திங்கள், 8 அக்டோபர், 2012

ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 20


திருமணப் பத்திரிகையை முதலில் பிரம்மா - சரஸ்வதிக்கு வழங்கிய கருடாழ்வார், பின்னர் சிவ பார்வதி, இந்திரன் - சசிகலா, நாரத முனிவர், தேவகுரு பிரகஸ்பதி, அஷ்டதிக் பாலகர்கள் (திசைக்காவலர்கள்) அத்திரி - அனுசூயா, பரத்வாஜ முனிவர், கவுதமர் - அகலிகை, ஜமதக்னி முனிவர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், புராணக்கதைகளை தேவர்களுக்கு எடுத்துச் சொல்லும் சூதமுனிவர், சவுனகர், கருட லோகத்தினர், கந்தவர்கள், கின்னரர்கள், நாட்டியப்பேரொளிகளான ரம்பா, ஊர்வசி, மேனகை, திலோத்துமா மற்றும் கற்புக்கரசி சாவித்திரி, அருந்ததி ஆகியோருக்கும் வழங்கினார்.

இதையடுத்து அவர், கந்தலோகம் சென்று வள்ளி தெய்வானை சமேதராக செந்திலாண்டவன் எழுந்தருள வேண்டும் என பத்திரிகை கொடுத்து கேட்டுக்கொண்டார். மாமன் கல்யாணத்துக்கு மருமகனும் எழுந்தருளத் தயாரானார். பின்னர் ஆனந்தலோகம் சென்று விநாயகருக்கு பத்திரிகை வைக்கப்பட்டது. பத்திரிகை பெற்றுக்கொண்ட அனைவருமே திருமணத்துக்கு கிளம்பினர். 

அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக சேஷாசலம் வந்து சேர்ந்தனர். திருமணத்திற்கு தலைமை வரவேற்பாளராக அக்னி பகவான் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் விருந்தினர்களை வரவேற்று லட்டு, வடை மற்றும் பால், நெய், தயிர், தேங்காய், எலுமிச்சை சாதம் எனப்படும் பஞ்ச அன்னங்களைப் பரிமாறினார். அனைவரும் ருசித்து மகிழ்ந்தனர். வாயுபகவான் வந்தவர்களுக்கெல்லாம் சுகந்த மணம் பரப்பும் காற்றை வீசினார். கந்தர்வர்கள் தேவர்களுக்கு சாமரம் வீசி பணிவிடை செய்தனர். பார்வதிதேவி, அனுசூயா ஆகியோர் தங்கள் பங்கிற்கு அழகழகான கோலமிட்டனர்.

இதையடுத்து, மணமகன் சீனிவாசன் பட்டு பீதாம்பரம் தரித்து, நவரத்தின கிரீடம், தங்க, வைர மாலைகள் அணிந்து, சுபவேளையில் அவர்கள் முன் அழகே வடிவாய் தோன்றினர். எல்லார் கண்ணும் பட்டு விடுமோ என்று வகுளாதேவிக்கு பயம்.

ஆம்...ஒருமுறை, கருடன்மீது லட்சுமிபிராட்டியுடன் அமர்ந்து பறந்து வந்த பெருமாளைப் பார்த்தார் பெரியாழ்வார். ""ஆஹா.. இவன் இவ்வளவு பேரழகனா? என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கிறதே! ஊரார் பார்வை இவன் மீது பட்டால் என்னாகுமோ என்று பயந்தார். அந்த பயத்தில் இறைவனுக்கே திருஷ்டி கழித்து, ""நீ பல்லாண்டு வாழ வேண்டும்,'' என்று வாழ்த்துப்பா பாடினார்.""பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வித்திருக்காப்பு, என்று பாடினார்.பெருமாள் மீது அந்த அளவுக்கு ஆழ்வார் அளப்பரிய அன்பு கொண்டிருந்தார். அந்த பெருமாள் தானே இப்போது சீனிவாசனாக அவதாரம் எடுத்து வந்திருக்கிறார். அவருக்கும் திருஷ்டி பட்டு விடாதா என்ன! தேவ பெண்கள் அவருக்கு திருஷ்டி பொட்டு வைத்த பிறகு தான், முந்தைய யுகத்தில் யசோதையாக இருந்து, கண்ணனை வளர்த்த வகுளாதேவியின் மனதில் நிம்மதி பிறந்தது.

மணமகள் பத்மாவதியின் அரண்மனை நாராயணவனத்தில் இருந்தது. சேஷாசலத்தில் இருந்து அங்கு மணமகன் ஊர்வலமாக புறப்பட்டார். தெய்வங்கள், தேவர்கள் புடைசூழ, ஒளிவீசும் ரத்தினக்கற்களுக்கு மத்தியில் பதிக்கப்பட்ட பச்சைக்கல் போல சீனிவாசன் தேரில் ஏற பவனி புறப்பட்டது. மற்ற தேவர்கள் அவரவர் தேரில் பின் தொடர்ந்தனர்.நாராயணவனத்தின் அருகில் தான் சுகயோகியின் ஆஸ்ரமம் இருந்தது. அவர் தானே இந்த திருமணம் நிகழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். அவரை சீனிவாசனும், தெய்வங்களும், தேவர்களும் நேரில் சென்று பார்த்து, அவரையும் அழைத்துச் செல்வதென முடிவு செய்தனர்.

மணவிழா ஊர்வலம் சுகயோகியின் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தது. சுகயோகி, வாசலுக்கே வந்து அனைவரையும் வரவேற்றார்.""சீனிவாசா! என்ன பாக்கியம் செய்தேனோ? உன் திருமணத்தின் பொருட்டு வந்துள்ள எல்லா தெய்வங்களின் தரிசனமும் கிடைக்கப் பெற்றேன். இனி எனக்கு பிறவி இல்லை,'' என்று அகம் மகிழ்ந்து பேசினார்.சீனிவாசன் அவரிடம், ""சுவாமி! நாங்கள் தங்கள் ஆஸ்ரமத்தில் சற்றுநேரம் இளைப்பாறி விட்டு பின்னர் நாராயணவனத்துக்குப் புறப்படலாம் என உள்ளோம். தாங்கள் இவர்களுக்கு அன்னம் பரிமாறினால் நல்லது,'' என்றார்.

சுகயோகி சீனிவாசனிடம், ""நல்லது சீனிவாசா! இங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் உணவளிக்க உன்னருளை வேண்டுகிறேன்,'' என்றார். சீனிவாசன் சிரித்தபடியே அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார். அனைவரும் விருந்துண்டு மகிழ்ந்து அங்கிருந்து சுகயோகியுடன் புறப்பட்டனர். ஊர்வலம் மீண்டும் கிளம்பியது. இங்கே இவ்வாறு நடந்து கொண்டிருக்க, நாராயணவனத்தில் ஆகாசராஜன் தன் ஒரே புத்திரியின்திருமணப்பணிகளை மிகுந்த ஆடம்பரமாக செய்து கொண்டிருந்தான். 

""மணமகன்சீக்கிரம் வந்து விடுவார், ஊர்வலம் சுகயோகியின் ஆஸ்ரமத்தை விட்டுக் கிளம்பிவிட்டது என்ற தகவல், ஒற்றர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. ஆகாசராஜன் பரபரப்பானான். ஏற்கனவே, வரும் விருந்தினர்களைத் தங்க வைக்க விடுதிகள் கட்டி தயாராக வைத்திருந்தான். நகர எல்லைக்குள் நுழைந்ததும், அவன் மேளவாத்தியங்களுடன் சீனிவாசனை எதிர்கொண்டழைக்க புறப்பட்டான். 

இருதரப்பாரும் ஓரிடத்தில் சந்தித்தனர். ஆகாசராஜன் அனைத்து தெய்வங்களின் திருப்பாதங்களிலும் பணிந்து, தன் மகளின் திருமணம் இனிதே நடக்க அவர்களின் ஆசிர்வாதத்தை வேண்டினான். எல்லாரும் அவனும் அவன் புத்திரியும் பல்லாண்டு வாழ வாழ்த்தினர். பின்னர், சீனிவாசனை யானை மீதிருந்த அம்பாரியில் அமரச்செய்து, ஊர்வலம் கிளம்பியது. அனைவரும் சம்பந்தி விடுதிகளில் தங்கினர். இன்றைக்கும் கூட திருமலையிலும், திருப்பதியிலும், சுற்றுப்புறங்களிலும் விடுதிகள் நிறைந்துள்ளது இதனால் தான்! சீனிவாச கல்யாணத்திற்கு அன்று தேவலோகமே திரண்டு வந்தது. இன்று பூலோகமே திரள்கிறது. அன்றுமுதல் இன்றுவரை கூட்டத்திற்கு குறைவில்லை.

—தொடரும்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக