வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ஏழுமலையான் அதிசயம்



எத்தனையோ முறை திருப்பதிக்கு  போயிருப்பீர்கள். ஏழுமலையானை தரிசித்திருப்பீர்கள். ஆனால், இக்கோயில் பற்றிய இந்த அதிசய தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா! ஆஹா...ஏழுமலையானைப் பற்றி எனக்குத் தெரியாத தகவலே இல்லை என்ற காலரை உயர்த்தி விட்டுக் கொள்வீர்கள்!

* தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின்  உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள்,  புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர். 

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும். 

* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?
ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து
விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.
 
* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் சேத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.
 
* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம்பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

* இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.

தொகுப்பு:  டாக்டர். பி. உமேஷ் சந்தர் பால்

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 11


நித்ய கர்மம், நைமித்திக கர்மம், காம்யகர்மம் என்ற மூன்றாக கர்மங்களைப் பிரிக்கலாம்.

நித்ய கர்மம் என்றால் அன்றாட வழிபாடு. சந்தியாவந்தனம், தினசரி பூஜை போன்றவை இதில் அடங்கும். நைமித்திக கர்மம் என்பது, ஏதாவது காரணம் கருதி செய்யப்படுவது. உதாரணமாக, சூரிய கிரகணம் வருமானால் தர்ப்பணம் முதலானவை செய்கிறோமே! அதுவே நைமித்திகத்தில் அடங்கும். காம்யகர்மம் என்றால் ஆசைகளை, தேவைகளை நிறைவேற்ற செய்வது. செல்வம் வேண்டுமா! அதற்கென ஒரு யாகம். புகழ் வேண்டுமா! அதற்கு தனி யாகம், எதிரிகளை அழிக்க வேண்டுமா! அதற்கு சேன யாகம்..குழந்தை வேண்டுமா! புத்திர காமேஷ்டி யாகம்...இன்னும் வாஜபேயி யாகம், ராஜசூய யாகம், அஸ்வமேத யாகம் முதலானவை.

இந்த கர்மங்களை நாம் நிச்சயம் செய்தாக வேண்டுமா! செய்தால் என்ன லாபம், செய்யாவிட்டால் என்ன விளைவு...!

இவற்றில் நம்மால் செய்ய முடிந்த எளிய கர்மம் நித்யகர்மம். நித்யகர்மத்தை பண்ணினால் புண்ணியம். செய்யாவிட்டால் பாவம்...வேலைக்குப் போனால் சம்பளம்..போகாவிட்டால் இல்லை...சம்பளம் இல்லாமல் குடும்பம் இயங்காது..அது மாதிரி நித்யகர்மாக்களைச் செய்தால் தான் உலகம் இயங்க முடியும்.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது.

என்ன தான் கர்மாக்களைச் செய்தாலும் "விதி', "தலையெழுத்து' என்றெல்லாம் இருக்கிறதாமே! அவற்றை வெல்ல முடியாது...அவை இயக்கும் பாதையில் தான் நாம் செல்வோம் என்கிறார்களே! அது சரியானது தானா?

ஒரு கர்மா செய்தால், அதற்குரிய புண்ணியம் உடனே கிடைத்து விடும் என்பதில்லை. சிலவற்றுக்கு பத்து வருடம் கழித்து கூட கிடைக்கும். சிலருக்கு உடனே கிடைக்கும். தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். 

அவருக்கு கிடைத்த பாயாசக்குடம் மூலம், 12 மாதங்களில் புத்திர பாக்கியம் கிடைத்து விட்டது.

ஒருவர் கோயில் கட்டிக் கொண்டிருக்கிறார். கட்டும்போதே இறந்து விட்டார். உடனே என்ன சொல்வோம்? "கோயில் கட்டிய புண்ணியம் கூட கிடைக்காமல் போய்விட்டான்' என்று.

சரி...நம் கர்மாக்களுக்கு புண்ணியத்தை இவ்வாறு மறைவாக நின்று தருவது யார்?

இதை "அபூர்வம்' என்பார்கள். "அபூர்வம்' என்றால் "நம் முன்னால் இல்லாதது' என்றும், "எப்போதும் நிலைத்து நிற்கக்கூடியது' என்றும் பொருள். இந்த அபூர்வமே நமக்குரிய பாவ புண்ணியங்களை வழங்கும். மற்றபடி "பிரும்மலிபி' "லிகித ரேகா' எனப்படும் தலையெழுத்து என்றெல்லாம் எந்த எழுத்தும் கிடையாது.

அப்படியானால் விதி என்ற சொல்லுக்கு பொருளே கிடையாதா? உண்டு...

சொல்கிறேன் கேளுங்கள்.

""பாவத்தைச் செய்தவுடன் பெருமானின் திருஉள்ளத்தில் கோபம் உண்டாகிறது. புண்ணியம் செய்ததும் அனுக்கிரகம் உண்டாகிறது. 

இதற்குப் பெயர் தான் விதி''.

""சரி...நான் ஒளிந்து மறைந்து யாருக்கும் தெரியாமல் பாவம் செய்தேன். அது எங்கோ இருக்கும் அந்த பகவானுக்கு தெரியவா போகிறது!'' என்று ஒருவர் கேட்கலாம்.

மறைப்பதென்பதோ, செய்ததை அழிப்பதென்பதோ அவன் விஷயத்தில் நடக்காத காரியம். அவருக்கு மறதியே கிடையாது.

ஆனால், ""இனிமேல் இந்த பாவத்தைச் செய்யமாட்டேன், நீயே என்னைக் காக்க வேண்டும்,'' என்று சரணாகதி அடைந்துவிட்டால், உடனே அதை அழித்து விடுவார்.

கூரத்தாழ்வான் இதை எளிமையான வார்த்தைகளில் சொல்கிறார்.

""எதெது பகவானுக்கு பிடித்ததோ அது புண்ணியம். எதெது பிடிக்காதோ அது பாவம்,'' என்று. எனவே அவருக்கு பிடிக்காததைச் செய்யக்கூடாது.

பகவான் கிருஷ்ணர் கீதை 18ம் அத்தியாயம், 66வது ஸ்லோகத்தில், தன்னையே தர்மமாக ஸ்தாபித்துக் கொள்கிறார். ""என்னையே தர்மமாய் பற்று,'' என்கிறார் அவர். பகவானே தர்மமாக விளங்குகிறார்.
நான்காவது அத்தியாயத்தில் "ஸம்பவாமி யுகே யுகே' என்கிறார். தர்மத்தை நிலைநாட்டதான் பிறப்பதாகவும் அவர் சொல்கிறார்.

புண்ணியத்தைச் செய்து விட்டால் நாம் அவரை அடைந்து விடலாமா என்று ஒருவர் கேட்டால், ""அதுவே இறுதியானது,'' என்று சொல்லிவிட முடியாது. அந்த புண்ணியத்தையும் பகவானிடமே அர்ப்பணித்து விட வேண்டும். அப்போது தான் அவரை அடைய முடியும்.

பட்டினி கிடந்து விரதமிருந்தாலும், அதற்குரிய பலனை அவரிடமே சமர்ப்பித்து விட வேண்டும். அதனால் தான் "ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்' என்பார்கள்.

""வாயால், மனதால்...எதனால் தர்மகாரியம் செய்திருந்தாலும், அனைத்தையும் பகவானுக்கு சமர்ப்பிக்கிறேன்'' என்று சொல்ல வேண்டும்.

சரி....பாவ, புண்ணியம் பற்றி இவ்வளவு சொல்கிறீர்களே! தர்மகாரியம் செய்வதால் புண்ணியம் உண்டா என்றால் இல்லை என்று தான் சொல்வேன். "இதென்ன புதுக்குழப்பம்' என்பவர்கள் சற்று பொறுங்கள்.
குளம் வெட்டுவது புண்ணியம் தான் என்றாலும், தர்மத்தை எப்படி செய்யவேண்டும் என நூல்கள் சொல்லியுள்ளதோ அதன்படி தர்மம் செய்தால் தான் புண்ணியம் கிடைக்கும்.

இதை இன்னும் விபரமாக விளக்க, திருப்பாவையில் ஆண்டாள் சொல்வதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

திருப்பாவை 28ம் பாட்டு, "கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்'. இந்த பாசுரத்தில், "கண்ணா! எனக்கென்று ஒரு புண்ணியமும் கிடையாது. மாடு மேய்ப்பேன், சாப்பிடுவேன், விரதம் இருக்கும் அறிவெல்லாம் என்னிடம் இல்லை,'' என்கிறாள் ஆண்டாள்.

உடனே கண்ணன் சொன்னானாம்...""அப்படியா! எப்போது, உன்னிடத்தில் ஒரு புண்ணியமும் இல்லையோ, அப்போது நானும் நீ கேட்பதைக் கொடுப்பதற்கில்லை,'' என்று கையை விரித்து விட்டான்.

உடனே ஆண்டாள், ""பொறு! பொறு! நான் இன்னும் பாட்டை முடிக்கவில்லை...

""உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது'' என்றாள்.

அதாவது, நாங்களாக முயற்சி எடுத்து புண்ணியம் செய்யவில்லையே ஒழிய, நீ எங்கள் இடையர் குலத்தில் வந்து பிறந்தாயே! அதுவே நாங்கள் செய்த புண்ணியமல்லவா!''என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம். கண்ணன் பேசவில்லை.

""எங்களைத் தேடி வந்த புண்ணியம் நீயல்லவா கண்ணா!'' என்றாள் ஆண்டாள்.

இப்படித்தான் பகவான் நம்மைத்தேடியும் வருவான். தனக்கு யார் மீது விருப்பமோ அவர்களைத் தேடி வருவான்.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 10


உட்கார், குளி, நில், சாப்பிடு, தூங்கு ஆகியவற்றை செய் என்றும் சொல்லவில்லை, செய்யாதே என்றும் சொல்லவில்லை. இதில், வேடிக்கை என்னவென்றால் "குளி' என்று கூட சொல்லாதது தான். இதுபோல்,"சாப்பிடு' என்றும் சொல்லவில்லை. 

காரணம் என்ன!

வேதம் சொல்லாமலேயே, தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோம். "சாப்பிடு' என்று சொன்னால், இன்னும் அதிகமாக சாப்பிடுவோம். அதேநேரம், "பட்டினி கிட' என்று வேதம் கட்டளையிடுகிறது. சாப்பாட்டைக் குறைத்தால் புத்தி வளரும் என்கிறது. 

குளி என்று கட்டளையிடாத வேதம், "குளிக்காமல் சாப்பிடாதே' என்று வேறுமாதிரியாகச் சொல்கிறது. குளிக்காமல் சமைக்கவும் கூடாது. அடுப்பு மூட்டி, காய்கறியை நறுக்கி வைத்து விட்டு குளிக்கப் போகிறேனே என்றால், அதுவும் கூடாது. இந்தச் செயல்களையும் குளித்த பிறகே செய்ய வேண்டும். "குளம் வெட்டு' என்று வேதம் சொல்கிறது. அது புண்ணியச் செயல். புண்ணியம் என்றால் என்ன? "நமக்கும் ஊருக்கும் நன்மை தருவது' என்று பொருள். குளம் வெட்டினால் வெட்டியவனுக்கும் நல்லது, ஊருக்கும் நல்லது. ஆக, புண்ணியம் என்றால், நன்மை கொடுக்கும் செயல்.

அந்தணர்கள் அதற்குரிய நேரத்தில் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும், செய்தால் புண்ணியம், செய்யாவிட்டால் பாவம். பாவம் என்றால் தீமை தரும் செயல். ""சரி...இவ்வளவு நல்லது கெட்டதைச் சொல்கிறீர்களே! இதை வேதம் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா! நானே இதை உணர்ந்து தெரிந்து கொள்ளக்கூடாதா,'' என்று ஒருவர் கேட்கலாம்.

அதற்கும் பதில் சொல்கிறேன்.

சில கர்மங்களுக்கு (செயல்கள்) செய்தவுடன் பலன் கிடைக்கும். உதாரணமாக, விளக்கைத் தொட்டால் சுடும் என்பது எனக்குத் தெரியும். இதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தண்ணீர் குடித்தால் தாகம்தீரும் என்பதும் நாமே தெரிந்து கொண்ட விஷயம் தான். ஆனால், தினமும் உடற்பயிற்சி செய் என்று அம்மா சொல்கிறாள். அப்படி செய்தால், பிற்காலத்துக்கு நல்லது என்பது நமக்கும் தெரியும். ஆனாலும், செய்வதில்லை. 25 வருடம் கழித்த பிறகு, அங்கே இங்கே உடம்பில் வலிக்கும். கால்,கை சுளுக்கும். அம்மா சொன்னதைக் கேட்காததால் 25 வருஷம் கழித்து தான் பலன் கிடைக்கிறது. 

இதுபோல, அன்றன்று செய்த புண்ணிய, பாவத்திற்கேற்ப பலன்கள் உடனடியாகவோ, தாமதமாகவோ கிடைத்து விடும்.

சரி...இந்தப் பிறவியே முடிந்து விட்டது. ஒருவருக்கு 69 வயது 364 நாள் முடிந்து, 70 பிறக்கும் போது, அவர் போய் விடுகிறார். அதோடு, அவரது செயல்களுக்கான பாவ புண்ணியம் தீர்ந்து போகுமா?
நிச்சயமாகக் கிடையாது. பாவம், புண்ணியம் என்ற மூட்டை ஏற இறங்க இருந்து கொண்டே தான் இருக்கும். 250 வருஷம் ஆனாலும் தொடரத்தான் செய்யும். அதாவது, இறந்து போனவர், மறுபிறவியில் தன் செயல்களுக்குரிய பலனை அனுபவிக்க ஆரம்பித்து விடுவார். நாம் செய்கிற வினைகளே நம் பிறவிக்கு காரணம்.

சரி...குழந்தைகள் ஏதாவது கர்மங்கள் செய்கிறார்களே! அது அவர்களைப் பாதிக்குமா!
குழந்தைகள் 12 வயது வரை செய்யும் கர்மங்கள் அவர்களைப் பாதிப்பதில்லை. அதன்பிறகே, கணக்கு துவங்கும். சில பாவங்களுக்கு ஆயிரம் வருடம் வரை பலன் உண்டு. அதை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். அதனால் தான் "பாவம் செய்யாதே...பாவம் செய்யாதே' என்று திரும்பத் திரும்பக் கூறுகிறது வேதம்.
"சாலையில் மஞ்சள் கோட்டைத் தாண்டாதே! அது ஆபத்து' என்று காவலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தாண்டினால் ஐநூறு ரூபாய் அபராதம் போடுவார்கள். அதே நேரம், நாம் தாண்டுகிற இடத்தில் காவலர் இல்லை என வைத்துக் கொள்வோம். கோட்டைத் தாண்டி எப்படியோ போய் விடும். 

அதாவது தட்டிக்கேட்கிறவர் அந்த இடத்தில் இல்லை. அவர் இல்லை என்பதற்காக, நாம் செய்தது சரியாகி விடாது. அது தவறு தான்! அதுபோல, கண்டிக்கிற பகவான் கண்ணுக்கு தெரியவில்லை என்பதற்காக, நாம் அவனுக்கு தெரியாமல் தானே செய்தோம், இது எங்கே கணக்கில் ஏறப்போகிறது என நம் இஷ்டத்துக்கு பாவங்களைச் செய்ய முடியாது. 

நாம் இறந்து விட்டோம். பிறவி விட்டு பிறவி மாறுகிறோம். அப்போது, எதை எடுத்துப் போவோம்! கட்டியிருக்கிற காஞ்சிபுரம் வேஷ்டியை எடுத்துப் போக முடியுமா! குடியிருக்கிற வீடு, வாசலைத் தூக்கிப் போக முடியுமா! எல்லாவற்றையும் விடவைத்து விடுவான் பகவான்! ஆனாலும், நம் கூட ஒன்றே ஒன்று வரும்! அது என்ன! 

கர்மவாசனா ருசியை (முன் செய்த பாவ, புண்ணிய பலன்) மட்டும் எடுத்துப் போவோம். அதைத் தொடர்ந்து அனுபவிப்போம். 

நமது தவறுகள், புண்ணியச்செயல்கள் இங்கே இருக்கிறவர்கள் பார்வையில் படாமல் போகலாம். ஆனால், பெருமானின் உள்ளத்தில் அது பதிவு செய்யப்பட்டு விடும். அது மிகப்பெரிய கணிப்பொறி.
இவை பற்றி அங்கே விசாரணை செய்யப்படும். செய்த தவறுக்கு சாட்சிகள் வேண்டாமா என்றால் அவர்களும் இருக்கிறார்கள். 

அவர்கள் தான் சூரியன். சந்திரன், நிருதி என்று பலபேர். அவர்கள் நாம் இன்னின்ன செய்தோம் என்று சாட்சி சொல்வார்கள்.

சரி...இந்த பாவ புண்ணியத்தை வேறு யார் கணக்கிற்காவது மாற்றி விடலாமா என்றால், அதுவும் முடியாது. ஒருவர் செய்த பாவம், அவரையே சாப்பிட்டு விடும். புண்ணியம் எல்லாரையும் சாப்பிட விடும். இதனால் தான், நமக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் "என்ன கர்மமோ தெரியலே' என்று தலையில் அடித்துக் கொள்கிறோம்.
இந்த சிரமம் நம்மை அணுகாமல் தடுக்க வேண்டுமானால், தினப்படி கர்மங்களை விடாமல் செய்ய வேண்டும். அதாவது, கோயில் தீர்த்த யாத்திரை செய்தல், "நான்' என்ற அகங்காரத்தை விடுதல்...இன்னும் சிலவற்றின் மூலம் தடுக்கலாம். 

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம் பாவமூட்டையைக் கரைத்தால் மோட்சத்துக்கே போகலாம். கர்மங்களில் மூவகை உண்டு. அவை என்னவென்று பார்ப்போமா!

- இன்னும் ஆனந்திப்போம் 

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 9



புத்திசாலிகள் மட்டுமே தன்னிடம் வரவேண்டுமென பகவான் எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஈடுபாடு உள்ளவன் வந்தால் போதும் என்கிறான். உடலுக்குரிய சட்டதிட்டம் அளவுக்கு உட்பட்டது. ஆத்மாவுக்குரிய சட்டதிட்டம் அளவில்லாதது. பகவான் ஒரு உருவத்துடன் பிறக்கிறான். அதை "அப்ராக்ருதம்' என்பார்கள். நமது உருவமோ "ப்ராக்ருதம்'. அதாவது, நமது புலன்கள் கட்டுப்பாட்டை இழக்க வைக்கும். பகவானிடம் கொள்ளும் ஈடுபாடு, புலன்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

நமது உடல் ரஜோ, தமோ, சத்வம் என்னும் மூன்று வகை குணங்களால் பிசைந்து செய்யப்பட்டுள்ளது. பெருமானின் குணம் சத்வம் மட்டுமே. எப்பொழுது எந்தக்கலரில் தோய்க்கிறோமோ அந்த வகையான கலரில் நாம் மாறி விடுவோம். அதுபோல, பகவானைப் பார்த்துப் பார்த்து அவனது சத்வகுணம் தோயத்தோய நாமும் மாறி விடுவோம். 

அதனால் தான் குழந்தைகளை கோயில்களுக்கு கூட்டிப் போக வேண்டும் என்பது! சிலர் சொல்கிறார்கள். ""என் பிள்ளை குழந்தையாக இருக்கும்போது, தீபாவளிக்கு நான் எடுத்துக்கொடுத்த துணியை அணிந்து கொண்டான். 

இப்போது 16 வயதானதும், பணத்தைக் கொடு, நானே கடைக்குப் போகிறேன் என்கிறான்,'' என்று. இப்படி சொல்பவன் கோயிலுக்கு அழைத்தால் வருவானா என்று! இதுபோன்று சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கலங்கக்கூடாது.அவனை கோயிலுக்கு சென்றால், பகவானின் சத்வகுணம் அவன் மீது தோயத்தோய அவனும் மாறி விடுவான். 

சிலர் சாப்பிடவே மாட்டார்கள். உடல் குண்டாக இருக்கும். நன்றாக சாப்பிடுபவனின் உடலோ மாறவே மாறாது. இது அவரவர் உடல்வாகைப் பொறுத்தது. ஆனால், பகவானுக்கு இதுபோன்ற உருவ அமைப்பெல்லாம் கிடையாது. அவனது உருவம் இச்சை (விருப்பத்தின் படி அமைந்தது) என்கிறார் வேதாந்த தேசிகன். அவராக விருப்பப்பட்டு பன்றியாக, மீனாகப் பிறந்தார். அதாவது, அவர் விருப்பம் காரணமாகப் பிறந்தார். நாம் கர்மம் காரணமாக பிறக்கிறோம்.

உலகத்தில் தர்மம் தலைகுனியும் போது பகவான் பிறப்பார். இப்போது கலியுகம். 5115 ஆண்டு தான் வந்துள்ளது. இன்னும் 4லட்சத்து 27 ஆயிரம் ஆண்டுகளை கடக்க வேண்டியுள்ளது. இப்போது தர்மம் இருக்கிறதா என்றால் இல்லை என்று நமக்கு தோன்றுகிறது. ஆனால், அவர் பிறக்கவில்லை என்னும் போது, தர்மம் இன்னும் தலை குனியவில்லை என்று அர்த்தமாகிறது. நம் காலத்துக்குள் நாம் பகவானைப் பார்க்க மாட்டோம் என்றாலும், நம் கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன்கள் அவரைப் பார்ப்பார்கள். மனிதன் தனக்குப்பிறகு தன் பிள்ளை என்ன செய்யப்போகிறான் என்று தான் நினைக்கிறான். பகவானோ வேறு ஏதோ நினைக்கிறான். நாம் பிறப்பதற்கு காரணம் கர்மங்களைத் தொலைப்பதற்கு தான். ஏதாவது பிராயச்சித்தம் செய்து இதைத் தொலைத்தாக வேண்டும். ஆனால், எவ்வளவு பிராயச்சித்தம் செய்தாலும் அது தொலைய மாட்டேன் என்கிறது. காரணம், செய்த பாவங்களுக்கு எண்ணிக்கையே இல்லை. பிராயச்சித்தம் செய்தாலும் சுக துக்கத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும். 

கொசு கடிக்கிறது என்றால் உடலில் களிம்பு பூசலாம். வலையைப் போட்டு படுக்கலாம். இதன்மூலம் தாக்குதலைக் குறைக்கலாம். பிராயச்சித்தம் செய்வது என்பதும் இதுபோலத்தான்! இதன்மூலம் நாம் படும் துன்ப அனுபவங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

நாம் பண்ணிய புண்ணியத்தால் பிறவி ஏற்படுகிறது. அதற்கான சுகத்தை அனுபவிக்க அனுபவிக்க புண்ணியத்தின் அளவு குறைந்து விடும். அதுபோல, செய்த பாவத்திற்கேற்ற அளவு துக்கத்தை அனுபவிப்போம். பாவக்கணக்கு குறைய வேண்டுமானால், துன்பத்தை விருப்பத்துடன் அனுபவிக்க வேண்டும். 

நம்மாழ்வார் இப்படித்தான் சொல்கிறார். அதேநேரம், துன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க பகவானை அடைய நேரம் வந்துவிட்டதாக அர்த்தம். இந்த உண்மையை உணர்ந்துவிட்டால் துன்பம் பற்றிய கலக்கம் வராது. மகான்களும் துன்பப்பட்டிருக்கிறார்கள். இப்போது, ஒரு கேள்விக்கும் இங்கே விடை கிடைக்கிறது. படித்து முனைவர் பட்டம் பெற்று, ஸ்லோகங்களையெல்லாம் சொல்லும் பண்டிதனால் மட்டும் தான், பகவானை அடைய முடியுமா! பாமரனால் முடியாதா என்பது கேள்வி. இதற்கு பதில்... 

"துன்பத்தைக் கண்டு கலங்கி கவலைப்பட்டால் அவன் பாமரன். துன்பத்தை விருப்பத்துடன் அனுபவித்தால் அவன் பண்டிதன். இந்தப் பண்டிதர்களே பகவானை நெருங்க முடியும். தர்மம் நிலைக்க, துஷ்டர்களை அழிக்க பகவான் பிறக்கிறான். நாம் அதற்காக பிறக்கவில்லை. அவனுக்கு பாவ புண்ணியம் கிடையாது. அடியாரை ரட்சிக்கவே அவன் பிறக்கிறான். கோவர்த்தன மலையைத் தூக்குவது, அசுரர்களைக் கொல்வது போன்ற சித்து வேலைகளைச் செய்கிறான்.

சரி...பாவ புண்ணியம் என்கிறீர்களே! அதன் உண்மை நிலை என்ன என்பது பற்றி சொல்லுங்களேன் என்பீர்கள். கர்மம் என்றால் கிரியை. அதாவது செயல்வினை (செயல்பாடு). இதை மூன்று வகையாக வேதம் பிரிக்கிறது. சிலவற்றை செய், சிலவற்றை செய்யாதே என்னும் வேதம், சிலவற்றை செய்யலாம் என்றோ, செய்யக்கூடாது என்றோ சொல்லவில்லை. 

தர்ப்பணம், சிராத்தம், சந்தியாவந்தனம், நாமஸ்மரணை (பகவானின் நாமம் சொல்லுதல்) ஆகியவற்றை செய் என்கிறது. பொய் சொல்லாதே, திருடாதே, சிசுவதை செய்யாதே, பெண்ணை அவமதிக்காதே, பிராணிகளை வதைக்காதே என்று செய்யக்கூடாதது பற்றி கட்டளையிடுகிறது. 

அப்படியானால் செய் என்றோ செய்யாதே என்றும் எந்தெந்த செயல்களை வேதம் சொல்கிறது. அறிய ஆவலாய் இருக்கிறதல்லவா!

- இன்னும் ஆனந்திப்போம் 

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 8


கிரிக்கெட் ஆடுபவன் பந்தை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் மட்டுமே கவனம் கொள்ள வேண்டும். வெளியே ரசிகர்கள் ஆரவாரம் செய்வது பற்றியோ, வாத்தியம் இசைப்பது பற்றியோ, ஆரஞ்சுதோல், அம்பு வீசுபவனையோ பற்றி கவலைப்படக்கூடாது. ஆசிரியருக்கு மாணவர்கள் ஆயிரம் புனைப்பெயரை வைப்பார்கள். அதுபற்றி அவர் கவலைப்படக்கூடாது. பாடம் நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். 

ஒருவன் வண்டி ஓட்டி பழகுகிறான். "நான் வண்டி ஓட்டி பழகப்போகிறேன், ஊருக்குள் போக்குவரத்தை தடை செய்யுங்கள்' என்றால் நடக்கிற காரியமா! பழகுபவன் தான் போக்குவரத்தை அனுசரித்துப் போக வேண்டும். இதுபோல் தான் கோயில்களில் நடக்கும் சம்பவங்களும். ஒருவன் மணியடிப்பான், ஒருவன் பல கதைகளைப் பேசிக்கொண்டிருப்பான், ஓரிடத்தில் காலை மிதித்து விட்டதாக சண்டை நடக்கும், இதுபற்றி வழிபடுகிற நமக்கு கவலை இல்லை. நம் மனம் பகவானிடம் லயித்து விட வேண்டும். 

வியாதி என்று வந்து விட்டால் மருந்து சாப்பிட்டாக வேண்டும். அதில் ஒன்றிரண்டு பக்கவிளைவு இருக்கத்தான் செய்யும். பக்கவிளைவு ஏற்படுமே என்பதற்காக மருந்தே சாப்பிடமால் விட்டுவிட்டால் முக்கியமான வியாதி எப்படி குணமாகும்? அதற்காக கோயில்களில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு ஓடி ஒளிய வேண்டும் என்று சொல்லவில்லை. அதையும் தடுக்க முயற்சி எடுக்கத்தான் வேண்டும்.

திருமங்கையாழ்வார் அப்படித்தான் செய்தார். பகவானுக்கு விரோதமாக யாராவது பேசினால், என் கையில் சக்தி இருந்தால் தவறுகளை அறுத்துவிடுவேன்,'' என்கிறார். நீ செய்யும் வினையைச் செய், பலனைப் பற்றிக் கவலைப்படாதே.

நான் பல இடங்களில் உபன்யாசம் செய்கிறேன். செல்லுமிடங்களில் உண்மையை எடுத்துக்கூறுவது என் பொறுப்பு. 

அதையெல்லாம் எல்லாரும் கேட்டு அப்படியே நடக்க வேண்டுமென நான் எதிர்பார்க்க முடியுமா! ஏன்..சிலர் உபன்யாசம் முடிந்து செல்லும் போதே திருட்டுத்தனமான காரியம் ஒன்றைக்கூட செய்யலாம். அதற்காக, நான் வருத்தப்பட முடியுமா! 

சொல்வது என் பொறுப்பு. கேட்பது அவர்கள் முடிவு. பகவானால் தான் அவர்களைத் திருத்த முடியும். அவர்களைத் தண்டிக்க நான் யார்? தவறு செய்யும் மனிதனைத் தண்டிக்கும் அதிகாரம் இன்னொரு மனிதனுக்கு இல்லை. அந்த உரிமை பகவானுக்கு மட்டுமே உண்டு. 

நம் பிள்ளைகள், பெண்களிடம் நாம் நல்லதைச் சொல்ல வேண்டியது கடமை. அதை அவர்கள் கேட்பார்களா என்றால் தெரியாது. அதிலும் 16 வயதில் புத்திமதி சொன்னால் காதிலேயே ஏறாது. ஆனாலும், புத்திமதியை தொடர வேண்டும். பொதுவாக 16 முதல் 30 வரை திமிரும் வயது. ஏனெனில், நாமும் அப்படித்தான் இருந்தோம். நம் பிள்ளைகளின் வயதில், நாம் நம் பெற்றவர்களின் சொல்லைக் கேட்டோமா என்றால் இல்லை. நாம் சத்தியசந்தனாகவோ, துருவனாகவோ இருந்தோமா...நிச்சயம் இல்லை!

""உன் வயசுப்பிள்ளைகள் எப்படியெல்லாம் ஆயிட்டாங்க தெரியுமா!'' என்று பெற்றவர் பிள்ளைக்கு புத்திமதி சொன்னால், ""உன் வயசுக்கு எத்தனை பேர் ஜனாதிபதி ஆயிட்டாங்க! நீ அப்படியா ஆனே!'' என்று பிள்ளை பெற்றவரிடம் எதிர்க்கேள்வி கேட்பான். நம் பெண்கள், பிள்ளைகள் உள்ளத்தில் நம்மால் உட்கார முடியாது. ஆனால், பகவான் அவர்கள் உள்ளத்தில் அமர்ந்திருக்கிறான். அவர்கள் திருந்துவார்கள் என காத்திருக்கிறான்.
நம் பிள்ளைகளுக்கும் ஒருநாள் 40 வயது ஆகும். அப்போது, அவன் குழந்தை அவனை இதே மாதிரி கேட்பான். அப்போது தான் அவனுக்கு நல்லது கெட்டது புரியும். நாமும் இதே போல நம் பெற்றவர்களைக் கேட்டோமோ என்று எண்ணிப்பார்ப்பான். அப்போது தான், அவனது பெற்றோர் அவனது சிறுவயதில்...அவனது உள்ளத்துக்குள் போட்டாரே நல்ல விதை! அது அப்போது தான் கனிந்து பலனளிக்கும். ஆக, நம்மைக் கட்டுப்படுத்தும் சக்தி மனிதர்களிடம் இல்லை. பகவானிடம் மட்டுமே இருக்கிறது.

அரிவாள்மனை தானாக வெண்டைக்காயைத் திருத்தாது. நாம் தான் திருத்த வேண்டும். அதுபோல் தான் பெற்றவர்களும், நல்லதை பிள்ளைகளிடம் சொல்ல வேண்டும். கோயிலுக்குப் போகும் போது, பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டும். இப்படி இப்படி வணங்க வேண்டும் என்று கற்றுத்தர வேண்டும். அவர்கள் வர மறுக்கத்தான் செய்வார்கள். 

எப்படியோ எடுத்துச் சொல்லி அழைத்துச்செல்ல வேண்டும். ஒருவேளை அறவே மறுத்து விட்டாலும், அவர்களுக்கு குறிப்பிட்ட வயது வந்ததும், நாம் சொன்ன அறிவுரையை அவர்கள் கடைபிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். 

இன்று போடுகிற விதை அன்று முளைத்து விடும்.கோயிலுக்குப் போய் பகவானைப் பார்க்க பார்க்க அவனுக்குரிய சத்வகுணம் (சாந்தகுணம்) அவனையறியமாலேயே வந்து விடும். இன்று புதுமை, அறிவியல் என்ற பெயரால் தான் இளையவர்கள் பகவானின் அருகில் வர மறுக்கிறார்கள். அவர்களிடம், "ஒரு ஸ்லோகமாவது படி, காலாவது படி' என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். கால், அரைக்கால் ஸ்லோகத்தில் கூட பகவான் இருப்பார். 

சொல்லியும் கேட்கவில்லை என்பதற்காக, அவர்கள் விஷயத்தில் பதட்டமே கூடாது. பதட்டம் என்பதே பாவத்தின் பலன் தான். இவர்களுக்கு தான் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு வரும். புண்ணியம் செய்திருந்தால் பதட்டமே வராது. 

இதனால் தான் சொல்கிறேன். நாம் நமது பழையமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக வர வேண்டும். கடைசிகாலத்தில் இன்றைய எந்த நவீனமும் நம் கூட வராது. நாம் சொல்கிற கேசவ, நாராயண, கோவிந்த நாமங்கள் தான் கூட வரும்.

""சரி...பகவானை நெருங்குவதற்கு நமக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும். ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்கிறீர்களே! இதெல்லாம் எனக்கு தெரியாதே! நான் அந்தளவுக்கு புத்திசாலி இல்லையே! என்னால் பகவானை அடைய முடியுமா!'' என ஒருவர் கேட்கலாம்.

காத்திருங்கள் விடைக்கு!

- மேலும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 7


பகவானுக்கு பல ரூபம். அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டினார். அதைப் பார்த்ததும், அவனுக்கு பேரானந்தம்.. மற்றொரு பக்கம் பயம்...காரணம், இப்படி ஒரு பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்ததால்...!

கீதை 11ம் அத்தியாயத்தில் அர்ஜுனனனே சொல்லும் ஸ்லோகம் அது. அதன் பொருளைக் கேளுங்கள்.
""உலகனைத்திலும் நிகரற்றவரே! நீரே தந்தையாய் குருவாய் உள்ளீர். உம்மை வணங்குகிறேன். உமக்கு சமமானவர் யாரும் இல்லை. உம்மை விட உயர்ந்தவனும் இருக்கமாட்டான்,'' என்று அர்ஜுனன் விஸ்வரூப பகவானை வணங்குகிறான். அவனுடைய இப்போதைய நிலை என்ன தெரியுமா?

இதுவரை பார்க்காததைப் பார்ப்பதால் ஆனந்தமயம். கோரமாக இருக்கிறது என்பதால் நடுக்கம். உடனே மீண்டும் சொல்கிறான்.

""பகவானே! புன்சிரிப்பு, பீதாம்பரம், சங்கு, சக்கரம், சிறுத்த இடை, பருத்த நான்கு தோளோடு மீண்டும் காட்சி தா! எனக்கு தோழனாய், கேசவனாய் காட்சி தா'' என்கிறான்.

""இது நன்றாக இல்லையா அர்ஜுனா?'' என்கிறான் கண்ணன்.

எண்ணிறந்த தோள், திருவடி, கைகள், ஆயிரமாயிரம் கண், முகம், எங்குமிருக்கும் உருவமாய் இருக்கிறனே! இது பிடிக்கவில்லையா!'' என்று கண்ணன் எதிர்க்கேள்வி போடுகிறான்.

""கிருஷ்ணா! உன் வாய்க்குள் எல்லாரும் போகிறார்கள், பின்பு உமிழ்கிறாய், இதைப் பார்க்க முடியவில்லை. ஆனால், நாங்களும் ஒருநாள் அழிவோம் என்பது எனக்கு தெரிகிறது. நாங்கள் மட்டுமல்ல, எங்கள் பேரன், பேத்திகளும் அழியத்தான் போகிறார்கள்,'' என்றான் அர்ஜுனன்.

"உலகமே என்பேரில்' என்று சொல்லவே இந்த விஸ்வரூபத்தை எடுத்தான் கண்ணன். எல்லாம் முடியும், எல்லாம் பிறக்கும்! அது எல்லாம் அவனது இந்த உருவத்துக்குள் தான். முதல், நடு, முடிவில்லாத உருவம்...நாம் இதை நாடகக்காட்சியில் வேண்டுமானால் பார்த்திருப்போம். அங்கே அந்த உருவத்தை ஓரளவே காட்ட முடியும். திரைப்படங்களில் 3டி, 4டி, 5டி அளவுக்கு  வேண்டுமானால் காட்டலாம்.
ஆனால், அர்ஜுனன் கண்டது எங்கே பார்த்தாலும் கண்ணன் மயம்! ஒரு அளவுக்கு உட்படாமல் உயர்ந்தும் பரந்தும் நின்றான். அந்தப் புலன்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. சரி...

இப்படி ஒரு உருவத்தைக் காட்டுகிறானே...அதற்கு ஒரு பெயர் வைக்க வேண்டாமா?

""அந்தக் கண்ணனை நான் பால், முத்து, பவளம், தேன் என்று எந்தப்பெயர் கொண்டு அழைப்பேன்,' 'என்கிறார்
நம்மாழ்வார். அவனை நீரா, நிலமா என்று கேட்கிறார்.

ஒரு மண்டபம் நிறைய மாம்பழத்தைக் கொட்டுவோம். ஒரு குழந்தையை அழைத்து அதில் ஒன்றை எடு என்றால், அதில் எது சிறந்தது என்று தேடும். ஆழ்வாரும் அதே போல் சிறந்த பெயர் ஒன்றைத் தேடுகிறார். ஆனால், அவனது பெரிய உருவத்தைப் பார்க்கும்போது, எந்தப் பெயரால் அழைப்பதென புரியவில்லை. அதாவது, அந்த உருவம் நம் மனதுக்கு, வாக்குக்கு கட்டுப்படாதது என அர்த்தமாகிறது.

இந்த பிரபஞ்சத்தில் பத்து, பதினைந்து சூரியன்கள் உள்ளன. பல லட்சம் நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால், அவை வெகு தொலைவில் இருப்பதால் அவற்றின் வெளிச்சம் நம்மை அடையவில்லை என்று விஞ்ஞானி சொல்கிறான். வெளிச்சம் நம்மை அடையவில்லை என்பதற்காக, வானத்தில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லி விட முடியுமா! அதுபோல, பிரம்மத்தின் (இறைவன்) உருவமும் நாம் அறிய முடியாத ஒன்றாக இருக்கிறது என்று மெய்ஞானிகள் சொல்கிறார்கள். நட்சத்திரங்கள் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வது போல, இறை உருவமும் இருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். விஞ்ஞானத்துக்கு ஒரு நியாயம், மெய்ஞானத்துக்கு ஒரு நியாயமா?

நாம் பேசுமிடங்களில் ஒலிபெருக்கி வைக்கிறார்கள். அதன் ஒலி வெகுதூரத்துக்கு கேட்கிறது. இதை யாரோ ஒருவர் கண்டுபிடித்தார்? இதை நாங்கள் நம்பமாட்டோம் என்று சொல்கிறோமா? வாட்சைப் பயன்படுத்துகிறோம். 

இதைக் கண்டுபிடித்தவர் யாரானாலும் பரவாயில்லை. இது காட்டும் மணியை நம்புகிறேன் என்று சொல்கிறோமா இல்லையா! 

இப்படி விஞ்ஞானத்தை நம்புவது போல, மெய்ஞானத்தையும் நம்ப வேண்டும். நாம் வாழும் காலம் மிக குறுகியது. அதை வீணாக்கக்கூடாது. இருக்கிற காலத்துக்குள் மெய்ஞானம் சொல்வதை அப்படியே கடைபிடிக்க வேண்டும்.

ஆனால், கோயிலுக்குள் போனால், வெளிஅரசியலை விட கோயில் அரசியல் மிகப்பெரிதாக இருக்கிறது. பெருமாள் முன்னேயே சண்டை போடுகிறார்கள். அர்ச்சகர்கள், பக்தர், நிர்வாகிகள் என்று ஏக சண்டை...அதே இடத்திற்கு ஒரு பிரதமரோ, முதல்வரோ வந்திருந்தால் சண்டை போடுகிறார்களா! அமைதியாக இருக்கிறார்கள், சண்டை போடவும் முடியாது. 

அவர்களுக்கு கொடுக்கும் மதிப்பு பெருமாளுக்கு இல்லை.

பெருமாள் கடவுள் என்றாலும் கடவுள் என்ற மதிப்பு பக்தனிடம் வரவில்லை. அங்கே வருகிற ஆட்சியாளர்களுக்கு ஐந்தாண்டு தான் ஆதிக்கம். அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட காலம் பதவி. ஆனால், பகவான் ஆட்சியோ அனாதி காலம். அதற்கு எல்லையில்லை. பெருமாள் முன் போனவுடனேயே நமக்கு அந்த புத்தி வந்து விட வேண்டும். எல்லையில்லா ஆட்சியை உடைய இறைவன் முன் சண்டை சச்சரவு கூடாது என்ற மனநிலை வந்து விட வேண்டும். ராமனும், கண்ணனும் பிறந்த போது, நாமும் பிறந்திருந்தோம். புல்லாகவோ, பூண்டாகவோ, ஏன்...இரண்யகசிபுவாகவோ பிறந்திருக்கலாம். ஆனால், ஒன்று நிச்சயம்...பிரகலாதனாக மட்டும் பிறந்திருக்க மாட்டோம். அப்படியானால் தான், முக்தி பெற்றிருப்போமே! 

அவர்களையெல்லாம் தரிசித்தும் முக்தியடையாமல் விட்டுவிட்டோம். ஆனால், இன்று அதே நரசிம்மனை தரிசிக்க கோயில் இருக்கிறது. கோயிலுக்குப் போனால் நான் பெரியவன், நீ பெரியவன் என்று சண்டையைப் பார்க்கிறோமே! 

மனஅமைதிக்காக அங்கே செல்லும்போது, இப்படி நடந்தால், என் மனம் எப்படி பகவான் மீது லயிக்கும் என்று ஒரு கேள்வியை வீசுவீர்கள். அதற்கு பதில்...

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்