ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 30


இரண்டாவது ஸ்கந்தம் - ஆறாம் அத்தியாயம் 

‘ஆதிபகவன் முதற்றே உலகு!’

‘உலகுக்குக் காரணமான பரப்ரஹ்மத்தை தியானித்து, முக்தி அடைவீர்” என்று வேதங்கள் ஓதுகின்றன. நாம் கடந்த வாரம் சந்தித்தபோது ப்ரஹ்மமே உலகுக்குக் காரணம் என்று பார்த்தோம். இதை வேதங்கள்தான் நமக்கு உணர்த்துகின்றன. மேலும், வேதக் கருத்துக்களை வெளிப்படுத்தும் வண்ணம் பராசரருடைய திருக்குமாரரான வேத வியாஸர், ‘ப்ரஹ்ம ஸூத்ரம்’ எனும் சிறந்த நூலை நமக்கு அருளியுள்ளார்.

அதில் பல ஸூத்ரங்களாலே “ப்ரஹ்மமே ஜகத்துக்குக் காரணம்” என்று அறுதியிடுகிறார். இந்த வாரம் “ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணம்” என்று சொல்லும்போது, அதில் ஏற்படக்கூடிய சில ஐயங்கள், ஆட்சேபங்கள், அதற்குரிய விடைகள் ஆகியவற்றைப் பார்ப்போம். 

வேதாந்திகள் பேசும்போது ஒரு பொருளை இரண்டு விதத்தில் நிரூபிப்பார்கள். உதாரணத்திற்கு, ‘ராமன் வில்லாளி’ என்று நான் கூறுகிறேன். ‘இதை நான் மறுக்கிறேன், ராமன் வில்லாளி அல்ல’ என்று ஒருவர் ஆட்சேபிக்கிறார். பதிலுக்கு பல வாதங்களாலே அப்படியன்று, ‘ராமன் வில்லாளியே’ என்று நான் நிரூபிக்கிறேன். இதற்கு, 

‘அயோக வ்யவச்சேதம்’ 

(தமிழ் இலக்கணத்தின்படி – தேற்றேகாரம்) என்று பெயர். அதாவது ‘ராமனிடம் வில்லாளும் தன்மை உளதா’, என்கிற ஐயம் எழ, ‘உளது, ராமன் வில்லாளியே’ என்று நிரூபிக்கப்பட்டது. அடுத்த வகை ‘ராமன் வில்லாளியாக இருக்கலாம். ஆனால், அவனைத் தவிர, அர்ஜுனனும் தான் வில்லாளி. கர்ணனும் கூட வில்லாளிதான். இன்னும் இவர்களைப் போல் பலர் சிறந்த வில்லாளிகளாக இருந்தார்களே’ என்று மறுபடியும் அவர் கூறுகிறார். இந்தச் சந்தேகத்தைப் போக்குவற்காக, ‘இல்லை... இல்லை நீங்கள் கூறுவது தவறு. ராமனே வில்லாளி, ராமன் ஒருவனே வில்லாளி’ என்று பல வாதங்களாலே நிரூபிப்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கு அந்யயோக வ்யவச்சேதம் (தமிழ் இலக்கணப்படி பிரிநிலை ஏகாரம்) என்று பெயர். இப்போது தெளிவாகப் புரிந்திருக்குமே. ‘ராமன் வில்லாளியே’ என்று கூறுவது ஒரு வகை. ராமனே (ராமன் மட்டுமே) வில்லாளி என்று நிரூபிப்பது மற்றொரு வகை. இப்போது விஷயத்திற்கு வருவோம். 

ப்ரஹ்மம், அதாவது பரம்பொருள் ஜகத்துக்குக் காரணம் என்று கூறினோம். அதில் ஓர் ஐயம் எழும். ‘ப்ரஹ்மத்திடம் ஜகத்துக்குக் காரணமான தன்மை உண்டா? ப்ரஹ்மம் ஜகத் காரணம்தானா? இல்லையே. ப்ரஹ்மம் ஜகத் காரணம் இல்லை போல் இருக்கிறதே!’ என்றஐயத்துடன் கூடிய ஆட்சேபம் எழுந்தால் அதற்கு பதில் கூற, ‘அப்படிக் கூறாதீர்கள், ப்ரஹ்மம் ஜகத் காரணமே, ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணமாகவே உள்ளது’ என்று நிரூபிக்கிறோம். அடுத்த கேள்வி பிறக்கும். ‘ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணமாக இருக்கட்டும். மேலும், அணுக்களும் கூட காரணமாகலாமே! ப்ரக்ருதியும் காரணமாகலாமே! ஏன், ஜீவாத்மாவும் கூடக் காரணமாகலாமே! யார் வேண்டுமானாலும் கூடச் சேர்ந்து காரணமாக இருக்கலாமன்றோ!’ என்ற ஐயம் எழும். அதற்கு, ‘இல்லை, இல்லை... ப்ரஹ்மம் மட்டுமே ஜகத்துக்குக் காரணம்’ என்று பதில் கூற வேண்டும்.

ஆக, இந்த இரண்டு வாதங்களாலும் என்ன தேறுகிறது? ‘ப்ரஹ்மம் ஜகத் காரணம்தான்’ என்றும், இன்னும் குறிப்பாக ‘ப்ரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம்’ என்றும் தேறுகிறது. இவை இரண்டையும்தான் ப்ரஹ்ம ஸூத்திரத்தில் வேத வியாஸர் அறுதியிட்டுக் காட்டுகிறார். இவ்விரண்டு கருத்துகளும் நமக்குப் புரிந்து போகுமானால், ப்ரஹ்மத்தைத் தவிர வேறு யாரையாவது அடைய விரும்புவோமா? ப்ரஹ்மத்தைத் தவிர மற்றொன்றை, அவனை அடையவதற்கு வழியாகப் பற்றுவோமா? இந்த உண்மை புரிந்ததால்தான் ரிஷிகளும், ஆழ்வார்களும், ஆசார்யர்களும், முழு முதற்காரணமான ப்ரஹ்மத்தின் திருவடிகளையே பற்றிக் கிடந்தார்கள். அனைத்துமே அவனாக இருக்கும்போது அவனையன்றி எதை நாம் தியானிக்க முடியும்? பொதுவாக நமக்கு எழும் மேலும் சில ஐயங்களையும் பார்ப்போம். 

‘உலகத்தில் அறிவியல் பரவிக் கிடக்கிறது. அறிவியலாளர்கள், தர்க்க ரீதியாகக் கண்ணுக்குப் புலப்படும் வகையில் அனைத்தையும் நிரூபித்து வருகிறார்கள். ஆனால், மெய்ஞானிகள் எதையும் நிரூபிப்பதில்லையே! அறிவியல் விஞ்ஞானிகளோ அனைத்தையும் சோதனைச்சாலையில் நிரூபித்து விடுகிறார்களே!’ என்று ஒரு சிலர் நினைக்கலாம். இதற்கும் மேல், ‘மெய்ஞானிகளோ, புஸ்தகத்தோடே நின்று விடுகிறார்கள். உலகில் ஒன்றை நிலை நிறுத்த கதை, உபன்யாசம், காலட்சேபம் ஆகிய இவை மட்டுமே போதுமா? மேற்கொண்டு சோதனைச் சாலையில் நிரூபிக்க வேண்டாமா?’ என்று கூடக் கேட்கலாம். சரிதான். ஆனால், ஆழ்ந்து சிந்தித்து உள்ளதை உள்ளபடி அறியும் விஞ்ஞானிகள் இப்படிக் கேட்பதில்லை. எந்த ஒரு விஷயத்தையும் மேலெழுந்த வாரியாக மட்டுமே பார்க்கும் யாரோ சிலர் கேட்கிறார்கள். இது பற்றி சற்றே ஆராய்ந்து விடை காண்போம். 

மனிதன் எப்படித் தோன்றினான்? உலகம் எப்படி உருவாயிற்று? என்பது பற்றிப் பல கருத்துகள் நிலவுகின்றன. குரங்கிலிருந்து தோன்றினான் மனிதன் என்ற ஒரு கருத்து உலவி வருகிறது. ப்ரபஞ்சத்தின் தோற்றத்திற்கு ‘பெரு வெடிப்புக் கோட்பாடு’ (Big Bang Theory) என்ற கொள்கை முன் வைக்கப்படுகிறது. சமீபத்தில் கூட அதைப் பற்றி நிறைய அறிவியல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, நிரம்பக் குளிர்ச்சியுடன் கூடிய அணு திரள் உயர்ந்த அழுத்தத்தில் இருந்தது; ஒருநாள் அது பெரிதாக வெடித்தது; வெடித்தவுடன், பல பல நுண் சிதறல்கள் வெளிப்பட்டன. அந்தத் துகள்களிலிருந்து அணுக்கள் வெளிப்பட்டன. அந்த அணுக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளாக (molecules ஆக) உருவாகி, அவை ஒன்றோடு ஒன்று கூடி நாம் கண்ணால் பார்க்கும் இவை அத்தனையும் உருவாகியுள்ளன – என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இப்படி பல நம்பிக்கைகள், பல கருத்துகள் உள்ளன. 

ஹிக்ஸ் போஸான் துகள் (Higgs - Boson Particle) என்பதைப் பற்றி சமீபத்தில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஹிக்ஸ் என்ற ஒரு வெளிநாட்டு விஞ்ஞானி, போஸ் என்ற மற்றொரு இந்திய விஞ்ஞானியின் ஆய்வு முடிவுகளின் மீது மேலும் விளக்கம் தந்து, ‘இவ்வுலகம் படைக்கப்பட்டபோது நிகழ்ந்த பெரு வெடிப்பில் (Big bang) என்னென்ன துகள்கள் புறப்பட்டன? அதில் அனைத்துத் துகள்களையும் கண்டுபிடித்து விட முடியுமா? அவற்றைப் பற்றி விளக்க முடியுமா?’ என்ற கேள்விகளுக்கு விடையாக பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டார். உடனே, உலகத்து விஞ்ஞானிகளில் பலர் சேர்ந்து, கொள்கை அளவில் நிரூபிக்கப்பட்ட அந்தத் துகள் எது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். சமீபத்தில் அந்தக் கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்கள். இது அத்தனையும் ‘ப்ரத்யக்ஷம்’ எனப்படும் நேரடிப் புலன் அறிவுக்கு இலக்காகும் வண்ணம் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இங்கு ஒரு முக்கியமான செய்தி: வேதங்களின் வழிவந்த ஆன்மிகம், ஒருநாளும் ப்ரத்யக்ஷமாக நாம் காண்பதையோ, நிரூபிப்பதையோ, தவறு என்று கொள்ளாது. விஞ்ஞானத்தை ஏற்றுக் கொள்ளும். நம் கண்ணால் பார்ப்பதை – நேரடி அனுபவ அறிவை – ஏற்றுக் கொள்பவைதான் சாத்திரங்கள். நாம் ஒரு தவறான கருத்தைக் கொண்டிருக்கிறோம். ‘சாத்திரங்கள், விஞ்ஞானத்தை ஒத்துக் கொள்ளாது; உலகம் விஞ்ஞானத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும்; அதற்கு நேர்மாறாக எதுவும் புரிபடாத வகையில், வேதாந்தம் சிலவற்றைச் சொல்லும். வேதாந்திகளுக்கும், விஞ்ஞானத்திற்கும் தொடர்பில்லை. விஞ்ஞானம் வேறு, மெய்ஞானம் வேறு’ என்றெல்லாம் பலர் கருத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து விஞ்ஞானிகளுக்கே கிடையாது. அறிவு முதிர்ந்த விஞ்ஞானிகள் ஆழமான உண்மையின் வேர் வரை சென்று, மெய்ஞானத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். 

ஹிக்ஸ் – போஸான் நுண்துகளைப் பற்றிய செய்தியைப் பார்க்கும்போது, ‘கடவுள் துகள்’ என்ற சொல்லைப் பார்த்தோம். இதை ஏன் கடவுள் துகள் என்கிறார்கள். கடவுள்தான் இந்தத் துகளா? அல்லது இந்தத் துகளே கடவுளா? ஆகக் கடவுளைக் கண்டுபிடித்து விட்டோமா? அல்லது ‘துகள்தான் உண்மை. கடவுள் கிடையாது’ என்று நிரூபணம் ஆகிவிட்டதா? – என்று பலர் உள்ளங்களில் சந்தேகம் இருக்கலாம். இதை எதையும் இப்போது விஞ்ஞானிகள் பேசவில்லை. அவர்கள் பேசுவது – ‘அணுவினுள் உள்ள பல துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இதுவரை கண்டுபிடிக்கப்படாதிருந்த ஒரு துகளையும் இப்போது கண்டுபிடித்து விட்டோம்’ என்று கூறுகிறார்கள். இதுநாள் வரை பிடிபடாத ஒரு பெரும் புதிராக இருந்த அதற்கு ‘கடவுள் துகள்’ என்ற மரியாதைப் பெயரிட்டிருந்தார்கள். சரி. அந்தத் துகள்தான் உலகுக்கெல்லாம் காரணமா? அந்தத் துகளிலிருந்துதான் உலகம் தோன்றிற்றா? என்றால், அப்படிக் கூறுவதில் தவறில்லை. எனினும் விஞ்ஞானிகள் மறுக்காத சில உண்மைகளும் உள்ளன. அதைத்தான் தற்போது கூற விழைகிறேன். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக