புதன், 6 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 27 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 15 

இது மட்டுமல்ல கூரத்தாழ்வான், ஆளவந்தார், பராசர பட்டர் ஆகியோர் தங்களை நீசர் என்று சொல்லிக் கொண்டு பகவானைப் ப்ரார்த்திக்கின்றனர். அதை எடுத்துத் தன் குற்றங்களாகச் சொல்லிக் கொள்கிறார்.

शुद्धात्मयामुनगुरूत्तमकूरनाथ भट्टाख्यदेशिकवरोक्तसमस्तनैच्यम्।
अध्यास्त्यसन्ङुचितमेव मयीह लोके तस्माध्यतीन्द्र! करुणैव तु मद्गतिस्ते ॥ (15)

க்ஷுத்தாத்மயாமுந குரூத்தமகூரநாத பட்டாக்ய
தேசிகவரோக்தஸமஸ்தநைச்யம் 
அத்ய அஸ்தி அஸங்குசிதம் ஏவ மயீஹ லோகே
தஸ்மாத்யதீந்த்ர! கருணைவ து மத்கதிஸ்தே || (15)

தேவரீருடைய கருணையேதான் எனக்குக் கதி. 

க்ஷுத்தாத்மயாமுந குரு உத்தம கூரநாத பட்டாக்ய தேஸிகவர - குற்றமற்றவர்களான யாமுனாசார்யரென்னும் ஆளவந்தார், ஆத்ம குணம் நிறைந்தவர்களில் மிக உயர்ந்தவராகிய கூரத்தாழ்வான், அவருடைய திருக்குமாரரான பராசரபட்டர் (பூர்வாசார்யர்களில் மிகப் பெருமை வாய்ந்தவர்கள் உயர்ந்தவர்கள்) இவர்களெல்லோரும் குற்றம் இருக்கு, குற்றம் இருக்கு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறர்கள். ஆனால் என்னிடம் தான் குற்றம் அதிகம் இருக்கிறது. நான் சொல்லிக்கொள்வதோ என்னைப் போல பக்திமான் யார் இருக்கிறார்களென்று. எனைப்போல பிழை செய்வாருண்டோ? 

உக்த ஸமஸ்த நைச்யம் – இவர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் குற்றங்கள் நிறைய இருப்பதாகவும், நீசன், நீசன் என்று என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே.

அத்ய அஸங்குசிதம் மயி இஹ லோகே ஏவ (அஸ்தி) - (இவர்கள் சொல்லிக்கொள்கிற குற்றங்கள் எல்லாம்) இன்றும் இங்கேயும் துளிக்கூட குறையாமல் என்னிடம் இருக்கின்றது. தேடவே வேண்டாம். என்னிடமே எல்லாம் இருக்கிறது. யார் யாரெல்லாம் என்ன நைச்யம் சொல்லிப் போயிருக்கிறார்களோ அது அத்தனையும் என்னிடத்தில் இருக்கிறது. இங்கே இருக்கிறது. இன்றே இருக்கிறது என்கிறார். வட்டிக்கு விட்டா அசல் கூடுமா கூடாதா? யாமுனாசாரியார் காலமெங்கே. கூரத்தாழ்வான் காலமெங்கே ராமானுஜர் காலமும், அதற்கு முந்தைய காலமும். ஆகையினாலே அதிகமாகவே கூடிய குற்றங்கள் என்னிடம் இருக்கிறது. ராமானுஜர் பார்வைக்குக் குற்றமே தெரிவதில்லை. குற்றங்கள் இல்லையே என்கிறார். நன்றாகப் பாரும் என்னிடமே எல்லாக் குற்றங்களும் நிறைவற இருக்கிறது. 

ராமானுஜருடைய திருவடிகளையே ஆஶ்ரயித்து இருங்கள் நல்ல கதி கிடைக்கும்.


தஸ்மாத் – ஆகவே எனக்கு வேற வழியேயில்லை. எல்லாரும் பொறுப்பை உம் திருவடியில் வைத்துவிட்டார்கள். கூரத்தாழ்வானுக்கு சில சிஷ்யர்களை ராமானுஜரே ஏற்படுத்திக் கொடுத்தார். திருவரங்கத்தமுதனார் சீடர். அருளாளப் பெருமாள் எம்பெருமானாரிடம் அநந்தாழ்வானைச் சீடராக்கினார். இந்த இராமானுஜ சிஷ்யர்களுக்கெல்லாம் பயம். என்ன குருவி தலையில் பனங்காயை வைத்தாற்போன்று எங்களிடம் சிஷ்யர்களைச் சேர்த்து விடுகிறீர்கள். சிஷ்யர்களுக்கு உத்தாரக ஆசார்யராக இருக்கும் சக்தி உமக்குத்தான் உண்டு என்றார்கள். அதற்கு இராமானுஜர் இல்லை, இல்லை நமக்குக் கிடைத்த பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கணும். நீங்களும் பஞ்ச சம்ஸ்காரம் பண்ணுங்கோள். உபதேசம் செய்யுங்கள் என்றார். அவர்கள் சாமத்தியமாக முடிவெடுத்து விட்டனர். பீடத்தில் உட்கார்ந்து பஞ்ச சம்ஸ்காரம் பண்ணிவிட்டு நம்ம திருவடியை நம்பிண்டு இருக்காதீர்கள். மோக்ஷம் வேண்டுமானால் ராமானுஜருடைய திருவடிகளையே ஆஶ்ரயித்து இருங்கள் நல்ல கதி கிடைக்கும் என்று உபதேசித்தனர். 

ராமானுஜர் சம்பந்தம் வேண்டும். 

அதையே தான் இன்றிருக்கும் அஸ்மதாசாரியார் வரை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். அடியோங்கள் செய்வது ஒரு சின்ன காரியம். நமக்கெல்லாம் உத்தாரக ஆசார்யர் ராமானுஜரே என்பர். ராமானுஜர் பங்குனி உத்தரத்தன்று நம்பெருமாளை, பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு திருவடியில் சரணாகதி செய்து, மோக்ஷம் வேண்டும் என்று பிரார்த்தித்தார். பெருமாள் ராமானுஜர் சம்பந்திகளுக்கும் மோக்ஷம் உண்டு என்று சொல்லிவிட்டார். ஆக ராமானுஜர் சம்பந்தம் வேண்டும். 

சம்பந்தம் கிடைக்க பஞ்ச சம்ஸ்காரம் ஒரு வழி. ஒரு சிஷ்யர் பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொள்ள வந்து நின்று கொண்டிருக்கிறார். ஆசார்யன் பெருமாள் கிட்ட போவார். அன்று ராமானுஜருக்கு வாக்குக் கொடுத்தீரே, இன்று அந்த சீட்டை எடுத்துக் கொண்டு சிஷ்யர் வந்திருக்கிறார். அவருக்கும் மோக்ஷம் கொடும் என்று ப்ரார்த்திப்பார். இதைத்தான் ஆசார்யர்கள் இன்றைக்கும் செய்கின்றனர். ராமானுஜருக்கு பெருமாள் கொடுத்த வரத்தை ஞாபகப் படுத்தத்தான் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்வது என்ற ஒரு க்ரியை வைத்துக் கொண்டுள்ளனர். 

அத்ய அஸ்தி அஸங்குசிதம் ஏவ மயீஹ லோகே தஸ்மாத்யதீந்த்ர! கருணைவ து மத்கதிஸ்தே – ஆகவே யதிராஜரே உங்களுடைய கருணை ஒன்று தான் எனக்குக் கதியாகிறது. 

இப்போழுது மூன்று ஸ்லோகங்கள் பார்க்கவேண்டும்: 
யாமுனாசாரியருடைய ஸ்லோகம்.
கூரத்தாழ்வாருடைய ஸ்லோகம்.
பராசர பட்டருடைய ஸ்லோகம். 
இவைகளைப் பார்க்கவேண்டும் ஏனெனில் இவைகளைத்தான் மேற்கோளாகக் இந்த 15 வது ஸ்லோகத்தில் கையாண்டு இருக்கிறார். 

கூரத்தாழ்வானுடைய ஆச்சர்யமான ஸ்லோகம்: வரதராஜஸ்தவத்தில் இருக்கும் 79 வது ஸ்லோகம்

புத்வாச நோ ச விஹித அகரணை: நிஷித்த 
ஸம்சேவ நைஸ்தவத் அபசார ஸதை ரஹஸ்யை:।
பக்தாஹ ஸாமபி ஶதைர் பவதா(ஆ)ப்யகண்யை:
ஹஸ்தீஶ வாக் தநுமநோஜ நிதைர்ஹ தோ(அ)ஸ்மி॥ 79

புத்வாச நோ ச விஹித அகரணை – ஸாஸ்த்திரத்தில் எதை எதை செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறதோ அதை எல்லாம் செய்யமாட்டேன். 

ஸம்சேவ நைஸ்தவத் அபசார ஸதை ரஹஸ்யை: - உம்மிடம் பட்டிருக்கிற அபசாரம், உம் பக்தர்களிடம் பட்டிருக்கிற அபசாரம், இது உம்மால்கூட பொறுக்க முடியாத நூறு நூறு அபசாரங்கள்.

பக்தாஹ ஸாமபி – உம் பக்தர்களிடமும் சேர்த்து அபசாரப் பட்டிருக்கின்றேன். 

பவதா(ஆ)ப்யகண்யை: ஹஸ்தீஶ வாக் தநுமநோஜ நிதைர்ஹ தோ(அ)ஸ்மி – தேவராஜ பெருமாளே வாக்காலும், மனத்தாலும், ஶரீரத்தாலும் உம்மால்கூட பொறுக்க முடியாத நூறு நூறு பாபங்களை உம்மிடத்திலும், உம் அடியவர்களிடத்தும் பண்ணியிருக்கின்றேன். ஆகவே அடியுண்டே போனேன். கொலையுண்டேன். இது தான் கூரத்தாழ்வான் ஸாதித்த ஸ்லோகம். 

அவருடைய திருக்குமாரர் பராசர பட்டர் ரங்கராஜஸ்த்வத்தில் ஸாதிக்கிறார்:

ஆதிக்ராமம்ந் ஆஜ்ஞாம் தவ விதி நிஷேதேஷுபவதேபி
அபித்ருஹ்யன் வக்தீக்ருதிபிரபி பக்த்யா ஸததம் ।
அஜாநந் ஜாநந் வா பவத ஸஹநீயாகஸிரத:     
ஸஹிஷ்ணுத்வாத ரங்கப்ரவண! தவ மாபூவமபர: ॥ 91

ஆதிக்ராமம்ந் ஆஜ்ஞாம் – தேவரீர் பண்ணிய ஆக்ஞையைத் தாண்டிவிட்டேன்.

தவ விதி நிஷேதேஷுபவதேபி அபித்ருஹ்யன் வக்தீக்ருதிபிரபி பக்த்யா ஸததம் - நீர் என்ன என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீரோ அதைச் செய்வதில்லை., எதைச் செய்யாதே என்று சொல்லியுள்ளீரோ அதைப் பண்ணுகிறேன். இதைத்தான் அக்ருத்ய கரணம் க்ருத்ய அகரணம் என்பர். இப்படி உம்முடைய விஷயத்திலும் உம்முடைய பக்தர்கள் விஷயத்திலும் பாபம் செய்து விட்டேன். 

அஜாநந் ஜாநந் வா – தெரிந்தும் பண்ணியிருக்கிறேன், தெரியாமலும் பண்ணியிருக்கின்றேன். 

பவத ஸஹநீயாகஸிரத: - தேவரீரால்கூட பொறுக்க முடியாத பாபங்களைச் செய்துள்ளேன். அதில் விருப்பதோடு இருக்கிறேன்.

ஸஹிஷ்ணுத்வாத ரங்கப்ரவண! தவ மாபூவமபர – அதை அத்தனையையும் ஸஹிக்கிற பொறுப்பு, அபராதங்களைப் பொறுத்து, மன்னிக்கும் குணம் உம்மிடம் இருக்கிறபடியால், உம்மிடமே வந்து பிரர்த்திக்கிறேன். தேவரீர் மன்னிக்கமாட்டேன் என்று என்னைத் தள்ளிவிட்டுவிடக்கூடாது. இவ்வாறு பராசர பட்டர் பிரார்த்திக்கிறார்.

ஆளவந்தாருடைய ஸ்லோகம்: ஸ்தோத்ர ரத்னம்.

ந தேஹம் ந ப்ராணான் ந ச ஸுகமஶேஷாபி வஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வவிபவாத் ।
பஹிர்ப்பூதம் நாத ! க்ஷணமபி ஸஹே யாது ஶததா 
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபநமிதம் ॥ 57. 

இப்படி யாமுனாசாரியரும் சரி, (ஆளவந்தார்), கூரத்தாழ்வானும் சரி, அவர் திருக்குமாரர் பராசர பட்டரும் இவர்களெல்லோரும் என்ன என்ன குற்றங்களைச் சொல்லிப் பிரார்த்தித்தார்களோ அவை அவ்வளவும் என்னிடம் உண்டு. 

அமர்யாதா: க்ஷுத்ர: சலமதி: அஸூயா ப்ரஸவபூ: 
க்ருதக்நா: துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சனபர:। 
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: ... .. சரணயோ: 62 ஸ்தோத்ர ரத்னம்

அடியேன் ஸாஸ்த்ரவரம்பை மீறினவன், மிகவும் நீசன், ஓரிடத்தில் நில்லாத சஞ்சலபுத்தியுள்ளவன், பொறாமைக்குப் பிறப்பிடம், செய்நன்றி கொன்றவன், துரஹங்காரமுடையவன், பிறரை வஞ்சிப்பவன், கொலையாளி, மிகவும் பாவி’ இப்படி பத்து குற்றங்கள் தன்னிடம் உள்ளதாகச் சொல்லிக் கொண்டார் ஆளவந்தார். இவை அத்தனையும் என்னிடம்தான் இருக்கின்றன. அதன் இருப்பிடம் நான்தான்.

சுத்தாத்மயாமுந குரூத்தமகூரநாத பட்டாக்ய
தேசிகவரோக்தஸமஸ்தநைச்யம் 
அத்ய அஸ்தி அஸங்குசிதம் ஏவ மயீஹ லோகே
 தஸ்மாத்யதீந்த்ர! கருணைவ து மத்கதிஸ்தே || (15)

இது அத்தனையும் நம்மிடம் இருக்கிறதனாலே தேவரீருடைய கருணையைத் தவிர வேறு புகலில்லை.

15 வது ஸ்லோகம் முற்றிற்று.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக