நான்காவது ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்
(ப்ருதுவுக்கு ஸ்ரீமஹாவிஷ்ணு அனுக்ரஹம் செய்து ஹிதம் (நன்மையை) உபதேசித்தல்)
மைத்ரேயர் சொல்லுகிறார்:- ஷாட்குண்ய பூர்ணனும் யஜ்ஞங்களைப் பாதுகாப்பவனும் அவற்றில் கொடுக்கிற ஹவிஸ்ஸுக்களை புஜிக்கின்றவனுமாகிய வைகுந்தன் ப்ருதுவின் யஜ்ஞங்களால் நன்கு ஆராதிக்கப்பெற்று இந்த்ரனுடன் அவனைப் பார்த்து “மன்னவனே! இவ்விந்த்ரன் நூறு அஸ்வமேத யாகங்கள் செய்ய வேண்டுமென்கிற உன் ஸங்கல்பத்திற்கு விக்னம் (இடையூறு) செய்தானாகையால், அந்த அபராதத்தைப் பொறுக்கும்படி வேண்டுகிறான். இவன் விஷயத்தில் பொறுக்கவேண்டும். உலகத்தில் மதியுடைய மன்னவர் பிறர்க்கு உபகாரம் செய்யும் தன்மையராகி எத்தகைய பூதங்களுக்கும் த்ரோஹம் (கெடுதி) செய்யமாட்டார்கள். தேஹம் ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதல்லவா? அவர்கள் அதற்காகப் பிறர்மேல் த்ரோஹ சிந்தை கொள்ள மாட்டார்கள். உன்னைப்போன்ற பண்டிதர்களும் ஈச்வரனது மாயையால் மதிமயங்குவார்களாயின், அவர்கள் நெடுநாள் பெரியோர்களைப் பணிந்ததெல்லாம் பயனற்றதேயாகும். ஆகையால் பண்டிதனாயிருப்பவன் இச்சரீரமானது அவித்யை, காமம், கர்மம் இவைகளால் ஏற்பட்டதென்பதை அறிந்து அதில் மனப்பற்று செய்யலாகாது. ஆத்மா என்றும் ஒருவாறாயிருப்பவன்; நிர்மலன் (அழுக்கற்றவன்); ஸ்வயம்ப்ரகாசன் (வேறு எதனுடைய உதவியின்றி தானே தோன்றுபவன்); ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலிய துர்க்குணமற்றவன்; ஜ்ஞானானந்தாதி (ஜ்ஞானம், ஆனந்தம் முதலிய) குணங்களுக்கிடம்; அணு ஸ்வரூபனாயினும் (அணு அளவினன் - மிகவும் சிறியவன் என்றாலும்) ஜ்ஞானத்தினால் எங்கும் நிறைந்தவன்; மறைவில்லாதவன்; தேஹாதிகளை (சரீரம் போன்றவற்றை) ஸாக்ஷாத்கரிப்பவன்; தேஹத்திற்குள் (உடலில்) புகுந்து அதைத் தரிப்பவன் (தாக்குபவன்); தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவன் (வேறாயிருப்பவன்); தேஹ தர்மங்களான பசி தாஹம் முதலியவை ஆத்மாவுக்குக் கிடையாது; அவனுக்கு தேவ மனுஷ்யாதி பேதங்கள் (வேறுபாடுகள்) எவையும் கிடையாது. இதற்கு ஸுஷுப்தியே (ஆழ்ந்த உறக்கமே) த்ருஷ்டாந்தம் (உதாரணம்). அப்பொழுது நானென்பது மாத்ரம் தோற்றுமேயன்றி மற்ற பேதங்கள் எவையும் தோற்றாது. இத்தகைய ஆத்மஸ்வரூபத்தையும் அவ்வாத்மா பரமாத்மாவான எனக்கு உட்பட்டவன் என்பதையும் அறிந்து என்னை உபாஸிப்பானாயின், அவன் ப்ரக்ருதியோடிருப்பினும் அதன் குணங்களால் தீண்டப்பெறமாட்டான். பலனை விரும்பாமல் வர்ணாச்ரம தர்மத்தினால் என்றும் என்னை ச்ரத்தையுடன் ஆராதிப்பானாயின், அவன் மனம் மெல்ல மெல்லத் தெளிவு பெறும். ராகம் த்வேஷம் முதலிய தோஷங்களையெல்லாம் துறந்து தூயமனத்தனாகி ஆத்ம பரமாத்ம ஸ்வரூபங்களை நன்றாக உணர்ந்து பசி தாஹம் முதலிய ஊர்மிகள் தீண்டப்பெறாததும் எனக்குச் சரீரமும் குணப்பெருமையுடையதும் ப்ரக்ருதி ஸம்பந்தமற்றதுமாகிய ஆத்மஸ்வரூபத்தைப் பெறுவான். “ஆத்மா இயற்கையில் நிர்விகாரன் (மாறுதல்கள் அடையாதவன்); பஞ்சபூதங்கள், ஜ்ஞானேந்திரிய, கர்மேந்த்ரியங்கள், மனம் ஆகிய இவற்றின் ஸமுதாயமான தேஹத்திற்கு ப்ரபு; இயற்கையில் எவ்வகை விகாரங்களும் இல்லாதவன். இவனுக்கு வரும் விகாரங்களெல்லாம் ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பற்றினவை” என்று எவன் அறிகிறானோ, அவன் ப்ரக்ருதியோடிருக்கும் பொழுதே க்ஷேமத்தைப் பெறுவான். ஸத்வ ரஜஸ் தமோ குணங்களால் விளையும் விகாரங்களெல்லாம் சரீரத்தைச் சேர்ந்தவைகளேயாயினும் அச்சரீர ஸம்பந்தத்தினால் ஆத்மா ஜ்ஞான ஸங்கோசம் (அறிவு குறைவு) உண்டாகப் பெற்று அதனால் ஸுக துக்கங்களை அனுபவிக்கின்றான். தேஹாத்ம விவேகமுடைய பண்டிதர்கள் என்னிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையவராகி அங்கனம் தேஹத்தைப் பற்றி விளைகிற ஸம்பத்துக்களிலும் விபத்துக்களிலும் ஸுகதுக்கங்களால் கலங்க மாட்டார்கள், ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்த அறிஞனாகையால் இந்திரியங்களை வென்று ஸுகதுக்கங்களை ஸமமாகப் பாவித்து மேன்மையுள்ள தேவாதிகளிடத்திலும் தாழ்மைக்கிடமான பசு, பக்ஷி முதலியவற்றிலும் நடுத்தரமான மனுஷ்யரிடத்திலும் பேதம் (வேற்றுமை) பாராட்டாமல், நான் ஏற்படுத்தின மந்த்ரி முதலிய ஸமஸ்த ஜனங்களோடும்கூடி உலகங்களையெல்லாம் பாதுகாத்து வருவாயாக.