சனி, 31 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 323

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினேழாவது அத்தியாயம்

(வர்ணாச்ரம தர்மங்களை விவரித்துக் கூறுதல்)

உத்தவர் சொல்லுகிறார்:- இவ்வுலகத்திலுள்ள யாவரும், தங்கள் தங்கள் வர்ணங்களுக்கும் (ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர என்பவை வர்ணங்கள் - ஜாதிகள்), ஆச்ரமங்களுக்கும் (ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ என்பவை ஆச்ரமங்கள்) உரிய தர்மங்களை அனுஷ்டித்துக்கொண்டு, உன்னிடத்தில் பக்தி செய்கையாகிற தர்மத்தை அனுஷ்டிப்பார்களாயின் உன்னைப் பெறுவார்களென்று நீ மொழிந்தாய். தாமரைக் கண்ணனே! வர்ணங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் ஏற்பட்ட தர்மங்கள் எவை? அவற்றை எப்படி அனுஷ்டித்தால் உன்னிடத்தில் பக்தி உண்டாகும்? அதையெல்லாம் எனக்குச் சொல்ல வேண்டும்.

மஹாபாஹுவே! (வலிமையான தோள்களை உடையவனே!) ப்ரபூ! முன்பு நீ ஹம்ஸ ரூபியாய் ப்ரஹ்ம தேவனுக்கும், ஸனகாதிகளுக்கும் மேலான தர்மத்தை உபதேசித்தாய். சத்ருக்களை அழிப்பவனே! இப்பொழுதைக்கு நெடுங்காலமானமையால், முன்பு நீ உபதேசித்த அந்த தர்மம் மனுஷ்ய லோகத்தில் பெரும்பாலும் வழங்கி வராமல் விச்சின்னமாய் விட்டது (தடைபட்டு விட்டது). 

அச்சுதனே! ஆகையால், அந்த தர்மத்தை உபதேசிப்பவனும், அதை அனுஷ்டிப்பவனும், பாதுகாப்பவனும் உன்னையொழிய மற்றொருவனும் இல்லை. எவ்விடத்தில் வித்யைகளெல்லாம் மூர்த்தீகரித்து (வடிவு பெற்று) விளங்குகின்றனவோ, அத்தகைய ப்ரஹ்ம ஸபையிலும், இந்த தர்மத்தை உபதேசிப்பவனாவது, அனுஷ்டிப்பவனாவது, காப்பவனாவது கிடையாது. 

மதுஸூதனனே! அனுஷ்டிக்கவும், பாதுகாக்கவும், உபதேசிக்கவும் வல்லவனாகிய நீ, இப்பூமண்டலத்தை விட்டுப் போகையில், விச்சின்னமான (தடைபட்டுப் போன) இந்த தர்மத்தை எவன் உபதேசிக்கப் போகிறான்? எவனும் இல்லை. ஆகையால் நீயே உபதேசிக்க வேண்டும். ஸர்வ தர்மங்களையும் அறிந்தவனே! ப்ரபூ! அவ்வாறு அனுஷ்டிக்கவும், பாதுகாக்கவும், உபதேசிக்கவும் வல்லவனாகிய நீ பக்தியோகமாகிற தர்மம் எவரெவர்க்கு எவ்வெப்படி ஏற்பட்டிருக்கின்றதோ அதை எல்லாம் அப்படியே உபதேசிப்பாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தன் பக்தர்களில் முக்யராகிய உத்தவரால் வினவப்பெற்ற அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான் ஸந்தோஷம் அடைந்து, மனுஷ்யர்களின் க்ஷேமத்திற்காக ஸனாதன தர்மங்களை உபதேசித்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உத்தவனே! நீ கேட்ட கேள்வி ப்ராணிகளுக்கு ஹிதம் (நன்மை) செய்கையாகிற தர்மத்தினின்று நழுவாதிருக்கின்றது. இது வர்ணாச்ரம தர்மங்களுக்குட்பட்ட மனுஷ்யர்களுக்கு மோக்ஷத்தை விளைக்க வல்லது. உத்தவனே! பக்தி யோகத்திற்கு உதவி செய்வதும், வர்ணாச்ரமங்களைத் தொடர்ந்திருப்பதுமாகிய அந்த தர்மத்தைச் சொல்லுகிறேன்; கேட்பாயாக. 

முன்பு க்ருத யுகத்தில் ஹம்ஸமென்று ஒரே வர்ணம் உண்டாயிருந்தது (க்ஷத்ரியாதி வர்ணங்கள் இல்லை.) அந்த ஹம்ஸ ஜாதியினால், மனுஷ்யர்களெல்லாரும் ப்ரயோஜனங்கள் (பலன்கள்) எல்லாம் கைகூடப் பெற்றிருந்தார்களாகையால், க்ருதயுகமென்று பேராயிற்று எனக் கூறுகிறார்கள். அப்பொழுது ப்ரணவம் மாத்ரமே வேதமாயிருந்தது. (ருக், யஜுஸ், ஸாமங்கள் என்கிற இம்மூன்று வேதங்களும் அப்பொழுதில்லை). தர்மமும், மனத்திற்கு விஷயமாகிய நானே வ்ருஷபத்தின் (காளையின்) உருவம் தரித்து, நான்கு பாதங்களுடன் இருந்தேன். அப்பொழுதுள்ள மனுஷர்கள், கேவலம் த்யானயோக (த்யானத்தில்) நிஷ்டர்களாகி (ஊன்றியவர்களாய்), எவ்வித தோஷமும் தீண்டப்பெறாமல் பரிசுத்தனாயிருக்கின்ற என்னை உபாஸித்து, என்னைப் போலவே பரிசுத்தர்களாயிருந்தார்கள். ஆனது பற்றியே அவர்களுக்கு ஹம்ஸர்கள் என்று பேராயிற்று. 

சனி, 24 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 322

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினாறாவது அத்தியாயம்

(விபூதியோகத்தைக் கூறுதல்)

உத்தவர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணா! ஒன்றான பரப்ரஹ்மம் நீயே. ஆதி (முதல்) அந்தம் (முடிவு) இல்லாதவன் ஆகையால் நீயே ஸர்வகாரணன் (எல்லாவற்றிற்கும் காரணம்). உனக்குக் கர்மமாகிற மறைவு கிடையாது. மற்றும், நீ உள்ளும், புறமும் வியாபித்திருப்பவன். ஆகையால், ஸமஸ்த (எல்லா) பதார்த்தங்களுக்கும் (ஜீவர்களுக்கும்) மோக்ஷத்திற்கு வேண்டிய அறிவைக் கொடுத்து, ஆத்ம உஜ்ஜீவனத்தை (ஆத்மாவிற்கு நல்வழியை) விளைப்பவனும், ஸம்ஸாரத்தில் அவ்வவற்றிற்கு வேண்டிய அபேக்ஷிதங்களைக் (விருப்பங்களைக்) கொடுத்து ரக்ஷிப்பவனும், துர்வாஸனையினால் (கெட்ட – அதாவது உலகியல் வாழ்வை மேன்மேலும் வளர்க்கக்கூடிய, ஆழ்ந்த முன் வினைப் பதிவுகளால்) விபரீதங்களைச் செய்து முடியப் பார்க்கிற ஆத்மாக்களுக்கு அந்த விபரீத வாஸனை மாற வேண்டுமென்று ப்ரக்ருதியில் மறைத்து வைக்கையாகிற ப்ரளயத்தை (ஊழியை, அழிவை) நடத்துபவனும், அவ்வாறு அனாதிகாலம் ப்ரக்ருதியில் மழுங்கி அஸத் கல்பராய் (அறிவற்ற ஜடப்பொருள் போல்) கிடக்கிற ஆத்மாக்கள் உஜ்ஜீவிக்க வேண்டுமென்னும் திருவுள்ளத்தினால் அவர்களுக்குக் கரண (இந்த்ரியங்கள்), களேபரங்களைக் (உடலைக்) கொடுக்கையாகிற ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறவனும் நீயே! (ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (நீடிப்பு), ஸம்ஹாரங்களும் (அழிவு), மோக்ஷமும் (விடுதலையும்) உன்னிடத்தினின்றே உண்டாகின்றன.) மேன்மையும், தாழ்மையும் உள்ள ஸமஸ்த பூதங்களிலும் நீ அமைந்திருக்கின்றாய். ஆயினும், அத்தகைய உன்னை இந்திரியங்களை வெல்ல முடியாத மூடர்கள், வருந்தியும் அறியவல்லராக மாட்டார்கள். 

ஷாட்குண்ய பூர்ணனே (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய)! வேதாந்தங்களை அறிந்த பெரியோர்கள், உன்னை உள்ளபடி அறிந்து உபாஸிக்கிறார்கள். உன்னை எந்தெந்த வஸ்துக்களில் உபாஸித்தால் பக்தி வளரப் பெற்று யோக ஸித்தியைப் பெறுவார்களோ, அதை எனக்கு விவரித்துச் சொல்லவேண்டும். 

ஞாயிறு, 18 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 321

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினைந்தாவது அத்தியாயம்

(பக்தியோகம் செய்யும் யோகிக்கு, பகவத் ப்ராப்தி விரோதிகளான அணிமாதி சித்திகள் ஸித்திக்கும் விதத்தைக் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ராண வாயுவை வென்று, இந்திரியங்களை அடக்கி, நிலை நின்ற மனமுடையவனாகி என்னிடத்தில் மனத்தை நிலைநிறுத்துகின்ற யோகிக்கு, அணிமாதி ஸித்திகள் (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன- 

  1. அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

  2. மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 

  3. லகிமா - லேசாகச் செய்தல் 

  4. கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 

  5. வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

  6. ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

  7. ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல் 

  8. ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை) உண்டாகின்றன. 

(ஆயினும் அவற்றில் மனப்பற்று செய்யலாகாது. அவை பகவத் ப்ராப்திக்கு விக்னங்களாம் (இடையூறுகளாம், தடைகளாம்.)

உத்தவர் சொல்லுகிறார்:- அச்சுதனே! எத்தகைய தாரணையினால் (ஆழ்ந்த உள் உணர்வினால்) ஸித்திகள் (பலன்) உண்டாகின்றன? அந்த ஸித்திகள் (பலன்) யாவை? அவை உண்டாகும் விதம் யாது? நீ யோகிகளுக்கு ஸித்திகளைக் (பலன்) கொடுப்பவனாகையால், அவற்றின் ஸ்வரூபம் எத்தகையதோ அதெல்லாம் உனக்கு நன்றாகத் தெரியுமல்லவா? ஆகையால் அதை எல்லாம் எனக்கு விசதமாகச் (விரிவாகச்) சொல்லவேண்டும். 

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்துகையாகிற தாரணை (ஆழ்ந்த உள் உணர்வு) என்னும் யோகத்தின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்த பெரியோர்கள், ஸித்திகள் பதினெட்டு என்று சொல்லுகிறார்கள். அவற்றில் எட்டு ஸித்திகள் என்னையே முக்ய ப்ரயோஜனமாகவுடையவை. மற்ற பத்து ஸித்திகளும், சப்தாதி விஷயங்களின் (உலக விஷயங்களின்) அனுபவத்தையே முக்ய ப்ரயோஜனமாகவுடையவை. ஆகையால் மீளவும் ஸம்ஸாரத்தில் மூட்டி விடும்.

  1. சரீரம் அணுவாயிருக்கப் பெறுகை, அணிமையென்னும் ஸித்தி; ஸூக்ஷ்ம (நுட்பமான)   வஸ்துக்களில் (பொருட்களில்) ப்ரவேசிக்கும் திறமையாம்.

  2. சரீரம் பெரிதாயிருக்கப் பெறுகை மஹிமையென்னும் ஸித்தி. 

  3. சரீரம் லேசான வஸ்துக்களைக் காட்டிலும் லேசாயிருக்கை, லகிமையென்னும் ஸித்தி

  4. ஸமஸ்த ப்ராணிகளுடைய இந்திரியங்களிலும் நுழைந்து அவரவர் அனுபவிக்கும் விஷயங்களோடு ஸம்பந்திக்கை (சேர்ந்திருக்கை) ப்ராப்தியென்னும் ஸித்தி. (அந்தந்த இந்த்ரியங்களின் அதிஷ்ட்டான (நியமிக்கும்) தேவதா (தேவதை) ரூபத்தினால் (வடிவினால்) அந்தந்த விஷயங்களோடு ஸம்பந்திக்கை (சேர்ந்திருக்கை) ப்ராப்தியென்னும் ஸித்தியாமென்று சிலர் சொல்லுவார்கள்.)

  5. இஹலோகத்திலுள்ளவைகளும், பரலோகத்திலுள்ளவைகளுமான விஷயங்களைப் பற்றின வ்யாபாரங்களில் மேன்மையுற்றிருக்கை ப்ராகாம்யமென்னும் ஸித்தியாம்.

  6. தனக்கும், பிறர்க்கும் எல்லா விஷயங்களிலும் திறமையை உண்டாக்குகை ஈசத்வமென்னும் ஸித்தியாம்.

  7. சப்தாதி விஷயங்களை (உலகியல் இன்பங்களை) அனுபவிக்கிலும் அவற்றில் பற்றில்லாமை (ஆசையில்லாமை) வசித்வமென்னும் ஸித்தியாம்.

  8. எந்த ஸுகத்தில் விருப்பமெல்லாம் ஸமுத்ரத்தில் திவலை (நீர்த்துளி) போல் ஸ்வல்பமாய் (சிறிதாய்) முடிந்து விடுகிறதோ, அத்தகைய ஆநந்தத்தை அனுபவிக்கை பரமாநந்தம் என்னும் ஸித்தியாம். 

நல்லியற்கை உடையவனே! இவ்வெட்டு ஸித்திகளும் என்னுடையவை; த்யான யோகம் கைகூடின யோகிக்கு ஸ்வபாவ (இயற்கையாக) ஸித்தங்களாய் (ஏற்படக்கூடியவையாய்) இருக்கும். எந்த தேஹத்தோடு யோகத்தை அப்யஸிக்கிறானோ (பயிற்சி செய்கின்றானோ), அந்த தேஹத்தில் சதை, மடிப்பு, நரை,மயிர், பசி,தாஹம் முதலியவையில்லாமை, தூரத்திலுள்ள ஸமஸ்த ப்ராணிகளுடைய சப்தங்களையும் கேட்கை , தூரத்திலுள்ள ஸமஸ்த வஸ்துக்களையும் ஸாக்ஷாத்கரிக்கை (நேரில் பார்ப்பது), எங்குப் போக வேண்டுமென்று மனத்தில் நினைக்கிறானோ, அவ்விடத்தில் அந்த க்ஷணமே தேஹத்தினால் (உடலோடு) போயிருக்கை, நினைத்தபடி உருவங்களை ஏற்றுக் கொள்கை, மரணமடைந்த பிறருடைய சரீரங்களில் ப்ரவேசிக்கை, நினைத்தபொழுது மரணம் அடைகை, அப்ஸர ஸ்த்ரீகளோடு தேவதைகள் அனுபவிக்கும் போகங்களைப் பெறுகை, நினைத்தவை எல்லாம் ஸித்திக்கை (கைகூடுகை), தன்னுடைய ஆஜ்ஞை (கட்டளை) எங்கும் தடைபடாதிருக்கை ஆகிய இவை பத்தும் குணஸித்திகளென்று கூறப்படும். 

மற்றும், வருங்காலம், நிகழ்காலம், கழிகாலம் (இறந்த காலம்) ஆகிய மூன்று கால கதிகளையும் அறிகை, குளிர், வெயில் முதலிய த்வந்த்வங்களால் (இரட்டைகளால்) வருந்தாமை, பிறருடைய சித்தம் (எண்ணம்), சேஷ்டை (செயல்) முதலியவற்றை நன்றாக அறிகை, அக்னி, ஸூர்யன், ஜலம், விஷம் இவை முதலியவற்றை ஸ்தம்பனம் செய்கை (நிறுத்துதல்), எங்கும் தோல்வியடையாமை இவைகளும் யோக தாரணத்தினால் (ஆழ்ந்த உள் உணர்வினால்) விளையும் ஸித்திகளென்று சொல்லுகிறார்கள். எந்த தாரணையால் (ஆழ்ந்த உள் உணர்வினால்) எந்த ஸித்தி (பலன்) எப்படி உண்டாகுமோ அதையெல்லாம் விவரித்துச் சொல்லுகிறேன்: தெரிந்து கொள்வாயாக. 

சனி, 17 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 320

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினான்காவது அத்தியாயம்

(பக்தி யோகத்தின் சீர்மையையும், த்யானத்தின் ஸ்வரூபத்தையும், அதன் ஸாதனங்களையும் கூறுதல்)

உத்தவன் சொல்லுகிறான்:- ஸ்ரீக்ருஷ்ணா! வேதங்களை ஓதியுணர்ந்து, பிறர்க்கு உபதேசிக்கும் தன்மையரான பெரியோர்கள், தர்மம், அர்த்தம், காமம் முதலிய புருஷார்த்தங்கள் (ஜீவாத்மாவால் விரும்பி அடையப்படக்கூடியவை) பலவும், அவற்றிற்கு ஸாதனங்கள் பலவும் உளவென்று சொல்லுகிறார்கள். நீயோ, மோக்ஷம் ஒன்றே புருஷார்த்தமென்றும், பலன்களை அபேக்ஷியாமல் (விரும்பாமல்) செய்கிற பக்தி யோகமே அதற்கு ஸாதனம் என்றும் மொழிந்தாய். நீ சொன்ன மோக்ஷம் என்னும் புருஷார்த்தம் மற்றவர் சொல்லுகிற தர்மாதி புருஷார்த்தங்களில் அடங்கியிருக்குமாயின், அவர்கள் சொல்லுகிற ஸாதனங்களோடு நீ சொல்லுகிற பக்தி யோகமென்னும் ஸாதனத்திற்கு விகல்பமாம். (அதாவது அவர்கள் சொல்லுகிற ஸாதனங்களையாவது, நீ சொல்லுகிற ஸாதனத்தையாவது ஏதேனும் ஒன்றை அனுஷ்டிக்கலாமென்று கருத்தாகும்.)

தர்மாதி புருஷார்த்தங்களைக் காட்டிலும் மோக்ஷ புருஷார்த்தம் விஜாதீயமாய் (வேறாய்) இருக்குமாயின், அவை எல்லாவற்றிற்கும் ஸம ப்ராதான்யமாம் (ஒரே மாதிரியான முக்யத்வமே). அதாவது, அந்தந்த புருஷார்த்தத்திற்கு அந்தந்த ஸாதனம் உபாயமாம் (வழி). அல்லது இவற்றில் ஏதேனுமொன்றே சிறந்ததாயின், அதுவே முக்யமாம். ஆகையால், எல்லா ஸாதனங்களுக்கும் பலன் ஒன்றேயாகையால், ஏதேனுமொரு ஸாதனத்தை அனுஷ்டிக்கலாம் என்று திருவுள்ளமா (உனது மேலான கருத்தா)? 

பலன் வெவ்வேறாகையால், அந்தந்த பலனை விரும்பினவன் அந்தந்த ஸாதனத்தை அனுஷ்டிக்கலாமென்று திருவுள்ளமா (உனது மேலான கருத்தா)? இவற்றில் ஒன்றே சிறந்த பலனாகையால், அதன் ஸாதனத்தையே முக்யமாக அனுஷ்டிக்க வேண்டுமென்று திருவுள்ளமா (உனது மேலான கருத்தா)? இதை விவரித்துச் சொல்ல வேண்டும்.  

சனி, 10 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 319

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதிமூன்றாவது அத்தியாயம்

(ஸத்வ குணமே தலையெடுக்கில் ஜ்ஞானம் உண்டாகுமென்பதையும், ஸத்வாதி குணங்கள் கழியும் விதத்தையும் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஸத்வம், ரஜஸ்ஸு, தமஸ்ஸு என்னும் இவை ப்ரக்ருதியின் பரிணாமமான (மாற்றமாகிற) மனத்தின் குணங்களேயன்றி, ஜீவாத்மாவிற்கு இயற்கையில் ஏற்பட்ட குணங்களல்ல. (ப்ராக்ருதமான மனத்தின் ஸம்பந்தத்தினால் ஏற்பட்டவையாகையால், ஸத்வாதி குணங்கள், ஒளபாதிகங்கள் (ஒரு காரணத்தை முன்னிட்டு ஏற்பட்டவை) ஆகையால், அவற்றை ஸுகமாக வெல்ல முடியும்). முதலில் ஸத்வகுணத்தை வளரச்செய்து கொண்டு, அதனால் ரஜஸ், தமோ குணங்களைப் போக்க வேண்டும். அந்த ஸத்வ குணத்தினாலேயே அதைப் போக்க வேண்டும். (ஸத்வ குணத்தினால் ஜ்ஞானம் உண்டாகச் செய்து கொண்டு, அந்த ஜ்ஞானத்தினால் ஸத்வாதி குணங்கள் தீண்டப் பெறாமையாகிற மோக்ஷத்தைப் பெறுகையில், ஸத்வ குணமும் தானே கழிந்து போகும்). 

ஸத்வ குணத்தை வளர்த்திக் கொண்டால், அதனால் என்னிடத்தில் ப்ரீதியாகிற பக்தியென்னும் தர்மம் வளர்ந்து வரும். ஸாத்விகமான (மிதமானதும், சுவை உடையதுமான) ஆஹாரங்களைப் (உணவைப்) புசித்துக் கொண்டு வருவானாயின், ஸத்வ குணம் வளரும். அதனால் என்னிடத்தில் ப்ரீதியாகிற பக்தி என்னும் தர்மம் தினந்தோறும் அப்யாஸம் (பயிற்சி) செய்ய இடம் கொடுக்கும். ஸத்வ குணம் தலையெடுத்தாலும், அது நேரே ரஜஸ், தமோ குணங்களைப் போக்க மாட்டாது. பின்னையோ என்றால், ஸத்வ குணம் என்னிடத்தில் பக்தி வளரச் செய்ய அந்த பக்தியென்னும் தர்மம், ரஜஸ், தமோ குணங்களைப் போக்கும். இவ்வாறு பக்தியை வளர்க்கும் படியான ஸத்வ குணத்தைக் காட்டிலும் மோக்ஷத்தை விளைப்பதற்குரிய மேலான உபாயம் மற்றொன்றும் இல்லை. 

ரஜஸ், தமோ குணங்கள் போயினும், அவற்றிற்கு மூல காரணமான அனாதி புண்ய, பாபங்கள் அப்படியே இருந்து கொண்டு, மோக்ஷத்திற்குத் தடை செய்யுமாகையால், ஸத்வ குணத்தை மோக்ஷத்திற்கு மேலான உபாயமென்று எவ்வாறு சொல்ல முடியுமென்றால், சொல்லுகிறேன். 

ரஜஸ், தமோ குணங்கள் போகையில், அவற்றிற்கு மூல காரணமான புண்ய, பாப ரூபமான அதர்மமும் உடனே தொலைந்து போகும். ஆகையால், ஸத்வ குணம் தடையின்றி மோக்ஷத்தை விளைக்குமென்பதில் ஸந்தேஹம் இல்லை. (பாபம் போல் புண்யமும் பலனை விளைத்து, மோக்ஷத்திற்குத் தடை செய்யுமாகையால், புண்ய, பாபங்களிரண்டையும் அதர்மமென்று சொல்லத் தட்டில்லை.) (ஸத்வ குணத்தை வளர்ப்பதற்கு ஸாத்விக ஆஹாரங்கள் மாத்ரமே காரணமென்பதில்லை. பின்னையோவென்றால்) 

  1. வேதங்கள், பாஞ்சராத்ரம், இறைவனின் மகிமையை விளக்கும் புராணங்கள், ராமாயண, மகாபாரத இதிகாசங்கள், ஆகமங்கள் ஆகியவற்றைப் படித்து கேட்டு உணர்தல்

  2. சாது ஜனங்களுடனான தொடர்பு

  3. கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களுக்குச் செல்லுதல்

  4. ஏகாந்தமாய் (தனிமையில்) வாசம் செய்வது

  5. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் (விடியற்காலை 4.30 – 5.15 மணி) அதிகாலை நேரத்தில் எழுந்திருப்பது

  6. பல அபிஸந்தியில்லாமல் (பலனை எதிர்பார்க்காமல் செய்யும் கர்மம்)

  7. சௌக்லம், ஸாவித்ரம் யாஜ்ஞிகம் என்னும் மூவகைப்பட்ட ஜன்மத்தை அதாவது ஞான ஜன்மத்தைப் பெறுதல்

  8. பகவானை தியானித்தல்

  9. பகவானின் மந்திரத்தைச் சொல்லுதல்

  10. தாபம் (சங்கு, சக்ர இலட்சினை), புண்ட்ரம் (திருமண், ஸ்ரீசூர்ண குறியீடு) உள்ளிட்ட ஐந்து ஸம்ஸ்காரங்களைச் செய்தல்

ஆகிய இவை பத்தும் ஸத்வ குணத்தை வளர்ப்பதற்குக் காரணங்களாம். 

(ஸாத்விகமான ஆகமங்களையே அப்யஸிக்க (பயில) வேண்டுமன்றி, ராஜஸங்களும், தாமஸங்களுமான ஆகமங்களை அப்யஸிக்கல் (பயிலுதல்) ஆகாது. ஆத்மாக்களுக்கு ஸத்வ குணம் விளைவது பகவானுடைய கடாக்ஷ (கடைக்கண் பார்வைக்கு) அதீனம் (உட்பட்டது) ஆகையாலும், அப்பகவான் அப்ராக்ருதமான சுத்த ஸத்வத்திற்கு இடமாகையாலும், அவனை அறிவிக்கும் புராணாதிகள் ஸாத்விகங்கள். மற்றவை ராஜஸங்களும், தாமஸங்களும் என்று அறிக. ஆகையால், ஸாத்விக புராணாதிகளை அப்யஸித்தால், ஸத்வ குணம் தலையெடுக்கும். ராஜஸ, தாமஸாதி புராணங்களை அப்யஸித்தால், ரஜஸ், தமோ குணங்களே தலையெடுத்து அழிந்து போவானாகையால், அவற்றை ஆதரிக்கலாகாது.

சனி, 3 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 318

பதினோறாவது ஸ்கந்தம் - பன்னிரெண்டாவது அத்தியாயம்

(ந்யாஸமென்னும் ப்ரபத்தி வித்யையை உபதேசித்தல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உத்தவனே! கர்ம யோகம், ஜ்ஞானயோகம், அஹிம்ஸை முதலிய தர்மம் வேதமோதுதல், உபவாஸம் முதலிய தவம், யாகம் முதலிய வைதிக கர்மம், பூர்த்தம் (கிணறு, குளம் வெட்டுதல்) முதலிய ஸ்மார்த்த கர்மம், தானம் யாகாதிகளில் அவற்றின் மேன்மைக்காகக் கொடுக்கும் தக்ஷிணை, ஏகாதசி உபவாஸம் முதலிய வ்ரதங்கள், பஞ்ச மஹாயஜ்ஞங்கள் {(ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்) என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்கள்}, ரஹஸ்ய மந்திரங்கள், கங்கை முதலிய புண்ய தீர்த்தங்கள், சௌசம் (தூய்மை), ஆசமனம் முதலிய நியமங்கள், உள்ளிந்திரியம், வெளியிந்தரியங்கள் ஆகிய இவற்றை அடக்குவதற்கு உரிய உபாயங்களான யமங்கள் (அஹிம்ஸை – பிறர்க்குத் தீங்கு செய்யாமை; ஸத்யம் – உண்மை பேசுதல்; அஸ்தேயம் – திருடாமை; ப்ரஹ்மசர்யம் - மனம், சொல், செயலால் தூய்மை; அபரிக்ரஹம் – கஷ்டத்திலும் தானம் பெறாமை) ஆகிய இவற்றுள் எதுவும் ஸத்புருஷர்களுடைய ஸஹவாஸம் (தொடர்பு) போல் என்னை வசப்படுத்த வல்லதாக மாட்டாது.

ஏனென்றால், அந்த ஸத்புருஷ (நல்லவர்களுடைய) ஸஹவாஸம் (தொடர்பு) என்னை ஒழிந்த மற்ற எல்லாவற்றிலுமுள்ள மனப்பற்றுக்களையெல்லாம் அடியோடு போக்கிவிடும். ஆகையால், அது என்னை வசப்படுத்துவது போல், மற்ற எதுவும் வசப்படுத்தமுடியாது. (கர்மயோக, ஜ்ஞான யோகாதிகள் மனத்தை நிர்மலமாக்கி ஊக்கத்தை உண்டாக்கி, பக்தி யோகத்தை விளைவித்து, அவ்வழியால் பகவானை வசப்படுத்துவதற்குக் காரணமாயிருப்பது போல, ஸத் ஸஹவாஸமும் (நல்லோர் தொடர்பும்), ஆசார்ய ஸமாச்ரயணம் முதலியவற்றை உண்டாக்கி, அவ்வழியால் தான் ஈச்வரனை வசப்படுத்துமன்றி நேரே வசப்படுத்த முடியாது. ஆகையால், அந்தக் கர்ம யோகாதிகளைக் காட்டிலும் இதைச் சிறந்ததென்று எவ்வாறு புகழலாமென்று நினைக்கலாகாது. ஸத்புருஷர்கள், தங்களுடைய ஸம்பந்த மாத்ரத்தினால் ப்ராணிகளை ஸம்ஸாரத்தினின்று விடுவிக்க வல்லவர்களாகையால், ஸத்ஸஹவாஸத்திற்கு (நல்லோர் தொடர்பிற்கு) அவை ஒருகாலும் ஈடாக மாட்டாது).

அஸுரர்கள், ராக்ஷஸர்கள், பக்ஷிகள், ம்ருகங்கள், கந்தர்வர், அப்ஸரஸ்த்ரீகள், யானைகள், ஸித்தர், சாரணர், குஹ்யகர், வித்யாதரர் இவர்களும், மனுஷ்யர்களில் வைச்யர், சூத்ரர், ஸ்த்ரீகள், அந்திம ஜாதியில் பிறந்தவர், ரஜஸ், தமோ குணங்களே தலையெடுத்து மோக்ஷ உபாயத்தில் (மோட்சத்திற்கான வழியில்) சிறிதும் ஸம்பந்தமில்லாத இவர்கள் பலரும் அந்தந்த யுகத்தில் என்னுடைய ஸ்தானத்தை அடைந்தார்கள்.

வ்ருத்ராஸுரன், ப்ரஹ்லாதன், வ்ருஷபர்வன், பலி, பாணன், மயன் இவர் முதலியவர்களும், விபீஷணனும், ஸுக்ரீவன், ஹனுமான், ருக்ஷன், கஜேந்திரன், இவர்களும், ஜடாயுவும், துலாதாரனென்கிற வணிக்பதனும் (வைச்யரில் தாழ்ந்தவனும்), தர்மவ்யாதனும், கூனி, கோகுலத்துக் கோபிகைகள், ப்ராஹ்மண பத்னிகள் இவர்களும், மற்றும் பலரும் என் ஸ்தானத்தை அடைந்தார்கள். அவர்கள், பற்பல சாகைகளாகப் (கிளைகளாகப்) பிரிந்த வேத ஸமூஹங்களை அத்யயனம் செய்தவர்களல்லர். மிகவும் பெருமையுள்ள ஸத்புருஷர்களை உபாஸித்தவர்களுமல்லர்; வ்ரதங்களை அனுஷ்டித்தவர்களுமல்லர்; தவம் செய்தவர்களுமல்லர்.

வியாழன், 1 ஜூலை, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 317

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினோறாவது அத்தியாயம்

(பத்தர், முத்தர், ஸாதுக்கள் இவர்களின் லக்ஷணத்தையும், பக்தியின் ஸ்வரூபத்தையும், பகவான் உத்தவனுக்குக் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஸத்வாதி (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற) குணங்கள், அவற்றின் மூலமாய் விளையும் புண்ய, பாப கர்மங்கள் ஆகிய இவைகளால் கட்டுண்டவன் என்றும், அவற்றினின்று விடுபட்டவன் என்றும், வழங்கி வருதல் எனக்கு வாஸ்தவமாகவே (உண்மையாகவே) கிடையாது. புண்ய, பாப கர்மங்கள் ப்ரக்ருதியின் மூலமாய் விளைபவையாகையாலும், அந்த ப்ரக்ருதி எனக்கு உட்பட்டதாகையாலும், அதற்கு நியாமகனான (நியமிப்பவனான) எனக்குக் குண மூலமான கர்ம பந்தமும், அதினின்று விடுபடுகையாகிற மோக்ஷமும் கிடையாது. குண, கர்ம வச்யனான (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற குணங்களுக்கும், முன் வினைகளுக்கும் உட்பட்டவனான) ஜீவனுக்கே அவை உள்ளவை. எனக்கு உட்பட்டிருப்பதாகிய மாயையினால் ஜீவனுக்குச் சோகம் (துயரம்), மோஹம் (மயக்கம்), ஸுகம் (இன்பம்), துக்கம் (துன்பம்), தேஹ ஸம்பந்தம் (உடல் தொடர்பு) ஆகிய இவை உண்டாகின்றன. 

ஜீவனுக்கு ஸ்வப்னத்தில் (கனவில்) சரீர (உடல்) ஸம்பந்தமும் (தொடர்பும்), அதைப்பற்றி வருகிற ஸுக, துக்காதிகளும் அநித்யமாய் (நிலையற்றவையாய்) இருப்பது போல், அவனுக்குள்ள ஸம்ஸார பந்தமும் (உலகியல் வாழ்வாகிற கட்டும்) அநித்யமே (நிலையற்றவையே) அன்றி நித்யம் (நிலையானது) அன்று. (ஆத்ம ஸ்வரூபம் (ஜீவாத்மா) நித்யமாயினும் (அழிவற்றதாயினும்), அதைத் தொடர்ந்த ஸம்ஸாரமும் (உலகியல் வாழ்வும்) நித்யம் (அழிவற்றது) என்று ப்ரமிக்கலாகாது. நித்யனான (அழிவற்றவனான) இவ்வாத்மாவுக்கே ஸ்வப்னத்தில் (கனவில்) விளைகிற தேஹ ஸம்பந்தமும் (உடல் தொடர்பும்), அதைப்பற்றி வருகிற ஸுக, துக்காதிகளும் அநித்யம் (நிலையற்றவை) என்பது வெளிச்சமே அல்லவா? அவ்வாறே, ஸம்ஸார பந்தமும் (உலகியல் வாழ்வும்) அநித்யமே (அழியக்கூடியதே) அன்றி நித்யம் (நிலையானது) அன்று. 

ஸம்ஸாரம் (உலகியல் வாழ்வு) அனாதி (ஆரம்பம் அற்றது) என்றும், அது அநித்யம் (நிலையற்றது) என்றும் சொல்லுவது எவ்வாறு பொருந்துமென்றால், ஆதி (முதல்), அந்தம் (முடிவு) இல்லாத வஸ்துவே நித்யமாமன்றி, ஆதி (முதல்) இல்லாமல் அந்தம் (முடிவு) உடைய வஸ்து நித்யம் (நிலையானது) ஆகாது. ஆதி (ஆரம்பம்) இல்லாமை மாத்ரமே நித்யமாயிருக்கைக்கு ஹேது (கரணம்) ஆகாது. “ஸ்வப்னத்தில் (கனவில்) விளைகிற தேஹ (உடல்) ஸம்பந்தமும் (தொடர்பும்), அதைப்பற்றி வருகிற ஸுக, துக்காதிகளும் பொய்யல்லவா? அவ்வாறே, ஸம்ஸாரமும் பொய்யே” என்று ப்ரமிக்கலாகாது. ஸ்வப்னத்தில் (கனவில்) விளைகிற தேஹ ஸம்பந்தாதிகள் பொய்யன்று. அவையும் ஜீவனுடைய புண்ய பாப கர்மங்களுக்குத் தகுந்தபடி ஈச்வரனால் படைக்கப்பட்டவைகளே. அவ்வாறே ஸம்ஸாரமும் உண்மையே அன்றி பொய்யன்று. 

“ஆத்மாவுக்கு அது இயற்கையில் ஏற்பட்டதன்று; வந்தேறி (வந்து சேர்ந்தது)” என்பதைப்பற்றி அதை உண்மையன்று என்று சொல்லுவது மாத்ரமே ஒழிய, அது பொய்யன்று. அநித்யம் என்பதற்கே ஸ்வப்னத்தை (கனவை) நிதர்சனமாக (உதாரணமாகக்) காட்டினோமன்றிப் பொய் என்பதற்கு நிதர்சனமாக (உதாரணமாகக்) காட்டவில்லை. ஸ்வப்ன (கனவு) அனுபவமும் உண்மையே என்று நிரூபித்தோமாகையால், அதைப்போல் இதுவும் பொய் என்பதற்கு இடமேயில்லை). “ஆனால் அந்த ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமென்ன? அது நிவர்த்திப்பதற்கு (விலகுவதற்குக்) காரணமென்” என்றால், சொல்லுகிறேன்; கேள்.