வியாழன், 10 ஜூலை, 2014

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 6 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

குளிர்விக்கும் கண்கள்!

கீதையில் கண்ணன் சொல்கிறான் “அர்ஜுனா இந்த நாலு வர்ணத்தையும் நான்தான் உண்டாக்கினேன்.

சாதுர் வர்ண்யம் மயா சிருஷ்டம்
குணகர்ம விபாதச:
தஸ்ய கர்த்தாரபிமாம் வித்தே
அகர்த்தாமவ்யயம்

நமக்கு வேண்டியவாறு இருக்கும் சுலோகங்களை கீதையிலிருந்து எடுத்துக் கொண்டு, வேண்டாததை சிலபேர் தள்ளப் பார்ப்பார்கள். அவ்வாறெல்லாம் செய்ய இயலாது. அவ்வாறு கீதையில் செய்யவும் முடியாது. வேதத்திலும் செய்ய முடியாது. முதல் மூன்று வரிகளில் ‘நான்தான் நான்கு வர்ணங்களை உண்டாக்கினேன்’ என்று சொன்ன கிருஷ்ணன், நான்காவது வரியிலே ’அகர்த்தாமவ்யயம்’ என்று ஒரேயடியாக ’நான் சிருஷ்டி பண்ணவே இல்லை’ என்று சொல்லிவிட்டான். நாம்தான் முன்னுக்குப் பின் முரண்பட்டுப் பேசுவோம்! இது அப்படியல்லவா இருக்கிறது?

கண்ணன் நேர் விரோதமாய்ப் பேசுகிறானே என்ன அர்த்தம் என்று கேட்டால் ‘நான்கையும் நான் உண்டாக்கினேன் அர்ஜுனா – ஆனால், அதில் உயர்வு தாழ்வை நான் சிருஷ்டி பண்ணவே இல்லை’ என்று சொல்கிறான். இதில் உயர்வு தாழ்வு எதுவும் இருப்பதாக நான் எப்போது சொன்னேன்? நான் எப்போதுமே சொல்லவில்லையே? என் திருமேனியிலிருந்துதான் இத்தனை பேருமே தோன்றியிருக்கிறார்கள்.

ப்ராம்மணோத்ய முகமாதீது
பாஹூராஜன்யக்ருத:
ஊரூததஸ்யத்ய வைஸ்யவ:
பத்யாஹம் சூத்ரோ அஜாயத

விராட் சொரூபனான பகவானிடத்தில் முகத்திலிருந்து பிராமணனும், தோள்களிலிருந்து க்ஷத்ரியனும், தொடைகளிலிருந்து வைஸ்யனும், பாதங்களிலிருந்து சூத்ரனும் தோன்றினான். பிராமணனின் கடமை என்ன? முகத்திலிருக்கும் வாயைக் கொண்டு பேசிப் பேசித் தீர்க்க வேண்டும். அதனால் பிராமணன் முகத்திலிருந்து தோன்றினான். ராஜா தோள் வலியால் எதிரிகளை வென்று நாட்டை ஆள வேண்டும். அதனால் க்ஷத்ரியன் தோள்களிலிருந்து தோன்றினான். தொடையைக் கொண்டு அமர்ந்து வாணிகம் செய்யும் வைஸ்யன் தொடைகளிலிருந்து தோன்றினான். சூத்ரனின் கடமை என்ன? கால்களால் நடந்து நடந்து சென்று, வேலை செய்ய வேண்டும். மற்ற பேருக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும். எனவே அவன் பாதங்களிலிருந்து தோன்றினான்.

இவர்களில் ஒருவன் உயர்ந்தவன் ஒருவன் தாழ்ந்தவன் என்றால் என்ன அர்த்தம்? பகவான் ‘என் திருவடிகள் தாழ்ந்தது. என் முகம்தான் உயர்ந்தது. என் தோள்தான் உயர்ந்தது’ என்று சொல்வதற்கு ஒப்பாகும். கால் இல்லையென்றால் என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியும். கையில்லை என்றால் என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியும். நம் சரீரத்தில் ஒரு மயிர்க்கால்கூடத் தாழ்ந்தது என்று சொல்லவே முடியாது. நம் சரீரத்திலேயே சொல்ல முடியாது என்றால் பகவானின் திருமேனியில் சொல்ல முடியுமோ?



அவன் முகத்துக்கு எந்த அளவு ஏற்றம் உண்டோ அந்த அளவு திருவடிக்கும் உண்டு. இன்னும் கேட்கப் போனால் அவன் திருவடிகளுக்கு இருக்கும் ஏற்றம் மற்ற எதற்குமே கிடையாதே! அதுதான் வைதிக முறை. அவன் திருவடிகளைத் தானே பிடித்துக் கொள்ள வேண்டும்? ஆக, நான்கையும் உண்டாக்கியவன் பகவானே தவிர உயர்வு தாழ்வுகளை உண்டாக்கியவன் அவனன்று. அது மட்டுமில்லை… அவன் நான்கைத்தான் உண்டாக்கினான். ஆனால் இன்றைக்கு ஒவ்வொன்றுக்குள்ளும் நானூறு அல்லவா ஏற்படுத்திவிட்டோம்! இதை எந்த கீதாச்சார்யன் உருவாக்கினான்? எந்தக் கண்ணன் சொல்லிக் கொடுத்தான்?

அவனுக்கு எந்த வேறுபாடும் இல்லை. அதனால்தான் சிறு குழந்தை அழைத்து ஓடி வந்தான். சரி அந்தக் குழந்தை அழைத்தபோது நரமும் சிங்கனும் கலந்து வந்து ரக்ஷித்தானல்லவா? அவனை ஏன் லக்ஷ்மி நரசிம்மன் என்கிறோம்? லக்ஷ்மி எங்கிருந்து அங்கு வந்தாள்?

லக்ஷ்மி திடீரென்று அங்கு முளைத்து வந்துவிடவில்லை. தாயாரைப் பெருமான் பிரிவதே கிடையாது. நாம் ஸ்ரீமன் நாராயணன் என்று சேவிப்பதெல்லாம் லக்ஷ்மி நாராயணனே! ஸ்ரீமன் நாராயணனே…
செல்வ நாராயணனே… லக்ஷ்மி நாராயணனே ஸ்ரீபதியே என்று பிராட்டியை சேர்த்து சேர்த்துத்தான் சேவிக்கிறோம்! பெயரிலேயே பாருங்களேன், லக்ஷ்மி நாராயணன் என்றும் லக்ஷ்மி ஹயக்ரீவன் என்றும் ஸ்ரீயஹ்பதி என்றும் திருமகள் கேள்வன் என்றும் திருமால் என்றும் பிராட்டி பெயரை சேர்த்து சேர்த்துத்தான் சொல்கிறோம். எல்லாவற்றிலும் ஸ்ரீயின் பெயர் முன்னாலேயே வருகிறது. பெருமாளின் பெயர் பின்னால் வருகிறது.

அப்படியானால் பெருமை யாருக்கு? லக்ஷ்மிக்குத்தான். அவளுக்காகத்தான் அனைத்து நன்மைகளையும் பெருமாள் செய்கிறார். குழந்தைகளை பகவான் ரக்ஷிப்பதே பிராட்டி சிபாரிசு செய்கிறாள் என்பதற்காகத்தான். லக்ஷ்மிதேவியை எப்போதும் விட்டுப்பிரியாத எம்பெருமான், திருமார்பிலேயே அவளை வைத்திருக்கும் எம்பெருமான் தன் மடியிலே வைத்துக் கொண்டு சேவை சாதிக்கிறான்.

அஹோபிலக்ஷேத்திரத்துக்கு கருட சைலம் என்கிற பெயர் உண்டு. அங்கு தனக்கென்று ஒரு சன்னிதானத்தைப் பெருமாள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ‘லக்ஷ்ம்யா சமாலிங்கித வாம பாகம்’- லக்ஷ்மியாலே அணைக்கப்பட்ட இடது திருப்பக்கத்தை உடையவன். இடது திருமடியிலே அவளை வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் தன்னுடைய இடது கையினாலே பிராட்டியின் திரு இடையை அணைத்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட லக்ஷ்மி நரசிம்மரை வணங்குகிறேன்.

லக்ஷ்மிதேவி எப்போதும் பெருமானை விட்டுப் பிரியாமல் இருக்கிறாள். அவளைத் தன் மடியில் வைத்து அணைத்துக் கொண்டிருக்கும் சேவையை அஹோபிலத்தில் சேவிக்கிறோம். இதுபோல் பலப்பல க்ஷேத்திரங்களில் சேவிக்கிறோம். ஆனால் இப்போது நாம் பார்க்க விருக்கிற பெருமான், மைசூர்ப்பட்டணத்தில் எழுந்தருளி உள்ள யதுகிரி யதிராஜ ஜீயர் மடத்தைச் சார்ந்த லக்ஷ்மி நரசிம்மருடைய சன்னிதி.

ஆச்சர்யமாய் எழுந்தருளியிருக்கிறார். வாயைப் பிளந்துகொண்டு ஒரு பிலத்து வாரத்தைப் போலே; குகைத் துவாரத்தைப்போலே திறந்திருக்கிற வாய். அதில் நெருப்பைப் போலே, கங்கைப் போலே, வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் நாக்கு. சிரித்துக் கொண்டிருக்கற திரு உதடுகள். சிரிப்பு ஒரு பக்கத்தில் உள்ளது. கோபம் ஒரு பக்கத்தில் உள்ளது. அருள் ஒரு பக்கத்தில் உள்ளது. பெரிய திருக் கோலத்தில் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். ஆச்சர்யமான கவசம் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்.

சௌம்யமான திவ்யமான திருமுக மண்டலத்தோடே பிராட்டி சேவை சாதிக்கிறார். பிராட்டியின் இரண்டு திருவடிகளும் நன்றாக சேவையாகிறது. எனில், அவர் என்ன சொல்கிறார் என்று அர்த்தம்? என்னுடைய திருவடிகளைப் பற்ற வேண்டுமென்றால் அதற்கு முன்பாக இதோ இந்த இரண்டு திருவடிகளைப் பற்று. அதைப் பற்றினால் அவள் சிபாரிசு பண்ணுவாள். அப்போதுதான் என்னுடைய திருவடிகளை உன்னால் பற்ற முடியும். பெருமாளோ கோபக்காரராக இருக்கிறார். கோபக்காரரின் முன்னால் போய் நின்றால், நம்முடைய பாபங்கள் அவர் கண்ணில் பட்டுவிடும். அவருடைய கண் சுமாராய்த் தெரிந்தால் பரவாயில்லை. அதுவோ மிகவும் தீக்ஷண்யமாய்த் தெரிகிறது அவருக்கு இருக்கும் ஞானத்துக்கு ஒரு பாவத்தைக்கூட அவர் விட்டே வைக்கப்போவதில்லை. அப்படியானால் என்னதான் வழி? இந்தப் பாவங்களை மறைப்பதற்கு ஒருத்தி வேண்டுமே!

தண்ணீர் கொதிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை ஆற்றினால்தான் குளிக்க முடியும். அதை ஆற்றுவதற்குக் குளிர்ந்த நீர் வேண்டுமல்லவா? கோபம் என்ற கொதிநீரை ஆற்றுவதற்குத்தான் லக்ஷ்மி. அவளுடைய திருக்கண்களை சேவித்தோமென்றாலே, அவ்வளவு அருள் பொழிகிறாள். கோபக் கனல் பொறிக்க உள்ளன நரசிங்கப் பெருமானின் திருக் கண்கள். அப்படியே சேவித்தால் நாம் தாங்கமாட்டோம். லக்ஷ்மியுடன் சேவித்தால் கோபம் என்ற கொதிநீரை ஆற்றி விடுவாள். அதுவே அருட்பார்வையாக மாறிவிடுகிறது.

(வைபவம் வளரும்)

நன்றி - தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக