செவ்வாய், 17 டிசம்பர், 2013

எம பயம் நீங்கும் திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள் - மனத்துக்கினியான்

இக்ஷ்வாகு குலத்தில் உதித்த அரசன் துந்துமாரன். பக்தி சிரத்தை எல்லாம் கொண்ட அவனுக்கு நெடுநாட்களுக்குப் பின்னர் ஸ்வேதன் என்ற மகன் பிறந்தான். பிள்ளைச் செல்வம் என்று கொஞ்சி விளையாடி வருகையில், திடீரென ஒரு செய்தி அவனை நிலைகுலையச் செய்கிறது. ஸ்வேதனின் ஜாதகத்தை ஆராய்ந்த வசிஷ்ட முனிவர், ஸ்வேதன் அவனது ஒன்பதாவது வயதில் அகால மரணம் அடைவான் என்றார்.

அரசன் தன் மகனைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று தாள் பணிந்தான். அவர், திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள்ள பெருமாளை வேண்டி தவம் இருந்தால் நிச்சயம் தகுந்த பலன் கிடைக்கும் என்றார். ரிஷியின் வாக்கை சிரமேற்கொண்ட அரசன், வசிஷ்டரிடம் இருந்து கேட்டறிந்த நரஸிம்ஹ மிருத்யுஞ்சய மந்திரத்தை ஸ்வேதனுக்கு உபதேசித்து, அந்தப் பொய்கையில் நீராடி தவம் மேற்கொள்ளச் சொன்னான். இவ்வாறு ஸ்ரீனிவாசப் பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் மந்திரத்தைக் கூறிவந்தான் ஸ்வேதன். ஸ்வேதனின் தவத்துக்கு மனம் இரங்கிய பெருமாள், ""ஸ்வேதா நரசிம்ம மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்ததால், நீ சிரஞ்சீவித்துவம் அடைவாய். மேலும், எவனொருவன் இங்கே ஒருமுகப்பட்டு எட்டாயிரம் முறை இந்த மந்திரத்தைக் கூறுகிறானோ அவனுக்கு எம பயம் இருக்காது'' என்று வாக்களித்தார்.

இவ்வாறு ஸ்வேதன் என்ற மன்னனுக்கு அருள் புரிந்த தலம் இது. இவ்வகையில், வைணவத் தலங்களில் எம பயம் நீக்கும் தலமாக இது திகழ்கிறது. ஸ்வேதம் என்றால் வெளுப்பு என்று பொருள். ஸ்வேத மன்னனின் பெயரை வைத்து இந்தத் திருத்தலத்துக்கு திருவெள்ளக் குளம் என்று பெயர் ஏற்பட்டது.
சோழமண்டலத்தில் தென்திசைக்குத் திலகமாய்த் திகழும் திருநாங்கூர் பதினோரு திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்றுத் திகழும் இந்தத் தலத்தை திருமங்கை ஆழ்வார் "திருவெள்ளக்குளத்துள் அண்ணா' என்றும் "திருவெள்ளக் குளத்துள் எந்தாய்' என்றும், "பூவார் திருமாமகள் புல்கிய மார்பா, தேவா திருவெள்ளக்குளத்துறைவானே' என்றும் பலவாறு போற்றிப் பாடியுள்ளார்.

இந்தத் தலத்துக்கு உள்ள சிறப்பு, திருமங்கையாழ்வாரை மிகச் சிறந்த வைணவராகவும் ஆழ்வாராகவும் உருப்பெறச் செய்த குமுதவல்லி அவதரித்த தலம் இது என்பதே.

சுமங்கலை என்ற தேவகன்னி, தன் தோழியர் குழாத்துடன் இமயமலையின் வளங்களைச் சுற்றிப் பார்த்து வந்தாள். அப்போது, கபில முனிவர், தன்னுடைய சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய சீடர்களுள் ஒருவர் விகார வடிவத்தில் இருந்ததைக் கண்டு சுமங்கலை ஏளனம் செய்தாள். கபில முனிவர் பெருவருத்தமும் கோபமும் அடைந்தார். அவர் சுமங்கலையை நோக்கி, ""தேவ கன்னியான நீ இதே பூமியில் மானிடப் பெண்ணாகப் பிறந்து, ஒரு மனிதனின் மனைவியாக வாழக் கடவாய்'' என்று சபித்தார். இந்த சாப வார்த்தையைக் கேட்ட அவள் அஞ்சி நடுங்கினாள். தன்னுடைய செயலைப் பொறுத்து, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். கபில முனிவரோ அவளை நோக்கி, நீ திருமங்கை மன்னனின் மனைவியாகி, அவருடைய போர்க்கள வேள்வியைப் போக்கி, அவரை திருமாலின் நல்லடியாராகத் திருத்தி, அவருடன் வாழ்ந்து, அதனால் உன் குறை தீர்ந்து, உன் பொன்னாட்டை அடைவாயாக என்று அருள் புரிந்தார்.

கபில முனிவருடைய சாபத்தின்படி,சுமங்கலை குமுத மலரையே தன் தாயாகவும் பிறப்பிடமாகவும் கொண்டு, அதனருகில் ஒரு மானிடக் குழந்தையாகத் தோன்றினாள்.

அந்நேரம், திருமாலடியார் ஒருவர், குழந்தையைக் கண்டார். தன் இல்லத்துக்கு எடுத்துச் சென்று மனைவியிடம் அளித்தார். அக்குழந்தைக்கு, குமுதவல்லி என்னும் பெயரிட்டனர்.

குமுதவல்லி, திருமணப் பருவம் எய்தினாள். அவளைத் தனக்குத் திருமணம் செய்து தர விண்ணப்பித்தார் மன்னர். ஆனால் குமுதவல்லியாரோ, திருவிலச்சினையும், திருநாமமும் உள்ளவர்க்கு அன்றி மற்றவர்க்கு என்னைப் பேசவிடேன் என்று மறுத்துரைத்தாள்.

இதைக்கேட்ட அவர், திருநறையூரில் நம்பி திருமுன்பே சென்றார். திருவிலச்சினை தரித்தார். பன்னிரண்டு திருநாமங்களையும் சாத்திக் கொண்டு வந்தார்.

அதன் பின்னரும் ஒரு வருட காலம் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணவர்களுக்கு அமுது செய்வித்து, அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் ஏற்று நிறைவேற்றினால், உம்மைப் பதியாக அடைவேன் என்று மொழிந்தாள்.

திருமங்கை மன்னரும் அதற்கு இசைந்தார். அதன்பின் அவள் பெற்றோர் திருமங்கை மன்னருக்கு மணம் செய்து கொடுத்தார்கள்.

பின்னாளில் சிறந்த வைணவராகவும் ஆழ்வார் ஆகவும் திருமங்கையாழ்வார் திகழ, குமுதவல்லி நாச்சியாரின் இந்த நிபந்தனைகளே காரணமாயின.


வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகளுக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம் இது. திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் அண்ணா என விளித்துப் பாசுரம் பாடியுள்ளார். திருப்பதியில் உள்ள பெருமாளையும் இந்தத் தலத்துப் பெருமானையும்தான். திருமங்கையாழ்வார் தலயாத்திரை சென்று பல திவ்ய தேச பெருமான்களைப் பாடினார். அவ்வாறு செல்கையில், திருப்பதிக்கும் முன்பே இந்தத் தலத்துப் பெருமானைத்தான் அண்ணா என விளித்துப் பாடினார். எனவே இவர் திருப்பதிப் பெருமானுக்கும் அண்ணன் ஆனாராம். இங்கே உள்ள மூலவரின் திருநாமம் அண்ணன் பெருமாள் என்பது. மூலவருக்கு கண்ணன் நாராயணன் என்றும் பெயருண்டு. உற்ஸவர் ஸ்ரீனிவாசப் பெருமாள் என்றும், தலத்தை அண்ணன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
பெருமாள் ஸ்ரீனிவாசன், தாயார் அலர்மேல் மங்கை. இங்கே குமுதவல்லி நாச்சியார் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். மூலவர் பெருமாள் இங்கே கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சந்நிதி விமானம் தத்வத்யோதக விமானம் எனப்படுகிறது. வில்வம், பரசு தல விருட்சமாகவும், வெள்ளக்குள தீர்த்தம் தல தீர்த்தமாகவும் திகழ்கிறது.

பிரார்த்தனை: சிறந்த பிரார்த்தனை தலமான இங்கே அறுபது, எழுபது, எண்பதாம் கல்யாணம் என்று, பெரியவர்கள் செய்து கொள்கிறார்கள். திருமணத் தடை நீங்கவும், எம பயம் நீங்கவும் இங்கே சிறப்பு வழிபாடுகள் உண்டு. துலாபாரம் காணிக்கை கொடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுகிறார்கள்.

திருவிழாக்கள்: புரட்டாசி பிரமோற்ஸவம். வைகாசி முதல் ஐந்து தேதிகளில் வசந்த உற்ஸவம். ஆடி கடைசி வெள்ளி திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பான உற்ஸவங்கள்.

சந்நிதி தரிசன நேரம் : காலை 7 - இரவு 8 வரை.

இருப்பிடம்: சீர்காழியில் இருந்து 6 கி.மீ.

நன்றி - தினமணி

ஆண்டாள், தமிழை ஆண்டாள்! - கவியரசு கண்ணதாசன்

உலகத்தில் எல்லாமே இறைவனுடைய இயக்கம். ஆண் – பெண் உறவு இதற்கு விதிவிலக்கல்ல. அந்தச் சுவை மிகைப்படப் போயினும் தவறில்லை. அது ஞானியை இறைவனிடமும், நல்ல மனிதனை மனைவியிடமும் சேர்க்கிறது.

அந்த வகையில் பிரபந்தம் காட்டும் திரு மொழிகள் அளவிட முடியாத உணர்ச்சிக்
களஞ்சியங்கள்.

நாச்சியார் திருமொழியில் பல தமிழ் வார்த்தைகள் எனக்கு வியப்பளித்தன.

ஆண்டாள் என்றொரு பெண்பாற் பிறப்பு இல்லை என்றும், அது பெரியாழ்வார் தமக்கே கற்பித்துக்கொண்ட பெண்மை என்றும் சிலர் கூறுவர்.

ஆனால், வடக்கே ஒரு மீராபாயைப் பார்க்கும் தமிழனுக்குத் தெற்கே ஓர் ஆண்டாளும் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை வரும்.

அது எப்படியாயினும், நமக்குக் கிடைத்திருப்பது ஓர் அரிய கலைச் செல்வம்.

நானும் என்னைக் காதலியாக்கிக்கொண்டு, கண்ணனை நினைத்து உருகியிருக்கிறேன்.
கண்ணன் என்னும்
மன்னன் பெயரைச்
சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும்
பூவாய் மாறும்
மெல்ல மெல்ல…
-என்றும்,
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
என்றும், இசைக்காக ஏதேதோ புலம்பியிருக்கிறேன்.

ஆனால், `இசை மங்கலம்’, `சொல் மங்கலம்’. `பொருள் மங்கலத்’தோடு புதுத் தமிழ்ச் சொற்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடியிருக்கும் நாச்சியார் திருமொழி, எனது சிறுமையை எண்ணி எண்ணி என்னை வெட்கப்படவே வைத்தது.

அந்தச் சீர்மல்கும் ஆயர்பாடிச் செல்வச் சிறுமியரைக் கூர்வேல் கொடுந்தொழிலனிடம் – நந்தகோபாலன் குமரனிடம் – ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கத்திடம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தானிடம் அழைத்துச் செல்வது, தமிழில் அற்புதமான பாவைக் கூத்து.

`நாம் நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்’ என்கிறார் நாச்சியார்.
`அவன் ஓங்கி உலகளந்த உத்தமன்.’

ஆகா; எவ்வளவு அற்புதமான உருவகம்? அங்கு நீங்காத செல்வமாக நிற்பன எவை தெரியுமா?
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற்பெரும் பசுக்களாம்!

பசுவுக்கு `வள்ளல்’என்ற பட்டத்தை, பக்தியின்றி எது சூட்டும்? ஓர் உருவகத்தைச் கேளுங்கள். அதுவும் விஞ்ஞான உண்மை. மழை பெய்வதை நாச்சியார் கூறுகிறார்:

ஆழி மழைக் கண்ணா
ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு
முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன்
உருவம்போல் மெய்கருத்துப்
பாழியந் தோளுடைப்
பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி
வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம்
உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்!

… கடலிலே புகுந்து நீரை எடுத்து, ஊழி முதல்வன் உருவம் போல் உடம்பு கருத்து மேகமாகி, அந்தப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, சங்குபோல் முழங்கி, வில்லிலிருந்து பொழிந்த அம்பு மழைபோல் மழை பெய்யக் கோருகிறார் நாச்சியார்.

அந்தக் கண்ணன், மாயன், வடமதுரை மைந்தன்!

`வீங்கு நீர் இலங்கை’என்றானே கம்பன், இங்கே நாச்சியார் `தூயபெருநீர் யமுனைத் துறைவன்’என்கிறார்.
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனே- எவ்வளவு புதிய சொல்லாட்சி!

அதோ வருகிறான் கண்ணன்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமன் மகளே, மணிக்கதவம் தாள் திறவாய்; மாமீர்! ஏ, மாமிமார்களே; அவளை எழுப்பீரோ!

நாற்றத் துழாய்முடி நாராயணன் வந்திருக்கிறான்! நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியன் அவன். குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! சிற்றாதே – நீ அசையாதே, பேசாதே, நீ செல்லப் பெண்டாட்டி!
வார்த்தை வந்து விழுகிறதே நாச்சியாருக்கு!

புள்ளினம் புலம்புகிறது. நீ குள்ளக் குளிரக் குடைந்து நீராடாமல் பள்ளிக்கிடத்தியோ! அடப்பாவி! உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாளியுள், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்புதடி!

எல்லே! (இது பாண்டி நாட்டு வழக்கு)
இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
ஐயோ, இதென்ன; கண்ணனும் தூங்குகிறானோ?
அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
அம்மா, யசோதா!
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே! எம்பெருமாட்டி! உன் மகனுக்குக் கொஞ்சம் சொல்லம்மா. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனல்லவா! அவனை அருத்தித்து வந்திருக்கிறோம்.

ஏ, கண்ணா!
ராசலீலை மறந்தாயா! குத்துவிளக்கெரியக் கோட்டிக்கால் கட்டிலின் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி, கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்!
அடியம்மா, நப்பின்னை!
நீ உன் மணவாளனை விட்டு எந்த நேரமும் எழுந்துவர மாட்டாயா?
எந்த நேரமும் பிரிவு பொறுக்க மாட்டாயா?
நல்லது!
இது தத்துவமல்ல; தகவுடையதுதான்!

ஏ, கப்பல் (நடுக்கம்) தவிர்க்கும் கலியே! வெப்பம் கொடுக்கும் விமலா!
நாங்கள் ஆற்றாது வந்துன் அடி பணிகின்றோம். எழுந்து வா!
கிண்கிணியாய்! செய்ய தாமரைப் பூப்போல உனது செங்கண் சிறுகச் சிறுக எங்கள் மேல் விழிக்காதோ!
அன்று இந்த உலகை அளந்தாயே! சென்று தென்னிலங்கை வென்றாயே!
கன்றை எறிந்தாயே! சகடம் உதைத்தாயே! குன்றைக் குடையாக எடுத்தாயே!
மாலே மணிவண்ணா!
கோல விளக்கே, கொடியே, விதானமே!
ஆலிலையில் துயில் கொள்ளும் ஐயா!
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!
எழுந்துவர மாட்டாயா?
சூடகமும், தோள்வளையும், தோடும், செவிப்பூவும், பாடகமும் மற்றும் பல்வேறு நகைகளும் நாம் அணிவோம். ஆடை உடுப்போம்! அதன் பின்னே பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிந்துவரக் கூடியிருந்து உண்போம். ஆகா!
சோற்றையே மூடுகிற அளவுக்கு நெய்யாம்! அதை அள்ளி உண்ணும்போதும் முழங்கை வழியாக வழியுமாம்! மேலும் சொல்கிறார் நாச்சியார்:

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!
அறியாத பிள்ளைகள் அழைக்கிறோம்; கோபப்படாதே! வங்கக் கடல் கடைந்த மாதவா, கேசவா, எழுந்து வா! வா வா!
நாச்சியாருக்குப் பெருக்கெடுத்த காதல் நமக்கும் பெருக்கெடுக்கிறது.
அவர் காதல் மட்டுமா கொண்டார்; கடிமணமும் செய்து பார்த்தார்.

வாரணம் வந்ததாம்; பூரண பொற்குடம் வந்ததாம்; தோரணம் நாட்டினார்களாம்; வாழை, கமுகு தொங்கவிட்ட பந்தலாம்; இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருக்கிறார்களாம்; நாச்சியார் மந்திரக் கோடிப் பட்டு உடுத்தி வந்தாராம்; மாயவன் மணமாலை சூட்டினானாம்!

நான்கு திசையிலிருந்து தீர்த்தம் கொண்டுவந்தார்களாம்; பார்ப்பனப் பெரியவர்கள் பல்லாண்டு பாடினார்களாம்.
கதிர் போன்று ஒளிவிடும் தீபத்தை, கலசத்தோடு ஏந்தியபடி, சதிரிள மங்கையர் வந்து எதிர்கொண்டார்களாம்; மத்தளம் கொட்டினார்களாம்; சங்குகள் வரிசையாக நின்று ஊதினவாம். முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்ட அந்தப் பந்தலில், மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றினானாம்!
அவன் இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் துணையல்லவா! அவன் நன்மையுடையவன் அல்லவா!
ஆகவே, செம்மையுடைய திருக்கையால் பாதம் பற்றி அம்மி மிதிக்க வைத்தானாம்!
அவன் எப்படி?
ஏ, வெண் சங்கே; நீ சொல்!
அவன் வாய் இதழில் கற்பூரம் மணக்குமோ? கமலப்பூ மணக்குமோ? அந்தத் திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
ஏ, சங்கே, பெரும் சங்கே! வலம்புரிச் சங்கே! பாஞ்ச சன்னியமே!
அவன் இதழ்ச் சுவையை எனக்குச் சொல்ல மாட்டாயா!
ஏ, மேகங்காள்!
விண்ணில் மேலாப்பு விரித்தாற் போன்ற மேகங்காள்!
மாமுத்த நீர் சொரியும் மாமுகில்காள்!
களங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்!
கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள்!
மதயானை போலெழுந்த மாமுகில்காள்!
வேங்கடத்தைப் பதியாக வைத்து வாழும் மேகங்காள்!
எனக்குப் பதியாகி, என் கதியாக அவன் கருதவில்லையா!
ஒரு பெண் கொடியை வதைசெய்தால், இவ்வைகயகத்தார் மதிப்பாரா?
நாச்சியார் துடிக்கிறார்; நாமும் துடிக்கிறோம்!
நாச்சியார் உருகுகிறார்; நாமும் உருகுகிறோம்!
நாச்சியார் கெஞ்சுகிறார்; நாமும் கெஞ்சுகிறோம்!
நாச்சியார் கொஞ்சுகிறார்; தமிழும் கொஞ்சுகிறது!

(கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்- 2ஆம் தொகுதியிலிருந்து. இப்பகுதியைப் பிரசுரிக்க அனுமதி அளித்த திரு. காந்தி கண்ணதாசன் அவர்களுக்கு நன்றி.)

நன்றி - தமிழ் இந்து

சனி, 14 டிசம்பர், 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 17

சாமான்ய நிலையில் இருக்கும் ஒருவரைப் பற்றி அறிமுகப்படுத்தச் சொன்னால் ஐந்து நிமிடத்தில் அவரைப் பற்றி எடுத்துச் சொல்லலாம். ஆனால், தகுதியில் உயர்ந்தவர்களைப் பற்றி எளிதாகச் சொல்லி விட முடியாது. எடுத்துச் சொல்வதற்கும் தகுதி முக்கியம்.

வசிஷ்டமகரிஷி இங்கு வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவரைப் பற்றி என்னிடம் பேசச் சொன்னால், நான் அவரை நமஸ்கரித்து விட்டு அமர்ந்து விட வேண்டியது தான். அவர் என்ன சாமான்யமானவரா? மகரிஷி... மகானுபாவர்... 

அவரைப் பற்றி எதையாவது தவறாகச் சொல்லி விட்டால் எனக்கு "அசடு' என்ற பட்டம் வந்து விடும். இதனால் தான் வேதமும், ஏற்றம் மிக்கவளான பெரிய தாயாரை , "இவள் பிராட்டி' என்று மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு நின்று கொண்டது. 

பிராட்டியைப் பற்றி பேசாததற்கு, அவளின் பெருமைக்கு எல்லை இல்லாததே காரணம். தாயாரின் பெருமையை எடுத்துச் சொல்லும் "ஸ்ரீசூக்தம்' வேதத்தின் பாதமாகப் போற்றப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமத்தின் கடைசிப்பகுதியான லட்சுமி தந்திரத்தில் ஸ்ரீசூக்தம் இடம் பெற்றுள்ளது. இந்த மந்திரம் எப்படி பிறந்தது? இந்திரனே லட்சுமி தாயாரிடம் வேண்டுவதாக இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது. அதில் முதல் ஸ்லோகம், ""ஸ்ரீதேவி தாயாரின் அருளை எனக்கு பெற்றுக் கொடுப்பாய்' என்று பெருமாளிடம் வேண்டுவதாக உள்ளது. 

ஓம் நமோ நாராயணாய, சரம ஸ்லோகமான "மாம் ஏகம் சரணம் வ்ரஜ' (நான் ஒருவனே சரணடையத்தக்கவன்) இந்த இரண்டிலும் தாயாரின் சம்பந்தம் இல்லை. அதனால், இந்த இரண்டையும் விட நடுமந்திரமான துவய மகாமந்திரத்தில் மட்டும், தாயாரின் சம்பந்தம் இருப்பதால் ஏற்றம் மிக்கதாக விளங்குகிறது. ஆளவந்தார் சதுஸ்லோகியில் (நான்கு ஸ்லோகங்களில்) தாயாரின் பெருமையைப் போற்றுகிறார். 

வேதாந்தம் பற்றி பல நூல்கள் எழுதிய ராமானுஜரும் பெரிய பிராட்டியின் மகத்துவத்தை உலகிற்கு தெரியப்படுத்தினார். ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரத்தன்று நம்பெருமாள் பெரியபிராட்டியோடு ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளும் போது, பெரியபிராட்டியை முன்னிட்டுக் கொண்டு, பெருமாளிடம் சரணடையும் படி வழிகாட்டினார். 

கூரத்தாழ்வான் பாடிய பஞ்சஸ்தவத்தில் பிராட்டியைப் பற்றி பத்து ஸ்லோகங்கள் உள்ளன. பராசர பட்டர் "ஸ்ரீ குணரத்ன கோசம்' பாடி தாயாரை போற்றியுள்ளார். "தாயாரின் ரத்தினமான குணங்களைப் போற்றும் பேழை' என்பது இதன் பொருள். வேதாந்ததேசிகன் "ஸ்ரீஸ்துதி'யில் தாயாரின் பெருமையை அழகாகச் சாதிக்கிறார். இந்த மகாலட்சுமி யார்? இப்படி சட்டென்று கேட்டால் உடனே சொல்ல முடியாது. சம்பிரதாயப்படி அவள் யார் என்பதை பிரமாணத்துடன் தான் சொல்ல வேண்டும்.
பெருமாளை விட்டு, அவள் எப்போதும் பிரிவதில்லை, உயிர்களுக்கு அருள்புரியும்படி பெருமாளிடம் வேண்டுபவள் அவள். இதனை "புருஷகாரம்' என்று சிறப்பிப்பர். "ஸ்ரீமந்நாராயணன்' என்று பெருமாளுக்கு அடையாளம் தருபவளே பிராட்டி தான். 

(ஸ்ரீ என்றால் லட்சுமி) திருமாலின் அடையாளமாக சங்கு, சக்கரம், துளசிமாலை, பீதாம்பரம் என்று எத்தனையோ சொல்லலாம். ஆனால், இவற்றை எல்லாம், நாம் கூட தாராளமாக அணிந்து கொள்ளலாம். லட்சுமியை மார்பில் தாங்குவதால் "திருவறுமார்பன்' என்று பெருமாள் பெயர் பெறுகிறார். அதற்கு "சொரூப நிரூபக தர்மம்' என்று பெயர். எந்த குணத்தை விட்டு விட்டால் ஒரு பொருள் தன் அடையாளத்தை இழக்குமோ, அந்த குணமே சொரூப நிரூபக தர்மம். விளக்கு என்றால் ஒளியும், விசிறி என்றால் காற்றும், புஷ்பம் என்றால் வாசனையும் அதன் தர்மமாக இருக்கிறது. பெருமாளின் திருமார்பில் பிராட்டியார் இருப்பது தான், அவரின் அடையாளமாக இருக்கிறது. ஸ்ரீமந்நாராயணன் என்று எழுதும்போது கூட, "ஸ்ரீ' யாகிய தாயாருக்கும் நாராயணனாகிய பெருமாளுக்கும் இடையில் சின்ன இடைவெளி கூட விடாமல் சேர்த்தே எழுத வேண்டும். ஏனென்றால் தாயார் எப்போதும் பெருமாளைப் பிரியாமலே இணைந்தே இருக்கிறாள். 

பிரளய வெள்ளம் எங்கும் பெருக்கெடுத்து ஓடியது. ஆலிலையில் சிறு பாலகனாக கண்ணன் கால் கட்டை விரலை வாயில் வைத்து சுவைத்தபடி அதில் மிதந்து வந்தார். அங்கிருந்த மார்க்கண்டேய மகரிஷி, "சிறுகுழந்தை இப்படி வெள்ளத்தில் மிதக்கிறதே' என்று ஆச்சரியத்ததுடன் நின்றார். "பிள்ளாய் நீ யார்?' என்று கேட்டார். பெருமானோ வாயே திறக்கவில்லை. கண்ணால் ஜாடை மட்டும் காட்டினார்.
அவருடைய கையோ மார்பில் இருக்கும் ஸ்ரீவத்சத்தைக் காட்டியது. அதுதான் லட்சுமி வசிக்கும் இடம். "ஸ்ரீவத்ஸ பீட மகாலட்சுமி' என்று அவளுக்குப் பெயர் இதனால் தான். நாராயணனுக்கு ஒரே அடையாளமே "ஸ்ரீ'யோடு எப்போதும் சேர்ந்திருப்பது தான். பிரம்மத்திற்கு அகந்தையாக அவள் இருக்கிறாள். "அகந்தை' என்ற சொல்லை "ஆணவம்' என்று தவறாக நாம் பயன் படுத்துகிறோம். இங்கு "நானாகிற தன்மை' என்று பொருள். பெருமாளின் குணமாக லட்சுமி இருக்கிறாள். அவருக்கு ஒளியாக தாயார் இருக்கிறாள். 

உலகில் அறிந்ததை விட அறியாத விஷயங்களே அதிகமாக இருக்கிறது. . உலகியலுக்கு இது பொருந்துவதை விட, பகவத் (தெய்வ) விஷயத்திற்கு மிகவும் பொருந்தும். நமக்கு இந்த கருத்து பொருந்துவது சரி. ஆனால், பெருமாளுக்கும் இது பொருந்துமா? மகாலட்சுமியின் கல்யாண குணத்தை அவரால் எப்படி அறிய முடியாமல் போனது? அவர் "ஸர்வக்ஞனாக' (எல்லாம் அறிந்தவராக) இருக்கிறார். அவர் "ஸர்வசக்தனாகவும்' (எல்லா ஆற்றலும் பொருந்தியவராகவும்) இருக்கிறார். ஆனால், இந்த இரண்டு குணங்களும் பெற்றும் தாயார் விஷயத்தில் அது பொருந்தவில்லையே ஏன்?
பெருமாள் தாயாரின் வைபவத்தை முற்றிலும் தெரிந்தவர் என்று சொன்னால், அவளின் கல்யாண குணங்களுக்கு எல்லை உண்டு என்றாகிவிடும். பெருமாளுக்கு தெரியாது என்று சொன்னால், எல்லாம் அறிந்தவர் என்ற சிறப்பு இல்லாமல் போய்விடும்.

ஆனால், வேதம் எப்படி சொல்கிறது தெரியுமா? தாயாரின் கல்யாண குணத்தின் எல்லையை நீர் (பெருமாள்) தெரிந்து வைத்திருக்கவில்லை. இருந்தாலும் உமது "ஸர்வக்ஞன்' என்ற பெருமைக்கு ஒரு குறையும் இல்லை என்று பெருமாள், தாயார் இருவருக்கும் பெருமை சேர்க்கிறது.
சாமான்ய மனிதர்களான நாம், நமக்குத் தெரிந்தவரை ஏதோ தாயாரைப் பற்றிச் சொன்னாலும், அதைக் கேட்பதில் பெருமாளுக்குத் தான் ஆசை அதிகம். அதைக் கேட்டு , பெருமாளின் முகம் தாமரையாக மலர்கிறது. அதைக் கண்டு தாயாரும் மகிழ்கிறாள். அவர்கள் இருவரின் மலர்ந்த முகங்களை தரிசிப்பதில் தான் நமக்கு ஆனந்தம். அந்த ஆனந்தத்தை அடைவது தான் நம் கடமை. 

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 16

இனி நாம் மகாலட்சுமி வைபவம் பற்றி ஆனந்திப்போம்.

யாருடைய வைபவம் பற்றி யார் பேச வேண்டும் என்ற தகுதி முதலில் நிர்ணயிக்கப்பட வேண்டும். யாரும் யாருடைய வைபவம் பற்றியும் பேசிவிட முடியாது. உலகத்திலுள்ள ஒருவரைப் பற்றி பேசினால் கூட, அவரைப் பற்றி பேச ஒரு தகுதி வேண்டும் என்று நாம் சொல்லிக் கொள்கிறோம். அப்படியானால், தாயார் மகாலட்சுமியைப் பற்றி பேச எந்தளவுக்கு தகுதி வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த தகுதி நமக்கு இருக்கிறதா என்றால் அது கேள்விக்குரிய விஷயம் தான்.
பொதுவாக பகவத் (தெய்வ) விஷயத்தில் நாம் அறிந்தது மிகக்குறைவே. அதிலும் பகவானைப் பற்றியதை விட பிராட்டியின் வரலாறு நமக்கு தெரியவே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். நம் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதவர் ஸ்ரீமன் நாராயணன். அவருடைய பெருமையை இவ்வளவு.. அவ்வளவு என்றெல்லாம் வரையறுத்துக் கூற முடியாது. அப்படியிருக்க அவரது பிராட்டி பற்றி நமக்கு என்ன தெரியும்! இன்னும் சொல்லப்போனால். மகாலட்சுமி தாயாருக்கே கூட அவளைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது தான் என்பது தான் மிகவும் ஆச்சரியமான விஷயம்.

பகவான் எல்லாம் தெரிந்தவர், எல்லா சக்திகளும் உடையவர் என்று நாம் சொல்கிறோம். இதுபற்றி கூரத்தாழ்வானுக்கு ஒருமுறை சந்தேகம் வந்து விட்டது.

""உன்னைப் பற்றி உலகத்தார் இப்படி இரண்டு விஷயம் சொல்கிறார்களே! இது உண்மை தானா?'' என்று அவரிடமே கேட்டு விட்டார். ஒரு நாத்திகன் இப்படி கேட்டால் அதில் வியப்பில்லை. ஆஸ்திகர்களே இப்படி கேட்டால், பகவானால் எப்படி பதில் சொல்ல முடியும்?
ஆனால், எதற்காக அப்படி கேட்டார் என்பதற்கு விளக்கம் கேளுங்கள்.

பகவானுக்கு எல்லாம் தெரியும் என்றால், பிராட்டியாரின் பெருமை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால், பிராட்டியின் பெருமைக்கு ஒரு எல்லை இருக்கிறது என்று அர்த்தமாகி விடுகிறது. பிராட்டியாரின் பெருமைக்கோ எல்லை இல்லை என்பதே உண்மை. இருக்கிற ஒன்றைப் பற்றி பேசினால் தான் அதில் அர்த்தமுண்டு. அப்படி பேசுபவன் தான் ஞானி. இல்லாத ஒன்றைப் பற்றி பேசினால், அவனைப் பைத்தியம் என்றுதான் முடிவு கட்ட முடியும். தாயாரின் பெருமைக்கு எல்லை இருக்கிறது என்றால் அதுபற்றி பேசலாம். இல்லை என்றால் பேச முடியாது. 

முயலுக்கும், குதிரைக்கும் கொம்பு இருக்கிறது என்று நான் பேசினால், என்னை ஞானி என்பீர்களா!
பைத்தியம் என்பீர்களா! எது கிடையாதோ அதைப்பற்றி பேச வேண்டும் என்கிற அவசியம் ஞானிக்கு கிடையாது. பிராட்டியின் வைபவத்துக்கு எல்லை இல்லை எனும் போது. அதுபற்றி பகவானுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் அவனுக்கு இல்லை என்றாகி விடுகிறது. உபநிஷத்துகளும் அவளது வைபவத்துக்கு எல்லை இல்லை என்கின்றன. பிராட்டியைப் பற்றி பேசினால், முதலில் ஆனந்தப்படுவது பெருமான் தான். அவளது வைபவம் பற்றி சொல்லிமாளாது.

மழை நீர் கடலில் கொட்டுகிறது. அதனால் கடலுக்கு என்ன லாபம்? மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் கடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அது பரந்து விரிந்து தான் கிடக்கும். ஆனால், கடலில் பொழிவதால் மழைக்குத் தான் பெருமை. "கடலோடு, நான் என்னை சம்பந்தப்படுத்திக்கொள்கிறேனே' என்று மழை பெருமைப்பட்டுக் கொள்ளும்.

அதுபோல, தாயாரின் வைபவம் பற்றி பேசினால் நம் நாக்கிற்கு நல்லது. எத்தனையோ அழுக்கான அருவருப்பான விஷயங்களை இந்த நாக்கு பேசுகிறது. அந்த நாக்கைச் சுத்தப்படுத்த அவளது வைபவம் பற்றி பேசிக் கொள்ளலாம். ""சரி...உம்மைப் போல் அதுபற்றி பேசுபவர்களுக்கு நாக்கு சுத்தமாகும். எங்களுக்கு என்ன லாபம்?'' என்று கேட்பீர்கள். அதைக் காதால் கேட்கிறீர்களே! உங்கள் காதுகளுக்கு நல்லது. ஏனெனில், இந்த காது எத்தனையோ கெட்டதுகளையும் கேட்கிறது. அதைச் சுத்தப்படுத்த இந்த நல்லது தேவை.

மகாலட்சுமி என்பவள் யார்? அந்த பிராட்டிக்கு பூதேவி, பூதேவி, நீளாதேவி என்ற மூன்று நிலைகள் உண்டு. 

ஸ்ரீ.. வைஷ்ணவம், திரு..மால் அடியார்கள் என்பதில் உள்ள ஸ்ரீ, திரு என்பதெல்லாம் தாயாரையே அடையாளம் காட்டுகிறது. 

தாயாரைப் பிரிந்து பகவான் இருப்பதே இல்லை. ஆழ்வார்கள் பாசுரம் பாடும் போது, "திரு..மால்' என்றே பாடுகிறார்கள். எங்காவது "மால்' என்று பாடினால், அவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். நாம் திருமண்காப்பு (நாமம்) இடும் போது கூட, ஸ்ரீசூர்ணத்தையும் சேர்த்தே இடுகிறோம்.
பகவான் பற்றி எத்தனை எத்தனை சூக்தங்கள் உள்ளதோ, அந்தளவுக்கு பிராட்டிக்கு இல்லை. விஷ்ணு சூக்தம், நாராயண சூக்தம், சமகங்கள் என்று எத்தனையோ பகவானுக்கு உண்டு. தாயாருக்கோ ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, சிரக்ஷா, மேதா என்று குறிப்பிட்ட சில சூக்தங்களே உள்ளன. வேதாந்த தேசிகன் பகவானைப் பற்றி 28 சூக்தங்கள் இயற்றினார். ஆனால், அதில் நாச்சியாருக்கு ஒன்றே ஒன்று தான் உண்டு. ஆழ்வார்கள் 100 பாசுரம் பாடினால், அதில் ஒன்றே ஒன்று தான் பிராட்டியைப் பற்றி இருக்கும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது, இது ஓரவஞ்சனையோ என்றே தோன்றுகிறது. பராசர பட்டரும் பூர்வ சதகம், உத்தர சதகம் என்று 120 ஸ்லோகங்கள் வீதம் எழுதினார். ஆனால், தாயாருக்கு 60, 65 ஸ்லோகங்கள் தான் இருக்கிறது. ஆளவந்தார் 60 ஸ்தோத்திர ரத்தினம் பாடியும் தாயாருக்கு குறைவாகவே இருக்கிறது. இதைப் பார்க்கும் போது, தாயாருக்கு வைபவம் குறைவோ என்று தோன்றுகிறது.

இவ்வாறு குறைவாக இருக்க காரணம் என்ன? 

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 15


பாவமன்னிப்பைப் பற்றி சில விஷயங்கள் பேசுவோம்.

ஒரு பிறவியில் செய்த பாவத்திற்கு உடனடியாக பாவமன்னிப்பு கிடைக்காது. மரணத்திற்கு பிறகே கிடைக்கும். நாம் "சஞ்சித கர்மா' என்னும் பாவமூட்டையை சுமந்து கொண்டிருக்கிறோம். "சஞ்சித' என்றால் "சேமிக்கப்பட்ட' என்று பொருள்.

அரை விநாடி நேரத்தில் கூட ஒரு பாவச்செயல் நிகழ்ந்து விடும். ஆனால், அதன் பலனை அனுபவித்து தீர்க்க கல்பகோடி காலமாகி விடும். எனவே, நமது பிறவி நீண்டு கொண்டேதான் போகும். சஞ்சித கர்மா, "பிராரப்த கர்மா'வாக மாறும், "பிராரப்தம்' என்றால் "தொடக்கம்'. அதாவது, நம்மால் சேமிக்கப்படும் பாவங்கள், அனுபவிக்க அனுபவிக்க தான் தீரும். இடையில் முடிய ஏதாவது வழியிருக்கிறதா என்றால் "சரணம்' என்று பகவானைச் சரணடைந்தால், அது முடியும்.
அவ்வாறு சரணடையும் போது, ""இனிமேல், முன்பு போல் பாவங்களைச் செய்யமாட்டேன்,'' என்று மனதார உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு உறுதியளித்த பிறகு, பாவங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டால், மீண்டும் பிறவித்துன்பத்தில் உழன்றாக வேண்டும். சில பாவங்கள் தெரியாமல் செய்யப்படுபவை, நாம் நடந்து செல்லும்போது, பல ஜீவன்கள் நம் காலடியில் பட்டு உயிரிழக்கலாம், அவதிப்படலாம். இதுபோன்றவை தெரியமால் செய்பவை. இதுபோன்ற பாவங்களின் பலன்களில் இருந்து பகவானைச் சரணடைபவர்கள், வெட்டி விடப்படுவார்கள். ஆனால், தெரிந்தே உயிர்வதை செய்தால், இதர பாவங்களைச் செய்தால், கடுமையான துக்கத்தைத் தந்து அதன்பிறகே முக்தியளிப்பார்.

இன்னொரு தகவலை எல்லாரும் அறிய விருப்பமாக இருப்பீர்கள். 

""என் அப்பா, அம்மா எனக்கிடும் சாபங்களின் பலனை நான் அனுபவிப்பேனா!'' என்று கேட்பவர்கள் உண்டு. அவர்களுக்கு இது தான் பதில்... நமது பெற்றோர் மறைந்து சொர்க்கம் போய்விட்டால், அவர்கள் பிள்ளைகளைச் சபிக்க மாட்டார்கள். நரகத்திற்கு போனவர்களால் சபிக்க முடியாது. ஏனெனில், அவரே பாவம் செய்தவர். எனவே, சபிக்க அருகதையற்றவர் ஆகிவிடுகிறார். ஆனால், பிதுர் லோகத்தில் உள்ளவர்களுக்கு நம்மை சபிக்க அதிகாரம் உண்டு. காரணம், அவர்களுக்குரிய கடமையை நாம் செய்யாமல் இருப்பதால்! 

சரி...அவ்வாறு சாபம் பெறாமல் இருக்க, பிண்ட பிரதானத்தால் அவர்களை மோட்சத்துக்கு அனுப்ப முடியுமா என்ற கேள்வி எழும். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் இறந்து போனால், அவர் தனது பாவபுண்ணியக்கணக்கை தீர்த்த பிறகு தான் மோட்சத்தை அடைய முடியும்.
அப்படியானால், பிண்ட பிரதானத்தால் என்ன புண்ணியம் என்று கேட்பீர்கள். அது நீங்கள் ஒழுங்காக சொர்க்கம் போய் சேருவதற்குத் தானே தவிர, கிளம்பிப் போனவருக்காக அல்ல! நாம் நமது பெற்றோருக்குரிய கடமையை இங்கே சரிவர செய்தால் தான், அங்கே நமக்கு சொர்க்கம் கிடைக்கும்.
இன்னொரு சந்தேகமும் உண்டு. ஒருவரது தந்தை இறந்து விட்டார். அவருக்காக மகன் இங்கே கவ்யம் கொடுக்கிறான். அவரோ, அதற்குள் மறுபிறவி எடுத்து விட்டார். அப்படியானால், அது எப்படி அவரைச் சேரும்! பிதுர்லோகத்தில் இருந்தால் அது அவரைச் சேர்ந்து விடும் என நம்பலாம். மறுபிறவி, எடுத்த பின் எப்படி அவரை அடையும் என்பீர்கள். 

இதற்காகத் தான் தேவதைகள் இருக்கிறார்கள். அவர்கள் அதை அவ்யமாக (பிதுர்களுக்குரிய உணவாக) மாற்றி அவர்களிடம் சேர்த்து விடுவார்கள். அவ்வாறு நாம் கொடுக்காவிட்டால், பிதுர்லோகத்தில் உள்ளவர்கள், நம் பிள்ளைகள் நமக்கு சாஸ்திரப்படி கொடுக்கவில்லையே என கோபிப்பார்கள். இதைத் தான் "பிதுர் சாபம்' என்கிறோம்.

இவ்வாறு சாபம் பெற்றுவிட்டால் பிராயச்சித்தம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பிராயச்சித்தம் என்பதற்கு இரண்டு வித அர்த்தம். ஒன்று "பாவத்திற்கு மாற்று'. இன்னொன்று "பிராயம்' என்றால் "இளவயது'. இளவயதில் சாஸ்திரம் விதித்த கடமைகளைச் செய்யாமல் போனதற்கு மாற்று வழி.

சில வீடுகளில் அகால மரணம் நிகழ்கிறது. கண் பார்வையற்றவர்களாக, பிற ஊனங்கள் உடையவர்களாகப் பிறக்கிறார்கள். இதற்கு காரணம் சாபம் அல்ல. சாஸ்திரம் விதித்த தர்ம காரியங்களில் இருந்து தவறியதே. எனவே, பாவமே செய்யாமல் இருந்து, தர்ம காரியங்களை சரிவர செய்தால் தான் மோட்சம். பகவானைத் தான் சரணடைந்து விட்டோமே! இனிமேல், ஒன்றிரண்டு பாவம் செய்தால் தெரியவா போகிறது என்று நினைத்தால், இன்னும் பல பிறவிகளைக் கொடுத்து மோட்சத்தை தள்ளிப் போட்டு விடுவார். பகவானின் கோபமே பாவம். விருப்பமே புண்ணியம்.
ஆளவந்தார் சொல்வது போல, ஒரு தடவை பகவானை நோக்கி கைகூப்புங்கள். அவனைச் சரணாகதி அடையுங்கள். செய்த பாவமெல்லாம் மாறும். எத்தனை பாவம் செய்திருந்தாலும் மாறும்.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 14

சிலர் உயர்ந்த குலத்தில் பிறக்கிறார்கள். சிலர் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். சிலர் பணக்காரராக இருக்கிறார்கள். இவை இல்லாதவர்கள், அவர்களைப் பார்த்து அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று ஆச்சரியப்படுகிறார்கள், நமக்கு இல்லையே என்று வருத்தமும் படுகிறார்கள். "ரமணீயம்' எனப்படும் உயர்ந்த பிறவிக்கு காரணம் மிக எளிமையானது.

""நான் எப்படி நடக்கிறேனோ அதன்படியே இவ்வாறான உயர்பிறவியை அடைகிறேன்,'' என்பதே இதற்குரிய பதில்.

ஆம்...கர்மங்களே நம் பிறப்பையும், வாழ்வு முறையை யும் தீர்மானிக்கிறது. அவை நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் தான் கர்மங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். ஆனால், பகவான் நினைத்தால் இந்த கர்மங்களின் விளைவை மாற்றவோ, திருத்தவோ செய்து விடுவான்.

இந்த கர்மங்களை நாம் கழித்தாக வேண்டுமே என்றால் அது கழிந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு இன்பகரமான நிகழ்வு நடந்தால், ஒரு கர்மம் தீர்கிறது. அதேபோல, ஒரு துன்பகரமான நிகழ்வு நடந்தாலும் ஒரு கர்மம் தீர்கிறது. அதனால் தான் பண்டிதர்கள் ரொம்பவுமே சிரமப்பட்டார்கள். ஆனாலும், அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர். ராமானுஜர், சங்கரசாச்சாரியார் போன்றவர்களெல்லாம், துன்பப்பட்டாலும் சிரித்தனர். 

கர்மங்களும் அநாதி, பகவானும் அநாதியானவர். அதாவது, அவற்றுக்கு காலநிர்ணயம் இல்லை. எத்தனையோ பிறவிகளாக கர்மத்தின் பிடியில் சிக்கியிருக்கிறோம். பகவானுக்கும் பிறப்பு என்பது இல்லை. 

ஏன் இந்த பகவான், நம்மை இப்படியெல்லாம் பிறவியெடுக்கச் செய்து, கர்மத்தின் பிடியில் சிக்க வைக்க வேண்டும்? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும் வகையில் அவர் நம் வசப்படமாட்டார்.

நேர்நோடுகள் போய்க்கொண்டே இருக்கும். அது சந்திக்காது. அதுபோல் தான் பகவானும். அவரை நாம் அறிந்து கொள்ள முடியாது. எத்தனை மைல் போனாலும் இதே நிலை தான். மனிதன், தேவன், மரம், செடி, கொடி, விலங்கினம், பறப்பன, ஊர்வன என்று உயிர்கள் எத்தனையோ விதமாய் பிறக்கின்றன. இவற்றில் மனிதனாய் பிறந்தவன் தான், கடந்த பிறவிகளில், நிறைய புண்ணிய கர்மங்கள் பண்ணியிருக்க வேண்டும். 

ஒரு சிலர் சொல்கிறார்கள்... கடவுளாவது கர்மமாவது! கடவுள் என்ற ஒருவனே இல்லை என்கிறார்கள். அப்படியே இருந்தாலும், என்னை இவ்வாறு படைத்த அவன் குற்றவாளி என்கிறார்கள். கடவுளே இல்லை என்று சொன்னபிறகு, இல்லாத ஒருவனை குற்றவாளி என்று எப்படி பழி சுமத்த முடியும்!
வேதம் மட்டுமே கடவுளை நிரூபிக்கிற பிரமாணம். அவன் உறுதியாக இருக்கிறான். அவரை இல்லை என்பவர்கள் "அவித்யா' என்னும் அறிவின்மை உடையவர்களே. மனிதனுக்கு சில வாசனைகள் மறப்பதே இல்லை. வாசனை என்றால் பல பிறவிகளிலும் பழகியது என்று பொருள். ஒருவன் புலியாகப் பிறந்தாலும், முன்பிருந்த பிறவிகளில் இருந்த குணம் தான் அவனிடம் நீடிக்கும். இதை "துக்கச்சுழலை' என்பர்.

இந்த புத்தியிலிருந்து அவன் மீளமுடியுமா? திருந்த முடியுமா என்றால்... நிச்சயமாக முடியும்.
எப்படி முடியும்?

ஒரு ஸ்தாபனம் இருக்கிறது என்றால், அங்குள்ள பிரச்னை பற்றி முதலாளியிடம் தான் கேட்க முடியும். அதுபோல், மனிதன் தனது பிரச்னை பற்றி கடவுளிடம் தான் சொல்ல முடியும். கடவுளால் தான் அதைத் தீர்க்க முடியும்.

உதாரணத்துக்கு சில சம்பவங்கள்.

பாரதப்போர் முடிந்த பிறகும் கூட, திருதராஷ்டிரன் பாண்டவர்கள் மீது வெறுப்பாக இருந்தான். தன் பிள்ளைகளைக் கொன்ற பீமனை அழிக்க அவன் மனம் துடித்தது. பாண்டவர்கள் அவனை பார்க்க வந்த போது, பீமனை அணைக்கிற சாக்கில், தன் சக்தியை எல்லாம் திரட்டி, அவனை நொறுக்க முயற்சித்தான். அது அவனால் முடியவும் செய்யும். ஆனால், அங்கே கண்ணன் குறுக்கே வந்தான். பீமனைப் போன்ற ஒரு பொம்மையை அவன் முன் நிறுத்த, அதை அணைத்து நொறுக்கி விட்டான் திருதராஷ்டிரன். பிறகு காந்தாரியுடன் கானகம் போய், வானப்பிரஸ்தம் செய்து சொர்க்கமடைந்தான். பாவம் செய்தாலும், கடவுளால் பரிகாரம் கிடைத்தது.

கண்டாகர்ணன் என்பவன், தன் காதில் மணி கட்டியிருப்பான். அது அசைந்தபடியே ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும். கடவுளை அவனுக்குப் பிடிக்காது. யாராவது கடவுள் நாமம் சொன்னால், அது அவன் காதுக்கு கேட்டு விடக்கூடாதாம்! அதற்காக மணியைக் கட்டி, அதன் ஒலி மட்டுமே தன் காதுக்கு கேட்கும்படி செய்து கொண்டான். அவனைக் கூட பகவான் மோட்சத்துக்கு
அனுப்பினான். பகவானை நிந்தித்த சிசுபாலன் மோட்சமடைந்தான்.

அப்படியானால், தவறே செய்தாலும் கூட, கடவுள் நினைத்தால் சிலருக்கு மோட்சம் கிடைக்கிறது. இந்த அடிப்படையில் தான் கூரத்தாழ்வார்,""என்னிடம் பாவம் இருக்கிறது. உன் தயை இருந்தால் பரவாயில்லை,'' என்று கேட்டார். அவரைப் போலத்தான் நாமும் பெருமாளிடம் கேட்டாக வேண்டும். நமக்காக மகாலட்சுமி அவரிடம் சிபாரிசு செய்வாள். தன் குழந்தைகளுக்காக மன்றாடுவாள். அவளது கோரிக்கையை ஏற்று அவனும் நம்மை மன்னிப்பான். நாமும் மோட்சம் போய்விடுவோம்.

மோட்சம் செல்ல இன்னொரு வழியும் இருக்கிறது. 

"பாவங்களையே செய்து செய்து மீண்டும் மீண்டும் பிறக்கிறோமே' என்ற கவலை நம் மனதில் வந்தாலே போதும். பிறவியிலிருந்து மீண்டு விடுவோம்.

இன்னொரு பிரச்னையிலும், நாம் தீர்வு தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். அதாவது, உலகத்தில் நல்லது செய்பவனெல்லாம் துன்பத்தை அனுபவிக்கிறான். கெட்டதைச் செய்பவனெல்லாம் இன்பமாக இருக்கிறான். ஏன் இந்த பாரபட்சம் என்பது கேள்வி.

இதற்கு பதில் இருக்கிறது.

நல்லவர்களும் தீயவர்கள் இருக்குமிடத்தில் இருப்பதால், தீயவற்றின் பலனை அனுபவித்து தான் ஆக வேண்டியுள்ளது. விஷஜுரம் ஊருக்குள் பரவுகிறது என்றால், நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ பார்த்து வருவதில்லை. எல்லாரையும் ஆட்டி விடுகிறது. அதுபோல், கெட்டவர்கள் உலகில் இருக்கும்வரை நல்லவர்கள் அவர்களோடு சேர்ந்து சிரமத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
கங்கையில் போய் குளித்தால் பாவம் தீர்ந்து விடுமா...மோட்சம் கிடைத்திடுமா என்றால், கங்கை என்பது பெருமாளின் பாதம் பட்டு வருவது. கங்கை என்றாலே புண்ணியம் தான். இதில் நீராடுவது பாவத்தை தீர்க்கும். ஆனால், பொய் சொல்லாதே, திருடாதே, ஜீவ இம்சை செய்யாதே, மதுபானம் அருந்தாதே, பிறத்தியார் சொத்துக்கு ஆசைப்படாதே, கோயில் சொத்தை உனதாக்கிக் கொள்ளாதே, ஏழைக்கு உதவு, தண்ணீரில் குப்பை கிடந்தால் அதை எடுத்து வெளியே போடு! குளிக்கும் ஆறு, குளத்தில் மலஜலம் கழிக்காதே! குளிக்கும்போது இடுப்பில் துண்டைக் கட்டிக்கொள் என்பது போன்ற கடமைகளையும் சரிவரச் செய்தால் தான் பாவம் தீரும். அப்போது தான் ஆனந்தம் பிறக்கும்.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 13

விதுரர் திருதராஷ்டிரரிடம் கேட்கிறார். ""உன்னை 13 வருஷம் காட்டுக்கு அனுப்பினால் சம்மதிப்பாயா? ஆனால், பாண்டவரை அனுப்புகிறாயே! அவர்களுக்கு நாட்டில் பாதியைக் கொடுப்பது தானே தர்மம்,'' என்று.

ஆம்..நம்முடைய சுகம் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தானே தர்மம்! அதுதானே புண்ணியம்! 

திருதராஷ்டிரன் செய்தது பாவமல்லவா! 

பிராணிகளை இம்சை செய்வது, நகம் கிள்ளுவது, ஜமுக்காளத்தை பிய்ப்பது, பாயைக் குச்சியாக்குவது, புழு, பூச்சிகளைக் கிள்ளுவது இதெல்லாம் பாவம் என்கிறது சாஸ்திரம். புழு, பூச்சிகளைக் குத்தும்போது அவற்றுக்கு வலிக்குமே...இதே போல நம்மைக் குத்தினால் எப்படியிருக்கும் என்று எண்ணுவது பாவம்.

"எல்லாமே பகவான் செயல் என்றால், பகவானே இப்படி மனிதனை பாவச்செயல்களை எல்லாம் செய்ய வைக்கிறாரா?' என்று ஒரு சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. நிச்சயமாக இல்லை. இது பகவத் சங்கல்பம் அல்ல. மனித சங்கல்பம் தான். பகவானே நேரடியாக வந்து "இப்படி இப்படி செய்யாதே' என்று சொல்லமாட்டார். அதற்காகத்தான் சாஸ்திர புத்தகங்கள் நம்மிடம் உள்ளன. அவை என்னென்ன செய்ய வேண்டும் என்று போதிக்கின்றன. 

""நீ கல்லா கட்டையா ஆடா மாடா..நீ தப்பு செய்யக்கூடாது,'' என்று தானே புத்தகம் போட்டிருக்கிறேன். நீ தான் திருந்த வேண்டும்,'' என்று தான் பகவான் சொல்வார். அது மட்டுமல்ல! ஆச்சார்யர்களை அனுப்பி, அவர்கள் மூலம் நமக்கு நல்லதைப் போதிக்கிறார். சில சமயங்களில் அவரே பிறக்கிறார். அவர்களைத் திருத்தவே அவர் பிறக்கிறாரே தவிர, மேய்ப்பதற்காக அல்ல.
"நம் தவறுகளுக்கு காரணம் என்னைப் படைத்த அந்தக் கடவுள்' என்று சொல்லி, தப்ப முடியாது. "உடலை அவர் கொடுத்துள்ளார். அதைப் பயன்படுத்தும் அறிவையும் கொடுத் துள்ளார். இந்த இரண்டையும் நல்வழியில் பயன்படுத்தினால், செயல்கள் நன்றாக அமையும்.

நம்மிடம் நல்ல நிலம் இருக்கிறது. அதில் விதை போட்டால் மரம் வளரும். நிலம் என்பது பழைய கர்மம், விதை என்பது சரீரம், மரம் என்பது காரியம். நல்ல விதை போட்டால் நல்ல மரம், இல்லாவிட்டால் முள் மரம். உடலைப் பயன்படுத்தி நல்வினை புரிந்தால் நற்கதி, இல்லாவிட்டால் பாவமூட்டை. இந்த நாடகத்தில் பகவானும் ஒரு பாத்திரமாக உள்ளான். ஒருவன் செய்த பாவ புண்ணியங்களை, நடுவஸ்தனாக இருந்து ஆனந்தமாக வேடிக்கை பார்க்கிறான். பாவம் செய்தால், இழுத்து பிடித்து வந்து தண்டனை கொடுப்பான்.

ஒரு ஆற்றில், "இந்த இடத்தில் குளிக்காதே' என்று பலகையில் எழுதி எச்சரிக்கை செய்துள்ளனர். நாம் அந்த இடத்தில் போய் இறங்கி விட்டு, "பலகையே என்னைக் காப்பாற்று' என்று கத்தினால் காப்பாற்றுமா! பலகை என்பது நமக்கு ஏற்கனவே நல்ல வழியைக் காட்டி விட்டது. அங்கே நாம் இறங்கியிருக்கக் கூடாது. என்ன வந்து விடும் என எச்சரிக்கையை மீறி இறங்கும் போது, உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது. அதுபோல், கடவுள் சாஸ்திர புத்தகங்கள் மூலம் நம்மை எச்சரிக்கிறான். அதை மீறி நடந்து, "வேதமே என்னைக் காப்பாற்று' என்றால் அது வருமா? "எச்சரிக்கை பலகை ஒரு பக்கம் இருக்கட்டும், நீயே வந்து என்னைக் காப்பாற்ற வேண்டியது தானே!' என்று பகவானைக் கேட்க முடியுமா? செய்யக்கூடாதது என தெரிந்தும், அதைச் செய்து பாவமூட்டையைச் சம்பாதித்து, "எல்லாம் இவனால் வந்தது' என்று பகவானை எப்படி குற்றம் சொல்ல முடியும்!

சரி...வேதம், புத்தகம், எச்சரிக்கை பலகை இதையெல்லாம் எனக்கு படிக்கத்தெரியாது. நான் இறங்கி விட்டேன் என்று சொல்பவன், பாவத்தில் விழாமல் தப்பிக்க வேண்டுமானால் ஒரு வழி இருக்கிறது. நீயே கதி என்று அவனைச் சரணடைந்து விட்டால், அவன் காப்பாற்றுவான்.

நமது கர்மங்களே நமக்கு ஜென்மத்தைத் தருகின்றன. ஜென்மம் எடுத்தால் துன்பம் வருகிறது. அந்தத் துன்பம் எந்தப் பிறவியில் செய்த கர்மத்தால் வந்தது என்று ஆராய முடியுமா என்றால், அந்த ஆராய்ச்சியே தேவையில்லை. துன்பத்தால் ஏற்படும் துக்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி தான் சிந்திக்க வேண்டும். அதற்கு என்ன வழி? "நாராயணா' என்று சொல்லு. நீ காட்டில் சிக்கிக் கொண்டது போலவும், நெருப்பின் நடுவில் நிற்பது போலவும், நோய்வாய்பட்டும் கஷ்டங்களை அனுபவிக்கலாம். அப்போது, "நாராயணா' என்றால், உன் பாவத்தின் தாக்கம் குறையும். அதற்காக செய்த பாவம் போய் விடாது. அதன் விளைவை கடைசி வரை அனுபவித்தே தீர வேண்டும். "உடம்பு' என்ற ஒன்று கிடைத்த பிறகு நடக்கும் நிகழ்வுகளுக்கு அவரவரே பொறுப்பு. உடல் நல்லநிலையில் இருப்பதற்கும், நோய்வாய்ப்படுவதற்கும் காரணம் நாம் செய்த செயல்கள் தான்.

இன்னொரு சந்தேகம் நமக்குள் இருக்கிறது.

அது என்ன! ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி 150 பேர் இறந்து விடுகிறார்கள். பூகம்பம் ஏற்பட்டு ஒன்றரை லட்சம் பேர் மடிகிறார்கள், சுனாமியில் சிக்கி 2 லட்சம் பேர் மாள்கிறார்கள். அப்படியானால், இவர்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியான கர்மம் செய்தவர்களா என்று ஒரு கேள்வி.

இதற்கு ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தில், ""கண்ணுக்குத் தெரியாத காரணங்களைத் தேடி ஓடாதே,'' என்று பதிலளிக்கிறார். விமானத்தில் பழுது ஏற்பட்டு விட்டது, அதனால் விபத்து நிகழ்ந்தது என்பது நமக்குத் தெரிந்த காரணம். அந்த அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தெரியாத காரணங்களைத் தேடி ஓடக்கூடாது. 

இப்படி ஒரு பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்று கேட்கலாம். முடிவுகள் என்பவை நம்மால் எடுக்கப்படுபவை. அதன்படியே செயல்பட்டோம். இந்த செயலுக்குரிய விடை ஆயிரம் ஆண்டுகள் கழித்துக் கூட கிடைக்கலாம், உடனேயும் கிடைக்கலாம். கஜேந்திரன் யானை, மடுவில் இறங்கியது அதுவாக எடுத்த முடிவு. 

அதை முதலை பற்றிக்கொண்டது. ஆயிரம் ஆண்டுகள் போர் நடந்தது. வேறு வழியில்லை என்ற போது "ஆதிமூலமே' என்று கதறிய நிலையில், பகவான் லட்சுமியோடு கருடன் மீது வந்து விட்டார். அதுவரை பட்ட துன்பத்துக்கு விடிவு கிடைக்க ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டது. அதே போல், இதுபோன்ற கேள்விளுக்குரிய விடைக்காகவும் நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

சில சமயங்களில் உடனே முடிவு கிடைக்கிறது. 

பிரகலாதன் அழைத்தவுடனேயே யாரும் இல்லாமல் தனியாகவே வர முடிவெடுத்தான் பகவான். இப்படி முடிவெடுப்பவன் அவனே! 

அதில் யாரும் தலையிட முடியாது.

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 12

யதுகுலத்தை தேடி வந்த பகவான், நம்மைத் தேடி வருவானா! நிச்சயமாக! தனக்கு விருப்பமிருப்பவர்களை நோக்கி அவன் வருவான். விதுரனின் குடிசைக்கு வந்தான். பிரகலாதன் தூணை நோக்கி கை காட்டியபோது, அங்கே வந்தான். இப்படி, அவன் நம்மையும் நோக்கி வரவேண்டுமானால், நமக்கு என்ன தகுதி வேண்டும்?

மற்றதில் வெறுப்பு, பகவானிடத்தில் விருப்பம் வேண்டும். இதைத்தான் "விருப்பு வெறுப்பு' என்கிறார்கள். திருப்பாணாழ்வாரின் கண்களுக்குள் அவனது திருவடிகள் வந்து புகுந்தன. காரணம், அவன் மீதான விருப்பம். அந்த விருப்பம் நமக்கும் வேண்டும்.

பகவானுக்கு விருப்பமானது என்ன?

மரம் நடு, பசுக்களுக்கு பாதுகாப்பு கொடு, தானம் செய், உபவாசம் இரு...இப்படி சில. இந்த தர்மங்களை அவன் சார்பில் நாமே செய்ய வேண்டும். அதன் பலனையும் அவனிடமே சமர்ப்பிக்க வேண்டும். இதை விட்டு, தர்மத்தை கடைபிடிக்கிறோம் என்ற பெயரில், பெயருக்கு ஜபம் முதலானவற்றைச் செய்யக்கூடாது.

சனாதன தர்மம் (இந்துமதம்) என்பது அனாதியானது (தோன்றிய காலம் தெரியாதது). ராமனையும், கிருஷ்ணனையுமே சனாதன தர்மம் என்று சொல்லலாம். சிலருக்கு சனாதன தர்மத்தின் மீது சில சந்தேகங்கள்...

"கிருஷ்ணன் பொய் சொன்னாரே! ராசக்கிரீடை (பெண்களுடன் நடனம்) பண்ணினாரே! 16001 பேரை திருமணம் செய்தாரே!' என்று.

வேதவியாசர் இதற்கு பதிலளிக்கிறார். அவன் திருடினால் நம் பாவங்கள் திருடப்படும். கர்மங்கள் என்ற பாவம் அவரைத் தீண்டாது. அவரது உலகில் வசிக்கும் நித்யசூரிகளுக்கும் (பகவானுடன் கலந்தவர்கள்) பாவம் அண்டாது.

சுகப்பிரம்மரிடம் பரிட்சித்து மன்னன் இந்த சந்தேகங்களைக் கேட்டான். அதற்கு சுகர், "ஆத்மா பரமாத்மா' சம்பந்தம் பற்றி எடுத்துச் சொன்னார். 16001 பேரை திருமணம் செய்கிறார் என்றால், அவர்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு கிடையாது. ஜீவனுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பே அது. ஜீவனுக்கு உருவம் உண்டா...உயிர் போய்விட்டது என்கிறோம். ஆனால், அந்த ஜீவனை உடலுக்குள் இருக்கும்போதோ, அது போய்விடும் போதோ பார்க்க முடியுமா! அது மட்டுமல்ல!

அன்றைக்கு கண்ணனுக்கு வயது எட்டு. கோபியருக்கு வயது 6. பத்து வயதிலேயே அவர் ஆயர்பாடியிலிருந்து மதுராபுரி வந்து விட்டார். அவர்களுக்குள் என்ன உறவு இருக்க முடியும்! இதுபோன்ற சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள, புத்தகங்களை சரியாகப் படிக்க வேண்டும். குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்றே இதுபோன்ற புகார்களை சனாதன தர்மத்தின் மீது சுமத்துகிறார்கள். ஆக, முட்டாள்கள் நாம் தான்! பெருமாள் மீது குற்றம் சொல்லக்கூடாது. ஒருசமயம் துஷ்யந்தன் மக்களைப் பார்த்து சொன்னான்..என்ன தெரியுமா?

""பிரஜைகளே! யார் வீட்டிலாவது தாய், தந்தை, பெண், குழந்தை என யார் இறந்தாலும், நானே அதுவாகிறேன், சாஸ்திரம் சம்மதித்த உறவாக இருக்கிறேன். கணவன் மனைவி உறவைத் தவிர..'' என்று. அப்படி அவன் சொன்னான் என்பதற்காக, அவன் நிஜத்தந்தை, நிஜத்தாய், நிஜத்தங்கை ஆகிவிடுவானா! மக்கள் மீது கொண்ட, அன்பின் காரணமாக, அந்த உறவை நிரப்ப நான் வருகிறேன் என்கிறான். ஆனால், கண்ணன் கோபியரிடம் பழகியதன் மூலம் கணவன், மனைவி உறவாகவும் இருக்கிறான். திருக்குறுங்குடிக்கு போய், பெருமாள் சிலையைப் பார்க்கும் ஒரு பெண், ""பெருமாள் எவ்வளவு அழகாக இருக்கிறார்?'' என்றால், அவளது கணவன் அவளைப் பார்த்து சந்தேகப்பட முடியுமா! ஏனெனில், எம்பெருமான் தானே எல்லாருக்குள்ளும் நீக்கமற நிறைந்துள்ளான்.

நமக்கு தான் பாவ, புண்ணியம் பிடிக்கும். பகவானின் கோபம் என்பது பாவம், விருப்பம் என்பது புண்ணியம். பகவானுக்கு பாவம், தோஷம் என்பதெல்லாம் கிடையாது. அதனால் தான் "குறையொன்றுமில்லாத கோவிந்தா' என்கிறோம். கண்ணனின் அருள் நமக்கு நிறைய கிடைத்து விட்டால் குறையொன்றுமில்லை. மேடு பள்ளம் என்பது என்ன தெரியுமா? கண்ணன் மேடு, நாம் பள்ளம். நம் பள்ளத்தை சரி செய்துவிட்டால், பகவானுடன் இணைந்து வைகுண்டத்தில் இன்பமாக வாழலாம். சரி...எப்படியோ பாவங்களைச் செய்து விட்டோம். அதற்கு பிராயச்சித்தம் இருக்கிறதா?

பிராயச்சித்தம் என்பதன் பொருள் நமக்கு தெரிய வேண்டும். பிராயம் என்றால் "பாவம்'. "சித்தம்' என்றால் "மாற்று'. பாவத்துக்கு மாற்று. இப்படி பாவத்துக்குரிய மாற்றைச் செய்யும் போதும் அதில் பாவம் தொற்றி விடக்கூடாது. தர்மம் செய்யும்போது, அதர்மம் வந்துவிடக்கூடாது. உதாரணத்துக்கு, தர்மம் செய்யும்போது, பேசிக்கொண்டே கொடுக்கக்கூடாது. இதுபோல் சில விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். தவளை இரண்டடி ஏறும், மூன்றடி விழும் என்பது போல, பிராயச்சித்தம் பண்ணப்போக மீண்டும் பாவத்தில் விழக்கூடாது.

பிராயச்சித்தத்தில் சிறந்தது பசு, காளைகளை பாதுகாப்பது. குறிப்பாக, அதுவரை பால் தந்து, கறவை நின்று போன மாடுகளைப் பாதுகாப்பது. இதையெல்லாம் விட சிறந்த பிராயச்சித்தம் என்ன தெரியுமா!

"பகவானே! உன் திருவடிகளைப் பற்றி விட்டேன்,'' என்று சொல்லிவிட்டால் போதும். பாவம் முழுமையாகத் தீர்ந்து விடும். இதைத்தான் "குறையொன்றுமில்லை'' என்கிறாள் ஆண்டாள்.

""நாங்களோ அறிவிலிகள், எங்களிடம் சீறியருளாதே,'' என்று உருகுகிறாள். எத்தனை பாவம் செய்தாலும், ஆண்டாளைப் போல் அவனைச் சரணடைந்து விட்டால் பாவங்களைத் தொலைத்து விட முடியும்.

"நான் நித்தமும் கீதை படிப்பேன், ஆனால், விடாமல் கவலைப்படுவேன்,'' என்று சொல்லக்கூடாது. கீதையைப் படித்த பிறகு கவலையையும் வரவழைத்துக் கொண்டால், அவனிடம் நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம். பகவானை நாம் விசுவாசிக்க வேண்டும், அவன் சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

புண்ணியம், பாவம் என்றெல்லாம் சொல்கிறோமே! நாம் செய்யும் செயல்களை பாவம், புண்ணியம் என்று எப்படி அடையாளம் தெரிந்து கொள்வது! வேதம் படிக்கணும், கவுதமரின் போதாயான சூத்ரம் படிக்கணும், மனு ஸ்மிருதியைப் படிக்கணும்... இப்படியெல்லாம் செய்தால் புண்ணியம் சேரும் என்கிறார்களே!

இதுபற்றியெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாதே! அப்படியானால் பாவ, புண்ணியம் என்பதை நிர்ணயித்துக் கொள்வது எப்படி!

இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சுலபம்... பகவானுக்கு பிடித்தால் அது புண்ணியம், பிடிக்காவிட்டால் அது பாவம்.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்