ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினேழாவது அத்தியாயம்
(வர்ணாச்ரம தர்மங்களை விவரித்துக் கூறுதல்)
உத்தவர் சொல்லுகிறார்:- இவ்வுலகத்திலுள்ள யாவரும், தங்கள் தங்கள் வர்ணங்களுக்கும் (ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர என்பவை வர்ணங்கள் - ஜாதிகள்), ஆச்ரமங்களுக்கும் (ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ என்பவை ஆச்ரமங்கள்) உரிய தர்மங்களை அனுஷ்டித்துக்கொண்டு, உன்னிடத்தில் பக்தி செய்கையாகிற தர்மத்தை அனுஷ்டிப்பார்களாயின் உன்னைப் பெறுவார்களென்று நீ மொழிந்தாய். தாமரைக் கண்ணனே! வர்ணங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் ஏற்பட்ட தர்மங்கள் எவை? அவற்றை எப்படி அனுஷ்டித்தால் உன்னிடத்தில் பக்தி உண்டாகும்? அதையெல்லாம் எனக்குச் சொல்ல வேண்டும்.
மஹாபாஹுவே! (வலிமையான தோள்களை உடையவனே!) ப்ரபூ! முன்பு நீ ஹம்ஸ ரூபியாய் ப்ரஹ்ம தேவனுக்கும், ஸனகாதிகளுக்கும் மேலான தர்மத்தை உபதேசித்தாய். சத்ருக்களை அழிப்பவனே! இப்பொழுதைக்கு நெடுங்காலமானமையால், முன்பு நீ உபதேசித்த அந்த தர்மம் மனுஷ்ய லோகத்தில் பெரும்பாலும் வழங்கி வராமல் விச்சின்னமாய் விட்டது (தடைபட்டு விட்டது).
அச்சுதனே! ஆகையால், அந்த தர்மத்தை உபதேசிப்பவனும், அதை அனுஷ்டிப்பவனும், பாதுகாப்பவனும் உன்னையொழிய மற்றொருவனும் இல்லை. எவ்விடத்தில் வித்யைகளெல்லாம் மூர்த்தீகரித்து (வடிவு பெற்று) விளங்குகின்றனவோ, அத்தகைய ப்ரஹ்ம ஸபையிலும், இந்த தர்மத்தை உபதேசிப்பவனாவது, அனுஷ்டிப்பவனாவது, காப்பவனாவது கிடையாது.
மதுஸூதனனே! அனுஷ்டிக்கவும், பாதுகாக்கவும், உபதேசிக்கவும் வல்லவனாகிய நீ, இப்பூமண்டலத்தை விட்டுப் போகையில், விச்சின்னமான (தடைபட்டுப் போன) இந்த தர்மத்தை எவன் உபதேசிக்கப் போகிறான்? எவனும் இல்லை. ஆகையால் நீயே உபதேசிக்க வேண்டும். ஸர்வ தர்மங்களையும் அறிந்தவனே! ப்ரபூ! அவ்வாறு அனுஷ்டிக்கவும், பாதுகாக்கவும், உபதேசிக்கவும் வல்லவனாகிய நீ பக்தியோகமாகிற தர்மம் எவரெவர்க்கு எவ்வெப்படி ஏற்பட்டிருக்கின்றதோ அதை எல்லாம் அப்படியே உபதேசிப்பாயாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தன் பக்தர்களில் முக்யராகிய உத்தவரால் வினவப்பெற்ற அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான் ஸந்தோஷம் அடைந்து, மனுஷ்யர்களின் க்ஷேமத்திற்காக ஸனாதன தர்மங்களை உபதேசித்தான்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உத்தவனே! நீ கேட்ட கேள்வி ப்ராணிகளுக்கு ஹிதம் (நன்மை) செய்கையாகிற தர்மத்தினின்று நழுவாதிருக்கின்றது. இது வர்ணாச்ரம தர்மங்களுக்குட்பட்ட மனுஷ்யர்களுக்கு மோக்ஷத்தை விளைக்க வல்லது. உத்தவனே! பக்தி யோகத்திற்கு உதவி செய்வதும், வர்ணாச்ரமங்களைத் தொடர்ந்திருப்பதுமாகிய அந்த தர்மத்தைச் சொல்லுகிறேன்; கேட்பாயாக.
முன்பு க்ருத யுகத்தில் ஹம்ஸமென்று ஒரே வர்ணம் உண்டாயிருந்தது (க்ஷத்ரியாதி வர்ணங்கள் இல்லை.) அந்த ஹம்ஸ ஜாதியினால், மனுஷ்யர்களெல்லாரும் ப்ரயோஜனங்கள் (பலன்கள்) எல்லாம் கைகூடப் பெற்றிருந்தார்களாகையால், க்ருதயுகமென்று பேராயிற்று எனக் கூறுகிறார்கள். அப்பொழுது ப்ரணவம் மாத்ரமே வேதமாயிருந்தது. (ருக், யஜுஸ், ஸாமங்கள் என்கிற இம்மூன்று வேதங்களும் அப்பொழுதில்லை). தர்மமும், மனத்திற்கு விஷயமாகிய நானே வ்ருஷபத்தின் (காளையின்) உருவம் தரித்து, நான்கு பாதங்களுடன் இருந்தேன். அப்பொழுதுள்ள மனுஷர்கள், கேவலம் த்யானயோக (த்யானத்தில்) நிஷ்டர்களாகி (ஊன்றியவர்களாய்), எவ்வித தோஷமும் தீண்டப்பெறாமல் பரிசுத்தனாயிருக்கின்ற என்னை உபாஸித்து, என்னைப் போலவே பரிசுத்தர்களாயிருந்தார்கள். ஆனது பற்றியே அவர்களுக்கு ஹம்ஸர்கள் என்று பேராயிற்று.