புதன், 12 மே, 2021

குரு பரம்பரை வைபவம் - 8 - கோமடம் மாதவாச்சார்யார்

வெள்ளத்தை எதிர்த்து வந்த பிரபந்தங்கள்


திருமழிசை ஆழ்வாரின் திருப்பாதம் பற்றி நடந்த கணிகண்ணன் என்பவனுடைய விஷயத்தில் நாம் தெரிந்து கொள்வது என்ன? ஒரு சிஷ்யனுக்காக, பகவானுக்கே ஆணையிடும் சமர்த்தர்கள்தான், நம் உத்தம குருமார்கள். பைந்நாகப் பாயை சுருட்டிக் கொள் என்றும், விரித்து விடு என்றும் திருமழிசை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களைத் தவிர வேறு யார் கூற முடியும்? அப்படித்தான் ஒரு சமயம் துர்வாச மகரிஷியிடம் பகவான், ‘‘நான் என் பக்தர்கள், பாகவதர்களுக்கு அடிமை’’ என்கிறான். ஒட்டுமொத்தமாக இதன்மூலம், நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் கோயிலில் உள்ள எம்பெருமானிடம் பக்தி சிரத்தையோடு அணுகினால், அவன் நம்முடன் கலந்துரையாடி நம்மை வாழ வைப்பான், நாம் ஆட்டுவிக்கும்படியெல்லாம் கூட ஆடுவான் என்பதேயாகும். 


மேலும் திருமழிசையாழ்வார், கச்சியிலிருந்து புறப்பட்டு திருக்குடந்தை எனும் கும்பகோணத்திற்கு  செல்ல விழைந்தார். ஆதியில் கடகோணம் என்றும் அழைப்பர். கும்ப கடம் உடைந்த ஊரல்லவா அது! அப்படிச் செல்லும்போது வழியில் பெரும்புலியூர் என்ற கிராமத்தில் ஒரு அந்தணரின் வீட்டுத் திண்ணையில் ஓய்வெடுத்தார். அந்த வீட்டில் சிலர் வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் திருமழிசையார் வந்து வாசல் திண்ணையில் உட்கார்ந்த உடனேயே வேதம் ஓதுவதை நிறுத்தி விட்டனர். இந்த மகாயோகீஸ்வரரின் பெருமையை அறியாமல், மற்ற சாதிக்காரர்களின் காதில் வேத சப்தங்கள் விழக் கூடாது என்று நினைத்து வேதத்தை ஓதாமல் நிறுத்தி விட்டனர். 


இவர்களின் மனப்போக்கை அறிந்த ஆழ்வார் வேறொருவர் வீட்டுத் திண்ணையில் சென்று அமர்ந்தார். மீண்டும் வேதம் ஓதுதலை தொடங்க முற்பட அந்த அந்தணர்களுக்கு வேதம் மறந்து போயிற்று. இதைக் கண்ட ஆழ்வார் அங்கிருந்தபடியே ஒரு கருப்பு நெல்லை நகத்தால் கிள்ளி குறிப்பால் உணர்த்தினார். அதாவது வேதத்தில் ‘கிருஷ்ணானாம் வ்ரீஹீனாம் நக நிர்பின்னம்’ என்ற வாக்கியத்தை சொல்ல மறந்த அந்தணர்களுக்கு நினைவூட்டினார். இதற்கு என்ன பொருள் எனில், கிருஷ்ணம் என்றால் கருப்பு நிறம், வ்ரீஹீ என்றால் நெல். நிர்பின்னம் என்றால் கிள்ளிப் போடுதல் என்பதாகும். இந்த வரியை அவ்வளவு அழகாக நெல்லை கிள்ளி காட்டினார். அதன் பிறகு வேதம் ஓதுதலைத் தொடங்கி சீக்கிரமே முடித்துக்கொண்டு திருமழிசையாரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். அதோடு நில்லாமல் அவரை பலவாறு உபசரிக்கவும் செய்தனர். அச்சமயத்தில் அந்த ஊர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் எந்த வீதியில் இந்த ஆழ்வார் சஞ்சரிக்கிறாரோ அந்த முகமாகத் திரும்பியருளினான். இந்த ஆச்சரியத்தை அர்ச்சகர் மூலமாக அறிந்த அவ்வூரார் அனைவரும் திகைத்துப் போயினர். அவ்வூரில் யாகம் செய்து கொண்டிருந்த பெரும்புலியூர் அடிகளிடம் சென்று ஆழ்வாருடைய பெருமையைக் கூற, அதுகேட்ட தீட்சி தரும் பேரானந்தம் கொண்டு ஆழ்வாரை எதிர்கொண்டழைத்தார். ஆழ்வாருக்கு அக்ர பூஜையையும் செய்தனர். அக்ர பூஜையென்றால் ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிக்குமுன் செய்யும் ஒரு பூஜை.


ராஜஸூய யாகத்தில் தர்ம புத்திரர் கிருஷ்ண பரமாத்மாவுக்கு செய்த அக்ர பூஜையும் அப்படியே ஆகும். அங்கு அக்ர பூஜையை சிசுபாலன் பழித்தது போல, இவருடைய அக்ர பூஜையையும் அத்வர்யு எனும் பிரிவினர், ஆழ்வாரின் குலத்தைப் பழித்துப் பேசினர். அதைக் கண்ட தீட்சிதர் மிகவும் வருந்தினார். இந்த தீட்சிதருக்காக நம் பெருமையைக் காட்டியே தீர வேண்டும் என்று அனந்த சயனனைக் குறித்து பாசுரம் சாதித்து விட்டுச் சென்றார். பிறகு, இத்தலத்திலிருந்து திருக்குடந்தை சென்று, தாம் செய்த நூற்றுக்கணக்கான பிரபந்தங்களை திருக்காவேரி வெள்ளத்திலே விட்டார். மற்ற பிரபந்தங்களெல்லாம் வெள்ளத்தோடு சென்ற போது, ‘நான்முகன் திருவந்தாதி’ மற்றும் ‘திருச்சந்தவிருத்தம்’ என்னும் இரு திவ்ய பிரபந்தங்கள் மட்டும் நீரின் பிரபாவாகத்தை எதிர்த்து வந்து ஆழ்வாரின் திருவடிகளை அடைந்தன. உலகம் உயர்வதற்கு அவ்விரு திவ்யப் பிரபந்தங்களே போதும். மோட்சத்தில் ஆசை உள்ளவர்களுக்கு இவ்விரு பிரபந்தங்கள் நிச்சயம் உதவும் என்று அருளினார். திருக்குடந்தையில் அரவணை மேல் பள்ளி கொண்டிருக்கும் ஆராவமுதனுடைய ஏரார் கோலத்தையும் கண்டு, ‘காவிரிக்கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு’ என்று விண்ணப்பிக்க, எம்பெருமானும், ‘ஆழ்வீர் சௌக்யமா?’ என வினவினார். பகவானின் அந்த நீர்மைக்கு தோற்றுப்போய் ‘வாழி கேசனே’ என்று மங்களாசாசனம் செய்தார். எம்பெருமானும் கிடந்தவாறு எழுந்திருக்க முற்பட அங்கு உத்தான சாயியாக திருக்கோலச் சேவை சாதித்தருளினான். அந்த எம்பெருமானுடைய திருமேனியையே தியானம் செய்துகொண்டு பல வருஷங்கள் யோகத்தில் எழுந்தருளியிருந்து, அந்த திவ்ய தேசத்திலிருந்தே திருநாட்டிற்கு எழுந்தருளினார். 


திருக்குடந்தையில் ஆராவமுதன் அர்ச்சா ரூபியாக இருந்து கொண்டு, அமுது செய்த பிரசாதத்தை அமுது செய்வது எனும் நியமத்தை மேற்கொள்வதன் மூலம் தனது பக்தர்களுக்கு அடிமையென்பதை காட்டியருளினான். அதனாலேயே திருமழிசையாழ்வாருக்கு, திருமழிசைப் பிரான் என்றும், பகவானான ஆராவமுதனுக்கு ஆராவமுதாழ்வான் என்றும் திருநாமங்கள் ஏற்பட்டன. அதாவது ஆழ்வார் பெருமாளாக ஆனார். பெருமாள் ஆழ்வாராக மாறினார்! பக்தர்களுக்காக பகவான் என்ன தான் செய்ய மாட்டான்... நினைக்கும்தோறும் நெஞ்சு நீர்ப்பண்டமாக மாறும். இவருடைய பிரபந்தங்கள் இரண்டிலுமே பகவானின் பரதத்துவத்தை உணர்த்தும்படியே பாடியிருக்கிறார். யார் பரப் பிரம்மம் என்று வேதத்தில் சொன்னதை, தமிழ் மறையிலே அறுதியிட்டு கூறியிருக்கிறார். இதனாலேயே இந்த ஆழ்வாருக்கு உறையிலிடாதவர் என்ற திருநாமமும் உண்டு. இதை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பார். ‘ஆசார்ய ஹ்ருதயம்’ என்ற தம் நூலில் இவ்வாறு திருநாமம் சாற்றி புகழ்ந்தார்.

அடுத்து, குலசேகர ஆழ்வாரின் வைபவத்தை பார்ப்போம்.


இந்த ஆழ்வார், கேரள தேசத்தில் திருவஞ்சிக்களம் எனும் தலைநகரில், கலியுகம் பிறந்து 27 வருடங்கள் கழித்து பராபவ வருடம், மாசி மாதம், புனர்பூசம் நட்சத்திரத்தில், பகவானின் திருமார்பில் உள்ள கௌஸ்துபம் என்ற ஆபரணத்தின் அம்சமாக, சேர நாட்டு அரச பரம்பரையில் அவதரித்தார். இவரைப் பற்றிய ஸ்லோகம் ஒன்று உண்டு:

‘கும்பே புனர்வவெலி காதம் கேரளே சோளபந்தனே

கௌஸ்துபாம்சாம் தராதீசம் குலசேகரமாச்ரயே!’

சேர நாட்டில், கொல்லி நகரில் த்ருடவ்ரதன் என்ற அரசனுக்கும் ராதநாயகியம்மாள் என்கிற ராணிக்கும் புத்திரராக, புத்ர காமேஷ்டி யாகத்தின் பலனாக, ராமபிரான் அவதரித்தது போலவே இவ்வாழ்வாரும் தோன்றினார். ராமனும் புனர்பூசத்தில் அவதரித்தார். இவருக்கும் புனர்பூச நட்சத்திரமே. அதனால் இவ்வாழ்வார் ராமனைப் போலவே உண்மையையே விரதமாகக் கொண்டு வாழ்ந்தார். எப்பேர்ப்பட்ட துக்கத்திலும் பொய் விளம்பாதவர். மறை ஓதுதல், குதிரையேற்றம், வில்வித்தை ஆகியவற்றை அனாயாசமாகக் கற்றுத் தேர்ந்தார். ஞான தத்துவ ஆராய்ச்சி செய்யும் மகானாகவும் விளங்கினார். சகல சாஸ்திர நூல்களையும் நன்கு கற்றுணர்ந்தார். ராமபிரானிடத்தில் அதிக பக்தியுடனே வாழ்ந்து வந்தார். இப்படி மைந்தனது சிறப்பைக் கண்ட த்ருட வ்ரதன் உடனேயே இவ்வாழ்வாருக்கு இளவரசராக முடி சூட்டினார்.


இதற்குப் பிறகு க்ஷத்ரிய தர்மத்தில் இருந்து கொண்டு நால்வகைப் படைகளான தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை என்று திரட்டிச் சென்று, சோழர், பாண்டியர் முதலிய அரசர்கள் அனைவரையும் வென்று வசப்படுத்தினார். மூன்றுக்கும் தலைவனானதால் கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோன் குலசேகரன் என்ற விருதுகளைப் பெற்று மூன்றையும் ஆண்டான். அரச குமாரனுடைய தகுதியைக் கண்டு களிப்புற்ற தந்தை த்ருடவ்ரதன், குலசேகரருக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து, க்ஷத்ரிய முறைப்படி வனம் புகுந்து வானப்ரஸ்த்தம் ஏகினார். 

 ரகு வம்சத்து ராஜாக்கள் அனைவருமே இப்படித்தான் இருப்பர் என காளிதாச மகாகவியும் தன் காவ்யமான ரகு வம்சத்தில் தெரிவிக்கிறார். இப்படி தந்தையின் பிரிவுக்கு ஆற்றாது வருந்தி, மந்திரிகள் தேற்றித் தேறினார். நடுநிலை தவறாமல் ராம ராஜ்யம் என அனைவரும் போற்றும்படி ஒப்பற்ற முறையில் அரசாண்டு, அரச குலக் குமாரியான கல்யாணியை மணந்தார். தன் தந்தையின் பெயரைக் கொண்ட த்ருடவ்ரதன் என்கிற ஒரு புத்திரனையும் நீளாதேவியின் அம்சமாய், இளை என்றும் ‘சேரகுலவல்லி’ என்றும் பெயர் பெற்ற ஒரு புத்திரியையும் ஈன்றெடுத்து சிறப்பாக ராஜ்யபாரம் செலுத்தி வந்தார்.


இம்மை, மறுமை, மோட்சம் என்னும் மும்மை இன்பங்களை தரவல்லவனாய், முதலும் முடிவுமற்ற முழுமுதற் கடவுள் யார் என்று விசாரம் செய்யத் தொடங்கினார். பல பண்டிதர்களோடு, ஸ்ருதி, ஸ்ம்ருதி, இதிகாச புராணங்கள் ஆகியவற்றிலுள்ள பிரமாணங்களை ஆராய்ந்து வருகையில், இதையே காரணமாகக் கொண்ட எம்பெருமான் கமலக்கண்ணனானவன், மயர்வர மதிநலம் அருளினான். தனது ஸ்வரூபம், ஏனைய ரூபங்கள், குணங்கள், விபூதிகள் ஆகியவற்றைக் காட்டிக் கொடுத்தான். பகவானுடைய அனந்த கல்யாண குணங்களாகிய பெருங் கடலில் ஆழ்ந்து நெஞ்சுருகி ஈடுபட்ட குலசேகராழ்வார், ராம, கிருஷ்ண அவதாரங்களில் பெரும் பக்தி கொண்டார். மேலும் அர்ச்சாவதாரங்களில், திருவரங்கம், திருமலை, திருக்கண்ணமங்கை, திருச்சித்திர கூடம், திருவித்துவக்கோடு முதலிய திவ்ய தேசத்து எம்பெருமான்களிடத்தில் ஆறாத காதல் கொண்டிருந்தார். ராமாயண காலக்ஷேபத்தையே எப்பொழுதும் பொழுதுபோக்காகப் பெற்றவராக விளங்கினார். வைஷ்ணவ பாகவதர்களை கண்டால் எதிர்கொண்டு அழைத்து உபசரிக்கும் பாகவத நிஷ்டையை உடையவராக, அரச போகங்களில் பற்றற்றவராய் வாழ்ந்து வரலானார்.


அப்படி ஒருநாள் உபந்யாசம் கேட்டு வருகையில், ‘ஆரண்ய காண்டத்தில் மூக்கறுந்த சூர்ப்பணகையால் தூண்டப்பட்ட பதினாலாயிரம் ராட்சசர்கள் ஒருபுறமும் ஒரு துணையுமில்லாத ராமபிரான் ஒரு புறமுமாய் நிற்க, கோரமான போர் நிகழ்ந்தது’ என ராமாயண உபந்யாசம் செய்தவர் சொன்னவுடன் அதிர்ந்து போனார். ராமாயணத்தில் தமக்குள்ள ஈடுபாட்டினால் வெகு காலத்துக்கு முன்பு நடந்த அந்தச் சரித்திரம், அன்றுதான் நடக்கிறதாக நினைத்துக் கொண்டார்.


‘‘இப்படி பெருமாள் பேராபத்திலே சிக்கியிருக்கும்போது, நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமே’’ என்று கருதி, துணிந்து, தனது சேனைகளையெல்லாம் போருக்கு சித்தமாயிருக்கும்படி பணித்தார்.  அதுகண்ட அனைவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கையில், மிகவும் சமயோசிதத்துடன், ராமாயண காலக்ஷேப பண்டிதர், ‘ராமபிரான் தாம் தனி வீரராக நின்று பதினாலாயிரம் அரக்கர்களையும் அழித்து பர்ண சாலைக்கு மீண்டுவர, அவரை, சீதாப்பிராட்டி களிப்புடன் அணைத்துக் களைப்பாற்றினாள்’ என்று தெரிவித்தார். இதைக் கேட்ட பிறகு குலசேகர ஆழ்வார் தன்னிலை உணர்வார் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனாலும் நம்பாமல் ஆழ்வார் புறப்படவே, ராமபிரானே நேரில் காட்சி கொடுத்து, நடந்தவற்றைக் கூறி சமாதானப்படுத்த, சேர ராஜனான குலசேகராழ்வார், பேரானந்தம் கொண்டு, சேனையை தடுத்து நிறுத்தி, தம் பிரயாணத்தை கைவிட்டார்; தொடர்ந்து சந்தோஷமாக உபந்யாசத்தைக் கேட்டார். அவருடைய பக்தியை யாரால் வர்ணிக்க இயலும்!


நன்றி - தினகரன் ஆன்மிகம் அக்டோபர் 2012


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக