திங்கள், 2 டிசம்பர், 2019

ஆண்டாள் பாசுரங்களில் இயற்கை - முனைவர் க.மீனாகுமாரி

உலக உயிர்களையும் உலகளந்தானையும் தம் பக்தித் திறத்தால் ஆண்டதால் ஆண்டாள் என்று பெயர் பெற்ற கோதை நாச்சியார், எம்பெருமானின் இயல்புகளையும் அவனது உத்தமக் குணங்களையும் இயற்கையோடும் உலக நடப்போடும் கலந்து கலந்து உயிர்களான மக்களுக்கு ஊட்டியவர். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் அருந்தமிழ்ப் பாசுரங்களாகிய பாவையும், நாச்சியார் திருமொழியுமாகிய இரண்டு நூல்களிலும், இயற்கையில் எழிலை இறைமையோடு கலந்து தரும் அன்புகலந்த பக்தியின் வெளிப்பாட்டைக் காணலாம்.


பொதுவாக மனிதனின் வாழ்வு இயற்கையோடு ஒன்றியது. மானுடச் செயல்பாடுகள் அனைத்திலும் இயற்கையின் பங்கும் பணியும் அளவிட இயலாதது. பிறப்பால் தன்னை இயற்கைக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளும் மனிதன், தன் எண்ணங்களுக்கும் இயற்கையின் வழி முக்கிய இடம் தந்தான். அந்த வகையில் மனிதனின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் பின்னணியாக இயற்கை சங்ககாலம் தொட்டு பல கவிஞர்களால் கையாளப்பட்டு வந்துள்ளமையைக் காணலாம்.

மனிதனுக்கும் இயற்கைக்குமுள்ள தொடர்பு தாயின் தொப்புள் கொடிக்கும் குழந்தைக்குமான தொடர்பு போன்றது என்பார் கவிஞர் ஒருவர். மனித வாழ்விலிருந்து பிரித்தரிய இயலாத இயற்கையின் எழிற் கோலங்களை - அதன் அற்புதங்களை, மாலவன் மீதுள்ள மையலால் பாடிப் பரவசப்பட்ட ஆண்டாள், பலவகைகளில் தன் அமுத வார்த்தைகளால் சித்திரிக்கும் பாங்கினைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். 


1. இயற்கையின் காட்சியழகை வருணிப்பது. 


2. இயற்கையின் அழகைச் சொல்லிக் குறிப்பாகக் கருத்தைத் தெரிவிப்பது. 


3. இயற்கையின் இறைவனுடன் இணைத்துக் காண்பது. 


4. இயற்கையை உவமையாகப் பயன்படுத்துவது. 


1. இயற்கையின் காட்சியழகை வருணிக்கும் பாங்கு :


பொழுது புலரும் விடியலின் காட்சிகளை, அஃறிணை உயிர்களின் வாழ்வுப் படலத்தை உயிர் நீராகிய மழையின் பொழிவை ஆண்டாள் தன் பாசுரங்களில் பக்தியுணர்வோடு எடுத்துரைத்துள்ள பாங்கு நினைந்து போற்றுதற்குரியது.


மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்று கோதையின் பாவைப் பாடலின் தொடக்கமே இயற்கையின் நலம் செறிந்த அழகுக் காட்சியை முன் வைக்கிறது. தன்னையொத்த பெண்டுகளையெல்லாம் பாடலால் தட்டியெழுப்பும் சுடர்க்கொடி விடியலின் பொலிவைப் பல கோணங்களில் எடுத்துரைக்கக் காணலாம். பொதுவாக விடியலின் வருணனை ஆண்டாளின் பாவைப் பாடல்களில் சிறப்பிடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.


தன் தோழியரைப் பாவை நோன்பு நோற்க அழைக்கப் புறப்பட்டவளின் மனம் விடியற் பொழுதில் இயற்கையின் ஒவ்வொரு கூறும் எவ்வண்ணமாய் இயங்குகின்றதென்பதை வார்த்தை வண்ணங்கள் குழைத்து வடித்த சித்திரமாய்த் தீட்டிக் காட்டுகிறது. முதலில் வாகைக் காட்சியாக, 'வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று' என்று நிலவு மறைந்து கதிரவன் உதயமாவதற்கு இடைப்பட்ட பொழுதில் உலகுக்கு ஒளியூட்டும் வெள்ளி என்ற கோள்மீனின், உதயத்தைச் சுட்டுகின்றாள்.


அதைத் தொடர்ந்து, பறவைகள் மனித உயிர்களைத் தட்டியெழுப்பும் இசைப் பணியைச் செய்வதுபோல அவற்றின் ஒலி வடிவக் காட்சியை மிக நுட்பமாகச் சித்திரிக்கின்றாள் ஆண்டாள்:


'கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ?' 


என்று சொல்லி, அரிய ஆனைச் சாத்தன் என்ற பறவைக் கூட்டத்தின் விடியற்காலப் பேச்சொலியாகிய பேரொலியை வார்த்தைகளில் வடித்துக் காட்டும் ஆண்டாளின் சித்திரிப்பு அலாதியானது. மேலும் கோழி அழைத்தலும், குயில் கூவுதலும் விடியலின் ஒலி மொழிகளாய் வெளிப்படுவதை,


'வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் - மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்' 


என்று இயற்கையின் ஓர் அங்கமாய் விளங்கும் பறவைக் கூட்டத்தின் ஒலியமுதை விடியலின் வருகைக்குக் கட்டியம் கூறும் அறிவிப்பு ஒலிபோல் காட்டும் ஆண்டாளின் இயற்கையின் ஒலியுணரும் நுட்பம் வியக்கத்தக்கது. இவ்வாறு வானத்தின் ஒளிச்சுடரையும், பறவைகளில் ஒலி மொழியையும் ஒன்று சேரத் தான் கண்ட விதத்தை ஒளியும் ஒலியுமாய் விடியலின் அற்புதம் மனித குலத்தின் வாழ்வுக்கு வழி காட்டும் பாங்கில் இயற்கையின் அருமைப்பாட்டை ஆண்டாள் எடுத்துரைக்கக் காணலாம். மேலும் பறவைகளின் வாழ்விடத்தோடு அவற்றின் அருமைப்பாட்டையும் பாராட்டியுரைப்பதாக நாச்சியார் திருமொழியில், 'மென்னடை அன்னம்' மற்றும் 'கோலக்கிளி' என்று பாராட்டும் ஆண்டாள் தன் மனக்கருத்தைக் கண்ணனிடம் கூறிவரத் தூதாக அனுப்பும் குயிலைப் பலபட வருணித்துக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.


‘புன்னைக் குருக்கத்தி ஞாலல் செருந்திப் பொதுப்பினில் வாழும் குயிலே' என்றும்,


'தேங்கனி மாம்பொழிற் செந்தளிகோதும் குயில்' என்றும் குயினின் வாழ்வுச் சூழலை வண்ணப்படமாய்ச் சித்திரிக்கின்றாள்.


அடுத்து வாய்திறந்து பேசாத மலர்க்கூட்டத்தின் அழகு முகங்களை அறிமுகம் செய்கிறாள் ஆண்டாள், “செங்கழுநீர் வாய் நெகிழ்ந்தும் ஆம்பல்வாய் கூம்பியதுமாய்” அமைந்த காட்சியைச் சுட்டுகிறாள். மேலும் கோங்கு மலர்களின் மலர்ச்சியை நாச்சியார் திருமொழியில் எடுத்துரைக்கக் காணலாம்.


விடியற்பொழுதில் மேய்ச்சலுக்குப் புறப்படும் கால்நடைகளின் காட்சியைக்,


'கீழ்வானம் வெள்ளென்னு எருமைச்சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்' 


என்று கிழக்கு வெளுக்கும் வேளையும், மேய்ச்சலுக்குச் செல்லும் எருமைகளின் பயணமும் ஒரு காட்சிப் படமாகப் பாவையின் பாசுரம் சித்திரிக்கின்றது. 


2. இயற்கையின் அழகைச் சொல்லிக் குறிப்பாகக் கருத்தைத் தெரிவிப்பது


ஆயர்பாடியின் வளத்திற்குக் காரணமான 'வள்ளற் பெரும் பசுக்கள்' பால்வளம் பொழியும் அரும்பாங்கினை இயற்கையின் ஓர் அற்புதக் கொடையாகச் சுட்டுகின்ற ஆண்டாள்,


கனைத்தினங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 
நினைத்து முலைவழியே நின்று பால் சோர 
நனைத்தில்லம் சேறாக்கும்'


என்று வீட்டு நலத்துடன் நாட்டுநலம் காக்கும் பசுக்களின் பாலமுதச் செல்வத்தால், இயற்கையின் பங்களிப்பு, ஆயர்குல மக்களின் குறையொன்றுமில்லாத செம்மாந்த வாழ்வுக்குக் காரணமாக அமைவதை ஆண்டாள் குறிப்பாக உணர்த்தக் காணலாம்.


அடுத்து இயற்கையின் அற்புதக் காட்சிகளில் பெரும்பங்காற்றும் வான் மழையின் மாட்சிமையை ஆண்டாள் தன் பாசுர மொழிகளால் பேசக் காணலாம்.


பாவை நோன்பிற்கான காரணங்களுள் ஒன்று மழைவளம் பெறலாகும். மனிதகுலத்தின் வாழ்வு நலம்காக்கும் பருவமழை தவறாமல் பெய்து நன்மைகள் பல பெருக வேண்டுமென்பது ஆண்டாளின் விருப்பம். இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் இடையூறின்றி மேன்மையடைந்தால்தான் மனிதகுலத்தின் வாழ்வு சிறக்கும். இதில் மழையின் பங்கு பெரிது. 'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்வதால் பயிர்வளம் பெருகும், கால்நடைகள் மேய்ச்சலைப் பெற்று பாலமுதைப் பெருக்கும்' என்று முல்லை வனத்தின் வாழ்வைக் குறிப்பாக உணர்த்துகின்றாள். மேலும் 'ஓங்குப் பெருஞ்செந்நெல் ஊடுகயலுகளைப், பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப' என்று செந்நெல் பயிர் நிறைந்த வயல்களில் கயல்மீன்களின் துள்ளலும், குவளை மலர்களில் வண்டு மொய்த்திருப்பதும் மருதவளத்தை ஆண்டாள் வார்த்தை வண்ணங்களால் வடித்துள்ளமையைக் காணலாம்.


இவ்வாறு முல்லை மற்றும் மருத வளங்களைச் சில வரிகளில், சுட்டி, இயற்கையின் இயக்கத்தால்தான் மனித வாழ்வு சிறக்கும் என்பதைக் குறிப்பாகச் சுட்டும் வகையில் மழையின் பாங்கினைப் பேசுகின்றாள். மேலும் இத்தகைய நல்மழை தந்து காக்கும் மேகங்களைத்தான் நாச்சியார் திருமொழியில் பல அடைமொழிகள் தந்து ஆண்டாள் சிறப்பிப்பது குறிப்பிடத்தக்கது. சான்றாக,


'மாமுத்த நிதி சொரியும் மாமுகில்காள்
'தண்முகில்காள்' 


என்று பாராட்டியுரைப்பதை அறியலாம். 


3. இயற்கையை இறைவனுடன் இணைத்துக் காண்பது :


இயற்கையின் அழகு மிக அற்புதக் காட்சிகளை, மாலவனின் பேரழகோடு ஒப்பிட்டுக் கூறும் ஆண்டாளின் பாசுரப் பாடல்கள், இயற்கையும் இறைமையும் ஒன்று என்ற உணர்வைத் தெளிவுபடுத்தக் காணலாம். சான்றாக,


‘ஆழிமழை கண்ணா ஒன்று நீ கைகரவேல் 
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேரி, 
பாழியந்தோளுடை பத்மநாபன் கையில் 
ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து 
தாழாதே சாரங்கம் உதைத்த சரமழைபோல்' 


வாழ உலகினில் பெய்திட வேண்டுமென்று மழையை நோக்கி வேண்டுவதுபோல அமைந்த பாவைப் பாடலில் மேகம், இடி, மின்னல், மழையாகிய மழைக்கான இயற்கையின் தொடர் நிகழ்ச்சிகளை, கண்ணனின் திருக்காட்சி இயக்கத்துடன் ஒப்பிட்டுக் காணும் பாங்கு குறிப்பிடத்தக்கது.
கண்ணன் தன் தோழியருடன் பிருந்தாவனத்தில் விளையாடிய காட்சியைத் தான் கண்ட விதமாக ஆண்டாள்,


'கணங்கோள் மின்மேகம் கலந்தாற்போல' 


என்று கூறுகின்றாள். அதாவது கருத்த மழைமேகம் மின்னலுடன் ஒருங்கே தோன்றியதுபோல தன் கறுத்த மேனியில் வனமாலை திகழக் கண்ணன் விளையாடிய காட்சியை இயற்கையின் பொலிவோடு இறைமையை ஒப்பிட்டுப் பேசுவதைக் காணலாம்.


4. இயற்கையை உவமையாகப் பயன்படுத்துவது :


இயற்கையின் வண்ணம் நிறைந்த வடிவழகை, தன் பாவை மற்றும் நாச்சியார் திருமொழிப் பாசுரங்களில் ஆண்டாள் மிகுதியும் உவமையாகப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


'விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல மேகங்காள்' என்று வானத்தின் மேகக் கூட்டம் நீலத்திரை விரித்தது போலக் காணப்படுவதாகவும், 'கானமயில்காள்! கண்ணபிரான் திருக்கோல்' போன்று அணிமா நடம் பயின்றாடுகின்றீர் என்று மயில்கள் நடமிடும் காட்சியைக் கண்ணனின் அழகோடு ஒப்பிட்டுக் கூறுவதும், 'செங்கண் நாண்மலர் மேல் தோன்றுகளும் அன்னம்' என்றும், "தடவரையின் மீதே சரற்காலச் சந்திரன் இடையுவரவில் வந்து எழுந்ததுபோல” என்றும் கண்ணனின் கையிலுள்ள வெண்சங்கின் இருப்பை ஆண்டாள் வருணிப்பதையும் உவமைகள் வழி காணலாம். அதாவது தேனருந்தும் அன்னப் பறவையின் வடிவாகவும், மலையிடை எழுகின்ற பௌர்ணமி நிலவின் ஒளி வடிவாகவும் மாலவனின் வெண்சங்கு விளங்குவதாக ஆண்டாள் வருணிக்க காணலாம்.


இத்தகைய அற்புதனின் நினைவால் தளரும் தன் மெலிவைச் சுட்டுவதற்கு ஓர் உவமையைக் கூறுகின்றாள் ஆண்டாள்.


'நீர்க்காலத் தெருக்கில் அம்பழவிலைபோல் வீழ்வேன்' என்கிறாள். அதாவது மழைக்காலத்தில் எருக்கம் பழுப்புக்குள் இற்று வீழ்வது போல தான் ஒசிந்து வீழ்வதாக, மாலவன் மீது கொண்ட மையலால் ஏற்பட்ட உணர்வுக்கு இயற்கையின் நிகழ்வை உவமையாக்குகிறாள் ஆண்டாள்.


மேலும் கண்ணன்பால் தனக்கு ஏற்பட்ட காதலால் விளைந்த நலிவையும் மெலிவையும் அறியாதவன் போலிருக்கின்ற அவனைப் போலவே இயற்கையில் அழகுக் கோலமும் தம்மை வருத்துவதாகக் குற்றம் சாட்டும் முறையில், 


'பைம்பொழில்வாழ் குயில்காள் மயில்காள்! ஒண்கருவிளைகாள்! 
வம்பக் கனங்கனிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள்! 
ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலை நின்ற 
எம்பெருமானுடைய நிறம், உங்களுக்கு என் செய்வதே?' 


என்று பழிக்கின்றாள். அதாவது, பரந்த சோலையில் வாழுகின்ற குயில்களே, மயில்களே, கருவிளை மலர்களே, புதிய கானக்கனிகளே! அழகிய நிறமும் மணமும் பொருத்த காயாம் பூக்களே! நீங்கள் ஐவராகிய பாதகங்கள், கண்ணனின் கருத்த நிறத்தேயொத்து விளங்குவது என்னைத் துன்புறுத்தவோ? என்று வினவுகிறாள்.


கண்ணனின் எழிற்கோலப் பேரழகைக் கண்டு வியப்பதாகவும், கோபத்தால் சினப்பதாகவும் இக்கருத்து அமைகின்றது.


மேற்கண்டவாறு இயற்கையின் அழகில், வசப்பட்டு, அதன் ஒவ்வொரு கூறுகளின் நுட்பத்திலும் ஆழ்ந்து, அதன் பயன்களில் தெளிந்து, இயற்கையின் அழகுருவே இறைமையின் வடிவமென்று உணர்ந்து போற்றுகின்றாள் ஆண்டாள். அவளது பாசுரங்களில் இயற்கையோடியைந்த மானுடத்தின் வாழ்வு நலமும் இயற்கையின் பயன்பாடும், இறைமையின் எழிலுருவும் மாதவன்பால் ஆண்டாள் கொண்ட மாறாத அன்புகலந்த பக்தியில் லயித்த பாசுர மொழியில் இயற்கைதான் வாழ்வு, இயற்கைதான் இறைமை என்ற கொள்கை வெளிப்படக் காணலாம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

(ஆண்டாள் அருந்தமிழ் என்ற நூலிலிருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக