செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

தர்ம வழி - ஶ்ரீ ஜமதக்னிஜீ

“ ‘தர்மம் சர’ என்கிறது வேதம். அந்த தர்ம வழியில் வாழ்ந்து அதை நமக்கெல்லாம் போதித்தவர் சாட்சாத் ராமசந்திர மூர்த்தி. ராமாயணம் முழுக்க அந்த தர்மம் போஷிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு இருக்கிறது. ராமர் எப்படி எல்லாம் தர்மத்தின் வழி நின்றார்ங்கறதை பற்றி கொஞ்சம் பார்ப்போமா?” என்றபடி தமது சொற்பொழிவை துவக்கினார் ஸ்ரீ ஜமதக்னி ஜீ.

''ராமர் சீதையை வால்மீகி ஆஸ்ரமத்துக்கு அனுப்பி விட்ட நேரம். அப்போ ராமருக்கு யாகம் வளர்க்க வேண்டிய ஒரு சூழல் வந்தது. பக்கத்திலேயே வசிஷ்டர் இருந்தார். சீதா இல்லாம எப்படி யாகம் பண்றது? சீதையும் லக்ஷ்மியும் ஒண்ணுதான். ஸ்வர்ண ரூபமாகதான் மஹா லக்ஷ்மி இருப்பா. அதனால, தங்கத்தால் சீதையின் உருவத்தைச் செய்து தன் பக்கத்தில் அதனை நிறுத்திக் கொண்டு யாகம் பண்ணார் ராமர். தங்கம் விக்கற விலைல லக்ஷ்மியை தங்க வைக்க தங்கத்தை வாங்க முடியாதேன்னு நமக்கு சொல்லத் தோணும். ஆனா, லக்ஷ்மி எங்கெல்லாம் தங்குவாள்னு தெரியுமா? 

* அமங்கலச் சொல் கேட்காத வீட்டுல லக்ஷ்மி தங்குவா. 

* தூய்மையாகப் பராமரிக்கப்படுகிற, தவறாமல் விளக்கு ஏற்றப்படுகிற வீடுகளில் லக்ஷ்மி தங்குவா. 

* இன்சொல், பரிவு, அன்பு, உதவும் குணம், மரியாதை... இப்படிப்பட்ட தன்மைகள் நிரம்பிய வீடுகள்ல லஷ்மி தங்குவா... 

* பசு, பெரியவர்கள், குழந்தைகள், நோயாளிகள்... இவர்களை அக்கறையும், பரிவுமா பராமரிக்கிற வீடுகள்ல லஷ்மி தங்குவா. இப்படி சின்னச் சின்ன விஷயங்கள் பல இருக்கு. இதைச் செய்தா லக்ஷ்மி தங்குவா. அது மட்டுமல்ல; தர்மம் தங்கற இடத்துல லக்ஷ்மியும் தங்குவா.

அந்த தர்மத்தை ஸ்தாபிக்க வந்தவர் ராமர். வால்மீகி எழுதிய ராமாயணத்தில் நமக்கு இப்போது இருப்பது 24,000 ஸ்லோகங்கள் மட்டும்தான். மனிதர்கள் செய்யற அத்தனை விஷயங்களையும் செய்தார் ராமர். தெய்வத்தைக் காட்டிலும் உயர்வானவர்கள் ரிஷிகள். எல்லா தெய்வங்களுமே ரிஷிகளை வணங்குவார்கள். சிவபெருமான் சப்த ரிஷிகளையும் நமஸ்காரம் செய்ததை புராணங்கள் கூறும். ராமரும் அப்படித்தான் அகஸ்தியரை நமஸ்காரம் செய்து அவரது ஆசிக்கு பாத்திரம் ஆகிறார். ரிஷிகளுக்கும் சன்யாசிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ரிஷிகள் தம் மனைவியோடு வாழ்வார்கள். தபஸ், யாகம் போன்றவைகளைச் செய்வார்கள். சன்யாசிகளுக்கு இது அவசியமில்லை.

ஒரு நாள் ஜடாயு இருக்கும் திக்கைப் பார்த்து போகும்படி ராமரை பணித்தார் அகஸ்தியர். ஒரு பெரியவர் சொல்லிட்டார்ன்னா அதை அப்படியே ஏத்துக்கணும். அதுதானே தர்மம். அதைத்தான் செய்தார் ராமர். ஒரு குடிசைக் கட்டி அதற்கு கிருஹ ப்ரவேசமும் பண்ணாராம் ராமர். ஐந்து வயதில் பூணல் போட்டுண்டார், 10 வருட காலம் குருகுல வாசம் பண்ணார். அனுஷ்டானத்தை விடாமல் கடைப் பிடித்தார் அவர்.

தினமும் நாம சொல்ற சுப்ரபாதத்தோட முதல் ஸ்லோகம் எப்படி வந்தது தெரியுமா? விஸ்வாமித்ரர் ராமரை எழுப்பறதுதான் அந்த ஸ்லோகம். 'கௌசல்யாவுக்கு பிறந்தவனே, கிழக்கு வெளுக்கிறது ராமா, நரசிம்ஹ அவதாரம் செய்தவனே...' இதுதான் அதன் அர்த்தம். சித்தாஸ்ரமத்துல செய்த யாகத்துக்கு பாதுகாப்பு வேண்டி ராம, லக்ஷ்மணரை கூட்டிக் கொண்டு போன சமயத்துல, விஸ்வாமித்ரர் சொன்ன ஸ்லோகம் இது. இன்னொரு விஷயமும் இருக்கு. காலைல குழந்தைகளை இனிமையா எழுப்பணும். 'மணியாச்சு எழுந்திரு'னு சிடுசிடுக்கக் கூடாதுன்னு நமக்குப் பாடம். தெய்வங்களே செய்து காட்டினால் தான் நாம் செய்வோம். அதனாலதான் தெய்வங்களே நிறைய தர்மங்களை நமக்குச் செஞ்சு காமிச்சிருக்கா.

ஆரண்ய காண்டத்துல, மார்கழி மாசத்துல அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து ஸ்நானம், சந்தியாவந்தனம் எல்லாம் செய்கிறார் ராமர்.

இறந்த ஜடாயுவுக்கு கர்மா பண்ணார். 'ஜடாயு அப்பாவுக்கு சமமானவர். அப்பா இறந்தபோது சித்ரக்கூடத்தில் இருந்தோம். சரியா அவருக்கு திதி கொடுக்க முடியல. அதனால அக்னி மூட்டி சகல மந்திரமும் சொல்லி ஜடாயுவுக்கு திதி கொடுப்போம்' னு கர்ம ஸ்ரத்தையாக திதி பண்ணினார் ராமர். பறவைக்கெல்லாம் கர்மாவான்னு கேட்கக் கூடாது. அது சாதாரண பறவை கிடையாது. ராவணனையே எதிர்த்து போரிட்டது ஜடாயு.

காஞ்சிபுரம் பக்கத்துல இருக்கற திருப்புட்குழில ஜடாயுவுக்கான சம்ஸ்காரங்களை ராமர் பண்ணதா சம்பிரதாயம். கும்பகோணத்துல தன்னையே கதின்னு நின்ன ஒரு பையனுக்கு வருடம் தோறும் சிராத்தம் செய்யறார் சாரங்கபாணி பெருமாள். இதெல்லாம் ஏன்?

சாஸ்திரங்கள் நம் தலைமுறையைக் காப்பாத்தத்தான் சில வழிகளைக் காட்டியிருக்கு. அதை விடாம, நம்பிக்கையோட செய்யணும். அப்படிச் செய்யறதால, நாம் அடுத்த தலைமுறையையும் காப்பாத்தித் தரோம்னு அர்த்தம். நம்ம வம்சத்தை மட்டுமல்ல; ஒவ்வொரு வம்சமும் இப்படி நீண்டு நிலைக்கணும். ஆல்போல தழைச்சு அருகு போல வேரோடணும். அதனால, தர்மத்துல இருந்து பிறழாம இருப்போம். அந்த தர்மம் நம்மைக் காப்பாத்தும்.''

தொகுத்தவர் - நளினி சம்பத்குமார்

நன்றி - தீபம் ஜனவரி 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக