புதன், 9 அக்டோபர், 2024

10. கொழுமுகத்துக் குழந்தை (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

விதேஹ மன்னரான ஜனகர் மிகவும் நல்ல முறையில் தம் தேசத்தை ஆண்டு வந்தார். தசரத சக்கரவர்த்திக்குப் பழைய மித்திரர். தசரதன் புத்திரப் பேற்றுக்காகச் செய்த பெரிய யாகத்திற்கு அரசர்களை அழைத்தபோது ஜனகரிடம் தூதர்களை அனுப்பவேண்டாம், மந்திரிகளே நேரில் போய் அழைக்க வேண்டும் என்று தனி உத்தரவிட்டான். ஜனகர் ஒரு ராஜ ரிஷி; சூரர்; எல்லா சாஸ்திரங்களையும் நன்றாகக் கற்றவர்; வேத வேதாங்கங்களில் நிபுணர்; நியமம் காத்தவர்; பிரம்ம ஞானி; கடமைகளைச் செய்தே சித்தியடைவதைப்பற்றி அருச்சுனனுக்கு எடுத்துச் சொல்லும் போது கண்ணன் ஜனகரைச் சிறந்த உதாரணமாக எடுத்துச் சொன்னான். அவதாரதேவி சீதையை மகளாகப் பெறத் தகுதி கொண்ட மகான்.

ஒரு காலத்தில் ஜனக மகாராஜா, யாகம் செய்வதற்கென்று இடம் கண்டு அதைத் தாமே கலப்பை பிடித்து உழுதார். உழுது புதரும் பூண்டுமாக இருந்த பூமியைத் திருத்தி ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கும்போது மண்ணில் ஒரு திவ்ய ரூபமான பெண் குழந்தையைக் கண்டார். ஜனகருக்குக் குழந்தையில்லை. தரையில் புரண்டு உடலெல்லாம் மண் பூசிக் கிடந்த அக்குழந்தையைப் பூதேவியே தமக்குத் தந்த வரம் என்று மகிழ்ச்சி பரவசமாகக் கையில் எடுத்துக் கொண்டு தம் பிரிய பார்யையிடம் சென்று, “இதோ. நமக்குக் கிடைத்த பெருந்தனம்! யாக பூமியில் இவளை அடைந்தேன். இவளே நம்முடைய சந்தானம்!” என்று குழந்தையைப் பட்டமகிஷியிடம் கொடுத்தார். அவளும் அக்குழந்தையைத் தான் பெற்ற குழந்தையாகவே வளர்த்தாள். கம்பர் பாடியிருக்கும் மிக மிக அழகிய பாட்டை இவ்விடம் சொல்லலாம்.


பூதேவியை நாம் நேரில் பார்க்க முடியாது. உழுகின்ற கொழு முகத்தில் தன் அபார சௌந்தரியத்தை அழகிய பச்சைப் பயிர்களின் வாயிலாகக் காட்டுகிறாள். உதிக்கும் சூரியனுடைய கிரணங்களுக்குச் சமமான பொலிவுடன் முளைக்கும் பயிர்களில் விளங்குகிறாள் பூமாதேவி. உள்ளே மறைந்து நிற்கும் தேவியின் முழு அழகு நமக்குத் தெரியாது. அந்த பூதேவியே சீதையாக வெளிப்பட்டு ஜனகருடைய கலப்பைக் கொழு முகத்தில் தோன்றினாள். கடலைக் கடைந்தபோது அமுதத்தோடு எழுந்த சீதேவியும் சீதையின் அழகைக் கண்டு வியந்து தொழுவாள் என்று கம்பர் பாடுகிறார் : 


உழுகின்ற கொழுமுகத்தின்

உதிக்கின்ற கதிரின்ஒளி

பொழிகின்ற புவிமடந்தை

உருவெளிப்பட் டெனப்புணரி *

எழுகின்ற தெள்ளமுதோ(டு)

எழுந்தவளும் இழிந்(து) ஒதுங்கித்

தொழுகின்ற நன்னலத்துப்

பெண்ணரசி தோன்றினாள்.


(புணரி - பாற்கடல்)


பாட்டில் மொழிச் சிக்கனம் அதிகம். பொருளோ மிக அடர்த்தி. இது கம்பர் பாடல்களின் தனிப் பண்பு. தெய்விகக் குழந்தையான சீதையை மிகவும் அன்போடு ஜனகரும் அவர் பிரிய பத்தினியும் வளர்த்தார்கள்.


விவாகத்துக்குரிய காலம் வந்தது. இவளை விட்டுப் பிரிய வேண்டுமே என்று ஜனகர் துக்கப்பட்டார். தெய்விகப் பெண்ணாகிய இவளை மனைவியாகப் பெறக் கூடிய அரச குமாரன் யார் என்று யோசித்து ஒருவரையும் காணாமல் வெகு காலம் ஜனகர் வருத்தப்பட்டார். அரசர்கள் பலர் வந்து கேட்டார்கள். ஆனால் அவர்களில் யாரும் சீதையைப் பெறும் தகுதி வாய்ந்தவராக ஜனகர் மதிக்கவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் ஜனகர் நிச்சயித்தார். முன்னொரு சமயம் மகாயாகம் செய்த காலத்தில் வருணன் ஜனகருடைய யாகத்தைப் போற்றி ருத்திர வில்லையும் இரண்டு அம்பறாத் தூணிகளையும் ஜனகருக்குத் தந்திருந்தான். அந்த வில்லானது மிகப் புராதன தெய்விகமான வில். அதைச் சாமான்ய ஜனங்கள் கையால் அசைக்கக் கூட முடியாது. எடுத்து, வளைத்து நாண் ஏற்றுவதைப்பற்றிச் சொல்லவே வேண்டாம்! முடியாத காரியம். ஜனகர் அரச சமூகத்துக்குத் தெரியப்படுத்தினார் :


“என்னிடமிருக்கும் வருணதேவப் பிரசாதமான இந்த ருத்திர வில்லை எந்த அரச குமாரன் வளைத்து நாண் பூட்டுகிறானோ அவனுக்கு என் மகள் சீதையைத் தருவேன். இதுவே என் மகளுடைய சுயம்வர நிபந்தனை.”


சீதையின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு, பல அரச குமாரர்கள் வந்து, வில்லைப் பார்த்து விட்டு ஒன்றும் செய்ய முடியாமல் திரும்பி விட்டார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக