ஞாயிறு, 15 ஜூன், 2014

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 24

திருமாலின் இடப்புறத்தில் வீற்றிருக்கும் பூமிபிராட்டியாரின் வைபவத்தை இனி கேளுங்கள். வைணவ சம்பிரதாயத்தில் பூமிபிராட்டியின் அவதாரமாகப் போற்றப்படுபவள் ஆண்டாள். அவளின் திருவடித்தாமரையின் பெருமையை சுவாமிதேசிகன் கோதாஸ்துதியில் போற்றிப் பாடுகிறார். பெரியாழ்வாரின் திருமகளாக ஸ்ரீவில்லிபுத்தூரிலே அவதரித்தவள் இவள். அவள் ஏன் இப்படி ஒரு மானிடராக மண்ணில் அவதரிக்க வேண்டும்?

வைகுண்டத்திற்கு "நலம் அந்தமில்லதோர் நாடு' என்று பெயருண்டு. அங்கு பெறும் நன்மைக்கு முடிவே கிடையாது. அப்படிப்பட்ட வைகுண்டத்தை விட்டு பூலோகத்தில் பிராட்டி ஏன் அவதரிக்க வேண்டும்? உயிர்களான நம் மீது கொண்ட கருணையால் தான். விஷ்வக்சேனர், ஆதிசேஷன் போன்ற நித்யசூரிகள் எப்போதும் பெருமாளுக்கும், பிராட்டிக்கும் கைங்கர்யம் செய்தபடி இருப்பர். அந்த வளமான, ஆனந்த வாழ்வை விட்டு லீலாவிபூதியான பூலோகம் வந்தாள். மணவாள மாமுனிகள், நித்யவாழ்வான வைகுண்டத்தை இகழ்ந்து நமக்காக ஆண்டாள் பூமிக்கு வந்ததாக குறிப்பிடுகிறார்.

தாழ்வான ஒன்றை இகழ்வது தானே உலக வழக்கம். ஆனால், பிராட்டியார் ஏன் வளமான வைகுண்டத்தை இகழ்ந்தாள்? 

ஒரு பணக்கார பெண் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தாள். அவளுக்கு தன் பிள்ளை மீது அன்பு அதிகம். குழந்தை உடல்நலமில்லாமல் சிரமப்பட்டது. அதை குணப்படுத்த வைத்தியரின் குடிசை வீட்டில் ஒருமாதம் தங்க வேண்டியிருந்தது. அதற்காக தாய், தன் வசதியான வாழ்வைத் துறந்து விட்டாள். தன் சவுகர்யத்தை விட பிள்ளையின் நலத்தை பெரிதாக மதிக்கும் தாய் போல, பிராட்டியும் உயிர்களின் உஜ்ஜீவனத்திற்காக (உய்வுக்காக) பூலோகம் வந்தாள். 

ஸ்ரீதேவி, நீளாதேவிக்கு இல்லாத ஏற்றம் பூமிதேவிக்கு. திருமால் எடுத்த தசாவதாரத்திற்கும், அவர் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேசங்களுக்கும் ஆதாரமாக இடம் கொடுத்தவளே பூமி பிராட்டி தான். இதுவும் அவளுக்குரிய தனிச்சிறப்பு. திருமகள் ராமனோடு சீதையாக வந்தபோதும், கண்ணனோடு ருக்மணியாக வந்தபோதும் அவளுக்கு இடம் கொடுத்தவளும் இந்த பூமிபிராட்டியே. இவள் மட்டுமே பன்னிரு ஆழ்வார்களில் ஒருத்தியாகும் பாக்கியம் பெற்றவள். மற்ற ஆழ்வார்கள் ஆண்கள் என்பதால், "நாயிகாபாவத்தில்' தன்னை பெண்ணாகவும், திருமாலை நாயகனாகவும் பக்தி செலுத்தி வந்தனர். ஆனால், ஆண்டாள் இயல்பிலேயே பெண் என்பதால், பெருமாளை இன்னும் விசேஷமாக அனுபவிக்கும் பாக்கியம் பெற்றாள். ஆழ்வார்கள் ஒரு அடி பாய்ந்தால், இவள் 16 அடி பாய்ந்தாள் என்றே சொல்லலாம். 

ஸ்ரீதேவியான திருமகள், பெருமாளை விட்டுப் பிரியாமல் அவனுடைய மார்பில் நித்யவாசம் செய்கிறாள். அதனால் அவளுக்கு "நித்ய அனபாயினீம்' என்றும் பெயருண்டு. முக்தி பெற்ற உயிர்களே நித்யசூரிகளாக பெருமாளை விட்டுப் பிரிவதில்லை. ஆனால், ஸ்ரீதேவிக்கு எப்போதும் பெருமாளின் திருமார்பில் எப்போதும் "தங்கி இருக்கணுமே' என்ற கவலை இருந்து கொண்டே இருக்குமாம். ஆனால்,பெருமாள், ஸ்ரீதேவி மட்டுமில்லாமல் அனைவரையும் சேர்த்து தாங்குபவளாக பூமிபிராட்டி விளங்குகிறாள். ஆதரவு படைத்தவளாக ஸ்ரீதேவி இருக்க, பூமிதேவியோ ஆதாரமாக இருக்கிறாள் என்பதும் அவளுக்குரிய சிறப்புகளில் ஒன்று.

ஹிரண்யாட்சன் என்ற அசுரன், பூமிபிராட்டியைக் கடலுக்கடியில் சென்று ஒளித்து வைத்தான். நீரில் நீண்டகாலம் எந்த பொருள் கிடந்தாலும், அதில் பாசி படர்ந்து விடும். பூமியிலும் பாசி படர்ந்து போனது. பாசி பிடித்தால் அழுகின துர்நாற்றம் உண்டாகி விடும். தனக்கே உரிய பொறுமை என்னும் பண்பினால் பிராட்டி இதை தாங்கிக் கொள்கிறாள். "பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்' என்று இதைக் குறிப்பிடுவர். அப்போது பெருமாள் பூமியைக் காப்பாற்றும் நோக்கத்துடன், பன்றி முகத்துடன் வராக அவதாரமாக புறப்பட்டார். அப்போது, அவரின் மேனி முழுவதும் அழுக்கு நீர் சொட்டத் தொடங்கியது. துர்நாற்றம் வரத் தொடங்கியது. வாசனைப் பொருள் எதுவாக இருந்தாலும், அதற்குரிய சுகந்தத்தை அளிப்பவர் பெருமாள் தான். ஒளி வீசும் பொருள் எதுவானாலும், அது ஒளி கொடுப்பதும் அவரே. ஆனால், அவரே இப்படி துர்கந்தமாக அழுக்குமேனியாக ஏன் செல்ல வேண்டும்? அது தான் மனைவி மீது கொண்ட உண்மையான அன்பின் அடையாளம். மனைவி தன்னை அழகுபடுத்திக் கொள்ளும்போது, தானும் அலங்காரம் செய்து கொள்வதும், அவளுக்கு உடல்நலம் இல்லாத சமயத்தில் தானும் எளியவனாக இருப்பதும் நல்ல கணவனுக்குரிய இலக்கணம். இதை தான் நமக்கு இதன் மூலம் உணர்த்துகிறார். 

சத்தியம், நேர்மை, பணிவு இப்படியான நற்பண்புகளின் ஒட்டுமொத்தம் தான் ராமன். ஆனால், கண்ணனோ இந்த குணங்களுக்கு நேர்மாறானவன். கபடம், தந்திரம், பொய், திருட்டு இப்படி தோஷமான குணங்களெல்லாம் கொண்டவன். உலகத்திலும் இப்படி இருவிதமான மனிதர்கள் தான் இருக்கிறார்கள். குணத்தாலே ஜெயித்தவன் ராமன். தோஷத்தாலே ஜெயித்தவன் கண்ணன். அதைப் போல, ஸ்ரீதேவி ஒளியாலே ஏற்றம் படைத்தவள். ஆனால், பூமிபிராட்டியோ அழுக்காலே ஏற்றம் படைத்தவள். 

பெற்ற தாய் குழந்தையாக இருக்கும் போது, நம்மைப் பாலூட்டி சீராட்டி வளர்க்கிறாள். பூமித்தாயோ நாம் வாழும் காலம் வரைக்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறாள். தங்கம், வெள்ளி என விலையுயர்ந்த உலோகங்கள், அரிசி, பருப்பு என தேவையான உணவு வகைகள் எல்லாம் அவளின் கொடையே. 

பூமிபிராட்டிக்கு பிருது என்ற மன்னனின் பெயரால் "பிருத்வி' என்று பெயருண்டு. அவன் செங்கோல் ஆட்சி நடத்திய மன்னன். ஆனால், அவன் காலத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. என்ன செய்வதென ஒன்றும் புரியாமல், தன் வில்லை எடுத்துக் கொண்டு பூமியையே விரட்டத் தொடங்கினான். ஓரிடத்தில் பூமியைக் கொல்லத் தலைப்பட்டான். பூமியில்லாவிட்டால், உயிர்கள் அழிந்து போகும் என்ற உண்மையை அவனுக்கு உணர்த்தினாள் பிராட்டி. தான் ஒரு பசுவாக மாறி நின்றாள். 

அவளுடைய மடியில் அத்தனை செல்வங்களும் பால் போல பொங்கியது. பிருதுவும் ஒரு அதைப் பெற்று மகிழ்ந்தான். பிருதுவுக்கு வாழ்வு தந்ததால் "பிருத்வி' என போற்றப்பட்டாள். கருணை என்று வந்து விட்டால், பூமியும் பெரிய பிராட்டியான ஸ்ரீதேவிக்கு இணையானவள். பொறுமை என்றால் இவளுக்கு நிகர் இவள் மட்டும் தான். வராகபுராணத்தில் பூமிபிராட்டியின் வைபவம் விரிவாகப் பேசப்படுகிறது. சம்சாரக்கடலில் இருந்து நாம் தப்பவேண்டுமானால், பூமிதேவியோடு வீற்றிருக்கும் வராகப்பெருமானின் திருவடியைப் பிடித்துக் கொள்வது ஒன்றே வழி. 


- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக