வியாழன், 13 மே, 2021

குரு பரம்பரை வைபவம் - 9 - கோமடம் மாதவாச்சார்யார்

படியாய்க் கிடந்து பெருமாளின் பவளவாய் காண்பவர்


உபந்யாசகர் வர்ணனையில் தன்னை மறந்து அப்போது தான் ராமாயண சரிதமே நிகழ்வதாக நினைத்து உணர்ச்சி வயப்பட்டவர் குலசேகர ஆழ்வார். இப்படி அவர் பெருமாளின் மீது கொண்ட பிரேமை எல்லை கடந்ததாக இருந்தது.


ஒருமுறை, குலசேகர ஆழ்வார் திருவரங்கம் பெருநகரின் பெருமையை உணர்ந்து, பெரிய பெருமாளை சேவிப்பதற்கு நாள் குறித்தார். ‘‘இவர் பெரிய பெருமாளை சேவித்தால் மீண்டும் வரமாட்டார்’’ என்பதை உணர்ந்த மந்திரிகள், இவரது யாத்திரையை தடுத்து நிறுத்த ஓர் உபாயம் செய்தனர். அதாவது இவர் பாகவத ஆராதனம் செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர். ஆதலால், இவர் யாத்திரைக்கு குறித்த நாளன்று ஏராளமான வைஷ்ணவர்களை அழைத்து வந்து இவரது திருமுன்பு நிறுத்தினர். இவரும், எம்பெருமானை ஆராதிப்பதைக் காட்டிலும் அவரின் அடியார்களை ஆராதிப்பது தலைசிறந்தது என்று உணர்ந்து யாத்திரையை நிறுத்தி வைத்தார். இப்படியே இவர் ஸ்ரீரங்கம் செல்ல நாள் குறித்தபோதெல்லாம், வைஷ்ணவர்களை அனுப்பி யாத்திரையை நிறுத்தினர், மந்திரிகள். இப்படியாக இவர் புகழ்பாடும் விஷயம் ஒன்றில் ‘‘குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே, நமஹம் சிரஸா நமாமி ராஜானம் குலசேகரம்’’ என்ற வடமொழி ஸ்லோகம் வர்ணிக்கிறது. அதாவது எவருடைய தலைநகரில் ஸ்ரீரங்க யாத்திரையைப் பற்றிய பேச்சு தினந்தோறும் முழங்குகிறதோ, அப்படிப்பட்ட ராஜாவாகிய குலசேகரரை தலையால் வணங்குகிறேன் என்று இவர் பெருமை இன்றளவும் பேசப்படுகிறது.


மற்றுமொரு சுவையான சம்பவம். இவரது அரண்மனையினுள்ளும், ஆலோசனை மண்டபத்திலும் மற்றும் அந்தரங்க இடங்களிலும்கூட பாகவதர்கள் கோஷ்டி கோஷ்டியாக போய் வருவதற்கு உரிமை பெற்றிருந்தனர். இதைக் கண்டு பொறாமை கொண்ட சில மந்திரிகள், இவர்கள் மீது குலசேகரருக்கு வெறுப்பை உண்டாக்க திட்டமிட்டனர். 


ஒரு ஸ்ரீராம நவமி உற்சவத்தன்று எம்பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும்போது திருவாபரணங்களில் விலை மதிக்க முடியாததொரு முத்து மாலையை எடுத்து ஒளித்து வைத்தனர், மந்திரிகள். திருமஞ்சனம் முடிந்தபின் மாலையைக் காணாது, அர்ச்சகர்கள் அரசனிடம் அறிவித்தனர். அவர் மந்திரிகளை அழைத்து, ‘‘கள்வனை விரைவில் தேடிப் பிடியுங்கள்’’ என்று கட்டளையிட்டார். அதையே காரணமாகக் கொண்டு மந்திரிகள், ‘‘இந்த அரண்மனையில் தங்கு தடையின்றி திரியும் வைஷ்ணவர்களில் ஒருவரே இம்மாலையை எடுத்திருக்க வேண்டும்’’ என்று பழி சுமத்தினர். அதைக்கேட்ட ஆழ்வார் செவி புதைத்துக் கொண்டார். மந்திரிகளை கடிந்து, ‘‘எம்பெருமானின் அடியார்கள் ஒரு நாளும் இந்த அடாத செயலை நினைக்கக்கூட மாட்டார்கள். இதை நானே நிரூபித்துக் காட்டுவேன்’’ என்றார். 


கொடிய விஷமுள்ள ஒரு ராஜ நாகத்தை ஒரு குடத்திலிட்டு, ‘‘வைஷ்ணவர்களில் யாராவது இப்படியொரு அடாத செயலைச் செய்திருக்கும் பட்சத்தில் ராஜநாகம் என்னைத் தீண்டிக் கொல்லட்டும். மனதாலும் வாயாலும் சரீரத்தாலும் செயலாலும் அவர்கள் பரிசுத்தராகில் என்னைத் தீண்டாது விடட்டும்’’ என்று சபதம் செய்தார். பாம்பு உள்ள குடத்தில் கையை விட, சத்யத்திற்கு கட்டுப்படக்கூடிய சர்ப்பம் வெகு நேரமாகியும் தீண்டாது இருந்தது. மந்திரிகள் சர்ப்பத்தின் இயல்பையும் வைஷ்ணவர்களிடத்தில் அரசனுக்குள்ள திட நம்பிக்கையையும் கண்டு அஞ்சி நடுங்கினர். மேலும் அமைச்சர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டாலொழிய பிழைக்க முடியாது என்பதையும் உணர்ந்தனர்.


ஒளித்து வைத்திருந்த ஆபரணத்தை மன்னனிடம் சமர்ப்பித்து, அறியாது செய்த பெரும் பிழையை பொறுத்தருளுமாறு ஆழ்வாரைச் சரணடைந்தனர். ஆழ்வாரும், ‘‘நான் பொறுத்தால் போதாது. தவறுக்கு பிராயசித்தமாக இனி அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள்’’ என்று கட்டளையிட்டார். அந்த அமைச்சர்களும் அவ்விதமே பாகவத கைங்கர்யம் செய்து பேறு பெற்றனர். இந்த விஷயத்தை மணக்கால் நம்பிகள் என்கிற ஆசார்யர் அருளிச் செய்துள்ளார்.  


‘‘ஆரங்கெடப்பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே

வாரங்கொடு குடப்பாம்பிற் கையிட்டவன் மாற்றலரை

வீரங்கெடுத்த செங்கோல் கொல்லிகாவலன் வில்லவர்கோன்

சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே!’’


இத்தகைய பொய்மைகளுக்கு இடமாக இருக்கக்கூடிய அரசாட்சியில் தொடர்ந்து இருக்க குலசேகரர் விரும்பவில்லை. தமது குமாரரான த்ருடவிரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார். தான் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட திருவரங்கம் பெரிய கோயிலுக்கு தன் தர்மபத்னியுடன் சென்று பல வருடங்கள் தங்கியிருந்து பெருமாளை சேவித்தார். அவ்வழகிய மணவாளனுக்குத் தன் திருமகளான சேரகுலவல்லியை மணம் செய்வித்தார். இன்றும் குலசேகரன் வீதி என்று வழங்கும் மூன்றாவது பிராகாரத்தை அரங்கனுக்கு அரணாகக் கட்டினார். இன்னும் பல பாகவத கைங்கர்யங்களைத் தொடர்ந்தார்.


ஆண்டாளை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்த பெரியாழ்வாரைப் போல, குலசேகராழ்வாரும் தன் பெண்ணை கொடுத்து, அரங்கனுக்கே மாமனார் ஆனார்! ‘‘ஸ்வசுரம் அமரவர்த்யம் ரங்கராதஸ்ய ஸாட்சார்’’ என்று பெரியாழ்வாரை சொல்வார்கள். அதாவது, ‘‘தேவர்களால் வணங்கப் பெற்ற, சாட்சாத் அரங்கனுடைய மாமனாரான பெரியாழ்வாரை வணங்குகிறேன்’’ என்பது இதன் பொருளாகும். இது குலசேகரருக்கும் பொருந்துமன்றோ!


மற்ற திவ்ய தேசங்களுக்கு யாத்திரை செய்ய எண்ணிய குலசேகரர், திருவேங்கடம், அயோத்தி, தில்லை, திருச்சித்திரக்கூடம், திருக்கண்ணபுரம், திருமாலிருஞ்சோலை, திருவித்துவக்கோடு என்று அங்கெல்லாம் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்களை கண்ணாரக் கண்டு, தொழுது, பிறகு திருக்குருகூர் என்ற திவ்ய தேசத்திற்கு வந்தார். அங்கு சுவாமி நம்மாழ்வாரின் திருவடி தொழுது, அருகிலுள்ள மன்னார் கோயிலை அடைந்து ஸ்ரீராஜகோபாலனுக்கு சிலகாலம் பணிவிடை செய்தார். தமது அறுபத்து ஏழாம் வயதில் பரமபதம் அடைந்தார். இவர் ஆங்காங்கு திவ்ய தேசங்களிலுள்ள எம்பெருமான்களை சேவித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பாசுரங்களாக்கினார். அதைத்தான் பெருமாள் திருமொழி என்பார்கள்.  குலசேகராழ்வார் தம் பெருமாள் திருமொழியின் மூலமாக தமக்குள்ள ஆறு லட்சணங்களையும் விவரிக்கிறார். அவை என்னென்ன?


முதலாவது, ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப - அனுகூலமானவற்றையே சங்கல்பம் செய்து கொண்டு அதன்படி நடத்தல். இரண்டாவது, ப்ராதிகூல்ய வர்ஜனம் - தனக்கும் தன் மனச்சாட்சிக்கும் மற்றும் சாஸ்திரங்கள் எதை வேண்டாம் என்கிறதோ அவற்றை கைவிடுவது; அந்த குணம் உள்ளவரோடு சேராதிருப்பது. மூன்றாவது, பகவான் ஒருவரே ரட்சிக்கத் தகுந்தவர் என்கிற திட விசுவாசம் கொள்ளுதல். நான்காவது, அப்படிப்பட்ட  ரட்சிக்கத்தகுந்த பகவானை நினைத்து உள்ளம் உருகி அவனையே தனக்கு எல்லாமாகவும் நினைத்து வாழ்வது. ஐந்தாவதாக, தன் உயிரை, உடலை, ஆத்மாவை எல்லாவற்றையும் அவனுக்கு சமர்ப்பித்தல். ஆறாவதாக, மேற்கண்ட அனைத்திற்குப் பிறகும் அவனிட்ட வழக்காயிருத்தல். 


முதல் லட்சணத்தை, அரங்கனையே நாடவேண்டும் என்று கூறும்படியாக ‘இருளிரிய’ என்கிற 10 பாட்டுக்களால் வழங்கினார். அதன்பிறகு 2ம் லட்சணத்தை, ‘மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இல்லையந்தன்னொடும் கூடுவதில்லையான்’ என்று தெரிவித்தார். 3ம் லட்சணத்தை, ‘தருதுயரம் தடியேல் உன் சரணல்லால் சரணில்லை’ என்கிற 10 பாசுரங்கள் மூலம் வெளியிட்டருளினார். எம்பெருமானை கண்ணனாக அனுபவித்து அவனையே தனக்கு எல்லாமாக ஆக்கிக் கொண்டதை 4ம் லட்சணமாக வெளியிட்டார். ‘படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே’ என்று அருளிச் செய்ததன் மூலம் 5ம் லட்சணத்தை வெளியிட்டார். இதன்மூலம் தம் எல்லா உடமைகளையும் எம்பெருமானுக்கே ஆக்கினார். தன்னிடம், அவனை அடைய, எந்தக் கைம்முதலும் (முதலீடும்) இல்லாமையை விண்ணப்பித்து 6ம் லட்சணத்தையும் தெளிவாக்கினார்.


விபீஷணனைப்போல பூரண சரணாகதி பண்ணியவர் என்ற பெயர் பெற்றார். ‘பகவான் இட்டது இட்ட வழக்காக இருப்பது’ என்ற கொள்கையில் வாழ்ந்து வந்தார். அதாவது இட்ட வழக்காக இருக்கும் பூனைக் குட்டியை, தாய்ப் பூனை தன் வாயால் லாவகமாக கவ்விக் கொண்டு சென்று பத்திரமான இடத்தில் வைத்துக் காப்பதுபோல பகவான் காப்பாற்றுவார்; பகவானிடம் நம்மைப் பூர்ணமாக சமர்ப்பணம் பண்ணினால், அவன் நம்மை ரட்சித்தே தீருவான் என்ற பூரண சரணாகதி என்ற பாங்கில் வாழ்ந்தவர்தான் குலசேகராழ்வார். இவர் மொத்தம் 105 பாசுரங்கள் அருளினார்.  


நிறைவாக தசரத பாவத்தில் மூழ்கினார். எத்தனை பிறவி எடுத்தாலும் நின்னையே மகனாகப் பெற வேண்டும் என்று ராமனிடம் வேண்டி ராமனோடு தன்னுடைய நித்திய சம்பந்தத்தை நாடினார்.


நன்றி - தினகரன் ஆன்மிகம் நவம்பர் 2012


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக