சனி, 9 நவம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 67

மூன்றாவது ஸ்கந்தம் – இருபத்திரண்டாவது அத்தியாயம்


(மனு கர்த்தமருக்குத் தன் புதல்வியைக் கொடுத்து விவாஹஞ் செய்வித்துத் தான் திரும்பிப்போதல்)

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- மனுசக்ரவர்த்தியானவன், இங்ஙனம் தன் குணங்களின் பெருமையையும் செயல்களின் மேன்மையையும் அம்மஹிர்ஷி விரித்து மொழியக்கேட்டு வெட்கித்தவன் போன்று, உருத்தி தர்ம நிஷ்ட்டராகிய அம்மஹிர்ஷியைக் குறித்து இங்ஙனம் மொழிந்தான்.

மனு சொல்லுகிறான்:- வேதஸ்வரூபனாகிய ப்ரஹ்மதேவன், தவம் வித்யை (ஞானயோகம்) ஆகியவை நிறைந்தவரும் சப்தாதி விஷயங்களில் மனப்பற்றில்லாதவரும் அந்தணர்களில் சிறந்தவருமாகிய உம்மைத் தன்னுடைய ரக்ஷணத்தின் பொருட்டுத்தன் முகத்தினின்று ஸ்ருஷ்டித்தான். ப்ரஹ்மா வேதஸ்வரூபனாகிய தன்னைத்தான் பாதுகாத்துக் கொள்கையாவது வேதங்களைச் சிதறாமல் விளங்கச் செய்கையேயாம். அதற்காகவே ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்களாகிய உங்களைப் படைத்து உங்கள் மூலமாய் அவ்வேதங்களை முழுவதும் பரப்பச் செய்து அவற்றைப் பாதுகாத்து வருகின்றான். இச்செயலும் பாஹ்மதேவனுக்கு அந்தர்யாமியான பரமபுருஷனுடையதே. ஆயிரம் பாதங்களையுடைய (நினைத்த இடங்களெல்லாவற்றிலும் கைகால்களால் நடக்கவேண்டிய கார்யங்களையெல்லாம் நிறைவேற்ற வல்லனாகிய) பகவான், அந்த ப்ராஹ்மணர்களைப் பாதுகாக்கும் பொருட்டுத் தன் புஜ ஸஹஸ்ரத்தினின்று க்ஷத்ரியனை ஸ்ருஷ்டித்தான். வாரீர் அந்தணர் தலைவரே! அந்த பகவானுக்கு ப்ராஹ்மண குலத்தை ஹ்ருதயமாகவும், க்ஷத்ரிய குலத்தை அங்கமாகவும் சொல்லுகிறார்கள். இங்கனம் வேதங்களைப் பாதுகாக்கும் பொருட்டு ப்ராஹ்மணர்களையும் அந்த ப்ராஹ்மணர்களைப் பாதுகாக்கும் பொருட்டு க்ஷத்ரியர்களையும் ஸ்ருஷ்டித்தானாகையால் ப்ராஹ்மணர்களும் க்ஷத்ரியர்களும் ஒருவருக்கொருவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுகின்றார்கள். கார்யகாரண ஸ்வரூபனும் கார்யங்களைச் சேர்ந்த விகாரங்களால் தீண்டப்பெறாதவனும் சேதனாசேதனங்களைச் சரீரமாகவுடையவனும் சரீரத்தைச் சேர்ந்த விகாரங்களால் தீண்டப் பெறாதவனுமாகிய தேவன் அந்த ப்ராஹ்மண க்ஷத்ரியர்கள் இருவரையும் தான் பாதுகாக்கின்றான். தம்மைக்கண்ட மாத்ரத்தினால் என்னுடைய ஸம்சயங்களெல்லாம் தீர்ந்தன. வாரீர் மஹானுபாவரே! கர்த்தம ப்ரஜாபதீ! ஏனென்னில், ப்ரஜைகளைப் பாதுகாக்க விரும்புகின்ற எனக்கு நீர் தானாகவே தர்மத்தைக் கூறுகின்றீரல்லவா. நான் பணிந்து வினவித் தெரிந்துகொள்ள வேண்டிய தர்மத்தை என்மீது அருள் புரிந்து நீரே எனக்கு உபதேசிக்கிறீராகையால், என்னுடைய ஸம்சயங்களெல்லாம் தீருமென்பதில் ஸந்தேஹமென்? மஹானுபாவராகிய நீர் புண்ணியம் செய்யாத மற்றவர்க்குப் புலப்படுமவரல்லீர். அப்படிப்பட்ட நீர் என்னுடைய பாக்யத்தினால் எனக்குப் புலப்பட்டீர். மங்களத்தை விளைப்பதாகிய உமது பாததூளியை நான் என் சிரஸ்ஸினால் தரிக்கப் பெற்றேன். இதைக் காட்டிலும் மேலான மற்றொரு பாக்யம் உண்டோ? நீர் எனது பாக்யத்தினால் எனக்கு தர்மோபதேசம் செய்து என்னைச் சிக்ஷித்தீர். என் விஷயத்தில் நீர் மேலான அனுக்ரஹம் செய்தீர். அஹங்காராதிகளால் மறைக்கப்பெறாத காதுகளின் ரந்தரங்களால் உமது அழகான வார்த்தைகளைக் கேட்கப்பெற்றேன். இது என்பாக்யமே. பெண்ணிடத்தில் மிகுதியும் ஸ்னேஹம் உண்டாகப்பெற்று “இவளுக்குத் தகுந்த வரனைத் தேடிப்பிடித்து நாம் எப்பொழுது மனக்கவலை தீரப்பெறுவோம்” என்று மன வருத்தமுற்று முகம் வாடி நிற்கிற நான் விண்ணப்பம் செய்வதை என்மேல் அருள்புரிந்து கேட்பீராக. இவள் தேவஹூதி என்னும் பேருடையவள்; ப்ரியவ்ரதன் உத்தானபாதன் இவர்களுக்கு உடன் பிறந்தவள்; என்னுடைய புதல்வி. இவள் வயது சீலம் குணம் இவை முதலியவற்றோடு கூடின பர்த்தாவைத் தேடிக் கொண்டு வருகின்றாள். இவள் உமது நன்னடத்தை சாஸ்த்ரஜ்ஞானம் ஸௌந்தர்யம் வயது குணம் இவைகளை ஒருக்கால் நாரதமுனிவர் சொல்லக்கேட்டாள். அதுமுதல் உமக்கே பார்யையாக வேண்டுமென்று நிச்சயம் கொண்டிருக்கிறாள். வாரீர் ப்ராஹ்மணர் ஸ்ரேஷ்டரே! இவளை ஸ்ரத்தையுடன் உமக்கு ஸமர்ப்பிக்கும் பொருட்டே நான் இவ்விடம் வந்தேன். ஆகையால் நீர் இக்கன்னிகையை அங்கீகரிப்பீராக. இவள் க்ருஹஸ்தாச்ரமத்திற்குரிய கர்மங்களில் உமக்கு அனுகூலையாயிருப்பாள். தெய்வாதீனமாய்த் தானே ஸமீபித்து வந்திருக்கிற ஆசைக்கிடமான வஸ்துவை, தான் எதிலும் மனப் பற்றில்லாதவனாயினும் வேண்டாமென்று தடுப்பது யுக்தமன்று. சப்தாதி விஷயங்களில் மனப்பற்றுடையவன் அங்ஙனம் தான் வேண்டாமலே நேரிட்ட ஓர் வஸ்துவைத் தனக்கு வேண்டாமென்று தடுப்பது யுக்தமன்றென்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? “அங்ஙனம் தடுத்தால் என்ன கெடுதி?” என்கிறீரோ; சொல்லுகிறேன், கேளும். எவன் தானாக நேரிட்ட காமத்தை அனாதரித்து அப்பால் தைன்யத்துடன் வேண்டுகிறானோ, அவனுடைய புகழ் அளவற்றதாயினும் சீக்ரத்தில் அழிந்து போய்விடும். தன்னிடம் தேடிக்கொண்டு வந்தவனைத் தான் அவமதித்தமையால் அவனுடைய மேன்மையும் பாழாய்விடும். “நீ சொல்லுவதெல்லாம் வாஸ்தவமே. இதெல்லாம் மணம்புரிய வேண்டுமென்னும் விருப்பமுடையவனுக்கன்றோ? நான் அத்தகையனல்லனே” என்கிறீரோ; சொல்லுகிறேன் கேளும். வாரீர் அறிஞரே! நீர் மணம் புரிவதற்காக முயற்சி செய்கிறீரென்று நான் கேள்விப்பட்டேன். ஆகையால் நீர் சில நாள் வரையில் ப்ரஹ்மசர்யத்திலிருந்து மணம் புரிகிறவரென்றும் நைஷ்டிகரன் என்றும் தெரிந்தது. ஆனதுபற்றியே நான் என் புதல்வியை உமக்குக் கொடுத்து விவாஹம் செய்யும் பொருட்டு உம்மைத் தேடிக்கொண்டு இவ்விடம் வந்தேன். ஆதலால் நீர் என்னால் கொடுக்கப்பெற்ற இந்தக் கன்னிகையை அங்கீகரிப்பீராக.

ரிஷி சொல்லுகிறார்:- மன்னவர் தலைவனே! நீ மொழிந்தது வாஸ்தவமே. நான் விவாஹம் செய்துகொள்ள வேண்டுமென்னும் விருப்பமுடையவனே. உன் புதல்வியும் இதுவரையில் ஒருவனுக்கும் பார்யையாக ஏற்பட்டவளல்லள். நீ இவளை இதுவரையில் ஒருவனுக்கும் கொடுப்பதாக ப்ரதிக்ஞை செய்யவில்லை. ஆகையால் எங்களிருவர்க்கும் முதன்மையான விவாஹம் நடக்குமாக. விவாஹங்களில் ப்ராஹ்மவிவாஹமே முதன்மையானது. இதுவே எங்களிருவர்க்கும் பொருந்தினது. அந்த ப்ராஹ்மவிதானத்தின்படி எங்களுக்கு விவாஹம் நடக்குமாக. வாராய் நரதேவனே! வேதசாஸ்த்ரத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட விதியின்படி இந்த உன்புதல்வி ஆசைப்படுகிற விவாஹம் நடக்குமாக. நான் உன்னுடைய வேண்டுகோளுக்காகவே இவளை மணம் புரிகின்றேனல்லேன். இவளுடைய வயது ஸௌந்தர்யம் நடத்தை முதலியவற்றைக் கேள்விப்பட்டு நான் இவளையே மணம்புரிய வேண்டுமென்று மனத்தில் நிச்சயித்திருக்கின்றேன். பகவானும் இவளை மணம்புரியும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். ஆகையால் நான் இவளை அங்கீகரிக்கின்றேன்: மன்னவனே! ஸமஸ்த பூமண்டலத்திற்கும் நாதனாகிய உன்புதல்வியை எவன் விரும்பமாட்டான். இவள் ஆபரணங்கள் ஒன்றுமில்லாமல் கேவலம் தன்னுடைய தேஹஸௌந்தர்யத்தினாலேயே ஆபரணங்கள் பலவும் அணிந்து விளங்குகின்ற ஸ்ரீமஹாலக்ஷ்மியையும் திரஸ்கரிக்கின்றாள். இவள் ஆபரணங்களை அணிவது அவற்றின் சோபைக்காகவேயன்றித் தன் சோபைக்காகவன்று. ஆகையால் இவள் ஆபரணங்களுக்கும் ஆபரணம் போன்ற அழகான அங்கங்களுடையவள். அன்றியும், இந்த உன்புதல்வி ஒருக்கால் மித்தையின்மேல் அழகாக ஒலிக்கின்ற சிலம்புத் தண்டைகளை அணிந்து சப்திக்கின்ற பாதங்களால் திகழ்வுற்றுப் பந்தடித்துக்கொண்டு அந்தப் பந்தின் மேல்சென்ற சஞ்சலமான கண்களுடையவளாகி விளையாடிக் கொண்டிருக்கையில், விச்வாவஸுவென்ற கந்தர்வன் இவளைக் கண்டு இவளுடைய ஸௌந்தர்யத்தினால் மதிமயங்கி மனம் கலங்கப்பெற்றுத் தன்னுடைய விமானத்தினின்று மெய்ம்மறந்து விழுந்தானல்லவா. அப்படிப்பட்ட அழகியளும் மடந்தையர்களில் சிறந்தவளுமாகிய உன் புதல்வி ஒருவனை விரும்புவாளாயின், அவன் அவளை எங்ஙனம் அனுமதிக்கமாட்டான்? இவள் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பாதாரவிந்தங்களில் பணிவிடைசெய்யாத பாக்யஹீனர்களுக்குப் புலப்படவுமாட்டாள்; உனது புதல்வி; மனுசக்ரவர்த்தியென்று புகழ்பெற்ற மஹானுபாவனாகிய உத்தானபாதனுக்கு உடன்பிறந்தவள். இப்படிப்பட்ட இப்பெண்மணி தானே தேடிக்கொண்டு வந்திருக்கையில், அறிவுடையவன் எவன்தான் அங்கீகரிக்கமாட்டான்? ஆகையால் என்னுடைய வீர்யத்தை இவள் எதுவரையில் தரிப்பாளோ (எதுவரையில் பிள்ளைகளைப் பெறுவாளோ) அது வரையில் நான் இவளை அங்கீகரிக்கின்றேன். அதன் பிறகு பரமஹம்ஸாச்ரமத்திற்கு முக்யமாக ஏற்பட்டவைகளும் பரிசுத்த ஸ்வபாவனாகிய பகவானால் கூறப்பட்டவைகளும் ஸத்வகுணத்திற்கு இணங்கினவைகளும் ஸாத்விகர்களால் ஆதரிக்கப் பெற்றவைகளுமாகிய (விவேகமாவது எவ்வகையிலும் அசுசியில்லாத அன்னத்தினால் விளையும் சரீரசுத்தி. விமோகமாவது காமஸுகங்களில் மனம் தாழப் பெறாதிருக்கை, இவை முதலியவையென்கையால் அப்யாஸம் க்ரியை கல்யாணம் அனவஸாதம் அனுத்தர்ஷம் இவைகளை நினைக்கிறது. அப்யாஸமாவது சுபாலிரயமான பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை அடிக்கடி த்யானிச்கை, க்ரியையாவது சக்திக்குப் பொருந்தினபடி நித்ய நைமித்திக கர்மங்களை அனுஷ்டித்தல். கல்யாணமாவது ஸத்யம், கபடமில்லாமை, தயை, தானம், த்ரேஹசிந்தையில்லாமை என்னுமிவை. அனவஸாதமாவது எவ்வகை வருத்தங்களாலும் மனங்கலங்கப் பெறாமை. அனுத்தர்ஷமாவது-அதி ஸந்தோஷமில்லாமை) விவேக விமோகாதி தர்மங்களை ப்ரேமத்துடன் அனுஷ்டிப்பேன், பிள்ளைகள் பிறந்தபின்பு நான் நிவ்ருத்தி தர்மத்தில் நிலைநின்றவனாகி இவளைத் துறப்பேன். இம்மார்க்கம் என்னால் ஏற்படுத்தப்பட்டதன்று; ஈஸ்வரனால் ஏற்படுத்தப்பட்டதே. தேவ, திர்யக், மனுஷ்ய, ஸ்தாவர பேதத்தினாலும் அவ்வவற்றிலுள்ள அவாந்தர பேதத்தினாலும் பலவாறு பிரிந்திருக்கிற இந்த ஜகத்தெல்லாம் எவனிடத்தினின்று உண்டாயிற்றோ, எவனிடத்தில் ப்ரளயம் அடையப் போகின்றதோ, எவனிடத்தில் நிலைபெற்றிருக்கின்றதோ, அப்படிப்பட்டவனும் ப்ரஜாபதிகளான ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரபுவுமாகிய பரமபுருஷனே நான் சொன்ன தர்மமார்க்கத்திற்கு ப்ரமாணம். இது அந்த ஈஸ்வரனால் ஏற்படுத்தப்பட்டதேயன்றி, நான் புதிதாக ஏற்படுத்திச் சொல்லுகிறேனல்லேன்.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- வாராய் வீரனாகிய விதுரனே! அந்தக் கர்த்தம மஹரிஷி இவ்வளவே மொழிந்து நின்றார். அப்பால் பத்மநாபனாகிய பகவானை மனத்தினால் சிந்தித்துக் கொண்டு வெறுமனே இருந்தார். அம்முனிவர் புன்னகையால் விளங்குகின்ற தன் முகசோபையால் தேவஹூதியின் புத்தியை மயங்கச்செய்தார். அப்பால் அந்த மனுசக்ரவர்த்தி தன் பார்யையுடைய அபிப்ராயத்தையும் தன் புதல்வியுடைய மனக்கருத்தையும் ஸ்பஷ்டமாகத் தெரிந்துகொண்டு மனக்களிப்புற்றவனாகி குணங்களெல்லாம் நிறைந்தவரான அம்மஹர்ஷிக்கு வயது சீலம் முதலியவற்றால் அனுரூபையான தன் புதல்வியைக் கொடுத்தான். மஹாராஜனான மனுவின் பத்னி சதரூபையானவள் மகளுக்கும் மணவாளனுக்கும் பூஷணங்கள் வஸ்த்ரங்கள் விளையாட்டிற்கு வேண்டிய கருவிகள் இவை முதலிய விலையுயர்ந்த பலவகைப் பரிசுகளையும் ப்ரீதியுடன் கொடுத்தாள். ஸார்வபௌமனாகிய அம்மனு தன் புதல்வியை நடத்தை முதலியவற்றால் தகுந்திருக்கிற வரனுக்குக் கொடுத்து மனக்கவலை தீரப்பெற்றவனாகிப் புதல்வியை புஜங்களால் வாரி அணைத்து அவளிடத்தில் மிகுதியும் ப்ரீதியுடையவனாகையால் இவளை எங்ஙனம் விட்டுப்பிரிந்து போவேனென்று மனங்கலங்கப் பெற்றான். ஆகையால் அவன் தனது புதல்வியின் பிரிவைப்பொறுக்க முடியாமல் நிரம்பவும் கண்ணீர்களைப் பொருக்கிக்கொண்டு “அம்மே! குழந்தாய்!” என்று அழைத்துப் பெண்ணின் முடியைக் கண்ணீர்களால் நனைத்து விட்டான். அம்மன்னவன் முனிவரிடத்தில் விடைபெற்றுக் கொண்டு பார்யையுடன் ரதத்தில் ஏறிக்கொண்டு பரிவாரங்களோடு தன் பட்டணத்திற்குப் புறப்பட்டுப் போனான். ரிஷிக்கூட்டங்கள் வாஸம் செய்வதற்குரியதாகிய ஸரஸ்வதி நதியின் அழகியதான இரண்டு கரைகளிலும் சமதமாதி குணங்கள் நிறைந்த மஹர்ஷிகளின் ஆஸ்ரமங்களில் அவர்கள் பகவத் ஆராதனத்திற்காக ஸித்தப்படுத்தி வைத்திருக்கிற துளஸி, புஷ்பம், பழம் முதலியவற்றின் ஸம்ருத்திகளைப் பார்த்துக்கொண்டு அம்மன்னவன் மனக்களிப்புடன் சென்றான். அப்பொழுது ப்ரஜைகளெல்லோரும் தமது ப்ரபுவாகிய மனுசக்ரவர்த்தி அங்ஙனம் வருவதை அறிந்து ஸந்தோஷமுற்று ப்ரஹ்மாவர்த்த தேசத்தினின்று பாட்டு ஸ்தோத்ரம் வாத்யம் ஆகிய இவற்றுடன் அம்மனுவை எதிர்கொண்டார்கள். அம்மன்னவினுடைய பட்டணம் பர்ஹிஷ்மதி என்னும் பேர் பூண்டு எங்கும் புகழ்பெற்றது; அந்நகரம் ஸமஸ்த ஸம்பத்துக்களும் நிறைந்திருக்கும். யஜ்ஞ ஸ்வரூபியாகிய ஆதிவராஹ பகவான் தன் சரீரத்தை உதறும்பொழுது அச்சரீரத்திலுள்ள ரோமங்கள் எவ்விடத்தில் உதிர்ந்தனவோ, அவ்விடத்தில் இந்த பர்ஹிஷ்மதி என்னும் பட்டணம் ஏற்பட்டது. அங்ஙனம் உதிர்ந்த ரோமங்களே பச்சைநிறமுடைய தர்ப்பங்களாகவும் நாணல்களாகவும் விளைந்தன. அந்த தர்ப்பங்களாலும் நாணல்களாலும் யஜ்ஞவிரோதிகளான ராக்ஷஸர்களைப் பரிபவித்து ரிஷிகள் யஜ்ஞங்களால் பகவானை ஆராதித்தார்கள். அவை பகவத் ஆராதனத்திற்கு உபயோகப்படுகின்றன. மஹானுபாவனாகிய மனுசக்ரவர்த்தி இந்த பகவானிடத்தினின்று பூமியின் நிலைமையைப் பெற்றானாகையால் (பாதாளத்தில் மூழ்கிக்கிடந்த பூமியை இந்த ஆதிவராஹன் மேலுக்கெடுத்து அதைத் தன் சக்தியால் ஜலத்தின்மேல் நிலைநிற்கச் செய்தானாகையால்) அந்த உபகாரத்தை நினைத்து பர்ஹிஸ்ஸென்று கூறப்படுகிற தர்ப்பங்களையும் நாணல்களையும் பரப்பி அந்த யஜ்ஞபுருஷனை யாகங்களால் ஆராதித்தான். அந்நகரம் பர்ஹிஷ்மதியென்று பேர்பெற்றது. ஸமர்த்தனாகிய அம்மனுசக்ரவர்த்தி எந்த பர்ஹிஷ்மதியென்னும் பட்டணத்தில் ப்ரவேசித்து முன்பு தான் வஸித்திருந்தானோ, அந்தப் பட்டணத்தில் ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதெய்விகங்களென்று மூன்று வகைப்பட்ட ஸம்ஸார தாபங்களுக்குச் சிறிதும் இடமாகாதிருக்கின்ற தன் க்ருஹத்தில் பார்யையோடும் புதல்வர்களோடும் ப்ரவேசித்து வர்ணாஸ்ரமங்களுக்கு உரியபடி ஏற்பட்ட பகவத் ஆராதன ரூபமான தர்மத்திற்கு எவ்விதத்திலும் விரோதம் நேராதபடி காமஸுகங்களை அனுபவித்துக் கொண்டு வந்தான். விடியற்காலங்களில் தத்தமது பெண்மணிகளோடு கூடின தேவநாயகர்களால் நன்கு பாடப்பெற்ற நிர்மலமான புகழுடைய அம்மன்னவன் ப்ரீதி நிறைந்த ஹ்ருதயத்துடன் ஸ்ரீபகவானுடைய கதைகளைக் கேட்டுக்கொண்டே காமஸுகங்களை அனுபவித்துவந்தான். அம்மனு சக்ரவர்த்தி சுவாஸ்ரயமான பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானிப்பதில் மன ஆக்கமுடையவன்; பகவானுடைய குணங்களைச் சிந்திப்பதில் மனவிருப்பமுற்றவன். காமபோகங்கள் பகவானுடைய ஆச்சர்ய சக்தி ரூபங்களாகையால் அனைவரையும் மதிமயங்கச் செய்யவல்லவை. அந்த ஸ்வாயம்புவமனு அத்தகைய காமபோகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பினும், அவனை அவை தம்மில் கால்தாழ்ந்து மதிமயக்கச் செய்யச் சிறிதும் வல்லவையாகவில்லை. ஆகையால் அவன் பகவானுடைய கதைகளைக்கேட்பதும் கேட்பவர்களுக்குத் தான் சொல்லுவதும் பகவத் ஆராதனம் செய்வதும் பகவானை த்யானிப்பதுமாயிருந்தான். ஆதலால் அம்மனுசக்ரவர்த்தியின் வாழ்நாளான மன்வந்தரகாலத்தை கழியச்செய்கின்ற நாட்களில் சேர்ந்த யாமங்களெல்லாம் பயன் பெற்றவைகளாகவே கழிந்தன. ஒரு யாமமாவது வீணாய்ச் செல்லவில்லை. அவன் ஒரு யாமகாலமாவது பகவத் ஆராதனம் இல்லாதிருக்கவில்லை. அம்மன்னவன் இங்ஙனம் ஸமஸ்த லோகங்களுக்கும் தானே ஆதாரனும் தான் ஸமஸ்த வஸ்துக்களிலும் நிறைந்திருப்பவனுமாகிய ஸ்ரீவாஸுதேவனுடைய கதைகளைக் கேட்பதும் அவனை வாயார வாழ்த்துவதும் அவனை நெஞ்சார நினைப்பதும் கைகளாரத் தொழுவதுமாகிய அவனுடைய ப்ரஸங்கத்தினால் (ஊர்த்வகதி, மத்யகதி, அதோகதி என்ற மூன்று கதிகளையும் கடந்தென்று பொருள். ஸத்வகுணமுடையவர் ஊர்த்வ சதியையும், ரஜோகுண முடையவர் மத்ய கதியையும், தமோகுணமுடையவர் அதோ கதியையும் பெறுவார்கள். ஊர்த்வ கதியாவது மோகம், மத்ய கதியாவது புண்ய கர்மங்களைச் செய்து ஸ்வர்க்காதி லோகங்களில் சென்று அவற்றின் பலன்களை அனுபவித்து மீளவும் ஜனித்து அந்தக் கர்மங்களை அனுஷ்டித்துக்கொண்டு அங்கிருக்கையேயாம். அதோகதியாவது பாபகர்மங்களால் பசுபக்ஷிமுதலிய ஜன்மங்களை எடுக்கையாம். மத்யகதியையும் அதோகதியையும் கடப்பது பொருந்துமாயினும் ஊர்த்வ கதியைக் கடந்தானென்பது எங்ஙனம் பொருந்துமென்னில், பரமபதத்தில் போய் அனுபவிக்கவேண்டிய அனுபவங்களை எல்லாம் இவன் இந்த ஸம்ஸாரத்திலேயே அனுபவித்தானாகையால் அதையும் கடந்தானென்று கருத்துக் கொள்க. (அல்லது மூன்று கதிகளாவது ஆத்யாத்மிகாதி மூன்று தாபங்களைப் பற்றின மனக்கவலைகளே. அவைகளைக் கடந்ததென்று பொருள் கொள்க) மூன்று கதிகளையும் கடந்து எழுபத்தொரு யுகங்களடங்கின தனது வாழ்நாள் முழுவதையும் கடத்தினான். வாராய் விதுரனே! சரீரத்திலுண்டாகிற வ்யாதிரூபமான வருத்தங்களும், மனோவ்யாதிகளும், ஆகாயத்தினின்று உண்டாகிற இடி, குளிர், காற்று, மழை முதலியவற்றால் விளையக்கூடிய வருத்தங்களும், பகைவர், புலி, ஸிம்ஹம், கரடி முதலிய பூதங்களால் விளைகிற வருத்தங்களும் ஸாதாரணமாய் மனுஷ்யர்களால் அனுபவிக்கப்பெற்று வருகின்றவை. இவையெல்லாம், தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையுள்ள பகவானுடைய பாதங்களைப் பணியுமவனைச் சிறிதும் பாதிக்கமாட்டா. ஆகையால் பகவானுடைய கதைகளைக் கேட்பதும் அவற்றை வாயால் பாடுவதும் அவனையே த்யானிப்பதுமாயிருக்கின்ற அம்மனுசக்ரவர்த்தியை இவ்வருத்தங்கள் சிறிதும் மதிமயங்கச் செய்யவல்லவையாகவில்லை. ஸமஸ்த பூதங்களுக்கும் ஹிதஞ்செய்பவனாகிய அம்மன்னவன் முனிவர்களால் பினவப்பெற்று மனிதர்களுக்கு அவரவருடைய வர்ணாச்ரமங்களுக்குரியபடி ஏற்பட்டவைகளும் பலவாறு பிரிந்திருப்பவைகளும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் ஸாதித்துக் கொடுக்க வல்லவையாகையால் சுபங்களுமான தர்மங்களை மொழிந்தான். அனைவராலும் வர்ணிக்கத்தகுந்த புகழுடையவனும் ஆதிராஜனுமாகிய மனுசக்ரவர்த்தியின் சரித்ரம் ஆச்சர்யமானது. இதை உனக்கு நன்றாக மொழிந்தேன். இனிமேல் அம்மனுவின் புதல்வியாகிய தேவஹூதியின் உற்பத்தியையும் அவளுடைய மேன்மையையும் சொல்லுகின்றேன்,  கேட்பாயாக. 

இருபத்திரண்டாவது அத்யாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக