புதன், 30 ஜூலை, 2014

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 15 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஏற்றச்சால் வாழ்க்கை!

குருகுலத்துக்கு வந்த பிரஹ்லாதன், அங்கு உள்ள எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாக உட்கார வைத்துக் கொண்டான். அங்கும் உபதேசத்தை ஆரம்பித்துவிட்டான்.

ஏய் குழந்தைகாள். பிறக்கிறீர்கள். வளர்கிறீர்கள். இறக்கிறீர்கள். மறுபடியும் பிறக்கிறீர்கள். வளர்கிறீர்கள். இறக்கிறீர்கள். என்ன கண்டீர்கள்? இப்படிச் சுற்றிச் சுற்றி வருவதனாலே எந்த லாபத்தையாவது நீங்கள் கண்டீர்களா?” என்று கேட்டான்.

நாம் கிராமத்துப் பக்கம் போனோமானால், உழவுத் தொழிலுக்காக ஒரு பெரிய எந்திரம் வைத்திருப்பார்கள். ஏற்றசால் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? நடுவில் ஒரு கட்டையைக் கொடுத்து, நீண்ட ஒரு மரக்கட்டையைக் கட்டியிருப்பார்கள். பெரிய கங்காளம் போன்ற பாத்திரம் ஒன்றைக் கட்டி வைத்திருப்பார்கள். அதன் மேல் ஒருவர் நின்று கொண்டு நடப்பார். அவர் அந்தப் பக்கம் நடந்தால் இது முங்கும். முங்கியவுடன் தீர்த்தத்தை முழுவதும் எடுத்துக் கொள்ளும். அவன் இன்னொரு புறம் நடந்தானானால், அது ஜலம் மொத்தத்தையும் வயல் வரப்பில் கொட்டிவிடும். மறுபடியும், அவன் மாற்றி நடந்தால் மறுபடியும் அது முழுகி தீர்த்தத்தையெல்லாம் எடுத்துக்கொள்ளும்.

ஏற்றச்சால் இந்த இரண்டு வேலையைத் தவிர வேறு எதையும் செய்யவே முடியாது. ஒன்றாய் அப்படிப் போனால் உள்ளே மூழ்கும், ஜலத்தை எடுத்துக்கொள்ளும். இல்லையா இப்படிப் போனால் ஜலத்தைக் கொட்டும். கொட்டிவிட்டேனே என்று அதனால் பேசாமல் இருந்துவிட முடியாது. மறுபடியும் போய் ஜலத்தை எடுத்துத்தான் ஆக வேண்டும். நாமும் இந்த ஏற்றச்சால் போன்றவர்கள்தான். சம்சாரத்துக்குள் வருவோம்; பாவ புண்ணியங்கள் என்ற தீர்த்தத்தை நிறைய எடுத்துக் கொள்வோம்.

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 14 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

பக்தனின் தன்மை!

கண்ணன் நம்முடைய உள்ளத்திலே இருந்தால் பயப் பிராப்தி கிடையாது. ஏன் பயம் கிடையாது? தன்னுடைய பக்தனை, சரணாகதி செய்தவனை ரக்ஷிப்பேன் என்று வாக்களித்தவன் ஸ்ரீகிருஷ்ணன். அதனாலே, கண்ணனை நினைத்தவர்க்கு பயமென்பது இல்லை. அதேதான் பிரஹ்லாதன் வாக்கும். ‘பயம் காரணமாக என்றைக்கும் நான் உன் காலில் விழப்போவதும் இல்லை. நீ எனக்கு அபயப் பிரதானமும் பண்ண வேண்டாம்’ என்று பிரஹ்லாதன் மறுத்துவிட்டான்.

அடுத்ததாக என்ன பண்ணலாம் என்று பார்த்தான் ஹிரண்யன். சர்ப்பங்களை யெல்லாம் கூப்பிட்டு, இவனைப் போய்க் கடித்துவிட்டு வாருங்கள்” என்று சொன்னான். பெரிய பெரிய தக்ஷகன் முதலான சர்ப்பங்களெல்லாம், இவனைப் போய்க் கடிக்க வேண்டும் என்று பார்த்தனவாம். அதைப் பார்த்தவுடன், குழந்தை நினைத்துக்கொண்டதாம். ‘ஆதிசேஷன் எதற்காக நம்மிடம் வருகிறார்? ஒருவேளை அனுக்கிரஹம் செய்ய வருகிறாரோ?’ என்று நினைத்ததாம்.

பிரஹ்லானுக்கு சர்ப்பமும் புரியவில்லை. கடிக்கப் போவதும் புரியவில்லை. பகவானின் பள்ளியாகிய ஆதிசேஷன் நம்மை நோக்கி வருகிறாரே என்று நினைத்து, “வாரும்…வாரும்” என்று அழைக்கிறான். உடனே, சர்ப்பமெல்லாம் அவனைப் பிரதட்சிணம் செய்துவிட்டுக் கடிக்க முடியாமல் திரும்பிப் போகின்றன.

பக்தன் கலங்கிப் போய்விட்டானென்றால், அவன் என்ன பண்ணுகிறான் என்று அவனுக்கே தெரியாது. நமக்கெல்லாம் பாம்பைப் பார்த்தால் பாம்பாகத் தோன்றும். பக்தனுக்குப் பாம்பைப் பார்த்தால் படுக்கை என்று தோன்றும். நமக்கெல்லாம் கருடனைப் பார்த்தால், பக்ஷி என்று தோன்றும். பக்தனுக்கு கருடனைப் பார்த்தால், வாகனம் என்று தோன்றும்.

நமக்குத் தண்ணீரைப் பார்த்தால், மூழ்கிப் போய்விடுவோமோ என்று தோன்றும். பக்தனுக்கு அது பாற்கடல் என்றும் பகவான் படுக்கும் இடம் என்றும் தோன்றும். ஒவ்வொன்றும் நமக்குத் தோன்றும் விதம் வேறு; பக்தனுக்குத் தோன்றும் விதம் வேறு. அதுபோலவே பாம்பைப் பார்த்ததும், ஆதிசேஷன் வருவதாக நினைத்துக் கொண்டான் பிரஹ்லாதன்.

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 13 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

கண்ணன் காட்டிய வழி!

இரண்டு வகைகளிலும் தவறிழைத்துவிட்டான் ஹிரண்ய கசிபு என்று பார்த்தோம்.
இந்தப் பிரஹ்லாதனும் ஒரு தப்பு செய்தான். அந்தத் தப்பு என்ன தெரியுமா? ‘எங்கும் உளன் கண்ணன்’ என்று கீதாசார்யன் கீதையில் சொன்னதைத் திருப்பிச் சொன்னதுதான் அவன் செய்த ஒரே தப்பு. கண்ணன் கீதையில் என்ன சொன்னான்? ‘என்னால் எல்லா ஜகங்களும் வியாபிக்கப்பட்டிருக்கின்றன. ஜகங்களை நான்தான் தாங்குகிறேன்’ என்றான் அல்லவா? அதைத்தானே குழந்தை அப்படியே திருப்பிச் சொன்னான்! அதுதான் அவன் செய்த தப்பு. கண்ணன் சொன்னதைத் திருப்பிச் சொல்வது தப்பு என்று இப்போதுதான் முதல் முறையாகத் தெரிந்து கொள்கிறோம்.

கீதையில் கண்ணன் சொன்னதுதான் தவறாகுமா அல்லது அதை மறுபடியும் பிரஹ்லாதன் சொன்னதுதான் தப்பாகுமா? ‘எங்கும் உளன் கண்ணன்’ என்ற மகனைக் காய்ந்து… என்கிறார் ஆழ்வார். மகன் மீது ரொம்பவும் கோபப்பட்டானாம். வியாக்யானம் செய்கின்ற பெரியவாச்சான் பிள்ளை என்கின்ற பெரியவர், ‘மகன் என்றும் சொல்கிறார் பிள்ளை என்றும் சொல்கிறாரே ஆழ்வார். யாருக்கு மகன் யாருக்குப் பிள்ளை என்று கேள்வி எழுப்புகிறார்?’

ஏற்கனவே ஹிரண்யகசிபுவுக்குப் பிள்ளையாக இருந்தானாம். கண்ணன் எங்கும் உளன் என்று பிரஹ்லாதன் சொன்னவுடன், அவன் என் பிள்ளை இல்லை என்று தள்ளிவிட்டானாம் ஹிரண்யகசிபு. உடனே பார்த்தார் நம்மாழ்வார். ‘ஹிரண்யன், தன் மகன் இல்லை என்று சொன்னால் உடனே, பிரஹ்லாதனை என் பிள்ளையாக ஸ்வீகாரம் செய்துகொண்டு விடுகிறேன்’ என்று தீர்மானம் பண்ணிக் கொண்டுவிட்டாராம்.

செவ்வாய், 29 ஜூலை, 2014

நினைத்தாலே இனிக்கும்! - 4 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

அஷ்டமா சித்திகளில் மூன்றாவது "பிராப்தி'. "தூரத்தில் இருப்பதைத் தொடுவது' என்பதே இந்த சித்தி. அதாவது, விரல் நுனியால் சந்திரனைக் கூடத் தொடலாம். இது ஏதோ சித்து வேலை அல்ல. ஞானத்தை வளர்த்துக் கொண்டால், இதெல்லாம் சாத்தியமே. கொஞ்சமாவது தியானம் செய்தால் தான், சித்திகளை அடைவதற்குரிய ஆரம்பக்கட்டத்திலாவது நுழைய முடியும். 
சித்திகளில் நான்காவது, "பிராகாம்யம்'. அதாவது தடையின்றி விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுதல். அது எந்த விருப்பமாக இருந்தாலும், அது நிறைவேறி விடும். பரத்வாஜர் ஆஸ்ரமத்துக்கு ராமபிரான் போனார். பரதன் அங்கே சதுரங்க சேனையைத் திரட்டிக் கொண்டு வந்தான். பரத்வாஜர் நான்கு சிஷ்யர்களுடன் ஆஸ்ரமத்தில் இருக்கிறார். 

வந்தவர்களை எப்படி பசியோடு அனுப்புவது? மொத்த சேனைக்கும் விருந்து போட வேண்டும். 
இத்தனை பேருக்கு சாப்பாடு போட வேண்டுமானால் செலவு என்னாகும்? செலவழித்தாலும், சாப்பாடு தயாரிக்க ஆள் வேண்டும். அவ்வளவு பொருட்களை ஒரே சமயத்தில் திரட்ட வேண்டும். 
ஆனால், பரத்வாஜர் அதுபற்றி கவலைப்படவே இல்லை. 

""கை கால் அலம்பு, இலையைப் போடப் போறேன்,'' என்று சாதாரணமாக பரதனிடம் சொல்கிறார். 
""சுவாமி! என் படைக்கே சாப்பாடு போடுவதென்பது எப்படி சாத்தியம்?'' 

""அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்! எல்லாரையும் உட்காரச் சொல்,'' . 

தசரதர் வைத்த விருந்தை விட பெரிய விருந்து இங்கே பரிமாறப்பட்டது. மாம்பழமே 12 வகை, ஆரஞ்சு 22 வகை, 50 வகை காய்கறி, 20 வகை கூட்டு...எப்படி இவ்வளவும் தயாரானது? 
"பிராகாம்யம்' என்ற சித்தியை பரத்வாஜர் அறிவார். இந்த சித்தியை அடைந்தவர்கள் நினைத்தஉடன் எதுவும் நடந்து விடும். இத்தனை பேருக்கு விருந்து தயாராக வேண்டும் என அவர் நினைத்தார்! 

அது நடந்து விட்டது. நம்மால் அது முடியுமா? 

சில பேர் சமைத்தால் பாத்திரத்தை விட்டே வெளியே வராது. ஏனென்றால், அதற்கு அதை விட்டு வர பிடிக்கவில்லை. ஆனால், அடுப்பு மூட்டாமலே சோறு போட்டார் பரத்வாஜர். 

ஐந்தாவது சித்தியாக உள்ளது "மகிமா'. இதற்கு "பிரம்மாண்டத்தை விட பெரிய உடல் எடுப்பது' என பொருள். பிரம்மாண்டம் என்றால் இந்த பிரபஞ்சம். எத்தனை உலகங்கள் இருக்கிறதோ, அதை விட பெரிதாக வடிவெடுப்பதே இந்த சித்தி கை கூட வேண்டுவதின் நோக்கம். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், "எது பெரிதோ அதைவிட பெரிதாகுதல்' எனலாம். 
ஆஞ்சநேயர் சீதையைத் தேடி லங்கைக்கு போனார். கடலைத் தாண்டிப் பறக்கும் போது, சுரஷா என்ற நாகமாதா அவரைத் தடுத்தாள். 

""ஆஞ்சநேயா! நீ எனக்கு உணவாக வேண்டும் என பிரம்மா என்னிடம் சொன்னார். ஆனால், நீ என்னைத் தாண்டி செல்கிறாயே!'' என்றாள். 

""நாகமாதா! நான் இப்போது ராமகாரியம் தொடர்பாகச் சென்று கொண்டிருக்கிறேன். அதை முடித்து விட்டு வந்து, தங்களுக்கு உணவாகி விடுகிறேன்,'' என்றார் ஆஞ்சநேயர். 

இதை யார் நம்புவார்கள்? ஆவென வாயைத் திறந்தாள் சுரஷா. ஆஞ்சநேயர் உள்ளே போய் விட்டார். ஆனால், தன் உடலை பத்து யோஜனை தூரத்திற்கு பெரிதாக்க, சுரஷாவும் வாய் அளவை உயர்த்திக் கொண்டே போனாள். சட்டென உருவத்தை அணுவளவு சிறிதாக சுருக்கிய (அனிமா சித்தியைப் பயன்படுத்தி) ஆஞ்சநேயர், அவளது காது வழியாக வெளியேறி விட்டார். ஆக, சித்திகளை அடைந்தவர் என்பதால், அவருக்கு அது சாத்தியமாயிற்று. 

அது மட்டுமல்ல! ""அம்மா! உன் வாய்க்குள் புகுந்து வெளியேறி விட்டேன். இதனால், நான் உனக்கு உணவாகி விட்டதாகவே அர்த்தம்,'' என்றார். 

சாமர்த்தியமான பிள்ளை அவர். ஆகாயத்தில் சூரியனைப் பழமாகப் பார்த்து பறந்து பிடித்த சாமர்த்தியக்காரர். நமக்கெல்லாம், ஏதோ ஒரு சிறுதிறமை இருந்தாலே, பெருமை பேச ஆரம்பித்து விடுவோம். தம்பட்டம் அடிப்போம். அனுமான், சிறுவயதில் சூரியனைப் பழமாய் நினைத்து பறிக்கப் போன சம்பவத்தை மறந்தே போனார். ஜாம்பவான் ஞாபகப்படுத்த போய்தான், அவரது திறமையே அவருக்கு தெரிய வந்தது. 

சித்திகளில் ஆறாவது "ஈசிதா'. அதாவது, மரம், மட்டை, மண், செடி, கொடியைக் கூட நம் சொல்லுக்கு கட்டுப்படச் செய்தல். ராம ராவண யுத்தம் முடிந்து, அயோத்தி செல்லும் வழியில் உள்ள மரங்களையெல்லாம் பூத்து குலுங்க வேண்டும் என்றும், பழங்கள் பழுக்க வேண்டும் என்றும் விரும்பினார் பரத்வாஜர். அவர் சொல்லுக்கு தாவரங்களெல்லாம் கட்டுப்பட்டன. கார்த்திகை மாதம் மாம்பழம் கிடைக்குமா என்றால் சீசன் கிடையாது. ஆனால், இவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். 

சித்திகளில் ஏழாவதான "வசிதா' என்னும் "தன்வசப்படுத்துதல்' மூலம் பரத்வாஜருக்கு இதெல்லாம் சாத்தியமானது. 

காமவாசியாயுதா என்னும் எட்டாவது சித்தி பற்றியும் தெரிந்து கொள்வோம். இதுவும் "நினைத்தது நடத்தல்' என்ற வகையில் அடங்கும். சமைத்து சாப்பிட வேண்டும் என்றால் நேரமாகும். வேலை இருக்கும். ஆனால், இருந்த இடத்திலேயே சாப்பிட நினைத்தால் அது சாத்தியமாகி விடும். 
இப்படி சித்திகளை நமக்கெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியமே. ஆனால், அதற்கு பல தர்மகாரியங்கள் செய்ய வேண்டும். 

தர்மகாரியம் என்றவுடன், ஆரம்பத்திலேயே பெரிதாக ஏதும் செய்ய வேண்டுமோ என நினைக்க வேண்டாம். சிறியதில் ஆரம்பித்தால் போதும். அது போகப்போக பெரிதாக மாறி விடும். ஆறுமாதம் பொறுமையாக தர்மத்தைச் செய்து பாருங்களேன். கொஞ்சம் கொஞ்சமாக தர்மசிந்தனை மனதில் ஊறிவிடும். தெளிவு, புத்திக்கூர்மை, சாந்தி, ஆனந்தம் ஆகியவையும் எட்டு சித்திகளையும் அடையத் தேவை. ஆனால், இவற்றை அடையவிடாமல் பாவங்கள் நம்மை மூடிக்கொண்டுள்ளன. 
ஆத்மா இருக்கிறாரே! அவர் தான் நாம்! உடலுக்கு சூஷ்ம ரூபம் இல்லை. அது ஸ்தூல (கண்ணுக்குத் தெரியும்) ரூபம். 

கொசு, எறும்பு போன்றவை கூட கண்ணுக்குத் தெரியும். ஆனால், ஆத்மாவை யாரும் பார்க்க முடியாது. அது மிகவும் நுண்ணியது. அது தங்குவதற்கு கட்டடமே வேண்டாம். குளிக்க வேண்டாம். அதற்கு உடம்பே இல்லை. சமைத்தாலும் சாப்பிட வாயில்லை.

அதற்கு வியாதியே வராது. சம்பந்தி சண்டை எல்லாம் அதற்கு கிடையாது. 

அப்படியானால், ஆத்மாவுக்கும், உடலுக்கும் என்ன சம்பந்தம்? அது ஏன் உடலுக்குள் இருக்க வேண்டும்? ஆராய்வோம். 

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்

நினைத்தாலே இனிக்கும்! - 3 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

நம் உடம்பு கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், ஆத்மாவை நம்மால் பார்க்க முடிகிறதா! எக்ஸ்ரே இயந்திரத்தால் கூட ஆத்மாவைப் படம் பிடிக்க முடியாது. ஏனெனில், அது கண்ணுக்குத் தெரியாதது. மிகவும் சூட்சுமமானது. அப்படியே தெரிந்தாலும் அதனால் நன்மை ஏதும் உண்டா? பணம் குறைந்த அளவு இருந்தால் ஐஸ்வர்யம் இல்லை என்று குறைப்பட்டுக் கொள்ளலாம். 

பருமனாக இருப்பவன், ஒல்லியானவனைப் பார்த்து பொறாமைப் பட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆத்மா என்ற சூட்சுமம் மறைவாக இருப்பதால், யாருக்குஎன்ன நஷ்டம்? ஆனால், அளவில் சிறிய ஆத்மாவுக்கு சக்தி அதிகம் ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டது. அதற்கு ஒன்றுமே ஆவதில்லை. அது உருவில் சிறியது. பந்து போல் எழுந்து உட்கார்ந்து விடும். அதேநேரம் பெரியவர்கள் விழுந்தால், "ஐயோ..அப்பா..'' என எழுவதற்குள் உயிரே போய் விடும். அளவில் பெரிதாக இருந்தாலும் சக்தி குறைந்து விடுகிறது. பெரிய சரீரத்திற்கு சக்தி குறைவு. 

சூட்சுமமான ஆத்மாவுக்கு பலம் மிக அதிகம். அது மிகச்சிறிய ஒன்று தான். ஆனால், எல்லாம் செய்யும். இதை "அணுமாத்ர ரூபம்' என்பார்கள். அதாவது மிகவும் சிறியது என்று பொருள். அணுவை விட சிறியதாக ஆத்மா இருந்தாலும், சக்தி மட்டும் மிக அதிகம். சிறிய ஆத்மா பிரிந்து விட்டால், இந்த பெரிய உடலே சாய்ந்து விடுகிறது.

இதன் பெருமையை இன்னும் அளவிடலாம். உடலுக்கு தான் உயரம், எடை எல்லாம் இருக்க வேண்டும்.

ஒருவர் 72 கிலோ எடை இருந்தார். அதை 62 ஆக குறைக்க யோசனை சொன்னார் வைத்தியர். தினமும் 10 பழம் சாப்பிடணும் என்றார். வந்தவர், ""சாப்பாட்டுக்கு முந்தியா பிந்தியா'' என்றார். இப்படி கேட்டால் என்னாகும். 72 கிலோ 82 ஆகி விடும். இதுதான் பெரிய உடலின் நிலை.
ஆனால், நம் உடல் எடை எவ்வளவு கூடினாலும், குறைந்தாலும் நமக்குள் இளைப்பான ஒரு நல்லவர் இருக்கிறார். அவரது பெயரே ஆத்மா. இவர் எடை கூடுவதுமில்லை. குறைவதுமில்லை.
உருவத்தை தான் மனிதர்களால் கேலி செய்ய முடியும். ஒரு வீட்டின் உள்ளே இருப்பவர் ஏதோ இன்னொருவரைப் பற்றி குறை கூறி பேசிக்கொண்டிருக்கிறார். நாம் கதவைத் தட்டுகிறோம். உடனே, பேச்சை மாற்றி விட்டு "ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே' என்று மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பது போல நடித்து கதவைத் திறக்கிறார். ஒருவரது குணநலன்களையோ, உடலமைப்பையோ, கொண்டு இவ்வாறு பரிகசிப்பது நல்லதல்ல என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

அப்பா, அம்மாவுக்கு வீட்டில் சிராத்தம் வரும். அந்தக் காலத்தில் திதி கொடுத்து முடிய மாலை நான்கு மணி ஆகி விடும். அதன் பிறகு தான் சாப்பாடு. திதி பண்ணுகிறவருக்கே திதி கொடுக்க வேண்டி வந்து விடுமோ என்னும் அளவுக்கு நேரம் இழுக்கும். அதுவரை நாம் பட்டினியாக இருப்போம். உடலை அந்தளவு படுத்திய காலங்கள் உண்டு.

ஆத்மாவுக்கு இப்படிப்பட்ட சிக்கலே கிடையாது. ஏனெனில் அது அப்படியே இருப்பது. யார் கண்ணுக்கும் தெரியாது. எனவே அதை யாராலும் குறை சொல்லவும் முடியாது. அதற்கு பசிக்கவும் செய்யாது. சாப்பாடே தேவையில்லை.

உடலில் அழுக்கு இருந்தால் குளித்து கழுவுகிறோம். 


மனதிலுள்ள அழுக்கை என்ன செய்வது? ஒருவர் சொன்னார்.. ""ராமா..ராமா..என்று அவன் நாமத்தை தினமும் 1008 தடவை சொல்லு,'' என்று.

அதைக் கேட்டவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

அரை மணி நேரம் இப்படி மந்திரம் சொல்லி என்னாகப் போகுது? அப்படி சொன்னால் கைமேல் என்ன கிடைக்கும்?'' என்று.

இப்படியெல்லாம், கேட்குமளவுக்கு மனதில் அழுக்கு இருக்கிறது. வண்டியிலுள்ள அழுக்கை உப்புத்தாள் வைத்து எடுப்பது போல, மனதிலுள்ள இந்த அழுக்கையும் உப்புத்தாள் வைத்து எடுக்க வேண்டும். அந்த உப்புத்தாள் தான் தர்ம காரியம்.

அமிர்த சுதா என்ற நூலில், அனிமா, மஹிமா, லஹிமா, கரிமா, ப்ராப்தி, ப்ரகாம்யா,வாக்ஷித்வம், இஷாத்வம் ஆகிய எட்டு வகை சித்திகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சித்திகளை அடைந்த சித்தர்கள் இப்போதும் நம்மிடையே இருக்கிறார்கள். கலியுகம் மொத்தம் 4லட்சத்து 32 ஆயிரம் வருஷங்கள். இப்போது தான் 5116ம் ஆண்டை எட்டியிருக்கிறோம். அஷ்டமாசித்திகளை அடைந்த வசிஷ்டர் 71 சதுர்யுகம் வாழ்வார். ஒருசதுர்யுகம் என்றால் 43 லட்சத்து 21 ஆயிரம் ஆண்டுகள். இதை 71ஆல் பெருக்கினால்....! 

அவ்வளவு வருஷம் வாழ்பவர் வசிஷ்டர். 

இன்றைய சூழ்நிலையில் நம்மால் அஷ்டமாசித்திகளை அடைய முடியுமா என்றால் முடியவே முடியாது. நிலைமை அப்படி இருக்கிறது. 

திருமலைக்கும், சோளிங்கருக்கும் போய் மலை ஏற ஆசை இருக்கிறது. ஆனால் கால் ஆபத்து தடுக்கிறது. மலை ஸ்தலங்களில் நம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஏதோ கயிறு கட்டி (ரோப்கார்) தூக்கி விடுகிறார்கள். அந்தளவுக்கு தான் உடலின் நிலை இருக்கிறது. இப்படியிருக்க, இந்த உடலைக் கொண்டு அஷ்டமாசித்திகளை அடைவது என்றால் எப்படி?

அப்படி கஷ்டம் என்று சொல்லும் அளவுக்கு இந்த அஷ்டமா சித்திகளில் தான் என்ன இருக்கிறது?

அனிமா என்றால் அணுத்தன்மையை அடைதல். அதாவது, நம் உருவத்தை ஒரு அணுவின் அளவுக்கு சுருக்கிக் கொள்ளுதல். ஆறு அடி உள்ளவன் இந்த சித்தியைப் பெற்றால், புள்ளியளவு கூட தன்னைச் சுருக்கும் ஆற்றல் பெறுவான்.

லகிமா என்றால் லேசாக மாறுதல். 

"இலகுவான' (லேசான) என்று சொல்கிறோமே! அந்தச் சொல் கூட இந்த சித்தியில் இருந்து வந்தது தான். அதாவது, கனமான இந்த உடலை லேசாக்கி இறகு போல பறத்தல்.
நம் உடலை ஓரளவுக்கேனும் நாம் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மூக்கு முட்ட சாப்பிடக்கூடாது. 

சாப்பிட்ட பின்னும் கூட வேகமாக நடக்குமளவு நம் சாப்பாட்டின் அளவைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். சாதாரணமாக மூச்சு விட வேண்டும்.

ராமனும் லட்சுமணனும் ராவணனுடன் சண்டை போட்டனர். லட்சுமணன் மயங்கி விட்டான். அவனை மிக எளிதாக தூக்கி விடலாம் எனக்கருதி முயற்சித்தான் ராவணன். முடியவில்லை. 20கைககளையும் சேர்த்து தூக்கமுயன்றான். அப்போதும் முடியவில்லை. ஆனால், ஆஞ்சநேயர் வந்தார். ஒரே கையால் எளிதாக அவனைத் தூக்கி விட்டார். காரணம் என்ன! ராவணனுக்குள் நல்ல எண்ணம் இல்லை. 

தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இதுபோன்ற சித்திகள் எல்லாம் வராது. 
ஆஞ்சநேயர் நல்ல எண்ணத்தின் வடிவம். அவரால் எளிதாக லட்சுமணனைத் தூக்க முடிந்தது. 
நல்ல எண்ணங்கள் இருந்தால் தான் இத்தகைய சித்திகள் கைகூடும். 

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்

நினைத்தாலே இனிக்கும்! - 2 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

சரி...

அப்படியானால், பகவானை எப்படி தான் நம் மனதில் நிலை நிறுத்துவது?

பகவானின் நினைவு, நம் மனதுக்குள் வர வேண்டுமானால், முதலில் தர்மகாரியம் செய்தாக வேண்டும். தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். புண்ணியம் சேரச்சேர பகவானின் நினைவு தானாகவே வர ஆரம்பிக்கும். 

தர்மகாரியங்கள் நம் மனதில் சம்ஸ்காரத்தை (தீயதைப் போக்கி நல்லதைக் கொண்டு வருதல்) ஏற்படுத்தும். இயற்கை வைத்தியம் செய்யும்போது, கெட்ட உணவை மாற்றி நல்ல உணவு தருவது போல நம் மனதிலுள்ள அழுக்கையும் போக்க தர்மச் செயல்கள் துணை நிற்கும்.

மனிதஉடலில் மூத்திரம், மலம் வியர்வை ஆகிய அழுக்குகள் உள்ளன. இவற்றை வெளியேற்ற வழிகள் உள்ளன. ஆனால், மனதிலுள்ள அழுக்கைப் போக்குவதற்கென உறுப்புகள் ஏதுமில்லை. ஏனெனில், மனது துப்புவதில்லை. தர்மம் செய்யச்செய்ய புண்ணியம் சேரும். அது மனதிலுள்ள மாசைப் போக்கும். நல்ல விஷயங்களை நோக்கி முன்னேறினாலே போதும். மனம் சீராக ஆரம்பிக்கும்.

கலியுகத்தில் தர்மத்திற்கு விரோதமான செயல்களே அதிகமாக நடக்கின்றன. துவாதசியன்று பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது மிகச்சிறந்த தர்மம். இப்போது பசுவையே காணவில்லையே! பிராணிகளை இம்சை செய்யாமல் இருப்பது தர்மம். ஆனால், அது மீறப்படுகிறது. குளம் வெட்டுவது மிகமிக பெரிய தர்மம். ஆனால், தண்ணீர் வேண்டும். இப்போது, விஞ்ஞானிகள் ஆகாயத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று எச்சரிக்கிறார்கள். பனிப்பாறைகள் உருக ஆரம்பித்து விட்டன. இயற்கை பாழ்படுத்தப்பட்டிக்கிறது. இன்று விஞ்ஞானிகள் சொல்லும் இந்தக் கருத்தை, வேதங்கள் எப்போதோ சொல்லிவிட்டன. அதை நாம் கடைபிடிக்கவில்லை.

குளுகுளு(ஏசி) வசதி கூடாது. சுற்றுச்சூழல் கெட்டு விடும் என்றார்கள். ஆனால், அதைத் தாராளமாகச் செய்தாயிற்று. எல்லா வசதியையும் மனிதன் தனக்கு செய்து கொண்டு விட்டான். முதலில் ஆறுகளில் தண்ணீர் காணாமல் போனது, பிறகு மணல் காணாமல் போனது, இப்போது பல இடங்களில் ஆறுகளையே காணவில்லை. 

கலியுகத்தில், தாவரங்களுக்கும், பிராணிகளுக்கும் இம்சை செய்யப்படுகிறது. இதோடு விட்டதா! மனிதர்களை வாயாலேயே கொல்கிறார்கள். சரி...இப்படியெல்லாம் கலியுகத்தில் உலகம் கெட்டு விட்டதே! இனிமேல் தர்மம் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். தர்மத்தைக் கடைபிடிக்கும் போதும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். கஷ்டப்படாமல் ஒன்று கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது. அது மட்டுமல்ல! கஷ்டப்பட்டால் தான் தர்மம் நிலைக்கும். ஆக, மிகுந்த கஷ்டப்பட்டே மனஅழுக்கைப் போக்க பாடுபட்டாக வேண்டும்.

தர்மத்தைக் கடைபிடிப்பது என்பது ஒரே நாளில் வந்து விடாது. அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வரும். பொது உபயோகத்திற்காக ஒரு குளம், கிணறு வெட்டப் போகிறீர்கள். அதற்கே ஆயிரம் எதிர்ப்பு வரும். காரணம், இதற்கு முன் நாம் தர்மம் செய்யாததால் தான் இதுபோன்ற எதிர்ப்பே வருகிறது. அதற்காக அந்தச் செயலை விட்டு விடக்கூடாது. எதிர்ப்பை ஊக்கத்துடன் வென்று தர்மத்தைச் செய்தாக வேண்டும்.

தர்மம் என்றால் ஏதோ பெரிய அளவில் செய்தாக வேண்டுமென்பதில்லை. ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த வியாபாரம் லட்சரூபாய் முதலீடு உரியதாக மாறுவது போல், கொஞ்சம் கொஞ்சமாக புண்ணியம் செய்தாலே போதும். ஒன்றுமே இல்லையா! கஷ்டப்படும் 2 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தாலே (இலவச டியூஷன்) போதும். பத்து கோடி ரூபாயில் பள்ளிக்கூடம் கட்டி தான், பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதில்லை.

தர்மத்தை வெறுப்பவர்கள் இப்போது அதிகம். இயற்கை தர்மத்தைக் கடைபிடிக்காததால் தான் கிருஷ்ண ஜெயந்திக்கு கிரப்பம் பழம், நாகப்பழம், விளாம்பழம் ஆகியவை எல்லாம் கிடைப்பதே இல்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் வாழைப்பழம், மாம்பழம், இலை கூட கிடைக்காமல் போய்விடும் போல் இருக்கிறது. இனிமேல் இலை என்றால் பச்சைக்கலரில் ஒரு மாத்திரை, மிளகாய் என்றால் சிவப்புக்கலர் மாத்திரை என்று மாத்திரை மயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு உலகம் கலியில் சிக்கிக் கிடக்கிறது.

இந்த சிக்கலில் இருந்து மீள வழியுண்டா?

உண்டு... பகவானைப் பிரார்த்தித்தால் மீண்டு விடலாம். அவனை வணங்க வேண்டுமானால் பல ரூபங்களில் உள்ளான் என்கிறார்களே! நான் எந்த ரூபத்தில் வணங்குவது என்ற கேள்வி எழும்.
அவன் சூஷ்ம ரூபமாக இருக்கிறான். "சூஷ்மம்' என்றால் "சிறிய' "அல்பம்' என்று பொருள் கொள்ளலாம். "ரூபம்' என்றால் "வடிவம்'. அதாவது, அவன் சிறிய வடிவமாக உள்ளான். அச்சுதன் என்று அவனைச் சொல்கிறார்களே! அவனுக்கு சின்ன அச்சுதன், பெரிய அச்சுதன் என்றெல்லாம் பாகுபாடுஉண்டா? சிறிய வடிவாக உள்ள அவன், நம் மனதிற்குள் நிற்பானா? 

கலியுகத்தில் பகவானை மனதில் இருத்தி தியானம் செய்வது என்பது லேசில் வராது. இதில் அவன் மிகச்சிறிதாக இருந்தால், அவனை எப்படி மனதில் இருத்தி தியானிப்பது?

ஒரு வேலைக்கு போக வேண்டுமானால், பயிற்சி வகுப்பு, நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று பலபடிகளைத் தாண்டிப் போக வேண்டியுள்ளது. அதுபோல், தியானம் செய்யவும் பல படிகளைத் தாண்டியாக வேண்டும். 

எந்தப் படிக்கட்டில் தவறு செய்தாலும் தியானம் சித்திக்காது. அப்படியானால் ஒருமனதாக தியானம் செய்வது எப்படி? முதலில், பகவானை புருஷோத்தமன் என நம்ப வேண்டும். அதாவது<, எல்லாரையும் விட உயர்ந்தவன் என நினைக்க வேண்டும். 

ஏகாதசியன்று பட்டினி கிடத்தல், அன்னதானம், குடிநீர் தானம் செய்தல், கோயில் கட்டுதல், கல்வி சொல்லிக் கொடுத்தல் ஆகிய தர்மகாரியங்களைச் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது, புண்ணியம் சேரும். புண்ணியம் சேரச்சேர பகவானை தியானிக்கும் மனப்பக்குவம் வரும். அந்தப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

தர்மம் செய்யச் செய்ய மனத்தெளிவு வரும். அதன்பின், பகவானைத் தியானிப்பதில் சிரமம் இருக்காது.

பகவானை எந்த உருவில் தியானிப்பது என்பதில் முதலில் சூஷ்மரூபத்தை எடுத்துக் கொள்ளலாம். அது கண்ணுக்கு தெரியாது. புலன்களுக்கு எட்டாதது. இந்திரியங்களால் அறிய முடியாதது. அதாவது, நமக்கு கட்டுப்படாதது. இதை எப்படி நாம் நினைப்பது!

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்

நினைத்தாலே இனிக்கும்! - 1 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

பக்தி செலுத்துபவர்களுக்கு கீதையின் 15ம் அத்தியாயம் நன்றாகத் தெரிந்திருந்தால் போதும். இதில், கண்ணன் தன்னை புருஷோத்தமன் என சொல்கிறான். "புருஷோத்தமன்' என்றால் "அனைவரையும் காட்டிலும் உயர்ந்தவன்' என பொருள். தான் மிகவும் உயர்ந்தவன் என கண்ணன் பிரகடனம் செய்கிறான்.

எல்லாரிடமும் பகவான் ஒன்றை எதிர்பார்க்கிறான். 

""என்னை யாரொருவன் புருஷோத்தமன் என சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து கொள்கிறானோ, அவன் என்னிடம் பக்தி செய்தவன் ஆவான்,'' என்கிறார். அப்படியானால் கோயிலுக்குப் போவது, பகவானின் பெருமைகளைக் கேட்பது என்பதெல்லாம் பக்தி செலுத்துவதாக கொள்ளப்படாதா என்ற கேள்வி எழலாம். 

பக்தியில் பலவகை உண்டு. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பக்தி செலுத்துகிறார்கள். சிலர் பிரதட்சணம்(கோயிலை வலம் வருதல்), சிலர் நமஸ்காரம் மட்டும் செய்வது என்று வழிபாட்டு முறை மாறுபடுகிறது. ஆழ்வார்கள் ஆடுவது, பாடுவது, பூத்தொடுப்பது என்று பலவிதமாக பக்தி செலுத்தியுள்ளனர். ஆக, எந்த விதத்திலும் பக்திசெலுத்தலாம்.

குழம்பு சாதம் மோர் சாதகமாகாது. மோர்சாதம் கேசரி ஆகாது. அதனதன் சுவையில் அது அது இருக்கும். அதுபோல, ஒவ்வொருவர் செலுத்தும் பக்தியும் தனித்துவம் வாய்ந்ததாக அமையும். 
எள் சாதம், எலுமிச்சை சாதம், அக்கார அடிசில், சர்க்கரைப் பொங்கல் என எல்லாவற்றுக்கும் தனித்தனி ருசி. அதுபோல, நீங்கள் எந்த வகையில் பக்தி செய்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறான் கண்ணன்.

இப்படி சம்பிரதாயங்கள் இல்லாத பக்தியையும் கூட கண்ணன் ஏற்றுக்கொள்கிறான். ஏன்...என்னை நினைத்தாலே போதும் என்கிறான். ஒருவர் 1008 பசுக்களை ரத்னகம்பளம் வைத்து தானம் செய்கிறார். இதுமாதிரி எல்லாராலும் செய்ய முடியுமா? அவரவர் சக்திக்கு தகுந்த பக்தி செலுத்தினால் போதும்.

அதனால் தான் கண்ணன் எளிமையான வழியைச் சொன்னான்.

""என்னை புருஷோத்தமன் என யார் ஒருவன் நினைக்கிறானோ, அந்த மகானுபாவன் என்னிடம் எல்லா வழிகளிலும் பக்தி செலுத்தியவன் ஆகிறான்,'' என்கிறான். ஆம்.. பகவானிடம் பக்தி செலுத்துபவன், மகாபாரதம், ராமாயணம், பாகவதம் என எல்லாப்புராணங்களையும் அறிந்தவன் போல் ஆகிறான். பகவானை புருஷோத்தமன் என நினைத்தாலே, தெரியாத எல்லாவற்றையும் தெரிந்தவர்கள் ஆகிறோம். ஆக, இப்படி நினைப்பது கஷ்டமான விஷயமா! இந்த நினைவிருந்தாலே நமக்கு முக்தி கிடைத்து விடும். இந்த எளிமையான பக்தி, கரும்பு தின்னகூலி கொடுத்தது போல் இருக்கிறது.

தியானம், பூஜை, நைவேத்யம் செய்வது தான் பக்தி என்றில்லை. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். ஒரு பயில்வானும், சில குத்துச்சண்டை வீரர்களுடன் பத்துநாள் போட்டி போட வேண்டும். ஜெயித்தால் கோப்பை என்று அறிவிக்கப்படுகிறது. இதையே, ஒரே நாள் அந்த பத்து வீரர்களின் தலைவருடன் மோதினால் போதும். அவரை ஜெயித்து விட்டால் கோப்பை என்றால், அந்த பயில்வான் எதைத் தேர்ந்தெடுப்பார்? வலிமை குறைந்த பத்து பேர், ஆனால் பத்துநாள். வலிமையான ஒரு நபர்..ஆனால் ஒரே நாள் தான்! 

இதுபோல் தினமும் விளக்கேற்றி, நாமசங்கீர்த்தனம் செய்து, உபன்யாசம் கேட்டு என்று பல வழிகளில் பக்தி செலுத்துவதை விட, பகவானை நினைத்துக் கொண்டிரு என்ற ஒரே வழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது தானே! 

ஒருவருக்கு வியாதி வந்து விட்டது. 

இனிப்பான மருந்தைக் கொடுத்து குடி என்கிறார்கள். அந்த இனிப்புக்கு ஆசைப்பட்டே, அந்த மனிதர், இந்த நோய் இன்னும் பத்துநாள் இருக்கக்கூடாதா என்று நினைக்க ஆரம்பித்து விடுவார். அதே நேரம் கசப்பு மருந்து கொடுத்தால், ஒரே நாளில் இந்த வியாதி ஓடிவிடாதா என கதறுவார். வியாதி என்பது நமது பாவங்கள். அவற்றை விரட்ட, இனிப்பு மருந்தாக பல வித பக்திமுறைகள் உள்ளன. அதைக்கொண்டு பகவானை அடைய பல பிறவிகளைக் கடக்க வேண்டிஇருக்கும். அதேநேரம் கசப்பு மருந்து என்றால் பிறவி வியாதி சீக்கிரம் பறந்து விடும். அந்த கசப்பு மருந்து தான் பகவானை நினைப்பது.

அதேநேரம், பகவானை நினைப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா? அவனை எப்படி நினைப்பது. அவனுக்கு பல வடிவங்கள் இருக்கின்றதே! எந்த வடிவத்தை தேர்ந்தெடுத்து வணங்குவது!

பகவான் சூஷ்மரூபமாக இருக்கிறான் என்கிறார்கள். அதே நேரம் தன்னை புருஷோத்தமன்.. அதாவது எல்லாரையும் விட மிகவும் உயர்ந்தவன் என நினைக்க வேண்டும் என்கிறான். ஒருவனைப் பற்றி விசாரிக்கும் போது, இவன் பாட்டு, படிப்பு எதில் உயர்ந்தவன் என்று கேட்கிறோம் இல்லையா! அதுபோல், பகவான் எந்த வகையில் உயர்ந்தவன் என்று தெரிந்து கொண்டாக வேண்டும்.

இங்கு தான் கீதையின் 15வது அத்தியாயம் முக்கிய இடம் பெறுகிறது. கீதையைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. பெரிய பெரிய மேதைகள் கூட, இன்று வரை கீதையை ஓரளவு தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதில் 15வது அத்தியாயத்தைப் படித்தாலே போதும். அவனுக்கு பிறவியில்லை என்றாகி விடும்.

சரி...பகவானை மற்றவர்களை விட உயர்ந்தவர் என்கிறார்களே! அவனுக்கு என்னைப்போல இரண்டு கண், ஒரு மூக்கு தானே இருக்கிறது. நான் ஒரு மனைவியுடன் இருக்கிறேன். அவன் 16,108 மனைவியருடன் இருக்கிறானாமே! அப்படியிருக்க, என்னை விட அவன் எப்படி உயர்ந்தவன் ஆவான்...என்று பல கேள்விகள் எழுகின்றன. இதற்கு விடை தெரிந்தால் போதும்.

கலியுகத்தில் பகவானை நினைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். 

ஒன்றாம் தேதி வந்தாச்சு! 

சம்பளம் வாங்கியாச்சு! ஓட்டலில் போய் 500ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரை சாப்பிட்டா அந்த 
கண்ணனையே நேரில் சேவித்த மாதிரி ஒரு உணர்வு! ஒருவேளை சாப்பிட அழைத்துப் போகாவிட்டால், வீட்டில் ஒரே சண்டை! இதற்குத்தான் நேரமிருக்கிறதே தவிர, பகவானை நினைக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இருக்கிறது? ஏனெனில், கலியுகத்தில் சுகபோகத்தில்தான் புத்தி போகும். யோகத்தின் பக்கம் போகாது. இந்தக் காலத்தில் ஜெபம், தவம் பண்ண முடியுமா! 15 நிமிடம் ஓய்வு கிடைத்தால் தூங்க எண்ணம் வரும், கதை படிக்க ஆசை வரும், இந்த காலத்தில் ஒரு அனர்த்தம் இருக்கிறது. அதுதான் தொலைபேசி. அதை காதில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேச முடியும்! பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் வேண்டாத கதைகளைப் பேசத்தோன்றும். பகவானை நினைப்பதாவது! அது எப்படி முடியும்?

- இன்னும் இனிக்கும்

(வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி திருநெல்வேலியில் பேசியதன் தொகுப்பு)

நன்றி - தினமலர்

சனி, 19 ஜூலை, 2014

யதோக்தகாரி : சொன்ன வண்ணம் செய்த பெருமாள் - ஜெகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

"சொன்னவண்ணம் செய்த பெருமாள்"என்ற பெயரிலேயே காஞ்சீபுரத்தில் ஒரு கோவிலில் பகவான், மஹாவிஷ்ணு இருக்கிறார். "யதோக்தகாரி"என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்வார்கள். 'யதோக்த' - 'யதா உக்த' : 'சொன்னபடி', ‘சொன்னவண்ணம்' - 'காரி'-செய்பவர்.

யார் சொன்னபடி பெருமாள் செய்தார்?குருவாக இருக்கப்பட்ட ஒருவர், தன் சிஷ்யன் ஊரைவிட்டுப் போகிறானா, அப்போது பெருமாளும் அவன் பின்னே துரத்திக்கொண்டு ஓடவேண்டும்; அப்புறம் அவன் ஊருக்கே திரும்பி வருகிறானா, அப்போதும் அவன் பின்னேயே துரத்திக்கொண்டு வந்துவிடவேண்டும் என்று ‘ஆர்டர்'போட்டார்! பகவானுக்கே ஆர்டர் போட்டார்! அவர் சொன்னபடியெல்லாம் பகவானும் பண்ணினான். யதோக்தகாரி என்று பெயர் வாங்கினான்.

அந்த குரு யார்? சிஷ்யப்பிள்ளை யார்? ஏன் இப்படி (குரு) ஆர்டர் போட்டார்?

கொஞ்சம் கதை கேட்கலாம்.

ஆழ்வார்களில் திருமழிசையாழ்வார் என்பவர் ஒருவர். பூந்தமல்லிக்குக் கிட்டே இருக்கும் திருமழிசையில் பிறந்து வளர்ந்தவராதலால் ஊரை வைத்தே அவர் பேரைச் சொன்னார்கள். பெரியவர்களின் பேரைச் சொல்லப்படாது என்பதால் அந்த நாளில் இப்படியெல்லாம்தான் ஊரை வைத்து, அல்லது அவர்கள் செய்த காரியத்தை வைத்து, அல்லது அவர்களுடைய மஹிமையைக் குறிப்பிடுகிறமாதிரி இன்னொரு பெயரைச் சொல்வார்கள். பெரியாழ்வார்-பெரிய ஆழ்வார், நம்மாழ்வார்-நம்முடைய, அதாவது நமக்கு ரொம்ப ஸொந்தமான ஆழ்வார் என்பவையும் இப்படிப்பட்ட காரணப் பெயர்கள்தான். காரணப் பெயரே ப்ரஸித்தி பெற்று, அம்மா அப்பா வைத்த பெயர் மறந்து, மறைந்து போய்விடுவதுமுண்டு. திருமழிசையாழ்வாருக்கு பக்திஸாரர் என்று ஸம்ஸ்க்ருதப் பேர் சொல்கிறார்கள். அதுவும் காரணப் பெயராகவே இருக்குமோ என்னவோ?திருமழிசை என்பதில் மழிசை என்பது 'மஹீஸாரம்', அது மஹீஸார க்ஷேத்ரம் என்கிறார்கள். பூமிக்கே ஸாரமான ஊர் அது என்று அர்த்தம். மஹீஸாரத்தில் பிறந்து வளர்ந்தவர் பக்திஸாரர்!

அப்புறம் அவர் காஞ்சீபுரத்துக்கு வந்து வாஸம் பண்ணிக் கொண்டிருந்தார். அங்கேயிருக்கிற ஒரு பெருமாள் கோவிலில் பாசுரம் பாடிக்கொண்டும், உபதேசம் பண்ணிக் கொண்டும் அவ்வப்போது அப்படியே யோகஸமாதியில் போய்க்கொண்டும் இருந்தார்.

பொதுவாக அவரைப் பற்றி ஒன்று நினைக்க இடமுண்டு. அதாவது, 'முதலாழ்வார்கள் என்கிற மூன்று பேரும்- பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்ற அந்த மூன்று பேரும்-மஹாவிஷ்ணுவின் பரம பக்தர்களென்றாலுங்கூட ஸமரஸ மனப்பான்மையோடு சிவனையும் உயர்வாகச் சொல்லிப் பாடினவர்கள்; திருமழிசையாழ்வார்தான் வீரவைஷ்ணவமாகவே சொல்ல ஆரம்பித்தவர்’ என்று சொல்வதற்கு இடமிருக்கிறது. பெரியவர்களைப் பற்றிக் குறைவாகச் சொல்லக்கூடாது.

இதர தெய்வங்களைக் குறைத்துச் சொல்லியிருந்தாலும் அவர் பண்ணின திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகியவற்றில் விஷ்ணுவிடம் பரம பக்தியையும், யோக மார்க்கத்தின் உத்தம ஸ்திதிகளைப் பற்றியும் பார்க்கிறோம். இத்தனை நாழி ஒருவரிடமே அநன்ய பக்தி பண்ணுவது பற்றி சொன்னேனே, அப்படி விஷ்ணு பக்தர்களை ஒரே குறியாக அந்த ஒரு மூர்த்தியிடமே ஈடுபடுத்துகிற நோக்கத்தில்தான் அவர் இதர தெய்வங்களை மட்டம் தட்டினாலும் பரவாயில்லை என்று பண்ணியிருக்கிறாரென்று ஸமாதானம் செய்து கொள்ளலாம். அது இருக்கட்டும்.

பகவானுக்குப் பாசுரம் ஸேவிப்பது, பாகவதாளுக்கு உபதேசம் செய்வது, அப்படியே யோக நிஷ்டையில் போய் விடுவது என்று அவர் கோவிலிலேயே வாஸம் பண்ணிக் கொண்டிருந்தார். (அது) வரதராஜா கோவிலென்று நினைத்தால் அது தப்பு.

காஞ்சீபுரத்துப் பெருமாள் கோவில் என்று சொன்னால் இப்போது பிரதானமாகவுள்ள வரதராஜாவைத்தான் நினைக்கத் தோன்றுகிறதென்றாலும், வாஸ்தவத்தில் அந்த நகர எல்லைக்குள்ளேயே ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த "திவ்யதேசங்க"ளாகப் பதினாலு விஷ்ணுவாலயங்கள் இருக்கின்றன. சைவத்தில் "பாண்டிப் பதினான்கு” என்று தெற்கு ஜில்லாக்கள் அத்தனையிலுமாகப் "பாடல் பெற்ற ஸ்தல"ங்கள் பதினாலுதான் இருக்கின்றனவெனில், வைஷ்ணவத்திலோ தொண்டை மண்டலத்தின் ராஜதானியான காஞ்சீபுரம் ஒன்றுக்குள்ளேயே பதினான்கு முக்யமான விஷ்ணு ஆலயங்கள் இருக்கின்றன! அவற்றில் ஸமீபகாலமாகச் சிற்பச் சிறப்பு, சரித்ர முக்யத்வம் ஆகியவற்றால் வைகுண்டப் பெருமாள் கோயில் அறிவாளிக்களுக்கிடையில் கொஞ்சம் ப்ரபலமாகி வருகிறது. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன்.

வைகுண்டப் பெருமாள் கோயில்

மோக்ஷம் என்பதை சைவர்கள் கைலாஸம் என்பார்கள். வைஷ்ணவர்கள் வைகுண்டம் என்பார்கள். காஞ்சீபுரத்தில் கைலஸாநாதர் கோயிலும் இருக்கிறது : வைகுண்டப் பெருமாள் கோயிலும் இருக்கிறது!இரண்டுமே சிற்ப விசேஷம் படைத்தவையாகவும் இருக்கின்றன. காஞ்சீபுரத்தை ராஜதானியாகக் கொண்டிருந்த பல்லவ ராஜாக்கள் நல்ல வைதிகப் பற்றுள்ளவர்கள். முறையான வைதிகம் என்றால் அது சிவ பக்தி, விஷ்ணு பக்தி இரண்டிற்கும் ஒரே மாதிரி இடம் கொடுப்பதாகவே இருக்கும். பல்லவ ராஜாக்கள் தங்களை சிவ பக்தர்களான 'பரம மாஹேச்வரர்'களாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், விஷ்ணு பக்தர்களான 'பரம பாகவதர்'களாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு த்ரிமூர்த்திகளில் இன்னொருவரான ப்ரஹ்மாவையும் விடாமல் 'பரம ப்ரஹ்மண்யர்'கள் என்றுகூடத் தங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆரம்பகாலக் கோயில்களை எழுப்பியபோது ப்ரஹ்மாவுக்கும் இடம் கொடுத்தார்கள். ஆனால் அது நம்முடைய வழிபாட்டு மரபிலே சேராமல் மங்கி மறைந்து போய்விட்டது. 

'ப்ரஹ்மண்யர்'என்பது ஸுப்ரஹ்மண்ய பக்தரைக் குறிப்பது என்றும் அபிப்ராயம் உண்டு. பல்லவர் கோயில் திருப்பணிகளில் பார்வதீ பரமேச்வரர்களுடன் பால ஸுப்ரஹ்மண்யரும் சேர்ந்திருப்பதான ஸோமாஸ்கந்த மூர்த்தம் சிலா (கல்) வடிவிலேயே லிங்கத்தின் பின்னால் மூலஸ்தானத்தில் பொறிக்கப்பட்டிருப்பதிலிருந்து அவர்களுடைய முருகபக்தி தெரிகிறது. ஆதிப் பல்லவ ராஜா ஒருத்தனின் பெயரே ஸ்கந்த சிஷ்யன் என்பதாகும். ஸிம்ஹ விஷ்ணு, நரஸிம்ஹன் என்று விஷ்ணுப் பெயர்கள்; பரமேச்வர வர்மா, நந்திவர்மா என்று சிவ ஸம்பந்தமான பெயர்கள் - இப்படி அந்த ராஜ வம்சத்தில் இரண்டு விதமாகவும் பார்க்கிறோம். சைவம் வைஷ்ணவம் இரண்டையும் ஸமமாக மதிக்கும் சுத்த வைதிகமாகப் பல்லவர்கள் இருந்துகொண்டிருந்தார்கள். 

நடுவாந்தரத்தில் மஹேந்த்ர வர்மா ஜைனனாகப் போனாலும், அப்புறம் அப்பர் ஸ்வாமிகளின் மஹிமையினால் வைதிகத்திற்கே திரும்பினான். சைவ-வைஷ்ணவ ஸமரஸம் கொண்டவர்களானாலும் இஷ்ட மூர்த்தி என்று வரும்போது பல்லவ ராஜாக்களில் சிலருக்கு அது சிவனாகவும், சிலருக்கு விஷ்ணுவாகவும் இருந்திருக்கிறது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் கோச்செங்கட்சோழன், புகழ்ச்சோழன் என்ற சோழ ராஜாக்களும், நெடுமாறன் என்ற பாண்டியராஜாவும், சேரமான் பெருமாள் என்ற சேர ராஜாவும் இடம் கொண்டிருப்பது தெரிந்திருக்கலாம். நெடுமாறனின் பத்தினியான பாண்டியராணி மங்கையர்க்கரசியும் ஒரு நாயனார். ஐயடிகள் காடவர்கோன் என்றும் ஒரு ராஜா அறுபத்து மூவரில் ஒருவராக இருந்திருக்கிறார். பன்னிரு சைவத் திருமுறைகளில், பதினொன்றாவதான திருமுறையில் 'திருவெண்பா'என்பதைப் பாடியிருப்பவர் அவர்தான். கோவில் கோவிலாகப் போய் வெண்பாப் பாடிக்கொண்டிருந்த அந்த சைவ ராஜாவைப் பல்லவ வம்சத்தைப் சேர்ந்தவரென்றே சேக்கிழார் (பெரிய புராணத்தில்) சொல்லியிருக்கிறார். அதாவது சேர-சோழ-பாண்டிய ராஜாக்களில் நாயன்மார் இருந்ததுபோலவே பல்லவ ராஜாக்களிலும் ஒரு நாயனார் இருந்திருக்கிறார்.

ராஜஸிம்ஹன் என்ற இரண்டாவது நரஸிம்ஹன் பெரிய சிவ பக்தனாக இருந்தான். சைவாகமங்களில் அவன் நல்ல அப்யாஸம் பெற்றவன். 'சிவ பாத சேகரன்'என்று ராஜ ராஜ சோழனுக்குப் பட்டம் இருந்ததென்றால் அவனுக்கு முன்னூறு வருஷம் முந்தியே ராஜ ஸிம்ஹப் பல்லவனுக்கு 'சிவ சூடாமணி'என்ற பட்டம் இருந்திருக்கிறது. இவன் தான் முதல் முதலாகப் பாறைக் கல்களைக் கட்டிடமாக அடுக்கிக் கோயில் கட்டினவன். அவனுக்கு முன் காலத்தில் மலைகளையும், குன்றுகளையும், பெரிய ராக்ஷஸப் பாறைகளையும் அப்படியே போட்டுக் குடைந்துதான் ஆதி பல்லவர்கள் கோயில் எழுப்பினார்களேயழிய, கல்லின் மேல் கல் அடுக்கிக் கட்டிடமாகக் கட்டவில்லை. ராஜஸிம்ஹப் பல்லவன் கட்டின அந்தக் கோவில்தான் கைலாஸநாதர் ஆலயம். ஒரே சிற்ப மயமாகப் பொரித்துக் கொட்டிக் கட்டிய கோவில் அது. ஏகப்பட்ட சிற்பம் என்றாலும் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வெகு நுணுக்கமாகப் பண்ணியிருக்கும். கலா ரஸிகர்கள் காஞ்சீபுரக் கோவில்களுக்குள்ளேயே, ஏன், தமிழ்நாட்டுக் கோவில்களுக்குள்ளேயே அதற்குத்தான் 'ஃபர்ஸ்ட் ப்ரைஸ்'கொடுக்கிறார்கள்!அதிலுள்ள சிற்பங்களெல்லாம் புராண ஸம்பந்தமானவை. பெரும்பாலும் சிவ லீலைகள் தானென்றாலும் மஹாவிஷ்ணுவைக் குறித்ததாகவும் சில இருக்கின்றன.

அதற்கடுத்தபடியாக நிறையச் சிற்பம் கொண்டதுதான் வைகுண்டப் பெருமாள் கோவில். அதற்குப் பழைய பெயர் - ஆழ்வார் பாசுரத்தில் வருகிற பெயர், "பரமேச்சுர விண்ணகரம்"என்பது. "விண்ணகரம்"என்றால் விண்ணாட்டு நகரம் இல்லை!'விஷ்ணுக்ருஹம்'தான் 'விண்ணகரம்'ஆகிவிட்டது. ஸிம்ஹ விஷ்ணுவின் பெயரை மஹாபலிபுரத்தில் 'சிம்ம விண்ண போத்ராதி ராஜன்'என்றே செதுக்கியிருப்பதிலிருந்து 'விஷ்ணுக்ருஹம்'தான் 'விண்ணகர'மாகியிருக்கிறதென்று புரிந்துகொள்ளலாம்.

பல்லவர் தோற்றுவாய்

‘போத்ராதிராஜன்'என்னவென்றால்...

பல்லவம் என்றால் துளிர். போதம் அல்லது போத்ரம் என்றாலும் துளிர் என்றே அர்த்தம். அச்வத்தாமாவிடம் ஒரு வனத்திலே தேவ ஸ்த்ரீ ஒருத்தி ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்றும், அதைத் துளிர்ப்படுக்கையிலே போட்டு விட்டு தேவலோகம் போய்விட்டாள் என்றும், அந்தப் பிள்ளைதான் துளிரில் வளர்ந்ததால் 'பல்லவன்'என்று பெயர் பெற்று ராஜாவாக ஆட்சிக்கு வந்தான் என்றும் கதை இருக்கிறது. தெலுங்கு தேசத்தில் அமராவதி என்ற இடத்திலுள்ள ஸிம்ஹவர்ம பல்லவனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் இந்தக் கதையை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அரக்கோணத்திற்கு ஏழெட்டு மைலிலுள்ள வேலூர் பாளையம் என்கிற இடத்தில் அகப்பட்ட மூன்றாவது (விஜய) நந்தவர்மாவின் தாம்ர சாஸனத்திலும் இந்தக் கதையைக் குறிப்பிட்டிருக்கிறது. அச்வத்தாமா பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த ப்ராம்மணர். அவருடைய பிதாவான த்ரோணாசார்யாருக்கு பாரத்வாஜர் என்றே ஒரு பெயர். பல்லவ ராஜாக்கள் தங்களை பாரத்வாஜ கோத்ரக்காரர்களாகவே சாஸனங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பல்லவ ராஜாக்களே சாஸனங்களில் இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டாலும், பழைய தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆராய்ச்சி பண்ணித் தமிழபிமானிகள் பல்லவர்களின் 'ஆரிஜின்' (தோற்றுவாய்) பற்றி வேறே ஒரு கதை சொல்கிறார்கள். நாகப்பட்டினத்துச் சோழ ராஜா ஒருத்தனுக்கு நாக கன்னிகையிடம் ஒரு பிள்ளை பிறந்தது; அவள் தொண்டைக் கொடியைச் சுற்றி அந்தக் குழந்தையை ஸமுத்ரத்தில் மிதக்க விட்டுவிட்டாள்; அதுதான் கரையேறித் தொண்டைமான் என்ற பல்லவ ராஜா ஆயிற்று என்று இந்தக் கதை. 

காஞ்சீ மண்டலத்துக்கே தொண்டை மண்டலம் என்று பெயர். தொண்டைக் கொடியை ஸம்ஸ்க்ருதத்தில் 'துண்டீரம்'என்பார்கள். அதனால் ஸம்ஸ்க்ருத நூல்களில் துண்டீர மண்டலம், துண்டீர சக்ரவர்த்தி என்றெல்லாம் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

குழந்தையை தேவ ஸ்த்ரீ படுக்கவிட்ட படுக்கையானாலும் ஸரி, நாக ஸ்த்ரீ அதன் இடுப்பில் சுற்றிய கொடியானாலும் ஸரி, இரண்டும் துளிர்களால் ஆனதுதான். துளிர்தான் பல்லவம். அதனால், எந்தக் கதைப்டி பார்த்தாலும் பல்லவர் என்ற பெயர் பொருத்தமானதாகிறது.

துளிருக்கேதான் இன்னொரு பேர் போதம், அல்லது, போத்ரம். தமிழிலும் சின்னஞ்சிறு நன்றாக உள்ள செடியைப் 'போத்து'என்றே சொல்கிறோம். 'பல்லவ மஹாராஜா'என்பதே இன்னொரு விதமான பத ப்ரயோகத்தில் 'போத்ர அதிராஜன்', 'போத்ராதி ராஜன்'என்றாயிற்று அதனால்தான் ஸிம்ஹ விஷ்ணுப் பல்லவச் சக்ரவர்த்தி என்பது 'சிம்ம விண்ண போத்ராதி ராஜன்’என்றாயிற்று.

'போத்ர ராஜன்'என்பதைத் தமிழில் 'போத்தராயன்'என்று சொல்லியிருக்கும். ஒரு வேலையும் செய்யாமல் கொழுத்துப் போனவர்களை 'போத் (த) ராசா'என்று திட்டுகிற வழக்கம் இருக்கிறதே, இந்த 'போத் (த) ராசா'கூட 'போத்ர ராஜா'விலிருந்து வந்ததுதான்!

வைகுண்டப் பெருமாள் கோவிலில் ஆரம்பித்தது, விஷ்ணுக்ருஹம், ஸிம்ஹ விஷ்ணு, போத்தராசா என்று எங்கெங்கேயோ போய்விட்டது! விஷ்ணு க்ருஹத்துக்குப் போவதற்குள் எங்கெல்லாமோ சுற்ற வைத்துவிட்டேன்!

கைலாஸம், வைகுண்டம் என்ற இரண்டில் ராஜஸிம்ஹன் கைலாஸநாதர் கோவில் கட்டினமாதிரியே, அவனுக்குப் பின் இரண்டாவது பட்டமாக வந்த நந்திவர்மா வைகுண்டப் பெருமாள் கோவில் கட்டினான். அதற்குப் 'பரமேச்வர விஷ்ணுக்ருஹம்’ என்றே பழைய பெயர். விஷ்ணுவின் க்ருஹம், ஆனால் பரமேச்வரனின் பேரில் இருக்கிறது என்கிறபோதே நான் இத்தனை நேரம் சொன்ன சைவ-வைஷ்ணவ ஒற்றுமை தெரிகிறது. ஆனால் இங்கே ‘பரமேச்வரன்' என்பது கோயில் கட்டிய நந்திவர்மாவின் இன்னொரு பெயரை வைத்துத்தான்!

ராஜராஜன் கட்டியது ராஜராஜேச்சுரம், கங்கைகொண்ட சோழன் கட்டியது கங்கைகொண்ட சோழீச்சுரம் என்கிற மாதிரி பரமேச்வரப் பல்லவமல்லனான நந்திவர்மா கட்டிய வைகுண்டப் பெருமாள் கோவில் அவன் பெயரிலேயே பரமேச்வர விண்ணகரம் ஆயிற்று.

கைலாஸநாதர் கோவில் சிற்பங்கள் புராண ஸம்பந்தமானவையாகப் பிரஸித்தி பெற்றிருக்கின்றன. வைகுண்டப் பெருமாள் கோவில் சிற்பங்களோ சரித்ர ஸம்பந்தத்தினால் முக்யத்வம் பெற்றிருக்கின்றன.

ராஜஸிம்ஹன் ரொம்பவும் பேர் புகழோடு ஆட்சி செய்துவிட்டு காலகதி அடைந்தபின் ராஜ்யத்தில் ஒரேயடியான குழப்பநிலை உண்டாயிற்று. சாளுக்ய ராஜாவான விக்ரமாதித்தன் காஞ்சீபுரத்தின்மீது படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றிக்கொண்டான். ராஜஸிம்ஹனுடைய பிள்ளையும் ஒரு பரமேச்வர வர்மாதான். அவன் ரொம்பவும் ஸ்வல்ப காலமே ஆட்சி பண்ணிவிட்டு, ஸந்ததி இல்லாமலே இறந்து போய்விட்டான். 

தலைப்பிள்ளைக்கு பட்டம் என்ற நம்முடைய Primogeniture வழக்கப்படிப் பல்லவ வம்சத்தில் ஸிம்ஹ வர்மாவுக்கு அப்புறம் ஸிம்ஹவிஷ்ணு வழியாக ராஜஸிம்ஹனின் பிள்ளைவரை போன நடுக்கிளை அதோடு முடிந்து போயிற்று. அப்புறம் அதன் பக்கக் கிளைகளில் ஒன்றில் வந்த கோத்ர தாயாதியான ஹிரண்யவர்மா என்பவனிடம் பல்லவ ராஜ்யத்தின் முக்யஸ்தர்கள் தூது போய்க் கேட்டுக்கொண்டடு, அவனுடைய பிள்ளையான இன்னொரு பரமேச்வர வர்மாவுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணினார்கள். அவன்தான் நந்திவர்மப் பல்லவமல்லன் என்று பெயர் வைத்துக்கொண்டு அறுபது வருஷத்திற்குமேல் ஆட்சி நடத்தினான்.

அவனுடைய இன்னொரு பெயரில் அமைக்கப்பட்ட பரமேச்வர விண்ணகரமாகிய வைகுண்டப் பெருமாள் கோவிலில் இதைப் பற்றிய கல்வெட்டு இருக்கிறது.

இப்படி எழுத்திலே வெட்டியிருப்பதைவிட முக்யமாக இந்தக் கோவிலுக்கு என்ன சரித்ர ப்ரஸித்தி என்றால், மஹாவிஷ்ணுவிலிருந்து ஆரம்பித்து ப்ரம்மா வழியாகப் பல்லவ ராஜாக்கள் அத்தனை பேரின் வம்சாவளிக் கதைகளையும் - இந்தக் கோவிலைக் கட்டினவர் வரையில் - சிற்ப வரிசைகளில் வடித்துக் காட்டியுள்ள ஒரு மண்டபம் அங்கே இருப்பதுதான்.

சரித்ர முக்யத்வம் மட்டும்தானென்றில்லாமல் மத ஸம்பந்தமான விசேஷமும் அந்தக் கோவிலுக்கு உண்டு. இங்கே மூன்று அடுக்குகளாக ஸந்நிதிகளை அமைத்து, பெருமாளின் நின்ற திருக்கோலத்தைக் கீழ் தளத்திலும், இருந்த (உட்கார்ந்த) திருக்கோலத்தை நடு தளத்திலும், கிடந்த (சயனித்த) திருக்கோலத்தை மேல்தளத்திலும் அமைத்திருக்கிறது. 'அஷ்டாங்க விமானம்'என்பதாகப் பொதுவாகச் சொல்லப்படுகிற ஆகம விதிகளின்படி இப்படிப் பல அடுக்குகளில் ஆலயம் நிர்மாணிப்பது ரொம்பவும் அபூர்வமே. பாண்டி நாட்டில் திருக்கோட்டியூரிலுள்ள பெருமாள் கோவில், மதுரையிலேயே கூடலழகர் கோவில், காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில், இதைக்கட்டிய நந்திவர்மனின் பிள்ளையான தந்திவர்மன் காஞ்சிக்கு ஸமீபத்திலுள்ள உத்திரமேரூரில் கட்டிய ஸுந்தர வரதப்பெருமாள் கோவில் ஆகிய நாலில்தான் இந்த அமைப்பு இருப்பதாகத் தெரிகிறது.

நந்திவர்மப் பல்லவமல்லன் திருமங்கையாழ்வாரின் காலத்தில் இருந்தவன் என்று தெரிகிறது. அவனைத் தம்முடைய பாசுரத்தில் குறிப்பிட்டு அவர் பாடியிருக்கிறார்.

இந்த ஆழ்வாரிலிருந்து குரு - சிஷ்ய ஸமாசாரமாக நாம் பார்த்த ஆழ்வாருக்குப் போகலாம். சிஷ்யனுக்காக ஸ்வாமியையே, 'இப்படிப் பண்ணு, அப்படிப் பண்ணு'என்று சொல்லித் தாம் சொன்னவண்ணம் செய்ய வைத்த அந்த ஆழ்வாருக்குப் போகலாம். திருமழிசையாழ்வார் என்று பெயர் சொன்னேன், ஞாபகமிருக்கிறதல்லவா?
அவர் காஞ்சீபுரத்திலே ஒரு பெருமாள் கோவிலில் வாஸம் பண்ணி வந்தாரென்று சொல்லி அது எந்தக் கோவில் என்று சொல்வதில்தான் இருந்தேன். காஞ்சியிலுள்ள பதினாலு திவ்ய தேசங்களுக்குள் அவர் இருந்தது திருவெஃகா என்பதிலாகும்.

திருவெஃகா பெருமாளின் பெருமை

திருவெஃகா மாதிரியே திருத்தண்கா என்றும் பதினாலில் இன்னொன்று இருக்கிறது. வெஃகா, தன்கா என்றால் (முறையே) வெம்மையான காடு என்றும் தண்மையான காடு என்றும் அர்த்தம். ஆதியில் காடுகளில் ரிஷிகள் பூஜை பண்ணிக்கொண்டிருந்த இடங்கள்தான் அப்புறம் நாம் பார்க்கிற க்ஷேத்ரங்களாக ஆனதால் கா, காடு என்றே அவற்றில் பலவற்றின் பேர் இருக்கிறது. திருவானைக்கா, திருக்கோடிகா, திருவேற்காடு, திருமறைக்காடு (வேதாரண்யம்) இப்படி. தண்காவைத் தூப்புல் என்பார்கள். தூய புல்லான தர்ப்பை வளரும் இடம். வடகலை ஆசார்ய புருஷரான வேதாந்த தேசிகரின் ஜன்ம ஸ்தலம் அதுதான். தண்காவுக்கு இப்படிப் பெருமையென்றால், நம்முடைய கதைக்கார ஆழ்வார் ஸம்பந்தப்பட்ட வெஃகாவில் தான், அதன் புஷ்கரிணியில் (திருக்குளம் என்கிற பொய்கையில்) ஆழ்வார்களில் முதல்வராக இருக்கப்பட்ட பொய்கையாழ்வார் அவதாரம் செய்திருக்கிறார். அங்கேதான் யதோக்தகாரியாக பகவான் இருப்பது. யதோக்தகாரி என்ற பெயர் ஏற்படுவதற்கு முந்தியே அவர் அங்கே புஜங்க சயனப் பெருமாளாகப் படுத்துக் கொண்டிருந்திருக்கிறார். 

வரதராஜா ஆவிர்பவித்ததற்கு முந்தியே இருந்திருப்பவர் இவர். ஏனென்றால்...ப்ரஹ்மா ஒரு யாகம் பண்ணி, அதில் வரம் தர வந்தவர்தான் வரத ராஜா. அந்த யாகம் பண்ணும்போது ப்ரஹ்மாவுக்கும் ஸரஸ்வதிக்கும் மனஸ் தாபம். அதனால் ப்ரஹ்மா ஸரஸ்வதியை ஒதுக்கிவிட்டு, ஸாவித்ரி காயத்ரி என்ற இரண்டு பேரையே யஜ்ஞ பத்னிகளாக வைத்துக்கொண்டு யாகம் ஆரம்பித்தார். அப்போது ஸரஸ்வதி ஒரே கோபமாக வேகவதி என்ற நதி ரூபம் எடுத்துக்கொண்டு, வேகமாக வெள்ளம் அடித்துக் கொண்டு யாகசாலையை நோக்கி வந்தாள். அந்த ஸமயத்திலே இந்த புஜங்க சயனப் பெருமாள்தான் நதி வருகிற வழியில் குறுக்கே போய்ப் படுத்துக்கொண்டு தடுத்தார். யஜ்ஞமும் பூர்த்தியாகி, ப்ரஹ்மாவுக்கு மாத்திரமில்லாமல் எல்லா ஜனங்களுக்கும் எல்லாக் காலத்திலும் வரம் கொடுப்பதற்காக வரதராஜா தோன்றிக் கோயில் கொண்டார். நம்முடைய கதையில் வரும் ஆழ்வாரான திருமழிசைக்காரர் காஞ்சீபுரத்தில் இந்த புஜங்கசயனர் ஆலயத்திலோ, அல்லது அதை ஒட்டினாற்போலவோதான் வஸித்து வந்தார். அப்போதுதான் அவர் பெருமாளைத் தாம் சொன்னபடி செய்ய வைத்து யதோக்தகாரியாக்கியது.

வரதராஜா உள்படக் காஞ்சீபுரத்திலுள்ள பெருமாள்களில் பெரும்பாலும் எல்லாருமே 'நின்ற திருக்கோலம்'தான். 'இருந்த திருக்கோலம்'என்பதாக உட்கார்ந்த நிலையில் ஓரிரண்டு பெருமாள் இருக்கலாம். திருவெஃகாக்காரரோ 'கிடந்ததிருக்கோலம்'. அதாவது ஸ்ரீ ரங்கநாதர், பத்மநாபஸ்வாமி, சார்ங்கபாணிப்பெருமாள் ஆகியவர்களைப் போலப் பள்ளி கொண்டிருப்பவர். இவரைப்பற்றி ஒன்று குறிப்பிட்டுப் பெருமையாகச் சொல்வார்கள்.

என்னவென்றால்...எந்த க்ஷேத்ரத்திலுள்ள சயனக் கோலப் பெருமாளானாலும் ஸரி, அவருடைய சரீரம் மல்லாக்க (மல்லாந்து) படுத்திருந்தாலும், சிரஸையும் அந்தப்படியே வைத்து ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். முக மண்டலத்தை ஸந்நிதிப் பக்கம் கொஞ்சமாவது திருப்பி பக்த ஜனங்களைக் கடாக்ஷித்துக் கொண்டுதானிருப்பார். ஸ்ரீரங்கநாதர் தெற்குப் பார்த்த திருமுகமண்லடத்தோடு மேற்குப் பக்கம் சிரஸை வைத்துக்கொண்டு கிழக்கே பாதத்தை நீட்டிக் கொண்டிருப்பவர். நாம் அவருடைய ஸந்நிதிக்கு எதிரே நின்று பார்க்கும்போது நமக்கு இடதுகைப் பக்கம் அவருடைய சிரஸும், வலது கைப்பக்கம் பாதமுமாக இருப்பார். திருவனந்தபுரத்தில் பத்மநாப ஸ்வாமி கிழக்குப் பார்த்த திருமுகண்டலத்தோடு இருக்கிறார்.

அவர் தெற்கே சிரஸும் வடக்கே பாதமுமாக சயனித்துக் கொண்டிருப்பதால் அவரையும் நாம் எதிரேயிருந்து பார்க்கும்போது நமக்கு இடதுகைப் பக்கம்தான் சிரஸ், வலதுகைப் பக்கம் பாதம் என்று இருக்கும். கும்பகோணத்தில் ஆராவமுதன் என்கிற சார்ங்கபாணியும் அப்படித்தான் இருக்கிறார். திருவெஃகாவில் மாத்திரம் எப்படியிருக்கிறதென்றால், பெருமாள் தெற்கு - வடக்காக சிரஸ் - பாதங்களை வைத்து சயனித்திருத்திருந்தாலும் ஸந்நிதி மேற்குப் பார்த்தது. அதாவது அவருடைய திருமுகமண்டலம் மேற்குப் பார்க்கிறது. இதனால் என்னவாகிறதென்றால் நாம் அவருக்கு எதிரே நின்று தர்சிக்கும்போது நம்முடைய வலதுகைப் பக்கம் அவர் சிரஸும் இடதுகைப் பக்கம் பாதமும் இருக்கின்றன. மேலே சொன்ன மற்ற சயனமூர்த்திகளின் வலது பார்ச்வம் (right side ) நமக்குக் கிட்டேயும், இடது பார்ச்வம் (left side ) திருமேனிக்கு மறுபக்கம், நமக்குத் தள்ளி அந்தண்டையும் இருக்கும். ஸந்நிதிப் பக்கமாக நமக்குக் கிட்ட இருக்கும் வலது கையை நன்றாகத் தூக்கி அவர் அபயம் காட்டுவதாக அந்தப் பெருமாள்களின் சில்பம் அமைந்திருக்காது. சயன பீடத்தை ஒட்டினாற்போலவே அந்தக் கை தலைப் பக்கமாக மடிந்திருப்பதாகத்தான் மூர்த்தி பெரும்பாலும் அமைந்திருக்கும். அதாவது அந்தக் கையையே அவர் 'தலைக் கோசரம்' (தலைக்கு உயரமான தலையணை) மாதிரி வைத்துக் கொண்டிருக்கும் பாவனையில்தான் சில்பம் இருக்கும். உள்ளங் கையை விரித்து அவர் அபய முத்ரை காட்டினாலுங்கூட, முழங்கைக்குக் கீழே எடுப்பாகத் தூக்கி நன்றாக ஆசீர்வாதம் செய்கிறாற்போலில்லாமல், பீடத்தின் மட்டத்தோடேயே சேர்ந்தாற்போலதான் கை இருக்கும் கையைத் தூக்கினால் திருமேனியையே கொஞ்சம் மறைக்கிறாற்போலக் குறுக்கே நிற்கும்;கர்ப்பூரம் காட்டும்போது அதன் நிழல் திருமேனி மேல் விழும் - என்பது காரணமாயிருக்கலாம். அதோடுகூட, horizontal - ஆக - குறுக்கு வாட்டமாக - சயன மூர்த்தியைப் பெரிசாகச் சில்பத்தில் வடிக்கிறபோது முன்னங்கையைத் தூக்கினாற்போல் பண்ணுவதில் ச்ரமங்கள் உண்டு.

ஆனால், திருவெஃகாவில் ஸ்வாமி மற்ற சயன மூர்த்திகளைப் போல இல்லாமல், வித்யாஸமாக, தெற்கே சிரஸ் -வடக்கே பாதம், ஆனால் மேற்குப் பார்த்த திருமுக மண்டலம் என்று இருப்பதால் எல்லாம் மாறிப்போகின்றன!எதிரே ஸந்நிதியில் நின்று தர்சிக்கும்போது அவருடைய இடது பார்ச்வம் நமக்குக் கிட்டேயும் வலது பார்ச்வம் அந்தண்டையுமாக இருக்கின்றன. அதாவது அவரது இடது கை நமக்குக் கிட்டேயும், வலது கை - அபயமுத்ரை காட்டக் கூடிய வலதுகை - திருமேனிக்கு மறுபுறமுமாக இருக்கும். இங்கே, ஸ்வாமி வலது கையைத் தலைக்கோசரம் மாதிரி வைத்துக் கொண்டாரானால் முகத்தை அந்தக் கைப் பக்கமாகச் சாய்க்கநேர்ந்து, அவர் ஸந்நிதியைப் பார்க்கிறதற்குப் பதில் பின் சுவரைப் பார்ப்பதாகிவிடும்!அதனால் இங்கே பெருமாள் மூர்த்தி அப்படியில்லை. இடது பக்கமாக ஸந்நிதியை, ஸந்நிதியில் நிற்கிற நம்மைப் பார்க்கிறாற் போலவே அவர் முகத்தைச் சாய்த்தபடி சயனித்துக் கொண்டிருக்கிறார். இந்த விதமான அமைப்பில் (Posture -ல்) என்ன விசேஷமென்றால், நம் பார்வையில் அவருடைய திருமேனிக்கு மறுபுறம் இருக்கும் வலது கையை அவர் நன்றாகத் தூக்கி அபயம் ஸாதித்தாலும் அது நமக்கும் பிம்பத்துக்கும் குறுக்கே வந்து மறைக்காது. வலது கை திருமேனிக்கு மறுபக்கம் போய், பிம்பத்தின் அந்த மறுபக்கம் பின்சுவரை ஒட்டினாற்போலப் போய்விடுவதால், அந்தக் கையைத் தூக்கி வைத்து சில்பம் பண்ணுவதிலும் ச்ரமம் இல்லை. இந்தக் காரணங்களால், முன்னே சொன்ன சயன மூர்த்திகளுக்கெல்லாம் வித்யாஸமாக, விசேஷமுள்ள வித்யாஸமாக, இந்த யதோக்தகாரி நமக்கெல்லாம் நன்றாக வலதுகையை உயர்த்தி அபயம் ஸாதித்தபடி சயனித்துக் கொண்டிருக்கிறார்!

கணிகண்ணன் : அருள் நெஞ்சும் அஞ்சாநெஞ்சும்

அவருக்கு (யதோக்தகாரி என்ற) அந்தப் பெயர் வருவதற்கு முற்பட்ட காலத்திலேயே திருமழிசையாழ்வார் அவரை இஷ்டமூர்த்தியாக உபாஸித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அத்யந்த சிஷ்யனாக ஒரு பையன். கணிகண்ணன் என்று பேர். அவன் பிறந்ததே ஆழ்வார் அநுக்ரஹத்தில்தான். அவனுடைய பெற்றோருக்கு ரொம்ப காலமாக ஸந்ததியில்லை. அவர்கள் நித்தியம் ஆழ்வாருக்குப் பால் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். யோக நிஷ்டையிலேயே போய்க் கொண்டிருந்த ஆழ்வார் எப்போதாவதுதான் கண்ணைத் திறப்பார். எதுவும் ஆஹாரம் பண்ணுவதில்லை. இந்தப் பாலை மட்டுந்தான் கொஞ்சம் குடித்துவிட்டு பாக்கியை அவர்களுக்கே கொடுத்துவிடுவார். ப்ரஸாதமாக அவர்கள் அதைக் குடிப்பார்கள். அதன் பலனாகத்தான் அவர்களுக்குப் புத்திரன் பிறந்தான்.

கணிகண்ணன் என்ற அந்தப் பிள்ளை குழந்தைநாளிலிருந்தே ஆழ்வாரிடம் வந்து அந்தரங்க சிஷ்யனாகிவிட்டான்.

ஒரு நாள் அவன் கோவிலுக்குப் போகும்போது அங்கே ஒரு தொண்டு கிழவி, முதுகு நன்றாகக் கூனிப் போனவள், எலும்பும் தோலுமாக ரொம்பவும் ச்ரமப்பட்டுக் கொண்டு பெருக்கி, மெழுகி, கோலம் போட்டுக் கைங்கர்யம் செய்வதைப் பார்த்தான். உடம்பு கொஞ்சங்கூட முடியாவிட்டாலும், மூச்சு போகும் வரையில் பகவத் கைங்கர்யம் பண்ணாமலிருப்பதில்லை என்ற த்ருடமான பக்தியிலேயே அவள் கொண்டு புரிவது தெரிந்தது. கணிகண்ணனுக்கு அப்படியே மனஸ் உருகிவிட்டது. 'ஐயோ, இவளுக்கு நாம் உபகாரம் பண்ணவேண்டாமா? எப்படிப் பண்ணுவது? என்று மனஸார நினைத்தான்.

இந்த மாதிரிப் பெரிசாக ஒரு காருண்ய சிந்தனை வந்தால் அப்போது தன்னால் குருவுடைய அநுக்ரஹ சக்தி சிஷ்யனுக்குள்ளும் ஆவிர்பவித்துவிடும். ஈச்வரனிடமிருந்து குரு பெற்றிருக்கிற சக்தியை குருவிடமிருந்து சிஷ்யனும் பெற்றுவிடுவான். அந்த விதத்தில் ஆழ்வாரின் அநுக்ரஹ சக்தி அந்த நிமிஷத்தில் கணிகண்ணனுக்கே வந்துவிட்டது.

தன்னை மறந்த நிலையில் அந்தக் கிழவியிடம்போய் அன்போடு அவள் முதுகைத் தடவிக்கொடுத்தான்.
உடனே, அநுக்ரஹ சக்தியினால் அவளுடைய கூன்முதுகு நேராக நிமிர்ந்தது. அது மட்டுமில்லை. எலும்பும் தோலுமாக, விருத்த தசையிலிருந்த கிழவி அந்த க்ஷணத்திலேயே நல்ல ஆரோக்யமுள்ள யுவதியாக மாறிவிட்டாள்.

மதுராபுரியில் - வட மதுரை என்பதில் - க்ருஷ்ண பரமாத்மா குப்ஜை (கூனி) க்கு இதே போன்ற அநுக்ரஹம் தான் பண்ணினார். அது ஸப்த மோக்ஷபுரிகளில் ஒன்று. காஞ்சிதான் அந்த ஏழு மோக்ஷபுரிகளுக்குள் தக்ஷிண தேசத்தில் இருக்கப்பட்ட ஒரே ஒரு க்ஷேத்ரம். வடக்கே பகவான் பண்ணின அத்புதமான அருளை தெற்கே அவனுடைய அடியார்க்கடியானே பண்ணிவிட்டான். ஆழ்வார் பகவானுடைய அடியார். கணிகண்ணன் ஆழ்வாருக்கு அடியான்.

'கூன் பாண்டியன்'என்றே சொல்லப்பட்டவனைத் திருஞானஸம்பந்தர் 'நின்ற சீர் நெடுமாறன்'என்பவனாக நிமிர்த்திய கதையும் நினைவு வருகிறது.

கணிகண்ணன் குமரியாக்கிய கிழவி யாரென்றால் கிழவியாவதற்கு முந்திக் காஞ்சீபுரத்து ராஜாவின் ஸபையில் தாஸியாக இருந்தவள். பிற்பாடு நிஜமாகவே 'தேவதாஸி'யாகி ஸ்வாமியின் கைங்கர்யத்தில் ஈடுபட்டவள்.

'அடடா, இந்த பாகவதோத்தமருடைய அநுக்ரஹத்தால் இப்படி நல்ல பலம் வந்துவிட்டதே!இதை வைத்துக் கொண்டு பெருமாள் ஸேவையிலேயே ஸதா காலமும் இருந்துவிட வேண்டும்'என்று யுவதியான பின்பும் அவள் தீர்மானம் பண்ணிக்கொண்டு, அப்படியே செய்ய ஆரம்பித்தாள்.

கிழவி குமரியானால் ஊர் உலகமெல்லாம் ஆச்சர்யப்படாதா? எங்கேயும் அதே பேச்சாகத்தானே இருக்கும்?காஞ்சீபுரத்தில் இருந்துகொண்டு ஆட்சி நடத்திய பல்லவ ராஜாவின் அரண்மனைக்குச் சேதி போயிற்று. ராஜாவும் அப்போது வ்ருத்தாப்ய தசையில் இருந்தான். தனக்கு ப்ரியமாக இருந்தவள் குமரியாகிவிட்டாள் என்றதும் அவனுக்குத் தகாத சபலம் ஏற்பட்டது.

கணிகண்ணனை வரவழைத்து, "என்னையும் இளமையாகப் பண்ணப்பா!"என்றான். கணிகண்ணன் பரிஹாஸமாகச் சிரித்தான். குருவே ஸகலமும், அவரே சரணம் என்று இருந்த அவனுக்கு ராஜா, கீஜா யாராயிருந்தாலும் பொருட்டாகத் தெரியவில்லை. யாராயிருந்தாலும் தான் கொஞ்சங்கூட பயப்படாமல், பவ்யப்படாமல் தர்மப்படி நடக்கணும், அவர்களுக்கும் தர்மத்தைச் சொல்லணும் என்ற தீரம் அவனுக்கு இருந்தது.

ராஜாவைப் பார்த்து, "நானா அந்தக் கிழவியைக் குமரி ஆக்கினேன்? எனக்கு ஏது அந்த சக்தி? என்னுடைய குருநாதருடைய சக்திதான் எனக்குள் புகுந்து கொண்டு அப்படிப் பண்ணுவித்தது”என்றான்.

"அப்படியானால் அந்த குருவையேதான் அழைத்துக் கொண்டு வாயேன்"என்று ராஜா சொன்னான்.

"அவரைப் பற்றி உனக்குத் தெரியாதா? நீ ராஜாவாயிருந்தும் உன்னைப் பார்க்க அவர் இத்தனை காலமாக வராததிலிருந்தே அவரைப் பற்றி நீ தெரிந்து கொண்டிருக்க வேண்டுமே! அவருக்கு பகவானைத் தவிர எவரிடமும் போய் என்னவும் ஆகவேண்டியதில்லை. பகவானையே நினைக்கிறவர்கள், பகவத் கைங்கர்யத்துக்கே ஆசைப்படுபவர்கள் ரொம்பவும் கஷ்டப்படும் போது அவர்கள் யாரானாலும் அவர்களிடம் அவருக்கு ஸ்வாபாவிகமாகக் கருணை உண்டாகி அநுக்ரஹம் செய்து கஷ்டத்தை நிவர்த்தி செய்துவிடுவார். அவர்கள் போய் அவரிடம் சொல்லவேண்டுமென்பதில்லை. அவரும் தாமே அவர்களிடம் போய் அநுக்ரஹம் பண்ண வேண்டுமென்பதுமில்லை. ஏதோ ஒரு கருவி மூலம் அநுக்ரஹம் பண்ணிவிடுவார். அந்த கிழவிக்கு அப்படித் தான் நடந்தது. அவள் தன்னுடைய ஸொந்த சரீர அநுபோகங்களுக்காக யௌவனம் பெறவேண்டுமென்று நினைக்கவில்லை. பகவானுக்கு சரீர கைங்கர்யம் நன்றாகச் செய்ய வேண்டுமென்பதொன்றே அவள் நினைவாயிருந்தது. அதனாலே என் குருவுக்கு தயை பொங்கிக்கொண்டு வந்தது. ப்ரக்ருதி (இயற்கை) நியதியையும் மாற்றினால்கூடப் பரவாயில்லை என்று அவளை யுவதியாக்கினார்.

"நீயோ சரீர போகங்களை அநுபவிக்கவேண்டும் என்ற ஆசையிலேயே யௌவனத்தைக் கேட்கிறாய். இதற்கு அவர் ஒரு நாளும் ஒப்புக்கொண்டு அநுக்ரஹிக்க மாட்டார். யாரானாலும் ப்ரக்ருதி நியதிப்படி ஜரா மரணங்கள் நேரவேண்டியபோது நேரத்தான் செய்யும். நீ போனால் வேறே எவனோ ஒருத்தன் ராஜாவாக வந்து ராஜ்ய பரிபாலனம் பண்ணிவிட்டும் போகிறான். உனக்கு முந்தி எத்தனையோ பேர் ஆட்சி நடத்திவிட்டு அப்புறம் கிழடுதட்டி, ‘போய்த்தானே'இருக்கிறார்கள்? ஒருவிதமான விசேஷ காரணமுமில்லாமல் உன்னை இளமையாக்குவதற்கு என் குருநாதர் ஸம்மதிக்கவே மாட்டார்” என்று கொஞ்சங்கூட ஒளிவு மறைவில்லாமல் கணிகண்ணன் துணிச்சலாகச் சொன்னான் - பல்லவ ராஜாகிட்டேயே.

ராஜஸ குணமே கொண்ட ராஜாவுக்குக் கோபம் வந்து விட்டது. "உன்னை இந்த ஊரை விட்டே ப்ரஷ்டம் பண்ணுகிறேன்” என்று ஆஜ்ஞை பண்ணினான்.

"நானே இப்படிப்பட்ட ராஜா இருக்கிற ஊரில் இருக்கிறதில்லை என்றுதானப்பா தீர்மானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்!” என்று கணிகண்ணனும் சொல்லிவிட்டு நேரே கோவிலுக்கு, ஆழ்வாரிடம், வந்தான்.
அரண்மனையில் நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்லி விட்டு ஊரை விட்டுப் புறப்பட்டான்.

சொன்ன வண்ணம் செய்தது!

பக்தர், யோகி ஆனாலும் ஆழ்வாருக்கும் சுத்தமான ப்ரமையினாலே இரண்டு பாசங்கள் மட்டும் இருந்தன போலிருக்கிறது! சிஷ்யன் கணிகண்ணனை விட்டுப் பிரிய முடியாத பாசம் அவருக்கு இருந்தது. அதேபோல அந்த ஆலய மூர்த்தியாக அர்ச்சாவதாரத்திலிருந்த புஜங்க சயனப் பெருமாளிடமும் அவருக்கு அலாதியான பாசமிருந்தது.

அதனால் கணிகண்ணனின் பின்னோடேயே அவரும் புறப்பட்டுவிட்டார். அவன் அவரைக் கூப்பிடவில்லை. 'தான் எங்கேயாவது காடு, மலை என்று போய்விடலாம்; குருவையும் அங்கேயெல்லாம் இழுக்கடித்து ச்ரமப்படுத்த வேண்டாம்;இங்கேயே அவர் பாட்டுக்குப் பெருமாள் ஸந்நிதியில் இருந்து கொண்டிருக்கட்டும்; அவர் எங்கேயிருந்தாலும் நாம் எங்கேயிருந்தாலும் அவருடைய அருள் நம்மைக் கட்டிக் காக்கும்; சரீர ரீதியில் எங்கேயிருந்தாலும் நம்முடைய ஹ்ருதயத்தில் அவர் எப்போதும் இருந்து கொண்டுதானிருப்பார்’- என்ற தெளிவோடு கணிகண்ணன் புறப்பட்டுவிட்டான்.

ஆனாலும் அவருக்கு அப்படி இருக்கமுடியவில்லை. ஸ்வயநலம் கலக்காத வாத்ஸல்யங்களில் இருக்கிற அழகு உலகத்துக்குத் தெரியவேண்டுமென்பதற்காக மிகவும் பெரியவர்கள்கூட பந்த பாசமிருக்கிறதுபோல இருப்பதுண்டு. அநேக கதை புராணங்களில் இப்படிப் பார்க்கிறோம்.

கணிகண்ணனின் பின்னோடேயே புறப்பட்ட ஆழ்வார், அந்த மாதிரியே பாசத்துடன் பெருமாளும் தன் பின்னாடி தொடர்ந்து வருவாரென்று நினைத்துக்கொண்டு ஆலயத்தில் இருக்கப்பட்ட தம்முடைய அபிமான மூர்த்தியைப் பார்த்தார்.

ஆனால் ஸ்வாமி லீலா விநோதனல்லவா?அதனால் அவன் பாட்டுக்கு நிம்மதியாக சேஷ பர்யங்கத்தில் படுத்துக் கொண்டே இருந்தான்.

அப்போதுதான் இந்தக் கதை ஆரம்பத்தில் நான் சொன்னாற்போல சிஷ்யனுக்காக குருவானவர் ஸ்வாதீனத்துடன் ஸ்வாமிக்கே ஆர்டர் போட்டார்.

தான் பரம பாகவதன், இந்த அர்ச்சையிடமே அபிமானம் வைத்தவன், ஆனபடியால் தன்னை பகவான் பின் தொடர்ந்து வரவேண்டும் என்று தற்பெருமையாக ஆழ்வார் ஆர்டர் போடவில்லை. பின்னே என்ன போட்டார்?

"கணிகண்ணன் போகின்றான்…"
தான் போவதைச் சொல்லிக்கொள்ளவில்லை. சிஷ்யன் போகிறானே, ஊரைவிட்டுக் கிளம்பிவிட்டானே, அதையே சொல்கிறார். "குழந்தை ஊரைவிட்டு, மனஸு வெறுத்துப் போகிறது. அதன்கூடவே நீ ஸதாகாலமும் இருந்து ரக்ஷிக்க வேண்டாமா?”

ஆழ்வார் ஸதாவும் தன்னை ரக்ஷிக்கிறார், ரக்ஷிப்பாரென்ற உறுதி கணிகண்ணனுக்கு இருந்தாலும் அவர் தாம் ரக்ஷிப்பதாக நினைக்கவில்லை. வெளியிலே தடபுடலாக பகவானுக்கு உத்தரவு போட்டாலும், உள்ளுக்குள்ளே ரக்ஷணமெல்லாம் அவனால்தான் நடக்கிறது. தாம் ஒன்றுமே இல்லை என்ற எளிமையோடுதான் இருந்திருக்கிறார்! அதனால்தான் கணிகண்ணன் போகிறபோது பேசாமல் படுத்துக்கொண்டிருக்கிற ஸ்வாமியிடம் இப்படிக் கேட்கிறார்

"குழந்தையோடு நீயும் போகாமல் ஜம்மென்று பாம்பு மெத்தையில் படுத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம், ஓய்? இப்படி நீள் நெடுகப் படுத்துக்கிடக்காதீர்! இது கொஞ்சங்கூட நன்றாயில்லை" (என்கிறார்) .

" கணிகண்ணன் போகின்றான் , காமரு பூங்கச்சி
மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டா !

"இப்படிப் படுத்துக்கொண்டு கிடக்காதே. நான் தைரியமாக, துணிச்சலோடு உள்ளது உள்ளபடி சொல்கிறவன்; ஸத்யத்தின் சிவப்பேறிய நாக்கோடு உள்ளது உள்ளபடி பாடுகிற கவி.”

"துணிவொன்றிச் செந்நாப் புலவோன் யான்”

என்று சொல்லிக்கொள்கிறார். "நான் பயப்படாமல் வாய் சிவக்க ஸத்யத்தையே பாடுபவன்"என்று சொல்வதிலேயே "நீ பொறுப்பில்லாமல் படுத்துக் கொண்டிருந்தால் அதை உள்ளபடி உலகத்துக்குத் தமுக்குப் போட்டு விடுவேன்!” என்று எச்சரிக்கிற மாதிரி பாட்டு போகிறது.

" கணிகண்ணன் போகின்றான் , காமரு பூங்கச்சி
மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டா ! துணிவொன்றிச்
செந்நாப் புலவோன் யான் சொல்கின்றேன் …

குழந்தை போகிறான். மனசு தாளாமல் நானும் போகிறேன். நீ மட்டும் ஸுகமாகப் படுத்துக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? (குரலை உயர்த்தி) கிளம்பு வாரிச் சுருட்டிக்கொண்டு, பெரிசாக சேஷ பர்யங்கம் விரித்துக் கொண்டிருக்கிறாயே, அதைச் சுருட்டிக்கொண்டு நீயும் எங்களோடு புறப்படு.

" நீயும் உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் !”

அழுத்தமான ஆர்டராகவே போடுகிறார்!
" கணிகண்ணன் போகின்றான், காமரு பூங்கச்சி
மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டா ! - துணிவொன்றிச்
செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன், நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் “.

பகவான் சயனித்துக் கொண்டிருக்கிறபோது ஆதிசேஷன் அவருக்குப் படுக்கை. அவரே எங்கேயாவது போகிறாரென்றால் அப்போது அவன் அவருக்கு ஆயிரம் தலையாலும் குடைபிடித்துக்கொண்டு போவான். சென்றால் குடையாம்.

க்ருஷ்ணாவதாரம் ஆனவுடன் வஸுதேவர் குழந்தையை மழை வெள்ளத்தில் தூக்கிக்கொண்டு போகும்போது ஆதிசேஷனேதான் குடை பிடித்தான்.

ஆர்டர் போடுகிறபோதும் ஸ்வாமியிடம் ஆழ்வாரின் கரிசனம் குறையவில்லை. 'பாம்பு மெத்தையிலிருந்து இறங்கி நீ வா'என்று மட்டும்சொல்லாமல், 'ஸ்வாமிக்கு வெயில் படாமல், மழை படாமல் குடை வேண்டுமே’ என்ற கரிசனத்தில் சேஷசயனத்தையும் சுருட்டிக் கூட எடுத்துக்கொண்டே புறப்படச் சொல்கிறார்!

ஆர்டர் போட்டாரோ இல்லையோ, பெருமாளும் அப்படியே பண்ணிவிட்டார்! அதற்குமேல் விளையாட்டுப் பார்த்து பக்தர் மனஸ் வருத்தப்படும்படி பண்ணக் கூடாதென்று, அவர் சொன்னபடியே வாரிச் சுருட்டிக் கொண்டு கணிகண்ணனோடும் ஆழ்வாரோடும் தானும் புறப்பட்டுவிட்டார்!

'சொன்ன வண்ணம் செய்தது’ இதோடு முடியவில்லை.

மூன்று பேரும் அப்படியே புறப்பட்டு நாலு, அஞ்சு மைல் போகிறதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. மநுஷ்யர்கள் மாதிரியே விளையாடணும் என்று பகவானுக்கு இருந்ததால், "ராத்ரி ஆயிடுத்து. அதனால், இனிமேலே பிரயாணம் பண்ண வேண்டாம். இங்கேயே ராத் தங்கிவிட்டு கார்த்தாலே கிளம்பலாம்"என்று சொன்னான். பகவான் தான் சொன்னானோ, ஆழ்வாதான் சொன்னாரோ? அவனே இவர் சொன்னவண்ணம் செய்பவனாகத்தானே இருந்தான்?

ஆகக்கூடி, பாலாற்றங்கரையிலே குளுகுளு என்று காற்று வீசுகிற இடத்திலே மூன்று பேரும் ராப்பொழுதை சொஸ்தமாகக் கழித்தார்கள்.

இதற்குள்ளே - கோவிலைவிட்டுப் பெருமாள் புறப்பட்ட அந்த நிமிஷத்திலிருந்தே - காஞ்சீபுரத்தில் என்ன ஆச்சு என்றால், ஒரேயடியாக அலக்ஷ்மி (அமங்களம்) வந்து கப்பிக் கொண்டுவிட்டது. பகவான் ஊரைவிட்டுப் போய்விட்டானென்றால் அவனுடைய வக்ஷஸ்தலத்திலேயே வாஸம் பண்ணிக்கொண்டிருக்கும் லக்ஷ்மியும்தானே கூடப் போய் விடுவாள்?அதனால் "நகரேஷ காஞ்சி” என்று ப்ரஸித்தி பெற்ற ராஜதானியிலே லக்ஷ்மீகரமே போய் மூதேவி வந்து மூடிக்கொண்டு விட்டது. ஒரே இருட்டு! ஒரு இடத்திலேயாவது தீபமே ஏற்றிக் கொள்ளவில்லை!தேவாலயங்களிலும் தீபமில்லாமல் பூஜையெல்லாம் நின்று போயிற்று. எல்லார் மனஸிலேயும் வேறே ஒரேயடியாக இருள் கப்பிக்கொண்டு விட்டது. இனம் தெரியாமல் ஒரே துக்கம் ஒரே திகில்.

எல்லாரும் போய் ராஜாவிடம் முறையிட்டார்கள்.

அவனுக்கு ஒரே வியாகுலம், பய ப்ராந்தியாகத்தான் இருந்தது. பெருமாள் ஊரைவிட்டுப் போனதில்தான் இப்படி உத்பாதமாக ஆகிவிட்டது என்று புரிந்தது. "இதோ போய் அவர் காலில் விழுந்து ப்ரார்த்தித்துக்கொண்டு அவரை மறுபடி அழைத்துக்கொண்டு வருகிறேன்"என்று புறப்பட்டான்.

இருட்டிலே ராஜாவைக் காபந்து பண்ணி ஊரெல்லைக்கு அழைத்து வருவதற்குள் பொழுது விடிந்துவிட்டது.

பாலாற்றங்கரையில் பகவான் ஆழ்வாரோடும் கணிகண்ணனோடும் தங்கியிருந்த இடத்துக்கு ராஜா மறுநாள் காலம்பற வந்து சேர்ந்தான்.

அப்போதும் அவனுக்குக் கணிகண்ணனிடம் தான் தப்பாக நடந்துகொண்டு நகர ப்ரஷ்டம் பண்ணினதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை. நேரே பெருமாளிடம், - அவர் அர்ச்சையாக இருந்தாரோ, சல (நடமாடும்) மூர்த்தியாக இருந்தாரோ, ஏதோ ஒன்று; அவரிடமே போய் - நெடுஞ்சாண்கிடையாக நமஸ்காரம் பண்ணினான். "பெருமாள் இல்லாமல் ஆலயம் சூன்யமானது போலவே ஊர் முழுக்கவும் சூனியமானமாதிரி ஆகிவிட்டது. எல்லா ஜனங்கள் மனசும் சூன்யமாகிவிட்டது. என்ன அபசாரம் நடந்திருந்தாலும் க்ஷமித்து பகவான் மறுபடியும் காஞ்சிக்கு எழுந்தருளணும்” என்று வேண்டிக்கொண்டான்.

ஸ்வாமியோ, "நானாக ஸங்கல்பித்துக்கொண்டு அங்கே விட்டுப் புறப்படவில்லை. ஆழ்வார் சொன்னார். அவர் சொன்னபடி செய்யணுமென்றே கூட வந்துவிட்டேன். அவரே மறுபடி சொன்னாரன்னியில் நான் இங்கேயிருந்து திரும்புவதற்கில்லை!"என்று சொல்லிவிட்டார்.

அர்ச்சா மூர்த்தியாகவே அவர் இருந்திருந்தால் இப்படி அசரீரியாகத் தெரிவித்தாரென்று வைத்துக் கொள்ளலாம். வேறே வழியில்லாமல் ராஜா ஆழ்வார் காலில் விழுந்து வேண்டிக்கொண்டான்.

அவரானால், "பெருமாளை விட்டு என்னாலே இருக்க முடியாது. அதனாலே அவரை மாத்திரம் உன்னோடு போகச் சொல்லிவிட்டு நான் இங்கேயே இருப்பது என்பது நடக்காத கார்யம்"என்று மறுத்துச் சொல்லிவிட்டார்.

"தாங்களும்தான் திரும்ப வாருங்கள். நான் அதற்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்"என்று ராஜா வேண்டிக்கொண்டான்.

அதற்கு அவரும் பெருமாள் சொன்ன மாதிரியே பதில் சொன்னார். "நானாக உத்தேசம் பண்ணி இங்கே வந்திருந்தால் நானாகவே மறுபடி திரும்பலாம். ஆனால் நானும் தானாகப் புறப்பட்டுவிடவில்லை. கணிகண்ணனுக்கு நீ ஆக்ஞை பண்ணினதாலும், நீ நடந்துகொண்ட விதத்தில் அவனுக்கே உன் ஊரில் இருக்கப் பிடிக்காததாலும் அவன் புறப்பட்டான். அவனை விட்டுப் பிரிந்திருக்க முடியாமலே நானும் பின்னோடே கிளம்பினேன். ஆனாதினாலே என் காலில் விழுகிறதற்குப் பதில் அவன் காலில் போய் விழு. பண்ணினது தப்பு என்று க்ஷமாபனம் பண்ணிக்கொண்டு திரும்பிவரணமென்று அவனிடம் ப்ரார்த்தித்துக் கொள்ளு. அவன் ஸம்மதித்தால் நானும் திரும்புகிறேன், பெருமாளையும் திரும்பச் சொல்கிறேன்"என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.

அப்புறம் என்ன பண்ணிக்கொள்கிறது?

ராஜா போய் கணிகண்ணன் காலில் விழுந்தான்.

சிஷ்யனுக்காக குரு முதலில் த்ரிபுவன சக்கரவர்த்தியான பகவானையே வாரிச் சுருட்டிக்கொண்டு கோவிலை விட்டு விட்டு வரப் பண்ணினார். இப்போது அந்தப் பையன் காலில் பல்லவ சக்ரவர்த்தி விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும்படிச் செய்கிறார்!

ராஜா வேண்டிக்கொண்டவுடனே, ஸ்வபாவத்தில் இளகின மனசு படைத்த கணிகண்ணன் காஞ்சீபுரத்துக்கு திரும்பவும் புறப்பட்டான்.

அவன் பின்னோடே ஆழ்வார், ஆழ்வார் பின்னோடே அவர் சொன்னபடியெல்லாம் செய்கிற பெருமாள் - என்று எல்லோருக்குமாக ராஜதானிக்கு வந்து சேர்ந்தார்கள்.

பெருமாள், ஆழ்வார், கணிகண்ணன் ஆகிய மூன்று பேரும் ராத்ரி முழுவதும் பாலாற்றங்கரையில் தங்கிய அந்த இடத்திற்கு ஓரிரவிருக்கை (ஓர் இரவு இருக்கை) என்றே பெயர் ஏற்பட்டது. அந்தப் பெயர் சிதைந்து சிதைந்துதான் இப்போது ஓரிக்கை என்று வழங்குகிறது.

மூன்றுபேரும் காஞ்சீபுரத்திற்குத் திரும்பியதும் அலக்ஷ்மியெல்லாம் நீங்கி நகரம் பழையபடி சோபை பெற்றது. ஜனங்களின் மனஸிலிருந்த துக்கம் எல்லாமும் போய் ஸந்துஷ்டி நிறைந்தது.

பகவான் கேவிலுக்குத் திரும்பின அப்புறமும் சுருட்டிப் பிடித்துக்கொண்டு வந்த சேஷ பர்யங்கத்தை விரித்துப் படுத்துக் கொள்ளாமலே நின்று கொண்டிருந்தான். "பாயைச் சுருட்டிக்கொண்டு புறப்படு"என்று உத்தரவு போட்டவர் "படு"என்று மாற்றி உத்தரவு போடும்வரையில் தானாக எப்படிப் படுப்பது என்றுதான் நின்றுகொண்டேயிருந்தான்! பக்தர்கள் வார்த்தைக்கு பகவான் அப்படிக் கட்டுப்படுகிறான்!” பக்த பராதீனன்"என்று அவனைச் சொல்வது அதனால்தான்.

இப்படி, பரம பத நாதனாக இருக்கப்பட்டவன் தன் வார்த்தைக்குக் காத்துக் கொண்டிருக்கிறானென்று பார்த்தவுடன் ஆழ்வாருக்கு நெஞ்சு உருகிவிட்டது. முன்னே பாடின பாட்டின் வார்த்தைகளையே துளித்துளி மாற்றி, ஆனால் அர்த்தம் அடியோடு மாறும்படியாக, பாடினார்.

இப்போதும், "உன்னைவிட்டுப் பிரிந்திருக்க முடியாத நான்தான் திரும்பி வந்துவிட்டேனே! இன்னமும் ஏன் யோசிக்கிறாய்? உன் சேஷ பர்யங்கத்தை விரித்துக்கொண்டு படுத்துக்கொள்"என்று சொல்லாமல், "கணிகண்ணன்தான் திரும்பி வந்துவிட்டானே!” என்று சிஷ்யனைப் பெருமைப்படுத்தி, அவனிருக்கிற இடம் எதுவானாலும் அங்கே அவனை ரக்ஷிப்பதற்காக பகவானும் கூட இருக்கணும் என்று த்வனிக்கும்படியாக ஆரம்பித்தார்.

" கணிகண்ணன் போக்கொழிந்தான்”

"போக்கு ஒழிந்தான்": இந்த ஊரைவிட்டு ப்ரயாணம் பண்ணுவதில்லை. என்று இங்கேயே தங்கிவிட்டான்.

முன்னே "கணிகண்ணன் போகின்றான்"என்று ஆரம்பித்துப் பாடியவர் இப்போது அதையே கொஞ்சம் மாற்றி -அர்த்தத்திலே ரொம்ப மாறுபட்டாலும், வார்த்தையிலே ஸ்வல்பமாகவே மாற்றிப் பாடிக்கொண்டு போய், "நீயுமுன்றன் பைந்தாகப் பாய் விரித்துக்கொள்"என்று முடித்தார். முன்னே, 'சுருட்டிக் கொள்'என்று சொன்னதை மாற்றி 'விரித்துக்கொள்'என்று முடித்து விட்டார். அதை வெண்பா மீட்டர். பெரும்பாலான வார்த்தைகள் ஒன்றேதான். ஆனாலும் அப்போது "பாயைச் சுருட்டிண்டு கிளம்பு"என்றவர் இப்போது அதற்கு நேர் எதிராக "பாயை விரிச்சுண்டு படுத்துக்கோ"என்று பகவானிடம் சொன்னார்.

கணிகண்ணன் போக்கொழிந்தான், காமரு பூங்கச்சி
மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டும் ! - துணிவொன்றிச்
செந்நாப் புலவோன் யான் செலவொழிந்தேன், நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் விரித்துக்கொள் .

முன்னே, "நீ கிடக்க வேண்டா"-" இப்படிப் படுத்துண்டு கிடக்காதே "என்றவர், இப்போது " நீ கிடக்கவேண்டும் " என்கிறார். "நன்னா உன் கிடந்த திருக்கோலத்திலேயே சயனம் பண்ணிக்கோப்பா!”

முன்னே, "யான் செல்கின்றேன்"என்றவர் இப்போது "யான் செலவொழிந்தேன்"என்கிறார். கணிகண்ணன் போக்கொழிந்ததால் இவரும் செலவொழிந்துவிட்டார். 'செலவு'என்றால் செல்வது. 'வரவு செலவு'என்று ரூபாயைச் சொல்லும்போது மட்டும் இந்த வார்த்தையைச் சொல்கிறோம். "ரொம்ப செலவாகிறது"என்றால் கையைவிட்டு ரொம்ப ரூபாய் சென்று விடுகிறது, போய்விடுகிறது என்று அர்த்தம்.

"கணிகண்ணனும் போக்கொழிந்தாச்சு, நானும் செலவொழிந்தாச்சு. இனிமேலே இங்கேதான் இருக்கப் போகிறோம். இப்போது ஊருக்கு நேர்ந்த உத்பாதத்தைப் பார்த்துவிட்டதால் இனிமேலே ராஜாவோ, ஜனங்களோ யாரும் நாங்கள் இந்த ஊரை விட்டுப் போகிற மாதிரிச் செய்யமாட்டார்கள். அதனால் இங்கேயே இருந்துகொண்டிருப்போம். ஆகையினால் நீயும் இனிமேல் உன் சேஷ பர்யங்கத்தை விரித்துக்கொண்டு நிம்மதியாகப் படுத்துக் கொள்ளலாம். ஐயோ பாவம்! உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. பெருமாளாகப் பட்டநீ இந்த சின்ன ஆள் என்ன சொல்லுவேனோ, பண்ணுவேனோ என்றா சயனத்தைச் சுருட்டி வைத்துக்கொண்ட கையோடேயே இன்னமும் நின்று கொண்டிருக்கிறாய்?அதை விரித்துக் கொள்ளப்பா!

" பைந்நாகப் பாய் விரித்துக் கொள் !”

இப்படி அவர் வாய்ப்படச் சொன்ன அப்புறந்தான் ஸ்வாமி மறுபடி ஆதிசேஷனை மெத்தையாகப் போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டார்.

அவர்தான் காஞ்சீபுரத்தின் அநேத தேவாலயங்களில் ஒன்றில் இருக்கிற யதோக்தகாரி, சொன்ன வண்ணம் செய்த பெருமாள்.

காஞ்சீபுரத்தில் பச்சை வண்ணப் பெருமாள், பவள வண்ணப் பெருமாள் என்றெல்லாமும் பகவான் இருக்கிறார். இவரோ, சொன்ன வண்ணம் செய்த பெருமாள்!

எதற்குத் கதை சொன்னேனென்றால் : சிஷ்யன் அவனே பகவானிடம் போக வேண்டுமென்றில்லை; அவன் குருவினிடத்தில் பூர்ண பக்தி விச்வாஸம் வைத்துவிட்டால் அவர் பகவானையே அவன் கிட்டே போகப் பண்ணி விடுவார்; அவன் போகிற இடமெல்லாம் பின்னோடேயே பகவானும் போய் ரக்ஷிக்குமும்படியாகப் பண்ணிவிடுவார். சிஷ்யனுக்காக குரு ஆர்டர் போட்டுவிட்டால் பகவானே "நில்"என்றால் நிற்பான், "ஓடு"என்றால் ஓடுவான், "படு"என்று அவராகச் சொன்னால்தான் படுப்பான்.


இதைத் தெரிந்து வைத்துக்கொண்டுதான் சில பேர் குருவே போதும், தனியாக ஒரு ஈச்வரன் வேண்டாம் என்றிருந்தது.

நன்றி - தெய்வத்தின் குரல் பாகம் 5