ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 29

இரண்டாவது ஸ்கந்தம் - ஐந்தாம் அத்தியாயம் (தொடர்ச்சி) 
உலக சிருஷ்டி

‘மூல ப்ரக்ருதி முதலில் மாறுதல்களுக்கு உட்பட்டு, மஹான் என்னும் தத்வமாகும். அடுத்து மஹான் மாறுதல்களுக்கு உட்பட்டு, அஹங்காரம் என்னும் தத்வமாகும். அஹங்காரம் மூன்றாகப் பிரியும். ஸாத்விக அஹங்காரம், ராஜஸ அஹங்காரம், தாமஸ அஹங்காரம் என்று பிரியும். இதிலே, ஸாத்விக அஹங்காரத்துக்கு ‘வைகாரிகம்’ என்று பெயர். தாமஸ அஹங்காரத்துக்கு ‘பூதாதி’என்று பெயர். இனி மேலே படைப்புத் தொடர்கிறது. ஸாத்விக அஹங்காரத்திலிருந்து, அறிவுப் புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, மனம் ஒன்று - ஆகிய பதினோரு புலன்களும் உண்டாகும். அதாவது ஐந்து கர்மேந்திரியங்களாவன: வாக்கு, பாணி, பாத, பாயு, உபஸ்தங்கள். ஐந்து ஞானேந்திரியங்களாவன: கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை. இறுதியாய் இவற்றை அடக்கி ஆளக் கூடியதானது மனம் என்னும் உட்புலன். ஆக மொத்தம் பதினொன்று. 

‘தாமஸ அகங்காரமாகிற பூதாதியிலிருந்து ஐந்து பூதங்களும் (இயற்கை பொருள்களும்), ஐந்து தன் மாத்திரங்களும் (உணர்வுக் கூறுகளும்) உருவாகும். தன்மாத்திரங்கள் என்றால் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம் (அதாவது, ஒலி, தொடு உணர்ச்சி, ஒளி, சுவை, மணம்) ஆகிய இந்த ஐந்தும்தான் பஞ்ச தன்மாத்திரங்கள். அடுத்து ஐம்பூதங்கள் : ப்ருத்வி (நிலம்), அப்பு (நீர்), தேஜஸ் (தீ), வாயு (காற்று), ஆகாசம் – என இந்த பத்தும் தாமஸ அகங்காரத்திலிருந்து உருவாகும். ஆக மொத்தம் 24 தத்வங்கள் உருவாகும். மறுபடியும் கூறுகிறேன். ப்ரக்ருதி, மஹான், அஹங்காரம், ஐந்து புலன்கள், ஐந்து அறிவுப் புலன்கள், ஐந்து செயற் புலன்கள் (பொறிகள்), மனம் ஒன்று, பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரங்கள் ஆகிய 24 தத்வங்கள் உருவாகும். இதன் பின் பெருமான் பஞ்சீகரணம் என்ற ஒரு செயல் புரிகிறார். 

‘அதாவது இப்போது மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் படைக்கப்பட்டிருந்தாலும், இவற்றை அப்படியே மூலப் பொருட்களாகக் கொண்டு, பிரம்மாண்டத்தைச் சிருஷ்டிக்க முடியாது. இவற்றைக் கலக்க வேண்டும். ஆகையால், பெருமான் இந்த ஒவ்வொன்றையும் இரண்டாகப் பிரிக்கிறார். அதாவது, ஆகாயத்தை இரண்டாகத் துண்டு போடுகிறார். ஒரு பாதியை ஆகாயமாகவே விட்டு விட்டு, மற்றொரு பாதியை நான்கு துண்டுகளாகப் பிரிப்பார். அந்த நான்கையும், மற்ற நான்கு பூதங்களோடே சேர்த்து கலந்து விடுவார். அடுத்து, காற்று. காற்றை இரண்டாகப் பிரிப்பார். ஒரு பாதியை காற்று எனும் தத்துவத்திலேயே விட்டு விட்டு, மறு பாதியை நான்காகப் பிரிப்பார். அந்த நான்கையும் மற்ற நான்கு பூதங்களோடே கலந்து விடுவார். இப்படியாய் ஐம்பூதங்களும், ஒன்றோடொன்று கலக்கப்படுகின்றன. இவை அத்தனையும் முடிந்த பிறகு, இந்தத் தத்துவத்தைக் கொண்டு, பெரும் பிரம்மாண்டத்தை உருவாக்குகிறார். அதாவது ஈரேழு பதினான்கு லோகங்கள் கொண்டது ஒரு பிரம்மாண்டம். அதை உருவாக்குகிறார். 

‘இதுவரைக்கும், பெருமான் செய்வது ஸமஷ்டி சிருஷ்டி. யாருடைய உதவியும் இல்லாமல், பகவான் தானே இவை அனைத்தையும் படைக்கிறார். ஆகவே, இதற்கு அத்வாரக சிருஷ்டி என்ற பெயரும் உண்டு. அத்வாரகம் என்றால், யாரையும் இடை இடாமல், யார் மூலமாகவும் செய்யாமல், தானே நேரே படைத்தல் என்று பொருள். இதற்குப் பின் பெருமானுடைய உடலோடே ஒன்றிக் கிடந்த மற்றொரு கூட்டமான ஜீவாத்மாக்களின் திரளில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் நன்கு பரிசீலனம் பண்ணுகிறான் எம்பெருமான். ப்ரஹ்மாவின், பதவியை வகிப்பதற்கு, தகுதியான புண்ணியம் எந்த ஜீவனிடத்தில் உண்டோ, அந்த சிறந்த ஜீவனைத் தேர்ந்தெடுத்து, ப்ரம்மாண்டத்திற்குள்ளே ப்ரஹ்மனாக சிருஷ்டிக்கிறான். அந்த ப்ரஹ்மாவை தன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து படைக்கிறான் ஸர்வேச்வரனான ஸ்ரீமன் நாராயணன். அவ்வாறு படைக்கப்பட்ட ப்ரஹ்மா அண்டசராசரத்திற்குத் தலைவராகிறார். பின்னால் பகவானின் ஆணைப்படி அவன் தந்த சக்தி கொண்டு அவரே படைப்பைத் தொடங்குகிறார்.

‘இனி அவரிடத்திலிருந்து நான்கு வர்ணத்தவர் (நான்கு வகைத் தொழில் திறனாளர்), நான்கு ஆச்ரமத்தவர்கள் (நான்கு வகை வாழ்வு நிலையினர்), தேவர்கள், அசுரர்கள், ராக்ஷஸர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், நாகர்கள், ஸ்தாவரம், (அசையாதன), ஜங்கமம் (அசைவன), எட்டு திசைகள் ஆகிய அனைத்தும் படைக்கப்படுகின்றன. ப்ரஹ்மா தானாகவே படைத்து விட இயலாது. ஸ்ரீமன் நாராயணன், ப்ரஹ்மனுக்கு அந்தராத்மாவாக இருந்து கொண்டு, அவருக்கு முனைப்பை ஏற்படுத்தி, படைக்கும் சக்தியை ஊட்டி, படைக்க வைக்கிறார். ஆகவே இந்த சிருஷ்டி, வ்யஷ்டி சிருஷ்டி. அதாவது, ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பிரித்து, பல பற்பல கோடி வகைகளாகப் படைக்கப்படுவதால் அப்பெயர். 

‘ஏற்கெனவே பார்த்தது, ஸமஷ்டி சிருஷ்டி. அதாவது, மூலப் ப்ரக்ருதியிலிருந்து தொடங்கி, பஞ்சீகரணம் ஆகும் வரை, ஸமஷ்டி சிருஷ்டி. ப்ரஹ்மா படைக்கப்பட்டதிலிருந்து, நாம் அனைவரும் படைக்கப்பட்டது வரை வ்யஷ்டி சிருஷ்டி. இந்த சிருஷ்டிக்கு, அதாவது நான்முகன் படைக்கும் இதற்கு மற்றொரு பெயர் ஸத்வாரஹ சிருஷ்டி. அதாவது நாராயணனே நான்முகன் வாயிலாக – அவரை இடையிட்டுக் கொண்டு – படைக்கிறான். அதாவது ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாக இருந்து கொண்டு படைக்கிறார்.

‘ஆக, இதுவரை நாம் பார்த்தது, பர ப்ரஹ்மமான ஸ்ரீமன் நாராயணன் படைப்பதற்கான ஸங்கல்பம் எடுத்துக் கொண்டு, தன் திருமேனியோடே ஒன்றிக் கிடந்த மூல ப்ரக்ருதியில் மாறுதலை அடைவித்து, பஞ்ச பூதங்களைப் படைத்து, அவற்றை ஒன்றுடன் ஒன்று கலந்து ப்ரம்மாண்டத்தைப் படைத்து, தன் நாபிக் கமலத்திலிருந்து ப்ரஹ்மனைப் படைத்து (அதாவது ஒரு உயர்ந்த ஜீவனை ப்ரஹ்மாவாகப் பதவி ஏற்றம் செய்து), அவன் மூலமாக மற்ற அனைத்துப் பொருட்களையும் படைக்கிறார். இதுதான் பிரபஞ்சப் படைப்பின் வழி வகை. 

‘ப்ரஹ்மாவால் நாம் அனைவரும் படைக்கப் பட்டிருக்கிறோம். இப்படி நம்மைப் படைத்தது ப்ரஹ்மாவா? அல்லது பரம் பொருளான ஸ்ரீமன் நாராயணனா? என்று கேட்டால், நம் போன்றவர்களைப் படைப்பது ப்ரஹ்மா. ஆனால், அவரும் தானாகப் படைப்பது இல்லை. ஏனெனில் அவரே ஸ்வதந்திரமானவர் இல்லை. பெருமானை, தனக்கு அந்தராத்மாவாகக் கொண்டு, அவர் கொடுத்த சக்தியால்தான் படைக்கிறார். ஆனால், ப்ரஹ்மாவின் பிறப்புக்கு முன்னால் பகவானால் செய்யப்பட்ட பிரம்மாண்டத்தின் படைப்புக்கும், ப்ரஹ்மாவுக்கும் தொடர்பு கிடையாது. ப்ரஹ்மாவும் ஒரு ஜீவாத்மாதான். அனைத்து தேவர்களும் ஜீவர்கள்தான். பகவான் ஒருவன்தான் பரமாத்மா. இவை அனைத்தும் புரியாமல் நாம் அனைவரும் நான்முகனான ப்ரஹ்மனே படைக்கிறான் என்று நினைக்கிறோம்! என்ன விந்தை! 

‘நம்மை மயங்க வைக்கும் இந்த விந்தைக்கும் காரணம், அந்த மாயக் கண்ணன்தானே! இதைத்தான் ப்ரஹ்மா வெகு தெளிவாக நாரதருக்கு எடுத்துரைத்தார். 

வர்ஷ பூத ஸகஸ்ராந்தே, ததண்டமுதகே சயம்|
காலகர்ம ஸ்வபாவஸ்தோ ஜீவோ(அ) 
ஜீவம் அஜீவயத்||
(ஸ்ரீ பாகவதம் 2-5-34) 

‘ஆயிரம் ஆண்டுகள் கழித்து,அண்டசராசரத்திலிருந்து ப்ரஹ்மா வெளியே வந்தார். பிற்பாடு, அவர் நாராயணனைக் குறித்து, தவம் புரிந்து நீண்ட காலம் அவரிடத்திலிருந்து, வேதங்களை எல்லாம் உபதேசங்களாகப் பெற்றார். பிற்பாடு, அவரே பகவான் அருளினால் படைப்பதற்குத் தொடங்கினார். படைப்பைப் பற்றி மற்றொரு அரிதான செய்தி. ப்ரஹ்மமேதான் படைப்புக்கு முன்னும் இருக்கும். ப்ரஹ்மம்தான், படைப்புக் காலம் தொடங்கி, இப்போது சிருஷ்டிக்கப்பட்ட காலத்தில் இருக்கிறோமே, இப்போதும் இருக்கும். இறுதி ப்ரளயத்திற்குப் பின்னும் இருக்கும். அதாவது, அப்பிரளயத்தின்போதும் பரமாத்மாவே இருக்கிறார். சிருஷ்டியின்போதும் பரமாத்மாவே ப்ரஹ்மமே இருந்தார். இதைத்தான் உபநிஷத்துக்கள் – 

‘ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஏகமேவ அத்வதீயம்’ 

(உண்மையின் வடிவான அவன் ஒருவனே படைப்புக்கு முன்னும் இருந்தான். அவன் ஒருவனையன்றி இரண்டாவது ஒன்றுமில்லை) என்கின்றன. இப்போது காரிய ரூபத்தில் ஜகத் உள்ளது. ப்ரளயத்தின்போது காரண உருவத்தில் இருந்தது. மண் காரணம். குடம் காரியம். மண் உருமாறித்தான் குடமாக ஆகும். அதேபோல சித்து, அசித்து அனைத்தும் காரண வடிவில் (அதாவது நுண்ணிய தசையில்) ப்ரளயத்தின்போது ப்ரஹ்மத்தோடே ஒட்டிக் கொண்டிருக்கும். தற்போது காரிய தசையில் ஸ்தூல ரூபமாக விரிவடைந்த நிலையிலும் ப்ரஹ்மத்தோடு தொடர்பு கொண்டிருக்கும். வேறு ஒரு விதத்தில் கூறுகிறேன். காரணமும் ப்ரஹ்மமே; காரியமும் ப்ரஹ்மமே! ‘நுண்ணிய வடிவில் இருக்கும் சித்துக்களோடும், அசித்துக்களோடும் கூடியிருக்கும் ப்ரஹ்மம், காரண ப்ரஹ்மம். விரிவடைந்திருக்கின்ற நிலையில் இருக்கும் சித்துக்களோடும், அசித்துக்களோடும் கூடியிருக்கும் ப்ரஹ்மம், காரிய ப்ரஹ்மம் – அதாவது சூட்சமமான சித்தோடும், அசித்தோடும் விசிஷ்டமாய் கூடியிருக்கும் ப்ரஹ்மமே, காரண ப்ரஹ்மம். ஸ்தூலமான சித்தோடும், அசித்தோடும் கூடியிருக்கும் விசிஷ்டமாய் கூடியிருக்கும் ப்ரஹ்மமே, காரிய ப்ரஹ்மம். இங்கு சூட்சும சித்து, அசித்து என்றால் என்ன? ஸ்தூல சித்து, அசித்து என்றால் என்ன? பொருள் பார்ப்போம்.

‘சூட்சுமம் என்பது நுண்ணிய தசையைக் குறிக்கும். அதாவது பெயர், உருவ வேறுபாடு அற்ற நிலை. 

நாம ரூப விபாக அனர்ஹம் 

– என்று பெரியோர் கூறுவர். ஆக, பிரளயத்தின்போது, பெயர் வேறுபாடோ, உருவ வேறுபாடோ இல்லாத நிலையில் சித்தும், அசித்தும் ப்ரஹ்மத்தோடே எப்போதும் கூடிக் கிடக்கும். சிருஷ்டி தொடங்குகிறது. விரிவடைகின்றது. இனி அனைத்துப் பொருட்களுக்கும் – அதாவது சித்துக்கும் (உயிருள்ள வைக்கும்), அசித்துக்கும் (ஜடப் பொருளுக்கும்) பெயர் வேறுபாடும், உருவ வேறுபாடும் வந்து சேர்கிறது. இதுதான் ஸ்தூல தசை. ஆக, பெயர் உருவ வேறுபாடு இல்லா விட்டால் சூட்சும நிலை. பெயர், உருவ வேறுபாடு இருந்தால் ஸ்தூல நிலை. பெயர் உருவ வேறுபாடு இல்லாமல்தான் சேதன – அசேதனங்கள் ப்ரஹ்மத்தோடே கூடியிருக்கும் நிலை காரண தசை. பெயர், உருவ வேறுபாட்டோடே ஸ்தூல மான நிலையில் சேதன – அசேதனங்கள் ப்ரஹ்மத்தோடே கூடியிருக்கும்போது, அதுவே காரிய தசை. ஆக, ப்ரஹ்மமே காரணமாக ப்ரளய தசையிலும், அதுவே சிருஷ்டி தசையில் காரியமாகவும் இருக்கிறது. இப்போது ப்ரஹ்மமே தன்னை உருமாற்றிக் கொண்டு, ப்ரபஞ்சமாக இருக்கிறது. இங்கு ‘தன்னை’ என்றால் ‘தன் சரீரத்தை’ உருமாற்றிக் கொண்டு சித்திற்கும், அசித்திற்கும் நாம ரூபங்களைக் கொடுத்து இவ்வளவு பெரிய பிரபஞ்சமாகப் படைத்திருக்கிறது.’ 

ஆக, காரணம் ப்ரஹ்மம்தான். காரியமும் ப்ரஹ்மம்தான். ஆனால், காரண ப்ரஹ்மத்தோடும், சித் – அசித்துக்கள் கூடியே இருக்கும். உண்மையாகவே இருக்கும். காரிய ப்ரஹ்மத்தோடும், சித் – அசித்துகள் கூடியே இருக்கும். உண்மையாகவே இருக்கும். இதைத்தான் வேதாந்தம் வெகு நேர்த்தியாக விளக்குகிறது. இதைத்தான் ப்ரஹ்மாவும் நாரதருக்குச் சொல்லிக் கொடுத்தார். மேலும் இதில் சில விஷயங்கள் சொல்ல வேண்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் இதைக் கூர்ந்து நோக்கினால் சிருஷ்டியின் சூட்சமத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இதை முதலில் படியுங்கள். மனதில் தேக்கிக் கொள்ளுங்கள். அட்டவணையிட்டு எழுதிப் பாருங்கள். மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். நன்கு புரியும். மேலும் விளக்கிக் கூறுகிறேன். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக