ஞாயிறு, 28 ஜூலை, 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 6


கோயில்கள் எவ்வளவு காலம் மூடிக் கிடந்தாலும், அங்கே தெய்வங்களின் சாந்நித்யம் குறைவதே கிடையாது. 

ஸ்ரீரங்கம், நாராயணபுரத்தில் எல்லாம் பகவான் விக்ரகங்கள் புதைந்து கிடந்தன. அங்கே சாந்நித்யம் எப்படியிருக்கிறது என்று சொல்லவே தேவையில்லை.

டில்லி பாதுஷா செல்லப்பிள்ளையை (நாராயணனின் சிலை) எடுத்துச் சென்று விட்டார். ராமானுஜர் அவரை "வா' என்று அழைத்ததும், வந்தாரா இல்லையா! இந்த நிகழ்ச்சிகளெல்லாம் எழுதப்பட்ட வரலாற்று சான்றுகள்! ஆக, அர்ச்சாவதாரமான பெருமாளை வழிபடுங்கள். இந்த வழியைப் பின்பற்றிக் கொண்டு முக்தியடையப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவும் சொன்னேன்.

பகவானைப் பொறுத்தவரை நைவேத்யம், பூஜை என எது குறைந்தாலும், அவருக்கு எந்தக்குறைவும் வந்துவிடாது.

சரி...அர்ச்சாவதாரமான சிலையை வணங்க நாங்கள் கோயிலுக்குப் போகத்தான் செய்கிறோம். அங்கே 5 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை டிக்கெட் வாங்கிக் கொண்டு சுவாமியைத் தரிசிக்க அனுப்புகிறார்கள். தர்மதரிசனம் என்றால் ஒருநாள் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. 

தன் பக்தன் கால்கடுக்க நின்றால் தான் தெய்வம் தரிசனம் தருமா என்ன! 

ஒன்று செய்யலாம்... 250 ரூபாய் டிக்கட் வாங்குபவன் மட்டும் தான் அதிக பக்தி கொண்டவன் என போர்டு மாட்டலாம் போல!

தேவஸ்தானத்தார் ஏன் இப்படி செய்கிறார்கள்? கோயில்கள் பணம் புழங்கும் இடமாக உள்ளது. இவ்வாறு பணம் வாங்குவதில் சாஸ்திரத்துக்கு சம்மதமும் இல்லை. இது மிகவும் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. 

கோயில்களை பராமரிக்க பணமில்லை என்றால், பிற வகைகளில் பணம் வருவதற்கு உரிய முயற்சியை எடுக்க வேண்டுமே தவிர, பக்தனிடம் வசூலிக்கக் கூடாது. வடக்கே உள்ள கோயில்களில் இந்த பேச்சுக்கே இடமில்லை. அங்கே ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி எல்லாரும் வரிசையில் நிற்க வேண்டும். நடை திறந்ததும் பணமின்றி தரிசனம் செய்து விட்டு வருகிறார்கள். பொது தரிசனம், பணதரிசனம் என்ற பேச்சுக்கு இங்கே இடமில்லை.

பணமுள்ளவன் என்ன செய்கிறான்? அவசர வேலை இருப்பதாகச் சொல்லி, டிக்கெட்டை எடுத்து வேக வேகமாக தரிசனம் செய்கிறான். இது கூடாது. தரிசனத்துக்காக எல்லாருமே காத்திருக்கத்தான் வேண்டும். காசு கொடுத்தவர்கள் முன்னால் போய் சுவாமியை மறைத்திருக்க மற்றவர்கள் பார்க்கும்படியான நிலை இருக்காது.

ஒருவர் சகஸ்ரநாமம் (1000) சொல்லிக் கொண்டிருந்தார். "சொல்லும்போதே, 980 ஆயிடுத்தா...' என்று இடைக்கேள்வி வேறு! அவ்வளவு அவசரம்! எப்போது முடியுமென! இந்த அவசர பிரார்த்தனையால் எந்த பயனும் இல்லை.

துவாரகையில் காலை 5.30க்கு சந்நிதி திறக்கிறார்கள். மக்கள் ஏராளமாகக் காத்து நிற்கிறார்கள். இங்கே வி.ஐ.பி., தரிசனமெல்லாம் கிடையாது. எல்லாருக்கும் ஒரே வரிசை. 20 நிமிடம் ஏராளமானோர் தரிசனம் செய்வார்கள். உடனே திரை போட்டு விடுவார்கள். ஏன் தெரியுமா! குழந்தை கண்ணனின் கால் வலிக்குமாம்! எவ்வளவு நேரம் தான் அவன் கால்வலிக்க நின்று தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பான்! அவனை அங்குள்ளவர்கள் சிலையாகப் பார்ப்பதில்லை. தெய்வமாகவே பார்க்கிறார்கள். ஆனால், திருப்பதி பெருமாள் என்ன செய்கிறார்! காலை முதல் இரவு வரை நடையே அடைப்பதில்லை. 

ஏன்..நம்ம ஊர் பெருமாள் புரட்டாசி சனியன்று ஓய்வே இல்லாமல், காலை முதல் இரவு வரை தொடர்ந்து நின்று கொண்டிருப்பார். இவ்வாறு மரபுகளை மாற்றுவது ஏற்புடையதல்ல. எந்த விதத்திலும் நியாயமும் இல்லை. ஐந்து வேளை நைவேத்யம் என்றால், அந்தந்த வேளைகளில் தான் செய்ய வேண்டும். ஐந்து வேளை நைவேத்யத்தையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடாது. பணம், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஆகமத்தை மாற்றக்கூடாது. ஆனால், கூட்டம் நிறைய வருகிறதே என்ன செய்ய என பக்தன்
தலையில் தப்பைக் கட்டி விட்டனர். இப்படியெல்லாம் செய்து, ஒழுங்காய் இருக்கும் பகவானை சீண்டி பார்க்கக்கூடாது.

அடுத்து இன்னொரு பிரச்னைக்குள் போவோம்.

பகவான் மீது 1008 குடம் பாலை ஊற்றலாமா? பகவான் நம்மிடம் இப்படி எதையும் கேட்பதில்லை. 

இருந்தாலும், இப்படி ஊற்றி விட்டு, "நான் உனக்கு இவ்வளவு சிறப்பு செய்துள்ளேன். எனக்கு அதைக்கொடு,' 'என்று பேரம் பேசுகிறார்கள். நாம் பிறந்தததன் நோக்கம் என்ன! மீண்டும் அவனை அடைய வேண்டும் என்பது தான்! முக்தி என்பது இங்கே மறக்கடிக்கப்பட்டு, ஏதோ ஒன்றை அவனிடம் கேட்கிறான்.

பகவான் என்ன செய்கிறான்! "இவன் எதையோ செய்துவிட்டு, எதையோ கேட்கிறானே! சரி...ஏதோ கொடுப்போம் என சின்ன சின்னதாய் கொடுப்பான். அதாவது, அழுகிற குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து சமாதானம் செய்வது போல! இவன் எப்போது திருந்தப் போகிறான்! அழியா இன்பமான முக்தியை எப்போது கேட்டுப் பெறப் போகிறான் என அவன் காத்திருக்கிறான். 

அவ்வாறு கேட்டால், மலர்ந்த முகத்தோடு தன்னையே கொடுப்பான். ஒரு சிலர் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வதாக என்ன செய்கிறார்கள் தெரியுமா? பாவம் செய்து சேர்த்த பணத்தை பெருமாள் உண்டியலில் கொண்டு சேர்க்கிறார்கள். தன் பாவத்தில், பகவானையும் பங்குக்கு அழைக்கிறார்கள். இது மிகப்பெரிய குற்றம்.

பிராயச்சித்தம் என்றால் என்ன தெரியுமா?

ஆத்மா ஏற்கனவே செய்த பழைய பாவங்களால் நொந்து போயுள்ளது. இப்போது, இதுபோன்ற தவறுகளைச் செய்து புது புது பாவங்களையும் சேர்த்துக் கொள்கிறது. இவ்வாறு இல்லாமல், தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பெயர் தான் பிராயச்சித்தம்.

சரி... பாவம் செய்யக்கூடாது என்கிறீர்களே! பாவங்களை எப்படி தவிர்க்க வேண்டும்? புண்ணியச் செயல்களை ஏன் செய்ய வேண்டும்?

- மேலும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 5


வேத வியாசர் மகாபாரதம் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது சரஸ்வதி நதி பேரிரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது. இவர் கதை சொல்வதற்கு சிரமமாக இருந்தது. "கீழே போ' என்று சொல்லி விட்டார். பத்ரிகாசிரமத்தில் கீழே போனவள், திரிவேணி சங்கமத்தில் அந்தர்வாகினியாக கலக்கிறாள். ஒரு செயலைச் செய்யும் போது, இடைஞ்சல் இருக்கக்கூடாது என்பது போலவே, கடவுள் வழிபாடும் இடையூறின்றி இருக்க கோயிலுக்குப் போக வேண்டும்.

குளம், குட்டை, ஏரி. ஆறு என எங்கு தண்ணீர் இருக்கிறதோ, அங்கு தான் தண்ணீர் எடுக்க முடியும். அதுபோல், எங்கு கோயில் உள்ளதோ அங்கு தான் "அருள்' என்னும் தண்ணீர் கிடைக்கும். பகவானுக்கு விக்ரஹநிலை மிக உயர்ந்த நிலை. எப்போது வேண்டுமானாலும் இதை வணங்கப் போகலாம். எப்போது வேண்டுமானாலும், அருளாகிய தண்ணீரைப் பெறலாம். நைமிசாரண்யம், திருவேங்கடம் (திருப்பதி), வானுமாமலை என பகவான் பல இடங்களில் விக்ரஹ நிலையில் காட்சி தருகிறான். வேறு நிலையில், அவன் காட்சி தரமாட்டானா என்றால் அதுவும் தருவான்.

அந்தணர்களுக்கெல்லாம் நெருப்பில் காட்சி தருவான். யோகிகளுக்கெல்லாம் உள்ளத்தில் காட்சியளிப்பான். இது மட்டுமல்ல... எங்கும் அவர் இருப்பார் என்று ஒரு கட்சி சொல்லும். ஆனால், நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு பிரதிமை (உருவம்) வடிவில் காட்சி தருகிறான். 

சரி..."கடவுளை நீ பார்த்திருக்கிறாயா' என்று யாராவது நம்மிடம் கேட்டால், உருவத்தை மனதில் கொண்டு, "பார்த்திருக்கிறேன்' என்று சொல்லலாமா? என்றால் "ஆம்' என அடித்துச் சொல்ல வேண்டும். காரணம், அதனுள் இருப்பவன் நிஜபகவானே.

"உருவம் நிஜமென்றால், அதை யாராவது கொள்ளை அடித்து விட்டுப் போகிறார்களே! அது உயிருள்ள தெய்வம் என்றால், அவர்களைத் தண்டிக்க வேண்டியது தானே! அல்லது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டியது தானே' என்று அடுத்து சிலர் கேள்வி கேட்பார்கள். இதை கரிக்கட்டையால் சுவரில் எழுதுகிறவர்களும் உண்டு.

நம்மிடம் யாரும் கேள்வி கேட்காதவரை தெம்பாக இருப்போம். கேட்டு விட்டால் பயந்து விடுவோம்.
பகவானின் அர்ச்சா வடிவம் (உருவம்) தண்டிக்க வந்ததல்ல. தண்டனை ஏதும் இல்லாமல் கருணையோடு நம்மைக் காண வந்திருக்கிற வடிவம். அவன் நம் குற்றத்தைப் பார்ப்பதில்லை. அது நம்மைக் காக்கத்தான் வந்துள்ளதே தவிர, தன்னைத்தானே காத்துக் கொள்ளாது. ஒரு அலுவலகம் என இருந்தால் சட்டதிட்டம் வைத்துக் கொள்ளலாம். பகவானும் சட்டதிட்டம் வகுத்துக்கொண்டால் நம்மால் தாங்க முடியுமா? குற்றம் பாராமல் உள்ளார். இழுத்த இழுப்புக்கு வந்துள்ளார். அவர் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு வினாடி நினைத்தால் போதும். இங்கு யாராலும் இருக்க முடியாது.

பிரதமர் நம் ஊருக்கு வந்தால், ஜில்லா அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்வர். பரபரப்புடன் இருப்பார். அவர் வந்து நிகழ்ச்சியை முடித்து விட்டுப் போன பிறகு தான் மூச்சு விடுவர். அங்கே அவரவருக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் அவரவரும் நிற்க முடியும். மீறிப்போனால், வெளியே தூக்கிப் போட்டு விடுவர். 

பகவானும், சட்டதிட்டம் என சொல்லிக்கொண்டு இப்படி செய்தால் நம்மால் தாங்க முடியுமா! அவர் கருணையின் வடிவாக உள்ளதால் தான், நம்மால் இங்கே இருக்கவாவது முடிகிறது. அந்த தெய்வத்தை புளியோதரை, புஷ்பம் என சமர்ப்பித்து கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். பால், பழமெல்லாம் அது சாப்பிடுமா? என்றால், நிச்சயமாக சாப்பிடும். வாயால் என்ன! மூக்கால் கூட சாப்பிடும். இதற்கெல்லாம் ஆதாரமிருக்கிறது. தொண்டைமான் சக்கரவர்த்தி சீனிவாசனுடன் பேசியுள்ளார். திருமங்கையாழ்வாருக்கு திருநறையூர் பெருமாள் ஆற்றுமணலைப் பொன்னாக்கி அளித்துள்ளார். காஞ்சிப் பெருமாள் திருக்கச்சி
நம்பியுடன் பேசியுள்ளார். இவையெல்லாம் உருவவடிவில் பகவான் நம்மோடு உறவாடுகிறான் என்பதற்கான சான்றுகள் தானே! 

அப்படியானால், அவன் நம்முன் நேரடியாகத் தோன்ற வேண்டியது தானே என்று ஒரு கேள்வி எழுகிறது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.அவன் நரசிம்மமாக நம் முன்னால் வந்தால், நிலைமை என்னாகும்? நாம் என்ன செய்தாலும், போனால் போகிறது என்று தானே விட்டு வைத்துள்ளார்! வேண்டாமென அவர் அடங்கி இருக்கிறார். அதுதான் அவரது பெருமை. "நாம் அவருக்கு பிரசாதம் செய்தாக வேண்டுமா?' என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

அவர் பெயரை வைத்து நாம் சாப்பிடத்தான் பிரசாதம். லட்டு, சர்க்கரைப் பொங்கல் என பிரசாதம் வைப்பது என்பது அவரவர் விருப்பம். நம் விருப்பத்தைக் கூட தன் விருப்பமாக அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
விதுரர் வீட்டுக்கு கண்ணன் வந்தான். அங்கே கறியமுது ஏதும் இல்லை, தாம்பூலம் இல்லை. பழம் மட்டுமே இருக்கிறது. அதையும், பகவான் முகத்தைப் பார்த்தபடியே உறித்துக் கொடுக்கிறார். எப்படி? 

பகவானைக் கண்ட பரவச பதட்டத்தில், என்ன செய்கிறோம் என்ற உணர்வின்றி, பழத்தைக் கீழே போட்டு விட்டு தோலை அவரிடம் கொடுக்கிறார். அதையும் அவன் விருப்பமாக ஏற்றுக்கொண்டான். ஆக, பகவான் தனக்கு உணவா பெரிதென நினைத்தான்! பக்தனின் பதட்டத்தையும், பக்தியையும், தூய உள்ளத்தையும் அல்லவா உணவாகக் கொண்டான்! 

தினமும் அரைமணி நேரமாவது பக்தியுடன் முறைப்படி வணங்குங்கள். பெண்கள் இதை அவசியம் செய்ய வேண்டும். விளக்கை கை ஏற்றட்டும். நாம சங்கீர்த்தனத்தை வாய் சொல்லட்டும். மனம் எப்போதும் அவனை நினைக்கட்டும். உங்கள் வீட்டிலுள்ள பகவானின் உருவத்தை உங்கள் குழந்தை போல் கவனித்துக் கொள்ளுங்கள். குகன் பகவானுக்கு தேன், தினைமாவு கொடுத்தான். சபரி கடித்த பழத்தைக் கொடுத்தாள். அன்போடு எதைக்கொடுத்தாலும் அவன் பெற்றுக் கொள்கிறான்.ஆண்டாள் என்ன கொடுத்தாள்!

"தூமலர் துவித்தொழுது' என்று பாவையில் பாடுகிறாள். அவள்அளித்தது தூயமலர்கள். சரி...உருவத்திற்கு சக்தியுண்டு என்கிறீர்களே! எத்தனையோ கோயில்கள் மூடிக்கிடக்கிறதே! அங்கே பகவானின் சாந்நித்யம் குறைந்து போகுமா?

இந்தக் கேள்விக்கு விடை...காத்திருங்கள்!

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 4


பெருமானின் உடம்பில் சத்வமயம் மட்டுமே நிறைந்திருக்கும். குணங்கள் மூன்று. அவை சத்வம், ரஜஸ், தமோ. சத்வம் என்றால் தெளிவு, ஞானம்...அதாவது போதுமென்ற நிலை. ரஜஸ் என்றால் வேணும் வேணும் என்ற நிலை. கோபமும் இதில் அடங்கும். தமோ என்றால் சோம்பல், தூக்கம், மயக்கம்.

மனித உடலில் ரஜஸ், தமோ குணங்களே நிறைந்திருக்கும். அப்படியானால் பகவானைப் போல நானும் சத்வமயமாக விளங்க வேண்டும் என நினைத்தால் என்ன செய்ய வேண்டும். படிக்காரம் போட்டாக வேண்டும். என்ன படிக்காரம்? அவனது நினைவு என்னும் படிக்காரம். அவனையே ஸ்மரிக்க வேண்டும் என்ற படிக்காரம். எதை நினைக்கிறோமோ அது தானே நடக்கும்! அதுபோல, பகவானை நினைக்க நினைக்க சத்வகுணம் தானாக வந்து விடும். 

இது வெந்நீருடன் தண்ணீரைக் கலப்பது போல. வெந்நீரில் தண்ணீரைக் கலந்தால் வெந்நீர் "தண்' (குளிர்ச்சி) நீர் ஆகி விடும். சத்வகுணம் கொண்ட பகவானுடன் நம் மனது கலக்க கலக்க அந்த குணம் தானாக நமக்கு வந்துவிடும். உலக வழக்கில் கூட நமக்கு நகை, பகவானுக்கு திருவாபரணம். நமக்கு வேட்டி, புடவை. அவனுக்கு வஸ்திரம். அவனுக்குஉரிய எல்லாமே உயர்ந்ததாக உள்ளது.

""நான் எனக்கேற்ற உயர்ந்த திருமேனியை எடுத்து பூமியில் பிறக்கிறேன்,'' என பகவான் கீதையில் சொல்கிறான். 

அதனால் தான் ராமராகவும், கண்ணனாகவும் அவன் பிறந்தான். இதற்கு ஆதாரமாக ராமாயணம், மகாபாரதம் உள்ளது. 

ஆனால் மனிதன் கர்மத்தின் வழியாகப் பிறக்கிறான். நமது உடல் சுகதுக்கத்தை அனுபவிக்கும் கருவி.
அடியார்களின் மனதை ஒடுக்கி அவர்களுக்கு உய்வைக் கொடுப்பது பெருமானின் உருவம்.

மனதை ஒடுக்க வேண்டுமானால், உடல் அதற்கேற்ற வகையில் இருக்க வேண்டும். உதாரணமாக, சாப்பிட்டு முடித்ததும் ஏதோ ஒரு மயக்கம் வரும். காரணம், மூளைக்கு போகும் ரத்தம் குறையும். பசியோடு இருந்தால் தான் நான் சொல்கிற உபன்யாசம் புரியும். அதனால் தான், பூஜையெல்லாம் முடிந்த பிறகு பிரசாதம் கொடுக்கிறார்கள். இவ்வாறு மனதையும், உடலையும் ஒடுக்கி அவனது உருவத்தை நினையுங்கள். 

அடியாரை ரட்சிக்கவே பகவான் திருமேனி எடுத்துள்ளார். நமது உடம்பு செயற்கை. பகவானின் உடம்பு இயற்கை. கர்மத்தால் நமக்கு உடம்பு வந்தது. இந்த உடம்பு பஞ்சபூதத்தால் ஆனது. பகவானோ பஞ்சசக்தி படைத்தவர். நம் உடம்பை நினைத்தால் துக்கம். அவர் உருவத்தை நினைத்தால் ஆனந்தம். நம் உடம்பு நெருப்புக்கு இரையாகப் போவது. பகவானுக்கு இப்படி இல்லை. அவர் வராஹம், நரசிம்மம், ராமன், கண்ணன் என வந்தார். அதேதிருமேனியோடு திரும்பிப் போனார். அடியாருக்கு நல்லது செய்ய வேண்டுமென நினைக்கும் போது, அவர் நினைக்கும் வடிவத்தில் இங்கே வருவார். அதையே நாம் கோயில்களில் பார்க்கிறோம். ஸ்ரீவைகுண்ட திவ்ய சம்ஸ்தானத்தைக் கூட அவர் தன்னுடன் எடுத்து வந்தார்.

சரி...பகவானுக்கு உருவம் இருக்கிறது என்றால், ஏதாவது ஒரே உருவத்துடன் வர வேண்டியது தானே! பல உருவங்கள் எதற்கு என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு உணவு பிடிக்கும். ரவை, சர்க்கரை, நெய் இது மாதிரி தனித்தனி பொருட்கள்.... ஒருவருக்கு கேசரி பிடிக்கும். இன்னொருவருக்கு மைசூர்பாகு, அடுத்தவருக்கு பாதுஷா, ஒருவருக்கு தேங்காய் பர்பி.. பொருட்கள் ஒன்று தான். ஆனால், செய்கிற பட்சணத்தின் உருவமும், சுவையும் மாறுபடுகிறது. அதுபோல, ஒருவனாகிய பகவான் ஒருவனே வைகுண்டத்தில் அமர்ந்த நிலையில் வைகுண்டநாதன், திருப்பாற்கடலில் சயன கோலம், பூலோகத்தில் இருந்தவர்களுக் காக விபவம் (அவதாரங்கள்) என பல வடிவங்கள் எடுத்தான்.

ராமனாக வந்து 11 ஆயிரம் ஆண்டுகள் இருந்தான். கண்ணனாக வந்து 100 ஆண்டுகள் இருந்தான். நரசிம்மனாக ஒரு மணி நேரமே வந்தான். நம் தேசத்தில் அன்று இருந்தவர்களுக்காக இந்த அவதாரங்கள் நிகழ்ந்தன. அதை இன்றும் நாம் பார்க்க வேண்டாமா! அதனால் தான் உருவமாக கோயில்களில் இருக்கிறான். அதையே அகோபிலம், காஞ்சிபுரம்...ஏன் நமது ஊர்களில் கூட அவன் நரசிம்மனாக இருக்கிறான்.

இதையெல்லாம் நான் நம்பமாட்டேன், எனக்கு நிஜ நரசிம்மனைப் பார்த்தாக வேண்டும் என்று யாராவது சொன்னால் அது சாத்தியமாகிற ஒன்றா! ஒருவேளை அது சாத்தியமாகிறதென்றே வைத்துக் கொள்வோம். கோயிலில் போனதும், நரசிம்மன் சந்நிதானத்தில் தன் நிஜ உருவைக் காட்டுவதாக வைத்துக் கொள்வோம். அதைப் பார்க்கிற சக்தியும், அவனது உக்ரத்தை தாங்குகிற சக்தியும் நமக்குண்டா? 

பகவான், என்ன நமக்கு சாதாரணமாக பிடிபடுகிறவரா என்ன!

அவர் அர்ச்சாவதாரமாக (சிலை வடிவம்) பல திருத்தலங்களில் இருக்கிறார் என்பது மட்டுமல்ல, நம் மனதின் உள்ளேயே இருக்கிறார். அப்படியானால், அவரை ஏன் நான் பார்க்க முடியவில்லை என்றால், அவர் கிட்டே இருக்க இருக்க நமக்கு பிடிபடவே மாட்டார். 

இன்னொரு கேள்வி..

கோயிலில் போய் தான் பகவானைத் தரிசிக்க வேண்டுமா! வீட்டில் போதாதா என்பது பலர் மனதில் எழுகிறது.
வீட்டில் குளித்து விட்டும் சமைக்கலாம். குளிக்காமலும் சமைக்கலாம். எப்படி சமைத்தாலும் உணவு தயாராகி விடும். ஆனால், குளித்து விட்டு பகவானை நினைத்தபடியே சமைத்தால் அந்த உணவு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். எங்கே தூங்கினாலும் தூங்கலாம். ஆனால், பெட்ரூமில் படுத்தால் தொந்தரவில்லாமல் நன்றாகத் தூங்கலாம். கோயில்களில் வைகானஸ அல்லது பாஞ்சராத்ர ஆகமப்படி பகவானை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 

அங்கே பல ஆச்சார்யார்களின் பாதம் பட்டிருக்கும். அத்தகைய இடத்தில் பகவானை வணங்குவது மிகவும் உயர்ந்தது. புண்ணியம் கிடைக்கும். வீட்டில் பிரார்த்தனை செய்யும் போது இவ்வாறு முடியுமா! பல தொந்தரவுகள் இருக்கும். இப்போது கோயிலுக்குப் போனால் கூட கைபேசி சிணுங்குகிறது என்பது வேறு விஷயம்.

கோயிலில் பகவானை வணங்குவதற்கும், வீட்டில் வணங்குவதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்க ஒரு சிறுசம்பவத்தை உதாரணமாக சொல்லப் போகிறேன்.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

ஞாயிறு, 7 ஜூலை, 2013

தற்பெருமை கொள்ளல் தகாது! - மனத்துக்கினியான்


தர்மோ ரக்ஷதி ரக்ஷித:' என்பது ஆன்றோர் வாக்கு. தர்மத்தை நாம் கடைப்பிடித்துக் காத்தால், தர்மம் நம்மைக் காக்கும் என்பது அனுபவ உண்மை. இப்படி தர்மத்தைப் போதிக்க வந்தவையே இதிகாசங்கள். இரு கண்களான அவை நமக்குக் காட்டாத தர்ம நெறியா...?

மனிதன் சுக துக்கங்களை தனக்குத் தானே தேடிக் கொள்கிறான். ஒருவரின் சொல்லும் செயலுமே அவரை சுக துக்கங்களின்பால் அமிழ்த்துகிறது என்பது அனுபவம். ஆனால் சிலர் தம் தகுதியை மீறி சுய தம்பட்டம் அடிப்பதும், தற்பெருமை பேசித் திரிவதும், சாயம் வெளுத்தால் மனதை மீறிய சுமை அழுத்தி மாய்வதும் சக மனிதர் வாழ்வில் காண்கிறோம். இந்த உண்மையை விளக்க மகாபாரதத்தில் ஒரு சூழ்நிலைக் கதையை ஆன்றோர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

குருசேக்ஷத்ரம். பிரமாண்டமான போர்க் களம் அது. நடைபெறுவதும் உலகு கண்டிராத உக்கிரமான பாரதப் போர். உரிமைப் போர்தான் என்றாலும், சகோதரர்களே தங்களுக்குள் சண்டையிட்டார்கள். மண்ணுரிமை சார்ந்த போர்... ஆனாலும் சுய கெளரவம் கிளர்ந்தெழ, மதிப்புரிமையும் முன்னால் நின்றது.

அன்றைய உக்கிரப் போரின் கதாநாயகன் மாவீரன் கர்ணன். கள்ளம் அற்ற உள்ளத்தினன் கர்ணன், நண்பன் துரியோதனனிடம் கொடுத்த வாக்கினால் களம் கண்டான். பாண்டவரை வீழ்த்திக் காட்டுவேன் என்பது அவன் செய்த சங்கல்பம். அந்த எண்ணத்தால் உக்கிரப் போர் செய்தான்.

கர்ணனின் முன் முதலில் வந்தவன் தர்மபுத்திரன். பாண்டவரில் மூத்தவன். சேனையின் தலைவன் என்பதால் அவனை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினான். கர்ணனின் வில்லுக்கு முன் தர்மனின் போர்த்திறம் பலம் குன்றியது. கர்ணன் அம்புமழையில் தர்மன் நினைவிழந்தான்.

பதறியது கண்ணன் உள்ளம். "பாண்டவர்கள் என் உயிர். அவர்களின் உயிரைக் காப்பது என் விரதம்' என்று சொல்லியிருந்தான் கண்ணன். இப்போது தர்மனின் உயிரைக் காக்க வேண்டுமே என்ன செய்வது? கர்ணனோ கண்கள் சிவக்க வெறித் தாக்குதல் தொடுக்கிறான். சிந்தித்தான் கண்ணன். கர்ணனைத் தாக்குமாறு அர்ஜுனனுக்கு ஆணையிட்டான். போர்க் களத்தில் மயங்கிச் சரிந்த தர்மனை அங்கிருந்து வெளியேற்றினான். முதலுதவிக்கு ஏற்பாடாயிற்று.

கர்ணனின் மீது அம்புமழை பொழிந்தான் என்றாலும், அண்ணன் குறித்த கவலையில் கொதித்தது அர்ஜுனன் மனம். அவனது இயல்பை அறிந்தவன் கண்ணன். ஆதலால், பீமனை கர்ணனோடு மோதவிட்டு, அர்ஜுனனை அங்கிருந்து அழைத்து வந்தான்.

பாசறையின் ஓர் ஓரம். தர்மனுக்கு சிகிச்சை நடந்தது. நினைவு மீண்டு, அங்கே பார்த்தன் அடி எடுத்து வைப்பதை ஆவலோடு பார்த்தான் தர்மன். தன்னை விலக்கிவிட்டு கர்ணனோடு போர் புரிந்தவன் என்பது வரை தருமனுக்கு நினைவு இருந்தது. எனவே, அவன் கர்ணனைக் கொன்றுவிட்டு இங்கே வந்திருப்பான் என்று எண்ணினான் தர்மன். அவன் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. "கர்ணனைக் கொன்று வந்த உன்னை வரவேற்கிறேன்' என்று தர்மன் சொன்னபோது, பார்த்தனால் பதில் பேச முடியவில்லை. இடையில் புகுந்த கண்ணன், "தர்மத்தை நாடும் உன் வாக்கு ஒருபோதும் பொய்க்காது. நிச்சயம் அவன் கர்ணனை வீழ்த்தி வருவான்' என்றவுடன், தர்மனுக்கு இருந்த மகிழ்ச்சி நொடியில் காணாமல் போனது.

தன்னுடலின் குருதிப் பெருக்கால் சோர்வு கண்டிருந்திருந்த தர்மன், துயரால் புலம்பத் தொடங்கினான். "காண்டீவி ஸவ்யஸசி என்றெல்லாம் புகழ்கிறார்களே இந்த உலகத்தார்... எல்லாம் பொய்தானோ! உன் கையிலுள்ள காண்டீபமும் அலங்காரப் பொருளோ! கர்ணனை முடிக்காத உன் காண்டீபத்தைத் தூர எறிந்துவிடு...' என்று இகழ்ந்தான் தர்மன்.

தந்தைக்குச் சமமானவன் அண்ணன் என்ற தர்மத்தைக் கடைப்பிடிக்கும் அர்ஜுனனுக்கு, அவன் தன்னை இகழ்ந்து பேசியதில் வருத்தம் இல்லை. ஆனால், காண்டீபத்தை இகழ்ந்ததில் அவன் கோபம் மிகக் கொண்டான். காண்டீபத்தை இகழ்பவரைக் கொல்வேன் என்பது அர்ஜுனன் செய்த சத்தியம். எனவே கோபம் தலைக்கேற, கத்தியை உருவியபடி தர்மனைக் கொல்லப் பாய்ந்தான்.

விருட்டெனப் பாய்ந்து, அவன் கத்தியைப் பிடுங்கி எறிந்தான் கண்ணன். "அர்ஜுனா, என்ன செய்யத் துணிந்தாய்? அண்ணனைக் கொல்வது அதர்மம். அதிலும் ஒரு தர்மாத்மாவாகத் திகழ்பவனைக் கொல்வது தகாது' என்றான். அர்ஜுனனோ, தன் சபதத்தைக் கூறி, "காண்டீபத்தை இகழ்ந்த தர்மனைக் கொல்லாமல் விட்டால், எனது தர்மத்திலிருந்து மீறுவதாகுமே' என்றான்.

தர்ம வழி நடப்பவரைத் தடுத்தல் அதர்மம் என்பதை அறிந்திருந்த கண்ணன், அர்ஜுனனுக்கு ஒரு யோசனை சொன்னான். ""அர்ஜுனா, மிகவும் உயர்வாகப் போற்றும் ஒருவரை இகழ்ந்து பேசினாலும், ஒருமையில் திட்டினாலும் அவரைக் கொலை செய்வதற்குச் சமம் என்பர். அதனால் நீ உன் தமையனை திட்டித் தீர்த்து, உன் தர்மத்தைக் காத்துக் கொள்'' என்றான்.

அதை ஏற்ற அர்ஜுனன், தர்மனைத் திட்டித் தீர்த்தான். ""கர்ணன் ஒருவன் அடித்த அம்புக்குத் தாங்காமல் இப்படி சுருண்டு கிடக்கிறாயே, உன்னைப் போய் போர்க்களத்தில் முன்னிறுத்தி யுத்தம் செய்கிறோமே. நீயெல்லாம் ஒரு வீரனா?'' என்று இகழ்ந்தான். தர்மனுக்கு கண்களில் தாரையாக நீர் பெருக்கெடுத்தது.
அடுத்த நொடி, கீழே கிடந்த கத்தியை மீண்டும் எடுத்து, தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொள்ள முயன்றான் அர்ஜுனன். இப்போதும் கண்ணன் பாய்ந்து, கத்தியைப் பிடுங்கி தூர எறிந்தான்.

"அர்ஜுனா, என்ன செய்கிறாய் தற்கொலை செய்துகொள்வது மகாபாபம் என்பது தெரியாதா?'' என்று கேட்டான் கண்ணன்.

"கண்ணா, உனக்குத் தெரியாததல்ல. என் முன்னால், என் அண்ணன் தர்மனை எவனாவது இகழ்ந்தால் அவனைக் கொல்வேன் என்று சபதம் செய்திருந்தேன். இப்போது நானே அவனை இகழ்ந்துவிட்டேன் அதனால் என்னை நானே மாய்த்துக் கொள்வதே என் தர்மத்துக்கு உகந்தது'' என்றான் அர்ஜுனன்.

பாண்டவர் ஐவரையும் காப்பேன் என்று சபதம் செய்த கண்ணனுக்கு, அர்ஜுனனைத் தடுத்தாக வேண்டிய நிலை. இப்போது இன்னொரு உபாயம் சொன்னான் கண்ணன்.

"தற்கொலைக்குச் சமமான ஒரு செயலும் உண்டு. அது தற்பெருமை பேசுவது. எனவே நீ உன்னைப் பற்றியே புகழ்ந்து பேசி, உனது சபதத்தை நிறைவேற்று'' என்றான்.

அதை ஏற்ற அர்ஜுனன், "காண்டவ வனத்தை தீக்கிரையாக்கி, போருக்கு வந்த தேவேந்திரனை ஒருவனாகவே எதிர்த்து வெற்றி கண்டேன். வேடன் உருவில் வந்த கயிலைநாதனை வென்றேன். இந்திரலோகம் சென்று வில்வித்தை கற்று, இந்திரனின் பகைவர்களை வென்றேன். என்னைப் போன்ற வில்லாளி உண்டோ'' என்று பலவாறாக தன்னையே புகழ்ந்து பேசி, தான் தற்கொலை செய்வதற்கு ஈடான ஒன்றை நிறைவேற்றிக் கொண்டான்.

பெரியோரை இகழ்வது தகாது என்றும், தற்பெருமை பேசுவது தற்கொலைக்குச் சமம் என்றும் வழி காட்டிய கண்ணன், அர்ஜுனனுக்கு மட்டுமா இந்த உபாயத்தைக் காட்டினான்..!?

நன்றி - தினமணி

சனி, 6 ஜூலை, 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 58

மூன்றாவது ஸ்கந்தம் - பதிமூன்றாவது அத்தியாயம்

ஸ்ரீ வராஹ அவதாரம் (தொடர்ச்சி) 

மைத்ரேயர், விதுரருக்கு ஸ்ரீ வராஹ அவதாரத்தின் பெருமைகளையும், அதன் பயன்களையும் சொல்லி வருகிறார். பகவான் கண்ணன் கீதையில் கூறியது போல், ஸாதுக்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும், தர்மத்தை ஸ்தாபிக்கவும் பகவான் அவதரிக்கிறார். வராஹ அவதாரத்தின்போது துஷ்டர்களான ஹிரண்யாக்ஷன் முதலானோரை முடிக்கவும், ஸாதுக்களான ரிஷிகளையும், பூமாதேவியையும் காக்கவும், யக்ஞம், யாகம், ஹோமம் செய்தல் போன்ற தர்மங்களை ஸ்தாபிக்கவும் பகவான் அவதரிக்கிறார். 

பூமிதேவியின் அவலநிலை குறித்துக் கவலை கொண்டிருந்த நான்முகனின் மூக்கிலிருந்து சிறு பன்றியாகத் தோன்றினார் பகவான். பன்றி கிடுகிடுவென வளர்ந்தது. இறைவன் ஸர்வேச்வரன். அவன் பன்றியாக அவதரித்தாலும், அனைவரைக் காட்டிலும் தன்னுடைய மேம்பட்ட தன்மையை – ஈச்வரனான தன்மையை – மறைத்துக் கொள்ளவும் முடியுமோ? ஆனால் அதையும் மறைத்துக் கொண்டே பன்றியாகத் தோன்றினானாம்! 

இது நம் ஜாதியைச் சேர்ந்த பன்றிதான் என்று எண்ணி, மற்ற அனைத்துப் பன்றிகளும் பெருமாளின் மீது விழுந்து புரளும்படியாக இருந்ததாம் அவனது குணம். இங்கே ஓர் உதாரணம் கூறுகிறேன். ராவணனால் ஏவப்பட்ட மாரீசன், தன் மாயத்தால் பொன்மானாக வடிவெடுத்து ஸீதையின் முன்னே நடமாடினான். அப்போது மற்ற மான்கள் எல்லாம் அவனை வந்து மோப்பம் பிடித்தன. ‘இது நம் ஜாதி இல்லை. ராக்ஷஸ ஜாதி’ என்று புரிந்து கொண்டு, பயந்து ஒதுங்கி விட்டன. ஆக, ஒரு அரக்கனால் தன்னுடைய இயல்பு வாசனையை மறைத்துக் கொண்டு பொதுவான மானாக முடியவில்லை. ஆனால், ஸர்வேச்வரன் தன்னையே மறைத்துக் கொண்டு, நிஜமான பன்றியோடு பிரித்தறிய முடியாதபடி பிறக்கிறான். இது எப்படி சாத்தியம்? அனைத்து அசேதனங்களுக்கும், ஜீவர்களுக்கும் அவனே அந்தராத்மாவாக, உயிராக இருக்கிறபடியால், எல்லாமே அவன்தானே! 

ஆழ்வார் ஒரு பாடலில், ‘ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா! ஒத்தாய் எப்பொருட்கும்’ – என்கிறார். தனக்குச் சமமானவனோ, மேம்பட்டவனோ இல்லாதவன் இறைவன். அவன் அனைத்துப் பொருள்களுக்கும், அனைத்து ஜீவர்களுக்கும் ஒத்தாற்போல் பல பிறவிகளை எடுக்கிறான். தேவ ஜாதியில் இந்திரன் தம்பி வாமனனாகவும், மனிதப் பிறவியில் ராமன், கிருஷ்ணன் ஆகியோராகவும், ஏன் தேவையெனின் ஒரு குள்ளமான மாமரமாகவும் கூட பெருமான் பிறக்கிறான்! எப்போதும் அவரது பெருமைகளில் ஒன்று கூடக் குறைவது கிடையாது. ஆனால், தான் பிறவி எடுத்த அனைத்து ஜாதியரோடும் ஒன்றாகக் கலந்து, அவர்களுடன் சமமாகப் பழகுகிறான். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், நம் அனைவருக்குள்ளும் இறைவன், நம்மைப் பெறுவதற்காகவே ஏங்கிக் கொண்டு, இவன் திருந்துவானா என்று எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறான் என்பது புரியும். அப்போது அந்த இறைவனை அடைய வேண்டும், அவனையே சரணம் புக வேண்டும் என்கிற துடிப்பு மிகும். 

சிறு பன்றியாகத் தோன்றிய எம்பெருமான் கிடுகிடுவென வளர்ந்தான். இவனைப்பற்றி ஸ்ரீ விஷ்ணு புராணத்தில், பராசர மகரிஷி கூறுகிறார். ‘எவருடைய குளம்புக்குள்ளே மேரு மலையும், ஹிமாச்சலமும் சிறு பரல் கற்களைப் போல கனகனவென்று ஒலிக்குமோ, அந்தப் பெரிய குளம்பும், திருமேனியும் உடைய மஹாவராஹப் பெருமானை வணங்குகிறோம் - என்று ரிஷிகள் துதித்தார்களாம். 

ஆழ்வார் இதை ஒரு பாடலில்,
சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவாகாரம்
குலுங்க, நிலமடந்தைதனை இடந்து புல்கிக்
கோட்டிடை வைத்தருளிய என்கோமான்
கண்டீர்.....
(பெரியதிருமொழி 4-4-8) 

- என்று புகழ்கிறார். பகவான் தன்னுடைய திண்ணிய திருவடிக் கணுக்காலில், வீரச்சிலம்பு அணிந்து கொண்டிருக்கிறான். அந்தச் சிலம்புக்குள் சிறு கற்கள் ஒலிக்கின்றன. அதில் ஒரு கல் மேருவாம், மற்றொரு கல் ஹிமாலயமாம். அப்படி என்றால், அந்தச் சலங்கையோ, கணுக்காலோ, பெருமானின் திருமேனியோ, எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்று கற்பனை கூடச் செய்து பார்க்க இயலவில்லை. இப்படி பகவான் தோன்றியவுடன், அவன் பேரழகையும், தேஜஸையும் தரிசித்த ரிஷிகள் எல்லாம், பல ச்லோகங்களில் கொண்டாடினார்கள். எம்பெருமானுக்கு யக்ஞ வராஹன் என்னும் திருநாமம் உண்டு. அதாவது அனைத்து யக்ஞம், யாகம் ஆகியவற்றின் உருவாகவே வராஹப் பெருமான் எழுந்தருளியுள்ளார். அவர் அவதரித்தபோது, ஆகாயத்தில் வாலை உயரத் தூக்கிக் கொண்டு, கடினமான தன்னுடைய கேசமாகிய திருக்குழற்கற்றையாலும் குளம்புகளாலும் மேகங்களை அடித்துக் கொண்டு, தம்முடைய கோரைப் பற்களுடைய ஒளியால், சூரிய – சந்திரர்களை இருளாக்கிக் கொண்டும், பிடரி மயிரை உதறிக் கொண்டும், யக்ஞ சொரூபியாக எழுந்தருளினார். அந்த எம்பெருமானுடைய தோள்களில் காயத்ரி முதலான சந்தஸ்களும், அவருடைய ரோமங்களில் தர்ப்பங்களும், திருக்கண்களில், ஹோமத்துக்குப் பயன்படும் நெய்யும், திருவடிகளில் யாகத்திற்கான நான்கு கர்மங்களும், மூச்சுக் காற்றில் ஸ்வரத்துடன் கூடிய வேதங்களும் காட்சி அளித்தன. 

பெருங்கேழலார் தம் பெருங்கண் மலர் புண்டரீகம், நம்மேல் ஒருங்கே பிறழ வைத்தார் - என்பது ஆழ்வாரின் பாடல். அவன் பன்றியாகவே அவதரித்தபோதும், அவனது திருக் கண்கள் மலர்ந்த இரண்டு தாமரைகளை ஒத்திருந்தன. அவற்றைச் சுழற்றிக் கொண்டு ஒரு புறத்தில் அடியார்கள் எங்கிருக்கிறார்கள் என்ற அருளைச் சுரந்து கொண்டும், மற்றொரு புறத்தில் ஹிரண்யாக்ஷன் எங்கு ஒளிந்திருக்கிறான் என்று கோபத்தைக் கக்கிக் கொண்டும் பெருமான் புறப்பட்டான். அவனைத் தோத்திரம் செய்யும்போது, ரிஷிகள் கூறுகிறார்கள்: 

நமோ நமஸ்தே அகில மந்த்ர தேவதா த்ரவ்யாய ஸர்வ க்ரதவே க்ரியாத்மனே| வைராக்ய பக்த்யாத்ம ஜயாநுபாவித ஞாநாய வித்யா குரவே நமோ நம:|| (ஸ்ரீமத் பாகவதம் 3-13-39) 

– அதாவது உலகில் உள்ள மந்திரங்கள் அனைத்தாகவும், தேவதைகள் அனைவருக்கும் அந்தராத்மாவாகவும், யாகங்களில் இடப்படும் பொருள்கள் அனைத்தாகவும், அனைத்து யக்ஞங்களாகவும், அனைத்து ஹோமச் செயல்களாகவும் பகவானே, நீரே விளங்குகிறீர்! உலகப் பற்றில்லாமல் உம்மிடத்தே அன்போடு பக்தி செய்து, புலன்களை எவன் அடக்கி உம் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றுகிறானோ, அவனுக்கு முக்தி அடைவதற்குத் தேவையான அறிவைப் புகட்டுகின்ற குருவே! உமக்கு வணக்கம் – என்று ரிஷிகள் துதித்தனர். வராஹப் பெருமான் ஞானபிரான் என்றும் அழைக்கப்படுகிறார். ஞானத்துக்கெல்லாம் இருப்பிடம் அவனே! இவ்வுலக ஞானமாகட்டும், அல்லது முக்தி கொடுக்கும் ஆத்மஞானமாகட்டும், அனைத்தையும் வராஹப் பெருமானே ஞானபிரானாக இருந்து போதிக்கிறார். அவர் தன்னுடைய நீண்ட திருமேனியோடே, ‘எங்கே அரக்கன்?’ - என்று தேடிக் கொண்டு, பாதாள உலகத்துக்குள் புகுந்தார். ஹிராண்யக்ஷனும், பெருமானை எதிர்ப்பதற்காக, அவன் எங்கு இருக்கிறான் என்று விசாரித்துக் கொண்டு, பாதாளத்தை அடைந்தான். இருவருக்கும் போர் மூண்டது. 

பகவான் அவலீலையாக, கருடன் எப்படி பாம்பைப் பிடித்துத் துவைக்குமோ, அதே போல ஹிரண்யாக்ஷனோடே மோதினார். அவன் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு சண்டை செய்ய, விளையாட்டுப்போல் தன் கைகளாலும், தான் நினைத்த இடத்தில் பாய்ந்து சென்றழிக்கும் சக்ராயுதத்தாலும், ஹிரண்யாக்ஷனை முடித்தார். 

இது ஒரு புறம் இருக்க, பகவான் பூமாதேவியை தன்னுடைய நீண்ட இரு கோரைப்பற்களில் தூக்கிப் பிடித்து நின்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதைப்பற்றி பாகவத புராணத்தில் சுகாசாரியார் கூறுகிறார்: “ஒரு பெரும் யானை தன்னுடைய நீண்ட தந்தங்களில் காட்டுக் கொடிகளைச் சுற்றிக் கொண்டு, பெருமிதத்தோடே நடை போடுவது போல், வராஹப் பெருமான் தோற்றமளித்தார்” என்கிறார். 

நம்மாழ்வார் ஒரு பாடலில், “நீலவரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப, கோல வராகம் ஒன்றாய்; நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்!” என்று பாடுகிறார். நீல மலை ஒன்று இரண்டு பிறைச் சந்திரர்களை தன்னிடத்தே சொருகிக் கொண்டு நின்றால், எவ்வளவு கம்பீரமாக இருக்குமோ, அதைப்போல வராஹப் பெருமான் நின்றான். அவனே நீலமலை. அவனுடைய இரண்டு கோரைப் பற்களே இரண்டு பிறைச் சந்திரர்கள். சந்திரனில் ஒரு கருப்புத் திட்டு எப்போதும் தெரியும் அல்லவா? அதைப் போலத்தான் பூமாதேவி, பெருமானின் கோரைப் பற்களில் ஒட்டிக் கொண்டிருந்தாள். பூமியின் இடர் தீர்த்த பெருமானாக அவளை எடுத்து தன் இடது திருமடியில் அமர்த்திக் கொண்டு, அணைத்துக் கொண்டான். 

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கூறுகிறார்:
பத்யுர் தக்ஷிண பாணி பங்கஜ புடே
விந்யஸ்த பதாம் புஜா
வாமம் பந்நக ஸார்வபௌம ஸத்ருசம்
பர்யங்கயந்தீ புஜம்
(பூஸ்துதி -3) 

- அதாவது பெருமான் தன் இடது கையை விரிக்க, அதையே அணையாகப் பயன்படுத்தி பூமாதேவி, தன் அயர்ச்சியெல்லாம் தீரச் சாய்ந்து கொண்டாள். வராஹப் பெருமான், தனது வலது கையையே ஒரு திண்டு போல் பயன்படுத்தி, அவளுடைய இரண்டு திருவடிகளைத் தூக்கிப் பிடித்தார். இன்றும், லட்சுமி வராஹனைப் பல கோவில்களில் இந்தத் திருக்கோலத்தில் சேவிக்கலாம். பிராட்டியின் திருவடிகளைத் தன் கைகளால் ஏந்தி, பெருமான் காட்டுகிறாரே, என்ன செய்தி கூற? ‘என்னைப் பற்றுவதற்கு முன், இதோ நானே உங்களுக்குக் காட்டிக் கொடுக்கும் பூமிப் பிராட்டியின் திருவடிகளைப் பற்றுங்கள்‘ என்று சொல்கிறார் போலும்! 

பூமிக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியவுடன், அவள் மேனி நடுக்கமும் தீர்ந்தது. ஆனாலும் இன்னும் சற்றே அவள் வருந்தினாள். வராஹன் கேட்டார். “தேவி, உம்மை ரக்ஷித்தோம். இனி ஏன் வருந்துகிறீர்?” 

அப்போது பூமாதேவி பிரார்த்தித்தாள் - “நம் முடைய ஆபத்தைப் போக்கினீர். ஆனால், நம்மிடத்தில் வாழும் கோடானு கோடி குழந்தைகளான மக்கள், உன்னை அடைவதற்கு வழி தெரியாமல் திகைக்கிறார்கள். உன்னை அடைய எளிதான உபாயத்தைக் கூறும்” என்று வேண்டினார். 

பகவான் பதில் கூறினார்: “வாயார என் திருநாமங்களைச் சொல்லச் சொல். மனதால் என் திருவுருவத்தை தியானிக்கச் சொல். கைகளால் மலர்களைக் கொண்டு என்னையே அர்ச்சிக்கச் சொல். இதுதான் என்னை அடைய எளிதான உபாயம்” என்றார். என்றோ க்ருத யுகத்தில் வடமொழியில் வராஹப் பெருமான் பூமாதேவிக்கு உபதேசித்ததை, நம் போன்ற எளியவர்கள் அனைவருக்கும், இந்தக் கலியுகத்தில் இனிய தமிழில் உபதேசிப்பதற்காக, பூமாதேவி ஆண்டாளாக அவதரித்தாள். இந்த உபதேசத்தையே திருப்பாவையின் ஐந்தாவது பாடலில், ‘வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க.... தூமலர் தூவித் தொழுது’ என்று ‘மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களினாலும் பெருமானைத் துதித்தால் எளிதில் அவனை அடையலாம்’ என்று கூறினாள். அப்போதே எம்பெருமான் பூமாதேவிக்கு கைசிக புராணத்தை, கைசிக மகாத்மியத்தை உபதேசித்தார். இன்றும் பல வைணவக் கோவில்களில் கைசிக புராணம், கைசிக ஏகாதசியன்று (கார்த்திகை சுக்லபக்ஷ ஏகாதசி) படிக்கப்படுகிறது. 

இக்கதையை மட்டும் சுருக்கமாகக் கூறுகிறேன். பூர்வ கல்பத்தில் நம்பாடுவான் என்ற பாணர் குலத்திலே தோன்றிய ஒருவர், திருக்குறுங்குடி - மகேந்திர கிரி மலையின் அடிவாரத்தில் இருந்தார். அவர் ஏகாதசி தோறும் திருக்குறுங்குடி மலையேறி, வீணைமீட்டி, பாட்டுப்பாடி, நம்பியை மகிழ்விப்பார். கார்த்திகை மாதத்து ஏகாதசியின்போது உபவாஸ விரதம் இருந்து அவர் மலையேறினார். அப்போது அங்கிருந்த ப்ரம்ம ராக்ஷஸன் ஒருவன் அவரைப் பிடித்துக் கொண்டு, சாப்பிட முயன்றான். நம்பாடுவான் வேண்டினார்: “உனக்கு உணவாவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்த உடல் எனக்குப் புல்லுக்குச் சமம். ஆனால், நான் நம்பியைத் துதித்துப் பாடப் போகிறேன். பாடி முடித்து விட்டு, திரும்பி வரும் வழியில் உனக்கு உணவாவேன். இது உறுதி” என்றார். 

ப்ரம்ம ராக்ஷஸன் முதலில் நம்ப மறுத்தாலும், பின் ஏற்றுக் கொண்டான். நம்பாடுவான் சென்றார். நம்பியைப் பாடினார். ஆனந்தமாக விடை பெற்றார். நேரே, சொன்ன சொல் தவறாமல், ப்ரம்ம ராக்ஷஸனிடம் வந்தார். இதைப் பார்த்தவுடன், ப்ரம்ம ராக்ஷஸனுக்கு வியப்பு. உயிர் துறக்க யாரேனும் விருப்பப்படுவாரா? சட்டென்று பணிந்து போன ப்ரம்ம ராக்ஷஸன், “பிராமணனாகப் பிறந்த நான் ஒரு பாபத்தால், இப்படி அலைகிறேன். நீ நம்பியைக் குறித்துப் பாடினாயே, அந்தப் பாட்டுக்களின் பயனை எனக்குக் கொடுத்து, சாப விமோசனத்தை ஏற்படுத்து” என்றான். ஆனால், தூய பக்தரான நம்பாடுவானோ, “நான் ஒரு பலனைக் கருதிப் பாடினால் அன்றோ உனக்குப் பலனைக் கொடுக்க. நான் இறைவனின் ஆனந்தத்தைக் கருதிப் பாடினேனே தவிர, எனக்கு ஒரு துச்சமான பயன் கேட்டு அல்ல” என்றார். 

ஆனாலும், ப்ரம்ம ராக்ஷஸன் விடாமல், “கடைசியாகக் கைசிகப் பண் ராகத்தில் ஒரு பாடல் பாடியிருப்பாயே, அப்பாடலின் ராகத்தின் பலனையாவது கொடுத்து என்னை மீட்பாய்” என்று கெஞ்சினான். இரக்கமுற்ற நம்பாடுவான், பெருமானை வேண்டி அப்பயனைக் கொடுத்து, ப்ரம்ம ராக்ஷஸனை சாபத்திலிருந்து விடுவித்தார். யாரும் பக்தனாகலாம். எச்சாதி, எக்குலம், எம்மொழி, என்கிற வேறு பாடு பக்தர்களுக்குள் இல்லை. 

இந்த உயர்ந்த கதையை வராஹப் பெருமான், பூமாதேவிக்கு உபதேசித்தார். அப்போது கூறுகிறார். “என்னிடத்தில் அபசாரப்பட்டாலும் பொறுத்துக் கொள்வேன், தேவி! என் பக்தனிடத்தில் எவன் அபசாரப்பட்டாலும், எத்தனை கோடி ஆண்டுகளானாலும் நான் மன்னிப்பதில்லை. பாகவதர்களிடத்தில், பக்தர்களிடத்தில் நாம் அபசாரப்படவே கூடாது. இதுவே வராஹ புராணத்தின் செய்தி. பூமாதேவியை கிளர்ந்தெடுத்த பெருமான் அவளுக்குச் சிறந்த உபதேசங்களைச் செய்தான். ஹிரண்யாக்ஷனை அழித்தான். யக்ஞ சொரூபியாக நின்றான். 

இந்தக் கதையை யாரெல்லாம் கேட்கிறார்களோ, அவர்கள் உள்ளத்தில் பெருமான் எப்போதும் திகழ்கிறான். அவர்கள் இந்த உடலின் இறுதியில் பிறவாமை என்னும் பேற்றினை அடைந்து முக்தி பெறுகிறார்கள். இத்தோடே மைத்ரேயர், வராஹ புராண சரித்திரத்தைக் கூறி முடித்தார். இனி ப்ரஹ்மாவினுடைய சிருஷ்டி தொடர்கிறது. வராஹப் பெருமான் திருவடிகளே சரணம்! 

இத்துடன் மூன்றாவது ஸ்கந்தம் முற்றுப் பெறுகிறது. 

ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ப்ரவசனப் பயணங்கள் மற்றும் வேதபாடசாலை பணிகள் ஆகிய பணிச் சுமைகள் காரணமாக, ‘துக்ளக்’கில் அவர் எழுதி வரும் ஸ்ரீமத் பாகவதம் தொடர், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. 
- ஆர்

-------------

நன்றி - துக்ளக்

வியாழன், 4 ஜூலை, 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 3


யோகா வகுப்புகளில் இனி "அகிம்சாவாதியாக இருந்தால் தான் கற்றுத்தரப்படும்' என போர்டு வையுங்கள். எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்ப்போம்.

யோகா செய்ய வேண்டுமானால், தேவையற்றதை விட வேண்டும் என்பது இன்னொரு முக்கிய தகுதி. ஆனால், எல்லாமே நமக்கு வேண்டும், பரணிலுள்ள பழைய காகிதம் கூட வேண்டும் என்ற மனநிலை தானே இருக்கிறது!

அடுத்து ஆசனம்...அதாவது அமர்கிற கோலம். படுத்தால் யோகம் வருமா! தீர்க்க யோகம் (தூக்கம்) தான் வரும்.

பிரணாயாமம் என்றால் மூச்சுப்பயிற்சி. பிரத்யாகாரம் என்றால் மனதை பிரம்மத்தை நோக்கி இழுத்துக்கொண்டு வருதல். மனசு என்பது கையில் கிடைத்தால் தேவலை! அது கண்ணுக்குத் தெரியாது. ஆனால், அதை இழுத்தாகணும்! ஆன்மிகச் சொற்பொழிவுக்கு செல்லும் நீங்கள், மணி எட்டரையாச்சே!
சமையலாச்சோ இல்லையோ! வாசலில் செருப்பை விட்டு விட்டு வந்தோமே! இருக்குதோ இல்லையோ! இப்படி அலை பாயும். இப்படி ஓடுகிற மனசை இழுப்பது தான் பிரத்யாகாரம். ஒரு கூட்டத்திற்கு வந்தவர்களுக்கே இப்படி மனம் அலைபாய்கிறதென்றால், யோகாவில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எவ்வளவு பெரிய சிரமம்!

அடுத்து தாரணா. தாரணா என்றால் கலசுகிற எண்ணங்களை விடுத்து புலனடக்கத்துடன் இருத்தல். (அலை பாய்கிற மனதை அடக்குதல்). யோகா செய்யும் போது தான், இரண்டு வருடங்களுக்கு நமக்கு வேண்டாதவர் ஒருவர் திட்டியது நினைவுக்கு வருகிறது.

துரியோதனன் கண்ணனைத் திட்டினான் இல்லையா! அது போல மனம் குழப்பத்துடன் தியானம் செய்கிறது. எனவே, இந்த வகை சிரமங்களின்றி உருவத்தோடு உள்ள பகவானையே தியானியுங்கள். மல்லாண்ட திண்தோள் மணிவண்ணனாக அவனை நினையுங்கள். மனம் ஒரு கலங்கிய கிணறு. கலங்கிய கிணற்று நீரை தெளிவாக்க தேத்தாங்கொட்டை, நெல்லிமுள்ளி கொட்டையை கிணற்றுக்குள் போடுவார்கள். நமக்கு பெருமாள் தான் தேத்தாங்கொட்டை. கலங்கிய மனதை அவர் தெளிவாக்கி விடுவார்.

அடுத்து தியானம். "தியானம்' என்றால் "கலசாத (அலைபாயாத) எண்ணத்துடன் தியானம் செய்வது. இதன் பிறகு கடைசியாகத் தான் சமாதி நிலை. அதாவது, உருவமே இல்லாத பிரம்மத்தை அனுபவித்தல். இதுதான் எட்டாம் நிலை. எவ்வளவு நிலைகளைக் கடந்து உருவமற்றதை சிந்திக்க வேண்டியிருக்கிறது! பள்ளி, பட்டப்படிப்பு முடித்த பின் முனைவராக வேண்டும். யோகா செய்பவர்கள், ஆரம்பத்திலேயே உருவமற்றதை மனதில் நிறுத்துகிறேன் என்ற பெயரில் அஷ்டாங்க யோகத்தில் எட்டவதான சமாதியில் எப்படி ஆழ முடியும்? முனைவர் பட்டத்திலிருந்து தலை கீழாக முதல்நிலைக்கு போவது போலல்லவா இது!

விஷ்ணு புராணத்தை பராசர மகரிஷி எழுதினார். அதில்,பகவானின் திவ்ய உருவம் பற்றி வர்ணிக்கிறார். ஒரு யோகி, பகவானின் உருவத்தை சிந்திக்க சிந்திக்க உன் அழுக்கெல்லாம் போய் விடும் என்கிறார். இதை விட்டு விட்டு, யோகாவின் போது உருவமற்றதை சிந்தித்தால் மனஓட்டத்தை தடுத்து நிறுத்துவது எப்படி சாத்தியம்? யோகம் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? "எண்ண ஓட்டத்தை தடுத்தல்'. எண்ணங்களை தடுத்தல் என்றால் எல்லாவற்றையும் தடுத்தல் என்று அர்த்தமாகாது. எண்ணத்திலுள்ள கெட்டதைத் தடுத்தல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கெட்ட வார்த்தை பேசுகிறது வாய். அதற்காக வாயையே துண்டி என சொல்ல முடியுமா? நல்லதைப் பேசு, கண்ணால் நல்லதைப் பார். மனதால்
தப்பை விலக்கு, எண்ணத்தில் கோபம், பொறாமையை வளர்க்காதே என்று அர்த்தம் எடுக்க வேண்டும்.

யோகத்தின் கடைசி நிலையான சமாதி என்றால், ஏதோ கண்ணை மூடி தன்னையே மறந்து விடுவது என்பதல்ல. நமது கற்பனைகளை எல்லாம் வெட்டி விட்டு, அந்த சொரூபத்தை நினை என்று அர்த்தம் கொள்ள வேண்டும். மனம் நிர்மலமாக இருக்க பகவானை நினைக்க வேண்டும். ஆனால், தறி கெட்டு ஓடுகிற மனதை சமாதி நிலைக்கு கொண்டு செல்ல முடியுமா?

சிறிய வைரம் சிலரிடம் இருக்கும். அதை மெழுகு அல்லது வெல்வெட் துணியில் வைப்பர். அதில் வைரத்தை வைக்க ஒரு ஆதாரம் வேண்டும். அதாவது சாமணம் வேண்டும். அது போல, மிக நுண்ணியது மனது. அது கையில் அகப்படாததால், அதை பகவானிடம் லயிக்கச் செய்ய வேண்டுமே தவிர, மூக்கணாங்கயிறு போட்டு இழுத்தால் முடியாது.

நம் வீட்டு பெருமாளை, குலதெய்வத்தை பார்த்துக்கொண்டே இருங்கள். பிறகு மனதை அதில் லயிக்க விடுங்கள். அதன் அபரிமித அழகை நினைக்க நினைக்க மனம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

""சரி... கடவுளுக்கு உருவமிருப்பதால் என்ன பயன்? இல்லாவிட்டால் என்ன பயன்?''. பகவானுக்கு சுண்டல், சர்க்கரைப் பொங்கல், நைவேத்யம் செய்து சாப்பிட்டால் நம் புறஉருவம் தான் நன்றாக இருக்கும். ஆனால், முக்கியமாக நம் ஆத்மா நன்றாக இருக்க அவன் திருவுருவத்தை பார்க்க வேண்டும். எனக்கு தெரியாத இடத்தில் செல்லும் போது, யாரோ ஒரு மனிதன் வழிகாட்டுகிறான். எனக்கு பாதை பற்றிய கவலையில்லை அதுபோல், பகவானின் திருமேனியே சம்சாரக்கடலைக் கடக்க வழிகாட்டியாக உள்ளது. மனம் பகவானை நினைத்தால் கண் தப்பாய் பார்க்காது. திருநெல்வேலிக்கு நான் வந்தால், இங்கே வழிகாட்ட ஆள் கிடைக்கலாம். ஆனால், வடதுருவத்துக்குப் போனால் கை காட்டி கூட கிடையாது. பனிக்கட்டியில் நின்றால் காலே இருக்காது.

அதுபோல, உருவம் என்ற ஒன்று இருந்தால் தான் பகவானை மனதில் வைக்கலாம். ஆக, யோகா என்றதும் உருவமற்றதை தியானிக்கிறேன் என அமரக்கூடாது. மீண்டும் ஒன்றை நினைவூட்ட வேண்டியுள்ளது.

அகிம்சாவாதி தான் யோகாவுக்கு தகுதியுடையவன். எல்லா பிராணிகளும் வாய்க்குள் போக வேண்டுமென்றால் யோகாவுக்கு தகுதி கிடையாது. பிராமணர் மட்டும் என்றில்லை. எல்லாருமே சைவ உணவு தான் சாப்பிட வேண்டும். சாத்வீகமான உயர்ந்த உணவை நாமும் சாப்பிட்டு, பிறருக்கும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், திரும்பத் திரும்ப சம்சாரத்தில் உழன்றாக வேண்டியது தான். சரி...இனி அடுத்த விஷயத்துக்குள் போவோம். நம் உருவத்துக்கும், பகவான் உருவத்துக்கும் என்ன வித்தியாசம்? நமக்கு பல், மூக்கு, காது, நாக்கு எல்லாம் உள்ளது. இவை அவனுக்கு இருக்கிறதா? ஐம்பெரும் பூதத்தால் ஆனது மனித உடம்பு. ஆனால், அவனது உடம்பு எப்படி இருக்கும்?

- இன்னும் ஆனந்திப்போம்...

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 2


பகவானுக்கு உருவம் இருக்கிறது என்றும், இல்லை என்றும் வேதம் சொன்னாலும், "இருக்கு' என்று ஒத்துக்கொண்டால் ஸனாதன தர்மம் (இந்துமதம்) பிழைத்தது. ஏனெனில், நான் 200 நாள் உங்களிடம் தொடர்ந்து பேசி, பகவானுக்கு உருவமில்லை என்றாலும், நீங்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். ஏன்...வேதமே சொன்னாலும் கூட நம்பமாட்டீர்கள். ஏனெனில், உருவம் என்ற ஒன்று நம் மனதில் பதிந்து போன ஒன்று.
அதனால் தான் அவனை ஆறடி, நாலடி, ஒன்றரை அடி என்றெல்லாம் சுருக்கி வைத்திருக்கிறோம். புளியோதரை, உப்பில்லாதது, கனிஞ்ச பழம், காய்ந்த பூ இதையெல்லாம் கொடுக்கிறாய். ஆனால், இதெல்லாம் அந்த பகவானுக்கு தேவையா என்றால்.. இல்லை! இவை இல்லாமலே அவன் ஆனந்தமாக இருப்பான். ஆனால், நாம் அப்படியில்லையே!

இதையெல்லாம் அவனுக்கு நைவேத்யம் செய்து சாப்பிட்டால் தான் நமக்கு ஆனந்தம். வெள்ளையடிக்க ஏணி வேண்டும். வெள்ளையடிப்பவர் வீட்டுக்கு வந்து விட்டார். பக்கத்து வீட்டுக்காரருடன் நமக்கு ஆகாது. எனவே, வெள்ளையடிப்பவரிடம், ""எனக்கென்று சொல்லாமல், உன் தேவைக்காக வாங்குவது போல் கேள், அவர் தருவார். எனக்கென்று கேட்டால் தரமாட்டார்,'' என்று எச்சரித்து அனுப்புகிறார். வெள்ளையடிக்க வந்தவரும் போய் கேட்கிறார். ""அவர் யார் வீட்டுக்காக கேட்கிறாய்?'' என்கிறார். அவரோ, இவர் வீட்டைக் கை காட்ட "இல்லை' என்று சொல்லி விடுகிறார். அப்படியானால், ஏணி இருக்கிறது. அது உனக்கு இல்லை என்று தான் அவர் சொல்கிறார். அதற்காக, உலகத்திலேயே ஏணி இல்லை என்று சொல்லி விட முடியுமா?

அதுபோல் தான், பகவானுக்கு உருவம் இருக்கிறது. அது உன்னைப் போல் இல்லை என்று வேதம் சொல்கிறது.

""மனிதனாகிய உன்னைப் போல் என்னை நினைக்காதே. உன் உருவம் போல் என்னைக் கற்பனை செய்யாதே. உன் மூக்கு, காது போல் என் மூக்கும், காதும் இல்லை. உன் கண் போல என் கண் இல்லை,'' என்ற கருத்தில் தான் பிரம்மத்து உருவமில்லை என்று வேதம் சொல்கிறது.

அதனால் தான் "பிரம்ம சொரூபம்' (பிரம்மத்து உருவம் உண்டு) என்று சொல்கிறோம். அதாவது, உருவத்தை தாங்கி கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது என்று அர்த்தம். இன்னொரு வகையிலும் இதைப் பார்ப்போம்.

அடியேனின் ஆத்மாவை தாங்கி நிற்பது உடல். ஆக, உடம்பு பொய்யா? ஆத்மா பொய்யா? கண்ணுக்கு தெரிந்த உடம்பும் இருக்கிறது. தெரியாத ஆத்மாவும் இருக்கிறது. ஆக, இரண்டும் உண்மையே.

இப்படித்தான் பிரம்மத்துக்கு (பகவானுக்கு) உருவம் உண்டு என்றும் ஆகிறது, இல்லை என்றும் ஆகிறது. "நான்' என்ற ஆத்மாவுக்கு ஆறடி இல்லை. அதற்கு குலகோத்ரம் இல்லை. உடம்புக்கு தான் கோத்திரம் உள்ளது. ஒருவன் நம் மீது மோதி விட்டான். உடனே நாம் அவனை "கண்ணில்லையா?' என்று கேட்கிறோம். அதற்காக, அவனுக்கு கண்ணில்லை என்று ஆகி விடுமா! இருக்கிற ஒன்றை இல்லாததாக நாம் உருவகப்படுத்தி பேசுகிறோம் இல்லையா! கண் இருக்கிறது, ஆனால், அது செய்ய வேண்டிய வேலையைச் செய்யவில்லை என்பதே நிஜம்.

நாக்கு, மூக்கு, காது, இவை சுவைக்கிறது, முகர்கிறது, கேட்கிறது. இவையெல்லாம் நமக்கு இருக்கிறது. பகவானுக்கு இவையெல்லாம் இல்லை என்றாலும், அவர் சுவைப்பார், முகர்வார், கேட்பார், ஓடுவார்...எல்லாம் செய்வார்.

நமக்கு தான் உறுப்புகள் அவசியம் வேண்டும். அவை இல்லாமலே அவர் செயல்படுவார். 
கண்ணன் ஆவணி அஷ்டமியன்று பிறந்தார். வசுதேவர் கண்ணனைக் கண்டார். 32 பல், சந்திரனை ஒத்த புன்சிரிப்பு, சங்கு, சக்கரம், கதை, வில், கேடயம், வைஜயந்திமாலையெல்லாம் அவனிடம் இருந்தன. வெறும் கண்ணனைக் கண்டதாக சாத்திரம் சொல்கிறது. ஆனால், இதிகாசம்,
புராணங்களோ உருவமிருப்பதை ஒத்துக் கொள்கிறது.

இப்போது நிறைய இடங்களில் "யோகா கற்றுத்தரப்படும்' என போர்டு மாட்டி வைத்திருக்கிறார்கள். இதற்கென்று பதஞ்சலி யோக சூத்ரம் என்ற நூலே இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்தெல்லாம் நம் யோகா பற்றி அறிந்து கொள்ள வருகிறார்கள். அதன்பிறகு தான், நாம் யோகா பற்றி சுதாரித்துக் கொண்டிருக்கிறோம். எதற்குமே வெளிநாட்டுக்காரன் முக்கியத்துவம் கொடுத்தால், நாமும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். உள்ளூர் நாயனத்தின் பெருமை உள்ளூர்க்காரனுக்கு தெரிவதில்லை. அவன் எப்போதும் வாசிப்பவவன் தானே என்று விட்டு விடுகிறோம். அவனே, வெளியூர் போய் புகழடைந்த பிறகு தான், நம் ஊர்க்காரனிடம் இவ்வளவு விஷயம் இருந்ததா என்ற விஷயம் நமக்கே புரிகிறது.

யோகா வகுப்பிற்கு நீங்கள் சென்றதும் உங்களுக்கு முதலில் என்ன கற்றுத்தரப்படுகிறது என்றால், "சூன்யத்தில் மனது நிலைக்க வேண்டும்,வெற்றிடம் பற்றி நினையுங்கள், தியானம் செய்யுங்கள்,'' என்கிறார்கள்.

நீங்கள் எதுவுமே இல்லாத சூன்யத்தில் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும் என 400 ஆண்டுகள் முயற்சித்தால் கூட அது முடியாது. ஏன்... ஒரு யோகியால் கூட அது முடியாது. அவராலேயே முடியாது என்கிற போது, சாதாரணமானவர்களான நம்மால் அது முடியுமா! எனவே, தியானத்தின் போது கூட ஒரு உருவத்தையே தியானிக்க வேண்டும். உருவத்தை நினைத்தால் தான் அதில் மனது லயிக்கும்.

பதஞ்சலி யோக சூத்ரத்தில் அஷ்டாங்க யோகம் பற்றி சொல்லப்படுகிறது. முதலில் யோகா வகுப்புக்குச் சென்றதும், "நிமிர்ந்து உட்காருங்கள்' என்பார்கள். நான் ஓரிடத்தில் பேசுகிறேன். நீங்களெல்லாம் இரண்டு மணிநேரம் தொடர்ந்து அமர்ந்து கேட்கிறீர்கள். பேச்சு என்னவோ பகவானைப் பற்றி சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது! அதற்காக, எவ்வளவு நேரம் உட்கார்ந்தே இருக்க முடியும்! முட்டி வலிக்க ஆரம்பிக்கும், கால் மேல் காலை தூக்கிப் போடுவீர்கள்.

அங்குமிங்கும் அசைவீர்கள். பேச்சைக் கேட்பதை விட்டு மனம் விலகும். இதற்கே இப்படி என்றால், கண்ணைப் பொத்திக்கொண்டு, உருவமே இல்லாத ஒன்றில் மனதை லயிக்க விடுவது என்றால் சாமான்யமா?

அஷ்டாங்க யோகம் என்பது பற்றி உங்களுக்கு ஒருவேளை கற்றுத் தரப்பட்டிருக்கக் கூடும். யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், காரண, தியானம், சமாதி என்பவையே அந்த எட்டு நிலைகள். இவற்றை ஏதோ வார்த்தையளவில் உங்களுக்கு கற்றுத் தந்திருந்தாலும் கூட, இதற்குரிய விளக்கத்தை யோக ஆசிரியர்கள் உங்களுக்கு கற்றுத் தந்திருப்பார்களா என்பது கேள்விக்குறி. யோகம் செய்ய என்ன தகுதி வேண்டும் என்பதை முதல் வார்த்தையாகிய "யமம்' என்பது தெரிவிக்கிறது. "யமம்' என்றால் "உண்மை பேச வேண்டும், அகிம்சை, பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும், தேவையற்றதை விட வேண்டும், திருட்டு போன்ற தீய ஒழுக்கங்களை விட வேண்டும் என்பதெல்லாம் இதில் அடக்கம். இதில் ஒன்றாவது நம்மிடம் இருக்கிறதா! இது இருந்தால் தான் யோகம் செய்யவே நாம் தகுதியானவர்கள் ஆவோம். ஆக, முதல் படியிலேயே நாம் யோகம் செய்யத் தகுதியற்றவர்கள் ஆகி விடுவோம் என்பது உண்மை. நான் சொல்வது நிஜம் தானா என்று யோகா ஆசிரியர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

இதன்படி பார்த்தால், ஒரு பிராணியைத் தொடவே கூடாது, வெட்டுவது என்பது அப்புறம்...

- இன்னும் ஆனந்திக்கலாம்...

நன்றி - தினமலர்