சனி, 2 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 24 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 13 – பகுதி - 2

ஶரீரத்தில் ருசி போனபின்:

ஶரீரத்தில் ருசி போய்விட்டாலே இதுக்கு ரொம்ப அலங்காரம் எல்லாம் பண்ணமாட்டோம். நாம் கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறோம். நாம் அலங்காரம் பண்ணிக் கொண்டோமனால் கண்ணாடியில் இருக்கும் தோற்றத்துக்கும் அலங்காரம் ஆகிவிடும் அல்லவா? அதையே கண்ணாடியில் சந்தனம் வைத்து, அதற்கு பூச்சூடினால் என்ன ஆகும். நாம் புத்தி இழந்திருக்கிறோம் என்றுதானே அர்த்தம். புத்தி இழந்தவன் தானே இல்லாதவானாகிறான். 

ப்ரஹ்மம் ஆராதனை: 

ப்ரஹ்மத்தின் கண்ணாடி பிரதிபலிப்புபோல நான். மாத்வ ஸம்ப்ரதாயத்தில் இதை நன்றாகச் சொல்வார்கள். நமக்கு என்ன செய்து கொள்ள வேண்டுமென்றாலும் ப்ரஹ்மத்துக்கு ஆராதனை செய்யுங்கள் என்கின்றனர். அவருக்குப் பூச்சூட்டு. அலங்காரம் செய். அப்பொழுது ஆத்மாவுக்கு அலங்காரம் பண்ணியது போலாகும். எதைப்போல? கண்ணாடியில் இருக்கும் பெண்ணுக்குப் பூச்சூட வேண்டுமென்றால் எதிரிலிருக்கும் பெண் பூச்சூடிக்கொள்ள வேண்டும் அல்லவா.. ஆகையினாலே நீ ஆத்மாவுக்கு ஒரு அலங்காரமும் பண்ணவேண்டாம். பரமாத்மாவுக்கு ஆராதனம் ஒழுங்காகப் பண்ணினாயேல் பிரதிபலிப்பான ஜீவாத்மா ஒழுங்காக நடந்துப்பார் இல்லையோ!

அவருக்கு ஆராதனம் பண்ணாதது முதல்தப்பு. இதைத்தவிர நான் குற்றங்களையும் சேர்த்துக் கொண்டே போனேன் என்றால் என்நிலை என்னவாகும்.

தாபத்ரயீ ஜநித து:க நிபாதிநோSபி – தாபத்ரயம் – ஆத்யாத்மிக, ஆதிதைவிக, ஆதி பௌதிக. இந்த மூன்று தாபத்தாலே பிறந்த துக்கத்திலே நன்னா விழுந்து ஆழ இருக்கிற சேறிலே புதைந்துவிட்டேன்.

மம து தேஹ ஸ்திதௌ ருசி: – எனக்கோவென்றால் இந்த தேஹத்தில் இருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. நன்னா காமத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். ரொம்ப நன்னா இருக்கிறதா நினைத்துக் கொண்டும் இருக்கிறேன். குடிப்பழக்கம் உள்ளவருக்கு அது ஏதோ ஆனந்தத்தைக் கொடுப்பதாகத் தானே நினைக்கிறார். தப்புன்னு புரியமாட்டேன் என்கிறது. ஆத்மஞானம் வந்தால் புரிந்துவிடும். தன்னை சுற்றி இருக்கிறவர்கள் இதனால் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று புரிந்தால் புரிந்துவிடும். நாம் இதனால் எவ்வளவு பெரிய இன்பத்தை இழந்துகொண்டிருக்கிறோம் என்பது புரிந்தாலும் இது தீமை என்று புரிந்துவிடும். இது அப்ராப்தம். பகவானது சுகமோ ப்ராப்தம். ஏணிவைத்தாலும் எட்டாது. ஆனால் அது தெரியாமல் தவிக்கிறோம் இல்லையா?


மம தேஹ ஸ்திதௌ ருசி ரஸ்து: – எனக்கு இந்த ஶரீரத்தில் இருக்கிறதில் ருசி இருக்கிறது. ஒரு பேட்டி எடுக்கிறார். ஸ்வாமி “அடுத்த பிறவியில் என்னவா பிறக்க ஆசைப்படுகிறீர்?” பலர் பலவிதமாகச் சொன்னார்கள். ஒரு பத்து வயதுப் பிள்ளை சட்டுன்னு சொன்னான், “நீர் உபன்யாஸம் பண்ணிக் கொண்டிருப்பதே அடுத்தபிறவி எடுக்கக் கூடாது என்பதற்குத் தானே. ஏன் என்னமா பிறக்கணும் என்று கேட்கிறீர்”. அவன் ஒருத்தன்தான் புரிந்து கொண்டுள்ளான். மற்ற பெரியவா எல்லாம் ஏதோ எப்படிப் பிறக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது அந்த 10 வயது பையனே உண்மையைப் புரிந்து கோண்டுள்ளான். 60 வயதுக்கார ஶரீரத்தில் ருசி உள்ளவராக இருக்கிறார். ஆனால் பத்து வயது பையனோ ஶரீரத்தில் இருக்கவே கூடாது என்று தோன்றுகிறதென்றால் அனாதி காலமாக வந்திருக்கிற புண்ணியத்தின் பலன். 

அந்தப் புண்ணியம் நமக்கு இல்லையெனில் கூட ஆசார்யன் உபதேசத்தைக் கேட்டுத் திருந்திவிட வேண்டுமல்லவா? அந்த உபதேசத்தையும் ஏற்றுக் கொண்டு மாறலாம் இல்லையா! அதையும் செய்ய மாட்டோம் என்கிறோம். தனக்காகவும் தெரியாது, சொன்னாலும் புரியாது என்பது போல நடந்துகொள்கிறோம். ஒரே காரணம், மோஹம். விவேக ஞானம் இல்லாமை. 

எனக்கு ருசி தேஹ ரக்ஷணத்திலேயே இருக்கிறது:

ந தத் நிவ்ருத்தௌ ந ருசி - இந்த தேஹத்தை தொலைத்துக் கொள்வதற்கு ருசி இல்லை. இதற்கு காரணம் எது தெரியுமோ:

ஏதஸ்ய காரணம் அஹோ, மம பாபமேவ – இதற்குக் காரணம் எது தெரியுமோ, என்னுடைய பாபமே. அனாதிகால பாபமே காரணம். 

இந்த மூன்று வரிகளில் தனது கஷ்டத்தைச் சொல்லிவிட்டார். ஸ்ரீ ராமானுஜர் திரும்ப கேட்கிறார். நன்னா சொல்லிவிட்டீர். என்னை என்ன பண்ணணும் என்கிறீர்? 

நாத! – ஸ்வாமி. எனக்கும் உனக்கும் ஸம்பந்தம் இருக்க்கிறதே. எங்கோ சேற்றில் கிடந்த என்னைக் கொண்டுவந்து யதிராஜ விம்ஶதி அளவுக்குப் பாட வைத்துவிட்டீரே. அடியேனுடைய பாபத்தை நீர்தான் போக்கிக் கொடுக்கவேண்டும். நமக்கு அதற்கு சக்தியில்லை. 

த்வமேவ ஹர தத் யதிராஜ! ஸீக்ரம் – யதிராஜரே அதை ஸீக்ரமாகப் போக்கிவிடும். மெதுவாப் போக்கினால் என்ன? என்று கேட்டார். அதுக்குள்ள நான் அடுத்த பிறவி எடுத்துவிட்டேன் என்றாலும், அது மனுஷ்யப் பிறவியாய் இல்லையென்றால். 

ஸ்ரீபெரும்புதூருக்கு வாருங்கள்:

இப்ப மனிதப்பிறவி எடுத்துள்ளேன். “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது”. அதுலேயும் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கிற உம்மைத் தெரிந்துகொள்கிற பிறவியாகி உம்மிடம் வந்து சேர்ந்தேன் அல்லவா! எத்தனை பேருக்கு அவரைத் தெரிந்து இருக்கும். அப்படியே தெரிந்து இருந்தாலும் அவரைப் பற்றி எத்தனை புஸ்தகம் படித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி என்ன தெரிந்துகொண்டு ஶரணம் என்று வந்திருக்கிறீர்கள்? அப்படி கேட்டால் ஆயிரத்தில் ஒருத்தர் தெரிந்து இருக்கிறது என்பார். அதில் ஆயிரத்தில் ஒருத்தர் புஸதகம் படித்துத் தெரிந்து கொண்டுள்ளேன் என்பார். அதில் ஆயிரத்தில் ஒருத்தர் ஶரணம் என்று வந்து சேருவார். அதுல ஆயிரத்தில் ஒருத்தர் பிரயத்தனம் செய்வார். அதுல ஆயிரத்தில் ஒருத்தருக்கு விஷயாந்தரத்தில் ருசி குறையப் போகிறது. அதுல ஆயிரத்தில் ஒருத்தர் மேல் பகவானுக்குத் த்ருப்தி ஏற்பட்டு மோக்ஷத்தைக் கொடுக்கப் போகிறார்.

எல்லா நெல்லுமா வீட்டிற்குள் வந்து விடுகிறது: 

களத்துமேட்டில் நெல் அடித்துக் கொட்டி வைத்திருக்கிறார்கள். எல்லா நெல்லும் வீட்டிற்கு வந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். வண்டியில் மூட்டையாகக் கட்டி ஏற்றுகிறார்கள். சில நெல் மணிகள் தவறி கீழே விழுந்து சக்கரத்தில் நசுங்குண்டு விடுகின்றான். அந்த நெல் மணிக்குள் இருந்த அரிசிக்கு நேர்ந்தது என்ன? வீட்டிற்கு வரமுடிந்ததா? இந்த அரிசியைவிட சிறியதாய்த்தான் இருக்கிறது ஜீவ ஸ்வரூபம். எங்க அடித்துக்கொண்டு போவான்? என்ன பிறவி கிடைக்கும் என்றெல்லாம் யாரால் சொல்லமுடியும்? இப்ப இந்த நிமிஷத்தில் இப்படி ஒரு பிறவி கிடைத்திருக்கிறது. தேவரீர் இந்த வினாடி விட்டு விட்டீர் என்றால் நான் எங்க போவேன் என்றோ, உம்ம பின்னாடி வருவேன் என்றோ தெரியாது. 

ஆக யதிகளுக்கு தலைவரே, இந்தப் பிறவியிலேயே சீக்கிரம் எனது பாபங்களைப் போக்கிவிடும். ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிக என்று மூன்று. அதில் ஆத்யாத்மிகத்தை இரண்டாகப் பிரிக்கிறார். ஶரீரம் – மானஸம். என்ன என்ன கஷ்டங்கள் படுகிறோம் என்பதைப் பார்ப்போம்: 

ஶரீரத்தில் ஜுரம் முதலான வியாதிகள், மானஸத்தில் காம க்ரோதங்கள். ஆத்யாத்மிகம் என்பது நம்மால் ஏற்படும் பிரச்சினைகள். அது ஶரீரத்திலோ, மனதிலோ ஏற்படலாம். ஶரீரத்தில் ஜுரம் வந்தது. பித்தம், வாதம், கபம் வந்தது. மனதில் காமம், க்ரோதம் முதலானவை. காமக் க்ரோதங்களுக்கு வைத்தியர் யார்? ஶரீரத்தில் வரும் ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொர் நிபுணர் வைத்தியம் செய்ய இருக்கிறார். 

காமக்ரோதத்தைப் போக்கும் நிபுணர் யார்? ஒரே ஒரு வைத்தியர் ஸ்ரீபெரும்பூதூர் போகவேண்டும். ஒரே ஒரு வைத்தியர்தான். ஒருதடவைதான் வைத்தியம் பார்ப்பார். லௌகீக வைத்தியர் வைத்தியம் பார்த்தால் ஶரீரம் இருக்கும். அந்த ஸ்ரீபெரும்பூதூர் வைத்தியர் வைத்தியம் பார்த்தால் கிளம்பிவிடுவோம். 

ஆதிபௌதிகம் என்றால் மிருகங்கள், பக்ஷிகள், இவற்றால் ஏற்படும் ஆபத்துக்கள். ஆதிதைவிகம் என்றால் இடி, மின்னல், சுனாமி, பூகம்பம், சீதோஷ்ணம் மாற்றங்கள். அங்க அங்க இருக்கிற பனிப்பாறைகள் எல்லாம் உருக ஆரம்பித்துவிட்டது. கடல் மட்டம் ஏற ஆரம்பித்துவிட்டது. ஆகாசத்தில் ஓட்டை விழுந்துவிட்டது. அதுவழியாக சூரிய ஒளியெல்லாம் நேராக நம் தோலில் படுகிறது. தோல் வறண்டுபோய்விடும். மனித இனமே மாறும். திடீர், திடீரென மழை பெய்யும். இது அத்தனையும் ஆதி தைவிகம்.

ஒரே போட்டி பொறாமை

இது மூன்றினால்தான் நான் ரொம்பவே துன்பபட்டுப் போயிருக்கின்றேன். இத்தனை துக்கத்தைப்பட்டுக்கொண்டே இருந்தும் இன்னும் இந்த தேஹத்தில் இருக்கிறதுக்கே ருசி இருக்கிறது. அதுமட்டும் ஏன் என்று தெரியவில்லை. உடம்பும் படுத்துகிறது, உறவுக்காரனும், ஏன் நண்பனும் படுத்துகிறார்கள். எல்லாரும் எமாத்துகிறார்கள். ஒரே போட்டி பொறாமை. இத்தனை இருந்தும் கிளம்புற புத்தி வரவே மாட்டேன் என்கிறது. இப்ப கூட புறப்படு என்று சொல்லவில்லை. அடுத்த பிறவி வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். பகவானும் இப்பவேண்டாம் இந்த ஶரீரம் கீழே விழுந்தவுடன் உனக்கு முக்தி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். 

ஸ்ரீ ராமானுஜர்: அடுத்த பிறவி உனக்கு எப்படி இருக்கிறது என்று தெரியாது. தாழ்ந்ததா இருக்குமோ என்பதால் வேண்டாம் என்று சொல்கிறீர். உசந்ததா இருந்துவிட்டால் நான் இழந்துவிடுவேனே என்று நான் சொல்கிறேன்! பணக்காரனாய் இல்லாமல் எலி புழுவாய்ப் பிறந்தால் என்ன செய்யப் போகிறாய் என்கிறார் ஆசார்யர். 

பிறவியில்லா பேரின்பம்

அதுக்குத்தான் உம்மிடம் பிரார்த்தனை செய்கிறோம். அப்படி பிறக்க வைக்காதீர் என்கிறோம். “நான்தான் பிறவியே இல்லாத நிலையை ஏற்படுத்திக் கொடுக்கிறேன் என்கிறேனே இருந்தாலும் நீ இப்படிப் பிறக்கிறேன் அப்படிப் பிறக்கிறேன் என்கிறாயே” என்கிறார் ஆசார்யர். நமக்கு இன்னும் அந்த பிறவியில்லா பேரின்பம் புரியவில்லை. ஆகவே அதைக் கேட்க மனம் வரவில்லை. 

ராமானுஜரே என் அனாதி கால கர்மங்களையும் போக்கி, இந்த ஶரீரத்தில் ருசியையும் போக்கிக் கொடுக்கணும்.

தாபத்ரயீஜநித து:க நிபாதிநோSபி
தேஹஸ்திதௌ மம ருசிஸ்து ந தந்நிவ்ருத்தௌ |
ஏதஸ்ய காரணம் அஹோ மம பாபமேவ
நாத! த்வமேவ ஹர தத் யதிராஜ! ஸீக்ரம் || (13)

13 வது ஸ்லோகம் முற்றிற்று.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக