ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இரண்டாவது அத்தியாயம்
(நாரதமஹர்ஷி வஸுதேவனுக்குப் பாகவத தர்மங்களைக் கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கௌரவ குலத்தை மேன்மைப்படுத்தும் தன்மையனே! நாரத மஹர்ஷி ஸ்ரீக்ருஷ்ணனைப் பணிவதில் பேராவலுடையவராகி, அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய புஜங்களால் (தோள் வலிமையால்) பாதுகாக்கப்பட்ட த்வாரகாபுரியில் நிரந்தரமாக வாஸம் செய்து கொண்டிருந்தார். (ஜ்ஞானாதிகாரான (பரதத்வமான பகவானைப் பற்றிய அறிவு உடையவரான) அத்தேவர்ஷி பரமாத்ம ஸாக்ஷாத்காரமுடையவராகையால் (பகவானை த்யானத்தில் நேராகப் பார்த்தவராதலால்), அவருக்கு ஸ்ரீக்ருஷ்ணனைப் பணிவதில் அத்தகைய பேராவல் உண்டாயிருக்க வேண்டிய அவச்யம் என்னென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம்).
ராஜனே! கண்களைப் படைத்தவன் எவன்தான் தன்னைப் பணிகிற ஸகல ஜனங்களின் ம்ருத்யுவையும் போக்கவல்லவைகளும், ஜ்ஞானாதிகர்களான (ஆத்ம, பரமாத்மாக்களைப் பற்றிய அறிவு உடைய) ப்ரஹ்ம, ருத்ராதி, தேவ ச்ரேஷ்டர்களால் பணியப் பெற்றவைகளுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களைப் பணியாதிருப்பான்? வஸுதேவன் ஒருகால் தேவர்ஷியாகிய நாரதர் தன் க்ருஹத்திற்கு வர, அவரைப் பூஜித்து, ஸுகமாக உட்கார்ந்திருக்கின்ற அம்முனிவரை நமஸ்கரித்து இவ்வாறு மொழிந்தான்.
வஸுதேவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! நீர் மூன்று லோகங்களையும் ஸஞ்சரித்துக் கொண்டிருப்பது என்னைப் போன்ற ஸமஸ்த ப்ராணிகளின் க்ஷேமத்திற்காகவேயன்றி, வேறு காரணத்திற்காகவன்று. உத்தம ச்லோகனான (மிகுந்த சிறப்புடைய) பகவானுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவாதிகளை (குணங்களை) அறிவிக்கும் த்வாரமாய் (வழியாய்) இருப்பவர்களான உம்மைப் போன்ற பெரியோர்களின் யாத்ரை, ஸம்ஸார தாபங்களால் பீடிக்கப்பட்ட ப்ராணிகளின் க்ஷேமத்திற்காகவே அல்லவா? தாய், தந்தைகள் வருவது பிள்ளைகளின் ஸுகத்திற்காக அல்லவா? (எங்களுடைய யாத்ரையை விசேஷித்துப் புகழ்கின்றாயே. தேவாதிகளுடைய யாத்ராதி கார்யங்களும் கர்மலோகங்களின் க்ஷேமத்திற்காகவே அல்லவா. அவற்றை விட்டு இதைப் புகழ்வது ஏனோ? என்றால்) பர்ஜன்யன் (மழை தேவதை) முதலிய தேவதைகளின் நடத்தை ப்ராணிகளின் துக்கத்திற்கும், ஸுகத்திற்கும் பொதுவாயிருக்கின்றது. (ஒருகால் துக்கத்தையும், ஒருகால் ஸுகத்தையும் கொடுக்கும்.) அச்சுதனிடத்தில் நிலைநின்ற மனமுடைய உம்மைப் போன்ற ஸாதுக்களின் நடத்தையோ என்றால் எப்பொழுதும் ஸுகத்தையே கொடுக்கும். தேவதைகளை எவர்கள் எப்படி பணிகின்றார்களோ, அவர்களை அத்தேவதைகள் அப்படியே அனுஸரிப்பார்கள். ஏனென்றால், அந்தத் தேவதைகள் நிழலைப் போன்று ப்ராணிகளின் பணிதலுடைய தாரதம்யத்தை (ஏற்றத்தாழ்வை) அனுஸரித்துப் பலன் கொடுப்பார்கள். ஸாதுக்களோ என்றால், ஸம்ஸார தாபங்களால் (உலகியல் வாழ்வின் துன்பங்களால்) வருந்தின ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும், அவர்களுடைய துக்கங்களையெல்லாம் போக்க வேண்டுமென்னும் விருப்பமுடையவர்கள்.