப்படி பழி சுமத்த முடியும்!
வேதம் மட்டுமே கடவுளை நிரூபிக்கிற பிரமாணம். அவன் உறுதியாக இருக்கிறான். அவரை இல்லை என்பவர்கள் "அவித்யா' என்னும் அறிவின்மை உடையவர்களே. மனிதனுக்கு சில வாசனைகள் மறப்பதே இல்லை. வாசனை என்றால் பல பிறவிகளிலும் பழகியது என்று பொருள். ஒருவன் புலியாகப் பிறந்தாலும், முன்பிருந்த பிறவிகளில் இருந்த குணம் தான் அவனிடம் நீடிக்கும். இதை "துக்கச்சுழலை' என்பர்.

இந்த புத்தியிலிருந்து அவன் மீளமுடியுமா? திருந்த முடியுமா என்றால்... நிச்சயமாக முடியும்.
எப்படி முடியும்?

ஒரு ஸ்தாபனம் இருக்கிறது என்றால், அங்குள்ள பிரச்னை பற்றி முதலாளியிடம் தான் கேட்க முடியும். அதுபோல், மனிதன் தனது பிரச்னை பற்றி கடவுளிடம் தான் சொல்ல முடியும். கடவுளால் தான் அதைத் தீர்க்க முடியும்.

உதாரணத்துக்கு சில சம்பவங்கள்.

பாரதப்போர் முடிந்த பிறகும் கூட, திருதராஷ்டிரன் பாண்டவர்கள் மீது வெறுப்பாக இருந்தான். தன் பிள்ளைகளைக் கொன்ற பீமனை அழிக்க அவன் மனம் துடித்தது. பாண்டவர்கள் அவனை பார்க்க வந்த போது, பீமனை அணைக்கிற சாக்கில், தன் சக்தியை எல்லாம் திரட்டி, அவனை நொறுக்க முயற்சித்தான். அது அவனால் முடியவும் செய்யும். ஆனால், அங்கே கண்ணன் குறுக்கே வந்தான். பீமனைப் போன்ற ஒரு பொம்மையை அவன் முன் நிறுத்த, அதை அணைத்து நொறுக்கி விட்டான் திருதராஷ்டிரன். பிறகு காந்தாரியுடன் கானகம் போய், வானப்பிரஸ்தம் செய்து சொர்க்கமடைந்தான். பாவம் செய்தாலும், கடவுளால் பரிகாரம் கிடைத்தது.

கண்டாகர்ணன் என்பவன், தன் காதில் மணி கட்டியிருப்பான். அது அசைந்தபடியே ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும். கடவுளை அவனுக்குப் பிடிக்காது. யாராவது கடவுள் நாமம் சொன்னால், அது அவன் காதுக்கு கேட்டு விடக்கூடாதாம்! அதற்காக மணியைக் கட்டி, அதன் ஒலி மட்டுமே தன் காதுக்கு கேட்கும்படி செய்து கொண்டான். அவனைக் கூட பகவான் மோட்சத்துக்கு
அனுப்பினான். பகவானை நிந்தித்த சிசுபாலன் மோட்சமடைந்தான்.

அப்படியானால், தவறே செய்தாலும் கூட, கடவுள் நினைத்தால் சிலருக்கு மோட்சம் கிடைக்கிறது. இந்த அடிப்படையில் தான் கூரத்தாழ்வார்,""என்னிடம் பாவம் இருக்கிறது. உன் தயை இருந்தால் பரவாயில்லை,'' என்று கேட்டார். அவரைப் போலத்தான் நாமும் பெருமாளிடம் கேட்டாக வேண்டும். நமக்காக மகாலட்சுமி அவரிடம் சிபாரிசு செய்வாள். தன் குழந்தைகளுக்காக மன்றாடுவாள். அவளது கோரிக்கையை ஏற்று அவனும் நம்மை மன்னிப்பான். நாமும் மோட்சம் போய்விடுவோம்.

மோட்சம் செல்ல இன்னொரு வழியும் இருக்கிறது. 

"பாவங்களையே செய்து செய்து மீண்டும் மீண்டும் பிறக்கிறோமே' என்ற கவலை நம் மனதில் வந்தாலே போதும். பிறவியிலிருந்து மீண்டு விடுவோம்.

இன்னொரு பிரச்னையிலும், நாம் தீர்வு தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். அதாவது, உலகத்தில் நல்லது செய்பவனெல்லாம் துன்பத்தை அனுபவிக்கிறான். கெட்டதைச் செய்பவனெல்லாம் இன்பமாக இருக்கிறான். ஏன் இந்த பாரபட்சம் என்பது கேள்வி.

இதற்கு பதில் இருக்கிறது.

நல்லவர்களும் தீயவர்கள் இருக்குமிடத்தில் இருப்பதால், தீயவற்றின் பலனை அனுபவித்து தான் ஆக வேண்டியுள்ளது. விஷஜுரம் ஊருக்குள் பரவுகிறது என்றால், நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ பார்த்து வருவதில்லை. எல்லாரையும் ஆட்டி விடுகிறது. அதுபோல், கெட்டவர்கள் உலகில் இருக்கும்வரை நல்லவர்கள் அவர்களோடு சேர்ந்து சிரமத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
கங்கையில் போய் குளித்தால் பாவம் தீர்ந்து விடுமா...மோட்சம் கிடைத்திடுமா என்றால், கங்கை என்பது பெருமாளின் பாதம் பட்டு வருவது. கங்கை என்றாலே புண்ணியம் தான். இதில் நீராடுவது பாவத்தை தீர்க்கும். ஆனால், பொய் சொல்லாதே, திருடாதே, ஜீவ இம்சை செய்யாதே, மதுபானம் அருந்தாதே, பிறத்தியார் சொத்துக்கு ஆசைப்படாதே, கோயில் சொத்தை உனதாக்கிக் கொள்ளாதே, ஏழைக்கு உதவு, தண்ணீரில் குப்பை கிடந்தால் அதை எடுத்து வெளியே போடு! குளிக்கும் ஆறு, குளத்தில் மலஜலம் கழிக்காதே! குளிக்கும்போது இடுப்பில் துண்டைக் கட்டிக்கொள் என்பது போன்ற கடமைகளையும் சரிவரச் செய்தால் தான் பாவம் தீரும். அப்போது தான் ஆனந்தம் பிறக்கும்.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக