பாடல்21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளற்பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
பொருள்: இந்த பாடலில் நப்பின்னை பிராட்டி உள்ளிட்ட அனைவரும் கண்ண பரமாத்மாவின் வீரத்தை புகழ்ந்து, அவரை எழுப்பும் வகையில் பாடுகின்றனர். ""கறந்த பால் பொங்கி வழியும்
படியாக, இடைவிடாமல் பால் சொரியும் வள்ளல் குணம் கொண்ட பெரிய பசுக்களை உடைய நந்தகோபனின் மகனான கண்ணனே! எழுவாயாக. அடியார்களைக் காப்பாற்றுவதில் அக்கறை கொண்டவனே! வேதங்களால் புகழப்படும் தன்மை வாய்ந்தவனே! அந்த வேதங்களாலும் அறியமுடியாத பெரியவனே! இந்த உலகமே பிரகாசம் அடையும்படியாக சுடர்போல் திகழ்பவனே! எழுவாயாக! உனக்கு எதிரான பகைவர்கள் தங்கள் வலிமையை இழந்து உன்னிடம் சரணாகதி அடைவதற்காக உன் திருவடிகளில் வந்து விழுவதுபோல நாங்களும் உன்னை புகழ்ந்து பாடியபடி உன் திருவடிகளை அடைவதற்காக வந்திருக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக