திங்கள், 18 மார்ச், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 36


இரண்டாவது ஸ்கந்தம் - எட்டாம் அத்தியாயம் 

பரமனடி பற்றுவிக்கும் பதினெட்டுக் கேள்விகள்!

ப்ரஹ்மாவும், நாரதரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் படைப்பைப் பற்றி நாரதர் கேட்க, ப்ரஹ்மா அதனை விளக்கமாகக் கூறினார். படைக்கப்பட்ட உலகத்தைக் காப்பதற்காக, திருமால் பல அவதாரங்களை எடுக்கிறார். அவற்றையும் வரிசைப்படுத்தி, அந்தந்த அவதாரத்தின் பயனோடே கூட நான்முகன் விளக்கினார். இனி அடுத்தாற்போல, பரீக்ஷித் சுகாசாரியாரிடத்தில், பல கேள்விகளை அடுக்குகிறார். கேள்விகள் அத்தனையும் எட்டாம் அத்தியாயத்தில் உள்ளது. அடுத்த அத்தியாயம் தொடங்கி, சுகாசாரியர் அவற்றுக்கு உரிய பதில்களைக் கூற முற்படுகிறார். பதில்கள் பலப்பல அத்தியாயங்கள் – ஸ்கந்தங்களில் விரிந்துள்ளன. முதலில் கேள்விகளைப் பார்ப்போம். 

“சுகாசாரியரே! நாரதருக்கு ப்ரஹ்மா உபதேசித்ததை விளக்கமாகக் கூறினீர். இந்த ஞானக்கதிர்கள் என் செவியின் வழியே புகுந்து, அமுதமாக உள்ளத்தை நிறைத்துள்ளன. பகவானுடைய கதையைப் பெறுவதற்கு, வாயைக் காட்டிலும் செவிப் புலன்தானே நேரடியாகப் பயன்படுகிறது” என்றான் பரீக்ஷித். நம்மாழ்வார் ஒரு பாடலில், ‘புவியும் இரு விசும்பும் நின்னகத்த, நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் அவிவின்றி...’ (பெரிய திருவந்தாதி – 75) என்று கூறுகிறார். 

‘உலகம் அத்தனையும், பகவானே! உன்னால் தாங்கப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தோடும் கூட, நீ என் காதுகளின் வழியே உள்ளே புகுந்து, உள்ளத்தில் உறைகிறாய். இப்போது கூறும்! உலகத்தைத் தாங்கும் நீர் பெரியவரா? அல்லது உன்னையும் சேர்த்துத் தாங்கும் அடியேன் பெரியவனா? பக்தன்தானே அனைவரிலும் பெரியவன். பக்தனுடைய காதுகளின் வழியாகத்தானே, நீ உள்ளே புகுகிறாய்’ என்கிறார். இச்செய்திகளால், ச்ரவணம் – அதாவது பெருமானைப் பற்றி தினசரி விடாமல் கேட்டல் – எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து கொள்கிறோம். எப்போதும் பெருமானுடைய கதைகளைக் கேட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு, ஒரு நாள் கேட்காவிட்டால் கூட, உள்ளமும் உடலும் பதறும். தாழ்ந்த உதாரணமாக இருந்தாலும் கூறுகிறேன். 

சில பொருட்களுக்கு அடிமைப்பட்டு விட்ட நாவினர், அதைச் சாப்பிடாவிட்டால் தவிப்பார்கள் அல்லவா? இறைவனைப் பற்றி தினமும் கேட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு, அப்படி ஒருநாள் கேட்கா விட்டால் தவிப்பு ஏற்படும். உலகப் பற்றினால் வரும் அந்தத் தவிப்பு தாழ்ந்தது; இறைப் பற்றினால் வரும் இந்தத் தவிப்பு உயர்ந்தது. அந்தத் தவிப்பால் மறுபடியும், மறுபடியும் துன்பத்துக்கு ஆளாவோம். இந்தத் தவிப்பால் பேரின்பத்தைப் பெறுவோம். ஆனந்த வெள்ளத்தில் மூழ்குவோம். ஆகவே, பகவான் நம் செவிகளின் வழியே புகுந்து நமக்குள் உறைகிறான். அவனைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட பரீக்ஷித் பின்வரும் கேள்விகளுக்கெல்லாம் பதில் கூற வேண்டும் – என்று ஸ்ரீசுகரை வேண்டினான். கேள்விகளை வரிசையாகப் பார்ப்போம். 

கேள்வி ஒன்று – பகவானுக்குத் திருமேனி உண்டா? பஞ்சபூதங்களோடு ஆன உடலோடுதான் பெருமான் அவதரிக்கிறானா? அப்படியெனில் அவனுக்கும் கர்ம சம்பந்தம் உண்டா? அவனுக்கும் முக்குணங்களின் பாதிப்பு உண்டா? 

கேள்வி இரண்டு – பகவான் ப்ரஹ்மாவைப் படைத்தார் என்று கூறினீர்! அவனுடைய நாபிக் கமலம் எனப்படும் தொப்புளில் இருக்கும் தாமரையிலிருந்து, ப்ரஹ்மா தோன்றினாரே? பிற்பாடு அவர் என்ன செய்தார்? எப்படி உலகத்தைப் படைத்தார்?

கேள்வி மூன்று – ப்ரஹ்மா தன்னிச்சையாகப் படைத்தாரா? அல்லது அவருக்குள் இருந்து கொண்டு, ப்ரஹ்மம் – அதாவது திருமால் படைத்தாரா? யாருடைய அருள் கொண்டு ப்ரஹ்மா படைக்கிறார்? அவருக்கு முதன் முதலில் இப்படித்தான் படைக்க வேண்டும் என்று யார் சொல்லிக் கொடுத்தார்? 

கேள்வி நான்கு – பகவான், ப்ரஹ்மாவைப் படைத்து அவரை மேற்கொண்டு படைப்பதற்காக அருள் பாலித்து ஆணையிட்டு விட்டு, பிறகு எங்கு சென்று சயனிக்கிறார்? அவர் வைகுண்டத்தில் உள்ளாரா? திருப்பாற்கடலில் இருக்கிறாரா? அல்லது படைக்கப்பட்ட உலகத்துக்குள்ளேயே எங்கும் நிறைந்திருக்கிறாரா? 

கேள்வி ஐந்து – ப்ரஹ்மா படைக்கத் தொடங்கியவுடன் பல தேவர்களையும் படைத்தாரா? லோக பாலகர்கள் என்பவர்கள் யார்? இவ்வுலகத்தை யார் காக்கிறார்? தேவர்கள்தான் நமக்குக் காற்றையும், மழையையும், வெப்பத்தையும், குளிர்ச்சியையும் கொடுக்கிறார்களா? அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? 

கேள்வி ஆறு – உலகில் காலம் என்னும் தத்துவத்தை விளக்கிக் கூற வேண்டும். வினாடி, நிமிடம், மணி, நேரம், நாள், வாரம், மாதம், பக்ஷம், அயனம் – என்று பலப்பல காலப் பிரிவுகளைக் கூறுகிறோம். இவையெல்லாம் யாது? ஒவ்வொருவருக்கும் பொதுவாக நூறாண்டுகள் ஆயுள் என்பது முழுமையான வாழ்வு என்று கூறினீர்களே! அதன் பொருள் என்ன? இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என்பவையெல்லாம் உண்மையா? அல்லது பிரமையா? அல்லது ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா? நம்மை மயக்கி ஆட்டுவிக்கும் இந்த கால தத்துவத்தைப் பற்றி விளக்கமாகக் கூற வேண்டும். 

கேள்வி ஏழு – கர்ம பலன் – அதாவது வினைப் பயன் என்பது யாது? அது உண்டா, கிடையாதா? ஒவ்வொரு ஜீவனும் தன்னுடைய பழைய வினைப் பயனால்தான் பிறக்கிறானா? இப்போதும் வினைப் பயனைச் சேர்க்கிறானா? கர்மம் என்பது அதற்குரிய பலனைத் தந்தே தீரும் – என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா? கர்மத்தை ஒழிப்பது எப்படி? அதன் பயனைத் தடுப்பது எப்படி? கர்மம் செய்பவன் எந்த உலகத்துக்குப் போகிறான்? எல்லாக் கர்மங்களைச் செய்தவர்களும் ஒரே உலகத்தை அடைகிறார்களா? அல்லது நரகத்துக்குப் போகிறவன், சொர்க்கத்தை அடைபவன், திரும்ப வராத வைகுண்ட ப்ராப்தி கிட்டுபவன், இவ்வுலகத்திலேயே மாறி மாறிப் பிறப்பவன் என்றெல்லாம் வெவ்வேறு வகையினர் உண்டா? 

கேள்வி எட்டு – முக்குணம் என்பதன் தன்மை என்ன? ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிறோமே, அவை எப்படி மனிதனைப் பாதிக்கின்றன? இவற்றை நாம் எப்படிக் கையாள வேண்டும்? முக்குணத்தில் வேண்டாத இரண்டைத் தொலைப்பது எப்படி? வேண்டிய ஒன்றை வளர்த்துக் கொள்வது எப்படி? நம்மிடம் செயல் புரியும் இந்தக் குணங்களை அடையாளம் கண்டு கொள்வது எப்படி? 

கேள்வி ஒன்பது – ஈரேழு பதினான்கு லோகங்களாக, இந்த அண்டம் படைக்கப்பட்டுள்ளதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதே! இவை அத்தனைக்கும் விளக்கம் யாது? எவ்வளவு தூரத்தில் ஒவ்வொன்றும் உள்ளன? பூகோளம் என்பது என்ன? எத்தனை அண்ட கடாகங்கள் உள்ளன?

(அறிவியலில் கூறப்படுகிற அண்டங்கள், பூகோளம் வேறு மாதிரி இருக்கிறதே? ஆனால், ஆன்மீகத்தில் கூறப்படும், அதாவது – இதிகாச புராணங்களில் கூறப்படும் பூகோளம் வேறு மாதிரி இருக்கிறதே? இது எப்படி? – என்றெல்லாம் இன்று நாம் எழுப்புகிற கேள்விகளைப் போலவே கேட்கிறான் பரீக்ஷித்.) 

கேள்வி பத்து – மனிதர்களில் வர்ணங்களை பெருமான், குணங்களின் அடிப்படையில் எதற்கு பிரித்தார்? அந்தணர்கள் என்றும், அரசர்கள் என்றும், வணிகர் என்றும், உழைப்பாளர் என்றும் எதற்காக இந்தப் பிரிவினையை ஏற்படுத்தினார்? இதனால், இன்றைய உலகத்தில்தான் எத்தனை குழப்பங்கள்? குண – கர்மங்களை ஒட்டிச் செய்த இந்த பகவத் சிருஷ்டிக்கு ஏதோ பயன் இருக்க வேண்டுமே? இதன் உட்கருத்து யாது? 

கேள்வி பதினொன்று – நான்கு யுகங்கள் என்று கூறினீர். அகண்டமான காலத்தைப் பகுத்துப் பார்க்கும் போது, க்ருதயுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்று சொல்லப்படும் யுகங்களின் வேறுபாடுகள் யாவை? அந்தந்த யுகத்தில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? நல்ல யுகம், தீய யுகம் என்று உண்டா? நாம் இந்த யுகத்தில் இருப்பதே ஒரு சாபம்தானா? அந்தந்த யுகத்துக்குரிய தர்மங்கள் எவை? இன்ன யுகத்தில் இருப்பவன்தான் முக்தி அடைய முடியும்? மற்ற யுகத்தில் வாழ்பவர்களால் இயலாது என்று ஏதேனும் உண்டா? 

கேள்வி பன்னிரெண்டு – உலகத்தில் நாம் தர்மத்தைச் செய்ய வேண்டும் என்பது நியதி. அவை சாதாரண தர்மங்கள் – அதாவது பொதுவான அடிப்படை தர்மங்கள். திருடாதே, பொய் சொல்லாதே, பிறர் பொருளுக்கு விருப்பப்படாதே, பிறன் மனை விழையாதே, ஏமாற்றாதே, பேராசை கொள்ளாதே, வஞ்சம் தீர்க்காதே, மற்றொருத்தரைப் பற்றிப் புறம் கூறாதே – போன்ற இவையெல்லாம் பொதுவான அறங்கள். இது தவிர, அரசர்களுக்குண்டான அறம், பெண்களுக்குண்டான அறம், ஆபத்துக் காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அறம், விசேஷமாகப் பெருமானுக்குத் தொண்டு புரிதலாகிற அறம் – இவை அனைத்தையும் விளக்கமாகக் கூற வேண்டும். 

பதிமூன்றாவது கேள்வி – பகவான் நம்மைப் படைத்திருக்கிறார். நமக்குக் கை கால்கள் முதலிய அங்கங்கள் உள்ளன. நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இவற்றை எதற்காக அவனுக்குத் தொண்டு புரியப் பயன்படுத்த வேண்டும்? ஏன் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்? நான் என் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டால் போதாதா? அப்படித்தானே உலகில் அனேகமாக மக்கள் வாழ்கிறார்கள்? ஒரு சிலர் மட்டும்தானே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஓடோடி உழைத்து, பல சமயங்களில் கெட்ட பெயரும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். பகவானுக்கு நான் ஏன் ஆராதனம் செய்ய வேண்டும்? மக்களுக்கு ஏன் தொண்டு புரிய வேண்டும்? அப்படிச் செய்ய வேண்டுமானால், ஆராதனம் செய்ய வேண்டிய முறை யாது? யோகம் செய்ய வேண்டிய முறை, அதாவது பெருமானைக் குறித்து தியானிக்க வேண்டிய முறை எது? அதையும் சொல்லவும். 

பதினான்காவது கேள்வி – வேதங்கள் நான்கு, இதிகாசங்கள் இரண்டு, புராணங்கள் பதினெட்டு. இது தவிர ஆயுர்வேத சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், தனுர் வேதம் முதலான எத்தனை பிரமாணங்கள் உள்ளன? இந்தப் பழமை வாய்ந்த நூல்களைப் பற்றியும், அவற்றிற்குரிய தன்மைகளைப் பற்றியும் விளக்கமாகக் கூற வேண்டும். 

பதினைந்தாவது கேள்வி – உலகை பகவான் படைக்கிறாரே, பிற்பாடு அழிப்பது எதற்காக? உலக அழிவு எப்போது நடைபெறுகிறது? இதனால் நாம் அத்தனை பேரும் அழிந்து விடுவோமா? திடீரென்று உலகம் அழிந்து விடும் என்று அவ்வப்போது ஒரு பயம் கிளம்புகிறதே? ஒவ்வொரு முறையும் கலியுகம் முடிந்தவுடன் பிரளயம் வந்து, அனைத்தும் அழிந்து போகுமா? இந்த அழிவு – மீண்டும் படைப்பு ஆகியவற்றின் தத்துவம் என்ன என்றும் விளக்க வேண்டும்?

பதினாறாவது கேள்வி – தர்மங்களைச் செய்தல், குளம் வெட்டுதல், கோவில் கட்டுதல் முதலானவைகளும், மேலும், தனக்குப் பிள்ளை வேண்டி யாகம் செய்தல், நோய் நொடிகள் தொலைவதற்காக யக்ஞம் செய்தல், நீண்ட ஆயுளுக்காக ஹோமம் செய்தல் – இவையெல்லாம் உண்மையிலேயே பலன் தருபவைதானா? இவற்றையெல்லாம் செய்யத்தான் வேண்டுமா? மேலும் தர்மம், அர்த்தம், காமம், இவற்றைப் பற்றிய அடிப்படை விளக்கத்தையும் கேட்க விரும்புகிறேன். 

பதினேழாவது கேள்வி – சுகாசாரியரே! நெடுநாளாக அடியேனுக்கு ஓர் வியப்பு! இவ்வுலகுகளும், உயிர்களும் பெருமானுடைய சொத்து என்று கூறினீர். பின் எதற்காக அவனை விரோதிப்பவர்கள் பிறக்கிறார்கள்? ஏன் உலகத்தில் நாஸ்திக வாதம் உள்ளது? எல்லோரும் ஆஸ்திகர்களாக இருக்க வேண்டியதுதானே? தன்னை மறுப்பவர்களையும் அந்தப் பெருமான்தானே படைத்தார்? பின் ஏன் சிருஷ்டி இப்படி அமைந்திருக்கிறது? 

கடைசியாக பதினெட்டாவது கேள்வி – ஆத்மா எதற்காகப் பிறவி எடுக்கிறது? பந்தம் என்றால் என்ன...? முக்தி என்றால் என்ன...? இந்த பந்தத்திலிருந்து விடுதலையை இவனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமா? அல்லது படைத்தவன்தான் ஏற்படுத்திக் கொடுப்பானா? இவை அனைத்துக்கும் பதில் கூறும். 

இதற்கெல்லாம் பதில் தங்களிடத்தில் இருக்கும் என்று தெரிந்தாலும், தனிப்பட்ட முறையில் விடை தெரியாத, மனதை உறுத்தும் மேலும் ஒரு கேள்வி என்னிடத்தில் உள்ளது. அதற்கும் பதில் கூறும். மேற்சொன்ன அனைத்தும் இறைவனுடைய விளையாட்டுத்தானே? அவன் விளையாட்டுக்கு நானா கிடைத்தேன்? அவன் எதையோ வைத்து விளையாடிக் கொள்ள வேண்டியதுதானே? இவ்வுலகத்தைப் படைத்து, என்னையும் படைத்து, துன்பக் கடலில் ஆழ்த்தி எதற்குப் பெருமான் விளையாடுகிறான்? அவன் அன்புடையவனாக இருந்தால், எப்போதோ என்னை அழைத்துப் போயிருக்க வேண்டுமே! அன்பிலாதபடியால்தானே படைத்துப் படைத்து என்னைப் பாழாக்கி விளையாடுகிறான்? இவர் விளையாடுவதற்கு என் துன்பம்தானா கிடைத்தது? கருணையே உருவான கடவுள் இப்படி விளையாடுவாரா? இதற்கு முக்கியமாக பதில் கூற வேண்டும். இந்தப் பதில்கள் அனைத்தும் தெரிந்தால்தான், நான் நிம்மதி அடைவேன். உம்மிடத்தில் மேலும் மேலும் கேட்டுக் கொண்டிருக்கும் எனக்கு அமுதத்தை அருந்தினாற் போல, பசி, தாகம் முதலிய துன்பங்கள் ஏற்படவில்லை. ஆகவே, நீர் நன்கு விளக்கமாகக் கூற வேண்டும்!’ என்று வினவினான் பரீக்ஷித் மஹாராஜன்.

சூத பௌராணிகர் கூறுகிறார்: இப்படிக் கேட்கப்பட்ட சுகர், மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலோடு கேட்பவன் இருந்தால், ஆச்சாரியனுக்குத்தான் எவ்வளவு இன்பம்! “இதோ கூறுகிறேன். முன்னோர் மொழிந்ததைக் கேட்டிருக்கிறேன். நானும் கடைப்பிடித்திருக்கிறேன். நீயும் கேட்டு கடைப்பிடிக்கும்படியும், துக்கமில்லாமல், எவ்விதப் பதட்டமும் இல்லாமல் நீர் முக்தி மார்க்கத்தில் செல்வதற்காகவும் அனைத்தையும் கூறுகிறேன். கேளும்!” என்று கூறி, அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லப் போகிறார். நாமும் செவிமடுத்துக் கேட்போம். 

இங்கே அடியார்களிடத்தில் ஒரு விண்ணப்பம். இந்த ஒவ்வொரு கேள்விக்கும் வரிசைப்படியாக அடுத்தடுத்து பதில் இருக்காது. ஒரு கேள்விக்கு மூன்று அத்தியாயங்களில் பதில் இருக்கலாம். மற்றொரு கேள்விக்கு எங்கோ நான்கே ச்லோகங்களில் பதில் இருக்கலாம். மொத்தம் பதினெட்டு கேள்விகள். அது தவிர, மன்னனின் மனதைக் குடையும் கடைசிக் கேள்வி! இவை அத்தனையும் பார்த்து முடிக்க, பாகவதமே முடிந்து கூடப் போகலாம். ஆனால், நாம் அனைவரும் சிரத்தையோடு இந்தந்தக் கேள்விக்கு ஸ்ரீபாகவதத்தில் இந்தந்த பதில் உரியவை என்பதைப் புரிந்து கொண்டு சேர்த்துப் பார்க்க வேண்டும். அதற்கு வழி செய்வதற்காக ஒன்று செய்வோம். அந்தந்த கேள்விக்குரிய பதிலை பாகவதத்தின் அடிப்படையில் சுருக்கமாக கூறி விடுகிறேன். அதற்குப் பிற்பாடு அதனுடைய விரிவாக்கம் எப்படி உள்ளது? எந்தெந்த அத்தியாயத்தில் உள்ளது? என்பதையும் அவ்வப்போது பார்த்துக் கொள்வோம். இப்போதைக்கு கேள்விகளை மறுபடியும், மறுபடியும் யோசியுங்கள். பாதகங்கள் தீர்த்தும் பரமனடி காட்டும் விடைகளை நாடுவோம் – கண்ணன் அருளோடு! வினைத் தடைகளைக் கடப்போம், அவன் தரும் துணிவோடு! 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

சனி, 9 மார்ச், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 35


இரண்டாவது ஸ்கந்தம் - ஏழாம் அத்தியாயம் (தொடர்ச்சி)

பகவானது அவதாரங்கள்

அடுத்து ஒவ்வொரு மனுவாக, 14 மனுக்களாகப் பிறக்கிறான் எம்பெருமான். ஒவ்வொரு மனுவுக்கும் 71 சதுர் யுகங்கள். இது மன்வந்த்ரம் எனப்படும் காலக் கணக்கு. மனு வம்சத்து முதல் அரசனாகப் பிறந்து, பகவான் நாட்டு மக்களை சிறப்புறக் காக்கிறான். ஆக, ஒவ்வொரு அரசனும் பகவான் தன் ஆட்சியில் என்ன செய்தார் என்பதை அறிந்து கொண்டு, ஒரு சிறந்த அரசனாக நல்ல ஆட்சி கொடுக்க வேண்டும் என்பதை பகவானே உணர்த்தினார். 

அடுத்து, உலகத்தாருக்கு ஆரோக்கியம் வேண்டுமே? எப்போதும் முக்தியைப் பற்றி பேசினால் போதுமா? இங்கிருக்கும் காலத்தில் பக்தி செய்யவோ, பெருமானுக்குத் தொண்டு புரியவோ தேஹ ஆரோக்கியம் தேவை அல்லவா! இதை கொடுப்பதற்காகத்தான் பெருமான் தன்வந்திரியாக அவதரித்து, ஆயுர்வேத சாஸ்திரத்தை உலகில் பிரசாரம் செய்தார். ஆயுள் நீண்டிருக்க, ஆரோக்கியத்துடன் கூடிய ஆயுளைப் பெற தன்வந்திரிப் பெருமான் நமக்கு அருள்கிறார். இம்மையில் ஆரோக்கியம், மறுமையில் ஆனந்தம். இவ்விரண்டையும் பெருமான் அருளினார். 

அடுத்து, கோபக் கனலாக விளங்கும், பரசுராமர். பூமிக்குத் துன்பம் கொடுத்தவர்கள், நல்ல மார்க்கத்திலிருந்து விலகியவர்கள், இப்படிப்பட்ட அரசர்களைத் தன்னுடைய ‘பரசு’ என்னும் கோடரி ஆயுதத்தால் அழித்தார் பரசுராமர். ஆக, பூமாதேவிக்கு பாரம் கொடுக்கும் யாரையும் பெருமான் விட்டு வைக்க மாட்டான் என்பதற்கு சாட்சியே பரசுராம அவதாரம். 

அடுத்த அவதாரம், கருணையே உருக்கொண்ட ஸ்ரீராமனின் பிறப்பு! சீதையைக் கடிமணம் புரிந்து கொண்டு, வேடனான குகன், குரங்கான சுக்ரீவன், இராக்சதனான விபீஷணன் ஆகியோரைத் தன் தம்பிகள் என்று பிரகடனம் செய்து கொண்டான். மூத்தோர் சொல்ல, இளையோர் கேட்க வேண்டும். ஆச்சாரியன் கூறினால், சிஷ்யனும்; தந்தை சொன்னால், தனயனும்; அண்ணன் சொன்னால், தம்பியும்; இப்படி பெரியவர்கள் சொன்னால், சிறியவர்கள் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்பதை உலகத்துக்கு உணர்த்தவே ஸ்ரீராம அவதாரம். ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று வாழ்ந்தான் இராமன். உண்மை, நேர்மை, கட்டுப்பாடு இவை அனைத்தின் மொத்த உருவே மரியாதா புருஷோத்தமனான ஸ்ரீராமன்.


மேலும் இரண்டு அவதாரங்கள். அண்ணனான பலராமன்; தம்பியான கிருஷ்ணன். இவர்கள் இருவருமாக எத்தனை திருவிளையாடல்கள் செய்தார்கள். கண்ணனுடைய பால்ய பருவமே, நினைக்க நினைக்க நீங்காத இன்பமாக இருக்கும். எத்தனை ரிஷிகளும் ஆழ்வார்களும் இவனுடைய சிறு பிராய விளையாட்டுக்களைப் பாடியிருப்பார்கள். இதன் கருத்து என்ன? 

பகவானுடைய திவ்ய சேஷ்டிதங்களை, அவனுடைய அவதார ரஹஸ்யத்தை உணர்ந்தோமானால், நாம் மறுபடியும் பிறக்க வேண்டிய தேவையே இல்லை. அதற்குத்தான் இத்தனை விளையாட்டுக்களையும் புரிந்தான். பொய் சொன்னதோ, வெண்ணெய் திருடியதோ, பாலைக் குடித்ததோ, கன்றுகளை அவிழ்த்து விட்டதோ, கட்டுப்பட்டு உரலோடு ஏங்கி அழுததோ, மாடு கன்றுகளை மேய்த்ததோ, புல்லாங்குழல் ஊதியதோ, கோகுலத்துப் பெண்களோடு ராஸக்ரீடை செய்ததோ, கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்ததோ... இவை அனைத்தும் அவனுடைய தெய்வீகச் செயல்கள். இவற்றை நினைக்க நினைக்க நாம் மறுபடி பிறக்கத் தேவையில்லாத உயர் நிலையை எய்துகிறோம்.

அவன் தாம்புக் கயிற்றால் கட்டுப்பட்டதை நினைத்தால், நம் பாபக் கட்டுகள் விலகி விடுகின்றன. இதோடு அல்லாமல், பகவத் கீதையை நம் அன்றாட வாழ்க்கைக்கு ஒளி காட்டும் விளக்காகவும், முக்திக்குச் சிறந்த வழியாகவும், உபதேசித்தது ஸ்ரீகிருஷ்ண அவதாரம். அவரோடு கூட இருந்து, அனைத்து விளையாட்டிலும் பங்கெடுத்தார் பலராமர். 

கண்ணனே மற்றோர் உருவில் பிறந்தாரோ! –என்று வியக்கும்படியான ‘கிருஷ்ண த்வைபாயனர்’ என்ற வேத வியாஸ அவதாரம். பராசரருக்கும் ஸத்தியவதி தேவிக்கும் மகனாக வேத வியாஸர் பிறந்தார். இவர் வேதங்களை ரிக், யஜுர், ஸாம, அதர்வணங்களாய் பிரித்துக் கொடுத்தார். உலகத்தில் இதிஹாஸ – புராணங்களைப் பிரசாரம் செய்தார். இந்த அவதாரத்தின் பயன் யாது? நாம் வேதங்கள், இதிஹாஸ – புராணங்கள் மூலம்தான், பெருமானை அறிந்து கொள்ள முடியும். நாம் அறியாததை அவைதான் அறிவிக்கும். உண்மை பேசும் – என்பதையெல்லாம் உலகுக்கு உணர்த்தினார். அடுத்து வியப்பான ஒரு அவதாரமாக புத்தனாகத் தோன்றினார். ஒரு கால கட்டத்தில் சில அசுரர்களுக்கும் கூட வேதத்தில் பற்று ஏற்பட்டு, அதைப் பிடித்துக் கொண்டு பல வழிகளில் தவறாகப் பயன்படுத்தினார்கள். உலகத்திற்குத் துன்பம் கொடுத்தார்கள். அவர்களுக்கு வேதத்தில் இருந்த ஈடுபாட்டைக் குறைத்தால்தான், அவர்களைச் செயல் இழக்கச் செய்ய முடியும். இதை உணர்ந்த பகவான், புத்தராகப் பிறந்து, அசுரர்களிடத்தே சென்று, ‘இப்படி வேதத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டாம். அது நல்லது சொல்லவில்லை. அது சிறந்த பிரமாணமில்லை’ என்று வேதத்திற்குப் புறம்பாகவே பிரசாரம் செய்து, அவர்களுக்கு அதில் இருக்கும் ஈடுபாட்டைக் குறைத்து, அவர்களை வென்று விட்டார். 

இனி கடைசி அவதாரம். இனிமேல் நடக்கப் போகிறது. உலகத்தில் கொடுமைகள், அதர்மம் மலிந்து போகும்போது, விஷ்ணு யசஸ் என்பவருக்குக் குமாரராய், சம்பலம் என்ற கிராமத்தில் அவதரித்து, வெள்ளைப் புரவியின் மீது கல்கியாக உலகை வலம் வரப் போகிறார். நல்லார்களைக் காத்து, தீயவர்கள் அனைவரையும் அழித்து, கலியுகத்தை மாற்றி, க்ருத யுகமாக திருத்தியமைப்பார் எம்பெருமான். 

மேலே இப்படி எத்தனையோ அவதாரங்கள். நாரதா! உனக்கு பகவானின் வைபவங்கள் அனைத்தையும் கூற முயன்றும் இயலாமல், சுருக்கமாகத்தான் கூறினேன். நீ பேச்சு வல்லமை உள்ளவனாயிற்றே! மேன்மேலும் இந்த அவதாரங்களின் பெருமையை உலகத்திற்குச் சென்று பரப்புவாய்! அனைவருக்கும் அதில் பக்தியையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவாயாக – என்று ப்ரஹ்மா கூறி அமைந்தார். 

அப்போது சுகர் கூறுகிறார் : 

“ப்ரஹ்மா, நாரதருக்குத் திருமாலின் அவதாரங்களின் சிறப்புக்களைக் கூறிய இந்த அத்தியாயத்தை, யாரெல்லாம் பாராயணம் செய்கின்றார்களோ, அவர்களுக்கு அறியாமை, கல்வி அறிவின்மை ஆகியவை விலகும்; மயக்கம் நீங்கும்; சந்தேகங்கள் தொலையும்; பகவானிடத்தில் பக்தி பிறக்கும்; முக்தி கிட்டும் – இதுவே பயன்” என்று கூறி முடித்தார். நாமும் பக்தி உணர்வு மேலோங்கிட, அடுத்த அத்தியாயத்திற்குச் செல்வோம். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 34


இரண்டாவது ஸ்கந்தம் - ஏழாம் அத்தியாயம் (தொடர்ச்சி)

பகவானது அவதாரங்கள்

அடுத்து, ஒன்பதாவது அவதாரம். ப்ரியவ்ரதனுக்கு ஆக்னித்ரன் பிறந்தார். அவருக்கு நாபி பிறந்தார். நாபிக்கும் ஸுதேவிக்கும் திருக்கல்யாணம் நடந்து, பகவானே ரிஷப தேவனாக அவதரித்தார். இவர் ஸன்யாஸ ஆச்ரமத்தின் சிறப்பை வெளிப்படுத்தியவர். பரமஹம்ஸர், பற்றற்றவர். உடலுணர்வற்று உலக உணர்வு நீங்கிய யோகியாகத் திரிந்தவர். பற்றில்லாத தன்மை, ஸன்யாஸம் இவற்றின் பெருமையை உணர்த்தவே ரிஷப தேவருடைய அவதாரம். 

மேலும் எம்பெருமான் குதிரை முகத்தினனாய், ஹயக்ரீவனாகப் பிறந்தார். இவர் அனைத்து வித்யைகளுக்கும் ஆதாரக் கடவுள். உலகத்தில் நல்ல கல்வி, பேச்சு சாமர்த்தியம் ஆகியவை வேண்டுமானால், இவர்தான் அருள வேண்டும். இவரே வித்யைகளுக்கெல்லாம் மூல ஸ்தானம். வாகீசர், வாகதீசர், வாக்குகளுக்கெல்லாம் அதிபதி என்றெல்லாம் துதிக்கப்படுகிறார். வாக்கு என்றாலே, வேதங்கள்தானே! 

பெருமான் ஹயக்ரீவனாக அவதரித்து, குதிரையின் கனைப்பொலியான ‘ஹல ஹலா’ எனும் ஒலி மூலம் வேதங்களையே உலகுக்கு உபதேசித்தார். குதிரை எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும். தன்னை அண்டியவர்களைத் தன் முதுகில் ஏற்றிச் செல்லும். காற்று வேகத்தில் ஓடும். சுறுசுறுப்பாக இருக்கும். இத்தனை சிறப்புகளுடன் வேதங்களையும் கொடுத்த பகவான், எத்தனையோ உயர்ந்த கருத்துக்களை நமக்கு உணர்த்துகிறார். 

அடுத்து மத்ஸய அவதாரம். அதாவது, மீனாய் தோன்றிய அவதாரம். உலகின் பிரளயத்தின்போது, வேதங்கள் மறைந்து போகாமல் இருக்கவும், மூலிகைகளைக் காக்கவும், ஸப்த ரிஷிகளைக் காப்பதற்காகவும், பகவான் மீனாக அவதரித்தார். இது மிகப் பெரிய அவதாரம். ஒரு படகைத் தன் கொம்பின் நுனியில் வாசுகி எனும் பாம்பால் கட்டி, பிரளய காலத்தில் ரிஷிகளையும், மனுவையும் காத்துக் கொடுத்தான் எம்பெருமான். பிரமன் இழந்த வேதங்களை மீட்டு, திரும்பவும் ஸ்தாபித்துக் கொடுத்தவன் எம்பெருமான். 

மேலும் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது, ஆமை உருவாய் கூர்ம அவதாரம் செய்தார். அப்போது மந்தர மலை கடலுக்குள் மூழ்காமல் இருக்க, மலையையே தன் முதுகின் மேல் வைத்துக் காத்துக் கொடுத்தார். இதிலிருந்து நாம் என்ன அறிகிறோம்? உலகத்தையே தாங்குபவனான அவனே அனைத்தையும் தாங்கும் ஆதாரம் என்று தெரிந்து கொள்கிறோம். 

அடுத்து சிறு குழந்தையான பிரஹ்லாதன். இவன் ஹிரண்யகசிபுவின் மகன். அந்தச் சிறுவன், தன்னுடைய சிறு விரலை ஒரு தூணில் சுட்டிக் காட்ட, அந்தத் தூணிலிருந்து நரசிம்மப் பெருமானாகத் தோன்றினார். சிறுவன் ‘எங்கும் உளன் கண்ணன்’ என்று கூறினான். ‘இங்கு இருக்கிறானா?’ என்று தூணைத் தொட்டுக் கேட்டான் ஹிரண்யகசிபு. ‘இங்கும் இருக்கிறான்’ என்று குழந்தை பதில் கூறினான்.

அடுத்த வினாடி ஹிரண்யகசிபு கோபத்துடன் தூணைத் தட்டுகிறான். 

‘அளந்திட்ட தூணை அவன் தட்ட - ஆங்கே 
வளர்ந்திட்டு வானாகிர்ச் சிங்க உருவாய்’...
(பெரியாழ்வார் திருமொழி 1-6-9) 

பெருமான் வெளிப் புறப்பட்டான். பகவான் ஸர்வ வியாபகன். எங்கும் உளன். தூணிலும் உளன். துரும்பிலும் உளன். நம்மிலும் உளன். ஆகவே அவன் எங்கும் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு, பாவங்களைச் செய்யாமல், அவனுக்கு ஆனந்தத்தைத் தரும் புண்ணியங்களையே செய்து கொண்டிருக்க வேண்டும். பக்தனான ஒரு சிறுவன் பேச்சுக்கும் பணிந்து பெருமான் வருகிறான். ஹிரண்யகசிபுவுக்கு எதிலும் மரணம் இல்லை என்று ப்ரஹ்மா வரம் கொடுத்திருந்தார். அந்த வரத்தின் விதிகளை மீறாமல், உள்ளேயோ வெளியேயோ கொல்லாமல், ஆகாயத்திலோ பூமியிலோ கொல்லாமல், மனித உருவத்தோடோ அல்லது விலங்கு உருவத்தோடோ மட்டும் வராமல், அனைத்தையும் மீறி ஹிரண்யகசிபுவை முடித்தார். 

ஆக, ஒரு சிறுவனும் கூட ‘எங்கும் உளன் அவன்’ என்ற உண்மையைக் கூறினால், நாம் புரிந்து கொள்ளும் வண்ணம் அதை எடுத்துக் காட்டிய அவதாரம் இது! அடுத்து, பகவானே ஸ்ரீ ஹரி என்ற திருநாமத்தோடே யானைக்கு அருள் புரிவதற்காக, கஜேந்திர வரதனாகத் தோன்றுகிறார். ஒரு விலங்கின் அலறலுக்குக் கூடவா ஓடி வருவான்? ஒரு யானை குளத்தில் இறங்கி, தாமரை மலரைப் பறித்து, பெருமானுடைய திருவடிகளுக்கு ஸமர்ப்பித்து, மகிழ்ச்சி கொள்ள நினைத்தது. ஆனால் அப்போது யானையின் காலை ஒரு முதலை கவ்விப் பிடித்து இழுத்தது. 

யானைக்கும் முதலைக்கும் நெடுங்காலம் சண்டை நிகழ்ந்தது. யானை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற உறுதியோடு போரிட்டது. இறுதியில் தண்ணீருக்கு வெளியில் தும்பிக்கை மட்டுமே இருந்தது. உடல் அத்தனையும் மூழ்கிற்று. இனி நம்மால் நம்மைக் காத்துக் கொள்ள இயலாது என்பது புரிந்து, ‘ஆதிமூலமே!’ என்று பெருமானை அழைக்க, அவர் ஓடோடி வந்து யானையைக் காத்தார். 

இக்கதையிலிருந்து என்ன தெரிந்து கொள்கிறோம்? நம்மை நாமே காத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், பெருமான் வர மாட்டார். ‘அவனே காப்பாளன்’ என்ற முழு உணர்வுடன் நாம் சரணாகதி செய்தால், ஓடோடி வந்து காக்கிறான்.

கஜேந்திரனைக் காக்க, அதாவது விலங்கான ஒரு யானையைக் காப்பதற்குக் கூட பெருமான் ஓடி வருகிறான் என்பதை இங்கு புரிந்து கொண்டோம். அடுத்து, வாமன அவதாரம். இது எதற்கு? பெருமானுடையதுதான் இந்த உலகம் முழுவதும். அவனுடைய சொத்துதான் அனைத்தும்! யாரேனும் சொத்தை இழக்க விரும்புவார்களா? இந்திரனை முதல் மூன்று லோகங்களை ஆள்வதற்காக பகவான் நியமித்திருக்கிறார். இந்திரன், அசுரர்களிடத்தில் தோற்றான். அசுரர்களின் அதிபதியான பலிச் சக்ரவர்த்தி இந்திரனுடைய மூன்று லோகங்களைப் பறித்துப் போனான். அவற்றைத் திரும்ப மீட்க இந்திரனுக்கு வழி தெரியவில்லை. பெருமானிடத்தில் வேண்டினான்.

பெருமான், குள்ளமான உருவத்தோடு வாமனனாக அவதரித்தார். தனது பக்தன் ப்ரஹ்லாதனின் பேரனான மஹாபலியிடம் சென்று, தனது கால் அளவால் மூன்றடி மண்ணை தானமாகக் கேட்டார். மஹாபலியும் இசைந்தார். உடனே பெருமான் வளர்ந்தார். உலகத்தனையையும் திரிவிக்ரமப் பெருமானாகத் தாவி அளந்தார். ஒரு திருவடியால், அதாவது வலது திருவடியால் பூலோகம் அத்தனையும் அளந்தார். இடது திருவடியால் வானுலகில் அத்தனையும் அளந்தார். மூன்றாவது அடியை வைக்க இடமில்லை. ‘எங்கே வைக்க வேண்டும்?’ என்று பலியைக் கேட்டு, அவனைச் சரணடைய வைத்து ஆட்கொண்டார். 

இந்த அவதாரத்திலிருந்து நாம் அறிந்து கொள்வது – தன் சொத்தை பகவான் இழக்க மாட்டார்; தன்னைக் குறைத்துக் கொண்டாவது, குள்ளமாக அவதரித்தாவது, யாசித்தாவது தன் சொத்தை மீட்டு விடுவார் என்பதே! ஆக, நாம் செய்ய வேண்டியது என்ன? நாம், பெருமானுடைய சொத்து; நாம் அவனுடையவர்கள்; அவனுடைய உடமை – என்று உணர்ந்து ஒத்துக் கொண்டோமானால், எப்பாடுபட்டாவது நம்மைக் காத்து விடுவான் எம்பெருமான்; ஒருக்காலும் கைவிட மாட்டான் – என்பதை அறிகிறோம். 

மேலே பகவானே, ஹம்ஸமாக – அன்னப் பறவையாகத் தோன்றி, நாரதரே! உமக்கு யோக சாஸ்திரத்தை உபதேசித்தார் அல்லவா! ஹம்ஸம் என்ன செய்யும்? பாலையும் நீரையும் கலந்து வைத்தால், நீரைத் தள்ளி பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும். பெருமான் அன்னமாக அவதரித்ததில் இன்னும் ஒரு சிறப்பு உண்டு. நல்லதையும் தீயதையும் சேர்த்துக் கொடுத்தால், தீயதைத் தள்ளி நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வான் எம் பெருமான் என்பதோடு மட்டும் அல்லாமல், அவனைச் சரணடைந்தவன் தீயதை மட்டுமே கொடுத்தாலும் கூட, அந்தத் தீயதையே நல்லதாக மாற்றியமைத்து எடுத்துக் கொள்கிறான் பகவான். நாம் எத்தனையோ குற்றங்களைப் புரிந்திருக்கிறோம். இருந்தாலும் அந்தத் தவறுகளுக்கு வருந்தி, மன்னிப்பு வேண்டினால், அந்தக் குற்றங்களையே தனக்கு ஸமர்ப்பிக்கப்பட்டதாக, நல்லதாக ஏற்றுக் கொண்டு அருள் புரிகிறான். நாம் கடந்த காலத்தில், எப்படி இருந்தோம் என்பது முக்கியமில்லை. இன்று திருந்தி பகவானையே சரணடைந்தால், பழைய குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் தவறுகள் செய்யாமல் இருந்தாலே போதும்.   

(தொடரும்)

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 33


இரண்டாவது ஸ்கந்தம் - ஏழாம் அத்தியாயம்

பகவானது அவதாரங்கள்

திருமால் செய்யும் அவதாரங்கள் எண்ணிறந்தவை. நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் பெருமான் எத்தனையோ அவதாரங்களைச் செய்கிறார். தர்மங்களை நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், தன்னையே சிறந்த தர்மமாகவும் பெருமான் உபதேசிக்கிறார். பகவானுடைய அவதாரங்கள் ஒவ்வொன்றும் உயர்ந்த கருத்துக்களை வலியுறுத்திக் கூற வந்தவை. 

நாரதருக்கு ப்ரஹ்மா உபதேசித்து வரும்போது அவதாரங்களைப் பட்டியலிடுவதோடு, அவற்றின் பயன் என்ன? நமக்கு எந்த உயர்ந்த கருத்தைப் புரிய வைப்பதற்காக ஏற்பட்டவை? – என்றும் கூறுகிறார். அவற்றை நாம் இப்போது சுருக்கமாகக் காண்போம். 

முதலில், பகவான் வராஹ வடிவினராக அவதரித்தார். அதாவது பெரிய பன்றி உருவத்தோடு தோன்றினார். ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன், பூமியை அதன் சுழற்சிப் பாதையில் இருந்து வெளியேற்றி, அண்டவெளிக்கு அப்பால் உள்ள சூட்சுமமான ஆவரண ஜலம் எனப்படும், பிரளயக் கடலில் ஒளித்து வைத்தான். பகவான் பன்றி உருவில் தோன்றி, கடலுள் புகுந்து, அசுரனை அழித்து, பூமிப் பிராட்டியைக் காப்பாற்றி, தன் மடியில் அமர்த்தி வைத்துக் கொண்டு, வராஹ புராணத்தையே உபதேசித்தார். 

இந்த அவதாரத்திலிருந்து உலகத்தையே தாங்கும் பலம் பொருந்தியவன் எம்பெருமான் என்பதும், பிரளயக் கடலிலிருந்து பூமிதேவியைக் காத்துக் கொடுத்த அவர், ஸம்ஸாரம் என்னும் பெரும் கடலில் விழுந்து நோவுபடும் நம்மையும் நிச்சயம் காப்பாற்றி, மேலே தூக்குவார் என்பதும் திண்ணமாக வெளிப்படுகிறது. 

அடுத்து, ருசி என்பவர் ஆகுதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதில் அவர்களுக்கு ஸுயக்ஞர் பிறந்தார். ஸுயக்ஞர் பகவானுடைய அவதாரம். இவருக்கு ‘ஹரி’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர் தக்ஷிணா எனும் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, சுயமர்கள் எனும் தேவர்களைப் பெற்றார். அவரே ஆபத்துக்களைப் போக்கக் கூடியவர். ‘ஹரிர் ஹரதி பாபானி’ – பாவங்களை அபகரிக்கக் கூடியவர் – என்பது ஹரி என்ற அவருடைய திருநாமத்தின் பொருள். ஆக, எவ்வளவோ பாவங்களை நாம் சேர்த்து வைத்திருக்கிறோம். இவற்றை நம்மால் தனித்துப் போராடி போக்கிக் கொள்ள இயலாது. பெருமானின் திருவடி பலத்தால்தான், இப்பாவங்கள் நம்மை விட்டு விலக முடியும். இதனையே ஸுயக்ஞர் உணர்த்துகிறார். 

அடுத்து, கபில அவதாரம். கர்த்தம ப்ரஜாபதிக்கும் தேவஹூதிக்கும் முதலில் ஒன்பது பெண்கள் பிறந்து, இறுதியாக கபிலர் அவதரித்தார். தன்னுடைய தாயான தேவஹூதிக்கே ஞான மார்க்கத்தை உபதேசித்தார். இவர் உபதேசத்தால் தேவஹூதியின் ஞானம் மலர்ந்து, முக்தி பெற்றாள். அப்படி என்னதான் கூறினார்?

இவ்வுலகத்திலிருந்து நாம் விடுதலை அடைவதற்கும், பிறப்பு இறப்புகளைத் தாண்டுவதற்கும், ஒரே வழி அசித்தான ஜடப் பொருள்களுக்கும், சித்தான ஜீவனுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளுதல். இதை ‘ப்ரகிருதி புருஷ விவேகம்’ என்று கபிலர் கூறுகிறார். நாம் ஜடப் பொருளான நம்முடைய உடலையே ‘நாம்’ என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த அடிப்படைத் தவறு மாறினால்தான், எந்த யோகமும் ஸித்திக்கும். நம்மால் முக்தி பெற இயலும். இதை உணர்த்தவே கபிலர் அவதரித்தார். 

அடுத்து, தத்தாத்ரேயர் அவதாரம். அத்ரியின் பிள்ளையானபடியால் ஆத்ரேயர் என்று இவர் பெயர் பெற்றார். இவர் தாயார் அனசூயை. தன்னையே இவர்களுக்குப் புதல்வனாக தத்தம் செய்தபடியால், அதாவது கொடுத்தபடியால், இவருக்கு தத்தர் என்று பெயர். தன்னையே கொடுத்து, அத்ரியின் பிள்ளையானபடியால், தத்தாத்ரேயர். இவர் உணர்த்தியது எதை? என்று பார்ப்போம். 

இவருடைய திருவடிகளின் பாதத் தூளிகளின் பலத்தால்தான் யது, கார்த்தவீரியன் முதலான மஹாத்மாக்கள் எல்லாம் பேறு பெற்றார்கள். நாம் பகவானிடத்தில் எதைக் கேட்டாலும் கொடுப்பார். அதோடு நில்லாமல், தன்னையே கொடுப்பதற்கும் ஆவலாக உள்ளார். 

‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ 

– என்பது ஆழ்வார் அனுபவித்த அவனது நீர்மை! தன்னையே ஒரு தாய் – தந்தையருக்குக் கொடுத்தவர், நாம் வேண்டினால் தன்னையே நமக்கும் கொடுப்பார் – என்பதைச் சொல்லவும் வேண்டுமோ! 

‘தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை’ 

– என்று கம்பரும் ராமாயணத்தில் அவனைப் போற்றுகிறார்.

மேலும் பார்ப்போம். ப்ரஹ்மா கூறுகிறார் : 

“நாரதா! நான் பல காலம் தவம் புரிந்தேன். அப்போது பகவான் எனக்கு நான்கு குமாரர்களைத் தந்து அருள் புரிந்தார். ஸனகன், ஸனத்குமாரன், ஸனந்தனன், ஸனத்ஸுஜாதன் என்று அவர்களுக்குத் திருநாமங்கள். இவ்வுலகத்தில் அவர்கள் ஆத்ம வித்யையை உபதேசித்தார்கள். கண்ணால் பார்க்க முடியாததை, நம்மால் அறிய முடியாதவற்றை வேதங்களைக் கொண்டும், வேதம் வல்லார்கள் வாயிலாகக் கேட்டும்தான் உணர முடியும். உணர்வதற்கரிய ஆத்ம தத்துவத்தை, உலகோர்க்கு உணர்த்தியவர்கள் என்னுடைய நான்கு குமாரர்கள். 

அடுத்து, பகவானுடைய நர நாராயண அவதாரம். அதாவது, தக்ஷன் என்பவருடைய பெண் மூர்த்தி. அவள் தர்ம தேவதையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாள். அவர்களுக்கு பகவானே இரண்டு புதல்வர்களாகப் பிறந்தார். ஒருவருக்கு நாராயணன் என்றும், மற்றொருவருக்கு நரன் என்றும் திருநாமம். இது நடந்தது பதரிகாச்ரமத்தில். கந்தமாதன பர்வதம், ஹிமாச்சலத்தில் உள்ளது. அங்கே நெடிதுயர்ந்த எதிரும் புதிருமான இரு மலைகள் உள்ளன. ஒன்று – நரன் என்ற பெயருடனும், மற்றொன்று – நாராயணன் என்ற பெயருடனும் திகழ்கின்றன. இங்குதான் இறைவன் இருவராகப் பிறந்தார். தானே ஆசாரியன், தானே சீடன். 

‘நர நாராயணனாய் உலகத்து அறநூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான்’ 
(பெரிய திருமொழி 10-6-1) 

– என்பது ஆழ்வாருடைய பாடல். இங்கே பரமாத்மாவான பகவான் இலந்தை மரத்தின் கீழ் அமர்ந்து, தன்னில்தானே லயித்து தவம் புரிந்தார். தன்னுடைய சீடனான நரனுக்கு, எட்டெழுத்து மந்திரமாம் திருமந்திரம் எனப்படும், நாராயண மந்திரத்தை உபதேசித்தார். இங்கு அவர் காமதேவனை வென்றார். காமத்தையும், கோபத்தையும் வெல்ல நினைப்பவர்களுக்காகவே திருமந்திரத்தை உபதேசித்தார். 

இதே நாராயணரும், நரனும்தான் மேலும் பல காலம் கழித்து, கண்ணனாகவும், அர்ஜுனனாகவும் பிறந்ததாகக் கூறுவதுண்டு. மேலும் பார்ப்போம்: 

ப்ரஹ்மாவிற்கு ஸ்வாயம்புவ மனு பிறந்தார். அவருடைய இரண்டு புதல்வர்களில் ஒருவரான உத்தானபாதனுக்கு இரண்டு மனைவியர். ஒருத்தி ஸுநீதி, மற்றொருத்தி ஸுருசி. ஸுநீதியின் மகன் துருவன்.

அவன் பெருமானுடைய அவதாரமாகவே கொண்டாடப்படுகிறான். தன்னுடைய மாற்றாந்தாயாலே இகழப்பட்ட துருவன், கோபத்துடன் காடு சென்று ‘வாஸுதேவ மந்திரத்தை’ உச்சரித்து, ஆறு மாதங்கள் கடும் தவம் புரிந்தான். ஆறாம் மாதத்து இறுதியில் பெருமானை நேரே கண்டான். உவகை பூண்டான். பகவான் அவனுக்கு அருள் புரிந்து, ‘துருவ பதவி’ – என்ற ஒரு நக்ஷத்திரப் பதவியை அருளினார். ஸப்த ரிஷிகளும் இந்த துருவ நக்ஷத்திரத்திற்குக் கீழே இருந்து பகவானைத் தொழுது கொண்டிருக்கிறார்கள். 

இதிலிருந்து – ஒரு பாலனும் தவம் புரியலாம்; சிறுவனும் தியானிக்கலாம்; அவனுக்கும் பெருமான் அருள் புரிகிறார் – என்று தெரிந்து கொள்கிறோம். ஆக, வயதான பின்புதான் பக்தி என்பதில்லை. இள வயதிலிருந்தே பக்தி வேண் டும். 

‘பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த:
லக்ஷ்மண: லக்ஷ்மி வர்தன:’
(ஸ்ரீ ராமாயணம் – பால காண்டம் 18-7) 

– என்பது வால்மீகி ராமாயண ச்லோகம். சிறு பிராயம் தொடங்கியே இலக்குவணன், ராம பக்தியோடு வளர்ந்தார். எப்படி துளசியானது, பூமியிலிருந்து முளைவிட்டுப் புறப்படும்போதே, மணத்தோடு வெளிக் கிளம்புமோ, அதே போல சிறுவயது முதலே பக்தியில் மலர்ந்து வளர வேண்டும்.

நம்மாழ்வார் அவதரித்தபோதே, அத்துணை பக்தியோடுதான் பிறந்தார். நம்மாழ்வார் ஒரு பாடலில், 

‘கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் 
வளரொளி மாயோன் மருவிய கோவில்:
...சார்வது சதிரே’
(திருவாய்மொழி – 2.10.1) 

– என்று கூறுகிறார். இளமை கெடுவதற்கு முன்னரே பக்தனாக வாழுங்கள்; இளம் பிராயத்திலேயே பக்தி மலரட்டும். இவற்றைத்தான் துருவன் உணர்த்தினான்.

துருவனுடைய வம்சத்திலேயே வேனன் பிறந்தான். அவன் கொடுங்கோலனாக இருந்தான். எனவே ரிஷிகள் கூடி, நாட்டைக் காப்பதற்காக அவன் உயிரை சாபத்தால் பறித்தனர். ஆனால் அடுத்து மன்னன் வேண்டுமே! ஆகையால் அவன் உடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து ப்ருது பிறந்தான். 

ப்ருது சிறந்த அரசன். அவன் பூமா தேவியிடத்திலிருந்து எல்லாச் செல்வங்களையும் கறந்து பெற்றான். இங்கு ஒரு செய்தி: 

வேனன் கொடுங்கோல் ஆட்சி புரிந்தபோது, பூமாதேவி தன்னிடம் இருந்த சொத்துக்கள் அத்தனையையும் மறைத்து விட்டாளாம். அடுத்து வந்த மன்னனான ப்ருது நல்லாட்சி கொடுத்தபடியால் மறுபடியும் அனைத்துச் செல்வங்களையும் பூமாதேவி அவனுக்குக் கொடுத்தாள். ஆக, நாட்டை நன்கு ஆண்டால், நல்லார்களுக்கு பூமி எதையும் மறைக்காமல், அனைத்துச் செல்வங்களையும் கொடுக்கும் என்பது திண்ணம். 

(தொடரும்)

நன்றி - துக்ளக்