சனி, 21 மார்ச், 2020

அரங்கனைப் பாடிய வாய் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

“அரன் அதிகன், உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்றடைவரிய பரிசே போல்” என்று மிக அற்புதமாக கவிச்சக்கரவர்த்தி கம்பன் தன் மாபெரும் இலக்கிய படைப்பாகிய இராமகாதையில் குறிப்பிடுகின்றான். ஆம். அவன் கூறியது முற்றும் உண்மைதான். அரன் தான் அகிலத்திலேயே சிறந்தவன் என்றோ அல்லது உலகத்தையே தன் ஈரடியால்  மூவடியாக அளந்து கொண்டானே அந்த அரிதான் பெரியவன் என்றோ நாம் வீண் விவாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது என்பது தான் அவனது சிறந்த நோக்கமேயன்றி அவன் அரனையோ, அரியையோ இழித்துக் கூறுவதாக ஆகாது.

கம்பன் தான் பாட எடுத்துக் கொண்ட சரிதை திருமாலின் பிறப்பைப் பற்றி. அவன் வட மொழியிலுள்ள வான்மீகி இராமாயணத்தைத் தழுவியே தனது இராம காதையை இயற்றியிருப்பினும் பலவிடங்களில் கதையிலும் சரி, கருத்திலும் சரி, வான்மீகியினின்றும் வேறுபடத்தான் செய்கிறான். மிதிலைக்காட்சிப் படலத்தில் இராமனும், சீதையும் ஒருவரையருவர் கண்டு காதல் கொண்ட பிறகே கடிமணம் புரிந்து கொண்டதாக நம் தமிழ் மரபிற்கேற்ப தன் கதையை மாற்றுகிறான். அதேபோல் வாலி வதைப்படலத்தில் இராமனை முழுமுதற் கடவுளென்பதை வாலி கண்டு கொண்டதாக முதல் நூலின் கருத்திற்கு மாறுபடுகிறான். அதேபோல் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலமென்ற ஒன்றையும், மாயா சனகப்படலம் என்ற மற்றொன்றையும் கதைப்போக்கில் செருகி விடுகிறான். ஆனால் அவன் இயற்றிய இலக்கிய வரலாற்றை மேற்படி வேறுபாடுகள் எவையும் ஊறுபடுத்துவனவாக இல்லை. இராமன் காலத்திலேயே வான்மீகி வாழ்ந்து வந்தார் என்பது விளக்கம். அதனால் வான்மீகி இராமனைப் பரமனின் அவதாரம் என்று மட்டும் ஒப்புக் கொள்கிறாரே தவிர்த்து அவனையே பரம்பொருள் என்று நாம் எண்ணுமாறு அவர் தனது இலக்கியப்படைப்பைக் கொண்டு செல்லவில்லை. ஆனால் கம்பனோ இராமனை முழுமுதற் கடவுள் என்று தன் இலக்கிய படைப்பெங்கணும் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டிச் செல்கிறான்.


“மும்மை சால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தை”, “மும்மையாம் உலகம் தந்த முதல்வர்க்கும் முதல்வன்”, “ வேதமும் முடிவு காணா மெய்ப்பொருள்”, என்று வரும் பலவிடங்களில் கம்பன் தனக்குத் திருமாலினிடம் இருந்த பக்திப் பரவசத்தைத் தனது இலக்கியப் படைப்பாகிய இராமகாதையில் வெளியிட்டுவிடுகிறான். இவ்வாறு திருமாலின் உயர் தன்மையை எடுத்துக் கூறும் கம்பன், “ அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன்” என்று தனது இலக்கியத்திலேயே வேறொருசார் சொல்லிப் போந்தது எங்ஙனம் பொருந்தும் என்பது சிலரது சந்தேகம். கவிச்சக்கரவர்த்தி கம்பன் தவறவில்லை. இராமகாதை முழுவதிலும் ஆங்காங்கே அரனுக்கு ஏற்றம் கொடுக்கத் தவறினான் இல்லை. தான் எடுத்துக் கொண்டது இராம காதையாயினும் மங்கைபாகனுக்கு மதிப்பு அதிகம் கொடுத்து விடுகிறான் நாம் எதிர் பாராத சில சந்தர்ப்பங்களில். ஒருவன் பெரியவன்; மற்றவன் சிறியவன் என்று கருதக்கூடாது; சொல்லக் கூடாது என்பதுதான், அவன் கருத்தே தவிர்த்து நம்மை ஏமாற்றும் நோக்கத்துடன் அவன் இக்கருத்தை வெளியிட்டானில்லை. இதனால் கம்பன் ஒரு சமரச சன்மார்க்கவாதி என்பது புலனாகிறது.

ஆதிசங்கரரைப் பற்றி நாம் யாவரும் அறிவோம். அவர் உலகத்தில் சமய வழிபாடுகள் என்ற கொள்கையைக் கொண்டு நாட்டில் நடக்கும் கலவரங்களைப் பார்த்தார். இப்படியே விட்டுவிட்டால் உலகம் நாத்திகத்தில்தான் போய்முடியும் என்பதை அறிந்தார். க்ஷன்மத ஸ்தாபிதம் (அறுசமயம்) செய்தார். அறுவகை சமயங்களில் யார், யாருக்கு எதெது நல்லதாகப் படுகிறதோ அதன் வழி உறுதியாக நின்று நற்கதி அடையும்படி வேண்டிக் கொண்டார். அறுசமயங்களையும் வகுத்துவிட்டு அவர் அவைகளில் ஒன்றாகிய சைவத்தை பின் பற்றினார். சீடர்கள் பலர் சேர்ந்தனர். ஊர் ஊராகச் சென்று மேற்படி சீடர்கள் சைவத்தைப் பரப்பினார்கள். ஆனால் நற்கதியடைய வேண்டுமானால் நிலையற்ற இம்மாய உலகத்தினின்றும், மாயப் பிறவிகளினின்றும் விடுபட வேண்டுமானால் கோவிந்தனைப் பஜியுங்கள் என்று ‘பஜகோவிந்தம்’ என்ற வடமொழிப் பாக்களை பாடியருளினார். இன்றும் பஜகோவிந்தம் எல்லோராலும் பாராட்டி கடைப்பிடிக்கப்படும் ஒரு சிறந்த தோத்திரமாக கருதப்பட்டு வருவது நாம் யாவரும் அறிந்த உண்மை.

மேற்படி சங்கரரது உடல் அவரது பகைவர்களால் இடுகாட்டில் இந்தனமேற்றி எரிக்கப்பட விருக்கும் சமயம் லஷ்மி நரசிம்மனை, எனக்கு உனது கையைக் கொடுத்து காப்பாற்று என்று தோத்திரப் பாடல்கள் இயற்றி சிதையினின்றும் எழுந்து வந்தார் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றிலேயே பொதிந்திருக்கும் ஒரு உண்மை சம்பவம். இதனால் சங்கரர் தன் கருத்தில் மாறுபட்டு விட்டார் என்றோ அல்லது தன் கருத்தை பின்பற்றியவர்களை கைவிட்டுவிட்டார் என்றோ நாம் கொள்ளுதல் தகாது.

காளிதாசனைப் போன்ற கவி வேறு யாருமில்லை என்பது உலகறிந்த உண்மை. அவன் பாடிய நூல்களில் ‘ரகுவம்சம்’ என்பதும் ஒன்று. அதன் ஆரம்பத்தில் காப்புச் செய்யுள் பாடுகிறான் அவன்; உலகத்தின் தாய் தந்தையாகிய பார்வதியையும் பரமசிவனையும் வணங்குகிறேன் என்று அதில் கூறுகிறான். அவன் பாட எடுத்துக் கொண்ட கதை இரகுவிலிருந்து, இராமபுத்திரர்களாகிய குச, லவர்கள் கதை ஈறாக நடந்த வரலாறுகளைப் பற்றியது. இதனால் அவனையும் ஒரு சமரச சன்மார்க்கவாதி என்றே சொல்லலாம். மேற்கூறிய பெரியோர்களின் கருத்துக்களுக்கு புறம்பாக தங்கள் கருத்துக்களை விளக்கிய மகான்களும் உண்டு. இவர்களில் இராமனையே தெய்வமென்று பாடியவர்கள் உண்டு. கிருஷ்ணனையே தெய்வமென்று பாடியவர்கள் உண்டு. முருகனையும், விநாயகனையும் முழுமுதற்கடவுள்களாக வாழ்ந்து வழிபட்டவர்களுமுண்டு. அவர்கள் அதனால் நற்கதியடைந்ததாகத்தான் புராண இதிகாசங்கள் வாயிலாக நாம் அறிகிறோம்.

பன்னிரு ஆழ்வார்களும், அறுபத்து  மூன்று நாயன்மார்களும், தெள்ளுத்தமிழில் தேவபானத்திலுமினிய திவ்ய பிரபந்தங்களும், தேவாரத் திருப்பதிகங்களும் இயற்றியருளினர். ஆழ்வார்கள் வைணவத் திருப்பதிகளையும் அவைகளிலுள்ள திருமாலின் பெருமைகளையும் பாக்களாகப் பாடியருளினார்கள். நாயன்மார்கள் சைவத்திருத்தலங்களையும் அவைகளில் திருக்கோயில் கொண்டிருக்கும், நக்கபிரானின் நலங்களையும் தேனினுமினிய தீம்பாக்களால் பாடியருளினார்கள். ஆழ்வார்கள் சிவனைப்பற்றி ஏன் பாடவில்லையென்றோ, நாயன்மார்கள் திருமாலைக் குறித்து ஏன் பாடவில்லையென்றோ நாம் இங்கு ஆராய்ச்சி செய்து கொண்டிருத்தல் அத்துனைச் சிறந்ததாகாது. ஆழ்வார்கள் ஈசனைக் குறிக்காததினால் நற்கதியடையவில்லையென்றோ நாயன்மார்கள் திருமாலைத் துதிக்காமையால் அவர்கள் நற்கதியடையவில்லையென்றோ நமக்கு எந்த நூலும் சுட்டிக் காட்டவில்லை.

ஒரு இடத்திலிருந்து ஓர் குறிப்பிட்ட இடத்தை அடைய ஆறு பாதைகளில் செல்லலாம். ஆரம்ப இடத்தில் ஒருவர் இருந்து கொண்டு நாம் எந்த பாதை வழி சென்றாலும் நாம் குறிப்பிட்ட இடத்தை சென்று சேரலாம் என்று நமக்கு சொல்கிறார். நாம் முதலில் ஒரு பாதையில் செல்கிறோம். பாதிவழி சென்றுவிட்டோம். நமக்கு வழிகாட்டிய அந்த நபரிடம் நமக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. பாதை வளர்ந்து கொண்டு போவதாக நமக்குத் தெரிகிறது. அதனால் மனம் வெறுத்துப் போய் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து சேர்கிறோம். இப்படியே ஒவ்வொரு பாதையிலும் பாதிவழி சென்று திரும்பிவரும் நாம் எப்படி குறிப்பிட்ட இடத்திற்கு போய் சேரமுடியாதோ அம்மாதிரிதான் ஒவ்வொரு சமயத்திலும் இறங்கி அதன் முடிவைக் காணும் பொறுமையின்றி திரும்பி வரும் சமயவாதிகளின் நிலையுமாகும். மேற்படி வழிகாட்டி சொல்லிய வார்த்தையில் நம்பிக்கை வைத்து எத்தனை துன்பங்கள் நேரினும் அவைகளைக் கருதாது முழு முயற்சியோடு செல்லும் ஒருவன் எவ்வாறு தனது குறிப்பிட்ட இடத்தை அடைய முடியுமோ, அவ்வாறுதான் அவரவர் சமயங்களில் பற்றுதல் கொண்டு அந்தச் சமயக் கடவுளை நம்பி முழு மூச்சுடன் அப்பாதையில் செல்லும் சமயவாதிகள் பரம்பொருளைக் காணமுடியும் என்கிறார்கள் சான்றோர். கம்பனின் கருத்தும் இங்கு ஒப்பு நோக்குதற்குரிய ஒன்றாகும்.

பகவத் கீதையும், சகஸ்ரநாமமும் (சகஸ்ரநாமம் என்றால் விஷ்ணு சகஸ்ர நாமம்) தான் தனது அரிய பொக்கிஷங்கள் என்று சொன்னார் மகான் ஆதிசங்கரர். பகவத் கீதை அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மாவால் போர்க்களத்தில் உபதேசிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு சிறந்த நூல். அதில் மாயக்கண்ணன் எத்தனையோ யோகங்களைப்பற்றியும், தர்மங்களைப் பற்றியும் அர்ஜுனனுக்கு சொல்லி வந்தும் அவனுக்கு மனம் தெளிவுபடவில்லை. பார்த்தார் கண்ணன், “அர்ஜுனா, உன் மனத்தை குழப்பிக் கொள்ளாதே. நான் இது காறும் கூறிவந்த எல்லா தர்மங்களையும் விட்டுவிடு. என் ஒருவனையே சரணாக அடை. அப்படி அடையும் உன்னை, நீ இதுகாறும் செய்துள்ள எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடச் செய்து உனக்கு மோட்சத்தையும் கொடுக்கிறேன்” என்று உறுதியாக கூறுகிறார். “என் ஒருவனையே சரணாக அடை” என்று கூறும் அந்த வாக்கியத்தில் ஒருவனையே என்று சொல்லும் அந்தப்பதத்திற்கு என்ன காந்த சக்தி இருக்கிறது என்பதைப் பாருங்கள். அதில் பரமன் ஒருவனே என்று எண்ணும் எண்ணம் வேண்டும். அப்பொழுதுதான் உனக்கு விடிவு உண்டு என்பதுதானே அதன் கருத்தாக அமைகிறது. இதனால் நாம் எதை அறிகிறோம்? தெய்வம், அதன் பெயர், அதன் உருவம், அதன் சக்தி இவை எப்படியாகினும் இருக்கலாம். ஆனால் நமக்கு வேண்டுவது திட நம்பிக்கை. அப்பொழுதுதான் ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நமக்கு விடுதலை கிடைக்கும்.

“அருமறை துணிந்த பொருண்முடிவையின் சொல் அமுதொழுகுகின்ற தமிழினில் விளம்பிய சடகோபன்” என்கிற நம்மாழ்வார் அவரது பாடல்களில் ஒன்றால் அவரவர் சமயங்கள் கூறும் வழியாக உறுதியுடன் சென்றால் அவரவர்கள் இறைவனைக் கண்டு அவரவர் விதிவழியே நிற்பார்கள் என்று மிகத் தெளிவாக கூறுகின்றார்.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகிய தொண்டரடிப் பொடியாழ்வார் என்று வழங்கப்படும் விப்ரநாராயணன் என்பவர் திருவரங்கத்திலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அரங்கனின் திருப்பணியிலேயே கழித்தார். அவர் மற்ற ஆழ்வார்களைப்போல் பல திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள எந்த தெய்வங்களையும் தனது வாய் கொண்டு பாடவில்லை. “கங்கையிற் புனிதமாய காவிரி நடுவுபாட்டு பொங்கு நீர் அரங்கந்தன்னுள்” பச்சைமாமலைபோல் மேனியும், பவள வாயும், கமலச் செங்கண்களும் கொண்டு பணிப்பாயில் பள்ளி கொண்டு இருக்கும் பரந்தாமனாகிய அரங்கத் தரவணையானை கண்டு அவனது மையலில் ஈடுபட்ட தன்மையினால் அவனிடம் பறிகொடுத்த மனதை வேறு எவரிடத்திலும் செலுத்த முடியாமல் அரங்கனைத் தவிர்த்து வேறு யாரையுமே பாடாமல் விட்டுவிட்டார். அதனால் அவர் நரகத்திற்கு சென்றதாக வரலாறுகள்  கூறவில்லை. அவரை நான்மறை தந்த நான்மூவரில் ஒருவராக சேர்த்துக் கொள்ள இந்த நானிலமும் தயங்கவில்லை.

இவருக்கு பிற்காலத்தில் இவரது வாரிசு போன்று ஒரு வைணவப் பக்தர் தோன்றினார். ஆண்டவனைப் பற்றிய கொள்கைகளில் அவர் ஆழ்வார்களின் கருத்துகளில் சிறிதும் மாறுபடவில்லை. ஆனால் மேற்கூறிய தொண்டரடிப் பொடியாழ்வாரைக் காட்டிலும் ஒரு படி மேலே சென்றுவிட்டார். அவருக்கு இதர தெய்வங்களைப் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆற்றலும் இருந்தது. ஆனால் அரங்கனைப் பாடிய வாயால் வேறு எவரையுமே பாட அவர் மனம் ஒப்பவில்லை. அதைப்பற்றி இங்கு ஆராய்வோம்.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கன் அவையில் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்ற பெயருடைய வைணவப் பெரியார் ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவர் அரசனோடு வீற்றிருந்தபோது திடீரென்று ஆவேசம் கொண்டவர் போல் தனது  மேல் உத்தரியத்தை எடுத்து ‘கிருஷ்ண, கிருஷ்ண’ என்று சொல்லியவாறே அதை தேய்த்தார். இச்செய்கையினால் வியப்படைந்த மன்னன் அவர் அவ்வாறு செய்ததற்குக் காரணம் வினவ, அவரும் திருவரங்கத்தில் திருவரங்கனுக்கு தேர்த்திருவிழா நடப்பதாகவும் அத்தேரில் இருந்த சீலை தீயினால் பாதிக்கப்பட்டதென்றும் அதைத் தாம் அணைத்ததாகவும் மறுமொழி சொன்னார். அரசன் ஐயங்காருக்கு புத்தித் தடுமாற்றம் ஏற்பட்டு விட்டதோ என்று சந்தேகித்தான். உண்மை அறியும் அவாவினால் தன்பாலிருந்த தூதன் ஒருவனை திருவரங்கம் சென்று உண்மை அறிந்து வருமாறு பணித்தான். அவ்வாறு சென்ற தூதுவனும், திருவரங்கம் சென்று உண்மை நிலையறிந்து திரும்பி வந்து ஐயங்கார் சொல்லிய நிகழ்ச்சி உண்மையென்றும், அன்று ஐயங்கார் தமது உத்தரியத்தை தன் கைகளால் தேய்த்த அதே சமயத்தில் அவரைப்போன்ற ஒரு வைணவர் தீப்பட்ட அத் தேர்ச் சீலைகளை தன் கைகளால் அணைத்தது உண்மையென்றும் தான் கேள்வியுற்றவாறே அரசனிடம் விண்ணப்பித்தான். அது கேட்ட அரசன் இவ்வித அற்புத சக்தி வாய்ந்த ஒரு பரம பக்த சிகாமணியை தன்கீழ் அலுவல் செய்யும்படி  அனுமதிப்பது தவறு என்ற கருத்துக் கொண்டவனாய் அவரைப் பணிந்து அவருக்கு தன்னால் என்ன தொண்டு செய்ய முடியுமோ அதைப் பணிக்குமாறு கேட்க, அதனால் மகிழ்ச்சியடைந்த ஐயங்காரோ தன்னை திருவரங்கத்துக்கு அனுப்பி, அங்கு எப்பொழுதும் வசித்துக் கொண்டு அரவணையானுக்கு திருப்பணிகள் செய்து கொண்டிருக்க வசதிகள் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அரசனும் அவ்வாறே செய்தான். ஐயங்காரும் அரங்கனின் திவ்ய மங்கள விக்ரகத்தைக் கண்டு அவன் பெயரில் மையல் கொண்டு திருவரங்கக் கலம்பகம் போன்ற பல இன்னிசை பாடல்களையும் பாடிக்கொண்டு காலம் கழித்து வந்தார்.

இங்ஙனம் இருக்கும் நாளில், பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் அமுதொழுகுகின்ற தமிழையும், அத்தமிழைக் கொண்டு அரங்கன் பேரில் அவர் மனம் கரைந்து பாடும் பாடல்களையும் கேள்வியுற்று அவைகளில் மனம் பறி கொடுத்த திருவானைக்கா நாவலிநாதனின் ஆலய நிர்வாகிகள் ஐயங்காரிடம் சென்று தங்கள் ஈசன் பேரிலும் இன்னிசைப் பாடல்கள் பாடித்தர வேண்டுமென்று மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ஐயங்கார் மறுத்துவிட்டார். “அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன்” என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். குரங்கம் என்றால் மான் என்று பொருள். மானையும் மழுவையும் தனது இரண்டு கரங்களிலும் தரித்திருக்கிறான் சிவனென்பது யாவரும் அறிந்த உண்மை. மானாகிய குரங்கத்தை அவன் தன் கரத்தில் ஏந்தி நிற்பதால் அரனைக் குரங்கனென்றார்.

பாடல் பெற வந்தவர்கள் பரிபவப்பட்டார்கள். ஐயங்கார் பேரில் அவர்களுக்கு ஆற்றமுடியாத ஆத்திரம் உண்டாகியது. தக்க வாய்ப்பொன்றை எதிர்ப்பார்த்திருந்தார்கள் அவர்கள். மிகக் குறுகிய காலத்திலேயே அவர்களுக்கு அந்த வாய்ப்பும் கிடைத்தது.

அரங்கனின் விஸ்வரூப தரிசனத்திற்காக திருவரங்கம் பெரிய கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த பசுங்கன்று ஒன்று விதிவசத்தால் வழி தவறிப்போய் திருவானைக்காவைச் சேர்ந்த படுகையில் மேய்ந்து கொண்டிருந்ததை சைவர்கள் கண்டு கொண்டார்கள். அப்பசுங்கன்றை தங்கள் திருக்கோயிலுக்கு ஓட்டிச்சென்று அங்கு கட்டிப்போட்டு விட்டார்கள். திருவரங்கம் கோயில் நிர்வாகிகள் பசுங்கன்றை வெகு நேரம் தேடிய பிறகு அக்கன்று திருவானைக்கா கோயிலில் சைவர்களால் பிடித்துக் கட்டப்பட்டிருக்கும் செய்தியை அறிந்து அவர்களிடம் சென்று தங்கள் பசுங்கன்றைத் தங்களிடம் விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டனர். தங்களுக்கு பசுங்கன்று தேவையில்லையென்றும் பிள்ளை பெருமாள் அய்யங்கார் வாயால் தங்கள் ஈசன் பேரில் ஒருபாடல் படித்தால் பசுங்கன்றை விட்டுவிட யாதொரு ஆட்சேபமும் இல்லையென்றும் சைவர்கள் ஒருமுகமாகக் கூறி விட்டனர். இந்தத் தகவல் பிள்ளைப்பெருமாள் ஐயங்காருக்குத் தெரிவிக்கப்பட்டது. நிமலனின் நித்திய கால பூஜைகள் நின்றுவிட்டால் என்ன செய்வது என்று கலங்கிய ஐயங்கார் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார். ஐயங்கார் ஈசன் பேரில் பாடல் பாடித் தருவதாக ஒப்புக் கொண்ட விவரம் சைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இப்பொழுதாவது பசுங்கன்றை விடும்படியாக வேண்டிக் கொண்டனர் வைணவர்கள். சைவர்கள், அதற்கு இணங்கவில்லை. பசுங்கன்றை விட்டுவிட்டால் அய்யங்கார் தங்கள் ஈசனைக் குறித்துப் பாடுவதற்கு ஒப்ப மாட்டார். கையிலுள்ளதை விட்டுவிட்டு புதரிலுள்ளதைப் பிடிக்கப் போவதைப் போன்ற ஏமாற்றம் தங்களுக்கு நேரிட்டுவிடும் என்று சந்தேகித்த அவர்கள், அய்யங்கார் நாவலி நாதனைக் குறித்துப் பாட போவது உண்மையானால் அவர் பாடப் போகும் பாடலின் முதல் பதத்தையாவது தங்களுக்குச் சொன்னால் தாங்கள் கன்றைவிட்டு விடுவதாகச் சொன்னார்கள். இந்த நிபந்தனைக்குச் சம்மதித்த ஐயங்கார் தான் ஈசனைக் குறித்துப் பாடவிருக்கும் பாடலின் முதல் வார்த்தை ‘மங்கை பாகன்’ என்பதாகும் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

மங்கை பாகன் என்றால் சிவனுக்குப் பெயர். பார்வதியை இடது பக்கத்தில் கொண்டவன் என்பது பொருள். ஐய்யங்கார் பணிந்து வந்தமை கண்டு வியந்தார்கள் சைவர்கள். கிடைக்க முடியாத ஒரு அரிய பொருள் கிடைத்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தார்கள். கன்றும் அரங்கனின் திருப்பணிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மறுநாள் சபை கூடிற்று. சைவர்கள் கூடினார்கள். மங்கைபாகனின் மகிமையை ஒரு வீர வைணவனின் வாயிலாகக் கேட்பதற்கு. ஐயங்காரும் பாட ஆரம்பித்தார்.

  “மங்கை பாகன் சடையில் வைத்த
   கங்கை யார்ப் பதத்து நீர்?”

மங்கைபாகனாகிய பரமசிவன் தனது சடையில் கங்கையைத் தரித்திருக்கிறாரே அந்த கங்கை எவருடைய பாதத்திலிருந்து உற்பத்தியாயிற்று என்று கேட்கும் தோரணையில் அமைத்தார் முதல் அடியை.

ஆம். கங்கை எங்கு, எப்படி, எதற்காக அவதரித்தாள் என்பதை நாமும் அறிய வேண்டுமல்லவா? மாவலியின் மகாயாகம் நடைபெறுகிறது. அந்த யாகத்தை அவன் முற்றுவித்து விட்டால் தானவர்களின் ஆட்சிதான்  மூன்று உலகங்களிலும் நிலை பெறும். பார்த்தான் இந்திரன். பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனிடம் ஓடினான். தன் பயத்தை தெரிவித்தான். தனக்கு அபயம் அளிக்குமாறு இறைஞ்சி நின்றான். அவனைக் காப்பாற்ற மாவலியின் யாகசாலையை நோக்கி நடந்தான், அந்தப் பரந்தாமன். குறளுரு கொண்டான். அவன் குறளுருக் கொண்ட கோலத்தினை கம்பன், “ஆலமரவித்தின் அருங்குறளானான்”, என்று வியந்து பாராட்டுகிறான். ஆலமரத்தைப்போல் பெரிதாக தழைத்து வளரக்கூடிய மரம் வேறெதுவும் கிடையாது. ஆனால் அதன் வித்தோ தெண்ணீர்கயத்தின் சிறுமீன் சினையினும் நுண்ணியது. அந்த நுண்ணிய வித்து எவ்வாறு பெரிய மரமாகி அண்ணல், யானை, ஆட்பெரும் படைக்கும் குளிர் நிழல் தந்து உதவுகிறதோ, அவ்விதமே பரமன் ஒரு அந்தணச் சிறுவனாக வந்து நெடிய உருவம் எடுத்து ஓங்கி உலகளந்த உத்தமனாக திகழ்ந்த பெருமையை கம்பனால் எப்படி மறக்க முடியும்?

அவ்வாறு குறளுருக் கொண்டு வந்த மாயன் மாவலிபால் மூவடிமண் பெற்ற  மூலப்பொருள், மும்மையாம் உலகம் தந்த மூர்த்தி, மூவுலகையும் தன் ஈரடியால் அளந்தான். இந்த சம்பவத்தை திருமங்கை மன்னன் தனக்கே உரிய பாணியில் தீந்தமிழில் நாம் யாவரும் மகிழும் விதத்தில் பாடித் தந்திருக்கிறான், “அன்றியும் பேர் வாமனனாகிய காலத்து,  மூவடிமண் தாராய் எனக்கென்று வேண்டிச்சலத்தினால் நீரேற்றுலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை” என்று.

மாவலியை இத்துடன் விட்டுவிடுவோம். மண்ணை அளந்ததோர் சேவடி. விண்ணை அளந்தது  மற்றொரு சேவடி. விண்ணளந்த பாதம் மேலே மேலே சென்று அயனுலகை அடைந்து விட்டது. பார்த்தான் படைப்புக்கடவுள். தேவராலும் யாவராலும் காண்பதற்கரிய தனது தந்தையின் திருப்பாதம் தனக்கு காணக் கிடைத்த மகிழ்ச்சியால் ஆடினான். அவர் புகழ் பாடினான். அவரது பங்கயப் பாதத்தை தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவரது பாதத்தை நீரால் விளக்கினான். அப்பரந்தாமனின் வலது திருவடியின் பெருவிரலினின்றும் அவதரித்தாள் கங்கை.  பின்பொருகால் பகீரதன், மேற்படி கங்கையை பூதலத்திற்கு கொண்டுவரச் செய்த பகீரதப் பிரயத்தனங்கள் குறித்து நம் வாசகர்கள் அறிவார்கள். சத்யலோகத்திலிருந்து பகீரதனுக்காக கீழிறங்கி வந்த கங்கையின் வேகத்தை உலகம் தாங்கமுடியாது என்ற அச்சத்தினால் பார்வதி நாதன் தனது விரிசடையில் ஏற்றுக் கொண்டான். கங்கை திருமாலின் திருவடி தாமரையிலிருந்து உற்பத்தியானவள் என்பதற்கு பலநூல்கள் சான்றாக நிற்கின்றன. மேற்படி கருத்து புலப்படும்படி திருமழிசையாழ்வாரும் தாம் பாடிய திருச்சந்தவிருத்த பாக்கள் ஒன்றில் “கங்கை நீர் பயன்றபாத பங்கயத்தெம்மண்ணலே” என்று கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்றியும் நம் திருமங்கை மன்னன் தன்னுடைய பெரிய திருமொழியில் கங்கைத் தோன்றிய இவ்வரலாற்றை,

 “அங்கையால் அடிமூன்றும் நீர்ஏற்று அயன்
 அவர்கொடு தொழுதேத்தக் கங்கை போதரக் கால்
 நிமிர்ந்து அருளிய கண்ணன்”
எனத் தெள்ளியத் தெளிய நமக்கு எடுத்துக் காட்டுகிறார்.

திருமாலின் திருவடித் தாமரையினின்றும் புறப்பட்ட கங்கையை தன் சடையில் தரித்ததினால் தான் கங்காதரன் ஆனான் என்பது மட்டுமல்லாமல், கங்கையைத் தரித்ததினால் அவன் மங்களத்தை அடைந்தான். அதனால் சிவனானான். (சிவம் என்றால் மங்களம்) என்று வைணவ ஆச்சாரியர்களில் ஒருவராகிய ஸ்ரீமந்நிகமாந்த தேசிகன் கூறி அருளுகிறார் அவரது நூலில்.

இதைக் கருத்தில் இருத்தியே, ஐயங்காரும், மங்கைபாகன் சடையில் வைத்த கங்கை யார் பதத்து நீர்’ என்று ஒரு கேள்வியைத் தொடுத்து விட்டார். திருமாலின் திருவடித் தாமரையிலிருந்து தோன்றிய கங்கையை தன் சிரசில் தரித்தான் என்ற பெருமையினாலேயே சிவனான அந்த சங்கரனது நிலைமை; திருமாலின் ஏற்றத்தை  நமக்கு எத்தனை தெளிவாக காட்டுகிறது.

நாவலிநாதனின் காவலர்கள் கண்டார்கள் இந்த திடீர்த்தாக்குதலை. அடுத்த வரியிலாவது தங்கள் சிவனுக்கு ஐயங்கார் ஓர் ஏற்றமளிக்க மாட்டாரா என்று நம்பியிருந்தார்கள். ஐயங்கார் வாயிலிருந்து அடுத்த வரியும் கிளம்பிற்று.

“வனசமேவு முனிவனுக்கு மைந்தனான தில்லையோ” என்று. வனசம் என்றால் தாமரை. வனசமேவு முனிவன் என்று படைப்புக் கடவுளாகிய பிரமனை குறிக்கிறார் கவி. பிரளய முடிவிலே பரந்தாமன் பாரெங்கணும் பரந்து கிடக்கின்ற நீர்ப்பரப்பின் மேல் யோக நித்திரையில் ஆழ்ந்து தன் இச்சா சக்தியால் நினைத்த மாத்திரத்தில் தன் நாபி வளையத்திலிருந்து ஒரு  தாமரைக் கொடியை வருவித்து அதன் உச்சியில் பிரமனை இருக்கச் செய்து அதன் மூலம் படைப்புத் தொழிலை நடத்துவதாக புராண இதிகாசங்கள் கூறுகின்றன.

 “ஒரு பேருந்தி இருமலர்த்தவிசில்
  ஒருமுறை அயனை ஈன்றனை”

என்று, திருமங்கையாழ்வார் தாம் இயற்றிய திருவெழுக்கூற்றிருக்கை என்னும் பிரபந்தத்தில் கூறிப் போந்தது இங்கு நோக்கற்பாலது. படைத்தல் தொழிலை மேற்கொண்டு விட்டான் பிரமன். அவனால் படைக்கப்பட்ட ஜீவராசிகள் யாவற்றையும் காக்கும் தொழிலை மேற்கொண்டான் திருமால். படைக்கப்படுபவையெல்லாம் காக்கப்பட்டு என்றுமே அவைகள் அழியாமல் நின்றுவிட்டால் பிறகு அண்ட சராசரங்கள் எல்லாம் இடரின்றி இயங்கும் தன்மை அற்று விடுமல்லவா? அதனால் அதற்கு ஒருவகை கண்டான் ஆதி மூர்த்தி, பிரமனைக் கொண்டு சங்கரனைப் படைத்தான். இதைத் தான் பாடிய நான்முகன் திருவந்தாதி என்ற பாடற் தொகுதியில் திருமழிசையாழ்வாரும்,

 “நான்முகனை நாராயணன் படைத்தான்
  நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத்தான் படைத்தான்”

என்கிறார் தெளிவாக. அப்படிப்பார்க்குங்கால் திருமாலின் புத்திரனாகிய பிரமனுக்கு மகனாகப் பிறந்தவன் சங்கரன். அதாவது திருமாலின் பேரன் என்று விளக்கமாகிறது. இதைத்தான் நமது கவி கருத்துட்கொண்டு “வனசமேவு முனிவனுக்கு மைந்தனானதில்லையோ” என்று கேட்கிறார்.

வேத, புராண இதிகாச வரலாறுகள் நமக்குப் பல அறிவுரைகளையும், அரிய கதைகளையும் நம்பமுடியாத சில சம்பவங்களையும் எடுத்துக் கூறவனவாகத்தான் இருக்கின்றன. அவைகளை ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் நமக்கு ஆண்டவன் கொடுத்த ஆயுள் போதாது. அவைகளை, அவைகளில் உள்ள வரலாறுகளை அவைகள் கூறும் கதைகளை நம்பித்தான் நாமின்று உலகத்தில் வாழமுடிகிறது. பிரமன் படைப்புக் கடவுள்; சங்கரன் அழித்தல் கடவுள். இவர்கள் இருவருமே திருமாலின் மாற்றுருவங்கள். இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்ததுதான் ஆதிமூர்த்தியாகிய நாராயணன் என்றெல்லாம் வேதமே விளக்குகிறது. அந்த ஆராய்ச்சிக்குள் நாம் புக வேண்டாம். கவி காட்டும் வழியாக அவரைப் பின் தொடர்ந்து செல்வோம். ஒருகால்,  சிவனுக்கும் பிரமனுக்கும் ஐந்து ஐந்து தலைகள் இருந்தனவாம். பிரமன் எப்பொழுதும் மந்தகதியுள்ளவன். சிவனோ என்றும் கோபக்கனல் தெறிப்பவன். தேவர்கள் மட்டுமின்றி பார்வதியும் கூட தன் பதிக்கும், படைப்புக் கடவுளுக்கும் வேறுபாடு காணமுடியாமல் தவித்தாளாம். இது கண்டு பொறாத நக்கபிரான் பிரமன் மேல் சீற்றங்கொண்டு அவனது ஐந்து தலைகளுள் ஒன்றைத் தன் கரத்தால் கொய்து விட்டான். அந்தப் பிரம்மக் கபாலம் சிவனின் கையிலிருந்து விடுவிக்க முடியாமல் ஆகிவிட்டது. அவன் பித்த நிலையை அடைந்து விட்டான். பார்த்தார்கள் பார்வதியும் மற்றதேவாசுர கணங்களும். அவனுடைய சித்தப் பிரமையை தெளிவிப்பதற்கு ஓங்காரப் பிரணவமாகிய அந்த ஒருவனால் தான் முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள். அதன்படியே அந்த பரந்தாமனிடம் அவர்கள் சென்றார்கள். அவர்களின் குறையைக் கேட்ட ஆதி மூலமும் அவர்கள் குறையைத் தீர்த்து வைப்பதாகச் சொல்லி அந்தக் கபாலியிடம் சென்று அவனைக் கண்டியூர் என்னும் தலத்தில் அவனது இரவைத் தொலைத்தான் என்று வரலாறுகள் கூறுகின்றன. அதை இதே கவி அவர் பாடிய நூற்றெட்டு திருப்பதியந்தாதி என்ற பாடற் தொகுதியில்

 “பேசவரிற்றன்னரங்கன் பேரல்லாம் பேசுகவாய் கேசவனை
  காண்கவிழி கேட்கசெவி, ஈசனார்
  உண்டியூர் தோறு முழன்றிரவா மற்றவிர்த்தான்
  கண்டியூர் கூப்புகவென்கை”

என்று விவரித்துப் பாடியுள்ளார். இதே கருத்தை நாலு கவிப் பெருமாளாகிய ஆலி நாடன் தனது திருக்குறுந்தாண்டகம் என்ற பாடற் தொகுப்பில்,

 “பிண்டியார் மண்டையேந்திப் பிறர் மனைதிரிதந்துண்ணும்
  உண்டியான் சாபம் தீர்த்த வொருவனூர்” உலகமேத்தும்
  கண்டியூரரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று
  மண்டினார் உய்யலல்லால் மற்றையார்க்குய்யலாமே”

என்று விளக்கியுள்ளார். அந்தக் கருத்தை மனத்திற்கொண்டு ஐயங்காரும்.

 “செங்கையால் இரந்தவன் கபால மார் அகற்றினார்?”

என்ற ஒரு கேள்வியைத் தொடுக்கிறார் தமது அடுத்த வரிகளின் மூலம். ஆம். இரப்பவன் பெரியவனா? அல்லது இரவை ஒழிப்பவன் பெரியவனா? நீங்களே சொல்லுங்கள். அதனால் சங்கரனின் இரவை ஒழித்த திருமால்தான் பெரியவன் என்று திறம்பட பேசிவிட்டார்.

சைவர்களுக்கு மனக் கொந்தளிப்புதான். இருப்பினும் இன்னும் பார்ப்போமே? ஏதாவது ஒரு வார்த்தையாவது ஐய்யங்கார் வாயிலிருந்து சிவனைப் பற்றி நல்லதாக வராதா என்று ஆவலுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் மேலும் தொடர்ந்தார்.

“செய்யதாளின் மலர் அரன் சிரத்திலானதில்லையோ?”

என்ற பாட்டின் அடுத்த அடியை. இது என்ன கதை? இது சாதாரணமாக எல்லோருக்குமே தெரிந்திருக்கக்கூடிய வரலாறு என்று சொல்ல முடியாது. இதற்கு வியாசரையும் அவர் இயற்றியருளிய மகாபாரதத்தையும் அவரது அடியையற்றி தீந்தமிழில் வில்லிபாரதம் என்ற பெயரால் பாடியருளிய வில்லிபுத்தூராழ்வாரையும் அடைக்கலம் புகுந்தால்தான் இந்த வரலாற்றை நாம் அறிந்து கொள்ளமுடியும். அப்படிச் செய்ய முயல்வோமே.

மகாபாரதப் போர். பதிமூன்றாம் நாள் போர். துரியனுக்குப் படைத்தலைவராய் நின்ற துரோணர் வகுத்திருந்த யூகத்தையெல்லாம் உடைத்துக் கொண்டு முன்னேறிச் சென்று அங்கிருந்த பல படைத் தலைவர்களைப் புடைத்து, ஒழித்து, மீண்டு திரும்பி வருகையில் ஜயத்ரதனால் வஞ்சனையாகக் கொல்லப்பட்டு மடிந்தான் அபிமன்யு. இவ்வுண்மையைக் கேட்டறிந்த பார்த்தன் கடுஞ்சினம் கொண்டான். மறுதினம் மாலைக்குள் அந்த ஜயத்ரதனை கொன்று முடிப்பதாக சூள் கொட்டினான். மாயக்கண்ணன் தான் அருகிலேயே இருக்கின்றானே? அது போதாதா. அவனிடம் ஆலோசனைக் கேட்டான். அவனும் ஒரு உபாயத்தைச் சொன்னான். சகல தேவ கணங்களுக்கும் அதிபதியாகிய அந்தச் சிவபிரான் தயவினால்தான் இந்த உன் சபதம் நிறைவேற வேண்டும். ஆதலின் அவனைத் தியானம் செய் என்றான் அந்த மாயக்கண்ணன். பார்த்தான் பார்த்தன். சிவபிரானை கயிலைக்குச் சென்று அவனிடம் அத்திரம் வாங்கிவர காலதாமதம் ஆகுமே? எனது சபதத்தை எவ்வாறு முடிப்பது? என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான். அதற்கு ஓர் தகுந்த உபாயத்தைச் சொன்னான் கண்ணன், “அர்ஜுனா! என்னை நீ சிவ உருவாக மனத்தில் இருத்திக் கொண்டுச் சில மலர்களை என் திருவடிகளில் தூவி அந்தச் சிவ பிரானை உனக்கு அருள வேண்டுமென்று வேண்டிக் கொள். அவன் அருள் புரிவான்” என்று அந்த மாயன் சொன்னான். அவனது வார்த்தைகளுக்கு மறுவார்த்தை பேசுவானா காண்டீபன். அவ்விதமே செய்தான் அந்தச் சுவேதவாகனன். அந்தப் பல்குணனின் கனவிலே வந்து தோன்றினான் பசுபதி. அங்கு அந்தப் பாண்டவன் கண்ட காட்சி தான் என்னே? எந்தச் சங்கரனைத் தியானித்துக் கண்ணன் திருவடிகளில் மலர்களை அரிச்சித்தானோ அதே மலர்களைத் தன் சிரசில் வகித்துக் கொண்டு காட்சியளித்தான் அந்தக் கயிலையங்கிரியான். இந்தச் சம்பவத்தைப் பாரதம் பாடிய வில்லிபுத்தூரார் கீழ் வரும் பாடல்களினால் நம்மைத் தெளிவுறுத்துகிறார்.

 “மருவரு கானகமலரினாலெமைப்
 பொருவரு பூசனை புரிதியைய நீ
 இருவரு மொருவரே யென்பதின்று போ
 யருவரை யவனடியடைந்து காண்டியே”
 “கண்ணன் மேலணி மலரனைத்துங் காயெரி
 வண்ணன் மேற்காண்டலு மகிழ்ந்து மேதினி
 உண்ணு மாதவன் சிவனுருவ மென்றுணர்ந்
 தண்ணலுமுடல் புளகரும்பினானரோ”

என்ற இவ்விருப் பாடல்களாலும் நமக்கு மேற்சொன்ன வரலாறு நன்கு புலனாகிறது.

மேற்கண்ட விவரங்களை என்னிடம் கேட்டுக் கொண்டிருந்த எனது நண்பர் ஒருவர் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். அந்தச் சந்தேகமும் சாதாரணமானதல்ல. அருமையான சந்தேகம்தான். “கண்ணன் திருமாலின் அவதாரம், அந்தத் திருமால்தான் பரம புருடன்.  மூவர்களுக்குள் சிறந்தவன் என்றெல்லாம் கூறுகிறீர்களே. ஏன் அந்தக் கண்ணன் அர்ஜுனனுக்கு தானாகவே அந்த அத்திரத்தை கொடுத்திருக்கக் கூடாது. இதற்காக ஏன் பரமசிவனிடம் செல்ல வேண்டும். இதனால் கண்ணனைக் காட்டிலும், திருமாலைக்காட்டிலும், சிவபிரான்தான் சிறந்தவன் என்பது விளக்கமாகத் தெரிகிறதே? இந்த இடத்தில் அய்யங்கார் மாட்டிக் கொண்டுவிட்டார், என்றெல்லாம் கூறி என்னிடம் நையாண்டி செய்தார் அந்த நண்பர். அவருடைய அறியாமையைக் கண்டு நான் வருத்தந்தான் கொண்டேன். அர்ஜுனனுக்கு கீதையருளிய அந்த கீதாச்சாரியனாகிய கண்ணபிரானே தன்னை வேறென்றும், சிவபிரானை தன்னிடத்தினின்றும் வேறென்றும் சொல்லவில்லையே!

உருத்திரர்களில் நான் சங்கரனாக இருக்கிறேன் என்று தானே சொல்லுகிறான். தான் வேறு, சங்கரன் வேறு என்று சொல்லவில்லையே? வில்லிபுத்தூரார் பாடலிலும் அர்ஜுனனிடம் கண்ணன் என்ன சொன்னான் என்பதை கூர்ந்து கவனிப்போமே!

“கானகத்தில் மலரும் மலர்களினால் என்னை பூஜித்து என்னை அந்தச் சங்கரனாகவே மனதில் தியானிப்பாயாக! நீ அந்தக்கயிலாசனை நேரில் சென்று  தரிசிக்கும்போது நானும் அவனும் வேறல்ல. ஒருவரே தான் என்பதை நன்கு அறிவாய்” என்று தானே கூறுகின்றான்.

அறுசமயம் கண்ட அரும்பெரும் தவத்தோர்கள் அவரவர் கடைப்பிடிக்கும் அவரவரது சமயங்களில் ஒன்றி நின்று அதன்வழி சென்று அது வழியாக பெரும் பேரின்பத்தை அடைவதுதான் நல்லது என்று சொல்லிப் போயிருக்கிறார்கள். அதன்வழி நிற்பவர் அய்யங்கார். மேலும் கவி உள்ளம் படைத்தவர். அதனால் அவர் இவ்விடத்தில் திருமாலுக்கு ஏற்றம் கொடுத்து சிவபிரானைத் தாழ்த்திக் கூறுவது குற்றம் என்று நாம் கொள்ளலாகாது. நாம் அப்படிக் கொண்டால் அது நமது அறியாமையே காட்டுமேயல்லாது அண்ணாரது புகழைத் தாழ்த்துவது ஆகாது. அய்யங்கார் உலக அனுபவம் உள்ளவர். காலாள் இட்ட வேலையை தலையால் செய்தல் என்பது ஒரு பழமொழி வழக்கு. அதாவது ஒருவர் காலினால் செய்யப்பட வேண்டிய ஒரு வேலையைத் தனது தலையாலேயே செய்தார் என்றால் அண்ணார் அங்கு செய்யப்படும் வேலைக்கும் அதை ஏவின எஜமானனுக்கும் ஏற்றம் அளித்துச் செய்யப்படும் ஒரு செய்கையாகும். அதுபோல் இங்கேயும், அருச்சுனன் கண்ணனின் திருவடிகளில் அர்ச்சனையாக இடப்பட்ட மலர்கள் சங்கரனின் திருமுடியில் காணப்பட்டதாக புகழ்ந்து கூறுகிறார். இது கவிஉள்ளமும், பக்தி உள்ளமும் கொண்டு பார்க்கும் பரமபுருடர்களுக்கு குற்றமாகவோ, குறையாகவோத் தோன்றாது.

கண்ணபிரானின் திருவடித்தாமரைகளில் இடப்பட்ட மலர்களை சிவபிரான் தன் திருமுடியில் ஏற்றுக் கொண்டு அருச்சுனனுக்கு அத்திரம் கொடுக்க வந்த சமயம் காட்சியளித்தான் என்றால் திருமாலின் திருவடிகளைத் தன் சிரசில் வகித்திருப்பதாகத்தானே பொருள். அதனாலும் சிவபிரானைக் காட்டிலும் திருமால் தான் சிறந்தவன் என்பதை விளக்கினார், இந்த மகாபாரதச் சம்பவத்தால். இதைக் கூறும் சமயம் அவருக்கு இதைவிட மிகுந்த சிறப்புடைய ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது. அதையும் மனவெழுச்சியுடன் சொல்லிவிட்டார் தனது பாடலின் அடுத்த அடியில்.

கஜேந்திரன் என்னும் வலிமையுள்ள யானை ஒன்று காட்டில் எங்கும் திரிந்து கொண்டிருந்தது. ஒருதினம் அங்குள்ள  மடு ஒன்றில் நீரருந்த இறங்கிற்று. அந்நீர்நிலையில் இருந்த முதலை ஒன்று அதன் முன்னங்கால் ஒன்றைப் பிடித்துக் கவ்விக் கொண்டது. முதலைக்கு நீரிலிருக்கும் பொழுது பலம் அதிகமல்லவா? யானை உருவத்தில் எத்தனைப் பெரியதாக இருப்பினும் அதிக பலமுள்ளதாக இருப்பினும் முதலையின்பால் அதனுடைய பலம் ஒன்றும் செல்லவில்லை. அந்த கஜேந்திரனுடைய உருவத்தையும் பலத்தையும் பற்றி பேசமுன் வந்த திருமங்கை மன்னன் “திருத்துழாய் தாரார்ந்த மார்பன் தடமால் வரைபோலும் போரானை” என்று அதனைப் புகழ்கிறான். திருத்துழாய் மாலையைத் தன் மார்பில் தரித்து விளங்கா நிற்கும் திருமாலாகிய திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய உயர்ந்த சிறந்த திருவேங்கட மலையைப் போல் இருந்ததாம் அந்த ஐராவதம்.

திருமங்கை மன்னனுக்கு திருவேங்கட மலையிலும் அழகர் மலையிலும் அத்தனை ஈடுபாடு. அதை அவர் பாடியருளிய பெரிய திரு மடலில், “தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்” என்று சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட அந்த யானை நெடுங்காலம் அந்த முதலையுடன் போர் புரிந்ததாம். நாளடைவில் அது அதன் வலிமையிழந்து விட்டது. இனி தன் முயற்சி எதுவும் பயனளிக்காது என்று தோன்றிய சமயம் அப்பொய்கையிலிருந்த ஓர் செங்கமலத்தை தன் துதிக்கையால் பறித்து, “ஓ! ஆதி மூலமே! என்னைக் காப்பாற்று!” என்று கூவிற்று. அந்தப்பிளிறல் அண்ட சராசரம் எங்கும் எட்டுத் திக்குகளிலும் சென்று எதிரொலி செய்தது. அது எல்லாத் தேவர்கள், இயக்கர்கள், தானவர்கள், யாவர் செவிகளிலும் விழுந்தது. ஆனால்  மூலமே என்று கூப்பிட்டதனால் அந்த மூலப் பொருள் என்பது எது என்று விளங்காமல் அவரவரும் வாளாவிருந்து விட்டனர். படைப்புக் கடவுளாகிய பிரமன் பதைக்கவில்லை. சிவனோ அதைப்பற்றிச் சிந்திக்கக்கூட இல்லை. ஆனால் அந்த மூலமே என்ற சொல்லின் விளக்கமாகிய அந்த பரமபுருடன் அந்தப் போதகத்தின் பிளிறல் கூக்குரல் கேட்டவுடனேயே பதறி எழுந்து விட்டான். அச்சமயம் அவன் தனது அருகிலிருந்த பங்கயத் திருவாகிய இலக்குமியைப் பார்க்கவில்லையாம். தனது ஏவலுக்கு எச்சமயமும் செவி சாய்த்து நிற்கும் கருடனையும் திரும்பிப் பார்க்க வில்லையாம். சங்கு சக்கரங்களையும் ஏந்திப் பார்க்கவில்லையாம். அத்தனை வேகத்தில் கிளம்பி விட்டான் அந்தப் பரம்பொருள். இந்த வரலாற்றை இராம காதை பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பனும் யுத்த காண்டத்தில், வீடணன் அடைக்கலப் படலத்தில் இராமன் கூறும் வாயிலாக,

 “போதகமொன்று கன்றியிடங்கர் மாம்பொருத போரில்
 ஆதியம் பரமே யானுன்னபயமென்றழைத்தவந்நாள்
 வேதமுமுடிவு காணா மெய்ப்பொருள் வெளிவந்தெய்தி
 மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார்”

என்று பாடியுள்ளான். இதைத்தான் அய்யங்காரும், “வெங்கண் வேழ மூலமென்ன வந்ததுங்கள் தேவனோ” என்று கேட்கிறார். கோபக்கண்களைக் கொண்ட அந்த கஜேந்திரன் என்னும் பெரியயானைக்கரசன் ஆதி மூலமே, காப்பாற்று என்று கூக்குரல் எழுப்பிய பொழுது முன் சென்று அவனது இடர் கடிந்தவன் எங்கள் பெருமானாகிய திருமாலா? அல்லது உங்கள் சிவ பெருமானா? என்று விளக்கத்துடன் கேட்பது நாம் ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு உண்மைதானே!

வாணன் என்பவன் ஒரு அசுரன். அவன் கிருஷ்ணாவதார காலத்தில் வாழ்ந்தவன். அவனுக்கு ஓர் அருமை மகள். உஷை என்பது அவள் பெயர். அவளது அழகிற்கும், அறிவிற்கும் இந்தப் பரந்த உலகில் ஈடு, இணை உள்ளோர் எவருமே இலராம். அவளுக்கு சித்திரலேகை என்ற பெயருடைய அருமை தோழி ஒருத்தி இருந்தாள். ஓரிரவு அந்த உஷை மதனைப்போன்ற ஒரு கட்டழகனைக் கனவில் கண்டுவிட்டாள். அவனிடம் தனது மனதைப் பறிகொடுத்து விட்டாள் அவள். பார்த்தாள் சித்திரலேகை. அவள் திறமைசாலி. இந்தப் பரந்த பூமியின் கண் வசிக்கும் சுந்தரபுருடர்கள் யாவருடைய உருவங்களையும் ஒவ்வொன்றாக ஓவியமாகத் தீட்டி உஷையிடம் காட்டி அவள் கனவில் கண்ட புருடர் இவர்கள் எவரையாவது நிகர்த்து இருக்கின்றனரா என்று கூறும்படிச் சொன்னாள். சித்திரலேகை எழுதி வந்த சித்திரங்களில் ஒன்று உஷை கனவில் கண்ட காமனுக்கு ஒப்பாக இருந்தது. உஷைக்கு காதல் நோய் தந்தவன் கண்ணபிரானின் பேரனாகிய அநிருத்தன் தான் என்பதை அறிந்து கொண்ட சித்திரலேகை அவள் அறிந்த மாயையினால் அநிருத்தனை உஷையின் அந்தப்புரத்திற்கு எடுத்துவந்து அவர்களை இன்பத்தில் ஆழும்படி செய்து வந்தாள். இதைத்தான் திருமாலிடம் கொண்ட காதல் நோய்க்கு உதாரணமாகக் கூறும் வாயிலாக திருமங்கை மன்னன் தான் இயற்றிய பெரிய திருமடல் என்னும் நூலில்,

“சூழ் கடலுள்
 பொன்னகரம் செற்ற புரந்தரனோடேரொக்கும்
 மன்னவன் வாண ணவுணர்க்கு வாள் வேந்தன்
 தன்னுடைய பாவை யுலகத்துத் தன்னொக்கும்
 கன்னியரையில்லாத காட்சி யாள், தன்னுடைய
 இன்னுயிர்த் தோழியா லெம்பெருமானீன் துழாய்
 மன்னு மணிவரைத்தோள் மாயவன்& பாவியேன்
 என்னை யிது விளைத்த வீரிரண்டு மால் வரைத்தோள்
 மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
 கன்னிதன் பால்வைக்க மற்றவனோ கடத்தனையோர்
 மன்னிய பேரின்ப மெய்தினாள்”

என்று விளக்கியுள்ளார். நாளடைவில் இந்த விவரம் தெரிந்த வாணாசுரன் அநிருத்தனை சிறைபிடித்து தனது கோட்டையிலேயே ஒரு சார் காவலில் வைத்துவிட்டான். இது விவரம் அறிந்து துவாரக நாதன் படையுடன் கிளம்பினான், பகைவரை நோக்கி. வாணாசுரன் ஓர்சிறந்த சிவ பக்தன். தன் மேல் படையெடுத்துவரும் பரந்தாமனைப் படையுடன் கண்ட அவன் சிவபிரானிடத்து முறையிட்டான். தன் பக்தனின் பரிதாபத்தைப் பார்த்துக் கொண்டிருப்பானா அந்த பரமேஸ்வரன். கிளம்பிவிட்டான் கயிலாயத்தை விட்டு, தன் பூதகணங்களுடன்.  வாணாசுரனின் கோட்டையின் நாலு பக்கங்களிலும், பூத கணங்களினாலும் பிரதான வாயிலில் சிவபிரான், கணபதி, கந்தன், வீரபாகு ஆகியவர்களாலும் காக்கப்பட்டு இருந்தது. அநிருத்தனை மீட்பதற்காக அங்கு வந்து தோன்றினான் அந்த மாயக்கண்ணன். அவனது பேருருக் கண்ட சிவனுடைய பூதகணங்களும், சிவ பிரானுமே தங்கள் காவற் தொழிலை மறந்து ஓட்டம் பிடித்து விட்டனர். பிறகு வாசுதேவனும் வாணனின் ஆயிரம் கரங்களையும் துண்டித்து அநிருத்தனை சிறை மீட்டு வந்தார் என்பது புராண வரலாறு. இதை திருமழிசையாழ்வார்,

 “மோடியோடி வச்சையாய சாபமெய்தி முக்கணான்
 கூடுசேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
 ஓடவாணணாயிரங் கரங்கழித்த வாதி மால்
 பீடு கோயில் கூடுநீர் அரங்கமென்ற பேரதே”

என்ற பாடலாலும், இதே ஐயங்கார் அவர் இயற்றியுள்ள திருவரங்கக் கலம்பகம் என்னும் நூலில்

 “மோடியோட வங்கிவெப்பு மங்கியோட வைங்கரன்
 முடிகியோட முருகனோட முக்கணீசன் மக்களைத்
 தேடியோட வாணணாயிரம் புயங்கள் குருதிநீர்
 சிந்தியோட நேமிதொட்ட திருவரங்க ராசரே”
என்ற இந்தப் பாடலாலும் விளக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை, இந்தப் புராண வரலாற்றை யாவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த உண்மையை வைத்துக் கொண்டு ஐயங்கார் எங்கள் திருமாலின் வீரத்திற்கு முன்னால் தன் வீரம் இழந்து நின்ற சிவபிரானின் நிலைமையை நீங்கள் அறிந்திருக்கவில்லையோ என்ற கருத்துப்பட, “வீறுவாணன் அமரில் அன்று விறலழிந்ததில்லையோ” என்று கேட்டார்.

இந்தப் பரந்த உலகம், எத்தனையோ யுகங்களைக் கண்டிருக்கிறது. அதில் எத்தனை வருடங்கள்; எத்தனை மாதங்கள், வாரங்கள், நாட்கள், மணி நிமிடங்கள், எத்தனை மாயப் பிறவிகள், எத்தனை இன்ப துன்பங்கள் இவ்வளவையும் ஒரே நொடியில் தன்னுள் அடக்கிக் கொள்கிறது பிரளயம் என்னும் பூதம். அந்த பூதந்தான் ஆதிமூலமாகிய ஆதி நாராயணன், வைகுண்ட நாதன்.  அந்தப் பிரளய காலத்தில் அந்தப் பரந்தாமன் இந்தப் பரந்த பூவுலகைத் தன் வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டு அந்தப் பெரும் வெள்ளத்தின் மேல் ஓர் ஆலிலை மேல் சிறு பாலகனாய் பள்ளி கொண்டிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த உண்மையை அறிந்திருந்த திருமங்கை மன்னன் “பாராளன் பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்ட பேராளன்” என்று தனது திருநெடுந்தாண்டகத்திலும்

 “அவன் காண்மின்...
 ஊரா நிரை மேய்த்தும் உலகெல்லாம் உண்டுமிழ்ந்தும்
 ஆராத தன்மையனாய்”
என்று தனது சிறிய திருமடலிலும் சிறப்பித்துக் கூறி இருப்பது நோக்கற்பால தொன்றாகும்.

இந்தப் பரந்தாமன் இவ்வுலகை உண்டுமிழும் காலம் பிரளயம் எனப்படுகிறது. அக்காலம் உலகிலுள்ள அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் யாவும் அவனது, அந்தபரம புருடனின் வயிற்றில் சென்று அடங்கி விடுகின்றனவாம். அவ்வாறு நேருங்காலை இந்த உலகத்தோடு ஒட்டி நிற்கும் கயிலாய மலையும் அவனது உதரத்திற் சென்று உறைந்து விடத்தானே செய்கிறது? அச்சமயம் அந்தக் கயிலாயத்தில் வாழ்ந்து வந்த சிவபிரானும் அந்தத் திருமாலின் வயிற்றுக்குள் தானே அடக்கமாகிறான்? அல்லது அச்சிவபிரான் அவ்வமயம் எங்காவது தப்பி ஓடிவிடுவதாகப் புராணங்கள் கூறுகின்றனவா? அல்லது இமய மலை மட்டும் தனித்து இயங்கியதாக ஏதாவது புராண ஏடுகள் விளக்குகின்றனவா? இல்லையே. அதனால் அந்தப் பிரளய காலத்தில் உங்கள் தெய்வமாகிய அந்தச் சிவபிரானும் எங்கள் திருமாலின் வயிற்றுக்குள் அடங்கி விடுகிறான். ஆதலால் எங்கள் திருமால் பெரியவனா அல்லது உங்கள் சிவபிரான் பெரியவனா என்று கேள்வி கேட்கும் முறையில் “அங்கண் ஞாலமுண்டபோது வெள்ளி வெற்பகன்றதோ?” என்று வெற்றிப் பெருமிதத்தடன் வினாவை எழுப்பினார் அந்த அய்யங்கார்.

 “எல்லாம் தீர்ந்துவிட்டன. இனி இவரிடம் தங்கள் சிவ பிரானைப் பற்றிய எந்தப்புகழ் மாலையையும் கேட்க முடியாது. நாம் எழுந்திருப்போம்” என்று அந்த திருவானைக்கா சைவர்கள் எண்ணியிருத்தல் வேண்டும். அவர்களுக்கு தீர்ப்பு அளிப்பது போன்ற ஒரு உறுதி மொழியில் தனது பாடலின் கடைசி அடியையும் கூறிவிட்டார் மேற்படி பக்தர். அது என்ன உறுதிமொழியோ?

 “ஆதலால் அரங்கனன்றி வேறு தெய்வமில்லையே” என்பதுதான் அந்த உறுதிமொழி. மேற்சொன்ன ஆதாரங்களையெல்லாம் வைத்துக் கொண்டு பார்க்குங்காலை சிவபிரானைக் காட்டிலும் திருமால்தான் சிறந்தவன். அந்தத் திருமாலின் அர்ச்சாவதாரமாகிய எங்கள் திருவரங்கன் தான் எல்லாத் தெய்வங்களிலும் மேம்பட்ட தெய்வம். அவனன்றி வேறு தெய்வமே கிடையாது? என்பதுதான் அவர் உறுதியுடன் அறுதியிட்டுச் சொன்ன வார்த்தை.

மேற்படிக் காரணங்களினால் அரங்கனைப்பாடிய தன் வாயால் குரங்கனைப் பாட மாட்டேன் என்று அவர் சொன்னதில் வியப்பொன்றும் இல்லையல்லவா? இப்பொழுது அவர் இயற்றியருளிய அந்தப் பாடல் முழுவதையும் படித்துப் பாருங்கள்.

 “மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார் பதத்து நீர்?
 வனசு மேவு முனிவனுக்கு மைந்தனானதில்லையோ?
 செங்கையால் இரந்தவன் கபாலமார் அகற்றினார்?
 செய்யதாளின் மலரரன் சிரத்திலானதில்லையோ?
 வெங்கண் வேழ மூலமென்ன வந்ததுங்கள் தேவனோ?
 வீறு வாணன் சமரில் அன்று விரலழிந்தில்லையோ?
 அங்க ஞால முண்டபோது வெள்ளி வெற்பகன்றதோ?
 ஆதலால் அரங்கனின்றி வேறு தெய்வமில்லையே!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக