சனி, 21 ஜூன், 2014

தாள் கண்டார் தயாபரன் ஊர் கண்டார் - எம்.என்.ஶ்ரீனிவாசன்

பன்னிரண்டாழ்வார்களால் பாடல் பெற்ற வைணவத் தலங்கள் நூற்று எட்டாகும். இவற்றை நூற்றெட்டு வைணவத் திருப்பதிகள் என்று வைணவ  பக்தர்கள் கூறுவர். ஆனாலும் இந்த நூற்று எட்டில் பொதுவாக திருப்பதி என்று சொன்னால் அது திருவேங்கடமென்னும் தலத்தையே குறிக்கும்.
திருவேங்கடத்தின் பெருமையைப் பற்றி பத்து ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அவற்றில் குலசேகராழ்வார் பாடல்கள், இத்தலத்தில் பிறப்பதானால் உண்டாகும் பெருமையை விளக்கும் பாடல்களாகும். குலசேகராழ்வார், "மீண்டும் இனி எனக்குப் பிறவி வேண்டாம். அப்படி ஒருவேளை மறுபடி பிறப்பதுதான் விதியெனில், அது மனிதப் பிறவியாக இல்லாவிடினும் திருமலையில் உள்ள கோனேரியில் வாழும் பறவையாகவோ, சுவாமி புஷ்கரணி திருக்குளத்தில் மீனாகவோ, அதன் கரையில் மரமாகவோ பிறக்க வேண்டும். அப்படியோர் பேறு கிடைத்தால் அதை இந்திர பதவியைவிட உயர்ந்ததாகக் கருதுவேன்' என்று பாடியுள்ளார். பெருமாளின் சந்நிதியில் படியாய்க் கிடந்தாவது அவன் பவளவாய் காணவேண்டும் என்பது ஆழ்வாரின் அற்புத ஆசை.

இத்தகு சிறப்புவாய்ந்த திருப்பதி திருமலையில் ராமானுஜரின் குருவான திருமலை நம்பி, கோவில் அரையராக திருப்பணி செய்துவந்தார். அதேசமயத்தில் தமிழ்நாட்டில் திருமாலின் தெற்கு வீடு என்று போற்றப்படும் திருவரங்கத்தில் கோவில் அரையராக ராமானுஜர் சேவைசெய்து வந்தார். இந்நிலையில் ராமானுஜர், தம் சீடர்களுடன் தல யாத்திரை செய்யும்போது திருவேங்கடத்திற்கு வந்து கீழ்த்திருப்பதியில் தங்கியிருந்தார். பல தலங்களுக்கு நடந்தே சென்று வந்திருந்ததால் அனைவருக்கும் கடுமையான பசி உண்டாயிற்று.

அப்போது ராமானுஜரின் சீடரும், திருமலையில் அவர் பெயரில் நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தவருமான அனந்தாழ்வார் நான்கு அடியார்களுடன் ராமானுஜரிடம் வந்தார். தம் குருவான ராமானுஜரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். ராமானுஜரும் தன் சீடனை மார்புறத் தழுவிக்கொண்டார். பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவளித்தார் அனந்தாழ்வார்.

அனைவரும் உண்டு மகிழ்ந்ததும் அனந்தாழ்வார் ராமானுஜரிடம், ""சுவாமி! தங்கள் வருகையை எதிர்பார்த்து திருமலை நம்பி சுவாமிகள் மலைமீது ஆவலுடன் காத்திருக்கிறார். தேவரீர் அங்கே எழுந்தருள வேண்டும்'' என்று கூறினார். அதற்கு ராமானுஜர், ""அனந்தாழ்வானே, இத்திருவேங்கடமலை நித்திய சூரிகளும் தவ சிரேஷ்டர்களும் உலவும் மலை. இம்மலையில் நான் கால் வைத்து நடப்பது அபசாரமாகாதா?'' என்று கேட்டார்.

அதற்கு அனந்தாழ்வார், ""சுவாமி, திருவரங்கத்தில் தங்களுடன் திருப்பணி செய்துகொண்டிருந்த என்னை, இத்திருமலையில் நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்யுமாறு தாங்கள்தானே அனுப்பி வைத்தீர்கள். அடியேன் இம்மலையில் கால் வைத்து ஏறும்போது தாங்கள் வரக்கூடாதா? தங்களைப் போன்றவர்கள் வருவதால்தான் இத்தலத்தின் மகிமையை உணர்ந்து எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள்'' என்று கூறி ராமானுஜரையும் சீடர்களையும் அழைத்தார்.

அதன்படி ராமானுஜர் திருமலையின் வீதியிலே வரும்போது, அவருடைய உறவினரும் குருவுமான திருமலை நம்பி எதிரில் வர, அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

""சுவாமி, அடியேனை வரவேற்கத் தாங்களே வரவேண்டுமா? யாராவது ஒரு சிறியவரை அனுப்பி வைத்தால் போதாதா?'' என்று ராமானுஜர் கேட்டார். அதற்கு நம்பி, ""ராமானுஜா, நானும் அப்படித்தான் நினைத்தேன். வீதியில் வந்து நான்கு திசைகளிலும் பார்த்தேன். அங்கு என்னைவிடச் சிறியவன் யாரும் இல்லை. அனைவரும் என்னைவிட உயர்ந்தவர்களாகவே இருந்தனர். அதனால்தான் நானே வந்தேன்'' என்றார். நம்பியின் சொற்களைக் கேட்ட ராமானுஜர், ""சுவாமி, தேவரீரைவிட உயர்ந்தவர் வேங்கடவன் ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை'' என்று சொல்லி உள்ளம் உருகினார்.

வைணவ சமயத்தின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று பிறர் படும் துயரத்தை தனதெனக் கொள்ளுதல்; அவர்களின் துயரைத் தீர்த்தல்.

திருக்கோட்டியூர் நம்பிகளிடம் கற்றுக்கொண்ட எட்டெழுத்து மந்திரமாகிய நாராயண மந்திரத்தை- தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை; ஊரில் உள்ளவர்கள் எல்லாம் துயர்தீர்ந்து மோட்சமடைய வேண்டுமென்ற கருணையினால், தம் குருநாதருக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி நின்று அனைவருக்கும் உபதேசித்தவர் ராமானுஜர். பிறர் துன்பத்தைப் போக்கி நன்மை செய்வதற்காக தனக்கு எத்தகைய துன்பம் வந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்பவனே உண்மையான வைணவன் என்ற கொள்கையின் சின்னமாக விளங்கியவர் ராமானுஜர்.

வைணவத்தின் மற்றொரு கொள்கை பணிவுடைமை. நிறைகுடம் தளும்பாது என்ற பழமொழிக்கேற்ப, பக்தியின் எல்லை கண்ட பரமபக்தர்கள் தம்மை "நான்' என்று சொல்ல மாட்டார்கள். "அடியேன்' என்றே கூறுவார்கள். மற்றொரு அடியாரைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர் பக்தியிலும் கல்வியிலும் தம்மைவிடக் குறைந்தவராக இருந்தாலும், அவரை "தேவரீர்' என்றே கூறுவார்கள். அக்கொள்கைக்கேற்பவே, ராமானுஜரும் திருமலை நம்பியும் சந்தித்துக்கொண்டது வைணவத்தின் இரு பெருங்கொள்கைகள் சங்கமமானது போன்ற தெய்வீகமான காட்சியாகும். இந்நிகழ்ச்சி திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியத்தில், "யான் சிறியன் என்றேனோ திருமலை நம்பி போலே' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமலை நம்பி, ""ராமானுஜா, நீயும் உன் சீடர்களும் பசியுடன் வந்திருக்கிறீர்கள். கோனேரியில் நீராடி வேங்கடவனை வணங்கிவிட்டு திருவமுது செய்யலாம்'' என்று கூறினார். இதைக் கேட்ட ராமானுஜர், ""சுவாமி, தாங்கள் மறந்துவிட்டீர்களா? தேவரீர் அனந்தாழ்வாரிடம் அறுசுவையான உணவைக் கொடுத்தனுப்பி இருந்தீர்களே? 

அந்த தேவாமிர்தத்தைப் போன்ற திருவமுதை உண்டுவிட்டுத்தானே வருகிறோம்'' என்றார்.

ராமானுஜர் கூறியதைக் கேட்ட திருமலை நம்பி ஆச்சரியத்துடன், ""ராமானுஜா, நான் அனந்தாழ்வானிடம் உணவு கொடுத்தனுப்பவில்லையே'' என்று கூறி அனந்தாழ்வாரை அழைத்தார். அனந்தாழ்வாரோ, ""இப்பொழுதுதானே தங்களைப் பார்க்கிறேன்'' என்றார். 

இதுகேட்டு ராமானுஜர் அதிசயித்தார்.

உடனே திருமலை நம்பி, ""ராமானுஜா, தன் குழந்தை பசியோடிருப்பதை எந்தத் தாயாவது பொறுத்துக்கொள்வாளா? அதுபோல் நீயும் உன் சீடர்களும் பசியோடிருப்பதை அறிந்த திருவேங்கடமுடையான் அனந்தாழ்வார் வடிவத்தில் வந்து உங்கள் அனைவருக்கும் தாமே உணவு பரிமாறியிருக்கிறார். ராமானுஜா, நீ வைணவத்தை வாழ்விக்கப் பிறந்தவன். வைணவத்துக்கு உடையவன்; பக்தர்களுக்கும் உடையவன். உன் பக்தியே பக்தி, உன் பாக்கியமே பாக்கியம்!'' என்று அன்புடன் கூறினார். ராமானுஜரின் மற்றொரு திருநாமம் "உடையவர்' என்பதாகும்.

ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார், திருமலையில் தம் குருநாதர் பெயரில் "ராமானுஜர் நந்தவனம்' என்ற அழகான பூந்தோட்டத்தை அமைத்து ஏழுமலையானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்துகொண்டிருந்தார் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். ஒருநாள் அவர் பூப்பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு சர்ப்பம் அவரைத் தீண்டிவிட்டு ஓடிவிட்டது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் பூப்பறித்துக் கொண்டிருந்தார். அருகிலிருந்த அடியார்கள், ""சுவாமி, உங்களை சர்ப்பம் தீண்டிவிட்டது. சர்ப்பத்தின் விஷம் தலைக்கேறும்முன் வைத்தியம் செய்துவிட்டு பிறகு பூப்பறிக்கலாம்'' என்றனர்.

அதற்கு அனந்தாழ்வார், ""அன்பர்களே! அடியேன் வலிமையுடையவனாக இருந்தால் வழக்கம்போல இந்த சுவாமி புஷ்கரணியில் நீராடி ஏழுமலையானை சேவிக்கப் போகிறேன். சர்ப்பம் வலிமையுடையதாக இருந்தால் வைகுண்டத்தில் உள்ள விரஜா நதியில் நீராடி பரமபதநாதனுக்கு சேவை செய்யப் போகிறேன். அடியார்கள் மரண பயம் அடைவதில்லை'' என்றார். திருமலையான் அவரை தன்வசமே வைத்துக்கொண்டான்.

"வேம்' என்றால் "சுட்டெரிக்கும் தீ' என்பது பொருள்; வேங்கடம் என்பது நம் பாவ வினைகளைச் சுட்டெரித்துப் புனிதர்களாக்கும் தலம்.


வினைகள்  நீங்கி வீடுபேறு அடையவிரும்புவோர் உடையவரையோ, எம்பெருமானாகிய திருமலையப்பனையோ சரணடைந்தால், "தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் தரும் பிரானல்லவோ' அவன்!

நன்றி - ஓம் சரவணபவ 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக