சனி, 10 ஏப்ரல், 2021

குரு பரம்பரை வைபவம் - 1 - கோமடம் மாதவாச்சார்யார்

குருவாய், உருவாய், அருள்வாய் இறைவா!


மாயை எனும் இருளிலிருந்து ஞானமெனும் சத்தியத்திற்கு அழைத்துச் செல்பவரே குரு. ஒரு குருவோடு இவ்வுலகில் ஞான வேள்வி முடிந்து விடுவதில்லை. ஒரு குரு இன்னொரு குருவை உருவாக்குகிறார். அவரும் தம் குருவருளால் இன்னொரு குருவை நிலைபெறச் செய்கிறார். இப்படியாக மிக நீண்ட ஒரு குரு பரம்பரை எம்பெருமானின் அருளால் வளர்கிறது. மாயையை சிதைத்து ஞானத்தை தழைக்கச் செய்கிறது. சூரியனை கண்ட ஆனந்தத்தில் தாமரை விரிவது போல குரு பரம்பரையினரைப் பற்றி கேள்வியுற்றாலே போதும், அந்த திவ்ய சரிதங்களே நமக்குள் ஞான ஊற்றை திறந்து விடும். இருதயம் ஞானத் தாமரையாக மலரும். பிரம்மானந்தத்தை பொங்கித் தளும்பச் செய்யும். 


அப்பேற்பட்ட குரு பரம்பரையில் ஜொலிப்பவர்களைத்தான் ஆச்சார்யர்கள், ஆழ்வார்கள் என்று சிரசின் மீது கரங்கள் கூப்பி கொண்டாடி வருகிறோம். இந்த குரு பரம்பரையில் வழி வழியாக வந்தவர்களின் மகிமையை இந்த தொடரின் மூலம் அனுபவிக்கப் போகிறோம். ‘‘இருள் தருமா இஞ்ஞாலத்தில்?’’ அதாவது மாயை சூழ் இருளாகிய உலகில் மகான் ராமானுஜன் அவதரித்தார். ஸ்ரீபெரும்புதூர் வாழ வந்த வள்ளல் எனும்படியாக அவதாரம் செய்தார். இவருக்கு முன்னர் அவதரித்தவர்களை திருமுடி வர்க்கம் என்றும் இவருக்குப் பின்னர் அவதரித்தவர்களை திருவடி வர்க்கம் என்றும் பெரியோர் கூறுவர். முதலில் குருபரம்பரையின் அடியொற்றி நடை பயில்வோம்.


அலைகளின் ஆர்ப்பரிப்பு இன்னமும் ஓயவில்லை. சக்ரவர்த்தி திருமகனாரான ராமபிரான் அமாவாசைக்கு பிறகு வந்த துவிதியை எனும் இரண்டாம் நாளன்று சேதுக் கரையில் அமர்ந்தபடி ராவணனை வதம் செய்வது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். கடலலைகள் ராமனை ஆரத்தழுவ நினைத்தன போலும். அவை ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு, திருப்பாற்கடலில் சயனக் கோலத்தில் உள்ள வாசுதேவன் இவனோ என நினைத்தது. உற்சாக மிகுதியில் துள்ளி, ராமனின் மேல் சாரலை வீசியது. 


விரஜைத் துறைவனான ஸ்ரீமன் நாராயணனே தற்சமயம் ராமனாக அவதாரம் எடுத்துள்ளான். விரஜை என்பது வைகுண்டத்தில் ஓடும் ஒரு நதி. துறைவன் என்றால் கரையில் வாழ்பவன் என்று பொருள். யமுனை நதிக்கரையின் சமீபத்தில் வாழ்ந்ததால் கண்ணபிரானை யமுனைத் துறைவன் என்பதுபோல, வைகுண்டத்தில் உள்ள பகவானை விரஜைத் துறைவன் என்று அழைப்பார்கள். மோட்சத்திற்கு செல்லும் ஒருவனை, முதலில் இந்த நதியில்தான் முக்காட்டுவர். 


அப்படி முக்காட்டுவதால், பகவத் ரூபத்தை அந்த ஜீவன் அடையும். இதைத்தான் ஸாரூப்யம் என்று ஞானிகள் கூறுவார்கள். அப்படி நாராயணனே ராமனாக வடிவெடுத்து அவதாரம் செய்து வேதங்களில் சொன்ன தர்மங்களை நடத்திக் காட்டினான். ‘ராமா நான் உன்னைச் சேர்ந்தவன், உன் தாசன், நினது அடிமை’ என்று வந்தவர்களை கைவிடாது தூக்கி ஞானமளித்தான். இதைத்தான் சரணாகாத ஸம்ரக்ஷணம் என்று பெரியோர்கள் கூறினார்கள். 


ஆனால், இப்படி ராமாவதாரத்திலும் அடுத்து வந்த கிருஷ்ணாவதாரத்திலும் மனிதர்களை திருத்த முயன்று தோற்றான் என்பது வியப்பளிப்பது. இப்படி தோற்றதாக பகவானே பேசியிருக்கிறான். ஆதலால், மானைக் காட்டி மானைப் பிடிப்பதைப் போலவும் யானையைக் காட்டி யானையைப் பிடிப்பதைப் போலவும் மனித வர்க்கங்களை, மானுடர்களை தன் திருவடியில் சேர்த்துக் கொள்ள எண்ணி அதற்கொரு உபாயமாக உயர் குணமுடைய மனிதர்களை இப்பூவுலகிற்கு அனுப்பினான்.


அவர்களின் நிழலில் மானுடர்களை ஒதுங்குமாறு செய்து மகிழ்ந்தான். அப்படி குணபூஷணராக மானிட உருவில் வந்தவர்கள் தான் ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும். இவர்களின் மூலம் விரிவான குரு பரம்பரையை ஏற்படுத்திக் கொடுத்தான். இந்தக் கோரமான கலிகாலத்தில் சம்சார சாகரத்தில் விழுந்தவர்களை தூக்கிவிட இவர்கள் தான் சரியானவர்கள் என நினைத்தான் போலும்.


அந்த குருமார்கள், நமக்கும் பகவானுக்கும் உள்ள உறவை புரிய வைத்தார்கள்; அவனை அடையக் காரணமாக இருந்தனர். அந்த ஆசார்யர்கள் எப்படிப்பட்டவர்கள்? 


‘‘மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள்’’. அதாவது மாயைக் கலப்பற்ற, சுத்த அறிவை உடையவர்கள். 


‘‘லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம்

அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்’’


அதாவது திருமகள் கேள்வனிலிருந்து தொடங்கி, நாதமுனி, யாமுன முனி என இருவரை இடையில் கொண்டு, என் குருவோடு முடிவதுமான குருபரம்பரையை வணங்குகிறேன் என்று பொருள். இதிலிருந்து இந்த குரு பரம்பரை அத்தனை நெடிதானது என்பது புரிய வருகிறது. குரு பரம்பரை முதன் முதலாக திருமகளின் மணாளனிடமிருந்து ஆரம்பிக்கிறது. வேதங்களும் உபநிஷதங்களும் ரிஷிகளும் இதோ இப்படித்தான் அவனை விதம்விதமாக வர்ணிக்கின்றனர்:


திருமாமகளின் கேள்வன் என்பான் வைகுண்டவாசி. பல கோயில்களில் அர்ச்சா திருமேனியாக இருக்கக் கூடியவன். எல்லாம் அடைந்த திருப்தியை உடையவன். அனாதி காலமாக, அதாவது காலக் கணக்குகளுக்கு உட்படாதவனாக இருக்கக் கூடியவன். அழிவே இல்லாதவன். இன்ன வடிவத்தான் என்று வர்ணிக்க இயலாதவன். எண்ணில் அடங்கான். ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலும் உள்ளவன். அவன் வெட்டுண்ணப்படான். தேறின பொருளாவான். மறைந்திருப்பவன். எல்லோர்க்கும் எல்லா விதத்திலும் சாட்சியாக இருப்பவன். கண்ணுக்கு இலக்கு ஆகாதவன். ஆனாலும் அவன் நினைத்தால் மட்டுமே அவனைக் காண முடியும் என்றிருப்பவன். திருமகள் எனும் மகாலட்சுமித் தாயார், மண்மகள் எனும் பூமித் தாயார், ஆயர் மடமகள் என்கிற நீளா தேவி என்று அவனுக்கு மூன்று துணைவியர். கணக்கற்ற, முடிவற்ற அவதாரங்களை எடுப்பவன். எல்லோர் இதயத்திலும் உளன் என்று பரமாத்மாவாக ஒளிர்பவன்.


இப்படிப்பட்டவனே நம் எல்லோருக்கும் முதல் குரு. இதைத்தான் ‘‘பீதக வாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து’’ என முதற் குருவை கூறுகின்றனர். அதாவது கடவுளே முதன் முதற் குருவாகத் திகழ்கிறார். இவர்தான் நமக்கு எல்லாவற்றையும் புரிய வைக்கக்கூடியவர். உள்ளிருந்தபடியே வழிநடத்திச் செல்பவர். அவரை இந்த புறக்கண்ணால் காண இயலாது. காரணம் நம்மால் ஒரு சூரியனையே அருகில் நேராகக் காண இயலாதபோது, ஒரு கோடி சூரியனின் ஒளியாகத் திகழ்பவரை இந்த புறக்கண்ணால் காண்பது எங்ஙனம்? அவரின் கருணையால் அவரைப் பார்த்தால்தான் உண்டு. மகான்கள் தரிசித்ததும் அவ்வாறே தான்!


அடுத்தபடியாக திருமாமகளே நமக்கு இரண்டாவது குருவாகத் திகழ்பவள். தந்தையிடம் செல்ல, தாயின் உதவியை நாடுவதுபோல, இவள் மூலமாகச் சென்றால் தந்தையாகிய பகவான், நம் தவறுகளை மறந்து, மன்னித்து தன் திருவடியில் சேர்த்துக் கொள்வான். நமக்காக தாய், தந்தையிடம் சிபாரிசு செய்வது போலச் செய்து நம் குற்றங்குறைகளை மறக்கடிக்க வைப்பாள்.


பகவானின் இரண்டாவது மனைவியாகிய நிலமகள் அடுத்த குரு. இவள் பகவானின் அவதாரத்திற்கு உதவுகிறாள். நிலமகள் பொறுமையுடன் இருக்கக் கூடியவள். எல்லாவற்றையும் தாங்கக் கூடியவள். கூர்மையான மண்வெட்டி, கடப்பாறை போன்றவற்றை கொண்டு குத்தினாலும் அதிர நடந்தாலும் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வாள். பல சமயங்களில் தன்னிடத்திலுள்ள பல பொக்கிஷங்களை வெளிக்காட்டி மக்கள் மகிழச் செய்வாள்.


மூன்றாவதாக ஆயர் மடமகள். வைகுண்டத்திலிருக்கும் போது இவளுக்கு நீளா என்று பெயர். பகவான் அவதரிக்கும்போது இவளும் அவதரிப்பாள். அப்போது, ராதை என்றும், கோதை என்றும், நப்பின்னை எனவும் வழங்கப் பெறுவாள். கருணையை அள்ளிக் கொடுத்து, கடவுளோடு சேரும் வழியை சுருக்கமாகக் காட்டிக் கொடுப்பாள்.


இவர்களுக்குப் பிறகு சேனை முதலிகள் என்று சொல்லக் கூடிய விஷ்வக்சேனர் என்பார் அடுத்த குருவாகத் திகழ்பவர். பகவானுக்கு சேனைத் தலைவராக திகழ்பவர். யானை முகம் கொண்டவர். இரண்டு கூரிய தந்தங்களுடன் ஜொலிப்பவர். இவரும் வைகுண்டத்தில் வாசம் செய்பவர். நித்யர் என்பார்களில் முதன்மையானவர். நித்யர் என்றாலே சம்சார வாசனையற்று தினமும் பகவானுக்கு சேவை செய்யக் கூடியவர் என்று பொருள். இவரை நித்யசூரி என்பார்கள், பெரியோர்கள். 


அடுத்து, பகவான் பரம கருணையின் மிகுதியால், தான் அணிந்து கொண்டிருக்கும் ஆபரணங்களையும், தாங்கிக் கொண்டிருக்கும் ஆயுதங்களையும் மனிதனுக்கு சமமானவர்களாக அதாவது ஆச்சார்யார்களாகவும் ஆழ்வார்களாகவும் அவதரிக்கச் செய்தான். எந்தெந்த ஆபரணங்கள், எந்தெந்த ஆயுதங்கள் எவ்வாறாக அவதாரம் கொண்டன? அடுத்துப் பார்க்கலாம். 


நன்றி - தினகரன் ஆன்மிகம் பிப்ரவரி 2012


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக