செவ்வாய், 24 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 13 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ண லீலையில் அற்புதலீலை என்றும் உடனடி மோட்சகதி என்றும் சிந்திக்கப்படுவது ராஜகிரீடை எனப்படும் கோபிகா ஜீவன ஸ்மரணமாகும். 
பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் வாழ்ந்த காலத்தில் பெண்கள் அனைவரும் அவனை விரும்பினர். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. இந்த பெண்கள் அனைவரும் திருமணமாகி கணவனே தெய்வம் என வாழ்ந்தவர்கள். இப்படிப்பட்ட பெண்களும் கிருஷ்ணனோடு சேர்ந்து வாழத் துடித்தனர். முன்பு கூறியது போல், கிருஷ்ணன் மானிட ஜென்மம் எடுத்து மதுரா, ஆயர்பாடி, பிருந்தாவனம், கோகுலம், துவாரகை ஆகிய இடங்களில் பூத உடம்போடு வாழ்ந்த நாட்களில் அவரைப் பார்த்தவர்கள் முதல் அவருடன் பேசிப் பழகியவர்கள் வரை அனைவரும் மோட்சகதிக்கு தகுதி பெற்றவர்களே!
இந்த பட்டியலில் பாண்டவர்களுக்கு எதிரான கவுரவர்களும், கிருஷ்ணனை இதற்கு மேல் ஒருவனும் திட்டமுடியாது என்னும் அளவுக்கு திட்டிய சிசுபாலனும் கூட அடக்கம் தான்.
கிருஷ்ணமாயா தான் சுற்றி இருப்பவர்களை அவரவர் போக்கில் இயக்கியது. கிருஷ்ணனின் பாணியில் சொல்வதென்றால், “நானே ஆடுகிறேன்! ஆட்டியும் வைக்கிறேன்!” என்பதே அது. அதன்படி கோபியர் கண்ணனை எண்ணி உருகியதெல்லாம் கூட அவனது இயக்கமே!
இன்று நாம் கிருஷ்ணனை அடைய வேண்டுமானால் அதற்கு பெரும் முயற்சி தேவை. பெரும் முயற்சி என்றால் அது அளவில் பெரிதானது அல்ல... பல விதங்களில் பெரிதான முயற்சி. முதலில் புலனடக்கம் வேண்டும். அதன்பின் மன அடக்கம் வேண்டும். மூன்றாவதாக முன் ஜென்ம கர்மவினைகளை அறிந்து, அவைகளைப் பாக்கியின்றி அழிக்க வேண்டும். இதற்கெல்லாம் நம் ஆயுள்காலம் போதுமா? யாருக்குத் தெரியும்... பல பிறவிகள் தேவைப்படலாம். 
அதற்கான அவசியம் இன்றி, அன்று கண்ணன் பூலோகத்தில் மானிடனாக நடமாடினான். அவனைக் காண்பதற்கே இன்று நாம் பல்லாயிரம் ஆண்டு காலம் தவம் செய்ய வேண்டும். அப்படியிருக்க அன்று கண்ணெதிரில் கண்ணன் நடமாடும் போது, அவனை விட்டு விட யாருக்குத் தான் மனம் வரும்?
இப்படிப்பட்ட நிலையில், பெண்கள் தங்களின் வயது, தோற்றம், நிலை என்று சகலத்தையும் துறந்து, “ஸ்ரீகிருஷ்ணா... நாங்கள் உன்னுடன் கலந்து விடுகிறோம்,” என்றனர். இப்படி ஒரு பெண் கண்ணனை எண்ணி உருகியதைப் பார்த்த அவளது கணவன் என்ன சொன்னான் தெரியுமா?
“அன்பே... நீ கண்ணனுக்குள் கலந்து விட்டால் உன் வழியே நானும் அவனுக்குள் கலந்து விடுவேன். அவனிடமிருந்தே நாம் அனைவரும் வந்தோம். திரும்ப அவனை எப்படி அடையப் போகிறோமோ என்று நான் கலங்கியிருந்த போது, உன் தூய பக்தியும், அவனோடு கலந்து விட நீ துடிப்பதும் என்னுடைய முக்திக்கே வழிவகுக்கும் செயலாகும்,” என்றான்.
கிருஷ்ணனைத் தவிர வேறு யாரையும் ஒரு பெண் நினைத்தால் அது காமம் என்னும் பாவமாகி விடும். ஏனெனில் கிருஷ்ணன் பரப்பிரம்மம்! அவனது வைகுண்டமே நித்ய சொர்க்கம். அவனது இருவிழிகளே சூரிய சந்திரராக இருக்கிறது. அவனது திருமேனியே அண்டசராசரமாக பரவி நிற்கிறது. எந்த உயிராக இருந்தாலும் முடிவில் கண்ணனை அடைந்து பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுபடுவதே படைப்பின் நோக்கம்.
பிருந்தாவனத்து கோபியர் பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுபட ஒரு வாய்ப்பாக அவர்களின் எதிரில் கிருஷ்ணனே நடமாடிக் கொண்டிருந்தான்.
எனவே தான் அவனோடு ஆடிப்பாடி அப்படியே காற்றாக மாறி அவனால் உள்ளிழுக்கப்பட்டு ஐக்கியமாக கோபியர் துடித்தனர். கோபியர் என்றால் 'ஐக்கியர்' (இரண்டற கலப்பவர்) என்னும் பொருள் உண்டு.
கிருஷ்ணன் பல கோபியர்களைச் சீண்டினான். அவர்களுக்குள் சலனத்தை தோற்றுவிக்கப் பார்த்தான். அதுவும் ஒரு சோதனை தான்.
“கோபிகா.... இப்படி நீ என்னோடு கிடந்தால் உன் கணவன் கோபிக்க மாட்டானா? கணவனே கண் கண்ட தெய்வமல்லவா?” என்று ஒருத்தியிடம் கண்ணன் கேட்டான்.
“அந்த தெய்வம் தான், உன்னை விட்டு விடாதே என்று என்னை அனுப்பி வைத்துள்ளது. தெய்வமான நீ என்னை ஆட்கொண்டால் ஏழேழு தலை முறைக்கும் விடுதலை கிடைக்குமே கண்ணா,” என்றாள் அந்த கோபிகை.
இந்த கோபியர் விஷயத்தில் நிறைய புராணப் பின்புலம் உண்டு.
அந்த நாளில் தாருகாவனத்தில் பதினாறாயிரத்து நூறு ரிஷிகள் தவமிருந்தனர். அப்போது சிவன் அசுரன் ஒருவனை அழிக்க முற்பட, உதவியாக திருமால் மோகினியாக எழுந்தருளினார். அவரது அழகில் ஈடுபட்ட ரிஷிகள் தவத்தை விட்டனர். ஆனால், ரிஷிகளை திருமாலால் அப்போது ஆட்கொள்ள முடியவில்லை. 
கிருஷ்ணாவதார காலத்தில் அவர்களை கோபியர்களாக அவர்களைப் பிறக்கச் செய்து ஆட்கொள்வதாக திருமால் வரம் அளித்ததாகச் சொல்வர்.
கோபியரில் பலவகை உண்டு. ஸ்ருதி, ரிஷி, மைதிலம், கவுசலம், அயோத்யம் என்பன அவை. இதில் ஸ்ருதி கோபியர் ரிஷியாக இருந்த நேரத்தில் விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனம் காண விரும்பியவர்கள். 
இவர்களை துவாரகையில் பிறக்கச் செய்து இவர்களுக்கு அளித்த வாக்கின்படி, இவர்களோடு ஜலக்கிரீடை புரிந்து கோலாட்டம் ஆடி மகிழ்ச்சியில் ஆழ்த்தி விஸ்வரூப தரிசனம் காட்டியருளினான். 
ரிஷிகோபியர் என்பவர்கள் ராமன் வனவாசம் சென்ற போது காட்டில் அவனை தரிசனம் செய்தார்கள். சீதை போல தாங்களும் சேவை செய்ய வரம் தர வேண்டும் என்று வேண்டினர். அப்போது ராமன், “இப்போது அதற்கு வாய்ப்பில்லை. அவதார நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். கிருஷ்ணாவதாரத்தில் கோபியராகப் பிறந்து என்னை வந்தடைவீர்கள்,” என்று வாக்களித்தான் அன்றைய ராமன்! அவர்களே ரிஷிகோபியர் என்றாயினர்.
ராமன் வில்லொடித்த விஷயம் நமக்குத் தெரியும். அப்போது சீதை மட்டுமல்ல...
அங்கிருந்த பெண்கள் ராமனின் அழகிலும், அறிவிலும் மயங்கி மானசீகமாக காதலித்தனர். அவர்களே துவாரகையில் கோபியராகப் பிறந்து மாயகிருஷ்ணனோடு உறவாடிப் பிறவாநிலை அடைந்தனர். இவர்கள் மைதில கோபியர் எனப்படுவர்.
ராமன் கவுசல தேசம் வழியே செல்லும் போது, பெண்கள் அவனைக் கண்டு மனம் பறி கொடுத்தனர். அதனால் மண வாழ்வில் ஈடுபடாமல் கன்னியாக இருந்து உயிர் துறந்தனர். அவர்களும் கோபியராக பிறப்பெடுத்து கண்ணனோடு உறவாடிக் கலந்தனர். அவர்கள் கவுசல கோபியர் எனப்பட்டனர்.
அயோத்தி வாழ் பெண்களில் பலர், இவ்வாறே ராமனின் பேரழகைக் கண்டு வியந்தனர். அவனே முழு முதல் ஆண்மகன் என்பதை உணர்ந்து வாழத் தொடங்கினர். அவர்கள் துவாரகையில் கோபியராகப் பிறந்து கிருஷ்ணனுடன் இரண்டறக் கலந்தனர்.
இவர்களை அயோத்யா கோபியர் என்பர்.
கிருஷ்ண லீலையின் கோபிகா ஜீவன ஸ்மரணம் என்பது இப்படி பலவித முற்பிறவிச் சம்பவங்களுடன் இணைந்த நிகழ்வாகும். 
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக