ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 9 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஹிரண்யன் கேட்ட வரம்!

ஆக நரசிம்மருக்கு என்ன பெயர்? பிரஹ்லாத வரதன். பிரஹ்லாதன் என்னும் குழந்தைக்கு வரத்தைக் கொடுத்து வரதனாக இருந்தான். ஹ்லாத (ஆஹ்லாத) என்றால் மகிழ்ச்சி; இன்பம்; ஆனந்தம்; குளிர்ச்சி என்று அர்த்தம். பிரஹ்லாத என்றால் அபாரமான இன்பத்தைக் கொடுப்பவன். நிரம்ப ஆனந்தத்தைக் கொடுப்பவன் என்று ஆகிறது. அவனுடைய சரித்திரத்தைக் கேட்பவர்களுக்கெல்லாம் துக்க சாந்தியை ஏற்படுத்துபவன்.

சந்திரனை (நிலாவை)ப் பற்றி சொல்லும்போது, ஆஹ்லாதகரம் என்பார்கள். அப்படியென்றால் குளிர்ச்சி ஏற்படுத்துபவன், இன்பத்தைக் கொடுப்பவன் என்று அர்த்தம். பிரஹ்லாத என்றால், நிறைய ஆனந்தத்தை வாரிக் கொடுப்பவன் என்பது அர்த்தம். அந்த இன்பமாகிய வரத்தை நமக்கு வாரி வழங்குகிறபடியால் பிரஹ்லாதனும் வரதன்தான். அவன் ஆஹ்லாதத்தைக் கொடுக்கிறபடியால் அவன் பிரஹ்லாத வரதன். இப்படி ஒரு அர்த்தம். 

பகவான் நமக்கு வரம் அளிப்பதற்கு உதவியவன் பிரஹ்லாதன். இப்படி ஒரு அர்த்தம். நரசிம்மப் பெருமான், பிரஹ்லாதனுக்கு வரம் கொடுத்ததால் பிரஹ்லாத வரதன். ஆக, இப்படி இரண்டு விதமாகவும் பார்க்கலாம்.

நரசிம்மப்பெருமான் எதற்காகத் தோன்றினான்? இந்த சரித்திரம் எல்லோரும் அறிந்ததுதான். கஸ்யபருக்கு மகனாகப் பிறந்தான் ஹிரண்யகசிபு. மிகுந்த வரம் பெற்றவன்.

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினா
இரத்தி நீ இது என்ன பொ இரந்த மண் வயிற்றுளே
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர்? கண்ணனே

ஹிரண்யகசிபு அசுர குலத்தில் பிறந்தவன். வரத்தின் மீது மிகுந்த சிரத்தை வைத்துவிட்டானாம். இந்த வரத்தினால் சுப்ரீதனாக, சுப்பிரசன்னனாக பிரம்மா வந்து நின்றுவிட்டாராம். அவர் ஆனந்தப்பட்டுவிட்டால், எதையும் எடுத்துக் கொடுத்துவிடுவாராம்.

இன்றைக்கு இருக்கும் உலக வழக்கில், ‘மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போது யாருக்கும் எதுவும் கொடுக்கிறேன் என்று ஒத்துக்கொள்ளாதே’ என்பார்கள். ‘ரொம்பவும் துக்கமாக இருக்கும்போது, எந்த முடிவையும் எடுக்காதே’ என்றும் சொல்வார்கள். இந்த இரண்டும் தப்பாகிவிடுமாம்.



நம்மை யாராவது புகழ்ந்துகொண்டே இருப்பார்கள். அப்போது எதைக் கேட்டாலும் கொடுக்கலாம் என்ற இறுமாப்பு நமக்குள் எழும். ஒத்துக்கொண்டுவிடுவோம். பிறகுதான் தெரியும்; அதில் உள்ள அத்தனைக் கஷ்டங்களும். எல்லாம் விபரீதமாக முடியும். சரியாக முடிவெடுக்க துக்கம் அனுமதிக்காது.

பிரம்மாவிடம் உள்ள பெரிய கஷ்டம் இதுதான். யாராவது வந்து நன்றாக ஸ்தோத்திரம் பண்ணிவிட்டார்களென்றால், அவர்கள் கேட்டதை ஒத்துக் கொண்டு கொடுத்து விடுவார். ஹிரண்யகசிபு கேட்க ஆரம்பித்துவிட்டான். ‘எதெதனால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது’ என்று கேட்க ஆரம்பித்தான்.

‘வாசலில் மரணம் கூடாது. உள்ளுக்குள் மரணம் கூடாது. ஆகாசத்தில் மரணம் கூடாது. பூமியில் மரணம் கூடாது. பிராணன் இருப்பவற்றால் மரணம் கூடாது. பிராணன் இல்லாதவற்றால் மரணம் கூடாது. இப்படி எதெல்லாம் சாத்தியமோ, அதையெல்லாம் சொல்லிக் கேட்டானாம். பிரம்மாவோ, ‘கொடுத்தேன் கொடுத்தேன்’ என்று சொல்லிக் கொண்டே வந்தார். இப்படிக் கேட்டுக் கொண்டே வந்தபோது, பிரம்மா பயந்து விட்டாராம். இப்படி எல்லாவற்றையும் கேட்டால், இவனுக்கு முடிவு என்பதே கிடையாதா? என்று நினைத்தபோது, கடைசியாக அந்த வாக்கியத்தை சொன்னானாம். 

உங்களால் படைக்கப்பட்ட எதனாலும் எனக்கு மரணம் கூடாது” என்று கேட்டானாம். இந்தக் கடைசி வார்த்தையைக் கேட்டபிறகுதான், மூச்சு விட்டார் பிரம்மா. ‘நல்லவேளையாக நமக்கு ஒரே ஒரு இடைவெளி கொடுத்திருக்கிறான் ஹிரண்யகசிபு’ என்று நினைத்தாராம். ‘என்னால் படைக்கப்பட்டவற்றினால்தானே கொல்லக் கூடாது என்று கேட்டான். அப்படியானால், என்னைப் படைத்தவர் கொல்லலாம் அல்லவா!’ என்று நிம்மதி ஏற்பட்டதாம் பிரம்மாவுக்கு. பிரம்மாவைப் படைத்தவர் யார்? நாராயணன் அல்லவா? நான் முகனை நாராயணன் தனது உந்தித் தாமரையில் படைத்தான். நாராயணனுடைய நாபிக்கமலத்தில்தானே பிரம்மா முதல் முதலில் தோன்றினார்? நாபியில் கமலம் இருப்பதால், அவர் பெயர் பற்பநாபன் - பத்ம நாபன்.

இப்போது பிரமன் ஆசுவாசப்படுத்திக் கொண்டுவிட்டான். ‘நம்மைப் படைத்தவர் இருக்கவே இருக்கிறார். இந்தக் கஷ்டத்தையெல்லாம் கொண்டுபோய் அவரிடத்தில் சொல்லிவிடுவோம்’ என்று நினைத்தார். அதற்குத் தகுந்தாற்போல் பார்த்து, அவர் பிறப்பு எடுப்பார் என்ற நம்பிக்கை அவருக்கு.

அபாரமான வரத்தைப் பெற்ற ஹிரண்யகசிபு, பிராம்மணர்களையும், பசுக்களையும், நல்லோர்களையும் துன்புறுத்த ஆரம்பித்தான். விஷ்ணு புராணத்திலும், பாகவதத்திலும், இதைப்பற்றி மிகவும் அழகான சில நுட்பங்களையெல்லாம் உணர்த்தியிருக்கிறார்கள். அவற்றையும் சேர்த்து இந்தக் கதையில் நாம் பார்ப்போம்.

(வைபவம் வளரும்)

நன்றி - தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக