வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 10


உட்கார், குளி, நில், சாப்பிடு, தூங்கு ஆகியவற்றை செய் என்றும் சொல்லவில்லை, செய்யாதே என்றும் சொல்லவில்லை. இதில், வேடிக்கை என்னவென்றால் "குளி' என்று கூட சொல்லாதது தான். இதுபோல்,"சாப்பிடு' என்றும் சொல்லவில்லை. 

காரணம் என்ன!

வேதம் சொல்லாமலேயே, தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோம். "சாப்பிடு' என்று சொன்னால், இன்னும் அதிகமாக சாப்பிடுவோம். அதேநேரம், "பட்டினி கிட' என்று வேதம் கட்டளையிடுகிறது. சாப்பாட்டைக் குறைத்தால் புத்தி வளரும் என்கிறது. 

குளி என்று கட்டளையிடாத வேதம், "குளிக்காமல் சாப்பிடாதே' என்று வேறுமாதிரியாகச் சொல்கிறது. குளிக்காமல் சமைக்கவும் கூடாது. அடுப்பு மூட்டி, காய்கறியை நறுக்கி வைத்து விட்டு குளிக்கப் போகிறேனே என்றால், அதுவும் கூடாது. இந்தச் செயல்களையும் குளித்த பிறகே செய்ய வேண்டும். "குளம் வெட்டு' என்று வேதம் சொல்கிறது. அது புண்ணியச் செயல். புண்ணியம் என்றால் என்ன? "நமக்கும் ஊருக்கும் நன்மை தருவது' என்று பொருள். குளம் வெட்டினால் வெட்டியவனுக்கும் நல்லது, ஊருக்கும் நல்லது. ஆக, புண்ணியம் என்றால், நன்மை கொடுக்கும் செயல்.

அந்தணர்கள் அதற்குரிய நேரத்தில் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும், செய்தால் புண்ணியம், செய்யாவிட்டால் பாவம். பாவம் என்றால் தீமை தரும் செயல். ""சரி...இவ்வளவு நல்லது கெட்டதைச் சொல்கிறீர்களே! இதை வேதம் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா! நானே இதை உணர்ந்து தெரிந்து கொள்ளக்கூடாதா,'' என்று ஒருவர் கேட்கலாம்.

அதற்கும் பதில் சொல்கிறேன்.

சில கர்மங்களுக்கு (செயல்கள்) செய்தவுடன் பலன் கிடைக்கும். உதாரணமாக, விளக்கைத் தொட்டால் சுடும் என்பது எனக்குத் தெரியும். இதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தண்ணீர் குடித்தால் தாகம்தீரும் என்பதும் நாமே தெரிந்து கொண்ட விஷயம் தான். ஆனால், தினமும் உடற்பயிற்சி செய் என்று அம்மா சொல்கிறாள். அப்படி செய்தால், பிற்காலத்துக்கு நல்லது என்பது நமக்கும் தெரியும். ஆனாலும், செய்வதில்லை. 25 வருடம் கழித்த பிறகு, அங்கே இங்கே உடம்பில் வலிக்கும். கால்,கை சுளுக்கும். அம்மா சொன்னதைக் கேட்காததால் 25 வருஷம் கழித்து தான் பலன் கிடைக்கிறது. 

இதுபோல, அன்றன்று செய்த புண்ணிய, பாவத்திற்கேற்ப பலன்கள் உடனடியாகவோ, தாமதமாகவோ கிடைத்து விடும்.

சரி...இந்தப் பிறவியே முடிந்து விட்டது. ஒருவருக்கு 69 வயது 364 நாள் முடிந்து, 70 பிறக்கும் போது, அவர் போய் விடுகிறார். அதோடு, அவரது செயல்களுக்கான பாவ புண்ணியம் தீர்ந்து போகுமா?
நிச்சயமாகக் கிடையாது. பாவம், புண்ணியம் என்ற மூட்டை ஏற இறங்க இருந்து கொண்டே தான் இருக்கும். 250 வருஷம் ஆனாலும் தொடரத்தான் செய்யும். அதாவது, இறந்து போனவர், மறுபிறவியில் தன் செயல்களுக்குரிய பலனை அனுபவிக்க ஆரம்பித்து விடுவார். நாம் செய்கிற வினைகளே நம் பிறவிக்கு காரணம்.

சரி...குழந்தைகள் ஏதாவது கர்மங்கள் செய்கிறார்களே! அது அவர்களைப் பாதிக்குமா!
குழந்தைகள் 12 வயது வரை செய்யும் கர்மங்கள் அவர்களைப் பாதிப்பதில்லை. அதன்பிறகே, கணக்கு துவங்கும். சில பாவங்களுக்கு ஆயிரம் வருடம் வரை பலன் உண்டு. அதை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். அதனால் தான் "பாவம் செய்யாதே...பாவம் செய்யாதே' என்று திரும்பத் திரும்பக் கூறுகிறது வேதம்.
"சாலையில் மஞ்சள் கோட்டைத் தாண்டாதே! அது ஆபத்து' என்று காவலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தாண்டினால் ஐநூறு ரூபாய் அபராதம் போடுவார்கள். அதே நேரம், நாம் தாண்டுகிற இடத்தில் காவலர் இல்லை என வைத்துக் கொள்வோம். கோட்டைத் தாண்டி எப்படியோ போய் விடும். 

அதாவது தட்டிக்கேட்கிறவர் அந்த இடத்தில் இல்லை. அவர் இல்லை என்பதற்காக, நாம் செய்தது சரியாகி விடாது. அது தவறு தான்! அதுபோல, கண்டிக்கிற பகவான் கண்ணுக்கு தெரியவில்லை என்பதற்காக, நாம் அவனுக்கு தெரியாமல் தானே செய்தோம், இது எங்கே கணக்கில் ஏறப்போகிறது என நம் இஷ்டத்துக்கு பாவங்களைச் செய்ய முடியாது. 

நாம் இறந்து விட்டோம். பிறவி விட்டு பிறவி மாறுகிறோம். அப்போது, எதை எடுத்துப் போவோம்! கட்டியிருக்கிற காஞ்சிபுரம் வேஷ்டியை எடுத்துப் போக முடியுமா! குடியிருக்கிற வீடு, வாசலைத் தூக்கிப் போக முடியுமா! எல்லாவற்றையும் விடவைத்து விடுவான் பகவான்! ஆனாலும், நம் கூட ஒன்றே ஒன்று வரும்! அது என்ன! 

கர்மவாசனா ருசியை (முன் செய்த பாவ, புண்ணிய பலன்) மட்டும் எடுத்துப் போவோம். அதைத் தொடர்ந்து அனுபவிப்போம். 

நமது தவறுகள், புண்ணியச்செயல்கள் இங்கே இருக்கிறவர்கள் பார்வையில் படாமல் போகலாம். ஆனால், பெருமானின் உள்ளத்தில் அது பதிவு செய்யப்பட்டு விடும். அது மிகப்பெரிய கணிப்பொறி.
இவை பற்றி அங்கே விசாரணை செய்யப்படும். செய்த தவறுக்கு சாட்சிகள் வேண்டாமா என்றால் அவர்களும் இருக்கிறார்கள். 

அவர்கள் தான் சூரியன். சந்திரன், நிருதி என்று பலபேர். அவர்கள் நாம் இன்னின்ன செய்தோம் என்று சாட்சி சொல்வார்கள்.

சரி...இந்த பாவ புண்ணியத்தை வேறு யார் கணக்கிற்காவது மாற்றி விடலாமா என்றால், அதுவும் முடியாது. ஒருவர் செய்த பாவம், அவரையே சாப்பிட்டு விடும். புண்ணியம் எல்லாரையும் சாப்பிட விடும். இதனால் தான், நமக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் "என்ன கர்மமோ தெரியலே' என்று தலையில் அடித்துக் கொள்கிறோம்.
இந்த சிரமம் நம்மை அணுகாமல் தடுக்க வேண்டுமானால், தினப்படி கர்மங்களை விடாமல் செய்ய வேண்டும். அதாவது, கோயில் தீர்த்த யாத்திரை செய்தல், "நான்' என்ற அகங்காரத்தை விடுதல்...இன்னும் சிலவற்றின் மூலம் தடுக்கலாம். 

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம் பாவமூட்டையைக் கரைத்தால் மோட்சத்துக்கே போகலாம். கர்மங்களில் மூவகை உண்டு. அவை என்னவென்று பார்ப்போமா!

- இன்னும் ஆனந்திப்போம் 

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக