சனி, 14 டிசம்பர், 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 15


பாவமன்னிப்பைப் பற்றி சில விஷயங்கள் பேசுவோம்.

ஒரு பிறவியில் செய்த பாவத்திற்கு உடனடியாக பாவமன்னிப்பு கிடைக்காது. மரணத்திற்கு பிறகே கிடைக்கும். நாம் "சஞ்சித கர்மா' என்னும் பாவமூட்டையை சுமந்து கொண்டிருக்கிறோம். "சஞ்சித' என்றால் "சேமிக்கப்பட்ட' என்று பொருள்.

அரை விநாடி நேரத்தில் கூட ஒரு பாவச்செயல் நிகழ்ந்து விடும். ஆனால், அதன் பலனை அனுபவித்து தீர்க்க கல்பகோடி காலமாகி விடும். எனவே, நமது பிறவி நீண்டு கொண்டேதான் போகும். சஞ்சித கர்மா, "பிராரப்த கர்மா'வாக மாறும், "பிராரப்தம்' என்றால் "தொடக்கம்'. அதாவது, நம்மால் சேமிக்கப்படும் பாவங்கள், அனுபவிக்க அனுபவிக்க தான் தீரும். இடையில் முடிய ஏதாவது வழியிருக்கிறதா என்றால் "சரணம்' என்று பகவானைச் சரணடைந்தால், அது முடியும்.
அவ்வாறு சரணடையும் போது, ""இனிமேல், முன்பு போல் பாவங்களைச் செய்யமாட்டேன்,'' என்று மனதார உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு உறுதியளித்த பிறகு, பாவங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டால், மீண்டும் பிறவித்துன்பத்தில் உழன்றாக வேண்டும். சில பாவங்கள் தெரியாமல் செய்யப்படுபவை, நாம் நடந்து செல்லும்போது, பல ஜீவன்கள் நம் காலடியில் பட்டு உயிரிழக்கலாம், அவதிப்படலாம். இதுபோன்றவை தெரியமால் செய்பவை. இதுபோன்ற பாவங்களின் பலன்களில் இருந்து பகவானைச் சரணடைபவர்கள், வெட்டி விடப்படுவார்கள். ஆனால், தெரிந்தே உயிர்வதை செய்தால், இதர பாவங்களைச் செய்தால், கடுமையான துக்கத்தைத் தந்து அதன்பிறகே முக்தியளிப்பார்.

இன்னொரு தகவலை எல்லாரும் அறிய விருப்பமாக இருப்பீர்கள். 

""என் அப்பா, அம்மா எனக்கிடும் சாபங்களின் பலனை நான் அனுபவிப்பேனா!'' என்று கேட்பவர்கள் உண்டு. அவர்களுக்கு இது தான் பதில்... நமது பெற்றோர் மறைந்து சொர்க்கம் போய்விட்டால், அவர்கள் பிள்ளைகளைச் சபிக்க மாட்டார்கள். நரகத்திற்கு போனவர்களால் சபிக்க முடியாது. ஏனெனில், அவரே பாவம் செய்தவர். எனவே, சபிக்க அருகதையற்றவர் ஆகிவிடுகிறார். ஆனால், பிதுர் லோகத்தில் உள்ளவர்களுக்கு நம்மை சபிக்க அதிகாரம் உண்டு. காரணம், அவர்களுக்குரிய கடமையை நாம் செய்யாமல் இருப்பதால்! 

சரி...அவ்வாறு சாபம் பெறாமல் இருக்க, பிண்ட பிரதானத்தால் அவர்களை மோட்சத்துக்கு அனுப்ப முடியுமா என்ற கேள்வி எழும். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் இறந்து போனால், அவர் தனது பாவபுண்ணியக்கணக்கை தீர்த்த பிறகு தான் மோட்சத்தை அடைய முடியும்.
அப்படியானால், பிண்ட பிரதானத்தால் என்ன புண்ணியம் என்று கேட்பீர்கள். அது நீங்கள் ஒழுங்காக சொர்க்கம் போய் சேருவதற்குத் தானே தவிர, கிளம்பிப் போனவருக்காக அல்ல! நாம் நமது பெற்றோருக்குரிய கடமையை இங்கே சரிவர செய்தால் தான், அங்கே நமக்கு சொர்க்கம் கிடைக்கும்.
இன்னொரு சந்தேகமும் உண்டு. ஒருவரது தந்தை இறந்து விட்டார். அவருக்காக மகன் இங்கே கவ்யம் கொடுக்கிறான். அவரோ, அதற்குள் மறுபிறவி எடுத்து விட்டார். அப்படியானால், அது எப்படி அவரைச் சேரும்! பிதுர்லோகத்தில் இருந்தால் அது அவரைச் சேர்ந்து விடும் என நம்பலாம். மறுபிறவி, எடுத்த பின் எப்படி அவரை அடையும் என்பீர்கள். 

இதற்காகத் தான் தேவதைகள் இருக்கிறார்கள். அவர்கள் அதை அவ்யமாக (பிதுர்களுக்குரிய உணவாக) மாற்றி அவர்களிடம் சேர்த்து விடுவார்கள். அவ்வாறு நாம் கொடுக்காவிட்டால், பிதுர்லோகத்தில் உள்ளவர்கள், நம் பிள்ளைகள் நமக்கு சாஸ்திரப்படி கொடுக்கவில்லையே என கோபிப்பார்கள். இதைத் தான் "பிதுர் சாபம்' என்கிறோம்.

இவ்வாறு சாபம் பெற்றுவிட்டால் பிராயச்சித்தம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பிராயச்சித்தம் என்பதற்கு இரண்டு வித அர்த்தம். ஒன்று "பாவத்திற்கு மாற்று'. இன்னொன்று "பிராயம்' என்றால் "இளவயது'. இளவயதில் சாஸ்திரம் விதித்த கடமைகளைச் செய்யாமல் போனதற்கு மாற்று வழி.

சில வீடுகளில் அகால மரணம் நிகழ்கிறது. கண் பார்வையற்றவர்களாக, பிற ஊனங்கள் உடையவர்களாகப் பிறக்கிறார்கள். இதற்கு காரணம் சாபம் அல்ல. சாஸ்திரம் விதித்த தர்ம காரியங்களில் இருந்து தவறியதே. எனவே, பாவமே செய்யாமல் இருந்து, தர்ம காரியங்களை சரிவர செய்தால் தான் மோட்சம். பகவானைத் தான் சரணடைந்து விட்டோமே! இனிமேல், ஒன்றிரண்டு பாவம் செய்தால் தெரியவா போகிறது என்று நினைத்தால், இன்னும் பல பிறவிகளைக் கொடுத்து மோட்சத்தை தள்ளிப் போட்டு விடுவார். பகவானின் கோபமே பாவம். விருப்பமே புண்ணியம்.
ஆளவந்தார் சொல்வது போல, ஒரு தடவை பகவானை நோக்கி கைகூப்புங்கள். அவனைச் சரணாகதி அடையுங்கள். செய்த பாவமெல்லாம் மாறும். எத்தனை பாவம் செய்திருந்தாலும் மாறும்.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக